Tuesday, November 30, 2004

கட்டு மூட்டையை!!!!!

ஃபிஜி அனுபவம் பகுதி 21
*************************


ச்சும்மா சொல்லக்கூடாது! அப்போது ஃபிஜியில் நல்ல தரமான பொருட்கள் கிடைத்துவந்தன! எலக்ட்ரிகல் ஐட்டமானாலும் சரி, நமக்கு
வேண்டிய துணிமணிகளானாலும் சரி, எல்லாமே ஜப்பான் நாட்டிலிருந்து வந்துகொண்டிருந்தன!


கட்டு மூட்டையை!!!!!

ஃபிஜி அனுபவம் பகுதி 21
*************************


ச்சும்மா சொல்லக்கூடாது! அப்போது ஃபிஜியில் நல்ல தரமான பொருட்கள் கிடைத்துவந்தன! எலக்ட்ரிகல் ஐட்டமானாலும் சரி, நமக்கு
வேண்டிய துணிமணிகளானாலும் சரி, எல்லாமே ஜப்பான் நாட்டிலிருந்து வந்துகொண்டிருந்தன!

இப்போது உலகில் எங்கே போனாலும் 'மேட் இன் சைனா' என்றுதானே எல்லாமே கிடைக்கிறது!
சீனர்கள், இப்போதுபோல உலகளாவிய வர்த்தகம் தொடங்கும் முன்பிருந்த காலக் கட்டம்.ம்ம்ம்... ஒரேடியாக அப்படியும் சொல்ல முடியாது!
ஆனால் அவர்கள் வியாபாரம் இன்னும் ஃபிஜிவரை வரவில்லை என்றும் சொல்லலாம்!

புடவைகள் எல்லாம் ஜப்பானிலிருந்து வந்துகொண்டிருந்தன. நல்ல நைலக்ஸ் புடவைகள். அப்போது புகழின் உச்சத்தில் இருந்த நடிகைகள்
நம் ஹிந்தி நடிகை 'ஷபானா ஆஸ்மி போன்றவர்கள் அவற்றுக்கு, 'மாடல்' ஆக இருந்தனர். 'ரூபி க்வீன்' புடவைகள்.பெரிய பெரிய
காலண்டர்கள் இவர்களின் படங்கள் + புடவைகளைத் தாங்கி வந்தன! அதே புடவைகள் கடைகளிலும் விற்பனைக்கு இருந்தது! இப்போதுள்ளது
போல ஐந்து மீட்டர் இல்லை. எல்லாமே 6 மீட்டர் நீளமுள்ளவை. அதனால் நிறைய கொசுவத்தோடும், நீஈஈஈஈளமான முந்தானையோடும்
வலம் வந்துகொண்டிருந்தோம்!

புடவைகள் வகைவகையாக இருந்தனவே தவிர அவற்றுக்கு ப்ளவுஸ் மேட்ச்சாகக் கிடைப்பது மிகவும் கஷ்டமே! அதனால் அங்கே எல்லோரும்
பாலியஸ்டர் துணியிலேயே ப்ளவுஸ் போட்டுக் கொண்டிருந்தனர்! அந்த சூட்டுக்கு அப்பப்பா..... ஐயோ என்றிருக்கும்! அதுமட்டுமின்றி அங்கே
ப்ளவுஸ் தைத்துக் கொடுப்பதற்குத் தையற்காரர்களே இல்லை! வீடுகளில்தான் பெண்கள் தைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தனர்! தையல்கூலி
மிகவும் அதிகம். 10 டாலர்கள். ஆனால் துணியின் விலை ஒரு மீட்டர் ஒரு டாலர்தான்!

இங்கே வியாபாரம் செய்ய வந்த குஜராத்தியர்களில் அநேகர் தையற்காரர்களாம். முதலில் துணிகளையும் விற்றுக் கொண்டு அப்படியே அவற்றைத்
தைத்தும் கொடுத்துக் கொண்டிருந்தார்களாம். இப்போதெல்லாம் ஆண்கள் அனைவருமே ரெடிமேட் உடைகளையே வாங்குவதால், அந்தப் பழக்கம்
அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகப் போய்விட்டதாம். ஆகக்கூடி தையல் கடைகள் இல்லாமல் போய்விட்டன! ஆனால் 'க்ளோத்திங் ஃபேக்டரிகள்'
வந்துவிட்டன!

இந்தியாவில் இருந்து வந்த நமக்கோ, 'டூ பை டூ'வில் ப்ளவுஸ் அணிந்து பழக்கம் ஆகிவிட்டதே. இதைப் பற்றிக் கொஞ்சம் விசாரிக்க வேண்டும்
என்று முனைந்தபோது, இந்தியாவில் இருந்தே 'டூ பை டூ' துணிகள் வருவதும் தெரிந்தது. ஆனால் கொள்வோர் இல்லை! ஆகவே விலை
மலிவு. ஆஹா அடிச்சது ச்சான்ஸ்! மெட்ராஸில் வாங்குவதுபோல 65 செ.மீ. 75 செ.மீ என்றெல்லாம் விற்கமாட்டார்கள். ஒரு மீட்டர், ஒன்னரை
மீட்டர் என்றுதான் வாங்கவேண்டும். சரி, இனிமேல் நாமே தைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். ஒரு தையல் மெஷின் வாங்கியாச்சு!
ஆனால் எப்படித் தைப்பது?

ஊரில், தன்னுடைய உடைகளைத் தானே தைத்துக் கொள்ளும் என் தோழிக்கு எழுதி, 'பேப்பர் கட்டிங்'வரவழைத்தாயிற்று! மீட்டர் கணக்கில்
வாங்குவதால் ரொம்பக் கவனமாக வெட்டவேண்டாம். ஒரு வழியாக என் முதல் ப்ளவுஸ் நன்றாகவே அமைந்து விட்டது! அதிர்ஷ்டம்தான்!

வீட்டு வேலைக்கும் இரண்டு உதவியாளர்கள் இருப்பதால் பகல் முழுவதும் தையல், இரவானால் ஹிந்தி சினிமா என்று நாளைப் பிரித்துக்
கொண்டேன். என் மகளுக்கும் நான்தான் டெய்லர்! வெறும் ஐம்பது சதத்துக்கு நல்ல நல்ல துணிகள் கிடைத்தன. கடைகளில் பார்வைக்கு
வைத்திருக்கும் குழந்தை உடுப்புகளின் டிஸைன்களை மனதில் பதித்துக் கொண்டு, மறுநாளே அதை அப்படியே அச்சாகக் காப்பி செய்வதில்
கில்லாடியாகிவிட்டேன். அப்புறம் என்ன? குழந்தைக்குத் தினமும் புதுசுதான். இப்படியாக இரண்டாயிரம் துணிகளைக் கெடுத்து முழு டெய்லர்
ஆகிவிட்டேன். இந்தத் தையல் என் மனம் முழுவதையும் ஆக்ரமித்துக் கொண்டது. எப்போதும், என்ன டிஸைன் செய்யலாம் என்றே எண்ணம்
வந்துகொண்டு இருந்தது! சொன்னால் வெட்கக்கேடு! ஒரு முறை ஒரு மரண வீட்டிற்குச் சென்று இருந்தபோது, என் முன்பாக அமர்ந்து இருந்த
ஒரு சிறு பெண்ணின்( மரணித்தவரின் கடைசி மகள்! அணிந்து இருந்த உடுப்பு மிகவும் நன்றாக இருந்தது) உடுப்பைப் பார்த்துவிட்டு, அதே போல்
மறுநாள் என் மகளுக்குத் தைத்துவிட்டேன். இதுவரை வாழ்வு நிம்மதியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது! ஆனால் இங்கேயிருந்து போகப் போகிறோமே,
அந்த நாட்டில் வீட்டு வேலைக்கு எல்லாம் உதவியாளர்கள் இல்லையாமே! எல்லாமும் நாமேதான் செய்துகொள்ள வேண்டுமாம்! இதுவே
ஒரு கவலையாகப் போனது, எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று!

இந்த நிலையில்தான் தமிழ்க்காரர்கள் பற்றிய விவரம் தினத்தாளில் வந்திருந்தது! அரசாங்கமே அவர்களை ஒரு வீட்டில் தாற்காலிகமாகத் தங்க
வைத்துள்ளது என்றும், பல இந்தியர்கள் அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களைக் கொண்டுபோய்க் கொடுத்து வருகின்றனர்
என்றும் அறிந்தோம். நாங்களும் அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றோம். மொத்தம் 32 பேர். எல்லோருமே இளவயதுக்காரர்கள்தான்!
ஆண்களே கூடுதல். கிடைத்த உணவுப் பொருட்களைக் கொண்டு அவர்களே சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்! அகதிகள் என்று
பதிந்துகொண்டு கனடா நாட்டுக்குப் போய்விடலாம் என்று 'ட்ராவல் ஏஜண்டு' சொன்னபடி, கைக்காசை நிறைய செலவழித்துக்
கிளம்பினவர்களாம்! சரியான 'டாக்குமெண்ட்ஸ்' இல்லாத காரணத்தால் இங்கே இறக்கிவிடப்பட்டவர்களாம்! மேற்கொண்டு தகவல் ஒன்றும்
தெரியவில்லை. எங்களால் ஆன உதவியைச் செய்துவிட்டு, மறுமுறை வருவதாகச் சொல்லி வந்தோம்.

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்ற பழமொழி சரிவருமா அல்லது பட்ட காலிலெ படும் என்பது சரியாகுமா என்று தெரியவில்லை!

நம் ஃபேக்டரிக்கு முன்னால் நிறுத்தி வைத்திருந்த காரில் ஒரு 'ட்ரக்' வந்து மோதிவிட்டது! இங்கேதான் எப்போதும்(கிட்டத்தட்ட ஆறு வருடங்கள்)
வண்டியை நிறுத்தி வருகிறோம். நல்ல அடி! சரிப்படுத்த நாள் ஆகும் என்று சொல்லிவிட்டார்கள்! தினமும் வேலைக்குப் போக, வர, குழந்தையைக்
'கிண்டர்கார்டன்' கொண்டுபோய்க் கொண்டுவர என்று எல்லா வேலைகளும் கம்பெனி வண்டி மூலம் நடந்து கொண்டுதான் இருந்தது! ஆனால்
வார இறுதிகளில் வேறு எங்காவது போய்வரத்தான் கஷ்டமாகிவிட்டது!

இந்த அழகில், நியூஸிலாந்து எம்பசியில் இருந்து, ஒரு கடிதம் வந்தது! 'எங்கள் விண்ணப்பங்கள் பரிசீலணையில் இருப்பதால், அவர்களாக
எங்களைத் தொடர்பு கொள்ளும்வரை, நாங்கள் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ளக்கூடாது!'

காத்திருப்பு என்பது மிகவும் கஷ்டமான விஷயம் என்பது அப்போதுதான் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது! ச்சும்மாவே இருப்பதால் நேரம் போவது
கடினமாகிவிட்டது! வெயிட்டிங்.............

இதற்கிடையில், தமிழ் ஆட்களை, அரசாங்கம் திருப்பி அனுப்பப்போவதாகவும் தெரியவந்தது. மூன்று மாதமாகப்போகிறது அவர்கள் இங்கே வந்து!
நம் இந்தியத் தூதரகம் மூடப்பட்டுவிட்டதால், உதவிக்கு யாரைக் கேட்பது என்று எங்களுக்கும் குழப்பமாக இருந்தது.

விமான நிலையம் இருக்கும் ஊரில் வசிக்கும் எங்கள் நண்பர்கள் மூலம் பல விவரங்கள் தொடந்து கிடைத்த வண்ணம் இருந்தன.
இனி அவர்கள் இங்கே தொடர்ந்து தங்க முடியாது என்று அரசாங்க அதிகாரிகள் சொல்லிவிட்டார்களாம். ஆனால் அவர்களில் யாரையாவது
இங்குள்ளவர்கள் திருமணம் புரிந்து கொண்டு விட்டால், வாழ்க்கைத்துணை என்ற நிலையில் அந்த நபர் இங்கே தங்கி விடலாமாம்!

இங்குள்ள இளஞர்கள் சிலர் இதில் ஆர்வம் காட்டினார்கள். தமிழ்க்காரப் பெண்கள் மூவருக்கு வரன் கிடைத்தது. பெண்கள் சம்மதம் கிடைத்ததால்
அவர்களுக்கு பதிவுத் திருமணமும் நடந்தது! இப்படியாக மூவரைத் தவிர மற்றவர்கள் திருப்பி அனுப்பப் பட்டார்கள்.சரி. எப்படியோ மூன்று
பேருக்காவது நல் வாழ்வு அமைந்ததே என்று நாங்கள் மகிழ்ந்தோம்!

இலங்கையில் இருந்துவரும் உள்நாட்டு விவகாரம் எங்களுக்கு அவ்வளவாகத் தெரிந்திராத காலம். ஏதோ நடக்கிறது, ஆட்கள் நாட்டை விட்டு
வெளியேறுகின்றனர் என்ற அளவில் மட்டுமே விவரம் கிடைத்துவந்தது! நாங்கள் தமிழ் நாட்டை விட்டு வந்தே 14 ஆண்டுகள் ஆகியிருந்தன!

பத்திரிக்கைகளிலும் அவ்வளவாக செய்திகள் இல்லை! எங்களுக்கு நண்பராக ஆன ஒரு இலங்கைத் தமிழ்க்காரர்தான் அவ்வப்போது இதைப்
பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். அவரும் 'லட்டெளகா' என்னும் இடத்தில் வசித்ததால் அடிக்கடி சந்திப்பதும் குறைவே!

அவர்களும் இவையெல்லாம் சம்பவிக்கும் முன்பே வெளிநாட்டுப் பணிக்காக, இலங்கையிலிருந்து வெளியேறியவர்கள். இரண்டு வருடங்கள் இங்கே
ஃபிஜியில் இருந்து விட்டு, இங்கிலாந்து நாட்டுக்குப் போய்விட்டார்கள். கலவரம் நடப்பதால் மீண்டும் இலங்கைக்குப் போவது கஷ்டம் என்றும்
அங்கே உற்றார் உறவினர் வீட்டு விசேஷங்களுக்குப் போக முடியாத நிலை இருப்பதால், ஊரில் நடக்கும் திருமணங்கள் எல்லாம் வீடியோவில்
பதிவு செய்யப்பட்டு இவர்களுக்கு வந்துவிடும் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

எங்களுக்கும் அந்தக் கல்யாணக் கேஸட்டுகள் தருவார்கள். அதில் உள்ள சாஸ்திர சம்பிரதாயங்கள் கொஞ்சம் வேறு பட்டிருந்தாலும்,
எனக்குப் பிடித்தமானது அவைகளில் பதிவு செய்யப்பட்டுள்ள திரைப் படப் பாடல்கள்!

எல்லா நிகழ்ச்சிக்கும் பொருத்தமான புது திரைப் படப்பாடல்கள்! தமிழ் நாட்டில் கல்யாண வீடு என்றால், 'மணமகளே மணமகளே வா வா,
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா' என்ற பாடலை மட்டுமே கேட்டுக் கேட்டுக் காது புளித்திருந்த எங்களுக்கு, இந்தப் புதிய பாடல்கள்
கேட்பதற்கு நன்றாக இருந்ததால், அவர்கள் வீட்டுக் கல்யாணக் கேஸட்டுகளுக்கு 'ஃபேன்' ஆகிவிட்டோம்!

கல்யாண ஜோடிகள் வேறு வேறாக இருந்தாலும், மாப்பிள்ளைத் தோழனாகத் தலைப்பாகையுடன் வரும் ஒரு சிறுவன் மட்டும் மாறவேயில்லை!
இது பற்றிக் கேட்டபோது, 'அவர் எங்கட தமையனாரின் மகன். மாப்பிள்ளைத் தோழருக்கு மோதிரம் போடுவது எங்கட பழக்கம். அவருக்கு
பதினோரு மோதிரம் கிடைச்சிருக்குன்னா பாருங்கள். சில சமயம் அய்யருக்கே மறந்துபோன விவரங்களைச் சொல்லித் தருவார். அவ்வளவு
அனுபவப்பட்டவர்' என்றார்கள். மணமக்களைவிட அந்தச் சிறுவனின் முகம் எங்கள் மனதில் பதிந்துவிட்டது! அதற்கப்புறம் கலியாணக் கேஸட்டில்
முதலில் நாங்கள் தேடுவது இந்தச் சிறுவனைத்தான்!

ஒருவழியாக எங்கள் காரும் செப்பனிடப்பட்டுவந்து சேர்ந்தது. அதே சமயம் எங்களது விண்ணப்பங்களும் அங்கீகரிக்கப்பட்டதாகவும் கடிதம்
வந்தது! ஒரு சிறிய நேர்முகத் தேர்வுக்கும் வரச்சொல்லியிருந்தார்கள். நாங்கள் போனோம். எங்கள் 'பாஸ்போர்ட்டில்' நியூஸிலாந்து
பெர்மனண்ட் ரெஸிடன்ஸ் விஸா'வுக்கான முத்திரைக் குத்தப்பட்டது!

இதற்குள் இந்தியாவிலிருந்து ஒரு 'இஞ்சினீயர்'நம் இடத்துக்கு வந்து விட்டார். தனி மனிதர்.

'கட்டு மூட்டையை'என்று சொல்லிக் கொண்டு, நம் நண்பர்கள் அனைவரிடமும் பிரியாவிடை பெற்றுக் கொண்டு ஒரு நல்ல நாளில் கிளம்பி
நியூஸிலாந்து வந்து சேர்ந்தோம்!

நேடிவ் ஃபிஜி நண்பர்களின் அன்பளிப்பானத் 'திமிங்கிலப் பல் மாலையும், புல்ப் பாயும்' எங்கள் வீட்டு வரவேற்பறையில் இடம்பெற்று
விட்டன!


பின்னுரை:
*******

இந்தக் கட்டுரைத் தொடருக்கு முன்னுரை என்று ஏதும் எழுதவில்லையென்றாலும், பின்னுரை எழுதுவது அவசியம் என்று
கருதியதால் என் பின்னுரை இதோ!

ஃபிஜியில் கிட்டத்தட்ட ஆறு வருடங்களே (1982-1988) இருந்தாலும், ஏதோ யுகம் யுகமாக அங்கேயே இருந்தது போல ஒரு நினைவு!
அருமையான தீவுகளும், அருமையான மக்களுமாக ஒரு நல்ல இடமாகவே அமைந்துவிட்டது.

'குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலை' என்பார்களே, அதைப் போல அரசியல்வாதிகளின் கையில் அகப்பட்டுக் கொண்டது இந்த நாடு!

இந்த 'கூ' நடந்த இரண்டு வருடங்களில் கிட்டத்தட்ட 12,000 ஃபிஜி இந்தியர்கள் வெளியேறிவிட்டனர்! இதனால், அங்கே இப்போது
நேடிவ் ஃபிஜி மக்கள் தொகை 60% ஆக உயர்ந்துவிட்டது! ஆனால் நாட்டின் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்குதான் அதிகம்!

எங்கள் நண்பர்கள் பலரைப் பார்க்கவேண்டுமானால், எனக்கு ஆக்லாந்து( நியூஸி) போனாலே போதும்!

நமது ராணுவத்தலைவர் 1993-ல் ஃபிஜியின் பிரதமராகவே ஆகிவிட்டார். ( உள்துறை இலாகா போரடித்து விட்டதோ?)

1997-ல் காமன்வெல்த் நாடுகளின் பட்டியலில் மறுபடியும் ஃபிஜி இணைக்கப்பட்டுவிட்டது!

1999 தேர்தலில் மறுபடியும் 'லேபர் கட்சி' வென்று, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மஹேந்திர சவுத்தரி பிரதமரானார்.
அடுத்த வருடமே(2000) 'ஜார்ஜ் ஸ்பைட்' என்பவரால் மந்திரிசபை முழுவதும் துப்பாக்கி முனையால் மிரட்டப்பட்டு சிறை வைக்கப்பட்டனர்.

2000, ராணுவம் அரசாங்கத்தை எடுத்துக் கொண்டது. ( ஃபிஜி மக்கள் 'கூ'வுக்கு நன்கு பழக்கப்பட்டுவிட்டனர்!)

அரசியல் சட்டம் பலமுறை திருத்தி அமைக்கப்பட்டது!

ஃபிஜியில் உள்ள கம்பெனி, இப்போது வேலை செய்துவரும் கம்பெனியெல்லாம் ஒரே தலைமையின் கீழ் உள்ளதால், என் கணவர்
அடிக்கடி கம்பெனி விஷயமாகப் போய்வந்து கொண்டுதான் இருக்கின்றார்.( அப்படியே வீட்டுக்கு சாமான்களும் கொண்டுவந்துவிடலாம்!)

ஃபிஜி இந்தியர்கள் இங்கே நியூஸிலாந்திலும் தங்கள் பழக்க வழக்கங்களை, ராமாயண் மண்டலி போன்றவைகளை விட்டுவிடாமல்
நடத்திக் கொண்டு வருகின்றனர். ( நாங்களும் எல்லாவற்றிலும் பங்கு பெற்று வருகின்றோம்)

எனக்கு டைரி எழுதும் பழக்கம் இல்லை. இதுவரை எழுதினது முழுதும் என் நினைவில் இருந்துதான். ஏதாவது குறிப்புகள் தவறாக இருப்பதாக
நீங்கள் கருதினால் அது என் ஞாபகக் குறைவின் காரணமாக இருக்கலாம்!

இந்தத் தொடருக்கு பின்னூட்டங்கள் எழுதி, என்னை ஊக்குவித்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


மீண்டும் அடுத்த தொடரோடு வருவேன் உங்களை மீண்டும் அறுக்க!

நன்றி. வணக்கம்!
*************************************************************************************



Friday, November 26, 2004

'பல்லும் பாயும்!!!!!!!'

ஃபிஜி அனுபவம் பகுதி 20
************************

ஃபிஜியின் பழங்குடி மக்களுக்கு அவசரத்தேவைக்கு பணம் வேண்டுமானால், அடகுக் கடைக்குப்
போவார்கள்! இதென்ன அதிசயம்?



ஃபிஜியின் பழங்குடி மக்களுக்கு அவசரத்தேவைக்கு பணம் வேண்டுமானால், அடகுக் கடைக்குப்
போவார்கள்! இதென்ன அதிசயம்?

அதிசயம்தான்! அது இவர்கள் அடகு வைக்கும் பொருள்! இந்தியர்களுக்கு நகை, நட்டு எவ்வளவு
மதிப்பு வாய்ந்ததோ அதே மதிப்பு இவர்களுக்கு இருப்பது இன்னொரு பொருள் மீது!

அது பல்! சாதாரணப் பல் அல்ல. 'திமிங்கிலப் பல்!'

இதன் அளவைப் பொறுத்து இதன் மதிப்பு கூடும்! ஒரு 'பல்'லைக் கயிற்றில் கோர்த்து மாலையாகக்
கழுத்தில் அணிவார்கள்! சிறிய பல் என்பது ஒரு ஆறு அங்குல அளவில்(!) இருக்கும்!

இதன் உருவம் ஃப்ஜி நாணயத்திலும் பதிக்கப் பட்டுள்ளது!

மதிப்புக்கு உரியவர் என்று இவர்கள் நினைக்கும் நபர்களுக்கோ அல்லது மிகவும் மரியாதைக்குட்பட்ட
விருந்தினருக்கோ, இந்த 'பல் மாலை' அணிவிப்பார்கள்.

இது இந்நாட்டின் மதிப்பு மிகுந்த பொருள் என்பதால், இப்போதெல்லாம் அதை வெளிநாடுகளுக்குக்
கொண்டுபோகவும் தடை விதிக்கப்பட்டுள்ளது! நம் 'யானைத் தந்தம்'போல என்று வைத்துக் கொள்ளலாம்!

நான் எப்போதும் நினைப்பது, 'இவர்களுக்குத் திமிங்கிலம் எங்கிருந்து கிடைக்கிறது ?' இவர்கள் திமிங்கில
வேட்டைக்கும் போவதில்லையே!

(நியூஸிலாந்தில் சிலசமயம், திமிங்கிலங்கள் தற்கொலை செய்துகொள்ளக் கடற்கரையில் ஒதுங்குகின்றன!
அவைகளைக் காப்பாற்ற முயன்று, தோல்வி ஏற்பட்டால் அவைகளைப் புதைத்து விடுகின்றனரே தவிர
பற்களையெல்லாம் எடுப்பதில்லை!)

ஓலைப்பாயும் இவர்களுக்கு மிகவும் மதிப்பு வாய்ந்ததே! திருமணச் சீர்வரிசையில் இது அவசியம் இருக்கவேண்டும்!
நம் ஊரில் சுருட்டுவது போலில்லாமல், இந்த வகைப் பாய்களை 'ஜமக்காளம்'போல மடிக்கலாம்! மிகவும் மிருதுவான
ஒருவகைப் புல் போன்ற ஓலைகளையே இதற்குப் பயன் படுத்துகிறார்கள். இந்த ஓலையுமே வேறு எங்கோ இருந்துதான்
வருகிறதாம்! ( ஆகக்கூடி, இங்கில்லாத சமாச்சாரம் என்பதால்தான் இந்த மதிப்போ?)

இது இருக்கட்டும். நம் கதையை விட்ட இடத்திலிருந்து தொடரலாம்!

இரண்டாவது முறை நாணயத்தின் மதிப்பைக் குறைத்துவிட்டார் என்று சொல்லியிருந்தேன் அல்லவா?
அப்போது இருந்த இடைக்கால அரசாங்கத்தை, இரண்டாம் தடவை ராணுவம் பிடித்தெடுத்துக் கொண்டது.
நாலு மாத இடைவெளியில் இரண்டுமுறை 'கூ'

மக்களுக்கு,'கூ' மீதிருந்த பயம் தெளிய ஆரம்பித்ததோ, என்னவோ?

அரசியல் சட்டங்களை மாற்றுவதில் மும்மரமாக இருந்தார் நம் ராணுவத்தலைவர். அவருக்கு வேண்டியவர்களாகவும்,
அதே சமயம் 'ராத்தூ'க்களாகவும் இருப்பவர்களை மட்டுமே அரசாங்கத்தை நிர்வகிக்க ஏற்பாடு செய்துவந்தார்!

மேலும் இப்போதுதான் ஃபிஜி குடியரசு நாடாகிவிட்டதே! இதை மற்ற நாடுகள் ( இங்கிலாந்து, ஆஸ்தராலியா, நியூஸிலாந்து)
அங்கீகாரம் செய்யவில்லைதான்! ஆனாலும் 'ஹூ கேர்ஸ்?'

முதல் ஜனாதிபதியாக 'ராத்தூ பெனைய கனிலாவ்' நியமிக்கப் பட்டார்!

பிரதமர் பதவி, பழைய ஊழல் பெருச்சாளி என்று கருதப்பட்டவருக்கே கிடைத்தது!

நம் ராணுவத்தலைவர், ராணுவத் தலைமையை உதறிவிட்டு ( தூசி போல உதறிவிட்டு என்று சொல்லலாமா?) உள்துறை
மந்திரியாக உட்கார்ந்துகொண்டு,அனைத்து அரசாங்கத்தையும் 'தன் பிடிக்குள்ளேயே' வைத்திருந்தார்!

'ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா, ஆசையென்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா'

இந்தியர்களின் வெளியேற்றத்தால் ஜனத்தொகை குறைய ஆரம்பித்தது! நல்ல பதவியிலும், வேலைகளிலும் இருந்தவர்கள்
போயாச்சு! டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது! நோயாளிகளைக் கவனிக்க முடியாமல், மருத்துவ மனைகளில் ஒரு
தேக்கம் ஏற்பட்டது! இப்படியே மற்ற துறைகளிலும்! 'பட் ஹூ கேர்ஸ்?'

அப்போது நியூஸிலாந்து அரசாங்கம், தன் கொள்கைகளை ( வெள்ளையர் மட்டும் குடியேறுதல்)சற்றுத் தளர்த்தி, காசு இருந்தால்
குடியேறலாம் என்றது! 'பிஸினஸ் மைக்கிரேஷனாம்!' $250,000 இருந்தால் போதும்! அதை நியூஸிலாந்து வங்கிகளில் போட்டு
வைத்துவிட்டு, அதைக் காட்டினால் பி. ஆர். கிடைத்துவிடுமாம்!

குஜ்ஜுக்கள் பலர் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன் படுத்திக் கொண்டனர்! இங்கே குடும்பத்துடன் வந்து, பாஸ்போர்ட்டில்
ஸ்டாம்ப் செய்து கொண்டு, 'ரீ எண்ட்ரி விசா' வாங்கிகொண்டு ஃபிஜிக்கே திரும்பிவந்து வியாபாரத்தைக் கவனித்து வந்தார்கள்.
இந்த 'ரீ எண்ட்ரி விசா' ஒரு 4 வருடத்திற்குச் செல்லும்! இன்னும் ஏதாவது குழப்பம் உண்டானால் வெளியேறலாம் என்ற எண்ணம்தான்!

நியூஸிலாந்து அரசாங்கம், இந்தக் கொள்கை மாற்றங்களுக்குப் பழக்கப் பட்டிருக்கவில்லை. நாட்டில் வரவு வைக்கப்பட்ட பணம் என்ன
ஆகிறதென்ற கவனமும் இல்லாமல் இருந்தது. அதற்கான சட்ட திட்டங்களும் ஒன்றுமேயில்லை! சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பயன் படுத்த
நம் மக்களுக்குச் சொல்லித்தர வேண்டுமா என்ன?

பலர், இங்கே வங்கி கணக்கில் காண்பித்த பணத்தை, அவர்கள் காரியம் முடிந்து ஃபிஜிக்குத் திரும்பி வந்தவுடனே மறுபடி ஃப்ஜியில்
உள்ள வங்கிக்கே மாற்றி எடுத்துக் கொண்டார்கள்!

இதனிடையில் ஃபிஜி நாளிதழில் மற்றுமோர் செய்தி! இலங்கைத் தமிழர்கள் பலர் (கனடாவுக்குப் போக வேண்டியர்கள்) சரியான 'விசா'
பேப்பர்கள் இல்லாததால் எப்படியோ 'நான்டி ஏர்போர்ட்'டில் ( இதுதான் இந்நாட்டின் பன்னாட்டு விமானநிலையம்) இறக்கிவிடப்
பட்டிருக்கின்றனராம்!

ஐய்யய்யோ.... தமிழ்க்காரர்களா? அடப்பாவமே... என்றெல்லாம் இருந்தது!

இங்கே ஜனங்கள் எல்லாம் ரொம்ப நல்லமாதிரி என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன் அல்லவா? அப்படி ஒட்டுமொத்தமாக எல்லோரும்
நல்லவர்களாகவே அமையமுடியுமா? பெரும்பாலோர் நல்லவர்களே! ஒரு சிலர் வேறு மாதிரியும் இருப்பார்களல்லவா?

இதுபோன்ற சில நிகழ்வுகளும் ( நல்ல மனிதர் அல்லாதவரால்) அவ்வப்போது நடக்கும். அப்போது எங்களால் ஆன உதவி ஏதாவது
செய்வோம். மாதிரிக்கு ஒன்று!

சென்னையிலிருந்து ஒருவர் இங்கே வேலைக்காக வந்திருந்தார். அவருடைய துரதிஷ்டம் இது போன்ற ஒரு இடத்தில் அவர் வேலை அமைந்து
விட்டது. அந்த நிறுவனத்தினர் என்றாலே இங்கே பலருக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது!

வந்த மறுநாளே எங்களை வந்து பார்த்தார். ஒரு வாரம்தான் போனது, அதற்குள் அங்கே முதலாளிக்கும், இவருக்கும் ஏதோ 'லடாய்!'
அப்புறமும் அடுத்துவந்த நாட்களில் என்னென்னவோ நடந்துவிட்டதாம்! அவருக்கு உணவும் சரியாகத் தரப்படவில்லை என்று சொல்லிக்
கொண்டிருந்தார். நம் வீட்டிலே அவருக்கு உணவு அளித்துக் கொண்டிருந்த்தோம். அவர் என்ன மாதிரி ஒப்பந்தத்தில் வந்திருக்கிறார் என்று
எங்களுக்கு விவரமாகத் தெரியாது! அவருடைய முதலாளி ஏதோ இழிசொற்கள் சொன்னதாக நம்மிடம் வந்து புலம்பினார். எல்லாம் படபட
வென நடந்துவிட்டது ஒரே மாதத்தில்!

ஒரு நாள் மாலை 4 மணி அளவில் நம்மைத் தொலைபேசியில் அழைத்து, 'என்னை உடனே போகச் சொல்லிவிட்டனர். எனக்கு டிக்கெட்
தரவேண்டியது அவர்கள் கடமை என்று சொன்னேன். அவர்கள் ஒரு இடம் சொல்லி அங்கே உன் டிக்கெட் இருக்கிறது. அதை எடுத்துக்
கொண்டு உடனே கிளம்பவேண்டும். ஒரு நிமிடம் கூட இருந்தாலும், போலீஸ் 'ஓவர் ஸ்டே'என்று பிடித்துவிடும்' என்று
பயத்தோடு சொன்னார்.

டிக்கெட் உள்ள இடம் நம் வீட்டிலிருந்து 22 மைல் தூரத்திலுள்ள 'லட்டெளகா' என்னும் ஊர். அங்கே டிக்கெட்டை அந்த 'ட்ராவல் ஏஜண்ட்'
மூலம் பெற்றுக் கொண்டு அங்கிருந்து இன்னும் 22 மை தூரத்தில் உள்ள விமான நிலையம் செல்லவேண்டும்! டிக்கெட்டைப் பெற்றுகொண்டு
விமான நிலையம் போகவும் அவருக்கு வாகன வசதி ஏதும் செய்துதரவில்லையாம்! சொல்லும்போதே அவரது குரல் 'கம்மி' அழுதுவிடுவார்
போலிருந்தது!

நாங்களே அவரை அழைத்துச் சென்று டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ளச் செய்து அவரை நம் வீட்டிற்குக் கொண்டுவந்தோம்.
அப்போதே மாலை 6 மணியாகிவிட்டது. ஊருக்கு வெறும் கையாகப் போகின்றோமே என்றும் புலம்பிக் கொண்டிருந்தார். அங்கேதான் மாலை
6 மணிக்கு எல்லா கடைகளும் அடைபட்டிருக்குமே. அவருக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை ஊரில் இருக்கிறதென்று சொல்லியிருந்தார்.


எங்கள் அக்காவுக்கு இந்த விவரத்தைத் தெரிவித்தோம். அங்கே எனக்கு ஏது அக்கா? சொல்கிறேன்! அக்கா நமக்கு அக்கா ஆனதே ஒரு
தனிக் கதைதான்!

அங்கே எல்லோரும் நமக்கு உறவினர்கள்தான்! ஏதாவது முறைவைத்துதான் அனைவரையும் அழைப்பார்கள். அந்தப்
பழக்கம் எங்களையும் பற்றிக் கொண்டது! ஆனால் நல்ல பழக்கம்தானே! இந்த அக்கா நமது மூன்றாம் வீட்டு ஆட்கள். அக்கா பெங்களூரைச்
சேர்ந்தவர். நாங்கள் வந்த புதிதில், வந்து 1 வாரம் ஆனபின்புதான் நமக்கு என்று கம்பெனி தெரிவு செய்த வீட்டிற்குக் குடி புகுந்தோம்.நாள்
நன்றாக இல்லையென்று நம் கம்பெனி உரிமையாளரின் தாய், நம்மை அவர்கள் வீட்டிலேயே அதுவரை தங்கியிக்கச் சொல்லிவிட்டார்கள்.
ச்சும்மா சொல்லக்கூடாது, எங்களை வேற்று மனிதர்களாக எண்ணாமல் அவர்கள் குடும்பத்தில் ஒருவரைப் போலவே நடத்தினார்கள். எங்களுக்கும்
தாய் போலவே இருந்தார்கள். நம் அதிருஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

தனி வீட்டிற்கு வந்த மறுநாள், ச்சும்மா மொட்டை மாடியில் போய் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது பக்கத்து வீட்டுப்
பெண்மணி என்னைப் பார்த்துவிட்டு, அவருடைய பக்கத்து வீட்டு பெண்மணி ( யாரு? நம்ம அக்காதான்!)யிடம் சொல்லியிருக்கிறார்கள்.
உடனே அவர்கள் இருவரும் நம் வீட்டிற்கு வந்தனர். நானும் அவர்களை வரவேற்று உட்காரச் சொன்னேன். அப்போது எல்லா சம்பாஷணை
களும் ஹிந்தியில் நடந்து கொண்டிருந்தன. அப்போது அக்கா கேட்டார்கள்,

"நீங்கள் இந்தியாவில் எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறீர்கள்?"

" பூனாவிலிருந்து வந்துள்ளோம். ஆனால் மெட்ராஸ்தான் சொந்த(!) ஊர்"

" ஓ, தமிழ் பேசுவீர்களா?"

இதைத் தமிழில் கேட்டவுடன், தாவி வந்தது என் பேச்சு, 'ஆமாங்கா, நாங்க தமிழ்தான் பேசுவோம்'

அப்போது என்னை அறியாமலேயே 'அக்கா' என்ற வார்த்தை வந்து விட்டிருந்தது! அப்போது என் கணவரும் மதிய உணவுக்காக
வீட்டிற்கு வந்தார். அவரிடம்,'இந்த அக்கா தமிழ் பேசறாங்க' என்று மிக மகிழ்ச்சியுடன் சொன்னேன்.

'ஆமாம் தம்பி, தமிழ்காரங்கதான். ஆனா பெங்களூரு!' அவர்களும் 'தம்பி' என்று உரிமையோடு சொன்னதில் இவருக்கும் மகிழ்ச்சி!

அந்த நிமிடம் முதல் அவர்கள் எங்களுக்கு அக்காவும் அவர்கள் கணவர் எங்கள் மாமாவுமாக ஆகிவிட்டனர். எங்கள் நட்பு இன்னமும் இந்த
23 ஆண்டுகளாகத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது!

அந்த அக்காவிடம் விஷயத்தைச் சொன்னவுடன், அவர்கள் சில புதுப் புடவைகளைக் கொண்டுவந்தார்கள். என்னிடமும் சில புடவைகள்
புதிதாக இருந்தன. அவ்வப்போது 'சேல்' வரும்போது வாங்கிவைக்கும் பழக்கம் இருந்தது. ஊருக்குப் போகும்போது கொண்டுபோகத்தான்!
அப்படியே, ஊரில் உறவினரின் மக்களுக்கு என்று சில ஆடைகளைத் தைத்து வைத்திருந்தேன். (அப்போது, நான் 'ஆயிரம் துணியைக்
கெடுத்து அரை டெய்லர்' ஆக மாறியிருந்த காலம்!) இது போன்ற சிலவற்றைக் கொடுத்து, அவருக்கு ஆறுதல் சொல்லி மறுநாள் அதிகாலை
5 மணிக்குப் போகும் விமானத்தில் ( இரவு 1 மணிக்குக் கிளம்பினோம். 44 மைல் இரவில் பயணிக்க வேண்டும் அல்லவா?)
அவரை அனுப்பி வைத்தோம்.


இன்னும் வரும்!
**********

Tuesday, November 23, 2004

'சன் டே' யும் சண்டையும்!!!!!

ஃபிஜி அனுபவம் பகுதி 19
**********************

ஞாயிற்றுக் கிழமைக்கெனவே சில சம்பிரதாயங்கள் உண்டல்லவா? சிலருக்கு அது தூங்கும் நாள். துணி துவைக்க, நண்பர்களைச் சந்திக்க,
புத்தகம் படிக்க, பிக்னிக் போக, நான்வெஜ் ஐட்டங்களை ஒரு கை பார்க்க, சர்ச்சுக்குப் போக,


ஞாயிற்றுக் கிழமைக்கெனவே சில சம்பிரதாயங்கள் உண்டல்லவா? சிலருக்கு அது தூங்கும் நாள். துணி துவைக்க, நண்பர்களைச் சந்திக்க,
புத்தகம் படிக்க, பிக்னிக் போக, நான்வெஜ் ஐட்டங்களை ஒரு கை பார்க்க, சர்ச்சுக்குப் போக, எதுவுமே இல்லையென்றால் ச்சும்மா
ஒரு லாங் ட்ரைவ் இப்படி ஏதாவது ஒன்று!

மற்ற நாட்களில் வேலையால் உண்டாகிய அலுப்பைப் போக்கும் நாள்! எந்தக் காரியமாக இருந்தாலும், இந்த 'சன் டே' கட்டாயம் செஞ்சிடணும்
என்றிருந்த காலம்!

இதெல்லாம் கூட அவ்வளவு முக்கியமில்லை. இங்கே ஜனங்களின் வசதியை முன்னிட்டு, திருமணம், பிறந்தநாள் விழா போன்ற நிகழ்ச்சிகள்
சனி, ஞாயிறு ( வீக் எண்ட் இல்லையா?)களிலே நடக்கும். திருமணங்கள் அநேகமாக சனிக்கிழமையன்றுதான். ஆனால் அதை ஒட்டி, நடக்கும்
பல்வேறு வைபவங்கள் பெண்ணும், மாப்பிள்ளையும் 'மறுவீடு புகுதல்' , மாப்பிள்ளை வீட்டு வரவேற்பு ( திருமணம் எப்போதும்
மணப்பெண் வீட்டிலேயே நடைபெறும்)போன்றவைகள் மறுநாளான ஞாயிறன்றே நடைபெற்றுக் கொண்டிருந்தன. இது, இன்று நேற்று வந்த
பழக்கம் அல்ல. பல ஆண்டுகளாகவே இப்படித்தான்!

அதற்கும் வந்ததே ஆபத்து! நம் ராணுவத்தலைவர், நாட்டை ஒரு 'கிறிஸ்டியன் ஸ்டேட்' ஆக அறிவித்தார்! ( அப்பப்ப இப்படி ஏதாவது
ஸ்டண்ட் அடிக்கலேன்னா அவருக்கு ஆகாது!)

அறிவிச்சுக்கட்டும். அதனாலே என்ன என்று எல்லோரும் ச்சும்மா இருந்தோம். ஏனெனில் 'கிறிஸ்டியன் ஸ்டேட்' என்றால் என்ன என்று
தெரிந்தால் தானே?

'சர்ச்சு'க்கு மட்டும் போக முடியும். மற்ற விஷயங்களுக்கெல்லாம் 'தடா!' போலீஸ்காரர்களுக்கு இதுவே முக்கிய வேலையாகப் போனது!
போற வர்ற காருங்களை நிறுத்தி விசாரிக்கறது! அவரவர் வீட்டிலே 'கப் சுப்'என்று உட்கார்ந்திருக்கணும்!

இந்தியர்கள் சம்பந்தமுள்ள விழாக்கள் எல்லாம் ஞாயிறு தவிர மற்ற நாட்கள் மட்டுமே என்பதால், நம்மவர்க்கு இடைஞ்சலாக இருந்தது!
இதுநாள்வரை, ஒருவித வேற்றுமையும் பாராட்டாமல் ' எல்லாரும், எல்லாத்துக்கும் போய் வந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள்' எல்லாம்
புது வர்ணம் பூசிக்கொள்ளத் தொடங்கியதுபோல இருந்தன! இரண்டு கலாச்சாரங்களுக்கு இடையே 'மோதல்' ஏற்படத் தொடங்கியிருந்தது!


'இது என்ன புது வம்பு' என்று எல்லோரும் நினைக்க ஆரம்பித்தனர்!

அதே சமயம் 'காமன்வெல்த் அணி'யிலிருந்து ஃபிஜியை நீக்கிவிட்டதாக அறிக்கை வெளிவந்தது!

தலைவர் ச்சும்மா இதையெல்லாம் பார்த்துக் கொண்டு நிற்பாரா என்ன? அவரும் பதில் அறிக்கை விடுத்தார். 'நீங்கள் என்ன எங்களை
நீக்கறது? நாங்களே விலகுகிறோம்!'

'சபாஷ்! சரியான போட்டி' என்று 'நடிகர் வீரப்பா, வஞ்சிக்கோட்டை வாலிபனில்' சொன்ன மாதிரி நாங்களும் புது சுறுசுறுப்புடன்
நிமிர்ந்து உட்கார்ந்தோம்!

இதற்குள் என் கணவரும் நியூஸிலாந்து போய் அங்கே உள்ள ஃபேக்டரியைப் பார்வையிட்டு(!) திரும்பி வந்தார். அது கொஞ்சம் பெரிய
அளவில் ( 300 பேர் வேலை செய்கிறார்கள்) நடந்து கொண்டிருந்தது. யூனிட் பெருசு என்பதால், வசதிகளும், இன்னும் மேலே உயரக்கூடிய
வாய்ப்புகளும் இருந்தன! இங்கேயோ 15 ஆட்கள் மட்டுமே உள்ள சிறிய யூனிட்.

அங்கே போனால், புது 'ப்ராடக்ட் டெவலெப்' செய்து ஆராயவும் வசதிகள் இருந்தன! வளர வேண்டிய நிலையில் உள்ளவர்கள் இதையெல்லாம்
நினைவில் கொள்ளவேண்டுமல்லவா? ஆகவே 'ச்சலோ நியூஸிலாண்ட்' என்று தீர்மானித்தோம்.

வேலைக்கான அனுமதியில் போகவேண்டாம் என்றும், நிரந்தர வசிப்பு என்ற தகுதியில் போகலாம் என்றும் நினைத்ததால், உடனே இங்குள்ள
தூதரகத்தில், 'பெர்மெனண்ட் ரெஸிடென்ஸ்' தகுதிக்கு விண்ணப்பித்தோம். அதே சமயம், அங்கே நியூஸியில் நம் வருகைக்கான அவசியத்தை(!)
குறிப்பிட்டு, கம்பெனியும் குடியுரிமை அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தது!

'இரண்டு கல்லில் ஒரே மாங்காய்!!'

நான் எழுதிய அனுப்பிய லிஸ்ட்டில் இருந்த சாமான்கள் கிடைப்பது, நாங்கள் இருக்கப் போகும் நகரத்தில் கொஞ்சம் கஷ்டம் என்றாலும், ஆக்லாந்து
என்னும் பெரிய நகரத்தில் இவை கிடைக்கும் என்ற விவரமும் கொண்டுவந்தார். ஆனால் 'அரிசி' கிடைக்கிறதென்று சொன்னார்!

இன்னும் ஒரு முக்கியமான(!) விஷயத்தையும் கவனித்து வந்திருந்தார்.

'வைர மோதிரம்'

இதுவரை, இந்தியக் கலாச்சாரத்தை (தாலி செண்டிமென்ட் போன்றவை ) மற்றுமே அறிந்து வாழ்ந்துவந்த எங்களுக்கு, இது ஒரு புது
விஷயமாக இருந்தது. நம் ஊர்க் கல்யாணங்களிலும் மோதிரம் என்பது முக்கிய இடத்தைப் பெற்றிருந்தாலும் 'வைரம்' என்பது மிகவும்
வசதியானவர்களுக்கு என்ற நிலமை இருந்துவந்த காலம்! ஆனால் இங்கே 'வெள்ளையர்கள்' திருமணச் சடங்குகளுக்கு முக்கியமாகக்
கருதியது இந்த வைர மோதிரம்! அதுவும் ஒரு பெரிய வைரக் கல்லாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு 'எறும்புத் தலை'யின்
அளவிருந்தாலும் போதும்! வைரம் வைரம்தான்! மற்றபடி அவர்கள் நம்மைப் போல் தங்க நகைகள் அணிவது அநேகமாக இல்லை என்றே
சொல்லலாம்!

எங்கே, எனக்குத் தாழ்மைஉணர்வு வந்துவிடுமோ என்று 'இவராகவே எண்ணிக் கொண்டு' எனக்கு ஒரு 'வைர மோதிரம்' வாங்கித் தந்தார்!
அடிச்சது பிரைஸ்! நல்லதாகவே பார்த்து வாங்கிக் கொண்டேன்! ( நியூஸி போன பின்புதான் இந்த 'வைர விவகாரம்' இவர் நினைத்தது
போல இல்லையென்பதும், பலர் வெறும் தங்க மோதிரமே அணிகிறார்கள் என்பதும், சிலர் ஒன்றும் அணியாமலேயே இருக்கிறார்கள் என்றும்
தெரிந்தது) ஏதோ நம் அதிருஷ்டம், இவர் வைரமோதிரம் உள்ளவர்களை மட்டுமே பார்த்திருக்கிறார்!! வெல்டன்!!!!

இப்போது 'காத்திருப்பு காலம்'. நமக்குத் தூதரகத்திலிருந்து அழைப்பு வரும் என்று சொல்லியிருந்தார்கள்.

நம் ராணுவத்தலைவர் இன்னோரு அறிக்கை வெளியிட்டார். இது மிகவும் முக்கியமானது! எங்கள் நாடு இனி ஆங்கிலேயரின் ஆட்சிக்கு
உட்படப் போவதில்லை. இதை ஒரு 'குடியரசு நாடு' என்று பிரகடனம் செய்தார்! இதனால், இங்கிலாந்தின் அதிகாரத்தில் இருந்து முழுமையாக
விடுபட்டாயிற்று. இனி 'நோ கவர்னர் ஜெனரல்!' நானே பிரதம மந்திரி! நானே எல்லாம்!!!!!!!

இங்கிலாந்து அரசுக்கும் 'விட்டது ஒரு தொல்லை!' அவர்களும் இந்த நாட்டுப் பராமரிப்புக்கென்று இனி செலவு செய்ய வேண்டாமே! இனி எல்லாம்
உங்கள் பாடு என்று 'நைஸா'கக் கைகழுவி விட்டனர்!

நாட்டின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த நம் ராணுவத்தலைவர்......இல்லையில்லை, நம் புதிய பிரதமர் தனக்குத் தெரிந்த வழியை மீண்டும்
செயல்படுத்தினார்.

இந்தா பிடி, இன்னொரு 20 சதம் நாணய மதிப்புக் குறைவு!

இப்போது ஃப்ஜி டாலர் மொத்தம் 34% மதிப்பை இழந்துவிட்டது!

வியாபாரிகளுக்கு பயங்கர இடி!

குரங்கு அப்பம் பிட்ட கதையாக ஆனது எங்கள் சேமிப்பு!


இன்னும் வரும்
************

Friday, November 19, 2004

இருப்பதா? போவதா?

ஃபிஜி அனுபவம் பகுதி 18
**********************

ஒரு வாரகாலம் முடங்கியிருந்த விமானச் சேவைகள் மீண்டும் ஒருமாதிரி ஆரம்பித்தன! ஆனால் எப்போது என்ன நடக்குமோ என்ற
பயம் காரணம் சுற்றுலாப்பயணிகள் யாரும் வரவில்லை!


ஒரு வாரகாலம் முடங்கியிருந்த விமானச் சேவைகள் மீண்டும் ஒருமாதிரி ஆரம்பித்தன! ஆனால் எப்போது என்ன நடக்குமோ என்ற
பயம் காரணம் சுற்றுலாப்பயணிகள் யாரும் வரவில்லை! இருப்பவர்களும் போய்ச் சேரும் வழியைத் தேட ஆரம்பித்தனர். அந்தந்த நாட்டினர்
தங்களுடைய குடிமக்களை(ஹாலிடே மேக்கர்ஸ்) இங்கிருந்து உடனே திரும்பிவரச் சொல்லி வேண்டுகோள் விடுவித்த வண்ணம் இருந்தனர்!

சுற்றுலாப் பயணிகள் இல்லாததால், எல்லா ரிஸார்ட்டுகளும் காலியாகிவிட்டன! அரசாங்கத்துக்கும் வருமானம் போச்சு!

ராணுவம் ஏன் இப்படிச் செய்தது என்பதற்குப் பலவிதமான காரணங்கள் கசியத் தொடங்கியன! முதல் காரணம் பணம்!!!!

இங்கே ஏது அவ்வளவு பணம்?

இதற்குமுன் இருந்த பிரதமர் கோடிக்கணக்கில் பணத்தை 'அமுக்கிவிட்டார்' என்றும், புது மந்திரிசபை வந்தவுடன் அந்த ஊழல் வெளிப்பட்டு
விடுமென்ற பயத்தில், ராணுவத்தின் உதவியுடன் இதை நடத்திவிட்டார் என்றும் பரவலான செய்திகள் வந்தவண்ணமிருந்தன!

இங்கே எப்போதும் புயல் வருவதால்,( அதுதான் வருடாவருடம் வருகிறதே!) மற்ற நாடுகளில் இருந்து கிடைக்கும் புயல் நிவாரணம் நிதியை
ஒழுங்கான முறையில் செலவுசெய்து கணக்கில் காட்டாமல், சுருட்டிட்டாங்களாம்! அதுவே மில்லியன் கணக்கில் இருக்குமே!

இந்த கலாட்டாவைப் பார்த்துட்டு, நம்ம 'மாட்சிமை தாங்கிய மஹாராணி ' சொல்லிட்டாங்க, 'ஃபிஜியை 'காமன்வெல்த் கூட்டத்துலே இருந்து
விலக்கப்போறோம்!'

இந்த 'தம்கி' யெல்லாம் எந்த மூலைக்கு?

(இந்திய அரசாங்கம் ஒண்ணும் செய்யாமச் சும்மா அறிக்கை விட்டுகிட்டு இருந்தது! அங்கெயே குடுமிப்பிடி சண்டை நம்ம அரசியல்வாதிங்களுக்கு!
அதுலெ பல்லாயிரக்கணக்கான இந்தியர்களை யாரு நினைப்பா? அவுங்க ஓட்டு கணக்குலே வராதில்லே!)

இதற்கு நடுவுலே நமக்கு அங்கெயே இருப்பதா அல்லது இந்தியாவுக்குப் போய்விடலாமா என்று ஒரே குழப்பம். இந்தக் கம்பெனி ஆரம்பித்து
ரொம்ப நன்றாக வளர்ந்து இருந்தது இந்த 5 வருசத்துலே! முதல் வருடம் முடிவதற்கு முன்பே, ஆஸ்தராலியக் கம்பெனி ஒன்று இதனுடன்
கூட்டுச் சேர்ந்துகொண்டது! அதற்குப் பின் அதே ஆஸ்தராலியக் கம்பெனி, நியூஸிலாந்து கம்பெனிகளையும் தன் வசப்படுத்திக் கொண்டிருந்தது!

அங்கிருந்தெல்லாம் 'பெருந்தலைகள்' அவ்வப்போது ஃபிஜிக்கு விஜயம் செய்து கம்பெனி நடவடிக்கைகளில் பங்கு கொள்வதும் நடந்து
கொண்டிருந்தது. அவர்கள் வரும்போது, மனைவிகளும் கூடவே வருவார்கள். அவர்களுக்கு ஒரு ஃப்ரீ ஹாலிடே! அப்படியே,
நம் வீட்டுக்கும் வந்து ஒரு விஸிட் அடித்துவிட்டுப் போவார்கள்.

நமக்கும் ஒப்பந்தம் முடிவடையும் நாள் வந்துகொண்டிருந்தது! நாங்கள் 3 வருட ஒப்பந்தத்தில் வந்து, அது மீண்டும் ஒரு முறை புதுப்பிக்கப்பட்டு
இருந்தது. இன்னும் 11 மாதங்களே இருந்தன! இந்தியாவுக்கே போகலாம் என்று முடிவு செய்து அதை நம் கம்பெனியிடம் தெரிவித்தோம்.
இன்னொரு எஞ்சினீயரை வரவழைக்க வேண்டுமல்லவா? அத்ற்கு நேரம் எடுக்குமல்லவா? இப்போது சொன்னால்தானே நல்லது!

அவர்களுக்கு நம்மை விட்டுவிட விருப்பமில்லை(!) ஃபிஜி குடியுரிமை வாங்கித் தருவதாகச் சொன்னார்கள். 'ஆடிக் காத்தில் அம்மியே
பறக்கும்போது நாமெல்லாம் எந்த மூலைக்கு?'

உள்ளூர் ஆட்களே, இங்கே இனி வாழ்க்கையில்லை என்று வெளியூர் கிளம்பிகின்றனர்!


மூணு மாசமாகிவிட்டது. ஒரே இறுக்கம்! ஏதும் முன்னேற்றம் காணப்படவில்லை. இன்னும் 'ராணி சாஹிபா'வின் ஆட்சியின் கீழேதான்
என்பதால் பேச்சு வார்த்தை(!) நடந்துகொண்டிருந்தது, இங்கிலாந்துடன்!

நம் ராணுவத்தலைவர் அவ்வப்போது ஏதாவது 'ஸ்டண்ட்' அடித்துக் கொண்டிருந்தார்! பழைய பிரதமரை ( ஊழல் பெருச்சாளி என்று
வதந்திகளில் வந்தவர்) புது 'கவர்னர் ஜெனரல்'பதவிக்குக் கொண்டுவந்தார்! ஒரு இடைக்கால அரசாங்கம் 'நியமிக்கப் பட்டது!'

உள்ளூர் டாக்டர்கள், இன்னும் நல்ல வேலைகளில் இருந்தவர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கனடா, ஆஸ்தராலியா, நியூஸிலாந்து
என்று போனார்கள். வேலை கிடைத்தல்ல! ச்சும்மாப் போய் வேலை கிடைக்குமா என்று பார்க்க! ஏற்கெனவே டூரிஸ்ட்டாக அங்கே
போனவர்கள் விசா முடிந்தபின்னும் திரும்பி வராமல் 'ஓவர் ஸ்டே'யாக நின்றுவிட்டனர்! அந்த அரசாங்கங்களும் ஏதாவது உதவி
செய்தேயாகவேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருந்தன!

இங்கே தூதரகங்கள் எல்லாம் திரும்ப இயங்கத் தொடங்கிவிட்டன!

இந்திய ஹைக்கமிஷனர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, அவருடைய உரையில், இங்கு நடக்கும் நிகழ்வுகளைக் குறிப்பிட்டு,
இந்த நாடு நல்ல நிலையில் இருப்பதற்கு இந்தியர்களின் உழைப்பே காரணம் என்று குறிப்பிட்டு விட்டாராம்! இது பொறுக்காத அரசு,
உடனே இந்தியத் தூதரகம் இனி தேவையில்லை. உடனே மூடப்படவேண்டும் என்று சொன்னது! இதனால் பரபரப்பு மீண்டும் தொற்றிக்
கொண்டது! அடுத்த நாளே, ஹை கமிஷனரும், அலுவலக ஆட்களும் கிளம்பிப் போய்விட்டனர்!

இதற்குள் நம் கம்பெனியின் 'பெருந்தலைகள்' கூடிப் பேசி, நீங்கள் இந்தியா திரும்ப வேண்டாம். ஆஸ்தராலியா அல்லது நியூஸிலாந்துக்கு
வந்துவிடுங்கள் என்று அழைத்தனர்!

இப்போது 'பந்து நம் பக்கம்'

ஆஸ்தராலியா பெரிய நாடு. ஒரு கண்டம் முழுவதும் ஒரே நாடு என்பது ஒரு சிறப்பு அம்சம்! ஃபேக்டரியும் பெரிது! முன்னேற நல்ல வாய்ப்பு
என்று பல நல்லவைகள் இருந்தாலும் என் மனதில் ஒரு அச்சம்! இங்கே ஃபிஜியில் வார, மாத இதழ்கள் என்று ஒன்றுமே வெளியாகாது.
தினசரிப் பேப்பரே ஒன்றே ஒன்று என்னும் போது இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா? நமக்கோ, கொஞ்சம் ஏதாவது படிக்கவேண்டும்!
பொட்டலம் கட்டித்தரும் பேப்பர் என்றாலும் சரி! ஆனால் பொட்டலமே இல்லையே! எல்லாம் பாலித்லீன் பைகள்தானே!

ஊரில் இருந்து குமுதமும், ஆனந்தவிகடனும் வரவழைத்துக் கொண்டிருந்தோம். ஆனாலும் வேற ஒன்றும் இல்லாததால், ஆஸ்தராலியா
இதழ்களை ( இவை உள்ளூர்க் கடைகளில் தாராளமாகக் கிடைத்தன) வாங்குவதையும் வழக்கமாக்கி வைத்திருந்தோம்.

ஆஸ்தராலியாவைப் பற்றின என் அறிவெல்லாம்(!) இந்த இதழ்களின் மூலம் பெற்றவைதான். அப்போது அங்கே பள்ளிப் பிள்ளைகள் கூட
'ட்ரக்' உபயோகிக்கின்றனர் என்றெல்லாம் வந்துகொண்டிருந்தது. மேலும் 'இன ஒற்றுமை' அவ்வளவாக இல்லை என்றும் செய்திகள்
வந்துகொண்டிருந்தன. எனக்கோ வயிற்றீல் 'புளி!' பெரியவர்களுக்குப் பரவாயில்லை. ஆனால் குழந்தை, அடுத்தவருடம் பள்ளிக்குப்
போக ஆரம்பிக்குமே. பள்ளியில் ஏதாவது பிரச்சனை வந்துவிட்டால் குழந்தையின் வாழ்வு பாதிக்கப்படுமே என்று ஒரே கவலை!

நியூஸிலாந்து பற்றித் தெரிந்த விஷயம் ஒண்ணும் இல்லை. ஃபிஜியில் உள்ள மருத்துவ மனைகளில் சிகிச்சை அளிக்க முடியாத 'கேஸ்'கள்,
அவர்களுக்கு இருக்கும் நிதிநிலையைப் பொறுத்து, நியூஸிலாந்து நாட்டுக்கு வந்து குணம் பெற்றுத் திரும்பும்! பேச்சு வழக்கில் சொன்னால்
'ஏதோ கொல்லையில் இருக்கற இடம் போல, போயிட்டு வந்துட்டு இருக்கறது!'

அவ்வப்போது, மூணு மாசத்துக்கு 'விசா' இல்லாமலே போய்வரலாம் என்ற அதிரடி அறிவிப்புகள்வேறு வரும்! அப்போது, பலர் இங்கு வந்து,
'ஃப்ரூட் பிக்கிங்' வேலை செய்து சம்பாரித்துக் கொண்டு திரும்புவார்கள். ஒரு ஃபிஜி டாலருக்கு ரெண்டு நியூஸி டாலர்கள் இருந்த காலம்!
மேலும் ஃபிஜியில் வேலைக்கு வாரக் கூலிதான்! நியூஸியில் மணிக்கு இவ்வளவு என்று கூலியாச்சே! நல்ல காசு!

மேலும் 'நியூஸி'யில் வெள்ளை இன மக்களுக்கு மட்டுமே குடியேற்ற உரிமை என்ற கட்டுப்பாடு இருந்ததும், அப்போது புதிதாக வந்த
'லேபர் கவர்ன்மெண்ட்' இதைச் சற்று தளர்த்தியிருந்ததும் எங்களுக்குச் சாதகமாக இருந்தது!

வேலைக்கான அனுமதி என்று ஒருவகையும், பி. ஆர் ( பெர்மனன்ட்டு ரெஸிடன்ஸ்) என்ற ஒன்றும் இருந்தன. ஆனால் பி. ஆர்.
வேண்டுமானால் நிரந்தர வேலைக்கு உத்திரவாதம் இருந்தால்தான் கிடைக்கும்!

சரி ஒரு 'சான்ஸ்' எடுக்கலாம் என்று நினைத்தாலும், சரிவர விவரம் இல்லாமல் இடம் மாறுவது நல்லதல்ல என்றும் எண்ணம் இருந்தது.
என் கணவர் மட்டும் 'கம்பெனியை நேரில் போய்ப் பார்த்து விட்டு முடிவு' சொல்வதாகச் சொன்னார். நானும் வழக்கம் போல ஒரு
நீண்ட பட்டியலைக் கொடுத்தேன், என்னென்ன சாமான்கள் கிடைக்கும் என்ற விவரம் வேண்டி. அதில் முதலாவது இருந்தது எது என்று
சொல்லவும் வேண்டுமா? புளி!

இன்னும் வரும்
***************


Wednesday, November 17, 2004

வந்ததே 'கூ'

ஃபிஜி அனுபவம் பகுதி 17
***********************

அரசாங்கத்தை ராணுவம் கைப்பற்றிவிட்டது!!! ரேடியோவில் கேட்ட செய்தி இதுதான்! புது மந்திரிசபையினர் காவலில் இருக்கின்றனர்!



அரசாங்கத்தை ராணுவம் கைப்பற்றிவிட்டது!!! ரேடியோவில் கேட்ட செய்தி இதுதான்! புது மந்திரிசபையினர் காவலில் இருக்கின்றனர்!

என்ன நடந்ததென்ற தெளிவு ஒன்றும் இல்லை. ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கொருமுறை அரசாங்கத்தை ராணுவம் எடுத்துக் கொண்டதைப்
பற்றிய செய்தி மட்டுமே வந்து கொண்டிருந்தது!

நேரம் போகப் போகச் செய்திகள் வேறுமாதிரி உருவெடுக்கத் தொடங்கின! தலைநகருக்கும் எங்களுக்கும் இருந்த இடைவெளி வெறும்
5 மணி நேரக் கார் பயணம்தான்!

'ஃபிஜி டைம்ஸ்' என்ற நாளிதழ் ( இது ஒன்றுதான் இங்கே டெய்லி பேப்பர்! ) நடந்த விஷயத்தை முக்கியத் தலைப்புச் செய்தியாக
வெளியிட்டிருந்தது!

'கர்னல் ரம்புக்கா' என்பவர் பிரதமரையும் மற்ற மந்திரிசபை அங்கத்தினரையும் காவலில் வைத்துவிட்டு, 'நாட்டின் பொறுப்பை ராணுவம்
ஏற்றது' என்று அறிவித்திருந்தார்!

காரணம் ஒன்றும் விவரிக்கப்படவில்லை! அவ்வளவுதான். இரண்டுநாட்கள் வழக்கம்போல் கழிந்தன!

அதன்பின் எங்களுக்குக் கிடைத்த செய்திகள் வேறு மாதிரி இருந்தன. தலைநகரில், இந்தியர்களின் கடைகள் சூறையாடப் படுகின்றன.
இந்தியர்களைத் தாக்குகின்றனர். எல்லாக் கடைகளும் அடைக்கப் பட்டிருக்கின்றன என்றெல்லாம் சேதிகள் வந்தன. ஆனால் இது எதுவுமே
அதிகாரப் பூர்வமாகவோ, ரேடியோவிலோ வரவில்லை. ஆட்கள் மூலமாகவே வந்தன!

எல்லாவற்றுக்கும் ரேடியோதான்! தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்காத காலகட்டம்! அதுவுமே நல்லதாகிவிட்டது. பரபரப்பான செய்தி
என்ற முறையில், எங்கோ ஒரு இடத்தில் நடந்த அசம்பாவிதத்தை, விடாது திரும்பத்திரும்பக் காண்பித்து, சும்மா இருக்கும் மற்றவர்களையும்
உசுப்பி விட்டிருக்கக்கூடிய சாத்தியம் இருந்ததல்லவா?

இதற்குமுன், மற்ற சில நாடுகளில் ராணுவம், ஆட்சியைக் கைப்பற்றியிருந்த விவரங்களையெல்லாம் படித்தறிந்திருந்த நாங்கள் என்ன ஆகுமோ
என்று கவலைப் பட்டோம். உள்ளூர் ஆட்களுக்கு இருந்த அறியாமையின் காரணம் யாருமே இதை ஒரு பொருட்டாகவும் கருதவில்லை.

உடனே நாங்கள் தலைநகருக்கு, நம் இந்திய ஹைகமிஷனரைத் தொடர்பு கொண்டோம். அவர்களும் 'ஆபத்து ஒன்றுமில்லை. பொறுத்திருந்து
பார்க்கவேண்டும். எதற்கும் நீங்கள் கவனமாக இருங்கள்' என்று கூறினர். எங்களுக்குக் கவலையாக இருந்தது!

நம் நண்பரின் ( புது மந்திரி சபையில் இடம் பெற்றவர்) குடும்பத்தினர், அவரைத் தொடர்பு கொள்ள முயன்று தோற்றனர். விபரீதமாக
ஏதாவது நடந்துவிடுமோ என்ற பயம் இந்தியர்களுக்கு வர ஆரம்பித்திருந்தது!

நமக்கு ( இந்தியர்களுக்கு) கொஞ்சம் கற்பனைவளம் அதிகமோ என்றுகூட சிலசமயங்களில் நான் நினைப்பதுண்டு! ஒரு 200 மைல் தொலை
விலிருந்து வரும் செய்தி, எங்களை வந்தடைந்துவிடுவதற்குள் அதற்குக் கண்ணும், காதுமட்டுமல்ல, கை கால்கள்கூட முளைத்து விடும்!!!!!
அது உண்மைதானா என்று தெரியாவிட்டாலும் கூட, ஏதோ ஒரு பதற்றம் நம்மைத் தொத்திக்கொள்ளும்!

'ஃபிஜியன்கள் எல்லாம் இந்தியர்களின் வீடு புகுந்து அடிக்கிறார்கள். நகை நட்டையெல்லாம் பிடுங்கிக்கொண்டு ஓடுகிறார்கள்' என்றெல்லாம்
புரளி கிளம்ப ஆரம்பித்துவிட்டது!

நாங்கள் இருக்கும் ஊர் எப்போதும்போல அமைதியாக இருந்தாலும், ஃபிஜியன்களைக் காணும்போது, நெஞ்சுக்குள் 'சுரீர்' என்று ஒரு
உணர்வு, அதனால் சற்று பதற்றம்! 'அகத்தின் அழகு முகத்தில் தெரிந்துவிடாதா?' நமக்குப் பழக்கமான ஃபிஜியன்களுக்கும் ஒருவிதமான
'அனீஸினஸ்' வேற்றுமுகம் பார்க்கும் குழந்தையின் உணர்வு! ஆனால் இதையெல்லாம் வெளியில் காண்பிக்காமல் சாமர்த்தியமாக
மறைக்கவேண்டும். விரோத மனப்பான்மை வரவோ, வளரவோ இடம் தரக்கூடாது என்று இரண்டு பிரிவுமே முயற்சி செய்தோம்!

அநேக இந்தியர்கள், (குடும்பத்தில் ஒரு சிலர்) கனடா, இங்கிலாந்து என்று சொந்தத்தை நோக்கிப் போக ஆரம்பித்தனர்!
'ட்ராவல் பிஸினஸ்' செய்து கொண்டிருந்த ஒரு சிலர், 'எரியும் வீட்டில் பிடுங்கினவரை ஆதாயம்' என்பது போல இந்த சந்தர்ப்பத்தை
பயன்படுத்திக் கொண்டனர்.

'கனடா போயிருங்க. அங்கே 'ஏர்போர்ட்டிலே என்ட்ரி விஸா ஸ்டாம்ப்' செய்யும் போதே உங்களுக்கு 5 ஏக்கர் நிலத்தை அந்த கவர்மெண்ட்
கொடுத்துருவாங்க. அங்கே பயிர் வச்சுப் பிழைச்சுக்கலாம். அப்பாலெ கொஞ்ச நாள் ஆனதும், இங்கே இருக்கற குடும்பத்தைக் கூட்டிட்டுப்
போயிரலாம். இங்கெ இந்த 'கைவித்தி' ஆளுங்களோட இனிமே இருக்க முடியாது!'

நேடிவ் ஃபிஜியர்களைக் குறிக்கும் வார்த்தைதான் இந்தக் 'கைவித்தி' என்பது!

இதையெல்லாம் நம்பிக்கொண்டு பலர் நாட்டைவிட்டுப் போக முயன்றார்கள். இருந்த சேமிப்பையெல்லாம் டிக்கெட்டு, மற்ற செலவுகளுக்கு
என்று செலவழித்தும், கடன் பட்டும் பல ஆட்கள் போனார்கள். போனவர்கள் எல்லாம் மூன்று மாதங்களில் திரும்பிவரவும் செய்தார்கள்!
இப்படியெல்லாம் போனவர்களில் குஜ்ஜுக்கள் யாரும் இல்லை! வியாபாரம் குறைவான நிலையிலும், பொறுத்திருந்து பார்க்கலாம் என்று
அமைதிகாத்து வந்தார்கள் அவர்கள்!

அரசாங்கத்தின் தரப்பிலிருந்து அறிக்கைகள் வந்துகொண்டிருந்தன,' இந்தியர்கள் கலங்க வேண்டாம். உங்கள் உடலுக்கோ, உடமைகளுக்கோ
ஆபத்து ஏதும் ஃபிஜியர்களால் வராது!'என்றெல்லாம்.

இந்த அமளியைப் பார்த்ததும் அண்டைநாடுகளான 'நியூஸிலாந்து, ஆஸ்தராலியா' இரண்டும் அவர்களின் தூதரகத்தைப் பாதுகாக்கவென்று
அவர்களின் கடற்படையைச் சேர்ந்த கப்பலை ஃபிஜிக்கு அனுப்பியிருந்தன!

இந்தியத் தூதரகத்தைத் தொலைபேசியில் அணுகுவதும்கூட இயலாமல் போய்விட்டது! ஒரே குழப்பம்தான்! ஆனால் நம் ஹைகமிஷனர், நம்மோடு
தொடர்புகொண்டு, 'பயப்படவேண்டாம். நீங்கள் மூவரும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொண்ட நிலையிலெ இருக்கவேண்டும். அப்போதுதான்
அவசியம் என்றால் உங்களுக்கு ( NRI) ஏதாவது உதவி செய்யமுடியும்' என்றார்!

நானும் 'இங்கே எல்லாம் வழக்கம்போல்தான் உள்ளது. தலைநகரில்தான் குழப்பம் என்று தகவல் வந்துகொண்டிருக்கிறது. ஆகவே நீங்கள்
பத்திரமாகவும் கவனமாகவும் இருங்கள்' என்று சொன்னேன்.

நாங்கள் இருந்த ஊரில் மொத்தமே 3 குடும்பம்தான் NRI பிரிவில் உள்ளவர்கள். அதில் ஒருவர் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்.
இன்னொரு குடும்பம் பேங்க் ஆஃப் பரோடாவின் மேனேஜரும், மனைவியும் இரண்டு மகன்களும். மற்றது நாங்கள்& மூணரை வயதுள்ள
என் மகள். மகள் அங்கே பிறந்ததினால் அவளுக்கு ஃபிஜி பாஸ்போர்ட் எடுத்திருந்தோம். அது ஏதாவது பிரச்சனையாகுமோ என்று பயமாக
இருந்தது!

நாங்கள் மூவரும் தினமும் எங்கள் வீட்டிலே சந்தித்து, கிடைக்கும் தகவல்களைப் பரிமாறிக் கொள்வோம். இதில் 'பேங்க் மேனேஜர் சொல்வது,
' எங்கள் வீட்டில் வந்து எல்லோரும் தங்கிவிடுங்கள்'என்று.

நான் சொல்வேன், ' இங்கே தான் உங்களுக்குப் பாதுகாப்பு. நம் வீட்டில் மேல்மாடியில் குடியிருப்பது ஃபிஜியன் குடும்பம்தானே. அவர்
பெயர் 'பென்னி ரம்புக்கா' என்று உங்களுக்குத் தெரியாதா? 'ரம்புக்கா' என்றால் யாரும் தொல்லை தர மாட்டார்கள்.ராணுவத் தலைவர்
'ஜெனரல் ரம்புக்கா'வின் உறவினர் என்று விட்டுவிடுவார்கள்'

இந்த கலாட்டாக்களுக்கு நடுவில், 'கர்னல் ரம்புக்கா', தனக்குத்தானே பதவி உயர்வு அளித்துக் கொண்டு 'ஆர்மி ஜெனரல் ரம்புக்கா'வாக
ஆகி இருந்தார்!

நாட்டின் நன்மையைக் கருதி அவர் செய்த முதல் வேலை, நாட்டின் நாணய மதிப்பை 20% குறைத்ததுதான்! போச்சு, எங்கள் சேமிப்பெல்லாம்
தடாலென்று இருபது சதம் மதிப்பிழந்து போனது!

தினம் தினம் கூடிப் பேசிகொண்டிருந்தோம். மற்ற வெளிநாட்டினருக்கெல்லாம் அந்தந்த அரசாங்கம் பாதுகாப்பைக் கருதி பலதும் செய்து
கொண்டிருந்த சமயத்தில், 'ஏர் இந்தியா' எங்களைக் கொண்டுபோக வரும் என்றெண்ணிக் காத்திருந்தோம்!

*************************************************************************************


Monday, November 15, 2004

'க்காவோ பீவோ மஜாக் கரோ!!!!!!'

ஃபிஜி அனுபவம் பகுதி 16
*****************************

இங்கிருக்கும் இந்தியர்களின் முக்கிய 'ஸ்லோகன்' இதுதான்!!!! சாப்பிடு, குடி, சந்தோஷமா இரு!!!!!!!!




இங்கிருக்கும் இந்தியர்களின் முக்கிய 'ஸ்லோகன்' இதுதான்!!!! சாப்பிடு, குடி, சந்தோஷமா இரு!!!!!!!!

பிறந்த நாட்டிலிருந்தே அந்நியப்பட்டுப் போனதால் வந்த விரக்தியில் எழுந்ததா இந்த வாசகம் என்றுகூடத் தோணலாம்!
அல்லது ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தால் அவர்களுக்கு அடங்கிக் கிடந்து, அவர்களின் வாழ்க்கையை அருகே இருந்து
கண்டதால் ஏற்பட்ட அனுபவமாகவும் இருக்கலாம்! எப்படியோ இதே எண்ணம் 'நம் நாட்டிலும்' இப்போதெல்லாம் பரவி
வருவதை இல்லையென்று நாமும் மறுக்க முடியாதல்லவா?

இங்குள்ள இந்தியர்களுக்கு, வழக்கமான வாழ்க்கை முறையிலிருந்து ஒரு சிறு மாற்றம் வேண்டுமானால் எங்கே போவது?
இந்தியா என்ன அருகிலா இருக்கிறது? அப்படி இருந்திருந்தால் அவர்கள் எண்ணப் போக்கில் மாறுதல்கள் ஏற்பட்ட விதம்
வேறாயிருந்திருக்குமோ?

இதுவோ மிகச் சிறிய தீவு. முன்பே சொன்னதுபோல ஒரு எட்டுமணி நேரம் போதும் இதை ஒரு முறை வலம் வர!
ஒரு சில நாட்களுக்கு எங்கேயாவது போகவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால் அவர்கள் நாடுவது இங்கேயுள்ள
'ரிஸார்ட்'களைத்தான்!

இது இங்கே சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து வளர்ந்துவரும் மிகப்பெரிய தொழில்! எல்லா இடங்களிலும் கடற்கரைகளை ஒட்டி,
பல ரிஸார்ட்டுகள் பெருகிவிட்டன. உள்ளூர் ஆட்கள் போய் அனுபவிப்பதற்கு சுமாரான வகையில் உள்ள கடற்கரைகள்கூட அபூர்வமாகி
விட்டன! எல்லாவற்றையும் 'காசுக்கு' விற்றாகிவிட்டது அரசாங்கம்! பல வெளிநாட்டு 'ஹோட்டல்' நிறுவனங்கள் பல இடங்களிலும்
அருமையான 'ரிஸார்ட்டு'களைக் கட்டியிருக்கின்றன! இங்குள்ள பழங்குடி மக்களின் குடிலைப் போன்றே தோற்றம் தரும், நவீன வசதிகள்
படைத்த குடில்கள்! பர்ணசாலையைப் போன்ற அமைதியான இடங்கள். கூட்டம் இருந்தால் அல்லவா சத்தமும், இரைச்சலும் இருக்கும்?

அவர்களும் இந்நாட்டில் முதலீடு செய்கிறோம் என்ற பெயரில் நல்ல கொழுத்த லாபம் அடைந்து வருகின்றனர். ஃபிஜியர்களுக்கு வேலை வாய்ப்பு
கிடைப்பதென்னவோ நிஜம்தான்! ஃபிஜியின் தனிச் சிறப்பைக் காப்பாற்றுவதாக எண்ணிக்கொண்டு, சுற்றுலா சம்பந்தமுள்ள இடங்களில் எல்லாம்
நேடிவ் ஃபிஜியர்களுக்கு மட்டுமே வேலைதரும் நிறுவனங்களும் உண்டு! ஆனாலும் 'பிஹைண்ட் த ஸீன்' என்று கணக்கு வழக்கு பார்க்கும்
சம்பந்தமுள்ள ஆஃபீஸ் நிர்வாகம், இன்னும் இந்தியர்களுக்குத்தான்!

இந்த ரிஸார்ட்டுகள் சுற்றுலா வரும் ஆட்களிடம் வாடகை நிறைய வசூலித்தாலும், உள்ளூர் ஆட்களுக்கு மட்டும் எப்போதும் 50% தள்ளுபடி!
அதனால், உள்ளூர் மக்களும் குறிப்பாக இந்தியர்கள் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

அழகான 'காட்டேஜ் ஸ்டைல்' இருப்பிடங்கள், ஒவ்வொன்றிற்கும் தனியாக நீச்சல் குளங்கள் என்று அட்டகாசமாக ரம்யமான சூழலில்
சில நாட்கள் தங்கி, அந்த 'க்காவோ பீவோ மஜா கரோ'வை நடத்துகின்றனர்!

உள்ளூர் 'பீர்' இங்கே 'ஃபிஜி பிட்டர்'என்னும் பெயரில் ஒரு நியூஸிலாந்து நிறுவனத்தால் தயாரிக்கப் படுகின்றது! இதற்குப் போட்டி
நிறுவனம் இதுவரை இல்லை!

ஃபிஜியில் ஏராளமான சிறிய தீவுகள் இருக்கின்றன என்று முன்பே குறிப்பிட்டிருந்தேனல்லவா? அவைகளிலும் பல ரிஸார்ட்கள் இருக்கின்றன.

ஒரு தீவில் ஒன்று என்று இருப்பதால், அமைதி வேண்டிவரும் வெள்ளைக்காரர்கள் நிம்மதியாக ஓய்வு எடுக்க இவற்றைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
அங்கே வேறு கடைகண்ணிகள் இருக்காது. எல்லாமே அந்த ரிஸார்ட்டில் இருப்பதுதான்! முக்கியமாக டி.வி. கிடையாது! பொழுது போக்கு
என்ற வகையில் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்!

இது போன்ற தீவுகளுக்கு ச்சும்மா ஒரு நாள் போய் திரும்பி வரவும் 'டே எக்ஸ்கர்ஷன்' உண்டு. சிலர் வேறு தீவுகளில் தங்கிக் கொண்டு
மற்ற தீவுகள் எப்படி இருக்கின்றன என்று பார்க்கவும் வருவார்கள். இது போன்ற ஒரு நாள் சுற்றுலாக்களுக்கும் உள்ளூர் ஆட்களுக்கு
50% தள்ளுபடி உண்டு.

நாங்கள் ஒருமுறை 'பீச் கோம்பர் ஐலண்ட்' என்ற தீவுக்கு இப்படிப் போனோம். 'லட்டெளகா' என்னும் ஊரில் இருந்து ( இதுதான்
இத்தீவின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு துறைமுகம். மற்றொன்று தலைநகரான 'சுவா'வில் உள்ளது) பாய்மரக் கப்பலில் பயணம்
செய்தோம். சுமார் 2 மணிநேரப் பயணம். பேருக்குத்தான் பாய்மரக்கப்பலே தவிர, அவசியம் ஏற்பட்டால் அதை எஞ்சின் மூலமும் இயக்க
முடியுமாம்! பாய்மரம் எல்லாம் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு த்ரில்லான அனுபவமாக இருக்கட்டும் என்ற 'பாவ்லா'தான்! இதன் பெயர்
'தூயித்தாய்'. பாயையெல்லாம் விரித்துக் கொண்டு காலையில் 8.30 கிளம்பி இது 'பீச் கோம்பர்' தீவை நோக்கிப் போகும். அப்போது
சில தூண்டில்களை படகின் பின்னால் கட்டிவிடுவார்கள். போகும் வழியிலேயே மீன்களைப் பிடித்துவிடுவார்கள். பத்தரை மணிக்கு நாம்
அந்தத் தீவை அடைந்துவிடுவோம். அந்த மீன்கள் எல்லாம் சமையலறைக்குப் போய்விடும்!

நாமும் ஓய்வு எடுத்துக்கொண்டு அந்தத் தீவைச் சுற்றிப்பார்க்கப்(!) போவோம். ஒரு சுற்று சுற்றிவர அதிகபட்சமாக 30 நிமிடங்கள்!

முன்னால் கூரை வேயப்பட்ட ஹோட்டல் கட்டிடம், அதன் பின்பக்கம் சிறிய காட்டேஜ்கள்! சுற்றிவர வெள்ளைமணலும்,
அதிலே படுத்துக் கொண்டு ஓய்வெடுக்கும் சுற்றுலாப் பயணிகளும்! அவ்வளவுதான்.

சில விளையாட்டுகள் முக்கியமாக ஃபுட்பால் போல ஒன்று அந்த மணல்வெளியில் நடந்துகொண்டிருக்கும். அனைவரும் கலந்து கொள்ளலாம்.
பகலுணவுக்கு மணி அடித்தவுடன், அனைவரும் போய் அவற்றை எடுத்துக் கொண்டு, திரும்ப மணல்வெளியிலே அமர்ந்து சுற்றிலும் உள்ள
கடலை ரசித்தபடி உண்ணலாம். கட்டிடத்தின் உள்ளேயும் அமரலாம். ஆனால் எல்லோரும் வெளியிலே இருக்கவே விரும்புவார்கள்.

ஆழம் மிகக் குறைவாகவே இருக்கும் என்பதால் கரையை ஒட்டி இருக்கும் தண்ணீரில் குழந்தைகளைப் பயமின்றி விளையாடவும் விடலாம்!
ஒரு பெயருக்குக் கூட அலை என்ற சமாச்சாரம் இருக்காது! அமைதியான ஒரு குளம் போன்றே இருக்கும் இந்தக் கடல்பகுதி! 'ஸ்நோர்கேல்'
செய்யவும் உபகரணங்கள் வழங்கப்படுமாதலால் தண்ணீரில் குப்புற மிதந்தபடி, தெளிவான கடலின் அடியில் இருக்கும் காட்சிகளையும்
கண்டு மகிழலாம்!

பகல் உணவுக்குப் பின் அடித்தளம் கண்ணாடியால் உருவாக்கியிருக்கும் சின்னப் படகுகளில் பவளப்பாறைகளைப் பார்க்கச் செல்லலாம்!
இந்தப்படகுகளில் ஒரு பத்துப் பேர்தான் போக இடம் இருக்கும் என்பதால் பல 'ட்ரிப்'கள் அடித்துக் கொண்டிருப்பார்கள். பார்ப்பதற்கே
மிகவும் ரம்மியமான காட்சிகள்தான் கடலின் மடியில்!

நாலுமணிக்கு 'லட்டெளகா'வுக்குப் போக கப்பல்( கப்பல் என்ன பெரிய கப்பல்! ஒரு பெரிய படகுதான்)தன் பாயையெல்லாம் சுருட்டிக்
கொண்டுத் தயாராக இருக்கும். இந்தமுறை எஞ்சின் உதவியோடு ஒரு மணிநேரத்தில் துறைமுகத்தை அடைந்துவிடும்! எல்லாம் ஒரு வியாபாரத்
தந்திரம்தான்!

இந்த 'லட்டெளகா'விலிருந்து 30 நிமிடம் 'ட்ரைவ்' செய்தால் நம்வீடு உள்ள 'ம்பா' வந்துவிடும்! சாலைவசதிகள் ஓரளவுக்கு நன்றாகவே
இருக்கும்! சாலையின் இரு புறங்களிலும் கரும்புக்காடுகள்! வந்துகொண்டிருக்குபோதே, 'விருட்'டென்று சாலையின் குறுக்கே ஓடும்
கீரிகள்! இங்கே கீரிகள் ஏராளம். அதனால் பாம்பு என்ற ஜீவராசி இல்லவே இல்லை! இன்னும் சொல்லப் போனால் இங்கே வகை
வகையான மிருகங்களும் கிடையாது! பசு, காளை,குதிரை, நாய், பூனை இவ்வளவுதான். எருமை மாடுகூட இல்லை!

வெள்ளையர்கள் வந்த புதிதில் அவர்கள்தான் மாடுகளை இங்கே கொண்டு வந்தார்களாம். அப்போது ஃபிஜியர்கள் அதைக் கண்டு வியந்து
அது என்ன என்று கேட்டபோது இது 'புல்', இது 'கெள'(bull & cow) என்று சொன்னார்களாம். ஃபிஜியர்கள் மாடுகளை இப்போதும்
அவர்கள் பாஷையில் 'புல்மகெள' என்றே சொல்கிறார்கள்!

இப்படி எல்லோரும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்குபோது இடிபோல வந்தது ஒரு செய்தி!


இன்னும் வரும்
************


Wednesday, November 10, 2004

தீபாவளி வாழ்த்துக்கள்!!!

அனைவருக்கும் எங்கள் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்!!!


அனைவருக்கும் எங்கள் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்!!!

இந்த தீபாவளிக்கு நான் பார்க்கப் போகும் திரைப்படம் 'பறக்கும் பாவை!!!!'(புத்தம் புதிய காப்பி)
இன்றுதான் வந்து சேர்ந்தது!( கணவர் மலேசியாவிலிருந்து வாங்கிவந்தார்!)

எம்.ஜி.ஆர் & சரோஜாதேவி, மற்றும் பலர் நடித்தது!

திரைப்படப் பாடல்களிலே மோசமான அர்த்தம் வரும்படியெல்லாம் இப்போது பலபாடல்கள் வந்து
கொண்டிருக்கின்றன. சமூகச் சீரழிவுக்கு இவையும் ஒரு காரணமே!

இந்தப் 'பறக்கும் பாவை'யில் பாட்டுகள் எல்லாம் அருமை. கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல்கள்.

'கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா, நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா?'

ஆஹா! காதலனும் காதலியும் பெற்றோரை நாள் பார்க்கச் சொல்லிக் கேட்கிறார்கள்!

( ஓடிப்போய் கல்யாணம்தான் கட்டிக்கலாமா இல்லை!)

இசையும் நன்றாக இருக்கிறது. வார்த்தைகளை முழுங்கிவிடும் இரைச்சலான இசை இல்லை!

என்னதான் சொல்லுங்க, பழைய படங்கள் அதுவும் எம்.ஜி.ஆர். படங்கள் எப்போதும் அலுப்பதே இல்லை!

இந்த நாடு 'டேட் லைன்' ஆரம்பத்தில் இருப்பதால் நாளின் முதல் சூரியனும் எங்களுக்குத்தான்!

பண்டிகையைக் கொண்டாடும் முதல் ஆளும் நான் தானோ?



Monday, November 08, 2004

நிழலும் நிஜமும்!!!!!!

அனுபவம் பகுதி 15
**********************

"இந்தியாவில் 'டாய்லெட்' இருக்கிறதா?"


"இந்தியாவில் 'டாய்லெட்' இருக்கிறதா?"

உதவியாளர் கேட்ட கேள்வி இது! எனக்குத் தூக்கிவாரிப் போட்டது!

"ஏன் அப்படிக் கேட்கின்றாய்?"

"ச்சும்மாதான். தெரிந்து கொள்ளுவதற்காக!"

சரி. என்ன நடக்கிறதென்று பார்க்கலாம் என்றெண்ணி, அங்கு 'டாய்லெட்' இல்லையே என்றேன்.

இப்போது, அதிர்ச்சி அந்தப் பெண்ணுக்கு!

"உண்மையாகவா? அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?"

" எங்களுக்குப் போகவேண்டுமென்றால் இங்கே ஃபிஜிக்கு வந்துவிடுவோம்"

அதன்பின் நான் தெரிந்து கொண்ட விவரம் இது.

இங்குள்ளவர்களுக்கு ( குஜ்ஜுக்கள் நீங்கலாக) இந்தியாவைப் பற்றித் தெரிந்த விவரங்கள் எல்லாமே திரைப்படங்களின் மூலம்தான்
அதிலும் ஹிந்தி சினிமாக்கள் மட்டுமே பார்த்து அதிலுள்ளதுதான் இந்தியா என்ற முடிவுக்கு வந்திருந்தனர்!
அப்போதெல்லாம் ( அந்தக் காலக் கட்டங்களில் வந்த)சில/பல ஹிந்திப் படங்களில் ('ஜக்தீப்' என்ற தமாசு நடிகர் வரும் காட்சிகளில்)
கிராமத்து ஆட்கள் 'லோட்டா ( செம்பு) எடுத்துக் கொண்டு, வெளியே 'கடன்' கழிக்கப் போவதான காட்சிகள் நிறைய இடம்
பெற்றிருந்தன. அவைகளையெல்லாம் கவனமாகப் பார்த்து, இந்த விபரீத முடிவுக்கு வந்துவிட்டிருந்தனர் இங்குள்ள சாதாரண மக்கள்.

இவர்களுக்குத்தான் இந்தியத் தொடர்பே விட்டுப் போய்விட்டதல்லவா? இந்தக் கேள்வியை குஜராத்திகள் வீட்டில் ( அங்கும் இவர்கள் தானே
வேலைக்குப் போகிறார்கள்!) கேட்டிருக்கலாம். ஆனால் பயம்! அவர்கள் வியாபார சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பணக்காரர்கள். அங்கே
வாய் திறக்காமல் சொன்ன வேலையைச் செய்யவேண்டும் என்ற எழுதப்படாத நியதிகள்!

ஏனோ, பணக்காரர்களைப் பார்த்தால் சாதாரண நிலையில் உள்ள ஜனங்களுக்கு உள்ளூர ஒரு பயம்! முன்பு, ஒரு ஹிந்திப் படத்தில்கூட
'பணம் என்ற சுவரால் கட்டப்பட்டக் கோட்டை' என்றொரு வசனம் வந்ததாக ஞாபகம்!

நம் நாட்டிலும் சிலர், வேறு ஒருவரைக் குறிப்பிடும்போது 'அவர்க்ள் பணக்காரர்கள்' என்ற அடைமொழியோடு சேர்த்துச் சொல்வார்கள்.
பணம் என்பது ஒரு 'க்வாலிஃபிகேஷன்' என்பது போல. அவர்களிடம் உள்ள பணம் அவர்களுக்கு. நமக்கா தரப்போகின்றார்கள்?
(ஆனா என் கணவர் இப்போது சொல்வது," பணம் ஒரு 'க்வாலிஃபிகேஷன்'தான். அது இருந்தால் வேற எதுவும் தேவையில்லை"
மனுஷர் எப்படி மாறிட்டார் பாருங்க!)

அதுவேதான் இனிமேல் 'ஜாதியோ' என்றும் சிலவேளைகளில் நினைப்பேன்.

அது போகட்டும். இங்கே நம் இந்தியவம்சாவளியினர் இப்போது ஒரு ஐந்தாறு தலைமுறைகளாக வசிக்கின்றனர். அவர்களில் முதல் மூன்று
தலைமுறையினர் இங்கே பிரிட்டிஷ்காரர்களின் ஒப்பந்தத்தில் இருந்தனர். அவர்களுக்குப் பின்னே வந்தவர்கள் (பிறந்தவர்கள்) கொஞ்சம்
தலையெடுத்ததும் வேறு எங்காவது போய் வசிக்க வாய்ப்புள்ளதா என்று தேடியிருக்கின்றனர்.

இங்கிலாந்து அரசின் நேரடிப் பார்வையில் இருந்த தேசங்களில் இதுவும் ஒன்றாகவே இருந்தது. ஒரே தலைமையின் கீழ் உள்ள மற்ற நாடுகளுக்கு
'விஸா' அனுமதியில்லாமல் போய்வரக்கூடிய உரிமை இருந்த காரணத்தினால், சிலர் இங்கிலாந்து, கனடா( ப்ரிட்டிஷ்) என்று போய் அங்கேயே
நிரந்தரமாகத் தங்கிவிட்டனர். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் அவர்கள் யாருமே திரும்ப இந்தியாவுக்கு வரவில்லை. அப்படி ஒரு எண்ணமே
அவர்களுக்குத் தோன்றவில்லை போலுள்ளது!

அப்போது ஆஸ்தராலியாவுக்கும் ஒரு சிலர் போயிருக்கின்றனர். நியூஸிலாந்தில் வெள்ளைக்காரர்களுக்கு 'மட்டுமே' குடியுரிமை தரப்பட்டது!
அப்படிப் போனவர்கள் தங்கள் தாய்நாடாக நினைத்தது ஃபிஜியைத்தான்!

இந்தப் பணம் காசு என்று குறிப்பிட்டேனே, இதுதான் இங்கே ராணுவ ஆட்சி வருவதற்கும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது!

இந்தியர்கள் வியாபாரம், விவசாயம் என்று நிறைய விஷயங்களில் ஈடுபட்டு நல்ல நிலையை வெகு சீக்கிரமே அடைந்துவிட்டனர். எல்லாம்
குறைவறக் கிடைத்தபின்னும் 'தேடல்' என்பது மனித சுபாவம் அல்லவா?

கொஞ்சம் கொஞ்சமாக அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்கள். இந்தியர்கள் ஜனத்தொகை நாட்டின் 55% ஆயிருந்தது! நேடிவ் ஃபிஜி மக்கள்
44% இருந்தனர்! பாக்கி 1% என்ன என்று நினைக்கிறீர்களா? சீனர்கள்தான்!

இங்குள்ள 'தங்கச் சுரங்கங்களில்' வேலை செய்வதற்கு வந்தவர்களாம்! இந்தச் சுரங்கங்களை ஆஸ்தராலிய நிறுவனக்கள் மிகவும் குறைந்த
விலையில் ஒப்பந்தம் செய்து வைத்திருந்தன! இப்போதும்தான்!

அரசியல் 'பலம்' மண்ணின் மைந்தர்களுக்கும், பணத்தின் 'பலம்' இந்தியர்களுக்குமான ஒரு சூழ்நிலை உருவாகத் தொடங்கியது!
'ராத்தூ' என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட 'பாரமவுண்ட் சீஃப்'கள் ஏறக்குறைய சிற்றரசர்கள் போல நடந்து கொள்ளும் முறைகளால்
மற்ற சில 'கோரோ' தலைவர்களுக்கு ஒரு அதிருப்தி உண்டாகத் தொடங்கி அது வேர் விட்டு வளர ஆரம்பித்திருந்த காலம்.

அவர்கள் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கியவுடன், ஏராளமான இந்தியர்கள் அதில் பங்கேற்றார்கள். இது வரையில் ஒரே மாதிரியான
அரசாங்கமே நடந்து கொண்டிருந்தது. இப்போது மாற்றுக் கட்சி உருவானவுடன், 1987 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்த மாற்றுக் கட்சி
மகத்தான வெற்றியைப் பெற்றது! புது மந்திரி சபையில் அநேக இந்தியர்கள் இடம் பெற்றனர்! நம் நண்பராகிய அடுத்த வீட்டுக்காரரும் மந்திரிப்
பதவி கிடைக்கப்பெற்றார். பிரதமர் ஒரு ஃபிஜியன் என்றாலும் அவர் 'ராத்தூ' பரம்பரையைச் சேர்ந்தவர் அல்ல!

இந்தியர்கள் எல்லாம் ஒரே மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தனர்!


இன்னும் வரும்!
**************


Friday, November 05, 2004

தீபாவளி !!!!!!

ஃபிஜி அனுபவம் பகுதி 14
**********************

தீபாவளிக்கு அரசாங்க விடுமுறை!!!! இது ஒரு பெரிய விஷயமா? ஆமாம்! வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு, குறிப்பாக
வெள்ளைக்காரர்களின் தேசத்தில் வசிக்கும் நம்மவர்க்கு, தீபாவளி பண்டிகை என்றால் அதுவும், அது வார இறுதியில் இல்லாமல் சாதாரண
வேலை நாளாக இருந்துவிட்டால் அது வெறும் நாள்தான்!


தீபாவளிக்கு அரசாங்க விடுமுறை!!!! இது ஒரு பெரிய விஷயமா? ஆமாம்! வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு, குறிப்பாக
வெள்ளைக்காரர்களின் தேசத்தில் வசிக்கும் நம்மவர்க்கு, தீபாவளி பண்டிகை என்றால் அதுவும், அது வார இறுதியில் இல்லாமல் சாதாரண
வேலை நாளாக இருந்துவிட்டால் அது வெறும் நாள்தான்!

சரி, வருடத்தில் ஒரு நாள்தானே என்று விடுப்பும் எடுக்க மாட்டார்கள். அன்றுதான் 'தலைபோகும்'விதமான பிளானிங் மீட்டிங், அது இது
என்று ஏதாவது முக்கியமாக(!) இருந்து தொலைக்கும்! ( அனுபவித்தவர்களுக்குத்தான் அதன் கஷ்டம் புரியும்!)

ஆனால் ஃபிஜியில் வம்பே இல்லை. அரசாங்க விடுமுறை! இந்தத் தீபாவளியுமே இங்குள்ள எல்லோருக்கும் மிகவும் முக்கியமான பண்டிகை!
குஜராத்திகளுக்கு இது புது வருடம்! வட இந்தியர்களுக்கு ஸ்ரீ ராமன் காட்டிலிருந்து நாட்டுக்குத் திரும்பிய தினம்! நமக்கோ 'நரகாசுரன் வதம்'
தென்னிந்தியர்கள் மற்றெந்தப் பண்டிகையும் இங்கே கொண்டாடுவதில்லை! வட இந்தியர்கள் மட்டுமே ஸ்ரீராம நவமியையும், ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி
யையும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்! ஆனால் ஆ என்றால் ஊ என்றால் உபவாசம் இருந்துவிடுவார்கள்!

தீபாவளிப் பண்டிகைக்கு வீடுகளில் தீப அலங்காரம் பிரதானப் பங்கு வகிக்கின்றது! மண் அகல்களில் ஏற்கெனவே மெழுகு உருக்கி
ஊற்றிய விளக்குகள் தாரளமாகக் கிடைக்கின்றன! போதாததற்கு 'கிறிஸ்மஸ் லைட்' தோரணங்களும் மலிவாகக் கிடைக்கின்றன. ஒரு விஷயம்
கவனித்தீர்களா? தீபாவளி, ரம்ஜான்,கிறிஸ்மஸ் எல்லாமே அடுத்தடுத்து இந்த நவம்பர், டிசம்பர்களில் வந்துவிடுகின்றது! கூடவே ஆங்கிலப்
புத்தாண்டும்!

எல்லா வீடுகளிலும் இந்த அலங்காரங்கள் இடம்பெறுவதோடு, ஆங்கிலப் புத்தாண்டுவரை கழற்றப்படாமல் அப்படியே இருக்கவும் செய்யும்!
அதுவரை கடைகளில் தீபாவளிப் பட்டாசுகளும் விற்பனையில் இருக்கும்.

இங்கே ஒரு விஷயம் இடைச்செருகலாக வருகிறது. நான் வசிக்கும் நியூஸிலாந்தில் பட்டாசு கிடைப்பது வருடத்தில் ஒரு வாரம் மட்டுமே.
அதுவும் அக்டோபர் கடைசியில் ஆரம்பித்து நவம்பர் ஐந்தாம் தேதி, மாலை ஐந்து மணிவரை மட்டுமே விற்க முடியும். ப்ரிட்டிஷ்காரர்
களின் நரகாசுரனான 'கை ஃபாக்ஸ் டே' வாண வேடிக்கை, வெடிக்கட்டு விழா ஒவ்வொரு வருடமும் நவம்பர் 5 வது நாள்
கொண்டாடப் படுகிறது. இந்த நாளோடு பட்டாசு விற்பனையை முடித்துவிடவேண்டும். அணுகுண்டு, லக்ஷ்மி வெடி என்றெல்லாம்
' டமால், டுமீல்' வெடிகள் இல்லை. எல்லாம் 'புஸ் வாணம்' வகைகள்தான்! ஆபத்தில்லாத வாணங்கள்!

இன்னுமொரு வேடிக்கை, பட்டாசு வாங்க குறைந்த பட்ச வயது 14 ! சின்னப்புள்ளைங்களுக்குத் 'தடா!' ஆனால் அன்று கடற்கரையில்
நகராட்சி மன்றத்தால் ஏற்பாடு செய்யப்படும் வாண வேடிக்கையைக் காண ஊரே திரண்டுவரும்! ( இது இன்று தான். இரவு நாங்களும்
போவோம்!)

மேற்படி எந்தவிதமான கட்டுத்திட்டங்களும் ஃபிஜியில் கிடையாது! அது ஓர் இந்தியா அவே ஃப்ரம் இந்தியா! தீபாவளிக்கு இரண்டு வாரங்களுக்கு
முன்பிருந்தே 'டப், டுப்' என்று சின்ன சின்ன சப்தங்களாக பட்டாசு சத்தம் கேட்கத் தொடங்கி, தீபாவளிக் களைகட்ட ஆரம்பித்துவிடும்!

பலகாரங்கள் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இதிலும் அனைவரும் பங்கு கொள்வார்கள். ஒவ்வொரு நாள் ஒரு வீடு என்று ஆரம்பித்து வேலை
நடக்கும்!

'லக்கடி மிட்டாய்' என்ற ஒன்றைக் கட்டாயம் செய்வார்கள். நம் நாட்டில் கிடைக்கும் சக்கரை சேவு ஞாபகம் இருக்கிறதா? அதுதான் இது!
ஆனால் மைதா மாவில் செய்து, முதிர்ந்த பாகில் போட்டுக் கலந்துவிடுவார்கள். ஆறியவுடன், வெண்மையாக பனி போர்த்தியதுபோல
இருக்கும்! 'ஸைனா' என்றொரு காரவகை. இங்கே 'டாரோ' என்னும் கிழங்குவகைகள் ஏராளம் என்று முன்பே குறிப்பிட்டிருந்தேன்
அல்லவா? இந்த்க் கிழங்கின் இலைகள் நம் நாட்டு சேப்பங்கிழங்கின் இலைகள் போல பெரிய அளவில் இருக்கும்.
பருப்பு வகைகளை, மிளகாய், உப்பு சேர்த்து வடைக்கு அரைப்பதுபோல அரைத்து, இந்த இலைகளைப் பரத்தி அதன் பின்னே கனமாகத்
தடவி விடுவார்கள். ஒன்றின் மேல் ஒன்றாக இரண்டு அல்லது மூன்று இலைகளில் இப்படித் தடவி, அவைகளை ஒன்று சேர்த்து சுருட்டுவார்கள்.
நீளமாக சிலிண்டர் போல இருக்கும் இவைகளை ஆவியில் வேகவைத்து, ஆறியவுடன் வட்ட வில்லைகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்தால்
ஆச்சு இந்த 'ஸைனா!'

இன்னும் பலவிதமான பலகாரங்கள். இதை எழுதும்போதே, அவைகளையெல்லாம் 'மிஸ்' செய்த உணர்வு வருகின்றது! குஜராத்திகளால்
நடத்தப் பெறும் 'மிட்டாய்க் கடை'களிலும் பலவிதமான 'தீபாவளி ஸ்பெஷல்'கள். 'ஹரே கிருஷ்ணா இயக்கம்' நடத்தும் உணவுக்கடை
களிலும் பாலினால் செய்யப்பட்ட பலவகை இனிப்புகளை இப்போதெல்லாம் ஒரு கிலோ, அரைக் கிலோ பாக்கெட்டுகளில் வீற்பனை
செய்ய ஆரம்பித்துள்ளனர்.

தீபாவளிதினம் வந்தாச்சா? ஆரம்பித்துவிடும் நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று விஜயங்கள்! காலை முதல் கார்கள் ஓடிக்கொண்டேயிருக்கும்.
(அதுதான் நல்ல நாளிலேயே யாரும் நடக்க மாட்டார்களே!) பலகாரம் 'டிஸ்ட்ரிப்யூஷன்' நடந்துகொண்டே இருக்கும்! அநேகமாக ஒரே
ரெஸிபிதானே! செய்ததும் ஒரே கூட்டம் தானே! ஆனாலும், போய்வந்து போய்வந்து உடலே தளர்ந்துவிடும்!

புது உடைகள் கூட முக்கியமில்லை! பலகாரங்கள்தான் முக்கியம்! வீடு முழுக்கப் பலகாரங்கள்தான்! கெட்டதில், நல்லது என்னவென்றால்
தனித்தனியாகத் தட்டுத்தட்டாக எடுத்து வைக்கவேண்டாம்! அந்தந்த வகைகளை மட்டும் தனியாக ஒவ்வொரு பாத்திரத்தில் போட்டுவிடலாம்!

நேடிவ் ஃபிஜியர்கள் இந்த தீபாவளியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். அவர்களுக்கு இந்தப் பலகாரங்கள் எல்லாம் ரொம்பவே
பிடிக்கும்! நம்மைவிட நன்றாக 'அனுபவித்து, ரஸித்து' உண்பார்கள்!

மாலை ஆனவுடன், ஊரே கடைத்தெருவில்தான் இருக்கும். குஜராத்திகளுக்கு இது புதுக் கணக்கு எழுதும் புது வருட விழாவல்லவா?
அவர்களும் கடைவாசலில் இனிப்பு விநியோகித்துக் கொண்டும், பெட்டி பெட்டியாக பட்டாசு வெடித்துக்கொண்டும் இருப்பார்கள். எல்லாம்
முடிந்ததும் கார்களின் ஊர்வலம் தொடங்கிவிடும்! எல்லாப் பகுதிகளுக்கும் ஒரு 'ட்ரைவ்' போய் வீடுகளில் போடப்பட்டுள்ள தீப
அலங்காரங்களைப் பார்ப்பது ஒரு கட்டாயக் கடமை!

கிறிஸ்மஸ் முடியும்வரை, இருட்டியவுடன் இதே மாதிரி அவ்வப்போது நகர்வலங்கள் தொடரும். டிஸம்பர் 22 'நீண்ட பகல் பொழுது' உள்ள
தினமல்லவா? அன்று 'படா தின்' கொண்டாட்டங்கள். இதில் நேடிவ் ஃபிஜியர்களும் 'ஹாங்கி' என்று செய்வார்கள். பெரிய பள்ளம் தோண்டி,
அதில் அடுப்புக் கரிகள் போட்டு அதன் மேல் பெரிய வாழை இலைகளில் இறைச்சி, உருளைக் கிழங்கு, இன்னும் காய் கறிகள் எல்லாம்
பொதிந்து பொட்டலமாக செய்து அடுக்கி விட்டு, அதன்மேல் இன்னும் பல வாழை இலைகளைக் கொண்டு மூடி விடுவார்கள். இன்னும் சில
கட்டைகளையும், அடுப்புத் தணலையும் அதன் மேல் போட்டு, மண்ணால் நன்றாக மூடிவிடுவார்கள். அது ஒரு 3 மணிநேரம் புகைந்து
கொண்டே இருக்கும். அப்புறம் அந்தக் குழியைத் தோண்டி அதிலுள்ள ஆகார வகைகளை வெளியே எடுத்தால் எல்லாம் நன்றாக வெந்து
போயிருக்கும். பெரிய கூட்டமாக சுற்றி அமர்ந்து உண்பார்கள். கூடவே 'யக்கோனா'! இந்தியர்களையும் இந்த 'ஹாங்கி விருந்து'க்கு
அழைத்து மகிழ்வார்கள்.


ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் சரியாக டிசம்பர் 31 இரவு 12 மணி அடித்தவுடன் ஆரம்பித்துவிடும்.
எல்லா வீடுகளிலிருந்தும் ( ஒன்றுவிடாமல் எல்லா வீடுகளும்) கார்கள் புறப்படும்.
'கழுதை வாலில் பட்டாசு கட்டிவிடுவது போல' பழைய தகர டப்பாக்களைத் துளை போட்டு, காரின் பின்னே கட்டிவிடுவார்கள். அது
'டர்ர, டக டக,'வென்று நாராசமாக ஒலி எழுப்பிக் கொண்டே வரும். அந்தச் சத்தத்துடன் ஊர் முழுதும் வலம் வந்த பின் தான், தூங்கவே
போவார்கள்! கெட்ட ஆவிகளைப் பயப்படுத்தி ஓட்டுவதற்காம் இந்தச் சத்தம்!

இந்த விழாக்களில் எல்லாம் அநேக ஆடுகளுக்கு 'மோட்சம்'தான்! இந்த இடத்தில் ஒன்று குறிப்பிடவேண்டும். வீட்டு வேலை என்று வரும்போது,
இறைச்சி, மீன் வகைகள் சுத்தம் செய்து தருவது 'ஆண்கள்' வேலை. 'பார் பெக்யூ' செய்வதற்கு இறைச்சியில் மசாலா கலப்பது மட்டும்
பெண்கள். அவற்றைச் சுட்டு எடுப்பது ஆண்கள்! துணிமணிகளைத் துவைப்பதும், முக்கியமாக அவைகளை 'அயர்ன்' செய்வதும்
கட்டாயம் பெண்கள் வேலையாம்! எப்போதாவது என் கணவர் அவசரத்துக்கென்று ஒரு ஷர்ட்டை அயர்ன் செய்வதைப் பார்த்தால்கூடப்
போதும் நம் உதவியாளர் பெண்ணுக்கு பதற்றம் வந்துவிடும். ஓடிவந்து அதைக் கையிலிருந்து பிடுங்கி, தானே அயர்ன் செய்து கொடுத்தால்தான்
அந்தப் பதற்றம் நீங்கும்!

இதில் என்ன இருக்கு என்று எனக்கு இன்னமும் புரியவில்லை!


இன்னும் வரும்!
******************

Monday, November 01, 2004

ஆராரோ ஆரிரரோ !!!!!

ஃபிஜி அனுபவம் பகுதி 13
*********************

தத்துப் பிள்ளை வேணுமா? தடங்கல் இல்லாமக் கிடைக்கும்! தமிழ் நாட்டில் பரவலாகக் கேள்விப்படும்
விஷயம் ஒன்று உண்டல்லவா?

தத்துப் பிள்ளை வேணுமா? தடங்கல் இல்லாமக் கிடைக்கும்! தமிழ் நாட்டில் பரவலாகக் கேள்விப்படும்
விஷயம் ஒன்று உண்டல்லவா? சில இடங்களில் பெண் குழந்தைகள் என்றால் கருவிலேயே அதற்கு முடிவு
கட்டிவிடுகிறார்கள் என்று!

இங்கே அதுபோல இதுவரை ஒன்றும் நடக்கவில்லை. குழந்தை ஆணோ, பெண்ணோ(!) வேண்டாம் என்றால்
அரசாங்கமே அக்குழந்தைக்கு வேண்டியதைச் செய்துவிடுகிறது!

மணம் ஆகாத சில இளம்பெண்கள், தாய்மை அடைந்துவிட்டால் சமூகம் அதை மிகப்பெரிய விஷயமாகக் கருதுவதில்லை!
மகப்பேறு நடக்கும்போதே, அந்தக் குழந்தை அவர்களுக்கு வேண்டாமென்று சொல்லும் உரிமையும் அளிக்கப்படுகிறது!
அந்தக் குழந்தை பிறந்தவுடனே அதைத் தனியாகக் கொண்டுபோய் குழந்தைகள் பிரிவில் வைத்து நல்ல முறையில்
கவனிக்கின்றார்கள். அதை உடனே அரசாங்க அலுவலகத்திலும் தெரிவிக்கின்றனர்.

வெல்ஃபேர் டிபார்ட்மெண்ட் மூலம் இந்த விவரம் தத்துக்குழந்தைக்காக பதிவு செய்துள்ளவர்களுக்குப் போய்ச் சேருகிறது.
அவர்கள் ஆசுபத்திரிக்குப் போய் அந்தக் குழந்தையைப் பார்த்து, வேண்டுமா, வேண்டாமா என்றும் முடிவு செய்யலாம்!

சில தம்பதிகள், சாவகாசமாக நேரம் எடுத்துக் கொண்டு முடிவு செய்கின்றனர். சிலர் உடனே! எப்படியானாலும்
வீடுகள் கிடைக்காமல் இருப்பதில்லை. நிறையக் குழந்தைகள் உள்ளவர்கள் கூட, இதுபோல மருத்துவ மனையில்
குழந்தை இருக்கிறதென்று கேள்விப்பட்டால் தயக்கம் இன்றி தத்து எடுத்துக் கொள்கின்றனர்.

ஆஸ்தரேலியா, நியூஸிலாந்து நாடுகளுக்குக் கூட தத்துக் கொடுத்துவிடுகின்றனர். ஃபிஜி அரசாங்கத்திடம் மனு கொடுத்தால்
அவர்களே ஏற்பாடு செய்து விடுகின்றனர்.

நாலு பேர் பேசுவார்கள் என்ற சமூக நிலை இல்லாததாலும் இதை யாரும் பெரிதாகக் கருதுவது இல்லை.

பொதுவாக மிகவும் ஏழ்மை நிலையிலும், கல்வி அறிவு மிகவும் குறைந்துள்ள மக்களிடம்தான் இந்த (கல்யாணத்துக்கு
முன் கர்ப்பமாகிவிடும்) நிலை உள்ளது.

இங்கே சமூக அந்தஸ்த்து அவ்வளவாகப் பார்க்கப் படுவதில்லை. முதலில் நாங்கள் இங்கு வந்தபோது, வீட்டுவேலைகளுக்கு
உதவி செய்ய ஒரு 15 வயதுப் பெண்ணை அழைத்து வந்தார்கள், நம் பக்கத்து வீட்டு அக்கா. உள்ளே வந்தவுடன் அந்தப் பெண்
சோஃபாவில் நம் எதிரில் உட்கார்ந்து கொண்டு என்னென்ன வேலை செய்ய வேண்டும் என்றெல்லாம் விவரம் கேட்டுக்
கொண்டிருந்தாள்.

இந்தியாவைவிட்டு அப்போதுதான் வெளிநாட்டுக்கு வந்திருந்த எனக்குக் கொஞ்சம் விசித்திரமாக ( அதிர்ச்சியாகவா?) இருந்தது.
இந்தியாவில் வேலைக்காரர்கள், எஜமானர்கள் உறவு வேறுமுறையில் இருந்ததும், அதிலேயே பழக்கப் பட்டுவிட்டதும்தான் காரணம்!

மறுநாளிலிருந்து, அந்தப் பெண் வேலைக்கு வர ஆரம்பித்தாள். வந்தவுடன் சோஃபாவில் உட்கார்ந்து கொண்டு ஒரு 'சாய்' போட்டுக்
கொடுக்கும்படி கேட்டாள். என்னவென்று புரியாத நிலையில் நான் 'டீ'தயாரித்துக் கொடுத்தேன். அதைக் குடித்துவிட்டுத்தான் வேலைகளை
ஆரம்பித்துச் செவ்வனே செய்து முடித்தாள். அன்று முதல், வந்தவுடன்,'பஹனி, ஏக் ச்சாய் பனாவ்' என்பது வாடிக்கையாகிவிட்டது.
நானும் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் இருக்கவும் கற்றுக் கொண்டேன்.

சில மாதங்களுக்குப் பின் இந்தப் பெண்ணின் தோழி, இவளுக்குப் பதிலாக வேலைக்கு வர ஆரம்பித்தாள். காரணம் என்னவென்று
அறிந்ததும் எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்கு அளவேயில்லை. கர்ப்பமாக இருக்கின்றாளாம்! அப்புறம் ஒரு நாள் நம் வீட்டுக்கு வந்திருந்தாள்.
குழந்தையைப் பற்றி விசாரித்தேன். ஆண் குழந்தையாம். அரசாங்கம் மூலம் அக்குழந்தை 'தத்து' எடுத்துக்கொள்ளப்பட்டதாம். விவரம்
அறிந்தபோது, எனக்கு மிகவும் மன வருத்தமாக இருந்தது.

நான் ரொம்பப் பெரிய மனுஷி மாதிரி, அந்தப் பெண்ணுக்கு ஆறுதல் கூறினேன். 'நடந்தது பற்றிப் பேசி என்ன பயன்? இனிமேல் நீ
கவனமாக இருந்துகொள். அந்தக் குழந்தை ஒரு நல்ல இடத்தில் வளருவது மிகவும் நல்ல விஷயமல்லவா?, ஆண்களை நம்பி ஏமாந்து
விடாதே. உனக்கு இன்னும் 16 வயதுகூட நிரம்பவில்லை. நல்ல பையனாகப் பார்த்து திருமணம் செய்துகொள்...... இப்படி
என்னென்னவோ சொல்லிக் கொண்டிருந்தேன். அந்தப் பெண்ணும் சரி சரி என்று தலையை ஆட்டிக் கொண்டிருந்தது.

சில மாதங்களுக்குப் பின் அவளை மார்க்கெட்டில் சந்திக்க நேர்ந்தபோது எட்டு மாதக் கர்ப்பிணியாக இருந்தாள். இந்தக் குழந்தையும்
'அடாப்ஷன்' போகிறதென்று தெரிவித்தாள்.

எப்படியோ இந்தக் குழந்தைகளுக்கு வளர்ப்புப் பெற்றோர் கிடைடத்து விடுகின்றனர்.

இன்னொன்று, இங்கே 'ஜாதி' என்பது ஒரு பிரச்சனை இல்லை. ஒரு குடும்பத்தில் தாயும் தந்தையும் வேறு வேறு ஜாதி.
அவர்கள் மருமகனோ, மருமகளோ வேறு வேறு ஜாதி என்பதெல்லாம் சர்வ சாதாரணம்.

பெண்குழந்தைகளோ, ஆண் குழந்தைகளோ வளர்ப்பு, திருமணச் செலவு எல்லாமே ஒரே மாதிரிதான். வரதட்சிணை என்ற
அரக்கன் இன்னும் இங்கே வரவில்லை. சீர் செனத்தி இன்ன மாதிரி செய்யவேண்டும் என்ற கட்டாயம் ஒன்றுமே இல்லை.
இந்தியாவில் வரன்களுக்கு என்றுள்ள'மார்க்கெட் ரேட்' ஒன்றும் கிடையாது!

பெண் வீட்டில்தான் திருமணம். ஆடம்பரம் வேண்டுமென்ற அவசியமும் இல்லை. மங்கல காரியங்கள் நடத்த ஒரு 'பண்டிட்'
இருந்தால் போதும். இந்தப் புரோகிதர்களும் ஒரு குறிப்பிட்ட 'ஜாதி' என்று இல்லை! புரோகிதம் செய்யக் கற்றுக் கொண்டாலே
போதும்! அவர்கள் சைவ உணவுக்காரர்களாக இருக்க வேண்டிய அவசியமும் கிடையாது! எல்லாத் தொழிலையும் போலவே
இதையும் அங்கீகாரம் செய்திருக்கின்றனர்.

வட இந்தியர்களுடைய திருமணம் என்றால் இன்னும் விசேஷம். மணமகனின் தாய், அந்த மணவிழாவில் கலந்து கொள்ள மாட்டார்கள்.
( நல்ல காரியம்! மாமியார் மருமகள் சண்டை ஒரு நாள் தள்ளிப் போடப்படும்!)
மணமகனும், அவருடைய தந்தையும் மற்ற உற்றார் உறவினர் மட்டுமே, மணமகளின் வீட்டில் நடக்கும் சடங்குகளில் கலந்து கொண்டு,
புது மணப்பெண்ணோடு, மணமகனின் வீட்டுக்குத் திரும்பிவிடுவார்கள். மாமியார் வீட்டில், மணமகளுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பதே
அந்த மாமியார்தான்!

சினிமாவில் காண்பிப்பது போன்ற 'தஹேஜ்' சண்டையெல்லாம் இல்லை.

மருமகள்களும் புகுந்தவீட்டில் சண்டை சச்சரவில்லாமல்தான் வாழ்கின்றனர். ஒன்று சொல்ல வேண்டும், வீட்டை நல்ல முறையில்
பராமரிப்பதில் இங்குள்ள பெண்களுக்கு இணையே இல்லை. சோம்பலின்றி உழைப்பார்கள். காலை 11 மணி அளவில் எல்லா
வேலைகளும் நறுவிசாக முடித்துவிட்டு, மற்ற வீட்டு விசேஷங்களுக்கு உதவியும் செய்வார்கள். ஒன்றும் இல்லையெனில் அழகாக
உடுத்திக் கொண்டு 'டவுனில்' உள்ள கடைகண்ணிகளுக்கோ, நண்பர்கள் வீடுகளுக்கோ விஜயம் செய்வார்கள்.

ஒருநாள் உதவியாளர் வரவில்லை என்றால் கூட எல்லா வேலைகளும் நேர்த்தியாகச் செய்யப்பட்டுவிடும்! இதற்கு நேர் மாறாக நான்.
உதவியாளர் வரவில்லை என்றால் மிகவும் அத்தியாவசியமானவைகளை மட்டுமே செய்வேன்.

பாக்கியெல்லாம் நாளைக்கு என்றுதான்!

இன்னும் வரும்