Tuesday, March 08, 2005

மகளிர்தின நினைவலைகள்!!!!

என்னடா, மகளிர் தினம்ன்னு சொல்லிக் கொண்டாடுறதெல்லாம் இப்ப சமீபத்துலே ஆரம்பிச்சதாச்சே,
இவளுக்கு மட்டும் அப்படி, எப்படி எல்லாத்துலேயும் நினைவலை வந்துருதுன்னு நினைக்கிறீங்களா?

நினைவலைன்னா ரொம்பப் பழசாத்தான் இருக்கணுமா? நேத்து நடந்தது நினைவலையாவாதா? என்னாப்பா
ஒரே குழப்பமா இருக்கு!



ரெண்டு வருஷத்துக்கு முன்னாலே, இதேநாளிலே சென்னையிலே இருந்தோம். மொதநா ராத்திரி பதினோரு மணிக்குத்தான்
அங்கே போய்ச் சேர்ந்தோம். இந்த 'தோம், தோம்' யாருன்னா நானும், என்னுடைய 'பிஸினஸ் பார்ட்னரும்'தான்!

இங்கே (நம்முடைய இனப்)பெண்களுக்காக ஒரு ஆடை ஆபரணக் கடையை நடத்தலாமுன்னு முடிவு செஞ்சிருந்தோம்!
அதுக்காக 'பர்ச்சேஸ்' செய்யப் போனோம்.

பொழுது விடிஞ்சதும், ஆரம்பிச்ச வேலை நல்லபடியா முடியணுமேன்னு ஆண்டவனை, நேரில்(!)போய் வேண்டிக்கிட்டு
வந்தேன்.ரொம்பப் பக்கத்துலேதான், திருப்பதி தேவஸ்தானத்தைச் சேர்ந்த பெருமாள் கோயில் இருக்குது!

நாளைத் துவக்கறதுக்கு எஞ்ஜினுக்கு 'பெட்ரோல்' போட தி.நகர் கீதா கஃபேக்குப் போய்ச் சேர்ந்தோம். இந்த இடம்தான்
எனக்கு ஆகிவந்த இடம்!

எங்க மேஜைக்கு எதிர்லே இருந்த காலி இடத்தில் ஒரு இளைஞனும், ஒரு அம்மாவும் வந்து உக்கார்ந்தாங்க! அந்த அம்மாவுக்கு
மட்டும் சில உணவுவகையை ஆர்டர் செஞ்சுட்டு, அந்தப் பையன் ச்சும்மா அந்தம்மாகிட்டே பேசிகிட்டே இருந்தாரு.

நாங்க சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம். எனக்கு வாய் சும்மா இருக்குமா? நான் அவரைப் பார்த்து, 'ஏங்க நீங்க ஒண்ணும்
சாப்பிடலையா?'ன்னு கேட்டேன். அதுக்கு அந்தம்மா சொன்னாங்க, 'அவன் வீட்டுலேயே சாப்பிட்டுட்டாங்க. எனக்கு
மட்டும் டிஃபன் வாங்கித்தர்றதுக்கு கூட்டிட்டு வந்தான்!'

நானும் விடாம, 'ஏங்க இன்னைக்கு உங்களுக்குப் பிறந்த நாளா இல்லை வேற ஏதாவது விசேஷமா'ன்னு கேட்டேன்.
( விடமாட்டாளே...)

'இன்னைக்கு மகளிர் தினமாச்சுங்களே! அதான் அம்மாவுக்கு டிஃபன் வாங்கித்தரலாமுன்னு நினைச்சேன்' சொன்னது அந்தப் பையன்!
'அம்மா டீச்சரா வேலை செய்யறாங்க. அவுங்களை ஸ்கூலிலே விட்டுட்டு நான் வேலைக்குப் போகணும்.'

ஆஹா.. இந்தியாவுலே இப்படியெல்லாம் கொண்டாட்டங்கள் நடக்கறது இப்பத்தான் தெரியுது! அதுமட்டுமில்லை அன்னைக்கு 'மகளிர் தினம்'
என்ற விஷயம்கூட எங்களுக்கு இப்பத்தான் தெரியுது!!!

எங்க முகத்துலே ஒரு பெருமிதம்!! நல்ல நாளுலேதான் நம்ம வியாபாரத்தை ஆரம்பிக்குறோம்! நம்ம கடை ஆஹா ஓஹோன்னு நடக்கப்போகுது!

பத்துமணிக்கு ஆரம்பிச்சு கடை கடையா சுத்திக் களைச்சுப்போச்சு! பகல் சாப்பாட்டுக்காக அதே தி.நகர் சரவண பவனுக்குப் போய் சாப்பாட்டை
முடிச்சுக்கிட்டு வெளியே வர்றோம். காலையிலே பார்த்த அதே அம்மா( டீச்சர்) இன்னும் சில பெண்களோடு, உள்ளே நுழையறாங்க!
அதான் ஏற்கனவே அறிமுகம் ஆயிருச்சே!

"என்னங்க, இன்னும் மகளிர் தினக் கொண்டாட்டம் தானா?"

" ஆமாங்க. இவுங்கெல்லாம் கூட வேலை செய்யற டீச்சருங்க. மகளிர் தினத்துக்காக வெளியே ஒண்ணாச் சேர்ந்துபோய் சாப்பிடலாமுன்னு
வந்தோம்"

' நாங்களும் இதே தினத்தைக் கொண்டாடத்தான் இங்கே வந்தோங்க'ன்னு சொல்லிட்டு ஒரு 'டாட்டா' காமிச்சுட்டு வந்தோம்!

அதுக்கப்புறம் அங்கே இருந்த ரெண்டு வாரத்துலே அவுங்களை எங்கேயும் பார்க்கலை!


மகளிர் தின வாழ்த்துக்கள்!!!!

பி.கு: கடை எப்படிப் போச்சுன்னு என்னைக் கேட்டுறாதீங்க (-:



5 comments:

said...

எங்கள் அலுவலகத்தில் எனது பிரிவில் பணியாற்றும் பெண்கள் (பத்திரிகையாளர்கள், செய்தி வாசிப்பவர்கள்) முதல் சில வருடங்களுக்கு இனிப்புக்கள் வாங்கித் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டிருந்தார்கள். ' எங்களுக்கெல்லாம் கிடையாதா?' என்று ஆண்கள் கேட்டதும் அவர்களுடனும் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தனர். இந்த ஆண்டு ஒரு முன்னேற்றம். ஆண்களும் இனிப்பு வாங்கி சக பெண் பணியாளர்களுக்குத் தரத் துவங்கி உள்ளனர்.
மாலன்

said...

அன்புள்ள மாலன்,

ரொம்ப நல்லதாப் போச்சு. பேசாம ஆண்களுக்கும் 'ஒரு தினம்' வச்சுரலாமா?

என்றும் அன்புடன்,
துளசி.

said...

துளசிதளம்ங்கிறது ரொம்ப அழகான பேரு. என்னடா! இப்ப திடீர்ன்னு கேக்கறீங்களா? இதுதாங்க வெட்கப்படற ஆம்பிளைங்க 'மகளிர்தினம் சொல்லற அழகு :-))

said...

ஆஹா 'ஆடவர் தினம்'-ன்னு ஒன்னு வச்ச வீட்டுல சமைத்து கஷ்டப்படுகிற அப்பாக்களை ஒரு நாள் விடுமுறை விடுத்து மகனோ மகளோ ஓட்டலில் கூட்டிப் போய் சாப்பாடு வாங்கித் தருவார்கள்.

said...

அன்புள்ள செல்வா, கண்ணன் & விஜய்,

நல்லா இருக்கீங்களா? பின்னூட்டத்துக்கு நன்றி!!!

செல்வா,

இப்பெல்லாம் நம்ம சென்னையிலே எல்லா நாளுக்குமே கொண்டாட்டம் கொஞ்சம்
அதிகமாத்தான் இருக்கு! இந்த தினுசு வெள்ளைக்காரப் பண்டிகை(!)களை கட்டாயமாக்
கொண்டாடிடறாங்க!!!

நமக்கு வருசம் பூராவும் ஏதாவது பண்டிகைகள் வர்ற மாதிரி, அவுங்களுக்கும் (முந்தி கிறிஸ்மஸ், ஈஸ்டர்
மட்டும்தானே?)தினம் ஒரு ஏதாவது!


கண்ணன்,

மகளிர்தின வாழ்த்துச் சொல்றதுக்குக்கூட இப்படி வெக்கப்பட்டா எப்படி?:-)

விஜய்,

ஆடவர் தினத்துக்கு 'அப்பாங்களுக்கு' சாப்பாடுமட்டும் கொடுத்தாப் போதுமா? கூடவே 'அல்வா'வும்
தரவேணாமா?

என்றும் அன்புடன்,
துளசி.