Thursday, May 05, 2005

சினிமா டே! !!!!!!

நேத்திருந்து ஒரே ஜலதோஷம்! மழையிலே நனைஞ்சுட்டேன்! அதுவும் பாராட்டு மழையிலே !!

குமிழி, பெயரிலி, முத்து, ஷ்ரேயா, தாரா, நரேன், டோண்டு, வசந்தன், விஜய், கிறிஸ், அன்பு எல்லோருக்கும் நன்றி!!!!

நேத்து மூவி டே! அதாவது மூணு படத்தை ஒரே நாளுலே பாக்கறதுன்னு ஒரு விரதம்!!!!



எல்லோரும் லேட்டஸ்டான படத்தை லேட்டாப் பாக்கறப்ப, நான் ..........

வசந்த மாளிகை, தில்லானா மோகனாம்பாள் அப்புறம் சிவந்த மண் இதுதான் நேத்தைய அஜெண்டா!

( இது மூணும்தான் ஒரே டி.வி.டி.யிலே இருந்தது!)

இந்தப் படங்களைப் பாக்கறப்ப கவனிச்சது என்னென்னா.....

தொழில்நுட்பத்துலே தமிழ் சினிமா ரொம்ப தூரம் கடந்து வந்துடுச்சு! நல்ல விஷயம்தானே?

'மேக்கப்' விஷயத்துலேயும் இப்ப நல்ல முன்னேற்றம் இருக்கு. அப்பத்து படங்களிலே வெள்ளை வெள்ளையா
திட்டுத்திட்டா முகம் ஒரு கலருலேயும், கை கால் வேற கலருலேயும் இருக்கு. லேடீஸ்ங்களுக்குப் புருவம்
எழுதுறோமுன்னு பட்டை பட்டையா கம்பளிப் பூச்சியை வளைச்சு வச்சிருக்கறது மாதிரி இருந்துச்சு!

சண்டைக் காட்சிங்க ரொம்ப சிம்பிளா, கொஞ்சத்துக்குக் கொஞ்சம் நம்புறமாதிரி இருந்துச்சு. இப்ப மாதிரி
க்ராஃபிக்ஸ் உபயத்தோட பறந்து பறந்து அடிக்கறது இல்லை!

பாடல் காட்சிகளிலும் ஒரே உடுப்புதான். ஒரு பாட்டுலே முப்பது 'ட்ரெஸ் ச்சேஞ்' இல்லை!

மாறாதது என்னன்னா, க்ளப் டான்ஸ்களும், கவர்ச்சி நடனங்களும்!!!! ஆனா ஒரு வித்தியாசம் உண்டு!
இப்பத்துப் படங்களிலே கதாநாயகியே இதைச் செஞ்சுடறாங்கல்லே. பழசுலே இதுக்குன்னே சி.ஐ.டி சகுந்தலா,
ஹிந்தி நடிகை ஆலம் இன்னும் சிலர்! இப்ப இதுக்குப் பேரு என்ன? ஒரு பாட்டுக்கு ஆடறதா?

இப்ப ஒவ்வொண்ணாச் சொல்றேன்.

வசந்த மாளிகை...

சிவாஜியோட விக் கொஞ்சம் வேடிக்கையா இருந்துச்சு! வாணிஸ்ரீ அழகா இருந்தாங்க. பெரிய்ய்ய்ய்ய கொண்டை!!!

பாலாஜியை பார்த்து ரொம்ப நாளாச்சு! அவரோட குழந்தை நம்ம ஸ்ரீதேவி. ஆறேழு வயசிருந்தா அதிகம்!

நாகேஷ், ரமாப்ரபா,வி.கே.ராமசாமி நகைச்சுவைக்கு! அப்படி ஒண்ணும் சிரிப்பு வரலை!

டாக்டர் வழக்கமாச் சொல்ற டயலாக் சொன்னார்,'நல்ல வேளை சரியான நேரத்துலே கொண்டு வந்தீங்க. இன்னு அஞ்சு
நிமிஷம் லேட்டாயிருந்தா அவ்வளவுதான்!



தில்லானா மோகனாம்பாள்.

அருமையான கதை, நடிப்பு, பாத்திரங்கள் தேர்வு எல்லாம் அட்டகாசம். அதிலும் டி.எஸ்.பாலையா இன்னும் ஜோர்!
ஜில்ஜில் ரமாமணி தூள் கிளப்பறாங்க. ஏஏஏஏஏஏஏஏஏஏன்? னு இழுத்துக் கேக்கறாங்க. வெகுளியான ஏஏஏஏஏஏன்?

இதுலே நாகேஷ் அல்டாப் வைத்தி! 'ஈவினிங் சிக்ஸ் ஓ க்ளாக்' னு இங்கிலீஷ் பேசறார்.'இந்த மாதிரி ஆளுங்க
உண்மைக்குமே நம்ம சமுதாயத்துலே நிறைய இருக்காங்கல்லே?'ன்னு நினைக்க வச்சாரு!

'நாட்டியப் பேரொளி' முதல் சீன்லே தொடங்கி, கடைசி வரைக்கும் 'மோகனா'வாவே வாழ்ந்துட்டாங்க!!!!!

நாகஸ்வரமும், தவிலும் தூள் கிளப்பிடுச்சு!

ஒருத்தரும் சோடை போகலை. எல்லோருமே அருமையாப் பண்ணியிருந்தாங்க!

சிவந்த மண்

புரட்சிக்காரர்களுக்கும், வசந்தபுரி நாட்டின்(!) திவானுக்கும் இடையிலே நடக்கற கதை! திவான் 'போர்த்துக்கீசியர்'
களுக்கு நாட்டை அடமானம் வைக்கறாரு!

காஞ்சனா, நாயகி! ஃபாரீன்லே படிக்கறாங்க. நாயகனும் அங்கெயே படிக்கறாரு. இயல்பாவே யூரோப் சுத்திப் பாக்கறது
கதைக்குப் பொருத்தமா இருக்கு.( நல்லவேளை, கனவு சீனுக்கு 'ஷாப்பிங் மால்'லேயும், ரோடுலே 'ஃப்ளாட்ஃபார்ம்'லேயும்
நின்னு ஆடலே!)

வெளிநாட்டுப் படப்பிடிப்பு நிஜமாவெ நல்லா இருக்கு! நிறைய செலவு செஞ்சு எடுத்திருக்காங்க அந்தக் காலத்துலேயே!

இதுலேயும் நாகேஷ்தான்! நல்லா சிறப்பா நடிச்சிருந்தாரு. நல்ல சிரிப்பு!!!!! இவருக்கு ஜோடி 'சச்சு'

நம்பியார்( திவான்) கூடவே ஒரு புலி வருது! நல்லா இருந்துச்சு!!!!!

நம்ம 'டோண்டு'கிட்டே ஒரு சந்தேகம் கேக்கணும். இதுலே பேசற 'போர்த்துக்கீசிய மொழி' நிஜமானதா? எனெக்கென்னவோ
ஹிந்தி, மராத்தியெல்லாம் கலந்து பேசறாங்களோன்னு இருந்துச்சு! இல்லே உண்மைக்குமே அப்படித்தான் இருக்குமா?
( நம்ம ஜனங்களுக்கு இது போதுமுன்னு நினைச்சுட்டாங்களோ?)

இந்த மூணு படத்துலெயும் மன நிறைவைத் தந்தது 'தில்லானா மோகனாம்பாள்'தான்!

எனக்கு இந்த பழைய படங்கள் பாக்கறது ரொம்பவெ பிடிச்ச விஷயம். பழசுன்னா அறுதப் பழசா இருக்கணும்!

ஒரு முப்பத்திஅஞ்சு வருசத்துக்கு முன்னாலே, மேற்கு மாம்பலம் நேஷனல் தியேட்டர்லே போட்ட எல்லாப் பழைய
படங்களையும் விடாம பார்த்திருக்கேன். ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, வேதாள உலகம், பூலோக ரம்பை,
ஹாதீம்தாய், சிவகவி, ஜகதலப்பிரதாபன்,சக்ரதாரி, சம்சாரம், ரத்னகுமார், பாதாள பைரவி, மாயக்குதிரை ன்னு பலபடங்கள்.

இந்தத் தியேட்டருக்கு,'மேட்னி ஷோ'தான் போறது. இங்கெ படம் மட்டும் இல்லை, இந்தத்தியேட்டரே அறுதப் பழசுதான்!
எப்ப இடிஞ்சு தலை மேலெ விழுமோன்னு பயமா இருக்கும். அதாலெ வெளியே ஓடறதுக்குத் தோதா கதவுக்குப்
பக்கத்துலே இருக்கற சீட்டுலே உக்காந்துக்குவோம்!

சில சமயம் சிந்தாதிரிப்பேட்டை சித்ரா டாக்கீஸுலேயும் பழைய படங்கள் போடுவாங்க. புதுமைப் பித்தன், குலேபகாவலி,
மலைக்கள்ளன், கணவனே கண் கண்ட தெய்வம், சந்திரஹாரம், கற்புக்கரசின்னு அங்கெயும் பார்த்திருக்கோம்.

அப்புறம் இன்னோரு படம், பெயர் ஞாபகமில்லை. அஞ்சலிதேவியும் கிரிஜான்னு ஒரு நடிகையும் வீணை வாசிச்சுக்கிட்டே
பாடுவாங்க. 'சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா, உன் சுந்தர ரூபம் மறந்திடப் போமோ வா வா வா'
அப்படின்னு ஒரு பாட்டு இருந்ததா நினைவு! ( இல்லே இது வேற படமா?)

நாங்க எங்க பாட்டி வீட்டுலே இருந்த காலக்கட்டத்துலே, 'சினிமா'ன்றது கொஞ்சம் எட்டாக்கனி! பாட்டி டீச்சரா
வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. கூட வேலை செய்யற மத்த டீச்சருங்கெல்லாம் 'ரெகமெண்ட்' செஞ்ச படமா
இருந்தாத்தான் எங்களுக்கு ச்சான்ஸ்! அவுங்க கூட சினிமாவுக்குப் போறதுலே சுகமும் துக்கமும் சரிபாதியாக்
கலந்திருக்கும். சினிமாப் பாக்கறது மட்டும்தான் சுகம். ஆனா வீட்டுலே இருந்து கிளம்பித் திரும்ப வீடு வர்றவரை
அவுங்க போடற கண்டிஷனுங்க இருக்கே, அப்பப்பா!!!!!

முதலாவது தாவணியோட தலைப்பை விசிறிப் போட்டுட்டு வரக்கூடாது. முந்தாணியை இழுத்து முதுகை மறைச்சுத்
தோள்பட்டை வழியா போர்த்தியபடி வரணும். இதுகூட பரவாயில்லை. அப்புறம் அங்கே இங்கென்னு
பராக்குப் பார்க்காம தலையைக் குனிஞ்சபடி நடக்கணும். சளசளன்னு பேசிக்கிட்டே வரக்கூடாது. ம்ம்ம்ம்
அடுத்தது இருக்கே, அதுதான் இன்னும் மோசம். சிரிப்புக் காட்சி வரும்போது, சத்தம் போட்டுச் சிரிக்கக்கூடாது!

பொதுவா நான் சிரிச்சா ஏழூருக்குக் கேக்கும். அப்படிப்பட்டவளுக்கு எப்படி இருக்கும்?

ஒரே 'மிலிட்டரி'தான் போங்க! ( தாயில்லாப் பசங்களைக் கண்ணும் கருத்துமாப் பாத்துக்குறாங்களாம்!) வருசத்துக்கு
மூணு படம் பார்த்தா அதிசயம்!

அப்புறம் படிப்பு, வேலைன்னு 'ஹாஸ்டல் வாசம்' செஞ்சப்பத்தான், இத்தனை நாள் விட்டதைப் பிடிக்கறமாதிரி
இந்தப் பழைய பட வேட்டையை ஆரம்பிச்சது! அதுகாரணமோ என்னமோ, எனக்கு 'ஆன்ட்டீக்' பொருள்ன்னாப் போதும்
ஒரே ஆசைதான்!

இப்ப நானே வீடியோ லைப்ரரி நடத்தறேன். 'எல்லாப்'படங்களும் வந்துருது. வீடு முழுக்கப் படங்களா இறைஞ்சு கிடக்கு!
பாட்டி, 'மேலோகத்து'லே இருந்து பாத்தா அவுங்களுக்கு எப்படி இருக்கும்?


8 comments:

said...

//இப்ப இதுக்குப் பேரு என்ன? ஒரு பாட்டுக்கு ஆடறதா?///

துளசியக்கா,
அதுக்குப் பேரு குத்தாட்டம். நிறையப் படம் அந்த மாதிரிப் பாட்டுக்காகவே ஓடுதாம்.

///இங்கெ படம் மட்டும் இல்லை, இந்தத்தியேட்டரே அறுதப் பழசுதான்!
எப்ப இடிஞ்சு தலை மேலெ விழுமோன்னு பயமா இருக்கும். அதாலெ வெளியே ஓடறதுக்குத் தோதா கதவுக்குப்
பக்கத்துலே இருக்கற சீட்டுலே உக்காந்துக்குவோம்! ///

:-) ;-) ;-)

said...

தம்பி முத்து,

'குத்தாட்டம்'ன்ற பேரா? தெரியாமப் போச்சே! நன்றி தம்பி!

said...

துளசி அவர்களே சிவந்த மண் படத்தில் வரும் "போர்துகீசிய" மொழி என்று அவதூறாக அழைக்கப்படுவது கொங்கணியே. அஞ்சலி வீணை வாசித்துக் கொண்டெ பாடும் பாடல் "பெண்" என்னும் படம். ஆனால் கூட இருப்பது வைஜயந்திமாலாவாகத்தான் இருக்க வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

Dumb charade விளையாட நிறைய பட பெயர்களை (ஜகதலப்பிரதாபன்,ஹாதீம்தாய் ( இது நிஜமாவே பட பெயரா?),சக்ரதாரி...)இந்த பதிவில் கொடுத்து உதவியதற்கு நன்றி.
பாட்டி புராணம் அருமை. உங்க பேத்தி என்ன சொல்ல இருக்காங்களோ , கொங்சம் பொருத்து பாருங்க.

said...

//சிவாஜியோட விக் கொஞ்சம் வேடிக்கையா இருந்துச்சு! வாணிஸ்ரீ அழகா இருந்தாங்க. பெரிய்ய்ய்ய்ய கொண்டை!!!//

அதானே பார்த்தேன் கொண்டைய முதல்ல மறந்தீட்டீங்களோன்னு நினைச்சேன். அப்புறம இங்கே சொல்லியிருக்கீங்க. ஏங்க அப்போ ரெண்டு அரிசி மூட்டைய கொண்டையா போட்டுக்கிட்டாங்க. அப்போ அது தான் ஃபேஷனோ?

said...

ரொம்ப நன்றி டோண்டு! தயவு செய்து இந்த 'அவர்களே' வேண்டாமே. துளசி மட்டும் போதும்.

நீங்க எழுதுனபிறகு தான் ஞாபகம் லேசா வருது. வைஜயந்திமாலாதான். இப்ப வேற
மண்டைக் குடைச்சல். அப்ப அந்த கிரிஜா வந்தது என்ன படமா இருந்திருக்கும்?
( வேற வேலை இல்லை இவளுக்குன்னு திட்டாதீங்க!?

விஜய் & மூர்த்தி,

தேங்க்ஸ் தம்பிகளே! சினிமா எப்படியோ எல்லா ஜனங்களையும் ஏதாவது ஒரு விதத்திலே
இழுத்துடுச்சு. இல்லே?

என்றும் அன்புடன்,
துளசி

said...

விஜய்,

சொல்ல மறந்துட்டேனே, அந்த அரிசி மூட்டை விவகாரம். இப்பெல்லாம் கதாநாயகிங்க 'டயட்' !அதான் அரிசி
மூட்டைக் காணாமப் போச்சோ?

மூர்த்தி,

நல்லா சொன்னீங்க!!!

said...

அன்புள்ள மெய்யப்பன்,
நன்றி!!!

நானும் பேத்தியை 'மேலே போய்' ஆசீர்வதிப்பேன்!!!1