Thursday, November 30, 2006

எவ்ரிடே மனிதர்கள் -24 சகுந்தலா

சகுந்தலா ஒரு இளம் விதவை. ஊருலே எல்லாரும் அப்படித்தான் சொல்றாங்க. பாவம், மூணே மாசம் ஆன கைக் குழந்தை இருக்கு. தகப்பனைத் தின்னுட்டானாம் அந்தக் குழந்தை! இதையும் அந்த ஊரேதான் சொல்லுது.ஆனா சகுந்தலாவுக்கு இன்னும் ஒரு சந்தேகம் இருக்கு. அது........?


நல்ல ஒல்லியான உடல்வாகு. கறுப்பும் இல்லாம ரொம்ப வெளுப்பாவும் இல்லாத ஒரு பொது நிறம். அலைஅலையாஅடர்த்தியாக் கூந்தல். ரொம்ப நீளம். பின்னி விட்டால் ச்சாட்டை போல இருக்கும். கண்ணுலே எப்பவும் ஒரு மெல்லிசானசோகம். டீச்சர் வேலை.



நல்ல வசதியான குடும்பம். கூடப்பிறந்தவுங்க 11 பேர். நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து, ஜாதகம் பார்த்துத்தான் கல்யாணம் நடந்துச்சு. புருஷன் வீட்டுலேயும் நல்ல வசதிதான். ரெண்டு அண்ணனுங்களாம் வீட்டுக்காரருக்கு. இவர்தான் கடைசிப்பிள்ளை. நல்ல படிப்பு. அந்தக் காலத்து பி.ஏ. சகுந்தலா அப்பத்தான் ஸ்கூல் ஃபைனல் முடிச்சிருந்தாங்க. வயசும் பதினேழுதான். நல்ல இடம் கிடைச்சுருக்கேன்னு மேலெ படிக்க விடாமக் கல்யாணம் முடிஞ்சுபோச்சு.


ஜெயகுமாருக்கு சொந்த பிஸினெஸ். ஒயிட் காலர் வேலைங்கச் சுலபமாக் கிடைக்கிற காலமா இருந்தும் இவருக்கு வியாபாரத்துலேதான் கண்ணு. என்னென்னவோ வியாபாரம் செஞ்சுக்கிட்டு இருந்தாராம். பூக்கடை பக்கத்துலே ராட்டன்(ரத்தன்) பஜார்லே பெரிய கடை. எப்பவும் கோட்டும் சூட்டுமாத்தான் பளிச்சுன்னு இருப்பாராம்.



தனிக்குடித்தனம். சொர்கத்தில் இருக்கற நினைப்பு. வீடு பூரா அட்டகாசமான வசதிகள். வீட்டு வேலைக்கு, சமையலுக்குன்னு ஆள். கதைப் புத்தகம், உள்ளூர் சொந்தங்கள் வந்து போறதுன்னு பொழுது போயிருக்கு.



'வெளியே போகலாமுன்னு சொன்னவுடன், அந்த க்ஷணமே செருப்பைக் காலிலே நுழைச்சுக்கிட்டுப் போய்க்கிட்டே இருக்கணுமாம். 'இருங்க, துணி மாத்திக்கிட்டு வந்துடறேனு' சொல்லிறக் கூடாதாம். சதா சர்வ காலமும் ஆடை ஆபரணங்களோடநீட்டா இருக்கணுமாம்' இது ஜெயகுமாரின் எதிர்பார்ப்பு.


ஆஹா.......... அப்படியே இருந்துட்டாப்போச்சு. அதான் எல்லா வேலைக்கும் ஆள் இருக்கே. நாளொரு அலங்காரம், பொழுதொரு புடவைன்னு காலம் போகுது. ரெண்டு வருஷம் ஜாலியோ ஜாலி. சகுந்தலா கர்ப்பமானாங்க. ஏழாம் மாசம் தாய் வீட்டுக்கு வந்தாச்சு.



அப்ப ரெண்டாவது உலக யுத்தம் நடந்துக்கிட்டு இருந்த காலக் கட்டம். இந்தியாவும் பிரிட்டனுக்கு சப்போர்ட். எங்கே பார்த்தாலும் ராணுவக் கெடுபிடிகள். ரேஷன் அது இதுன்னு இருந்துருக்கு. ஜெயகுமாரும் மிலிட்டரிக்கு சாமான்கள் சப்ளை செஞ்சுக்கிட்டு இருந்துருக்கார்.எல்லாம் பீங்கான் கண்ணாடிச் சாமான்கள். கூட்ஸ் வண்டியிலே சரக்குகள் ஏத்தி மூணு கேரேஜுகள் போயிருக்கு. பையன் பிறந்த யோகம் நல்ல காண்ட்ராக்ட் கிடைச்சிருக்கு.


குழந்தைக்கு அஞ்சு மாசம் ஆனதும் கணவர் வீட்டுக்குக் கொண்டு போய் விட்டுருவாங்க. இவனை அப்படி வளர்க்கணும் இப்படி வளர்க்கணுமுன்னு கலர்க்கலராய் கனவுகள் சகுந்தலாவுக்கு. இடி விழுந்தது போல ஒரு செய்தி வருது ஒரு நாள் பொழுது விடியும் நேரத்துலே . ஜெயகுமார் தற்கொலை செஞ்சுக்கிட்டாராம்.


அய்யோ............ அடிச்சுக்கிட்டு அழத்தான் முடிஞ்சது.


ஏன்? எதுக்கு? எப்படி? ஒரே கேள்விகள் மண்டையைக் குடையுது.
சரக்கு ஏத்திப்போன வண்டி விபத்துலே சிக்கி, சாமான்கள் எல்லாம் நொறுங்கிப் போச்சாம். இதுலே வரப்போற பெருத்த லாபத்தை நம்பி, பாங்குலே வாங்குன கடனை எப்படி அடைக்கப்போறோமுன்ற பயம், விரக்தியிலே அவசரமுடிவு எடுத்துட்டார் ஜெயகுமார். வெளியே தெரிஞ்சா அவமானம், போலீஸ் கேஸ்ன்ற 'தேவை இல்லாத' பயத்தாலே'அண்ணன் வீட்டுலே தூக்குலே தொங்குன ஜெயக்குமாரை' ராவோடு ராவா மயானத்துக்குக் கொண்டு போய் எரிச்சாச்சாம்.


கிடைச்ச விவரம் இவ்வளவுதான். அந்தக் காலத்துலே இன்ஷூரன்ஸ் எல்லாம் அவ்வளவா இல்லை போல இருக்கு.பூச்சூடலுக்கு வந்து திரும்பியே போகலை. குடும்ப வழக்கபடி எதோ சாஸ்திரங்கள் சம்பிரதாயங்கள் எல்லாம் முடிஞ்சு கைக்குழந்தையோடு கண் கலங்கி நின்ன சகுந்தலாவுக்கு வயசு வெறும் இருவது. என்ன கொடுமை பாருங்க.


ஜெயகுமார் வீட்டுலே இருந்து ஒண்ணும் பெருசாக் கிடைக்கலை. சகுந்தலா கொண்டு போன சீர்செனத்திகள்தான் கொஞ்சம் போலத் திரும்ப வந்தது. புருஷன் வீட்டுச் சொந்தங்கள் உறவை அப்படியே மு(றி)டிச்சுக்கிட்டாங்க.
குழந்தைக்கு ஒரு வயசானபிறகு, சகுந்தலா மீண்டும் படிக்கப் போனாங்க. எல்லாம் டீச்சர் வேலைக்குத்தான். காஞ்சீபுரத்துலேஒரு டீச்சர் ட்ரெயினிங் ஸ்கூலிலே சேர்ந்துருக்காங்க. ஹாஸ்டல் வாசம். மாசம் ஒருதடவை மகனைப் பார்க்க வந்துட்டுப் போவாங்களாம். ரெண்டு வருசப் படிப்பு. ஆதாரக் கல்வித்திட்டம். இங்கே குழந்தை பாட்டி வீட்டுலே வளர்ந்தான். ஒரு சமயம் குழந்தைக்கு உடம்பு பூரா சிரங்கு வந்து மோசமாயிட்டானாம்.
என்னென்னவோ வைத்தியம் செஞ்சுருக்காங்க.அங்கங்கே சில தழும்புகளோடு நல்லா ஆனானாம்.


படிப்பு முடிச்சுட்டு வந்ததும் உள்ளூர்லேயே ஒரு ஆதாரக் கல்விப் பள்ளிக்கூடத்துலே வேலை கிடைச்சிருக்கு. வருஷம் ஓடிப்போச்சு. பையனுக்கு இப்ப 14 வயசு. பக்கத்து ஊர்லே இருக்கற ஹைஸ்கூலுக்குப் போய்க்கிட்டு இருக்கான்.ரயிலில் போய்வரணும். ரெண்டே ரெண்டு ஸ்டேஷந்தான். கெட்ட சகவாசம் ஆயிருச்சு. பள்ளிக்கூடம் போகாம ச்சீட்டு,கோலின்னு விளையாடிட்டு சாயந்திரம் சரியான நேரத்துக்கு வீட்டுக்கு வந்துருவான். அஞ்சாறு மாசம் இப்படிப் போயிருக்கு.பள்ளிக்கூடமும் ஒரு தகவலும் அனுப்பலை. குறைஞ்சபட்சம் ஏன் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பலைன்னு கடிதம் போட்டுருக்கலாம்.



சகுந்தலாவோட சின்ன அண்ணன் ஒரு நாள் வேற எதோ வேலையாப் போனவர், பையன் ரயில்வே ஸ்டேஷன் மரத்தடியிலே ஜமா சேர்த்துக்கிட்டு சீட்டு விளையாடறதைப் பார்த்துட்டார். வீட்டுக்கு வந்து விஷயத்தைச் சொன்னதும் மண்டகப்படி எல்லாம் ஆச்சு. தெலுங்கு மீடியத்துலே இருந்து தமிழ் மீடியத்துலே உள்ளூர்லேயே சேர்த்தாங்க. ஒரு வழியாஇப்படி அப்படின்னு படிப்பு முடிச்சு, (எல்லாம் ஹைஸ்கூல்தான்) வெளியே வரும்போது வயசு 20.


இதுக்கிடையிலெ எப்பவும் பஞ்சு அடிக்கிறது, பட்டை போடறது, ராட்டையில் நூக்கறதுன்னு பள்ளிக்கூடத்துலே வகுப்புகள் எடுத்ததுலே பஞ்சுத் துகள்கள் எல்லாம் மூக்குவழியாப் போய், ஆஸ்த்மா, க்ஷயரோகமுன்னு வந்துருச்சு சகுந்தலாவுக்கு. தினமும் ஊசி, பால் முட்டைன்னு செலவான செலவு. கையிருப்பெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக் கரைஞ்சுபோச்சு. போனாப் போட்டும், அந்தவரைக்கும் உடல்நிலை குணமாச்சே, அதைச் சொல்லுங்க. அப்புறம் கொஞ்சம் சிபாரிசு புடிச்சு,அரசாங்கப் பள்ளிக்கூடத்துலே வேலையை மாத்திக்கிட்டாங்க. உள்ளூர்தான்.


பையனுக்கு மேலே படிக்க நாட்டம் இல்லை. எதாவது வியாபாரமுன்னு துடிச்சுக்கிட்டே இருந்தான். அப்பனைக் கொண்டு இருக்குன்னு எல்லாரும் சொல்வாங்க. உருவமும் அப்படியேதான். போட்டாவுலே இருக்கற ஜெயகுமாருக்கும், அவர் பையனுக்கும் அப்படி ஒரு ஒத்துமை. இரும்பு நாற்காலி, மேஜை, சாய்வு நாற்காலின்னு ஒரு தொழில் தொடங்கி இப்ப நல்லாஇருக்கானா(ரா)ம். ஆச்சே வயசு இப்ப அறுவதுக்கும் மேலே.


சகுந்தலா வேலையில் இருந்து ஓய்வு வாங்கிக்கிட்டாங்களாம். இப்ப பரவாயில்லாம இருக்காங்கதான். ஆனாலும் மனசுலே இன்னும் ஒரு நெருடல். நிஜமாவே தான் ஒரு விதவையா? ஒரு வேளை சினிமாவில் வர்றதுபோல கணவரைச் சொந்தக்காரங்க ஒளிச்சு வச்சுட்டு செத்துட்டாருன்னு நாடகம் ஆடி இருப்பாங்களோ? இல்லாட்டி அவர் அவமானத்துக்குப் பயந்து ஓடி ஒளிஞ்சுக்கிட்டாரோ? ஏன் அவர் பொணத்தைக்கூடக் கண்ணுலே காட்டாமஎரிச்சாங்க? உண்மையிலெயே செத்துட்டாரா? திடீர்னு ஒரு நாள் திரும்பி வந்தாருன்னா எப்படி இருக்கும்?

இப்படி ஆயிரம் கேள்விகள். விடையே தெரியாத கேள்விகள்.


அடுத்தவாரம்: நாகரத்தினம்


நன்றி: தமிழோவியம்

21 comments:

Anonymous said...

Atlast I'm successfull in posting my comment. I also doubt Jayakumar's death like you.

Athu sari. Tamil'la eppadi pinootam podarathu???

said...

வாங்க சின்ன அம்மணி.
நல்வரவு.

உங்க கணினியிலே கலப்பையை இறக்கி வச்சுக்குங்க.
அதுக்கப்புறம் தமிழில் தட்டச்சு செஞ்சுக்கலாம்.
அதுக்கப்புறம் பேசாம நீங்களும் பதிவு போட்டுறலாம்:-)

அப்படி இல்லைன்னா,

இதுலே

http://www.suratha.com/reader.htm

போய்ப் பாருங்க.

மேல் பெட்டியிலே தங்லீஷ் அடிச்சா, கீழ் பெட்டியிலே தமிழ் வரும்.
அதைக் காப்பி & பேஸ்ட் பண்ணிருங்க பின்னூட்டப்பெட்டியில்.
அம்புட்டுதேன்:-)

said...

அலுப்பு இல்லாம எழுதறீங்க. உங்ககிட்ட நாங்க கத்துக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்குது.

said...

அடக் கொடுமையே...காசத் தொலைப்பாங்க...பணத்தத் தொலைப்பாங்க..நகை நட்டு...வீடு..வாசல்...தோட்டந் தொரவுன்னு தொலைப்பாங்க. அப்பல்லாம் தொலஞ்சிருச்சுன்னு தெரியும். ஆனா தன்னோட வாழ்க்கை தொலஞ்சதா இல்லையான்னே தெரியலைன்னா என்ன செய்றது! கொடுமை கொடுமை.

said...

துளசி,ஏமாந்து போறதுக்குன்னே
பொறந்தாங்களோ?
பாவம்பா.
ம்ம் தெரிஞ்சு ஒரு சகுந்தலா.
தெரியாம எத்தனை ஜீவன்களோ.

said...

உள்ளேன் டீச்சர்.

ரொம்ப கஷ்டமா இருந்தது படிக்க.

said...

வாங்க ஹரிஹரன்.

//அலுப்பு இல்லாம எழுதறீங்க//

அதுசரி. உங்களுக்குப் படிக்க எப்படி இருக்கு?
'அலுப்பு இல்லை' என்று நம்பவா? :-))))

said...

ராகவன்,

ஆமாம்ங்க. ரொம்பக் கொடுமைதான். நான் அவுங்களோடு பலமுறை ரொம்ப
நேரம் உக்காந்து பேசி இருக்கேன். சில நாள் அவுங்க மனம்விட்டுச் சொல்லி
இருக்காங்க. என்ன பதில் பேசணுமுன்னு தெரியாம விக்கிச்சு இருந்துருக்கேன்.

said...

வாங்க வல்லி.

எதுலேயும் ரொம்பப் பட்டுக்காம 'தாமரை இலைத் தண்ணீர்'னு சொல்வமே
அப்படி இருப்பாங்க.

நீங்க சொல்றதுபோல, நமக்குத் தெரியாம இன்னும் எத்தனை
சகுந்தலாக்களோ? (-:

said...

கொத்ஸ்,

வாங்க. ஒரு அறுவது வருசத்துக்கு முன்னே 'விதவை'ன்னு சொல்லப்பட்டவங்களுக்கு
சமுதாயம் எவ்வளவு அநியாயம் செஞ்சிருக்கும்? ரொம்பப் பாவம்தான்(-:

said...

// என்ன பதில் பேசணுமுன்னு தெரியாம ***விக்கி***ச்சு இருந்துருக்கேன் //

இலவசம் அவர்கள் கவனிக்கவும்:-)))

said...

லதா,

'பசங்க' லிஸ்ட்டை ஒரு முறை நல்லாப் பாருங்க:-))))

said...

// இரும்பு நாற்காலி, மேஜை, சாய்வு நாற்காலின்னு ஒரு தொழில் தொடங்கி இப்ப நல்லாஇருக்கானா(ரா)ம்.//

வாழ்க்கையைத் தொலைத்ததாக எண்ணும் சகுந்தலா அம்மாவுக்கு, வாழ்க்கையைத் தொலைத்தாலும், நிறைய மீட்டு எடுக்கலாம்ன்னு காட்ட அந்தப் பையனால் முடியும்!

கில்லி ஆடிய பையன், தன் செயலால் சொல்லி அடிக்கணும்! அப்படிச் செய்தால் அவனுக்கு(அவருக்கு) அடியேன் தலை தாழ்த்தி வந்தனம்!

said...

ஆனா சகுந்தலாவுக்கு இன்னும் ஒரு சந்தேகம் இருக்கு. அது........?//

ஆரம்பத்துல இது வேறேதோ சந்தேகமோன்னு நினைச்சேன்..

ஆனா புருசன் இருக்கரா இல்லையான்னே தெரியாத ஒரு நிலை.. கொடுமைங்க..

Anonymous said...

அக்கா!
பையன் மனமாற்றத்துடன் வியாபரத்தில் முன்னேறியது மகிழ்ச்சி!!அந்த அம்மாவின் மன நிலையில் இப்படியான சலனம் வருவது இயற்கை; பிணத்தைக்கூட பார்க்காமை!!!
யோகன் பாரிஸ்

said...

கற்பனைகளை விட நிஜங்கள் சிலசமயம் முகத்தில் அறைவது நிஜம்.
கடைசி வரிகளில் கனக்க வச்சுட்டீங்க...

said...

எப்படிங்க KRS,

பையன் நல்லா ஆளானது ஒரு தாய்க்குச் சந்தோஷம்தான். சந்தேகமே இல்லை.
ஆனா, அவுங்களொட வாழ்க்கை போனது போனதுதானே? அந்த ரணம் அறவே
ஆறாது இல்லையா?

said...

வாங்க டிபிஆர்ஜோ.

//ஆனா புருசன் இருக்கரா இல்லையான்னே
தெரியாத ஒரு நிலை.. கொடுமைங்க..//

ரொம்பப் பாவங்க, அவுங்க வாழ்க்கை(-:

said...

யோகன்,
அதெதான். இறந்த உடலைப் பார்த்து இருந்தாக்கூட கதறினாலும்,
நாள்பட மனசு ஆறி இருக்கும். அதுக்கும் அவுங்களுக்குக் கொடுப்பனை
இல்லை.

உலகத்துலெ நிறையப்பேர் இப்படிக் காணாமப் போயிடறாங்களாமே.
அவுங்க குடும்பம் இப்படித்தானே கஷ்டப்படும்?

said...

வாங்க சிந்தாநதி.

பல உண்மைக்கதைகள், கற்பனையையும் மிஞ்சிரும்.
இதுகூட இப்படித்தான்(-:

said...

ஆண்டவன் அருளட்டும்.