Monday, July 30, 2007

வீடு 'வா வா'ங்குது பகுதி 2

அடுத்து, வீடு கட்டும் நிலம்? சில கம்பெனிகள், அவர்களே நகரின்,பல வேறு பகுதிகளில் இடம் வாங்கிப் போட்டுட்டு, எல்லாம் சேர்த்து ஒரு முழு 'பேக்கேஜ்' ஆகவும் விற்கறாங்க. இதில் ஒரு நல்ல காரியம் என்னென்றால், நாம் எதற்கும் கவலைப்பட வேண்டாம். அவர்களிடத்தில் எல்லா வேலைக்கும் ஆட்கள் இருப்பதால் மூன்று மாதங்களில் புது வீட்டுக்குக் குடி போகமுடியும்!

நாங்கள் ஏற்கனவே ஒரு பழைய வீட்டை வாங்கியிருந்தோம். நம் இந்தியக் கணக்குக்கு மூணரை கிரவுண்ட் இடம். இதுலே இருக்கும்வீடு ரொம்பச் சின்னது. ரெண்டே ரெண்டு படுக்கை அறைதான். அதனாலே இங்கே இன்னும் ரெண்டு அறையைக் கூட்டலாமுன்னுதான் ஆ.தா. கிட்டே போனது. அதான் தோல்வியாப் போச்சே. சரி,அந்தப் பழைய வீட்டை இடிச்சிட்டு, அங்கே புதுசாக் கட்டிக்கலாம்.

புது வீடு வேணுமா, இல்லே வேணாமான்னுத் தீர்மானம் எடுக்க முடியாமல் இருந்ததாலே, கொஞ்சநாளுக்கு அந்த வீட்டை வாடகைக்கு விடலாம்னு முடிவு செஞ்சோம். அதே மாதிரி வாடகைக்கும் விட்டாச்சு. நமக்கு அவுங்களைக் காலி செய்யணும்னா 6 வார நோட்டீஸ் கொடுக்கணும். இங்கெல்லாம் வீடு 'வார வாடகை'தான்.

இந்த வீட்டுலே ஒரு ச்சின்னக் காடே இருக்கு.. ஒவ்வொண்ணும் ஒரு வகையா பதினோரு ஆப்பிள் மரங்கள். முள்ளுமுள்ளுச் செடிப் புதர்கள் அங்கங்கே உக்காந்துருக்கு. நல்ல பெரிய எலுமிச்சம்பழம் காய்ச்சுத் தொங்கும் ஒரு ச்சின்ன மரம்.வாசப்பக்கம் நம்மூர்லெ காகிதப்பூன்னு சொல்வோம் பாருங்க அந்த 'போகன்வில்லா'ச் செடி. பிங்க் பூக்கள். காம்பவுண்ட்சுவரைச் சுத்தி என்னென்னவோ பேர் தெரியாத செடிகள். ஆனா பூத்துக்குலுங்குது. க்ரோட்டன்ஸ் ஒரு பக்கம்.ஆனா தோட்டத்துலே கவனமா நடக்கணும். செடிகளுக்கு சப்போர்ட்டா ஊன்றுகோல் வைக்கிறேன்னு அங்கங்கே கம்பிகளை நட்டுப் பழைய 'பேண்டிஹோஸ்' வச்சுக் கட்டி விட்டுருக்காங்க, இந்த வீட்டின் முன்னாள் சொந்தக்காரியானஒரு பாட்டி. தவறிக் கீழே விழுந்தோமுன்னா.............. கம்பி நம்மைத் துளைச்சுக்கிட்டு வெளியே வந்துரும். எவ்வளோ ஆபத்து பாருங்க.

வாடகைக்கு விடுமுன்னே, ஒரு வீக் எண்ட் பூராவும் நானும் இவருமாச் சேர்ந்து கம்பிங்களைத் தேடிப் பார்த்துக் கவனமாத் தோண்டி வெளியே எடுத்துப் போட்டோம். பின் பக்கத்துலே இருந்த செடிகள், மரங்கள்ன்னு கொஞ்சம் கிளைகளைக் கத்தரிச்சோம். கைகாலெல்லாம் முள் கீறி விழுப்புண்களோடு கொஞ்சநாள் நடமாட வேண்டியதாப் போச்சு. முன்பக்கமும்,பின்பக்கமும் இருக்கற புதர்களை எங்க பூனைகளுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும். ஒளிஞ்சு விளையாடச் சரியான இடம்.சின்னதா ஒரு செயற்கைக் குளம்கூட பாசி பிடிச்சுக் காஞ்சு கிடக்கு.

இங்கெல்லாம் ஒரு மனையிலே வீடு கட்டிக்கணுமுன்னா, ஒரு 'லெவல்' வீடா இருந்தா 40% இடத்துக்குள்ளே கட்டலாம். மாடி வீடுன்னா 35% இடம்தான் வீட்டுக்கு. மீதி இடம் ச்சும்மாக் கிடக்கேன்னு தோட்டம், புல்வெளின்னுபோட்டு வைக்கணும். இந்த மனை 809 சதுர மீட்டர். அதனாலே 320 சதுர மீட்டர்வரை கட்டலாம். ஆனா பாட்டி, 130 சதுரமீட்டர்தான் கட்டி வாழ்ந்துருக்காங்க. கட்டுனதில் இருந்து அவுங்க மட்டுமே தனியா இருந்துருக்காங்க.இப்ப ரொம்பவே வயசாச்சுன்னு முதியோர் இல்லத்துக்குப் போயிட்டாங்களாம்.


சரி. முதலாவதாக எந்த மாதிரி டிஸைன்? எத்தனை அறைகள்? என்னென்ன முக்கியமாகத் தேவை என்று காகிதமும் பேனாவுமாக உட்கார்ந்தோம்.ஆரம்பமானது எங்கள் 'கூட்டு' ஆலோசனை. இதுக்கு இன்னொரு பேர் இருக்காமே, 'வாக்கு வாதம்'னு! தினமும் இதே வேலைதான். படம் படமா போட்டுகிட்டே இருக்கோம்.இப்படி மாத்தி, அப்படி மாத்தின்னு வரையறோம். நான் ஒரு படி மேலே போய், ஒரு அட்டையிலே ரூம் அளவுகளாய் வெட்டி வச்சுகிட்டு, அதை ஒரு பலகையிலே மாத்தி, மாத்தி வச்சுப் பாக்கறேன். எல்லாம் சிஸ்டமேட்டிக்:-)

ஒரு மாதிரி ஒரு டிஸைன் வந்தது. ஆனா, ஹால், ரூம் அளவெல்லாம் இப்ப நாம இருக்கற வீடு அளவுதான். இன்னும் கொஞ்சம் பெருசா இருக்கணும்ங்கறது என் எண்ணம். கோபால் சொல்றார், இதைவிட 40 செ.மீ (!!)அதிகம்னு.

இதே சைஸ்ன்னா, இங்கேயே இருக்கலாம்தானே! என்னத்துக்கு பணம் செலவு செஞ்சு இதே மாதிரி வீட்டுக்குப் போறது?

'சைஸ் அதேன்னாலும் வீடு புதுசு ஆச்சே! குளிர் இல்லாம இருக்குமே'! இது அவர் வாதம்.

ஒரு மாதிரி எங்க தேவைகளுக்கேத்த மாதிரி வரைஞ்சோம். இப்ப நமக்கு இந்த'ப்ளானை' வரையறதுக்கு ஒரு 'ஆர்கிடெக்ட் டிஸைனர்' வேணும். எனக்கோ ஆ.தா. அலர்ஜி! நமக்குத் தெரிஞ்ச ஒரு மலேசியப் பெண், ஒரு வெள்ளைக்காரரை மணந்து கொண்டு இருக்காங்க.அவரும் ஒரு 'பில்டர்'தான். அவருகிட்டே ஆலோசனை கேட்டப்ப, அவர் ஒரு 'ஆர்கிடெக்ட்' பேரை சிபாரிசு செஞ்சார். போய்ப் பார்த்தோம்.எனக்கு மனசுக்கு சரியாப்படல்லே!

இன்னொருநாள், '·போன் புக்' லே ( மங்களகரமா) 'மஞ்சள்' பக்கத்தைப் பார்த்து ஒரு 'ஆர்கிடெக்ட் ட்ராயிங் டிஸைனர்' க்குப் ·போன் போட்டோம்.என்ன மாதிரி 'சர்வீஸ்' செய்றாங்கன்னு கேட்டப்போ அவர் சொன்னது எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு.

" நீங்க சொல்றதைக் கவனிச்சுக் கேப்போம்"

ஆஹா! சரியான பதில்! உடனே அவரைப் போய்ப் பார்த்தோம்.

ஆளு, ரொம்பச் சின்னப் பையன்! வயசு கூட ஒரு 25/26 இருக்கலாம்! தொழிலுக்குப் புதுசு போல. நமக்கு வேண்டியதைச் செய்வார்னு ஒரு நம்பிக்கை வந்துச்சு.

எனக்கு எப்பவுமே ஒரு ஆளைப் பார்த்தாலே 'மனசு'க்கு இவுங்களை நம்பலாமா/ வேண்டாமான்னு தோணும்! பல சமயங்களிலே இது சரியாகவும் அமைஞ்சுடும்!

பையன்னு சொன்னேன்லே, அவரு பேரு கூட 'பாய்ட்/போய்ட். Boyd' அவருக்கு உதவியாளனா இன்னொரு சின்ன வயசுப் பையன்! நாங்க வரைஞ்சிருந்ததைப் பார்த்துட்டு, அவுங்களுக்கு ரொம்ப சந்தோஷமாயிடுச்சு. நல்ல டிஸைன்னு சொல்லிட்டு, அதயே இன்னும் கொஞ்சம்விவரமா வரையறேன்னு சொன்னாரு. எவ்வளவு காசு செலவுன்னும் பேசி முடிவு செஞ்சோம். 2900$ க்கு ஒத்துகிட்டாரு. அப்புறம் ஜி.எஸ்.டி.எல்லாம் சேர்த்து 3600$க்கு வந்துச்சுன்னு நினைக்கறேன்.

நம்ம வீட்டுக்கு ஒரு 'இந்தியன் டச்' கொடுக்கணும்னு ஒரு ஊஞ்சல் போட ஆசையா இருந்துச்சு. அதுக்கு, உத்தரத்துலே கொக்கி போடணும்லே? அதுக்கு 'ஸ்பெஷலா' ஒரு 'பீம்' போடவும் ப்ளான்லே வரைஞ்சாங்க! 'கார்னர் ஜன்னலுங்க இருக்குன்னு, ஒரு 'ஸ்ட்ரக்சுரல் எஞ்ஜினீயர்' வச்சு ஜன்னலுக்கெல்லாம், 'வெயிட் ' தாங்கறதுக்குன்னு என்ன 'சப்போர்ட்'ன்னும் வரைஞ்சாங்க. எல்லாத்துக்கும் 'எக்ஸ்ட்ரா'வா காசு கொடுக்க வேண்டியாச்சு.

என்னத்துக்கு ஊஞ்சலை வீட்டுக்குள்ளே போடணும்? தோட்டத்துலே போட்டால் ஆகாதா? எதுக்கு இப்படி 'டைனிங் ஏரியா'விலே வாஷ் பேஸின் வைக்கணும்? இப்படியெல்லாம் வந்த கேள்விகளுக்குப் பதில் சொல்றதே ஒரு 'பெருமை'யாப் போச்சு எனக்கு!

நல்ல பையன். ஒரு பத்துதடவை மீண்டும் மீண்டும் போய்ப் பார்த்து, திருத்தம் எல்லாம் செய்து, சரியா வரைஞ்சு, அதை இங்கே நம் 'சிட்டி கவுன்சில்'க்கு அனுப்புனோம். ஆன்னா ஊன்னா ஒரு அளவு நாடா எடுத்துக்குவார் இந்த பாய்ட்.இவ்வளவு நீளம், இவ்வளவு அகலமுன்னு அந்த ஆஃபீஸ் ரூம்லே நீட்டி நீட்டிக் காமிக்கும்போது என்னவோ பிரமாண்டமா வரப்போகுது வீடுன்னு தோணும். ஆனா..........................

வீட்டுக் கூரையோட நிழல் பக்கத்து வீட்டுக்கு மேலெ விழக் கூடாதுன்றதும் முக்கியமா கவனிக்க வேண்டியது! குளிர் ஊராச்சா? இருக்கறகொஞ்சம் நஞ்சம் வெய்யிலையும் மறைச்சுட்டா எப்படி? எல்லாம் தஞ்சாவூர் கோயில் கோபுர ரேஞ்சுக்கு சொன்னா ...?

நம்ம வீட்டோட கூரை வெய்யிலை மறைக்காதுன்னாலும், ஒரு 6 டிகிரி கோணம் கூடுதலா இருக்கறதுனாலே, பக்கத்து வீட்டு ஆளுங்ககிட்ட விவரத்தை சொல்லி, கையெழுத்து வாங்கணும். ஒரு நாள் பக்கத்து வீட்டு ஆளுங்களைப் போய்ப் பார்த்தோம்! சின்ன வயசுக்காரங்க அவுங்க ரெண்டுபேரும். ரெண்டு பூனைங்களும் வச்சிருக்காங்க! நாமளும் பூனைப் பிரியர்களாச்சா, சந்தோஷமா இருந்தது. அந்த பையன், அவுங்க அப்பாவை ஒரு வார்த்தைக் கேட்டுகிட்டு கையெழுத்துப் போடறதா சொன்னாரு. இங்கெல்லாம் வீடுன்னா, புருஷன் & மனைவி ( பார்ட்னர்ஸ்)ரெண்டுபேருலேயும்தான் பதிவு பண்ணுவாங்க! ரெண்டு பேருக்கும் சம உரிமை இருக்கு. பின்னாலே பிரிஞ்சு போறதா இருந்தா, அதை வித்துட்டு பாதி பாதி பங்கு போட்டுக்குவாங்க! ரெண்டு மூணு நாள் கழிச்சு, அவுங்க ரெண்டுபேரும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாங்க.

ஒரு மாசம் கழிச்சு கவுன்சில் கிட்டேயிருந்து, 'பில்டிங் பர்மிட்' வந்துச்சு. அவுங்களும் சில 'கண்டிஷன்'கள் போட்டாங்க. அதும்படியேதான் செய்யணும்! ஆனா 6 மாசத்துக்குதான் இது செல்லும். அதுக்குள்ளெ வேலையை ஆரம்பிச்சரணும். முடிக்கறதைப்பத்திக் கவலையில்லே!

இப்ப அடுத்த வேலை, ஒரு 'பில்டர்' தேர்ந்தெடுக்கறது. இது கொஞ்சம் 'ரிஸ்க்' வேலைதான்.நல்ல ஆளா இல்லாட்டா, நம்ம பணம் போச்சு.இன்ஷூரன்ஸ், அது இதுன்னு கிடைக்கும்னு சொன்னாலும், தலைவலி இல்லையா? இருந்திருந்து ஒரு வீடு கட்டறோம். இது நம்ம கனவு.அது நனவுலே சரியா வர வேணாமா?

இங்கே, நம்ம 'கிறைஸ்ட்சர்ச்' நகரத்துலே பெரிய 'பில்டிங்' வேலைங்க ரெண்டு நடந்துகிட்டு இருக்கு. ஒண்ணு நம்ம வீட்டுக்குப் பக்கத்திலே இருக்கற 'மால்'. இன்னொண்ணு ஆஸ்பத்திரி. இங்கதான் ஊருக்கே ஒரே ஒரு ஆஸ்பத்திரியாச்சே! எல்லா கட்டிட வேலை செய்யற ஆட்களும் அங்கே வேலைக்குப் போயிட்டாங்க! ரெண்டு வருஷத்துக்கு வேலை இருக்குமே! அதுவுமில்லாமே இப்பத்தான் புது வீடுங்க நிறைய வந்துகிட்டிருக்கு.நாங்க இங்கே வந்து 17 வருஷமாகுது. புது வீடுங்க, புது ஏரியா எல்லாம் அப்ப கிடையாது. என்னமோ பழைய ஊராவேதான் இருந்தது. இப்ப 4 வருஷமாதான், தெளிவாச் சொல்லணும்னா, இங்கே இம்மிக்ரேஷன் பாலிஸியை புதுசா மாத்தி, நிறைய ஆளுங்க, குறிப்பா 'சைனா' ஆளுங்க வர ஆரம்பிச்சவுடன்தான், அதிக வீடுகளுக்கு தேவை ஏற்பட்டு, ஆப்பிள் தோட்டங்களா இருந்த இடங்கல்லாம் கொஞ்சம்கொஞ்சமா வீடுங்களா மாற ஆரம்பிச்சது.


இந்தியாவுலே ' அட்டாச்சுடு பாத்ரூம்' இருக்கு பாருங்க. அது இப்பத்தான் 'ஆன் ஸ்யூட்'ங்கற பேருலே வருது. அதுவும் 'மாஸ்டர் பெட்ரூம்'லே மட்டும் தான். முன்னெல்லாம் எத்தனை ரூம் இருந்தாலும் ஒரே ஒரு குளியலறைதான். இங்க இருக்கற குளிருக்கு அதுவே ஜாஸ்தின்னுநினைச்சிருப்பாங்களோ? இப்ப என்னென்னா 2 'டாய்லட்' இருக்குன்னா, அது பெரிய விஷயமா இருக்கு!
ஐய்யய்யோ, ஒரே 'டாய்லட்' இருந்தா எவ்வளவு கஷ்டம்? காலை குளிருலே யாரும் சீக்கிரமா எந்திரிக்காம, லேட்டா ஒரே சமயத்துலேஎழுந்து, வேலைக்கு, ஸ்கூலுக்குன்னு கிளம்ப நேரமாச்சுன்னு ஆடுவாங்க பாருங்க! அதுலேயும், சில ஆளுங்க போனா அவ்வளவுதான்!வெளியெ மத்தவுங்க 'டான்ஸ்' ஆடணும்! அவஸ்தைதான் போங்க!

தொடரும்............

Friday, July 27, 2007

வீடு 'வா வா' ங்குது பகுதி 1

எண்ணி நாலு வார்த்தைகளில் சொன்னால் 'வீடு கட்டிக் குடி போனோம்'! நாலு அதிகமுன்னு தோணுச்சுன்னா இதோ மூணு. 'புதுசா வீடு கட்டினோம்'. இதுவும் அதிகமுன்னா 'வீடு கட்டினோம்'. இதுக்கும் சுருக்கமாச் சொல்லமுடியாது.

கட்டினோம்?

'கட்டிறலாம், இனியும் தள்ளிப் போடக்கூடாது'ன்ற ஞானம் கிடைச்ச 'போதி மரம்' எங்கூர் ஆஸ்பத்திரி. உடல்வருந்த, ரத்தம் சிந்த உக்கார்ந்துக்கிட்டு இந்த யோசனை. மனுசன் எப்ப எதைப் பத்தி நினைக்கிறான் பாருங்க!

ஒவ்வொரு நாட்டிலும் 'கட்டும் முறை' வேறுபடுது. இங்கே நியூஸியில் வீடு கட்டுறது/கட்டியது எப்படின்னு 'கொஞ்சம்'பார்க்கலாம்.

ஆலாபனை போதும். கச்சேரிக்கு வரலாம்

வீடு 'வா வா' ங்குது பகுதி 1
விவாதம் இல்லாம ஒரு வேலையும் செய்யறதில்லை. பின்னே 'எண்ணித் துணிக கருமம்' எதுக்கு இருக்கு?ஆமா.... இப்ப இருக்கற வீட்டுக்கு என்ன குறைச்சல்? ஒண்ணுமில்லே! நல்ல வீடுதான். கடை, கண்ணிகளுக்கு ரொம்பப் பக்கம். கார் வேண்டியதே இல்லை! நடந்தே கடைகளுக்குப் போகலாம். நிறைய கனமான சாமான்கள் வாங்கணுமுன்னா மட்டும் காரை வெளியே எடுக்கலாம். பொழுதுபோக்கா நடக்கணுமா,'விண்டோ ஷாப்பிங் செய்யணுமா, அவசரத்துக்கு ஒரு பாலோ, பூனைக்கு சாப்பாடோ எதுவேணுமுன்னாலும் ஐந்து நிமிஷ நடையில் கடை. அது மட்டுமா, நம்முடைய 'டாக்டர் க்ளினிக்', கப்பு, ஜிக்குக்கு 'வெட்னரி க்ளினிக், நமக்கு உடல் பிடிப்பு, சுளுக்கு வந்தால் போக வேண்டிய இடமான'பிஸியோதெரபி'( இது நம்முடைய பக்கத்து வீடுதான்) எல்லாம் 1 நிமிஷ நடை. இது போதாதென்னு, நம் வீட்டு வாசலிலேயே 'பஸ் ஸ்டாப் இந்த மாதிரி வசதி வேறெங்காவது கிடைக்குமா? அதுமில்லாமல் இப்ப ஒரு ஐந்து வருஷத்துக்கு முன்னேதானே நிறைய செலவழித்து, வீட்டை மேம்படுத்தினோம்?

அப்ப எதுக்கு வேற வீடு?

எதுக்குன்னா, இப்ப இருக்கற வீடு ரொம்ப பழசு.இப்பல்லாம் புதுசாக் கட்டற கட்டடங்களிலே வீட்டின் கதகதப்பு, ஹீட்டரினால் உண்டாக்கப்படும் சூடு, உஷ்ணநிலைகுறையாமலிருக்க 'பிங்க் பெய்ட்' என்னும் சாதனம் உபயோகப்படுது. மேலும் கட்டடங்களில் ஒரு வித பாதுகாப்பு 'wrap' வேற சுத்தறாங்க.இது ஒரு கம்பளிப் போர்வைபோல முழுவீட்டையே மூடுது. இதனாலே வீட்டுக்குள்ளே இருக்கும் உஷ்ண நிலை அதிகம் குறையாமல் குளிர் காலத்திலும் கதகதப்பாகவே இருக்கும். இந்த வசதிகள் எல்லாம் அந்தக்காலத்துலே கண்டே பிடிக்கல்லை. நம் வீடோ ஐம்பது வருடப் பழசு.

அப்ப எதுக்கு இவ்வளொ செலவு பண்ணி மராமத்து செஞ்சோம்?

உன் பிடுங்கல் தாங்காமத்தான்.

ஏன் சொல்ல மாட்டீங்க..... அப்ப பெயிண்ட்க்கு நல்ல ஸேல் வந்துச்சுல்லே:-)
நமக்கும் வயசாகிகிட்டே போகுது. குளிரையெல்லாம் முன்புபோலத் தாங்க முடியல்லே! மேலே மேலே இந்த வீட்டுக்கு செலவழித்தாலும் இதோட மதிப்பு உயராது.பின்னாலே வீட்டை விற்கும்போது, நாம் செலவழித்த பணம் எல்லாம் வீண்தான். முக்கியமாக, வயதானபிறகு நம்மைக் காப்பாற்ற யாரும் இல்லை.('அரசாங்கம்தான் நமக்கு 'ஆம்புளைப்புள்ளை'ன்னு நினைக்கலாமுன்னா இனிமே அதுவும் முடியாதாம். ஓய்வு ஊதியக் காசை நீயே இப்ப சேமிச்சு வச்சுக்கோ அதெல்லாம் இனிமே கிடையாதுன்னு அப்பப்ப தம்கி குடுக்குது இப்ப இருக்கற அரசு.' ) புது வீட்டிற்கு இதே காசைச் செலவழித்தோம் என்றால் அதன் மதிப்பு கூடும். வயதான பிறகு அந்த வீட்டை வித்துட்டு, முதியோர் இல்லத்துக்கு அந்தக் காசைக் கட்டிட்டு அங்கேபோய் சேர்ந்துக்கலாம்.

ஓ...................கதை இப்படிப் போகுதா?

இதெல்லாம் நினைச்சுப் பார்த்துத்தான் புதுவீடு ன்னு முடிவு செஞ்சோம்.
இன்னொன்னு, புதுவீடு என்றால் எந்த ஏரியாவில்? ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட வீடா? அல்லது நம்முடைய சொந்த டிஸைனா? நல்ல நல்ல வீடுகள் உருவாகிவரும் ஏரியான்னா, ஊருக்கு வெளியே போகணும். நம்ம 'வேலை' இருக்கும் இடத்திலிருந்து அதிக தூரம். மேலும் அங்கே போய்ட்டா, வீட்டில் 'கொட்டு கொட்டு' என்று தனியாக நாள் முழுசும் இருக்கணும். இப்ப நம்ம வீட்டுலேயே ஒரு வீடியோ லைப்ரரி நடத்தறமுல்லே அதுக்கு எப்பப்பாத்தாலும்,நேரம் காலம் இல்லாமல் ஆளுங்க வந்துகிட்டே இருப்பாங்க. இதுலே பாருங்க, அவுங்களுக்கெல்லாம் எப்படித்தான் மூக்குலே வேர்க்குமோ,கரெக்டா 'டீ' குடிக்கற நேரம்( சரியாச் சொன்னா சூடோட இருக்கற டீயை, வாய்கிட்டே கொண்டுபோவமே அப்ப) அது இல்லேன்னா, சோறு சாப்பிட உக்கார்ந்து, சரியா குழம்பை ஊத்திப் பிசையற போது வருவாங்க! 'ஐயோ.. சாரிங்க'( வெள்ளைக்காரன் கண்டுபிடிச்சதிலேரொம்ப உபயோகமான, அடிக்கடி மனசுலே ஒண்ணும் கலங்காம, உணர்வே இல்லாத குரலில் சொல்ற சொல்லு இதுவாத்தான் இருக்கும்) நானும், சரி, தர்ம காரியங்களுக்குப் போற காசுன்னுட்டு கையை முதுகுக்கு பின்னாலே ஒளிச்சுகிட்டு நிப்பேன்!சரி, வீட்டுக்கு வருவோம்!

நம்ம ஊர் அந்தக் காலத்துலே செய்யறமாதிரி ஒரு ரூம்லே ஆரம்பிச்சு அப்படியே கட்டிட்டு போகமுடியாதுல்லே. நமக்கு ஒரு ஆர்கிடெக்ட் வேணுமே! இதுக்கு முன்னாலேஒருமுறை, பழைய வீட்டுலே ஒரு ரெண்டு ரூம் அதிகப்படியாப் போடலாம்னு ஒரு 'ஆர்கிடெக்சுரல் ட்ரா·ப்ட்ஸ்மேன்' அப்படின்னு ஒரு ஆளைப் போய் பார்த்தோம்.அவர் பேர் எனக்கு நினைவில்லை. ஆளு ஆட்டுத்தாடி வச்சிருந்தார். நாங்க எங்க தேவை என்னென்னன்னு எல்லாம் விளக்கமாச் சொன்னோம்.ஆ.தா. கவனமாக் கேக்கறமாதிரி தலைய ஆட்டினார். சில நாட்களுக்கு பிறகு எங்களை வரச்சொன்னார். போய்ப் பார்த்தா, நான் சொன்ன டிஸைனைப் பத்திக் கொஞ்சம் கூட கவலைப்படாம தனக்குத் தோன்றியபடியே ஒரு டிஸைனைப் போட்டு வச்சிருந்தார். மறுபடி, நாங்க எங்க மனசில இருக்கற டிஸைனைச் சொன்னோம். அப்புறமும் பழய கதைதான்.இந்த மாதிரி மூணு முறையான பிறகு இனி ஆ.தா. வை நம் வேலைகளுக்குக் கூப்பிடக்கூடாதுன்னு ஏக மனதாக ( வாழ்க்கையில் முதல் முறை) முடிவு செய்தோம். ஆ.தா.வுக்குப் போன ஜென்மக் கடன், கட்டியாச்சு.

எனக்கு 'மாடி' வீடுதான் ரொம்ப இஷ்டம். ஆனா அதுக்கு செலவு ரொம்பக் கூடும். 'பட்ஜெட்'க்கு மேலே ஒரு 50% கூடிடுமாம். நம்மகிட்டஇருக்கற 'ஐவேஜ்'க்கு சாதாரண வீடே ஜாஸ்தி. இதுலே மாடி வீட்டுக்கு ஆசைப்பட்டா முடியுமான்னு இவர் சொல்றாரு.எதுக்குன்னுதான் சண்டை போட்டு, மூஞ்சியைத் தூக்கி வசிக்க முடியும்? சரி.தொலையட்டும்னு இருந்துட்டேன். அடுத்த ஜன்மத்தில் கட்டாயம் மாடி வீடுதான்னு இப்பவே முடிவு எடுத்தாச்சு!

இங்கே,வீடு கட்டிக் கொடுக்கும் பல நிறுவனங்கள் இருக்குதான். அவுங்க எல்லாம் 'ஷோ ஹோம்' ன்னு சில வகைகளைக் கட்டிப் பார்வைக்காக வைத்திருக்காங்க.. அநேகமாக எல்லா நாளும் திறந்திருக்கும். எல்லா நிறுவனங்களிலும்' சேவை' ஒரே மாதிரி தான் இருக்கும்.அங்கே வெவ்வேறு அளவுள்ள பலவிதமான வீடுகளின் டிஸைன்கள் அச்சடித்து வைத்திருப்பாங்க.நமக்கு எத்தனை அறைகள், எத்தனை குளியலறைகள், வேறு என்ன தேவை என்று சொன்னால் அதற்கேற்ற மாடல் ட்ராயிங் ஒண்ணுகூடத் தருவாங்க. அதில் அறைகளின் அளவு, வீட்டின் மொத்தப் பரப்பளவு என்று எல்லா விவரங்களும் அடங்கியிருக்கும். அதில் கட்டிடம் கட்ட உபயோகிக்கும் சாமான்கள், அடுப்பங்கரை உபகரணங்கள் அடுப்பு, டிஷ் வாஷர், வேஸ்ட் மாஸ்டர், புகைபோக்கி போன்றவைகளின்( எந்த ப்ராண்ட் என்ற ) முழு விவரமும் இருக்கும்.அதுக்கெல்லாம் சேர்த்து ஒரு விலை போட்டிருப்பாங்க.

ஆனா ஒண்ணு, இந்த மாதிரி வீடுகளில் நாம் ஒன்றை 'செலக்ட்' பண்ணி அச்சு அசலாய் அப்படியெ வாங்கினோம்னா நிஜமாவே விலை மலிவுதான். ஆனா ஒரு சுவத்தைக் கொஞ்சம் தள்ளி வைக்கணும், இல்லேன்னா ஒரு ஜன்னலை இடம் மாத்தணும்னு சொன்னீங்க போச்சு!மேற்கொண்டு நிறைய காசு கொடுக்கணும்.

முக்கியமாகச் சொல்ல வேண்டியது, எல்லாவித 'இன்·பர்மேஷன்'களும் இலவசம். இதுபோல பல இடங்களில் இருந்து விவரங்களைச் சேகரித்துக் கொண்டு, நாமே 'மிக்ஸ் & மேட்ச்' செய்து டிஸைனும் செய்யலாம். சில மாதங்கள் எல்லா வார இறுதிகளிலும் இதே வேலையாகஅலைந்து எல்லா விவரங்களும் சேகரித்தோம். அந்த வீட்டு 'ஸிட்டிங் ரூம் நல்லாயிருக்கு, ஆனா 'கிச்சன் ரொம்ப சின்னது. ஒரு 'பெட் ரூம்' பரவாயில்லை, மத்த ரெண்டும் ரொம்பவே சின்னது. பூஜைக்கு ஏத்தமாதிரி இடம் இல்லையே! வீட்டுக்குள்ள வந்தவுடனே செருப்பு விட ஒரு இடம் வேணாமா? இப்படியெல்லாம் யோசித்துகிட்டேஏஏஏஏஏஏஏஏஏ இருந்தோம்!

தொடரும்...............

Wednesday, July 25, 2007

மாதவன், கிருஷ்ணனா இல்லை அர்ஜுனனா?

'அடிப்பாவி'ன்னுதான் சொல்ல முடிஞ்சது விஷயத்தைக் கேள்விப்பட்டதும்.
சமையல் செஞ்சுக்கிட்டு இருந்தப்ப பிரெஷர் குக்கரைத் திறக்கும்போது அப்படியெ நீராவி அடிச்சு, முகம் கைகள் எல்லாம் வெந்து போச்சாம்.

கிளம்பிப்போனேன், பார்த்துட்டு வர்றதுக்கு.

'சம்பவம்' நடந்து பத்து நாள் ஆச்சாம். இப்ப எவ்வளவோ தேவலை.கடவுள் காப்பாத்திட்டார். முகத்துலெ அவ்வளவா இல்லை. ரெண்டு கையிலும் முழங்கைவரை காயம். இப்ப ஆற ஆரம்பிச்சுருக்கு. குளிர்காலத்துக்கு அதுக்கும் 'வறவற'ன்னு காய்ஞ்சுப் பிச்சுப் பிடுங்குதாம்(-:

சின்ன வயசுப் பொண்ணு. முகமெல்லாம் வெந்து போயிருந்தா? அடக்கடவுளே......... நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை. கவனமா இருக்கவேணாமா வேலை செய்யும்போது? கொஞ்சம் திட்டிக்கிட்டு இருந்தேன். 'தன் அவுர் மன் ஏக் ஜாகாமே ஹோனா ச்சாஹியே'!
( மேலே: உள்ளூர் கோயிலில் உள்ள விக்கிரகங்கள்)

ஹரேகிருஷ்ணா இயக்கத்தைச் சேர்ந்தவங்க என்றதாலே........... தினமும் பூஜை வழிபாடுகள் எல்லாம் முடக்காமல் நடக்குதாம். அழகான ச்சின்ன விக்கிரகங்களை வச்சு வழிபடறாங்க.

இதுக்குள்ளே, நம்மைப்போலவே 'பார்த்துட்டுப்போக' வந்திருந்த இன்னொருத்தர் ( இவரும் இதே இயக்கத்தைச் சேர்ந்தவர்தான்) அங்கிருந்த டிவிடியைப் போட்டார்.

மகாபாரதம். குந்தியிடம் கர்ணன் விவாதிக்கும் ஸீன்.

இந்தியாவில் இது சீரியலா வந்தப்ப, எல்லாரும் விழுந்தடிச்சுப் பார்த்தாங்கன்னு அப்பக் கேள்விப்பட்டிருக்கேன்.அதுதானா இது? கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தேன் நல்லா கவனிக்க. கிருஷ்ணன் பாண்டவர்களுடன் போரைப்பற்றி ஆலோசனை செய்யும் காட்சி ஓடிக்கிட்டு இருக்கு இப்ப.
இவுங்களையெல்லாம் பார்த்ததும் மனம் 'திடுக்' அய்யய்ய...............வாழைக்காய் மூஞ்சிப்பா!

இதுலே குந்தியா வர்ற இளவயதுப் பெண்ணுக்கு, வெள்ளை விக் மட்டும் வச்சுக் கிழவியாக்கிட்டாங்க.மத்த நடிகர்களும் பாத்திரத்துக்குப் பொருத்தமா இல்லை. மனசு ஒட்டவே இல்லை. ஆனால்............ இதையா நம்ம மக்கள்ஸ் போற்றிப் புகழ்ந்துக்கிட்டு இருந்தாங்க? நம்மாக்களுக்கு என்னமோ ஆகிக்கிடக்கு போல.

கிருஷ்ணனா, நம்ம என் டி ஆரைத்தவிர வேற யாரையும் மனசு ஏத்துக்கமாட்டேங்குது. கர்ணன்,துரியோதனன்னு சொன்னதும் சிவாஜி கணேசனும், அசோகனையும் தவிர வேற யார்?

வழக்கமான என் புலம்பலைக் கேட்ட 'எங்க இவர்', 'எல்லாம் வடக்கத்தி முகம் என்றதாலெ இப்படி இருக்கு. நம்மூர் நடிகர்கள் நடிச்சிருந்தா ஒரு ஒட்டுதல் வந்திருக்குமு'ன்னு சொன்னாரா......... இப்ப அடுத்த யோசனை.
இந்தப் பாத்திரங்களுக்கு இப்போது இருக்கும் நடிகர்களில் பொருத்தமா இருக்கறவங்க யார் யார்? 'நூத்துக்கணக்கானவர்கள்' தேவைன்னு சொன்னாலும், முக்கியமானவங்களை மட்டும் பார்ப்போம்.

கிருஷ்ணன் வேடத்துக்கு நம்ம மாதவன். அர்ஜுனன் வேடம்கூட மாதவனுக்குப் பொருத்தமாக இருக்கும்.இப்ப மத்தவர்கள் யார் யார் ......யார்?
விக்ரம், அஜீத், ராஜ் கிரண், பரத், இவுங்கல்லாம் யார்?

சொல்லுங்கம்மா, சொல்லுங்கப்பா.

பீமன்= பொன்னம்பலம் ( கோபாலுக்குன்னு தோணுது பாருங்க!) :-))))))

Monday, July 23, 2007

எ.கி.எ.செ? (கடைசிப்) பகுதி 12

எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்?
இன்னிக்கு 'ஆஸி டு நியூஸி'ன்னு கிளம்பறோம். காரைக் காலையில் பத்துமணிக்குத் திருப்பிக் கொண்டுவிட்டுறணும்.'க்ரேஸ் டைம்' அரைமணி நேரம் இருக்கு. அதுக்குமேலே போச்சுன்னா ஒருநாள் வாடகை கூடிப்போயிரும்.இன்னிக்குக் காலையில் வழக்கமான(??) நடைப்பயிற்சி வேணாமுன்னு முடிவு பண்ணிட்டு, சாமான்களையெல்லாம் பொறுக்கி ஒழுங்கா மூட்டைக் கட்டிட்டு, 'கோயில்' பார்க்கப் போனோம். உள்ளெ எப்படித்தான் இருக்குன்னு பார்த்தே தீரணும்.


நல்ல கூட்டம் இருக்கு. எல்லாரும் நீட்டா உடை உடுத்தி வந்துருந்தாங்க. அன்பா வரவேற்று உள்ளெ போகச் சொன்னாங்க.பெரிய ஹால்தான். ஒரு கோடியில் மேடை இருக்கு. அதுலே ஒரு மைக். கீழே நிறைய நாற்காலிகள். குழந்தையும் குட்டியுமா ஜேஜேன்னு இருக்கு. கடைசி வரிசையில் உக்கார்ந்தோம். ஒரு ட்ரே மாதிரி (தூக்குக் கைப்பிடியுள்ளது) வரிசையா எல்லார்க்குமுன்னே நீட்டிக்கிட்டே வந்தாங்க. மக்கள் அதுலே இருந்து ஒண்ணை எடுத்து வாயில் கவுத்துக்கிட்டு திருப்பி காலிக்குப்பியை அதுக்குன்னு இருக்கும் இடத்துலே போடறாங்க. கண்ணு பார்த்தா கை செய்யாதா நமக்கு? அரை ஸ்பூன் அளவு வரும் தண்ணீர்( தீர்த்தம்?)அதுக்கேத்தமாதிரி ச்சின்ன்ன்ன்ன்ன டம்ப்ளர். நம்மூர்லே டீக்கடைக்காரப் பையன் கொண்டுவரும் அஞ்சாறு டீ க்ளாஸ் வைக்கும் கொத்து ஞாபகம் வந்துச்சு. ஆமாம். இதுக்கு எதுக்கு இவ்வளவு நோணாவட்டம்?பேசாம நம்மூர்லே ச்சொட்டு மருந்து தர்றதுபோல வாயிலே விட்டுறலாமே? ச்சுப். பேசப்படாது:-)

Mormons churchன்னு எப்பவோ கேட்டுருக்கேன். அவுங்களுதாம் இது. நாங்க இப்ப இருக்கறது 'மீட்டிங் ஹவுஸ்ன்னு சொல்ற ஞாயித்துக்கிழமை நிகழ்ச்சியாம். நேத்துக் காலையில் என்னவோ அலுவல் நடக்குதுன்னு எட்டிப் பார்த்த இடம்தான் கோவிலாம். இங்கே 'அதுக்குன்னு' இருக்கறவங்க மட்டுமே நுழைஞ்சு பூசை செய்வாங்களாம். அப்ப எல்லாரும் வெள்ளை உடுப்புப் போட்டுக்குவாங்களாம். வெள்ளைன்றது பரிசுத்தத்தைக் குறிக்குமாம். நல்லவேளை, நேத்து ஓசைப்படாம ஓடுனது.'நேரமாகுது, பிரசங்கம் ஆரம்பிச்சா அப்புறம் நடுவுலே எழுந்து போறது நல்லா இருக்காது'ன்னு இவர் சொன்னதாலேஒரு அஞ்சு நிமிஷம் மனசுக்குள்ளெ 'தெரிஞ்ச மாதிரி' சாமியைக் கும்பிட்டுட்டு வெளியே வந்தோம். வாசலில்உக்கார்ந்திருந்த பாட்டி(??) அன்போடு பேசுனாங்க. 'நேரமாயிருச்சு'ன்னு சொன்னேன். நம்மைப் பத்துன விவரம்கேட்டுட்டு, பத்திரமா பிரயாணம் இருக்கணுமுன்னு ஆசி வழங்குனாங்க. பெரியவங்க சொன்னா அது பெருமாளே சொன்ன மாதிரி இல்லையா?

ஷாலட் தெருவிலே வண்டியைச் சரியான நேரத்துக்குக் கொடுத்துட்டு, 'ஆன், ஆல்பர்ட், மேரி, எலிஸபெத், மார்கரெட், ஆலிஸ், எட்வர்டு, வில்லியம், ஜ்யார்ஜ்'களில் குறுக்கெயும் நெடுக்கேயுமாப் போய் வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருந்தோம். மாலின் நடுவிலே இன்னிக்கு பள்ளிக்கூடப் பசங்க நிறைய இருக்கும் 'கொயர் நிகழ்ச்சி'. சனி, ஞாயிறுகளில் இப்படி எதாவது நடத்துதாம் 'மால் மேனேஜ்மெண்டு'.

இந்தப் பக்கம் கழைக்கூத்தாடி வித்தை காமிக்கிறார், ஆங்கிலம் பேசிக்கிட்டு. நெத்தியிலே கத்தியைச் செங்குத்தா நிறுத்தறதும், மூணு கத்திகளை வச்சு அம்மானை ஆடறதும், அவரைச்சுத்தி ச்சின்னப்பிள்ளைகள் கூட்டமும் கனஜோர். இன்னொரு பக்கம் வாயில் ஒரு சின்னக்குழாய் மாதிரி ட்யூப் அடைச்சுக்கிட்டு கர்மசிரத்தையா ஓவியம் தீட்டிக்கிட்டு இருந்தார் ஓவியர். என்னென்னவோ நிறங்களை ஸ்ப்ரே செஞ்சு கடைசியில் பார்த்தா அட்டகாசமான கலர்காம்பிநேஷனில் படம். வரைஞ்சு தள்ளியது நிறைய விற்பனைக்கு இருக்கு ஒரு பக்கம்.

எலிஸபெத் தெருவில் இருக்கும் 'கோவிந்தாஸ் ரெஸ்டாரெண்ட்' லே( ஹரே கிருஷ்ணா) சாப்பிடலாமுன்னு போனா......... நம்ம அதிர்ஷ்டம்மாலையில் பஜனை & 'இலவச'விருந்து இருக்காம். அதுக்காக சமைச்சுக்கிட்டு இருக்கறதாலே இப்ப 'உணவுவிற்பனை' கிடையாதாம். ஃபுட்கோர்ட்டுக்கு வந்து 'நம்ம பேர் எழுதியிருந்த பீட்ஸா'வை முழுங்கிட்டு ரெண்டு மணிக்குஅறைக்கு வந்தோம். செக் அவுட் நேரம் காலை 10 மணி. ஆனா நமக்கு ரெண்டு மணிவரை லேட் செக் அவுட் அனுமதி இருந்துச்சு. மோட்டல்காரங்ககிட்டே, இனி எப்ப வந்தாலும் 4A ரூம் நமக்குன்னு சொல்லிட்டு, ஒரு டாக்ஸி எடுத்துக்கிட்டு ஏர்போர்ட்டுக்கு நதியின் குறுக்கே இருக்கும் பதிமூணில் ஒண்ணான 'ஸ்டோரி ப்ரிட்ஜ்' ( நல்ல பொருத்தமான பெயர்தான் இந்தக் கதை முடிவில்) வழியா விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தோம்.

சிட்னியின் ஹார்பர் ப்ரிட்ஜ் டிஸைன் செஞ்சு கட்டுனவர் ஜான் ப்ராட்ஃபீல்ட்(John Job Crew Bradfield) . இந்த'ப்ரிஸ்பேன் ஸ்டோரி ப்ரிட்ஜ்'ம் இவர்தான் டிஸைன் செஞ்சு கட்டிக் கொடுத்துருக்கார். முழுக்க முழுக்க ஸ்டீல்கன்ஸ்ட்ரக்ஷன்.cantilever bridge

அமெரிக்கா கொண்டுவந்த விதிப்படி இப்ப இங்கே ஆஸி, நியூஸியெல்லாம் 'ஸீத்ரூ ப்ளாஸ்டிக்' பையில் டூத்பேஸ்ட்,க்ரீம் இத்தியாதிகள் ( 100 ml அளவுக்குள்ளே மட்டும் இருக்கணுமாம்) போட்டு,செக்யூரிட்டி செக்கப் வரை கையிலே தனியா வச்சுக் காமிக்கணுமுன்னு தமிழைத் தவிர எல்லா மொழிகளிலும் அச்சடிச்சு வச்சு கூடவே அதுக்குண்டான ப்ளாஸ்டிக் பைகளையும் போட்டு வச்சுருக்காங்க. எதுக்கும் இருக்கட்டுமுன்னு ஒரு பையைக் கையில் எடுத்துக்கிட்டேன்.

செக்யூரிட்டியில் நான் வெறும் ஹேண்ட் பேக் மட்டும் வச்சுருக்கறதைப் பார்த்துட்டு அதை ஸ்கேன் செஞ்சபிறகு, என்னோட ப்ளாஸ்டிக் பை சாமான்கள் எங்கேன்னு கேட்டதுக்கு, நான் 'எல்லாத்தையும் செக்கின் பண்ண பெரிய பெட்டியிலே போட்டாச்சு. கையோட கொண்டு போறதுன்னாதானே ப்ளாஸ்டிக் பையிலே போடணும்?' சொன்னேன்.

"இந்தப்பக்கம் வாங்க, உங்க ஹேண்ட்பேகைத் திறந்து காமிங்க. அதுலே என்னவோ இந்த இடத்தில் இருக்குன்னு, ஸ்கேன்லே காமிக்குது."

அந்த இடத்துலே திறந்து நான் வெளியே எடுத்தது ஒரு லிப்ஸ்டிக்.

"ஓ........ நீங்க இதைத் தனியா ப்ளாஸ்டிக்லே போட்டுருக்கணும்."

"அப்படியா? லிக்விட் ஐட்டம்தானே பையிலே போடணும்? "

"இல்லையில்லை. இதையும் ப்ளாஸ்டிக்லே போட்டுருக்கணும்."

போட்டாப்போச்சு. இதோன்னு கையிலெ வச்சிருந்த ப்ளாஸ்டிக்லே போட்டேன்.

'சரி. நீங்க போகலாமு"ன்னு அதிகாரி சொன்னார். ( ஹூம்........இந்த இடத்துக்கு இவ(ன்)ர் ராஜா.)

என்னவோ எதோன்னு ' எங்க இவர்' பதறியடிச்சு என் பக்கம் வந்தார்.

"ஒண்ணுமில்லை."
(லிப்ஸ்டிக்கை வச்சு, விமானத்தைக் கடத்திருவேன்னு ஒரு சந்தேகம்)

உள்ளே லவுஞ்சுலே போனபிறகு, 'அந்த ஸ்கேனர் இதைப் பிடிக்காம விட்டுருச்சு பாருங்க'ன்னு கைப்பையில் இருந்த இன்னொரு லிப்ஸ்டிக்கை எடுத்துக் கோபாலுக்குக் காமிச்சேன்.

"எல்லாரும் கையிலெ ப்ளாஸ்டிக் பை பிடிச்சுக்கிட்டு வந்தப்ப நீ வெறுங்கையா வந்ததுக்கே, உன்னை ரெண்டு கேள்வி கேக்கணுமுன்னு அவருக்குத் தோணி இருக்கு"

"அதெல்லாம் ஒண்ணுமில்லை. அந்த இடத்துக்கு அவ(ன்)ர் ராஜா"

விமானம் கிளம்ப இன்னும் மூணுமணி நேரம் இருக்கு.
அருமையான பாஸ்த்தா, சன் ட்ரைய்டு டொமாட்டோ, மஃப்பின், காஃபின்னு கொஞ்சம் நல்லாவே( ஓசியில்) சாப்பிட்டுட்டு, நான் தமிழ்மணத்திலும், இவர் தினசரியிலுமா மூழ்குனோம்.

ஊருக்கு வந்து சேர்ந்தப்ப இரவு 12 மணி. இறங்குன பிறகு, Agate Geode கொண்டு வந்துருக்கேன்னு டிக்ளேர் செஞ்சிருந்தேன்.எடுத்துக்கூடக் காமிக்கச் சொல்லலை. ஒரு கேள்வி மட்டும்தான்.

"கடையில் வாங்குனதுதானே?"
"ஆமாம்."
"நோ ப்ராப்ளம். "

இது.............. :-)
வெளியே வந்தவுடன் 'ஆச்சரியத்திலும் ஆச்சரியமா' மகள் வந்துகாத்திருக்காள். டாக்ஸி செலவு மிச்சம்:-)))))

இதுவரை பன்னிரெண்டு முறை கேட்ட கேள்விக்கு என்ன பதில்?

எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்?

12 பதிவு(ம்) எழுதலாம்:-)))))

நன்றி & வணக்கம்.

Thursday, July 19, 2007

எ.கி.எ.செ? பகுதி 11


எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்? லைஃப்ஸ்டைல் மார்க்கெட். விதவிதமான மக்களும், கடைகளும். முதல்கடையே 'எனக்காக'ன்னு ஒரு இந்தியர் நடத்தும் நகைநட்டுக் கடை. ஜில்லாளி பில்லாளின்னு எல்லாம் ராஜஸ்தானி சமாச்சாரங்கள். அதுக்கடுத்து துணிமணிகள், கைவினைப்பொருட்கள், ஸ்கார்ஃப், கேக், பிஸ்கெட், கைரேகை நிபுணர்கள்னு பரவிக்கிடக்கு. ஒரு கூடாரத்துலே வருஷம் 365 நாளுக்கும் பிறந்ததேதி வச்சு மனுஷன் குணாதியசத்தைக் குறிப்பிட்டு அச்சடிச்சுத் தோரணமாக் கட்டி வச்சுருந்துச்சு. நம்ம நாளுக்கெல்லாம் அநேகமா சரியாத்தான் சொல்லி இருக்கு. தனிக் கடுதாசியா வாங்கணுமுன்னா ஒவ்வொண்ணும் அஞ்சு டாலர். அதான் நம்மளைப்பத்தித் தெரிஞ்சுபோச்சே(!!!) அப்ப எதுக்கு அனாவசியமா பத்து டாலர் செலவளிக்கணும்? ( கருமின்னு அதுலே போடலைபாருங்க. விட்டுப்போச்சோ?)

சின்ன மரத்துண்டுகளில் நகைப்பெட்டி மாதிரி செஞ்சு வச்சுருந்தாங்க ஒரு இடத்தில். அதோட திறப்பு ஆஸ்ட்ராலியாக் கண்டத்தின் டிஸைன். அழகா இருந்துச்சு. நாய் பூனைகளுக்கான அலங்காரம், படுக்கை, கழுத்துப்பட்டி, உடைகள்ன்னுஒரு கடை. பூனை உக்காரும் தூக்குமாடம் நல்லாவே இருக்கு. 'நம்மாளு'க்கு ரெண்டு முழு அறையே அட்டாச்டு பாத்ரூமோட கொடுத்துட்டதாலே இதை வாங்கிக்கலை. தலை அலங்கார சாமான்கள் கடையிலே விக்கும் பூவைஎப்படி வச்சுக்கணுமுன்னு கேட்ட சிறுமிக்கு கடைக்காரம்மா பூவை வச்சுவிட்டாங்க. ஒரு கடையில் கல் வித்துக்கிட்டு இருந்தாங்க.நமக்குக் கல்லுன்னாவே மனசு இளகிரும். அங்கே நின்னு கற்களை வேடிக்கைப் பார்த்துட்டு, ச்சின்ன சைஸுலேஇருக்கும் பாலீஷ்டு க்ரிஸ்ட்டல் & ஜெம் கற்களை ஒரு சின்ன அளவுக்கிண்ணம் ரெண்டு டாலர்னு வாங்கினேன்.( அதைப்போட்டு வைக்க ஒரு கண்ணாடிக் கப் இங்கே நம்மூரில் தேடி வாங்குது தனிக்கதை. சுண்டைக்கா காப்பணம்.சுமைகூலி........ முக்காப்பணம்)

நம்மூர்லே அந்தக் காலத்துலே எலந்தம் பழம், ஈச்சம்பழமெல்லாம் தெருவில் விக்கக் கொண்டாருவாங்க பாருங்க,அது ஞாபகம் வந்துச்சு. ஒரு சின்ன உழக்குலே அப்படியே குவிச்சு அளந்து போடுவாங்க. கூடவே கொஞ்சம் கொசுறும்கிடைக்கும். அதேதான். நான் அளவுக் கிண்ணத்துலே கும்மாச்சிக் கட்டிக்கிட்டு இருந்தேன் நிதானமா. இன்னும் எத்தனை கல் நிக்குதோநிக்கட்டுமுன்னு. கடைக்காரர் அதை ஒரு காகிதக் கவர்லெ போட்டுட்டு, இன்னும் அரைக்கிண்ணம் கொசுறும் கூடப் போட்டார்:-)

இது கோல்ட் கோஸ்ட்டுலே வாங்கின அகேட். பருந்து எப்படி இருக்கு?

மக்களுக்குப் பொழுது போகணுமேன்னு ஒரு இசைநிகழ்ச்சியும் ஒரு பக்கம் நடந்துக்கிட்டு இருந்துச்சு. பொலிவியா நாட்டு இசையாம். யாரும் நின்னு கேக்கலைன்னாலும் 'தேமே'ன்னு பாடிக்கிட்டு இருந்தாங்க.

அருமையான அமைப்போடு ஒரு ஆம்ஃபி தியேட்டர் இருக்கு. இன்னிக்கு நிகழ்ச்சிகள் ஒண்ணும் இல்லை. திடீர்னு என் குறுக்கே பாய்ஞ்சு ஓடுச்சு ஒரு குழந்தை. 'பிடி பிடி'ன்னு கூடவே ஒரு சத்தம். தமிழ்!!!!இது போதாதா நமக்கு? மதுரைக்காரங்களாம். வந்து 3 மாசமாகுதாம். இன்னிக்கு இங்கே சுத்திப் பார்க்க வந்தாங்களாம்.

இன்னும் கொஞ்சம் சுத்தியடிச்சுட்டு வண்டியை எடுக்க வந்தோம். இந்தக் கட்டிடத்தின் மாடியில்தான் ம்யூஸியம் இருக்கு. பக்கத்துக் கட்டிடம் தியேட்டர். நாளைக்கு இங்கே அபாரிஜின் நிகழ்ச்சி நடக்கப்போகுதாம்.

இந்த ஆறுமே ச்சும்மா சொல்லக்கூடாது. மக்கள்ஸ் விரும்புறமாதிரி அப்படி வளைஞ்சு வளைஞ்சு இல்லாத நெளிவுகள் எல்லாம் காட்டிக்கிட்டு இருக்கு. தண்ணி வியூக்குத் தவிக்கிறவங்க ச்சும்மா இருப்பாங்களா? இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுன்னு எட்டுத் திசைகளிலும் எதாவது பண்ணி வச்சுருக்காங்க. ஆத்தைக் கடக்கஅங்கங்கே பாலங்கள். ரயில் போக, வண்டிகள் போக, சைக்கிளும் பாதசாரிகளும் போகன்னு மொத்தம் 13 பாலங்கள்.

பகல்சாப்பாட்டுக்கு மறுபடி சிட்டிமால். மாலின் அந்தக் கோடியில் இருக்கும் கேஸினோவுக்கு ஒரு விஸிட் அடிக்காம நாட்டைவிட்டுப் போகக் கூடாதுன்னு விரதம். மாலின் நடுப்பகுதியில் மேடை போட்டு இசை நிகழ்ச்சி நடந்துக்கிட்டு இருக்கு. ஸ்பானீஷ் சங்கீதமுன்னு நினைக்கறேன். அருமையாப் பாடறாங்க. பார்வையாளர்களுக்காக மேடைக்கு முன்னால் நிறைய நாற்காலிகளைப் போட்டு வச்சுருக்காங்க. Mae Hilda Jitoli ன்னு ஒரு பேனர் விரிப்பு இருக்கு. கொஞ்ச நேரம்இருந்துட்டு, கேஸினோக்குள்ளே நுழைஞ்சோம். வெளியே முன் முற்றத்தில்(?) பெரிய உலோக உருண்டைகள்அலங்காரத்துக்கு இருக்கு. இந்த உருண்டைகள் என்னவோ சேதி சொல்லுதோன்னு மனசுலே தோணுச்சு.

கையிலே வெறும் எட்டு டாலர்தான் இருக்கு. உள்ளே மணி மெஷின் இருக்கும் அதுலெ எடுத்துக்கலாமுன்னு இருந்துட்டோம். அங்கே எல்லாரும் க்ரெடிட் கார்டு போட்டு விளையாடிக்கிட்டு இருக்காங்க. சில பாட்டிகள்கேஸினோ அங்கத்தினர் அட்டைகளை வச்சுத் தாளிச்சுக்கிட்டு இருக்காங்க. அஞ்சு செண்ட், ரெண்டு செண்ட், ஒருசெண்டுன்னு வெவ்வேற இயந்திரங்களில் இருக்கற எட்டை வச்சே விளையாடிக்கிட்டு இருக்கோம். நமக்கு அதிர்ஷ்டம் இருக்கற நாள் போல. அப்பப்பக் காசைக் கலெக்ட் பண்ணிக்கறேன். த சவுண்ட் ஆஃப் மணி ( ஃப்ரம் பக்கத்து மெஷின் பாட்டி) இஸ் கூல்!!! இப்பக் கையிருப்பு அஞ்சு டாலர். நிறுத்திக்கலாமுன்னு தோணுச்சு. கூட்டிக்கழிச்சுப் பார்த்தால் ரெண்டு மணி நேரம் ரெண்டுபேரும் விளையாடி இருக்கோம். மூணு டாலருக்கு இதைவிட மலிவான பொழுதுபோக்கு வேற எங்கே கிடைக்கும்? ஆனா நம்ம லிமிட் நமக்குத் தெரிஞ்சிருக்கணும். அது முக்கியம்:-)

நான் 'மேலே போனபிறகு, உனக்கு ரொம்ப போரடிக்குமே. உனக்கு மெம்பர்ஷிப் கார்டு வாங்கித் தந்துர்றேன்னு சொன்ன கோபாலுக்கு, 'கார்டு எல்லாம் வேணாம். தினம் வரமாட்டேன். வாரம் ஒருநாள்தான்'னு சொன்னேன்.

மால் கார் பார்க்கிங் முழுக்கத் தானியங்கி. காசை வாங்கிக்கக்கூட மெஷிந்தான். மணிக்கு அஞ்சு டாலர். (இங்கே எங்கூர்லே மணிக்கு 2.20. அதுவும் முதல் ஒரு மணி இலவசம்.) கொள்ளை அடிக்கிறாங்கப்பான்னு சலிச்சுக்கிட்டு அறைக்குத் திரும்பிக் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கிட்டு அடுத்த ரவுண்டு கிளம்புனோம்.

ஆட்டமெல்லாம் முடிஞ்சது. இப்ப ஆன்மீகம்.

சனிக்கிழமையா இருக்கே. இந்த ஊரு ஹரே கிருஷ்ணாவுக்குப் போகலாமுன்னு வலையில் விலாசம் தேடி, (95 Bank Road, Graceville) கிளம்பியாச்சு. 1972லே ஆரம்பிச்ச கோயிலாம். வாடகை வீட்டில் சில வருசங்கள்இருந்துட்டு 1985லே இப்ப இருக்கும் இடத்தை வாங்கிக் குடிபெயர்ந்துட்டாங்க. கோயிலைத் தொட்டு ஓடும் நதி அழகாவேஇருக்கு. நிறைய மரங்கள் வச்சுப் பராமரிக்கிறாங்க. ஆனாலும், கோயிலுக்கான ஒரு 'லுக்' மிஸ்ஸிங்(-:

முன்வெராந்தாவில் மேசை போட்டு, புத்தக விற்பனை. இடதுபுறம் இருக்கும் சமையலறையில் இரவு உணவுக்கு வேலை நடந்துக்கிட்டு இருக்கு. உள்ளே பூஜை ஹாலில் ஐம்பொன்னால் ஆன உருவச்சிலை. ஒரு இருபதுபேர் பஜனை பாடிக்கிட்டு இருந்தாங்க. ஏழுமணிக்கு ஆரத்தி எடுத்துட்டு அப்புறம் சாப்பாடு.

கொஞ்சநேரம் உக்கார்ந்திருந்தோம். என்னவோ மனசே ஒட்டலை. அதனாலெ சாமியைக் கும்பிட்டுட்டு கிளம்பிவரும் வழியில் ஒரு இந்தியன் கடையில் சாப்பாடு வாங்கிக்கிட்டு அறைக்குத் திரும்பியாச்சு. தொலைக்காட்சியில் நல்லுறவைப் புதுப்பிக்கும் நிகழ்ச்சிகளா வந்துக்கிட்டு இருந்துச்சு.

ம்ம்ம்ம்ம்ம்ம் சொல்ல மறந்துட்டேனே........ சாயங்காலம் 'நம்ம பால்கனி'யில் உக்காந்து டீ குடிச்சுக்கிட்டு இருக்கும்போது,பக்கத்து அறையிலிருப்பவர் கதவைத் திறந்துக்கிட்டு பால்கனிக்கு வந்து சேர்ந்தார். ரெண்டு அறைக்கும் சேர்ந்தமாதிரி இருக்கு இது. நல்ல வயசான மனிதர். ஒரு எழுபது எழுபத்தியஞ்சு இருக்கும். நெடுநெடுன்னு உயரம். கொஞ்சம் கூன் போட்ட மாதிரி நடை.தலையெல்லாம் சுத்த வழுக்கை.குழி விழுந்த கண்ணில் எதோ கஷ்டம்போல இருக்கு. ரத்தக் கண்ணா இருந்தார். அறிமுக 'ஹை, நெய்பர்ஸ்' முடிஞ்சது. 'ஐயாம் கோயிங் டுபி ரூட்' உங்க அபார்ட்மெண்ட் பகுதியைப் பார்க்கப்போறேன்னு சொன்னார். காசா பணமா? பார்த்துக்குங்கோ. அட! ரொம்ப வசதியா இருக்கேன்னார். நாங்க போனபிறகு இங்கே மாத்திக்குங்கோன்னு சொன்னோம். இதுக்கு 50% கூடுதல் காசுன்றதை மட்டும் சொல்லலை.

இங்கே ஒரு பிஸினெஸ்ஸா வந்துருக்காராம். வீடு வாங்கிப்போடும் எண்ணமாம். இப்ப இருப்பது சிட்னி நகரமாம்.அவர் காமிச்ச ஒரு விளம்பர ப்ரோஷர்லே அட்டகாசமான இடம், இப்ப விலைக்கு வருது. ரெண்டு பக்கமும் கடல் தண்ணீர் இருக்கும் மனைகள். வெறும் மனையே எட்டு லட்சம் டாலர்கள். சன்ஷைன் கோஸ்ட் பக்கம் இருக்கு. 'கட்டாயம் ஒரு படகு வாங்கிக்கணும். அப்படியே வீட்டுமுன்னாலெ நிறுத்துனா ஒரு 'கெளரவமா' இருக்குமு'ன்னு சொன்னேன்.

ஆமாமாம். இவ்வளவு நல்ல மனையிலே வீடு கட்டணுமுன்னா அதுக்கு வேற காசு ரொம்ப வேணும். படகுக்கும் ஒரு பத்துலட்சம் டாலர்கள் வேணுமேன்னார். எல்லாம் பெரிய பெரிய பட்ஜெட்டுலே பேச்சு போய்க்கிட்டு இருந்துச்சு.எல்லாக் காசையும் இதுலே போட்டுட்டா அப்புறம் புவ்வா? தண்ணியைப் பார்த்துக்கிட்டே ப்ரெட் தின்னணுமோ(-:

என் மனைவியைக் கூட்டிட்டுவந்து காமிக்கணும். அவுங்களுக்குத்தான் கஷ்டமா இருக்கும். காலையிலும் மாலையிலும் ஒரு மணி நேரம் காரோட்டிக்கிட்டு வந்து என்னை வேலையில் விடணுமுன்னார். (பாவம். தினம் 4 மணி நேரம் காரோட்டிக்கிட்டு இருந்தா, வீட்டை எப்படி அனுபவிக்கறது?)

இந்த வயசுலே வேலையான்னு நான் முழிக்கறதைப் பார்த்துட்டு, எங்கே வேலைன்னு கோபால் கேட்டுட்டார். ஏர்ப்போர்ட்லே வேலையாம். அங்கே விமானத்தில் இருக்கும் ரேடியோ மற்ற தகவல் சாதனங்களைச் சரிபண்ணும் குழுவின் தலைவராம்.சிட்னியில் இருந்து இங்கே மாத்திக்கலாம்,பிரச்சனை இல்லை. ஆனால் அங்கே இவர் இதுக்கான பயிற்சிப்பள்ளியும் நடத்தறாராம். அதுவும் பிரச்சனை இல்லை. வாரம் ரெண்டொருநாள் போய்வந்துறலாமாம். ஆனால் திடீர்னு ஃப்ளைட்கிளம்ப ஒரு மணிநேரம் இருக்கும்போது ரேடியோ கண்ட்ரோல் வேலை செய்யலைன்னு அழைப்பு வந்துருமாம்.அப்ப எந்த நேரம் காலமுன்னு பார்க்காம ஓடணும். இவ்வளவு தூரத்துலே இருந்தா அது முடியுமான்றதுதான் முக்கிய பிரச்சனையாம். சொல்லிக்கிட்டே வந்தவர் திடீர்னு,

"எனக்கு வேலையிலிருந்து ஓய்வு கிடைக்குமுன்னே ஒரு நல்ல இடம் வாங்கிப் போடணுமுன்னு மனசுலே இருக்கு. அப்பத்தான் ரிட்டயர் லைஃப் அனுபவிக்க முடியும். இப்பவே வயசு எனக்கு அம்பத்திநாலு ஆயிருச்சு"
எனக்குத் தூக்கிவாரிப்போட்டுச்சு. 'அடக்கடவுளே தாத்தான்னு நினைச்சவர் நம்மளைவிட வயசு கம்மியானவரா? 'அதுக்கப்புறம் தாத்தான்னு நினைச்சது தாத்தாவே இல்லைன்னு பயங்கர சிரிப்பு வந்துருச்சு.

உருவத்தைப் பார்த்து எதையும் சொல்ல முடியலை:-))))

தொடரும்.................

Wednesday, July 18, 2007

புகைப்படப் போட்டிக்கு!

இது இயற்கைத் தாமரை


இதுவும் இயற்கைப் பூக்களே!

Tuesday, July 17, 2007

தமிழ்மணம் கொ.ப.செ. சந்திப்பு வித் பீட்டர்.

நிறைய வருஷமாத் தெரிஞ்ச நண்பர்தான். ஆனாலும் இப்படி ஒரு காரியம் செஞ்சுருக்காருன்னு நம்பவே முடியலை:-)


குளிர்காலம் ஆச்சுனா நானும் ஒரு ஹெட்ஜ்ஹாக் மாதிரிதான் ஹைபர்னேட் பண்ணும்வழக்கம். காலநிலை மனுஷனை அண்ட்டீ சோஷியல் ஆக்கி வச்சுருதுன்னு நம்பிக்கிட்டு இருக்கேன். இந்த நம்பிக்கையை உடைச்செறியலாமுன்னு நண்பர் வீட்டுக்கு ஒரு விஸிட்.



'வழக்கம்போல்' தமிழ்மணத்தின் பெருமைகளை அள்ளி வீசிக்கிட்டு இருந்தேன். கொ.ப.செ.வா இருந்துக்கிட்டு இதையெல்லாம் செய்யாட்டா எப்படி? பதவி தனக்குத்தானே திட்டம்:-))))



நண்பருக்குப் புகைப்படக்கலையில் ஆர்வர் அதிகம். படங்கள் எடுத்துத் தள்ளிக்கிட்டு இருக்கார்.அவைகளை ஃப்ளிக்கரில் போட்டு வச்சுருக்கறதாகவும் சொன்னார். ஆஹா........நம்ம மேதா விலாசத்தைக் காமிக்க நல்ல ச்சான்ஸ்.



" அதுலே மாசாமாசம் இத்தனை ஃபோட்டோன்னு கணக்கு இருக்கே. கோட்டா முடிஞ்சதுன்னாஅடுத்தமாசம்தான் இன்னும் சிலதைச் சேர்க்கமுடியும். மாசத்துக்கு 18 படமுன்னு நினைக்கறேன்"


" ஆமாம். நான் அப்க்ரேடு வாங்கிவச்சுருக்கேன்"


"ஹா.........(ங்) அப் க்ரேடா? எத்தனை படம் இதுவரை போட்டுருக்கீங்க?"


" ஐநூத்துச் சொச்சம்"


"(................ மீண்டும் ஹா.........(ங்)...........)


"ப்ரைவேட்டா இல்லை பப்ளிக் வ்யூவா?"

" பப்ளிக்தான்"

" பேசாம ஒரு ப்ளொக் ஆரம்பிச்சு, அதுலே போடுங்களேன் படங்களை"


" ஒரு ப்ளொக் வச்சுருக்கேன்"


" (அடுத்த ஷாக்!!!!) என்ன பெயரில் வச்சுருக்கீங்க? "


சொன்னார்.

( அட! ரஜினியை இவரும் விட்டுவைக்கலை!!!!)


" ஓ........... பீட்டரா? அதான் நான் பார்க்கலை!"


" பீட்டரா? அப்படீன்னா? "


பீட்டரைப் பத்தி விளக்கோ விளக்குன்னு விளக்கிட்டு, பேசாம தமிழ் ப்ளொக் ஒண்ணு ஆரம்பிச்சுஅதைத் தமிழ்மணத்துலே சேர்த்துருங்க. நம்ம தமிழ்ப்பதிவுகளிலே ஃபோட்டோக்ராஃபிக்குன்னே
ஒரு வகுப்புவேற நடக்குதுன்னு சொன்னேன்.


நண்பர் தமிழ்காரர்தான். ஆனா தமிழில் எழுதறதுக்குக் கொஞ்சம்.............................?


" இது ஒரு பிரச்சனையா?" கலப்பையைப் புடிச்சு எப்படி உழணுமுன்னு 'ஊதி'யாச்சு:-)


ஆனா...சும்மாச் சொல்லக்கூடாது, படங்கள் ஒவ்வொண்ணும் அருமையாத்தான் எடுத்துருக்கார்.


நேரம்கிடைச்சா......... கொஞ்சம் எட்டிப் பாருங்க.

Monday, July 16, 2007

எ.கி.எ.செ? பகுதி 10

எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்? ஆஸ்ட்ராலியப் பழங்குடிகளை வதைக்கமுடிஞ்ச அளவுக்கு வதைச்சுட்டு, இப்ப ஒரு நாப்பது வருசத்துக்கு முந்திதான்இவுங்களும் தங்களில் ஒருவர்னு ஏத்துக்கிட்டு இருக்கு அரசு. அதுக்காக வருஷக்கணக்காப் போராடுனவங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்.இத்தனைக்கும் இவுங்க இங்கே வந்தே அறுபதாயிரம் வருஷங்கள்வரை ஆகி இருக்கலாமுன்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. ஒவ்வொருகுழுவா வெவ்வேற இடங்களில் இருந்துருக்காங்க. அதுக்கேத்த மாதிரி தங்களை அடையாளப்படுத்திக்க ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு பேர் இருந்துருக்கு. கூரி, முர்ரி, நூங்கர், யமட்ஜி, நுங்கா இப்படியெல்லாம் அவுங்க இருந்த இடத்தைக் குறிப்பிடும் பேர்கள் இருக்கு. அப்ப ஏறத்தாழ பத்து லட்சம் மக்கள் இருந்துருக்காங்களாம்.




1770லே காப்டன் குக் இங்கே வந்தது, அப்புறம் 1788லே இங்கிலாந்து இதையும் தன்னோட காலனிகளுக்குள் ஒண்ணாபிடிச்சுக்கிட்டது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். வெள்ளைக்காரங்களோடு கூடவே வந்தது நோய்களும்தான். பெரிய அம்மை,சின்னம்மை வகைகள்,இன்ஃப்ளூயன்ஸான்னு வந்து பரவுச்சு. பழங்குடிகளைத் துரத்திட்டு அவுங்க இருந்த இடத்தையெல்லாம் வெள்ளைக்காரங்க பிடிச்சுக்கிட்டாங்க. என்ன செய்ய, ஏது செய்யன்னு வகைதொகை தெரியாத இந்த ஜனங்க பிழைக்க வழியில்லாம, புது இடத்துக்குப் போன வாழ்க்கைப் போராட்டத்துலேயே கொஞ்சம்கொஞ்சமா பலமில்லாம,உடல்நிலை சரியில்லாமப்போய் நிறைய உயிர்கள் போயிருக்கு. போதாக்குறைக்கு, மிருகங்களை வேட்டையாடுறதுபோல இவுங்களைக் கூட்டங்கூட்டமாக் கொன்னு குவிச்சுருக்காங்க. நூத்தி முப்பது வருசம் விடாமத் துரத்திக்கொன்னா எந்த இனம்தான் தப்பி உயிரோடு இருக்க முடியும்?



இதுக்கிடையிலே இவுங்களுக்குப் புள்ளை வளக்கத் தெரியலைன்னு பழங்குடிகளின் பிள்ளைகளையெல்லாம் அப்பா,அம்மாகிட்டே இருந்து பிரிச்சுக் கூட்டிட்டுப்போயிட்டாங்க. புள்ளைங்களுக்குப் படிப்பு, நல்ல நாகரீகப் பழக்கவழக்கங்களைச் சொல்லிக்கொடுக்கறோமுன்னு கிட்டத்தட்ட ஒரு லட்சம் பிள்ளைகளை எடுத்துக்கிட்டுப்போய் கேம்ப், அனாதைகள் இல்லம்னு வச்சுப் பார்த்தாங்களாம். இதுலே சோகம் என்னன்னா......... அங்கே இருந்த பெண்குழந்தைகள் ரொம்ப மோசமா நடத்தப்பட்டது.17 சதமானம்பேர் abuseக்கு ஆளாக்கப்பட்டு.............. ச்சே என்ன கொடுமை . அங்கே இருந்து தப்பி ஓடியசிறுமிகளைப்பத்தி ஒரு சினிமாகூட 'Rabbit-Proof Fence'ன்னு வந்துச்சு. யாராவது பார்த்தீங்களா?




எந்தப் பிள்ளைங்க எந்தப் பெற்றோர்களுதுன்னு சரியான ஆவணங்கள் கூட எழுதி வைக்கலையாம். பிள்ளைங்க 18 வயசானதும் அவுங்களை வெளியே அனுப்புனப்ப, அதுங்க தங்களுடைய சொந்தக்காரங்க எங்கே இருக்காங்கன்னு தெரியாம ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்குங்க. தப்பித்தவறிப் பெத்தவங்ககிட்டே போய்ச்சேர்ந்தவங்களும் அவுங்க மொழி தெரியாம முழிச்சாங்களாம்.அரசாங்கம் செஞ்சது அநியாயமுன்னு பலரும் போராடி, மனித உரிமைக் கழகம்வரை செய்திகள் போயிருச்சு.



1967 வருஷம்தான் கருத்துக் கணிப்பு நடத்துனாங்க, பழங்குடிகளுக்கு ஓட்டுரிமை வழங்கலாமான்னு. 90% மக்கள்அவுங்களையும் மனுசங்களா மதிக்கணுமுன்னு ஒத்துக்கிட்டதாலே பழங்குடிகளுக்கு ஓட்டுரிமை வந்துச்சு.



1998லே 'நாங்க, பழங்குடிகளுக்குச் செஞ்ச அநியாயத்துக்கு வருந்தறோமு'ன்னு சொல்லி நாடே மன்னிப்புக் கேட்டுச்சு. ஒவ்வொருவருஷமும் மே மாசம் 26 அன்னிக்கு National Sorry Day ன்னு வருத்தம் சொல்லிக்கிட்டு இருந்தாங்க 2004 வரை. அதுக்கப்புறம்,மனப்புண்ணை ஆத்தும் நாள்ன்னு( National Day of Healing ) மாத்திக்கலாமுன்னு ஆரம்பிச்சு, மறுபடியும் பழைய பேருக்கே வந்துச்சு.




2000 வருஷம் சிட்னியில் நடந்த ஒலிம்பிக் பந்தய விழாவுலே அபாரிஜின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த கேத்தி ஃப்ரீமேன் கையாலே, ஒலிம்பிக் ஜோதியை ஏத்தி வச்சாங்க. பழங்குடிகளுக்கும் மற்ற மக்களுக்கும் இருக்கும் நல்லுறவைப் பலப்படுத்தறோமுன்னு இப்ப ஒரு 11 வருஷமா மே மாசக்கடைசி வாரத்தை National Reconciliation Weekனு கொண்டாடிக்கிட்டு இருக்காங்க.



இதைப் பத்திச் சொல்லும்போது இங்கெ நியூஸியின் பழங்குடிமக்களை இவுங்களோடு ஒப்பிடாம இருக்க முடியலை. மவொரிகளுக்குத்தான் இங்கே பலவிதமான முன்னுரிமைகள் இருக்கு. அவுங்க நிலங்களை எடுத்துக்கிட்டோமேன்னு அரசாங்கம் கோடிக்கணக்கான டாலர்களை நஷ்ட ஈடா வழங்கிக்கிட்டு இருக்கு. ஆறுகளில் மீன் பிடிக்கும் உரிமைகள் மவொரிகளுக்கு மட்டும்தான். கலப்பின மவோரிகளா இருந்தாலும் அவுங்களை மவொரிகள் கணக்குலேதான் எடுத்துக்கும். அரசாங்க அறிவிப்புகள், அறிக்கைகள் எல்லாத்திலும் மவொரி மொழியிலும் அச்சிட்டு இருக்கும். கல்லூரிகளிலும், பள்ளிக்கூடங்களிலும் மவொரி மொழிக்குத் தனிப்பிரிவே இருக்கு. இன்னும் பலவிதமான சலுகைகள் இந்த இனத்துக்கு உண்டு. இதெல்லாம் கொஞ்சம் தெரிஞ்சிருந்த காரணத்தால் ஆஸ்ட்ராலிய அபாரிஜின்களைப்பத்தி நினைக்கும்போது மனசுலே துக்கம் வந்ததென்னமோ உண்மை.



பழங்குடி மக்கள் வரைஞ்சு வச்சிருக்கும் குகை ஓவியங்கள், அவுங்க வசித்துவந்த குகைகள் இப்படி பலதும் சுற்றுலாப் பயணிகள் போய்ப்பார்க்கும் முறையில் வசதிகள் இப்ப செய்யப்பட்டிருக்கு. இவுங்களோட கலாச்சாரநிகழ்ச்சிகள்ன்னு நகரங்களில் 'ஷோ' நடத்துறாங்க. இதெல்லாம் இவுங்களைப் பத்தி மத்த ஜனங்கள் ஓரளவு தெரிஞ்சுக்க உதவுது. அரசு நடத்தும் விழாக்களில் சிலசமயங்களில் பழங்குடிகளின் நடனம்(??) சேர்க்கப்படுது.நடனமுன்னு சொல்ல முடியாதுன்னாலும், விழா நல்லபடி நடக்க, ஆசி கூறும் சடங்குன்னும் வச்சுக்கலாம்.



ஒரு நாப்பது வருசத்துக்கு முந்திவரை அபாரிஜன்கள் எத்தனைபேர் இருக்காங்கன்ற கணக்கெடுப்புக்கூட நடத்தலைங்க. இப்பச் சொல்றாங்க ஏறக்குறைய அஞ்சு லட்சம் மக்கள் இருக்காங்கன்னு. இவுங்களோட மொத்த ஜனத்தொகையில் ( 21 மில்லியன்) 2.5% பழங்குடிகள். 1977க்குமுந்தி, யாராவது இந்தப் பழங்குடிகளோட கல்யாணம் செஞ்சுக்கிட்டா அது சட்டவிரோதமுன்னுகூட இருந்துச்சு.



இந்த மக்களுக்கு வேண்டிய சுகாதாரம், கல்வி இப்படி எதுவும் இல்லாம ஆதிகால மனுஷங்கமாதிரிதான் இன்னும் பலர் இருக்காங்க. நிறையப்பேருக்கு குடிப்பழக்கம் வேறயாம். விரல்விட்டு எண்ணும் அளவுக்குத்தான் கொஞ்சம் முன்னேறிய வாழ்க்கை வாழும் பழங்குடிகள்எண்ணிக்கை இருக்கு. ஒரு சிலர் அரசியல்வாதிகளாவும், பார்லிமெண்ட் அங்கத்தினராவும் ஆகியிருக்காங்க. விளையாட்டு உலகிலும்கொஞ்சம்பேர் முன்னேறி இருக்காங்க.Jason Gillespie என்ற க்ரிக்கெட் விளையாட்டுக்காரரை ஞாபகம் இருக்கா? ஃபுட் பால், ரக்பின்னுஒரு இருபதுபேருக்குக்கிட்ட புகழ் கிடைச்சிருக்கு. ஓவியரான ஒருவர் தங்களுக்காக ஒரு கொடியைக்கூட வரைஞ்சு இருக்கார்.Australian indigenous rights activistsன்னு பலர் இருக்காங்கன்னாலும் இன்னும் போதிய முன்னேற்றம் ஏற்படலைன்னுதான் சொல்லணும். ஏற்கெனவே நல்ல நிலைக்கு வந்தவங்க ஏன் மற்ற மக்களை மேலே கொண்டு வரலை? முயற்சி செஞ்சு தோல்வியா இல்லை, முயற்சியே செய்யலையா?



இப்ப அரசாங்கம் சொல்லுது, இவுங்களுக்கு ஆங்கிலம் சொல்லித்தரணுமுன்னு. 200 வருஷத்துக்கு மேலே இன்னும் சரியாச்சொன்னா 219 வருஷமா அங்கே இருக்கும் அரசு, இன்னும் இவுங்களை முன்னேற்றாம இருக்கறது அநியாயமா என் மனசுக்குப் படுது. இப்பக் கொஞ்ச காலமா, இவுங்க இருக்கும் குடியிருப்புகளில் பிள்ளைகளுக்கு நல்ல சத்துணவு, கல்வின்னு ஆரம்பிச்சு இருக்காங்களாம். அரசு சம்பந்தமான விழாக்களில் இந்த மக்களின் நடனம் இப்பெல்லாம் கல்ச்சுரல் வகையில் நடக்குது. உண்மையான பரிவோட இதெல்லாம் நடக்கலையோன்னு என் உள்மனசுசொல்லுது. என்னுடைய தோணல்களுக்கு முடிவே இருக்காது போல(-: ஒருவேளை தூரத்துலே இருந்து பார்க்கறது வேற, அவுங்களோடபழகி அவுங்களைப் பத்திப் புரிஞ்சுக்கிட்டு அவுங்க தேவைகளைக் கவனிக்கறது வேற இல்லீங்களா? அரசு தரப்புலே மன்னிப்புன்னு சொல்லிட்டுச் சும்மா இல்லாம இன்னும் பலவிதத் திட்டங்களைக் கொண்டுவந்து இவுங்களை உண்மைக்குமே முன்னேத்தணும் என்றது என் கோரிக்கை & விருப்பம்.



தொலைக்காட்சியில் பழங்குடி இனத்தைப் பத்தி நிறைய விவரணைப் படங்களைப் பார்க்கும் வாய்ப்பு இந்த ரெண்டுமூணு நாளில் கிடைச்சது. திட்டங்கள் போடப்பட்டாலும் எவ்வளவுதூரம் நடைமுறையில் வெற்றியடையுமுன்னு தெரியலை. முக்கியமா அவுங்க மொழியையும்
கொஞ்சம் காப்பாத்துனாதான் அவுங்க கலாச்சாரம் அழியாமக் காப்பாத்தப்படும், இல்லையா?



தொடரும்...............

Thursday, July 12, 2007

எ.கி.எ.செ? பகுதி 9

எட்டுநாட்கள் கிடைச்சா(ல்) என்ன செய்யலாம்?

'சூர்யா' எழுப்புனதும் சூடா ஒரு காஃபி குடிச்சுட்டு நடக்கறதுக்குப் போனோம். உடற்பயிற்சியைக் கொண்டாடும்
ஆட்கள் எங்கே பார்த்தாலும். ஆத்தங்கரை வழக்கத்தைவிட அதிகமான சுறுசுறுப்போடு இருக்கு. நேத்து விபத்து
நடந்திருக்கக் கூடிய இடத்தை ஒரு பயத்தோடு எட்டிப்பார்த்தேன். கர்மசிரத்தையா கயிறு கட்டிக்கிட்டி இருக்கார் ஒருத்தர்.
இறங்கி ஏறுவாராம். "தலையில் ஹெல்மெட் போட்டுக்கோ. உனக்கு எதாவது ஆச்சுன்னா அதுக்கு நான் ஜவாப்தாரி இல்லை"ன்னு
கவுன்சில் போர்டு வச்சுருக்கு. ச்சின்னச்சின்ன விரிப்புகள் போட்டு அதுலே பஸ்கி, தண்டால்னு பயிற்சி செய்யும் ஆட்கள், அதலபாதாளத்தில் ஆற்றங்கரையில்.













அந்த சர்ச் கோவிலுக்குள் போய் எட்டிப்பார்த்தோம். உள் அரங்கத்துலே ரெண்டுமூணுபேர் என்னமோ அலுவலா இருந்தாங்க.
பார்வையாளர்கள் நேரம் காலை 9 முதல்னு ஒரு அறிவிப்பைப் பார்த்ததும் ஓசைப்படாமல் அங்கிருந்து நகர்ந்துட்டோம்.



இன்னிக்கு சவுத் பேங்க் போகலாமுன்னு எண்ணம் இருந்துச்சு. இந்த ஆற்றின் தெற்குப் பகுதி. இந்த ஆறுமே ச்சும்மா சொல்லக்கூடாது. மக்கள்ஸ் விரும்புறமாதிரி அப்படி வளைஞ்சு வளைஞ்சு இல்லாதநெளிவுகள் எல்லாம் காட்டிக்கிட்டு இருக்கு. தண்ணி வியூக்குத் தவிக்கிறவங்க ச்சும்மா இருப்பாங்களா? இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுன்னு எட்டுத் திசைகளிலும் எதாவது பண்ணி வச்சுருக்காங்க.


சனிக்கிழமையானதாலே
விடுமுறைக்கூட்டம் இருக்குமுன்னு நினைச்சேன். கார் பார்க்கிங்தான் எங்கே போனாலும் ஒரு தொந்திரவு. இங்கே
ஒரு இடத்தில் ஒரு காருக்கு 10 டாலர்னு பார்த்து விசாரிச்சதுலே நாள் பூராவும் நிறுத்தினாலும் பத்து டாலர்தானாம்.
ஒருமுறை உள்ளே கார் போக பத்துன்னு சொன்னாங்க. கார் பார்க் கட்டிவிட்டாவே பில்லியனர் ஆயிறலாம் போல!






வண்டியை நிறுத்திட்டு நதிக்கரையில் நடந்து போனோம். இதோ நான் தேடிவந்த இடம். நேப்பாளக் கோயில். "நேப்பாள்
ஷாந்தி மந்திர்". 1988லே நடந்த எக்ஸ்போ சமயத்துலே நேபாள நாட்டுக் கலைஞர்கள் தயார் செஞ்சது. அப்பதான்
ஆஸ்ட்ராலியாவுக்கு வெள்ளையர்கள் வந்து 200வது வருஷக் கொண்டாட்டம் நடந்துக்கிட்டு இருந்துச்சு. உள்ளே
வெவ்வேற முகத்தால் எல்லாத் திசைகளையும் பார்க்கும் கடவுள் சிலை.





இந்தமுறை அதைச்சுற்றி கண்ணாடித் தடுப்புப்
போட்டு ஒரு ஸீத்ரூ உண்டியலா ஆக்கி வச்சுருக்காங்க. அழகான மரவேலைப்பாடுகள். செதுக்கி, இழைச்சு வச்சுருக்காங்க.
வெளியே ரெண்டு யானைகள், அழகான வெங்கல மணின்னு அம்சமா இருக்கு. உள்ளே ஒரு பெஞ்சு இருக்கை. பின்பக்கம்
புத்த ஸ்தூபியின் அடிப்பாகம் இல்லேன்னா நம்ம கோயில்களில் இருக்கும் பலிபீடம்போல ஒண்ணு இருக்கு. ஒரு ச்சின்ன
செவ்வக வடிவக் குளம். கோயிலைசுத்தி மூங்கில் வனம். அங்கே இருந்து மரப்பாதைப் பாலம் வழியா ஒரு ட்ராப்பிகல்
தோட்டத்தைக் கடந்து போகலாம். பெரணிச்செடிகள் நிறைஞ்சு கிடக்கு.மணி ப்ளாண்ட்ன்னு சொல்வோம் பாருங்க,
அது அப்படிச் செழிப்பா வளர்ந்து மரங்களில் ஏறிப்பிடிச்சிருக்கு. ஒவ்வொரு இலையும் பிரமாண்டம். பேசாம வாழை
இலைக்குப் பதிலா அதுலே சோறு போட்டுச் சாப்புட்டறலாம்( எங்கே போனாலும் இந்த சோத்து நினைவுதான். ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்........)







இந்த ஊருக்கு 'பீச்' இல்லாத குறையை நிவர்த்தி செய்யறதுக்கு ஒரு செயற்கைக் கடற்கரை உண்டாக்கி வச்சுருக்கு
நகரசபை. அதை எதுக்குப் பாழாக்கணுமுன்னு அங்கங்கே நீச்சலுடையில் மக்கள். சிலர் சூரியக்குளியல் நடத்திக்கிட்டு இருக்காங்க.
செயற்கைக்கடலில் ச்சின்னதா அலை அடிக்குது. இன்னும் அட்மாஸ்பியர்க்கு வலுவூட்ட வேணுமுன்னு ஒரு 'லைஃப்கார்டு' பத்தடி உயர ஏணியில் உக்கார்ந்து 'கடலில்' குளிக்கும் ஜனங்களைக் கவனிச்சுக்கிட்டு இருக்கார். அதைத் தொட்டடுத்து சின்னப் பிள்ளைகளுக்கான நீச்சல்குளம். நீர்விளையாட்டுதான் அங்கே.






இன்னிக்குச் சனிக்கிழமையாப்போனது நல்லதுதான். இங்கே ஒரு மார்க்கெட் சனிக்கிழமைகளில் நடக்குது. கூடாரங்கள்
நாலுவரிசைகளில் முளைச்சிருக்கு. அந்தப் பகுதிக்குப் போனால் கண்முன்னே எதுத்தாப்புலே, நேத்து இருந்து மனசுலே
குடைஞ்சுக்கிட்டு இருந்த விஷயம். ஆஸ்ட்ராலியாவின் பழங்குடியைச் சேர்ந்த ஒருத்தர் டிட்ஜெரிடூ வச்சு வாசிக்கிறார்.
மரத்தினால் செஞ்ச ஒரு ஒன்னரை மீட்டர் வரும் குழாய். அதில் அவர் ஊதும் சத்தம் விநோதமா ஒலிக்குது. நான் படம் எடுக்கறதைப் பார்த்துட்டு, 'எடுத்துக்கோ'ன்னு சொல்லி கையால் ஜாடை காமிச்சுட்டு அவர் ஊதிக்கிட்டே இருந்தார். இதை ஊதறதுக்கு எவ்வளோ மூச்சடக்கி வாசிக்கணும், இது எவ்வளோ கஷ்டமுன்னு தெரிஞ்சுக்கிட்டு இருந்ததாலே ஒரு நிமிஷம்
போதுமே. நன்றி சொல்லிட்டு, அவருக்குக் கொஞ்சம் காசு கொடுத்துட்டு வந்தேன்.

இங்கே போட்டுருக்குப் பாருங்க.






இவுங்களைப் பத்திக் கொஞ்சம் சொல்லணுமுன்னு இருக்கேன். அடுத்த பதிவுக்குக் கட்டாயம் வந்து பாருங்க.


கொஞ்சம் மனசைக் கல்லாக்கிக்கிட்டு வாங்க.


தொடரும்............

இன்னிக்கு கறுப்பு வெள்ளின்றது என் கணக்குலெ சரியாப் போச்சு(-:

தமிழ்மணத்துலே சேர்க்கவே முடியலை. இப்ப மறுபடியும் வெளியிட்டுப் பார்க்கலாமேன்னு ஒரு எண்ணம். ச்சூ மந்திரக்காளி......... எல்லாம் சரியாப் போச்சு:-)))) ஹங்........... போச்சா இல்லையா?

Tuesday, July 10, 2007

பனி நீராவி

வரேன், வந்துக்கிட்டே இருக்கேன், இதோ அதோன்னு பயங்காட்டிக்கிட்டு இருந்த குளிர் கடைசியில் வந்தேவந்துருச்சு. ஜூன் மாசம் தொடங்கி ஒவ்வொரு நாளும், 'இன்னிக்குப் பரவாயில்லை'ன்னே சொல்லிக்கிட்டு இருந்தேன்.நியுஸியில் அதிகாரபூர்வமான குளிர்காலம் தொடங்கறது ஜூன் முதல்தேதி. இது மூணு மாசத்துக்கு, ஆகஸ்ட் வரை இருக்கும்.ஆனா நமக்கு மட்டும் இந்தக்காலம் இன்னொரு ரெண்டு மாசம், முன்பாரம் பின்பாரமா 'மே'யும், செப்டம்பருமா நீட்டிரும்.



குளிர் அது பாட்டுக்கு இருந்துட்டுப் போகட்டும் கழுதைன்னு விடமுடியாது. 'பவர் பில்' வரும்போது உங்க மயக்கத்துக்கு நான் கேரண்டி:-) இன்னிக்குப் பொழுது விடிஞ்சதும் வழக்கம்போல நம்ம 'தாமரைக்குளம்' பக்கம் கண்ணு போச்சு.கோகியும் வேற, வெளியே அவனுக்காகவும், மற்ற உயிர்களுக்காகவும் வச்சுருந்த தண்ணீர் பாத்திரத்துக்குப் பக்கத்துலே சோகமே உருவான முகத்துடன், ஒரு பரிதாபப் பார்வையை நம்ம மேல் வீசினான். எல்லாமே உறைஞ்சுகிடக்கு. தாமரைக்குளத்தில் புதுசா வச்ச தண்ணிப்பம்பு 'ஹீனமா' பொழியுது.




இந்தமாதிரி நாட்களில் சூரியன் மட்டும் வந்துருச்சுன்னா அன்னிக்கு பூலோக சொர்க்கம்தான். ஆஹா.........வெயில் எவ்வளோ இதமா இருக்கு. நம்ம வீட்டுப் பக்கம் மெயின் ரோடிலே இருந்து பார்த்தாவே, பவுடர் பூசிய மலை பளிச்னு தெரியும். அந்தப்பக்கம் போகும்போதும் வரும்போதும் 'வா வா பக்கம் வா'ன்னு கூப்புடும். பகல் சாப்பாட்டுக்கு அப்புறம் கிளம்பியாச்சு.



வழியிலேயே இருக்கும் நம்ம கிர்வி பிள்ளையார் கோயிலுக்கு முதல்லே போகணும். ஒரு 27 வருஷமாகுது இதைக் கட்டி. சலசலன்னுஓடும் கால்வாய். அதுக்கு நடுவிலே ச்சின்ன மண்டபம். மண்டபத்துக்குள்ளெ நுழைஞ்சு ஓடும் தண்ணீர். பிள்ளையார் கோயிலுக்கு இதைவிடப் பொருத்தமான இடம் வேற எங்கே கிடைக்கும்? அந்த மண்டபத்துலே தண்ணீர் மட்டத்துக்கு மேலே ஒரு பலகைபோட்டு அதுமேலே பிள்ளையாரை வச்சு வருசம் 19 ஆச்சு. இது என் மனக்கோயில் பிள்ளையார்.












கேண்டர்பரி ப்ளெயின்ஸ்க்கு கொவாய் நதியிலே இருந்து தண்ணீர் கொண்டு வரலாமுன்னு ஐடியாக் கொடுத்து அதைச் செயல்படுத்த எல்லா ஏற்பாடும் 1877- 1880 களில் செஞ்ச De Renzie James Brett அவர்களின் செயலைப் பாராட்டி 1980-ல் வச்ச நினைவுச்சின்னம். நாளைய மக்களுக்காக இன்றைய மக்கள் செஞ்சதுன்னு ஒரு plaque. நான் இந்தப்பக்கம் தண்ணியைப் படமெடுக்கும்போது, கெமாரவை சட்னு எங்கிட்டே இருந்து வாங்கி அவசரமா இன்னொரு தண்ணியைப் படம்எடுக்கறார் இவர். சரி போட்டும். ஆளுக்கொரு தண்ணீர்:-)











கிர்வியிலே இருந்து டார்ஃபீல்ட் ஒரு பதினைஞ்சு நிமிஷ தூரம்தான். புதுசா நாலைஞ்சு கடைகள் வந்திருக்கு. இதுலேஒரு பெயிண்ட் விற்கும் கடையும் சேர்த்தி. வருசாவருசம் பெயிண்ட் திருவிழா நடத்தாம இருக்கும் வீடுகளை இங்கே விரல்விட்டு எண்ணிறலாம். முக்காலே மூணேயரைக்கால் வீசம் 'தன்கையே தனக்குதவி' என்றதாலே கோடை வந்தவுடன், வீட்டுப் பராமரிப்புன்னு குறைஞ்சபட்சம் ஒரு சுவத்தையாவது பெயிண்ட் அடிக்கலைன்னா எங்களுக்கு இந்த ஜென்மம் சாபல்யமாகாது.




ஓசை செல்லாவின் புகைப்படவகுப்பில் சேர்ந்துருக்கோமே, வீட்டுப் பாடத்துக்கு நாலு படம் எடுத்துக்கலாமுன்னு,அசையாத சப்ஜெக்ட்டைப் பார்த்தால்.........என் 'கண்ணுக்கே சரியான கோணம் இல்லை. இன்னும் கொஞ்சம் போகலாமுன்னு போய்க்கிட்டு இருக்கோம். வழியிலே எல்லாம் கறுப்பு ஐஸ் நல்லவேளை உருகி இருந்துச்சு.' மவுண்ட் ஹட்' க்குப் போறவங்க செயின் போட்டுக்குங்கோன்ற அறிவிப்பைப் பார்த்ததும் என்னையறியாமலேயே, 'கழுத்துலே சங்கிலி' இருக்கான்னு தடவிப் பார்த்துக்கிட்டேன்.









போனவருசம் 'க்ரே மவுத் போனப்ப ஸ்ப்ரிங் ஃபீல்ட் ரெயில் நிலையத்துலே இருந்து பனிமலைகள் கையெட்டும் தூரத்துலே இருந்த நினைவு வரவே, இன்னும் கொஞ்சம் தூரம்தானே? அங்கேயே போய் ஹொம்வொர்க் முடிச்சுக்கலாமுன்னு........................மெயின் ரோடிலே இருந்து வலது பக்கம், ரெயில் நிலையத்துக்குத் திரும்பும்போதே, எதோ சீன் மாறினாப்போல தரையெல்லாம் வெள்ளை.இளவெய்யிலில் மினுங்கும் பனித்தூள். ரெயில் நிலயத்து வாசலில் நாலு கார்கள். ஆஹா...........யாரோ வந்துருக்காங்க. அங்கே வேலைசெய்யற ஸ்டேஷன் மாஸ்டர், அவரோட உதவி ஆள், அங்கே இருக்கும் டீ ரூம் பார்த்துக்க ஒரு ஆள்னு மூணு பேரோட மூணு வண்டியைத் தவிர்த்து இன்னொரு வண்டி நிக்குதுன்னா....................என்னமோ நடக்குது!! இப்ப நம்ம வண்டி வேற. என் கணக்குத் தப்பலை. 2 +2 ! கூட்டமா இருக்கோம். ( நாலு பேர் இருந்தால் கூட்டம் எனக் கொள்க)









ப்ளாட்ஃபாரத்துலே ரெண்டுபேர் நிக்கறாங்க. கையிலே கெமரா இருக்கு. நாமும் அங்கே போய்ப் பார்க்கலாமுன்னா,ப்ளாட்ஃபாரம் டிக்கெட் வாங்கலையேன்னு கோபால் சொல்றார். 'அதெல்லாம் கவலைப்படாதீங்க. இங்கெல்லாம் ப்ளாட்ஃபாரம் வரை வந்ததுக்கு நமக்குத்தான் அவுங்க காசு கொடுப்பாங்க. கொடுக்கணும்.ஆமா'







இருவரிடம் விசாரிச்சதுலே தெரிஞ்சது, இன்னிக்கு ஸ்டீம் ட்ரெயினாம். காலையில் இந்தப் போயிருக்கு. இப்பத் திரும்பி வரும் நேரமாம்.அதோ அங்கே தூரத்துலே புகை தெரியுது பாருங்க. வருசம் ரெண்டு முறை மட்டும் போகும் நீராவி எஞ்சின். எண்ணி நாலே பெட்டிகள்.ச்சிக்ன்னு வந்துக்கிட்டிருக்கு, வெள்ளைப் புகையோடு நம்ம ரயில் வண்டி. மூணு நிமிஷம் நிறுத்தினாங்க. எஞ்சினுள்ளே எட்டிப்பார்த்தேன்.நீராவியைப் பாழாக்க வேணாமுன்னு ஒரு கெட்டில் இருக்கு. சூடான காஃபி?






திகுதிகுன்னு எரியும் தீ, அதுக்குள்ளே நிலக்கரியை வாரிப்போடும் எஞ்சின் ட்ரைவர், அவருடைய முகம், உடுப்பு எல்லாம் அழுக்காக்கும் கறுப்புப் புகை, நிலக்கரி நிறைஞ்சிருக்கும் திறந்தவெளிப்பகுதின்னு ஒண்ணுமே இல்லை.
எஞ்சினைத் தொடர்வது 'மெயின்லைன் ஸ்டீம்'னு பேர் பொறிச்ச டாங்கர். அதுக்குள்ளே தண்ணீரைக் கொதிக்க வச்சு ஆவியாக்கி எஞ்சினை ஓட்டறாங்க. டீஸல் பயன்படுத்தறாங்களாம் அடுப்பெரிக்க! இப்பப் புரியுது ஏன் சுத்தமா இருக்குன்னு. செலவு இதுக்கு அதிகம் என்றதாலே 'ஸ்பெஷல் எக்ஸ்கர்ஷன் ட்ரிப்'ன்னு வருசத்துலே ஒரு சில நாட்கள் மட்டுமே ஓடுது.
வண்டி கிளம்புனதும் எல்லாருக்கும் டாடா காமிச்சு வழியனுப்பி வச்சுட்டுப் பார்த்தா........... உண்மைக்குமே கூட்டம்தாங்க.எதிர்வரிசையில் வேற ரெண்டு பேர் நின்னுக்கிட்டு இருந்தாங்களே!


ஹப்பா.......... எவ்வளோ நாளாச்சு இந்த நீராவி எஞ்சினைப் பார்த்து!!!! எவ்வளோ ஆவி.........





தெரிஞ்சிருந்தா வீட்டுலே இருந்த இட்லி மாவைக் கொண்டாந்துருப்பேன்.
ரயில் நிலையத்துலே இலவசமா எடுத்துக்கோன்னு மூணு புத்தகம். இங்கே அடுத்து இருக்கும் சுற்றுலாத் தலங்களைப்பற்றிய விவரங்களும், தெற்குத்தீவின் ஒரு பெரீய்ய்ய்ய போஸ்டரும் (88 x 62 அளவு). ஹூ....ம் இப்படி அள்ளி வீசுனா ஏன் ரெயில்வே இலாக்கா நஷ்டத்துலே ஓடாது?



திரும்பிவரும்போது, போனவாரம் கப்பல், இந்த வாரம் ரயிலான்னு கேட்டார் கோபால். ஏன், அதுக்கு முந்தினவாரம் குதிரை ரேஸ் 'பார்க்கக் கிடைச்சது' மறந்துபோச்சான்னு கேட்டு வாய் மூடலை.......... முன்வண்டியில், குளித்த முடித்துத் தன் ஆறடிக் கூந்தலை ஹாய்யா வெளியே நீட்டிக் காயவைக்கும்அழகி/அழகன்/அழகு!














செல்லா, கொஞ்சம் பார்த்து மார்க் போடுங்க. 67 கிலோ மீட்டர் போய் எடுத்த படம்.
நம்ம கெமெரா லென்ஸ்லே கரும்புள்ளிகள் விழுந்துருக்கு. அதைப்போக்கும் உபாயம் என்னவோ?