Sunday, January 27, 2008

திருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 12 (நிறைவுப்பகுதி)

' கோமள்' என்று காதில் சொன்னதும் சிரித்தது குழந்தை. எல்லாரையும் மனம் பதைபதைக்க வைத்துவிட்டாள் இந்தச் சின்னக்குட்டி. லலிதாவுக்கே நம்பிக்கையில்லை, இந்த முறை எல்லாம் முடிந்தது என்று நினைத்தாளாம்.
தீபக் பரவாயில்லை. கஸ்தூரியிடம் வளர்வான். ஆனந்த் தான் பாவம். ஆனாலும் பாட்டியின் செல்லமாச்சே.' நல்லவேளை !!!அவள் கற்பனைகள் எல்லாம் நொறுங்கியது.


அம்மாவின் பெயரை வைக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது என்று சிரித்தாள் கஸ்தூரி. கோமளவல்லிதான் இப்ப 'இங்கே' வந்து பிறந்துவிட்டாளாம்!


'அப்போ நம்ம குழந்தைக்கு அப்பா பெயரா? ' அப்பாவியாகக் கேட்டான் ஆகாஷ். 'அய்யோ வேண்டவே வேண்டாம். அப்பா..............' பதறினாள் கஸ்தூரி.



'சட் சட்' என்று நொடியில் மாறும் அவள் முகபாவம் ஆகாஷுக்கு எப்போதும் வியப்புதான்...


எத்தனை களங்கமில்லாத வெள்ளை மனசு. இவளுக்கு நல்ல காலம் வரட்டும் என்று மனதில் வாழ்த்தினார் மா ஜி.

* * * *

"வாழ்க்கையை அதன் போக்கிலேயே விட்டுவிடு."

பிதா ஜி சொல்லிக்கொண்டு வந்தார், ஹரியும் அவருமாக மருத்துவமனைக்குச் செல்லும் வழியில்.


"அதுதான் என்ன செய்வதென்றே தெரியவில்லை பிதா ஜி. கனகாவின் பிடிவாதம் கொஞ்சமும் குறையவில்லை. தூக்கத்தில் கூட ஊருக்குப் போகணும் என்று புலம்பல். எனக்கும் சங்கடமாகத்தான் இருக்கிறது. அவர்கள் வீட்டில் இருந்து யாராவது வந்து கூட்டிப்போனால் நல்லது. என்னால் கண்டிப்பாகப் போகவே முடியாது. அதுவும் உங்களை இந்த நிலமையில்.........."


'அதான் சொல்கிறேன், வாழ்க்கையை அதன் போக்கிலேயே விட்டுவிடு'. இடைமறித்தார்.


" இதோபார் ஹரி. அப்பா சொன்னதையெல்லாம் புரிந்துகொண்டாயா? எல்லாம் நடக்கும்விதமாக நடக்கும். நம் கையிலா இருக்கிறது? நீயே கனகாவைக் கூட்டிக்கொண்டு ஊருக்குப்போய் வா. ஆமாம். இப்போது நீ மட்டுமா? உன்னை நம்பி இரண்டு உயிர்கள்..... "


"இல்லை மா ஜி. அது வந்து........."



"ஊஹூம்... ஒன்றும் பேசாதே. அவள் மனசு ரொம்ப பலஹீனப்பட்டு இருக்கிறது. அவளிஷ்டம்போல் விட்டுப் பிடிக்கவேண்டும்தான். எங்களைப்பற்றிக் கவலைப்படாதே.....அதெல்லாம் கஸ்தூரியும் ஆகாஷும் இருக்கிறார்கள். நீங்கள் திரும்பிவரும்வரை அவர்கள் இங்கேயே இருந்துகொள்ளட்டும் என்று ஆகாஷின் அம்மா சொல்கிறார். "



பிரேந்திரரின் வியாபாரம் நல்லபடியாக நடக்கிறதாம். அவனுக்கும் அவ்வளவாக ஓடியாட வேண்டாமாம். அவனே அப்பாவைத் தேவைப்படும்போது மருத்துவமனைக்குக் கூட்டிக்கொண்டு போகிறேன் என்கிறான். அதான் .பட்பட்' இருக்கிறதே...


பிரேந்தர் 'பட்பட்' வாங்கியது முதல் பிள்ளைகளுக்குக் கொண்டாட்டம். அவன் வேலையில் இருந்து வந்ததும் இரவு எத்தனை நேரமானாலும் கூட அதில் ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்தால்தான் தீபக்கும் ஆனந்தும் தூங்குவார்கள். இந்த 'பட்பட்' ஆனந்த் வைத்த பெயர்தான், அப்பாவின் மோட்டார் சைக்கிளுக்கு.


'ரெண்டு மருமகன்களும் தாங்கும்போது எனெக்கென்ன மனக்கவலை' என்று உரக்கச் சிரித்தார் பிதாஜி.


சட்டென்று மா ஜியின் மனம் பிஜ்யாவிடம் போனது. ஹூம்....மூன்று மருமகன்கள் தாங்குகிறார்கள் என்று சொல்லக் கொடுத்து வைக்கவில்லை.
பாவம் பிஜ்யா எப்படி இருக்கிறாளோ? ஹரி போய்வந்தும் ஏழெட்டு மாசம் ஆகிறதே. அவன் ஊருக்குப் போவதற்குள் ஒரு முறை பிஜ்யாவைப் பார்த்துவிட்டு வந்தால் நன்றாக இருக்கும்................


நினைத்தவுடன் கிளம்ப முடியுமா விவசாயி? ஒவ்வொன்றாக குறுக்கீடுகள் வந்து கொண்டிருந்தன.


ஊருக்குப்போகப் போகின்றோம் என்ற எண்ணமே ஆனந்தமாக இருந்தது கனகாவுக்கு. பிள்ளைத்தாய்ச்சி என்று பார்த்துப்பார்த்து உதவி செய்தாள் கஸ்தூரி.


'ஒரு பத்துநாள் போதும்தானே?' யதார்த்தமாகக் கேட்டான் ஹரி. 'அதெப்படி? குழந்தை பிறக்கும்வரை இருக்க மாட்டீர்களா?' என்றாள் கனகா. இது ஏதடா வம்பாய்ப் போச்சு.....அதற்குத்தான் நிறைய நாட்கள் இருக்கிறதே......

மா ஜியுடன் ஆலோசித்தபோது, 'அவள் சொல்வதற்கு சரி என்று சொல். அப்புறம் பார்க்கலாம். அங்கே போனவுடன் தாய்தகப்பனைப் பார்த்தவுடன் எண்ணம் மாறிவிடும். பத்து நாட்கள் எல்லாம் போதாதுதான்.'அவ்வளவு தூரம் போய் அவளை விட்டுவிட்டு உடனே வர முடியுமா? ஒரு மாதம்வரை இருந்துவிட்டு வாயேன். உனக்கும்தான் இங்கே ஓய்வே கிடைப்பதில்லை' என்றார்.


"உங்களுக்குப் புரியாது மா ஜி. அங்கே நான் எங்கே போயிருப்பேன்? அப்பாவும் ஊரில் இருப்பதே இல்லை. இருந்தாலும் அவருடைய இடம் என்று ஒன்றுமில்லாமல் இங்கே அங்கே என்று சுற்றிக்கொண்டிருப்பார். உறவினர்கள் வீட்டில் போய் இருப்பதும் எனக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை. கனகா வீட்டின் கதையே வேற. ஒன்றும் செய்யாமல் அங்கே அடைபட்டு இருக்கவும் முடிவதில்லை. எனக்கு இங்கே, இந்த வீட்டைவிட்டால் வேறு எங்கும் என்னால் இயல்பாக இருக்க முடிவதில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாகத் திரும்புவேன்."


இதோ அதோ என்று சிலமாதங்கள் ஓடிவிட்டன. ஏழாம் மாதம் முடிவதற்குள்ளாவது கிளம்ப வேண்டும் என்று லலிதா சொல்லிக்கொண்டிருந்தாள். நெடும்தூரம் பயணம் அல்லவா? நாளை மறுநாள் நல்லநாளாம். மூட்டைக்கட்டும் வேலை ஆரம்பமானது. கஸ்தூரிதான் சின்னச்சின்ன அன்பளிப்புகளைக் கொண்டுவந்தவண்ணம் இருந்தாள்.

* * * *
இடிபோல் வந்த சேதி கேட்டு போட்டது போட்டபடி கிளம்பி ஓடினார்கள் ஹரியும் ஆகாஷும் 'அடிப்பாவி' என்று கதறிக்கொண்டே இருந்தார் மா ஜி. கண்ணீருடன் லலிதாவும் கஸ்தூரியும். வெறித்தபார்வையுடன் செய்வதறியாது விக்கித்து உட்கார்ந்திருந்தார் பிதாஜி. வீட்டின் சூழ்நிலையும், சேதியின் பயங்கரமும்............... இதுவரை பார்க்காத நாத்தனாரை நினைத்து அழத்தான் முடிந்தது கனகாவால்.


வீட்டில் ஆட்கள் இருக்கும் அரவமே இல்லையே என்று பயந்தபடி வெளிப்புறக் கதவில் கை வைத்தான் ஹரி. அவ்வளவுதான் அடங்கிக் கிடந்த அலைஓசைபோல் இரைச்சல். ஆளாளுக்கு என்னமோ சொல்லிக் கத்தினார்கள்.

கோபத்தீ கொளுந்துவிட்டு எரிந்தது. சம்பந்தி சொன்னதைக் கேட்டு ஹரிக்கு நெஞ்சை அடைத்தது.


பிஜ்யா தற்கொலை செய்து கொண்டாளாம், மூன்று நாட்களுக்கு முன் பெய்த பேய்மழையில் நிறைந்திருந்த கிணற்றில் விழுந்து. மறுநாள் கிணற்றில் தண்ணீர் கொண்டுவரப்போன மூத்த மருமகள் அலறியடித்துகொண்டு ஓடிவந்து சொல்லி இருக்கிறாள்.


போலீஸ் அது இது என்று ஏகப்பட்ட அமர்க்களமாம். நியமங்கள் முடிந்தபின் அதிகநேரம் ஊறிவிட்ட நிலையில் அழுக ஆரம்பித்திருந்ததைச் சட்டுப்புட்டென்று எரித்தானதாம்.


அவள் கணவன் எங்கே இருந்தானாம்? வீட்டில்தானாம். ஆனால் அளவுக்கு மீறின குடிபோதையில்.


குடும்ப கௌரவம் கெட்டுப்போனது உன் தங்கையால்தான் என்று சம்பந்தியம்மா ஒரு பாட்டம் திட்டிவிட்டு ஓயும்வரை ஹரி மௌனமாக அழுத கண்ணுடன் நின்றிருக்கிறான். எல்லாவற்றுக்கும் சாட்சியாக நின்றிருந்த ஆகாஷ்தான் இனி இருந்து என்ன பயன்? கிளம்பலாம்'' என்று சொன்னானாம். கூடவே குழந்தை எங்கே என்று கேட்டிருக்கிறான்.


அதுவரை தன்னிலை மறந்த ஹரிக்கும் குழந்தையின் நினைவு வந்திருக்கிறது. துணியில் சுருட்டிய ஒரு சிசுவைக் கொண்டுவந்து நீட்டியிருக்கிறார்கள். அப்போதுதான் தெரியும் அவளுக்கு ரெண்டாவது குழந்தை பிறந்துள்ளது என்று. திகைத்து நின்றானாம். மூன்று வாரங்கள் ஆன பெண்குழந்தை. அச்சு அசலாக அம்மாவின் ஜாடை. பெரியவனுக்கு ஒன்னேகால் வயது. என்ன ஏது என்று அறியாத நிலையில் மலங்க மலங்க நின்றிருக்கிறான்.


'குழந்தைகளைக் கொண்டு போகவா?' என்று ஆகாஷ் கேட்டதற்கு, 'சனியன்களை என் கண் முன்னால் இனி கொண்டுவராதே. போய்த்தொலை' என்று கத்தினானாம் ஜீத்.



வயிறு நிறைந்ததும், மா ஜியின் மடியில் கண்மூடிப் படுத்திருந்தது அந்த இளந்தளிர். ஆகாஷின் தோளில் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு பெரியவன். நேற்றுப் பார்த்ததில் இருந்து அப்படியே ஒட்டிக் கொண்டு விட்டான்.

"ஆமாம். குழந்தைகளின் பெயர்கள் என்னவாம்?"


மா ஜியின் கேள்விக்குப் பதில் தெரியாமல் விழித்தனர் மாமனும் சிற்றப்பனும். அங்கே இருந்த அமர்க்களத்தில் இதையெல்லாம் கேட்கத் தோணவே இல்லையே. சம்பந்தியம்மாவின் மிரட்டும் கண்களில் இருந்து தப்பினால் ஆயிற்று என்றுதானே ஓடிவந்தார்கள்.


'இப்படிக் கொடு' என்று குழந்தையைத் தன் கையில் ஏந்திய பிதா ஜி, ' எவ்வளவு அமைதியாகத் தூங்குகிறாள் பார். இவளுடைய அம்மாவின் ஆன்மாவுக்கு சாந்தி கிடைக்கட்டும். இவளுக்கு ஷாந்தி என்றே பெயர் வைக்கலாம்' என்றபடி, 'கஸ்தூரி இங்கே வா' என்றழைத்தார்.

"இந்தா உன் குழந்தை"


துக்கம்தாங்க முடியாமல் வந்த பெரும் விம்மலோடு குழந்தையை வாங்கி நெஞ்சோடு அணைத்துக்கொண்ட மனைவியைப் பெருமிதத்தோடு பார்த்தான் ஆகாஷ்.


பெரியவன் கிருஷ்ண விக்கிரகம் மாதிரி இருக்கின்றானே. அவன் கிருஷ்ணனாக இருக்கட்டும். கிஷன். கிஷன். அங்கே விளையாடிக் கொண்டிருந்த லலிதாவின் குழந்தைகள் ஓடிவந்து நான் தீபக், நான் ஆனந்த்
இவன் கிஷன்'' என்று கைகொட்டி மகிழ்ந்தனர். குழந்தை உலகம்தான் எவ்வளவு ஆனந்தமானது.


இவ்வளவு அமர்க்களத்தையும் பார்த்து விதிர்விதிர்த்திருந்த கனகா, பயணத்தைக் கொஞ்சநாள் தள்ளிப்போடலாம் என்றுதான் சொன்னாள். ஆனால் ஹரிக்கு மன நிம்மதி?. பிஞ்சுகளின் முகத்தைப் பார்க்கும்போதெல்லாம், 'என்னைப் பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டாய்' என்று விஜயா குற்றம் கூறிப் புலம்பியது மனதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.


'இல்லை. நாம் முன்பு முடிவு செய்த நாளிலேயே கிளம்பலாம்' என்று சொல்லிவிட்டான்.


சாமான்களைச் சுமந்து கொண்டு இவர்களை வண்டியேற்றிவிட டவுன் வரை வந்த ஆகாஷிடம், 'மாஜி யையும் பிதாஜியையும் நன்றாகப் பார்த்துக்கொள். இனி அந்த வீட்டுக்கு மகனே நீதான். மருமகன் இல்லை' என்றான்.


பயணம் முழுவதும் எதேதோ யோசனையில் மூழ்கி இருந்தவன், திடுமென்று 'மத்ராஸில் ஒரு வேலை கிடைத்தால் பேசாமல் அங்கேயே இருந்துவிடலாம்' என்றதை நம்ப முடியாமல் 'நெஜமாவா சொல்றீங்க? வேலைக்கென்ன...எங்க அப்பாருகிட்டே சொன்னால் ஹார்பரில் வேலை கிடைச்சுட்டுப் போகுது' என்றாள் கனகா முகம் மலர..




இனி அவர்கள் வாழ்க்கைப் பயணம் எப்படியோ.................

அதெல்லாம் சமாளித்துக் கொள்வார்கள். நாம் நம்ம வேலைகளைப் பார்க்கலாம்.


************* ******************** *****************



பின்னுரையான என்னுரை:


உண்மைக்கும் சொன்னால் பின்னுரை வேணுமான்னே தெரியலை.

இது கதையோ, நாவலோ, நெடுங்கதையோ என்னவோ ஒன்று.

வகைப்படுத்தலிலும் இது என்னன்னு தெரியாம ஒரு குழப்பம் எனக்கு இருந்ததால் அப்படியே பொதுவானவைன்னு போட்டு வச்சேன்.



நெடும் பயணமுன்னு வச்சால் ஹரி இதுவரை மூணோ நாலோ முறைதான் பயணப்பட்டான். அதனால்தான் இதை மூணு பகுதிகளில் முடிக்கப் பார்க்கிறேன் என்று சொல்லிவச்சேன்.



கதையை ஆரம்பிச்சு வச்சாமட்டும் போதும். அது தானே தன்னை எழுதிக்குமுன்னு முந்தி எப்பவோ படிச்ச ஞாபகம். அது நெசந்தான் போல. அப்படியே ஆச்சு.


பிதாஜி சொன்ன 'வாழ்க்கையை அதன் போக்கிலேயே விட்டுவிடு' ஹரிக்கு மட்டுமில்லை நமக்குகூடத்தான்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன். நீங்க என்ன சொல்றிங்க?


கதையை எங்கியாவது முடிக்கணுமுன்னுதான் இங்கே முடிச்சேன். கதாபாத்திரங்கள் அவுங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை முழுசுமா வாழ்ந்து முடிக்கட்டும்.


முக்கிய சிலரின் வாழ்வு எப்படின்னு கொஞ்சூண்டு கோடி காட்டிறட்டா?



தேவா: எங்கெங்கோ சுற்றிக் கடைசியில் மத்ராஸ் வந்து மூத்த தம்பி வீட்டுத் திண்ணையில் மயங்கிக்கிடந்தார். மருத்துவமனையில் சேர்த்த மூன்றாம் நாள் போய்ச்சேர்ந்தார். கான்ஸர். அப்ப...தங்கம்? ம்ம்ம்ம்ம்ம். அப்படியெல்லாம் கிடைச்சுட்டா இப்ப இந்த விலை விக்குமா?




பிதா ஜி: சில வருடங்கள் நோய்வாய்ப்பட்டு இருந்தார். சக்கரை வியாதியும் இரத்த அழுத்தமும். ஒரு நாள் தூக்கத்தில் மாரடைப்பு.



மா ஜி: பேரன் பேத்திகளுடன் நாட்களைச் செலவிடுகிறார். மகள் பொன்போலப் பார்த்துக் கொள்கிறாளாம்.



கஸ்தூரி: ஓட்டமும் துள்ளலும் வெகுவாகக் குறைந்துவிட்டது. ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவாச்சே. (ஆமாம். இன்னொரு மா ஜி உருவாகின்றாள்)



ஆகாஷ்: ரெண்டு அன்னையருக்கு மகன்! ஓயாத உழைப்பால் பொருட்செல்வம் பலமடங்காகிவிட்டது. அன்பால் அனைவரையும் கட்டிப்போட்டு வைத்திருக்கிறானாம். அவனை உதாசீனப்படுத்திய பிஜ்யாவின் மக்களுக்குப் பாசமுள்ள தந்தை.



லலிதா & பிரேந்திரர் தம்பதிகளுக்கு நாலாவதாக இன்னொரு பெண். பெயர் சோனா. வியாபாரம் கொழிக்கிறதாம்.


ஹரி & கனகா தம்பதியருக்குப் பெண் குழந்தை. . பக்கத்தில் இட்டிலி விற்கும் ஆயா வீடு காலியானதும் அங்கே தொத்தாவின் சொற்படித் தனிக்குடித்தனம்.


ஹரி, அம்பத்தூரில் தன் உறவினர்கள் யாரையும் சென்று சந்திக்கவே இல்லை. எங்கே விஜயாவைப் பற்றிச் சொல்லவேண்டி இருக்குமோ என்ற பயம். அவர்களைப் பொறுத்தவரை அவனும் தங்கைகளும் பஞ்சாபில் இருக்கின்றார்கள்.


ஆமாம்.............. அவனுக்கு வேலை கிடைத்ததா?

கிடைக்காமல் என்ன? உழைப்புக்கு அஞ்சுபவனா அவன்? ஹார்பரில் கூலியாக மூட்டை தூக்குகின்றானாம்.



இதுவரை கூடவே பயணித்த வாசக நண்பர்களுக்கு நன்றி.


வணக்கம்.

40 comments:

said...

அருமை..அருமை டீச்சர் ;)

அழகாக முடிச்சிட்டிங்க...இந்த பகுதியில் கண்ணீர் வந்துடுச்சி அந்த பிஜ்யாவின் குழந்தை கஸ்தூரி மகளாக போகும் போது...எளிமையாக எழுதி ரொம்ப அழகாக ரசிக்க வச்சிங்க எங்க எல்லோருரையும்.


கதையில் கதாபாத்திரங்கள் என்று சொல்ல முடியமால் பண்ணிட்டிங்க...அந்த அளவுக்கு இருந்தது நம்ம பயணம்.உங்க கதை சொல்லும் திறமைக்கு ஒரு பெரிய "ஓ".

வாழ்த்துக்கள் டீச்சர் ;)

said...

மிக அழகான கதையைக் கொண்டு சென்று முடித்திருக்கின்றீர்கள். தேர்ந்த எழுத்தாளர் நீங்கள். ஒவ்வொரு பாத்திரமும் செதுக்கிய சிற்பம் போலப் பதிந்து விட்டன. மிகமிக ரசித்துக் கதையைப் படித்தேன்.

said...

வாங்க கோபி.

எனக்கும்தான் கஸ்தூரி அந்தத் தளிரைக் கையில் வாங்குனப்ப ரொம்ப ஃபீலிங்ஸ் ஆயிருச்சு.

கூடவே பயணிச்சதுக்கு நன்றிப்பா.

said...

\\கஸ்தூரி: ஓட்டமும் துள்ளலும் வெகுவாகக் குறைந்துவிட்டது. ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவாச்சே. (ஆமாம். இன்னொரு மா ஜி உருவாகின்றாள்)\\

ம்ம்ம்...போன பதிவில் நீங்கள் சொன்ன பதிலுக்கு அர்த்தம் புரியுது
எது எப்படியோ இந்த கஸ்தூரி கதாபாத்திரம் அருமை ! ;)

\\லலிதா & பிரேந்திரர் தம்பதிகளுக்கு நாலாவதாக இன்னொரு பெண்\\

ஆஹா..போதுமா..நாடு தாங்குமா!!! ;))

said...

வாங்க ராகவன்.

ரசிச்சதுக்கு நன்றி.

நீங்க காதல்கதைகளில் பின்றீங்க. நம்மது அதுக்கு அடுத்த ஸ்டேஜ்.
குடும்பக்கதை:-))))))

said...

டீச்சர்...முதல் ரெண்டு பகுதிகளுக்கும் மட்டும் தான் அட்டென்டன்ஸ் குடுத்தேன்! மத்த பகுதியெல்லாம் ஆபிஸ் அனானியாப் படிச்சிக்கிட்டு வந்தேன்! நிறைவுப் பகுதியை நிறைவாத் தான் முடிச்சி இருக்கீங்க!

கதையைப் "பொத்"தென்று முடிக்காமல், அதுல வர ஒவ்வொரு பாத்திரமும் என்ன ஆனார்கள் ன்னு சொல்லியது தான் இன்னும் சிறப்பு! கல்கி பொன்னியில் செல்வனில் இப்படித் தான் பண்ணுவாரு! நீங்க கல்கி ஸ்டைலோ, கலக்கி ஸ்டைலோ, ஆக மொத்தம் கலக்கிட்டீங்க!

//இவளுடைய அம்மாவின் ஆன்மாவுக்கு சாந்தி கிடைக்கட்டும். இவளுக்கு ஷாந்தி என்றே பெயர் வைக்கலாம்'//
//பெரியவன் கிருஷ்ண விக்கிரகம் மாதிரி இருக்கின்றானே. அவன் கிருஷ்ணனாக இருக்கட்டும். கிஷன். கிஷன்//

Hmmmm...Triggered a lot of thoughts down the memory lane. குழந்தைகளை அன்பான கைகளில் சேர்த்ததுக்கு உங்களுக்கு நன்றி!

said...

சரி....கதைக்கு அடுத்து என்ன? கதை விமர்சனம் தான்! :-))
அப்படியே எந்தப் பாத்திரம் ரொம்ப பிடிச்சுதுன்னு ஒரு வாக்கெடுப்பு வையுங்க!

புதிரா புனிதமாவில் அடுத்து என்ன வைக்கலாம்-னு யோசிச்சிகிட்டு இருந்தேன்! பேசாம திருவேங்கடம் ஹரியான கதையில் இருந்து பத்து கேள்வி கேட்டுறட்டுமா? :-))

said...

கதை முடிந்தது. சட்டென முடிந்தது போன்ற பிரமை. பிஜ்யா வின் மரணம் ......

இத்தனை கதா பாத்திரங்கள் - அத்தனையையும் பின்னிப் பிணைத்து ஒரு கதை. துளசி உங்களுக்கு திறமை அதிகம் .

ஹரி திருவேங்கடம் ஆனதற்கு காரணம் வலுவாக இல்லை. கனகாவின் ஆசையைத் தவிர.

//பிதாஜி சொன்ன 'வாழ்க்கையை அதன் போக்கிலேயே விட்டுவிடு' ஹரிக்கு மட்டுமில்லை நமக்குகூடத்தான்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன். நீங்க என்ன சொல்றிங்க?
//

சத்தியமான வார்த்திகள். வாழ்க்கையை அதன் போக்கிலே விடுபவன் வெற்றியடைவான் என்பது என் கருத்தும் கூட.

இந்தக் கருத்துக்க்காவே நான் பிதா ஜி பாத்திரம் எடுத்துக் கொள்கிறேன்.

துளசி, தங்கள் மனம் போல், வீடு எப்போதும் நிறைந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் போல், எல்லோருக்கும் மழலைச் செல்வங்களை அள்ளிக் கொடுத்திருக்கிறீர்கள். வாழ்க வளர்க. அச் செல்வங்கள் அனைத்திற்கும் எங்களது நல்வாழ்த்துகள்.

//ஆமாம். இன்னொரு மா ஜி உருவாகின்றாள்//

தங்களின் தாயுள்ளம் பிரதி பலிக்கிறது.

மனம் நிறைந்திருக்கிறது துளசி.

நெகிழ்ச்சியுடன் சீனா

said...

ரொம்ப விமரிசையா போய்கிட்டு இருந்த கதை ரொம்ப அவசர அவசரமா முடிஞ்சா மாதிரி இருக்கு. ஹரி மனசு ஏன் மாறிச்சு? கொஞ்சம் டீட்டெய்ல்டா போட்டு இருக்கலாம்.

said...

திருவேங்கடம் ஹரியானது சரி. சென்னை ஹார்பருக்கு வந்தப்புறமும் ஹரிதானா? மறுபடியும் திருவேங்கடமாகலையா?

அட பேர்ல என்னப்பா இருக்குங்கிறீங்களா... அப்ப சரி!

said...

வாங்க KRS.

கல்கி இப்ப உயிரோடு இல்லை என்ற தைரியம்தானே?

எந்தப் பாத்திரம் பிடிச்சதுன்னா எனக்கு 'அண்டா'தான். அப்புறம் கங்காளம்.

அதையெல்லாம் இங்கே கொண்டுவரமுடியாதுன்னுட்டார் கோபால்.

பளபளன்னு பித்தளை அண்டாவை ஃபயர் ப்ளேஸ் பக்கம் வச்சு, அதுலே எரிக்கும் கட்டைகளைப்போட்டு வச்சா சூப்பரா இருக்காது?

வாக்கெடுப்பு எதுக்குப்பா? பேசாம உங்க புதிரா புனிதமாலே வச்சுருங்க. அப்படியாவது நாலு வாசகர்களை வரவேற்கலாம்.

கேள்விகள் கஷ்டமானதா இருக்கட்டும். இன்னும் நாலுவாட்டிப் படிக்கிறமாதிரி:-)))))

ச்சும்மா............:-))))

said...

கோபி,
நாடு, அப்பத் தாங்கிக்கிட்டுத்தான் இப்பத் திணறுது:-))))

said...

வாங்க சீனா.

'மனைவி சொல்லே மந்திரம்' மறுபாதியை அழவச்சு,அது என்ன வாழ்க்கை?

காரணம் வலுவா இருக்கே:-))))

உங்களுக்கு பிதா ஜி 'ரிசர்வ்ட்':-)))

//மனம் நிறைந்திருக்கிறது துளசி.

நெகிழ்ச்சியுடன் சீனா//

வாய் வார்த்தை இல்லைன்னு புரியுது.

நன்றி சீனா

said...

வாங்க கொத்ஸ்.

கல்யாணம் ஆயிருச்சு, அப்புறம் என்னன்னு இங்கே ஓடஓட விரட்டிட்டு, இப்ப 'அவசர அவசரமா முடிஞ்சா மாதிரி இருக்கா?

பேஷ் பேஷ். பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டறது இப்படித்தான் போல:-)))))


நிஜ வாழ்க்கையில் மனசு மாற ஒரு சம்பவம் போதுமே.

காந்திஜி எப்படி ஒருவேட்டி,துண்டுக்கு மாறினாரு?

said...

வாங்க ஸ்ரீதர்.

பேர்லே என்னா இருக்கா? இருக்கே.....

பழைய இந்திப் படம் ஒண்ணுலே (ராஜ்பப்பர் & ஸ்மிதா பாட்டீலுன்னு நினைக்கறேன்) விட்னஸ் ப்ரொடெக்ஷனுக்கு இவுங்க பேரை வெவ்வேறயா மாத்திக்கிட்டே இருப்பாங்க.

ஹரிக்கு ஹரியே பழகிப் போச்சுன்னு சொல்லிக்கிட்டு இருந்தார்.:-))))

said...

ரொம்ப உணர்வுபூர்வமா,அழகா முடிச்சிட்டீங்க...கைதேர்ந்த பாத்திரப்படைப்புகள்..நேர்த்தியான தொகுப்பு..
நன்றிங்க!

திடீர்னு, என்னை ரெண்டு குழந்தைகளுக்கு அப்பனாக்கிட்டீங்களே:-))))))

said...

வாங்க தங்ஸ்.

ஏனுங்க நோகாம நோம்பு கும்புடக் கசக்குதா? லட்டாட்டம் ரெண்டு பிள்ளைங்க. வேணாமுன்னு இருந்தா நான் எடுத்துக்குவேன்:-)

இதபாருங்க. கடைசி சீன்லேதான் நீங்க பிள்ளைங்களோடு இருக்கறமாதிரி வரும். அதுவும் ஒரு ரெண்டுமூணு விநாடி.
அதுக்கப்புறம் நீங்க ஷாட்லெ இருக்கமாட்டீங்க.

கஸ்தூரியும், மா ஜியும் இருக்கறதைக் கடைசியா ஃப்ரீஸ் பண்ணி விட்டுருவோம்:-)

சுபம். சரிதானுங்களா?

said...

நல்லது செய்தவங்களுக்கு நிம்மதியான வாழ்வைக்கிடைக்க செய்யக்கூடாதா...?
தங்கைக்கெல்லாம் வாழ்வு அமைத்து கொடுத்துவிட்டு இப்படி மனம் நொந்து எங்க இருந்தா இயல்பா இருக்கமுடியும்ன்னு சொன்னானோ அங்கருந்து வெளியேற ஹரி என்ன பாவம் செய்தான்..
... மனம் கலங்கித்தான் போகுது போங்க..

said...

வாழ்க்கையை அதன் போக்கிலேயே விட்டுவிடு'//


எவ்வள‌வு உண்மை..ஹ‌ரிக்குதான் கூலி வேலையாகிவிட்ட‌து கடைசியில்.. என்றாலும் கன‌கா சந்தோஷ‌மாயிருப்பாளே..எத்த‌னை பாத்திர‌ங்க‌ள்..ஆனால் ஒன்றொன்றும் ம‌ற்க்க‌ முடியாத‌வைதான்.

said...

//அதுவும் ஒரு ரெண்டுமூணு விநாடி.//
டைட்டில் சாங்-ல எனக்கு ரெண்டு,மூணு ஷாட்ஸ் வைக்கணும்.

//மனம் கலங்கித்தான் போகுது போங்க.//
கஷ்டமாத்தாங்க இருக்கு..
கொஞ்ச நாள்-ல கனகா மனசு மாறி, ஹரியோட பஞ்சாப்-ல செட்டிலாகியாச்சுன்னு மனசத்தேத்திக்கிட்டேன்.
துளசி மேடத்துக்குத்தான் இன்னும் அது தெரியல:-)))))

said...

வாங்க முத்துலெட்சுமி.

இப்படித்தான் பலருக்கும் வாழ்க்கை அமைஞ்சுருது.

அவன் விதி அவனை ஊருக்கே திருப்பிக் கொண்டாந்து விட்டுருச்சு பாருங்க.

said...

வாங்க பாசமலர்.

கனகாவின் மகிழ்ச்சிதான் முக்கியம். பாவம் புள்ளைத்தாய்ச்சிப் பொண்ணு.

ச்சும்மா உக்காந்து தின்னாம, உடல் உழைப்பை உதாசீனப்படுத்தாம..
அதுதாங்க மனுசனுக்கு நிம்மதி

said...

ஏங்க தங்ஸ்,

சினிமா உலகத்துலே ஹீரோக்கள் ஆதிக்கம் அதிகமுன்னு சொன்னப்ப நான் அவ்வளவா நம்பலை.

ஆனா......
சின்னத்திரைக்கே டைட்டில் பாட்டுலே 3 ஷாட்ன்னு ஆரம்பிச்சா.....

ம்ம்

கஸ்தூரியைத் தேடிக்கிட்டு இருக்கேன்.

இளமையா, அழகா, பொறுமைசாலியா, கண்களில் இரக்கம் இருக்கும் விழிகளுமா யாராவது இருக்காங்களான்னு நீங்க(ளும்) தேடுங்க:-)

said...

துளசி,
பிதா ஜி சொன்ன வழி புதலவன் ஹரி செய்யறது நல்லதுதான்.
அதுக்காக மனசுக்குப் பிடித்த இடத்தை விட்டு வருவானா.

என்னப்பா.
சரி, புறப்பட்ட இடத்துக்குத் திரும்பி வந்து விட்டான்.
நல்லா இருக்கட்டும்.
கனகா கொஞ்சமாவது மாறி இருக்காளா:)

இன்னும் ரெண்டு எபிசோட் போயிருக்கலாம்:(( வாழ்த்தூக்கள் துளசி. ரொம்ப நலலா இருந்தது.

said...

வாங்க வல்லி.

இன்னும் ரெண்டு என்னப்பா 20 வரைக்கூடப்போயிருக்கலாம்:-)

இந்தாங்கோ உங்களுக்காக:


கனகா எங்கே மாறுவது?

மத்ராஸ் வந்தவுடன் இதுவரை பார்க்காம இருந்த சினிமாக்களை ஒண்ணுவிடாமப் பார்க்கணுமுன்னு
தேட்டர் தேட்டராப் போய்க்கொண்டு இருந்தாள்.

ஹரி சொன்ன எதையும் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை.

தொத்தாவும் சொல்லிப் பார்த்தார்கள்.
கேட்டால்தானே?

கடைசியில் பயந்தமாதிரியே ஒரு சினிமாக் காட்சிக்கு நடுவில் நடுவில் பிரசவ வலி வந்து ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக்கொண்டு ஓடினார்களாம்.

மறுநாள் தினத்தந்தியில் கூட செய்தி வெளியாகி இருந்தது.

'தியேட்டரில் பிரசவம்' என்று.

என்ன தியேட்டரா?

ஆபரேஷன் தியேட்டர்தானாம்:-))))

said...

இது தங்ஸ்க்கு:


கொஞ்சநாள் கூலியாக இருந்தவனின் உழைப்பைக் கண்கூடாகப் பார்த்தக் கனகாவின் அப்பா, தனக்குப்பிறகு இவந்தான் எல்லாரையும் கட்டிக் காப்பாற்றுவான் என்ற எண்ணத்துடன், அவருடைய ஒப்பந்தப் பணியை அவன் பெயருக்கு மாற்றித் தந்தார்.

இப்போது அவந்தான் கூலி நம்பர் 1:-)

said...

ஆஹா...நிறைவுப்பகுதின்னு சொல்லிட்டு பின்னூட்டத்தில் தனியாக ரெண்டு எபிசோட் போயிக்கிட்டு இருக்கு..! ;))

said...

ஆமா,ஆமா கோபி!அப்டித்தான்:)))))

said...

// உழைப்புக்கு அஞ்சுபவனா அவன்? ஹார்பரில் கூலியாக மூட்டை தூக்குகின்றானாம்.//

ஹரிய லூதியானாவுக்கு அனுப்பி ஒரு தொழிலதிபனாக்கி, அப்பால சென்னைக்கு கூட்டிக்கிட்டு வரவீங்கன்னு பாத்தா அப்படியே டமார்ன்னு மூட்டைய தூக்க வச்சுட்டீங்களே. அத்தினி வருசம் சர்தார்ஜீங்களோட இருந்து என்ன பிரயோசனம் :(

இது முடிவைப் பற்றிய கமெண்ட் தான். உங்களோட எழுத்தப் பத்தி சொல்ல நான் யாரு?

said...

கோபி & வல்லி,

தனி ஆவர்த்தனம் நடந்துக்கிட்டு இருக்கு:-))))

said...

வாங்க கபீரன்பன்.

//உங்களோட எழுத்தப் பத்தி சொல்ல நான் யாரு?//

இதானே வேணாங்கறது? நிறைகுறைகளைச் சொன்னாத்தானே நம்ம எழுத்து மேம்படும்? முக்கியமா குறைகளைச் சொல்லிக் குட்டணும்.

பாடப்பாட ராகம் என்று சொல்வது எழுத்துக்கும்தான். எழுத எழுத....?

எல்லா சர்தார்ஜீகளும் இப்படி(??) இல்லையாக்கும். அதுலேயும் பரம பாவங்களும் இருக்கு.

அதென்ன 'லூதியானா'ன்னு குறிப்பிட்டுச் சொல்லி இருக்க்கீங்க? :-)))))

ஹரி இருந்த ஊரில் சீக்கியர்கள் அவ்வளவா இல்லை. கூடுதல் இந்துக்கள் இருக்கும் கிராமம்..என்பது கூடுதல் தகவல்.

said...

கடைசி பகுதி மனத்தைக் கரைத்துக் கண்ணீரை வரவழைத்துவிட்டது துளசிக்கா. ஒரு சோகத்தைச் சொல்லி அடுத்தடுத்து வேகவேகமா ஓட்டிக் கதையை முடிச்சதால (சரி அவங்க அவங்க வழியில தொடர விட்டதால) சோகத்தோட சுமை கடைசி வரி படிக்கிறப்ப கொஞ்சம் குறைஞ்சதுன்னாலும் என்னமோ நமக்கு நல்லா தெரிஞ்சவங்க கதையில இது நடந்த மாதிரி உணர வச்சிட்டீங்க.

இந்தத் தொடர் முழுவதும் அடிக்கடி எனக்கு வந்த எண்ணம்: இந்தப் பெண்களைப் பற்றி அவர்களின் எண்ணங்களைப் பற்றி செயல்களைப் பற்றி எல்லாம் இவ்வளவு நன்றாக துளசிக்கா எழுதியிருக்காங்க. நமக்கெல்லாம் அப்படி தோணவே தோணாதே. அப்படியே ஏதாவது எழுதுனாலும் ஒரு செயற்கைத் தனம் வந்திருமே. அதுக்கெல்லாம் பொண்ணா பொறந்திருக்கணுமோ?

said...

கதைன்னதும் எட்டிப்பார்க்காமல் இருந்துட்டேன். நிறைவுப் பகுதின்னதும் வந்து சொல்லிட்டுப் போகலாமின்னு வந்தேன். அதுக்காக நீங்க கதை எழுதினதை குறை சொல்லல. கண்டிப்பா நல்லா தான் எழுதியிருப்பீங்க. யக்கோவ்... அடுத்து வேற பாடம் நடத்துங்களேன். வரலாறு கூட எனக்கு பிடிக்கும்.

said...

வாங்க குமரன்.

சோகத்தைக் கடந்துறணும் சீக்கிரம்னு இருப்பது நல்லதுதானே?

கதைன்னு ஒண்ணு தனியா இருக்கா?
எல்லாம் பலருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள்தானே?

//அதுக்கெல்லாம் பொண்ணா பொறந்திருக்கணுமோ?//

ஏன்? தாயுமானவனா இருந்து பாருங்க:-))))

said...

வாங்க காட்டாறு.

ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ஒவ்வாமை:-))))

உங்களுக்குக் கதை, எனக்கு? கவிதை!

வகுப்புக்கு வரேன்னு சொல்றப்பப் வேற பாடம் டீச்சரால் நடத்த முடியாதா என்ன?

சிலபஸ்லே என்ன இருக்குன்னு பார்க்கிறேன்.

said...

கடைசி பகுதியை இன்றுதான் படித்தேன்.
ஹரியின் பயணம் ( ங்கள் )
என்று முடியும் என நினைத்தவன் நான்.
இன்று முடிந்துவிட்டதே என ஏங்கியதும் நான்.
சோகத்தின் எல்லையை
சுகமான சஹானாவில்
இதமாக இசைத்துவிட்டுப் பின்
வாத்ஸல்யத்தின் வர்ணங்களையும்
வரைந்து தள்ளிவிட்டீர்கள்.
இது என்ன கதையா ? காவியமா ?
சொல்லுக்கும் அப்பாலே ஒரு சித்திரமா ?
ஏதோ ஒரு பிரேம் சந்த் நாவல் படித்த உணர்வு ஏற்படுகிறது.
ஒரே வார்த்தையில்,
சபாஷ் !

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://movieraghas.blogspot.com
http://anewworldeveryday.blogspot.com

said...

//கதைன்னதும் எட்டிப்பார்க்காமல் இருந்துட்டேன். நிறைவுப் பகுதின்னதும் வந்து சொல்லிட்டுப் போகலாமின்னு வந்தேன்.//
//வாங்க காட்டாறு.
ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ஒவ்வாமை:-))))

உங்களுக்குக் கதை, எனக்கு? கவிதை!//

ஒத்தருக்கு கதை புடிக்கும், இன்னொத்தருக்கு கவிதை புடிக்கும்.
ரசித்துக் கேட்பவருக்கு ஒரு கழுதையும் புடிக்கும்.
சரியா சொன்னீங்க ஒவ்வாமைன்னு.
ஸெட்ரிசைன் தினம் நைட் ஹாஃப் எடுத்துக்கச் சொல்லுங்க.
சரியாயிடும்.
மேனகா சுப்புரத்தினம்.
தஞ்சை.
http://menakasury.blogspot.com

said...

பார்த்தீங்களா....ப்ளேனைப்பிடிக்கும் அவசரத்தில்கூட ரயிலைப்பிடிக்கும் ஹரியைப் படிக்கிறீங்க போல!

நீவிர் யாரோ????????????

said...

வாங்க மேனகா & சுப்புரத்தினம்.

நடுவிலே கொஞ்சநாள் உங்களைக் காணோமேன்னு பார்த்தேன்.

பாராட்டுகளுக்கு நன்றி.

இங்கே மருந்து மாத்திரையெல்லாம்
மருத்துவர் கையெழுத்தின்றி கிடைக்காது(-:

ஆதரவுக்கு நன்றி.

said...

//ஹரி, அம்பத்தூரில் தன் உறவினர்கள் யாரையும் சென்று சந்திக்கவே இல்லை. எங்கே விஜயாவைப் பற்றிச் சொல்லவேண்டி இருக்குமோ என்ற பயம். அவர்களைப் பொறுத்தவரை அவனும் தங்கைகளும் பஞ்சாபில் இருக்கின்றார்கள்.//
வேண்டாம், வேண்டாம், நானும் சொல்ல மாட்டேன். :(((((((( அருமை என்று சொல்வது கூடத் தப்பு, அவங்க தான் நம்மோடயே வாழறாங்களே