Thursday, May 29, 2008

என்னை முதல்முதலாகப் பார்த்தபோது என்ன நினைத்தாய்?

என்னன்னு நினைக்கிறது? 'நீ ஒரு தக்காளி'ன்னு நினைச்சேன்.
எல்லாம் இப்ப ஒரு ஏழெட்டுவருசமாத்தானே உன்னோடு பழக்கம். சீனர்கள்
இங்கே அதிகமாக் குடியேறுனபிறகுதான். அதுவும் நியாயம்தானே?
இப்ப நம்ம இந்திய மக்களுக்காக எத்தனை ஸ்பைஸ் ஷாப் வந்துருச்சு.
அவுங்கவுங்களுக்குப் பரிச்சயமான சுவையை, தீனியை விடமுடியுதா?




போனவாரம் நமக்கான ஒரு கடையில் 'வைகை'ன்னு போட்டுருந்த நொறுக்ஸ் பாக்கெட்டுகள் இருந்துச்சு. என்னடா நமக்குத் தகுந்தமாதிரி 'மதுரை'யே வந்துருக்கு! அரிசி முறுக்குன்னு தமிழ், மற்றும் மலையாளம், தெலுங்கு, கன்னடத்தில் எழுதி இருக்கு அந்தந்த மொழிக்கேற்றப் பெயர்களில்!
தென்னிந்திய மார்கெட்டைப் பிடிக்கும் உத்தி. நல்லது. ஆனா இதை மும்பாய்லே இருந்து ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனி அவுங்க பேரையும் சேர்த்து அச்சடிச்சு அனுப்பறாங்க. விலையும் நியாயமானதா இருக்கு இப்போதைக்கு. ருசி?



மாதிரிக்கு ரெண்டு பாக்கெட் வாங்கிவந்தேன். நம்ம ஊர் ருசிதான். அப்பாடா.....
ஹல்திராம் சமாச்சாரம் மாதிரி எல்லாத்துலேயும் ஆம்ச்சூர், சிட்ரிக் ஆஸிட் போட்டுத் தொலைக்காம இருக்கு.



சரி, தக்காளிக்கு வர்றேன்........ கடையில் ஒரு பக்கம் குவிச்சு வச்சுருக்காங்க. என்ன ஏதுன்னு தெரியாத நிலையில் மக்கள் தயங்குவதைத் தெரிஞ்சுக்கிட்டு ஒரு தட்டுநிறைய இதைத் துண்டு போட்டு வச்சு டூத் பிக்குகளும் அடுக்கி 'சாம்பிள் டேஸ்ட்' பார்க்க வச்சிருக்கு. ஒரு பயத்தோடும் தயக்கத்தோடும் தின்னு பார்த்தா.... இனிப்பாத்தான் இருக்கு. நுங்குபோல வாயிலே வழுக்கிப்போகும் தன்மை. தோல் பக்கம் மட்டும் கொஞ்சம் கட்டியா இருக்கு. நுங்குன்னா நம்ம பக்கம் சில நுங்கு கொஞ்சம் முத்திப்போய்க் கல்நுங்கா இருக்கும், கடிச்சுத் திங்கறதுபோல. எங்க வீட்டுலே எல்லாருக்கும் இளசா அப்படியே மெலிசா வழுக்கி வாயில் நிக்காமத் தொண்டையில் சட்'னு இறங்கிரும் பாருங்க, அதுதான் பிடிக்கும். எனக்கோ..... நறுக்குன்னு கடிக்கணும். கொஞ்சம் முத்துனதை நம்ம பக்கம் தள்ளி விட்டுருவாங்க. அசரமாட்டேன். அப்ப இருந்தே இடும்பிதான்:-) (விளையும் பயிர் முளையிலே தெரியுமாமே)



இதுக்குப்பேர் பெர்ஸிம்மோம்(Persimmom)ன்னு இங்கே கடைகளில் எழுதி வச்சுருக்காங்க. ஆனால் விக்கியண்ணன் பெர்ஸிம்மோன்னு(Persimmon) சொல்றார். மோமோ, மாமோ. மோனோ, இல்லை மானோ எதா இருந்தால் என்ன? திங்க நல்லா இருக்கு. சப்போட்டாப்பழம் விதை மாதிரி ஒன்னு சில பழங்களில் இருக்கு. லிமிட்டட் ஸ்டாக்:-)





அசப்புலே தக்காளி போல இருக்கும் ஆரஞ்சுச் சிகப்பு இதுன்னா, இன்னொண்ணு நம்ம லோக்கல் சமாச்சாரம். ஃபெய்ஜோவாஸ். (Feijoas). பச்சைக் கொய்யாக்காய் மாதிரி இருக்கேன்னு பார்த்தா...லேசா கொய்யாவாசனை வருது. அடங்கொய்யால:-))))

பிரேஸில் நாட்டுலே இருந்து மத்த இடங்களுக்குப் பரவி இருக்கு. அந்த நாட்டைச் சேர்ந்த ஒரு பிரபல தாவர இயல் நிபுணரைக்( João da Silva Feijó)
கௌரவிக்கும் விதத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த இன்னொரு தாவர இயல் நிபுணர் இந்தப் பழத்துக்கு Feijoas ன்னு பெயர் சூட்டிட்டார்.) மத்தவங்களை மனம்திறந்து பாராட்டவும் பெரிய மனசு வேணும் இல்லே?


தோழி வீட்டுலே மரம் இருப்பது யாருக்காக?:-)


பழுத்துச்சா இல்லே, பச்சைக்காயான்னு சொல்லமுடியாம 'எவர்க்ரீன்' கலர்தான் இதுக்கு. ரெண்டா நறுக்கினா உள்ளே மங்கிய வெளுப்பு நிறத்தில் ஜெல்லி போலத் தெரியுது. அப்படியே ஒரு ஸ்பூனால் வழிச்சு வாயிலே போட்டுக்கலாம். கொய்யாப்பழ வாசனையோடு இனிக்குது. தோல்பகுதிக்குக் கிட்டே லேசான துவர்ப்பும் புளிப்பும் சேர்ந்த ருசி.(அதானே தோலோடு முழுங்கணுமே எனக்கு) கொஞ்சம் 'க்ரிட்டியா' இருக்கு நாக்குக்கு.



இப்பெல்லாம் உலகம் ரொம்பவே சுருங்கிப்போச்சு. இந்தியாவிலும் எல்லாமே இறக்குமதி ஆகுதுல்லையா? கிடைச்சா..... ஒன்னு 'வாங்கி'த் தின்னு பாருங்க.
இதோட மரங்கள் இங்கே நியூஸியில் நல்லாவே வளருது, நம்ம வீட்டைத்தவிர. நானும் அஞ்சு வருசமா ஒரு செடியைத் தொட்டியில் வச்சு வளர்த்துக்கிட்டு இருக்கேன். போற போக்கைப் பார்த்தான் நம்மது 'போன்ஸாய்' ஆகிரும்போல!


ஆமாம்..... தமிழ்ச் சினிமாவுலே மட்டும்தான் கதாநாயகியரின் தொப்புள்லே ஆம்லெட்,பம்பரம், இடுப்புச் சுளுக்கிருச்சுன்னு சொல்லி எண்ணெய் ஊத்தி உருவறதுன்னு சகலவிதங்களுக்கும் சீன் வச்சுரும் இயக்குனர்கள் இந்த தொப்புளுக்கு என்ன சொல்வாங்களோ? இது புதரக இறக்குமதி. தொப்புள் கொடிஉறவு என்பது இதுதானோ என்னவோ? :-))))


கலிஃபோர்னியா நேவல் ஆரஞ்சு.





தொப்புளுக்கு ஒரு குளோஸ் அப்! (உண்மையைச் சொல்லுங்க, கவர்ச்சியாவா இருக்கு?)



நல்லாச் சாப்புடுங்க. நம்ம வகுப்பில் இன்னிக்கு பழமோ பழம்தான்.
பழம் தின்னுக் கொட்டைபோட்டவங்கன்னு பெருமைப்பட்டுக்கலாம் தானே?

இல்லையா பின்னே?


Tuesday, May 27, 2008

மனசில் ஒரு முள்(-:

'வாயை மூடிக்கிட்டு இருக்க உனக்கு உரிமை இருக்கு. எது நடந்தாலும், அதாவது குற்றங்கள் எதாவது நடந்து அதைப் பற்றி எனக்குத் தெரிஞ்சிருந்தாலும் காவல்துறைக்கு அதைப் பற்றித் தகவல் தெரிவிக்காம இருக்க உனக்கு உரிமை இருக்கு'.

என்னடா கதை இது?

அதுக்குத்தான் குற்றங்கள் முக்கியமா கொலை நடந்துபோச்சுன்னா, 'தகவல் தெரிந்தவர்கள் யாராவது முன்வந்து விவரம் சொல்லுங்கோ'ன்னு காவல்துறை
அறிவிப்பு என்ற பெயரில் 'கெஞ்சுதோ'?
right to silence law ன்னு ஒன்னு இருப்பது இப்பத்தான் எனக்குத் தெரியவந்துச்சு.

எதுக்கு இப்படி ஒரு சட்டம் ன்னு கொஞ்சம் 'தேடி'ப் பார்த்ததில்
கிடைச்ச சிலது ஆச்சரியமா இருக்கு. அமெரிக்காவில் காவல்துறை Miranda warning
'மிராண்டா வார்னிங்'னு எச்சரிக்கை தருவாங்களாம். குற்றவாளின்னு சந்தேகப்படும் நபருக்கு அவருடைய உரிமைகளை நினைவு படுத்தும் எச்சரிக்கையாம். விருப்பம் இல்லேன்னா வாயை மூடிக்கலாம்.
எர்னெஸ்ட்டோ மிராண்டாவைப் பத்தி வலையில் கிடைச்ச பகுதி பெரிய கதையாத்தான் இருக்கு. சம்பவம் சமீபத்தில் நடந்ததுதான் 1963 லே.


தமிழ்ச் சினிமா மூலம் மட்டுமே காவல்துறையைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டு இருக்கும் என்னைப்போன்ற ஆட்களுக்கு இந்த மிரட்டும் வார்னிங்தான் தெரியும். முட்டிக்கு முட்டித் தட்டி, நகக்கண்ணுலே ஊசி ஏத்தி, லாடம் கட்டின்னு என்னென்னவோ 'சிகிச்சைகள்' இருக்குல்லே?

அதுக்குத்தான் ஏர்போர்ட்லே இமிகிரேஷன் & கஸ்டம்ஸ் பகுதியில் சந்தேகத்துக்குரிய பயணிகள் கிட்டே 'இப்ப நீங்க எது சொல்றீங்களோ, அதை உங்களுக்கு எதிராப் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கு'ன்னு எச்சரிக்கை விடறாங்களோ?

இதையும் இங்கே நம்ம தொலைக்காட்சியில் காமிக்கும் 'பார்டர் செக்யூரிட்டி' என்ற தொடரில் கவனிச்சதுதான்.

இப்ப எதுக்கு இப்படி மன உளைச்சல் எனக்கு?

மூணுமாசக் குழந்தைங்க , ரெட்டைப்பிள்ளைங்க ஆஸ்பத்திரியிலே அட்மிட் ஆகி இறந்து போயிட்டாங்க. அட்மிட் ஆனப்பப் பரிசோதிச்சதில் ரெண்டு குழந்தைகளுக்கும் தலையில் பலத்த அடி மண்டை ஓடு பல இடங்களில் விரிசல் விட்டுருக்கு.. கால் எலும்பு உடைஞ்சு போயிருந்துச்சு.

குழந்தையோட அம்மா அப்பாவைப் பத்தி ரொம்பச் சொல்ல முடியாது. அவுங்க சொந்த வாழ்க்கை இல்லையா?
காவல்துறை இந்த விஷயத்தைக் கையில் எடுத்ததில் இந்தக் குழந்தைகளோட அப்பாவைக் கைது செஞ்சு காவலில் வச்சாங்க.
அப்புறம் நிறைய குடும்ப அங்கத்தினர்களை விசாரிச்சாங்க. ஆளாளுக்கு சில விஷயங்களைச் சொன்னாலும் 'உண்மை'யை யாரும் சொல்லலை. குடும்பத்துக்குள்ளே மவுனச்சுவர்.


இந்தக் குழந்தைகளுக்கு முன்னாலே பிறந்த 'ஒரு வயசுக் குழந்தையான அண்ணன், தம்பிகளைத் தள்ளி விட்டுட்டான்'னுகூடச் சொன்னாங்க.
ரெண்டு வருசம் ஆகிப்போச்சு. இதுக்கிடையில் குழந்தையின் அம்மா, அந்த அப்பாவுடன் உறவை முறிச்சுக்கிட்டாங்க. அந்த ஒரு வயசுக்குழந்தையை அப்போ அரசாங்கம் ( CYFS சில்ரன் & யூத் & ஃபேமிலி செர்வீஸ்) வேற இடத்தில் வச்சு வளர்க்குது. அந்தப்புள்ளைக்கு இப்ப 3 வயசு.


அம்மாவுக்கு இந்த மூணு பிள்ளைங்க இல்லாம இன்னும் 3 பிள்ளைங்க, வேற பார்ட்னர்ஸ்க்குப் பிறந்தவங்க 13,11, 8 வயசுகளில் இருக்காங்க. (விடுங்க இது ரொம்பப் பெரிய கதை)
போனவாரக் கடைசியில் தீர்ப்பு வந்துச்சு. இந்த அப்பாவைக் குற்றம் செய்யாதவர்ன்னு ஜூரிகள் சொல்லிட்டதாலே விடுதலை ஆகிட்டார்.


நல்லது . இவர் குற்றம் செய்யலைன்னா அப்ப யார் குற்றவாளி?

இப்பத்தான் காவல்துறை சொல்லிருச்சு.' இந்தக் கேஸை மூடிட்டோம். இனிமேல் இதைப்பற்றிய விவரம் இல்லை. செய்யறதைச் செஞ்சாச்சு.' சொன்னவர் இந்த விசயத்தைக் காவல்துறை சார்பில் விசாரித்தக் குழுவின் தலைவர். 'என்னைப்பொறுத்தவரை இனிமேல் இந்த விஷயத்தில் செய்வதற்கு ஒன்றுமே இல்லை'. தேசீயத்தொலைக்காட்சியில் இப்படி அறிவித்தார். 'எல்லாம் முடிந்தது'


ஹா.....அப்படியா?


என்னைப்போன்றப் பொதுமக்களுக்குப் பயங்கரக் கோபம். 'சரிப்பா. அப்பன் குற்றவாளி இல்லை.அதுவரை சரி. உண்மையான குற்றவாளியாருன்னு போலீஸ் கண்டுபிடிக்கணுமா இல்லையா?'
கேஸ் குளோஸ்டுன்னா என்னா அர்த்தம்? மூணுமாசக்குழந்தைங்க தற்கொலையா செஞ்சுக்கிச்சு? ரெட்டைக் கொலை செஞ்ச குற்றவாளி சுதந்திரமா நம்மிடையில் உலாத்தலாமா?


எங்க பிரதம மந்திரி (ஹெலன் க்ளார்க் அம்மா)யும் சொன்னாங்க, இந்தக் கேஸை மறுபடித் திறக்கணும். உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிச்சே ஆகணும். ரெண்டு பிள்ளைங்களுக்கும் நியாயம் கிடைக்கணும்.

ஒப்பினியன் போல் நடந்துச்சு.

பேசாமல் இருக்கும் உரிமையை மறுபரிசீலனை செய்யணுமா?
ஆமாம்னு மெஜாரிட்டி சொல்லுது.

பிரதமர் இந்தக் கேஸை மறுபடி நடத்தணுமுன்னு சொல்லலாமா?
63 சதவீதம் 'எஸ்'ன்னு சொல்லுது.
இறந்த குழந்தைகளின் அம்மாவோட வக்கீல், பிரதமர் (வாயைப்)பொத்திக்கிட்டு இருக்கணுமுன்னு அறிக்கை விடுறாங்க.

இன்னிக்கு உதவிப் போலீஸ் கமிஷனர் டிவி நேர்காணலில் வந்து,
இங்கே காவல்துறை சுதந்திரமா செயல்படும் வகையில் அமைஞ்சிருக்கு. யாரும் முக்கியமா அரசியல்வாதிகளின் தலையீடு கூடாதுன்னு சொல்றார்.
என்னதான் நடக்குது?


பிஞ்சுகளுக்கு நியாயம் கிடைக்குமா?

மேல்விவரம் வேணுமுன்னா நிறைய இங்கே கொட்டிக்கிடக்கு.


நம்ம விக்கியண்ணன் இப்படிச் சொல்றார்.


அம்மாவைப் பற்றிய விவரம் இங்கே

Sunday, May 25, 2008

நம்மாத்து க்ரானியும் கடையில் வாங்குனக் கேரட்டும்.

ஹாங்காங் ஹோட்டலில் என் பல் தேய்க்கும் பிரஷை மறந்து வச்சுட்டு வந்துட்டேன். போதாக்குறைக்கு அங்கே வாங்குன ஒரு ஸ்வெட்டரையும் பெரிய பெட்டிக்குள்ளே வச்சுட்டு, ப்ளைட் முழுக்க 'பாட்டு'க் கேக்கவேண்டியதாப் போச்சு. 'எத்தனை முறை சொன்னேன், அதை ஹேண்ட் லக்கேஜ்லே வச்சுக்கோன்னு.......'



'பெட்டியை அடுக்குனது யாரு? இவர்தானே? அப்பக் கவனிச்சிருக்கக்கூடாதா?' மனசுக்குள்ளே பொறுமினேன்.



நான் கொஞ்சம் சாது. அவ்வளவா 'வாயாட மாட்டேன்'.



மெய்யாலுமா?


ஓஓஓஓ 'அப்ப' ன்னு சொல்ல விட்டுப் போச்சா? :-)



இதுக்குப் பரிகாரமாத்தான் இந்த 27 வருசத்துலே கண்ணும் கருத்துமா வளர்த்து விட்டுருக்கேன்.




காலையில் சிட்னி ஏர்ப்போர்ட்லே இறங்குனதும் இன்னும் 3 மணி நேரம் போகணும் அடுத்த ஃப்ளைட்க்கு. 'பாட்டு' தொடர்கின்றது. பல்லுவேற தேக்காமல் எப்படியோ இருக்கு. பத்துமணிக்கு குவாண்டாஸ் 'வண்டி' புறப்பட்டாச்சு.



'இதைக் கடிச்சுத் தின்னாலே போதும். பல் விளக்குனமாதிரிதான்'ன்னு சிரிச்சுக்கிட்டே என் கையில் ஒரு பச்சை நிற ஆப்பிளைத் திணிச்சிட்டுப் போறாங்க அந்த ஏர்ஹோஸ்ட்டஸ்.



அடப்பாவிகளா.....ஒரு டூத் ப்ரஷ் கேட்டா இப்படியா? இப்படியும் ஒரு ஆப்பிள் இருக்கா? மொதல்மொதலாப் பார்க்கிறேன். ஒரு வேளை காயோ என்னவோ?



க்ரானி ஸ்மித்ன்னு பெயராம். ஆஸ்தராலியன் கண்டுபிடிப்பு. . பறக்கறது க்வாண்டாஸில். அவுங்க ஊரில் முதல்முதலா 1868 லே 'மரியா ஆன் ஸ்மித்' என்ற பெண்மணி ஓட்டுச்செடி மூலம் விளைவிச்சதாம் இது. அதான் அந்தம்மா பெயரையே வச்சுட்டாங்க.



புளிப்பான புளிப்பு. மாங்காய் ஊறுகா மாதிரி செஞ்சுக்கலாமா?
அய்ய............. நல்லாவே இருக்காது. மாங்காய் ஏகப்பட்டது கிடைக்கும்போது விஷப்பரிட்சை ஏன்? ஒரு ஆறு வருசம் மாங்காயோ மாங்காய்.



நியூஸிக்கு வந்த பிறகு.............




கடைகளில் கொட்டிவச்சுருக்கும் ஆப்பிள்களில் இத்தனை வகையா? வாயைப் பிளந்தேன்............



அப்புறம் 'பிக் யுவர் ஓன்' விளம்பரம் பார்த்து ஆப்பிள் பறிக்கப்போனோம். கிலோ 50 செண்ட். ஆர்வக்கோளாறில் இந்த மரம், அந்த மரமுன்னு பாய்ஞ்சு
20 கிலோ ஆப்பிளை வாங்கிவந்து ஐயா தின்னு அம்மா தின்னு''ன்னுச் சீப்பட்டுப் போச்சு. அப்பவும் பச்சை ஆப்பிளையெல்லாம் பறிக்கலை:-) ஆப்பிள் எல்லாம் செக்கச் செவேலுன்னு இருக்கணுமே. ஆப்பிள் மரத்தை வாழ்க்கையில் மொதமொதப் பார்த்தா.........எதைப் பறிப்பேன்? எதை விடுவேன்?



பச்சையை எதுக்கு வாங்கறாங்கன்னு இருக்கும். ஆப்பிள் பை'ன்னு ஒரு தீனி செய்யத்தானாம். மகள் சின்னவளா இருக்கும்போது அதையும் செஞ்சு பார்த்தேன் சிலமுறை. நமக்கு அவ்வளவா அப்பீல் ஆகலை.



இந்த வீட்டைக் கட்டறதுக்குக்காக, பழைய வீட்டையும் இடிச்சு, இங்கே இருந்த தோட்டத்தையும் அழிச்சப்போ மனசுக்கு லேசா ஒரு வலி. 11 ஆப்பிள் மரங்கள். வகைக்கு ஒண்ணா இருந்துச்சு.

எல்லாம் போச்சுன்னு இருந்தப்ப.....வேலிக்குப் பக்கத்தில் ஒரு மரம் எப்படியோத் தப்பிப் பொழைச்சுக் கிடக்கு. க்ரீன் ஆப்பிள். க்ரானி ஸ்மித். 'ஆப்பிள் பை' செஞ்சா?
தின்ன ஆள் வேணாமா?


நம்ம மரத்து ஆப்பிள் கொஞ்சம் புள்ளி விழுந்துருக்கும். பூச்சி மருந்தெல்லாம் அடிப்பதில்லை. ஆர்கானிக் வகையாக்கும். ஆமா....:-)))

ரெண்டு மாசமுன்னே ஒரு பூஜைக்காக ராமாயண மண்டலிக்குப் போனப்ப, அங்கே புதுவிதமான ஒரு ஊறுகாய் (அப்படின்னு வச்சுக்கலாம்) இருந்தது. டேஸ்ட் அட்டகாசம். செஞ்சது யாருன்னு தெரியலையே........ அங்கே விசாரிச்சதில் யாருக்கும் செய்முறை தெரியலை. உத்தேசமா ஒரு ரெஸிபி கிடைச்சது. கறிப்பவுடர் போட்டுருக்காங்க(ளாம்)



நம்ம கைவண்ணத்தைக் காமிச்சதில் ஏறக்கொறைய, இன்னும் சொன்னா அருமையான ருசியில் அமைஞ்சுபோச்சு.


சரி. வாங்க. அடுக்களைக்கு. செஞ்சே பார்த்துறலாம். நம்ம மரத்துலே இருக்கும் காய்களையும் ஒரு வழி செஞ்சுறவேணாமா? :-))))

தேவையான பொருட்கள்.


பச்சை ஆப்பிள் 1 மீடியம் சைஸ்.


கேரட் 1 சின்னதா இருந்தா 2


மிளகாய்ப்பொடி முக்கால் தேக்கரண்டி


கறிப்பவுடர் அரைத்தேக்கரண்டி


வெந்தியம் அரைத் தேக்கரண்டி.


உப்பு முக்கால் தேக்கரண்டி


எண்ணெய் 1 தேக்கரண்டி


வினிகர் ஒரு அம்பது மில்லி.


ஆப்பிளையும், கேரட்டையும் நல்லாக் கழுவிக்குங்க. இப்ப அதை நறுக்கணும். எப்படி? ஜூலியன் கட்டிங். 5 செ.மீ நீளத்துக்கு தீக்குச்சி மாதிரி நறுக்கிக்கணும். ஆப்பிளின் நடுப்பாகத்துலே இருக்கும் கொட்டைகளையும், அதைச் சுற்றி இருக்கும் நார்ப்பகுதிகளையும் எடுத்துக் குப்பையில் போட்டுருங்க. தீக்குச்சி மாதிரி அவ்வளோ மெலிசா வேணாம். கொஞ்சம் திக்கா இருக்கணும். இதோ படத்துலே காமிச்ச மாதிரி.

இதுக்குத்தான் கொஞ்ச நேரம் அதிகம் எடுக்கும். நறுக்குன துண்டங்களை ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு வினிகரையும் சேர்த்துக் கிளறி ஊறவிடுங்க. உலோகப்பாத்திரம் வேணாம்.



ஒரு வாணலியை அடுப்பில் வச்சுச் சூடாக்கி வெந்தியத்தைப் போட்டு கடும் ப்ரவுண் நிறத்துக்கு வறுத்து எடுத்துக்குங்க. ஆறுனதும் மிக்ஸியில் போட்டுப் பொடிச்சுக்கணும். நல்லா உத்துப்பாருங்க. அடியிலே கொஞ்சூண்டு ஒட்டிக்கிட்டு இருக்கா? அதுதான்....



அதே வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து லேசாச் சூடானதும் மிளகாய்ப்பொடி & உப்பு சேர்த்துட்டு உடனே அடுப்பை அணைச்சுருங்க. இந்த சூட்டிலேயே அது பக்குவமாகிரும். அதுலே கறிப்பவுடர் சேர்த்துக் கலக்கிட்டு,
வினிகரில் ஊறும் காய்களை மட்டும் எடுத்து( அந்த வினிகர் இனி வேணாம்)
வாணலியில் சேர்த்துக் கலக்கிட்டு அந்த பொடிச்ச வெந்தியத்தைச் சேர்த்துக்கிளறி அதே கண்ணாடிப் பாத்திரத்தில் எடுத்து வச்சுக்கணும்.



நல்லா 'வெடுக் வெடுக்'குன்னு கடிக்க வரும். லேசான புளிப்புடன் உடனடி ஊறுகாய் தயார்.



இதை இன்னொரு நாள் வேற மாதிரி செஞ்சு பார்த்தேன். மிளகாய்ப்பொடிக்குப் பதிலா ஊறுகாய் மசாலா ஒரு தேக்கரண்டி, ஒரு சிட்டிகை கறிப் பவுடர். மத்ததெல்லாம் மேலே சொன்ன முறைதான்.



வெந்தியம் அரைத் தேக்கரண்டிக்காக வறுத்துப்பொடிக்கணுமா? வேற வேலையே இல்லையான்னு சலிச்சுக்குறவங்களுக்கு: ஒரு ரெண்டு மூணு தேக்கரண்டி வெந்தியத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செஞ்சு ஒரு சின்னக் கண்டெய்னரில் போட்டு ஃப்ரிட்ஜ்லே வச்சுக்கலாம். கெடவே கெடாது.


தேவைப்படும்போது அரைத்தேக்கரண்டி அதுலே இருந்து எடுத்துப் போட்டுக்கலாம்.



செஞ்ச அன்னிக்கே தின்னுருங்க. பாக்கி ஆச்சுன்னா ஃப்ரிட்ஜ்லே வச்சு மறுநாளைக்கு. அதுக்கப்புறம் வச்சாத் தாங்காதுன்னு ஒரு எண்ணம்.



டிஸ்கி: 'தலைப்பு' விவகாரமாக்க வேணாம். அந்த நிமிஷம் மனசில் இப்படித்தான் தோணுச்சு:-)

Friday, May 23, 2008

தங்கம் தங்கம் என்று என்னை ஏன்?

என்னைத் தெரியுதுங்களா? நாந்தாங்க தங்கம். இன்னிக்கு உங்களோடு கொஞ்சம் பேசலாமுன்னு இங்கே எட்டிப் பார்த்தேன். பூமியில் புதைஞ்சுருக்கும் எல்லா உலோகம் போலவும்தாங்க நான். ஆனா என்னோட பளபளப்பு..... இதைவிட என்னோட கருக்காத தன்மைதான் மக்களை ஆட்டிவைக்குதோன்னு இருக்கு. அதிலும் அந்த மஞ்சள் நிறம் கொஞ்சம் தூக்கலா இருக்கேனா....ஜனங்க என்னை ரொம்ப மங்களகரமானதுன்னு நினைச்சுக்கிட்டு இந்தப் பாடு படுத்தறாங்க.



தங்கச்சுரங்கங்களில் ஏராளமாக் கிடைச்சுக்கிட்டு இருந்த காலத்தில்கூட இம்முட்டு நகைநட்டு நம்மாளுங்க செஞ்சு போட்டுக்கலை. இப்ப என்ன விலை விக்குது பாருங்க!!!! ஆனாலும் நகைக்கடைகளில் கூட்டம் குறைஞ்சதோ?


ஒரு ஆறாயிரம் வருசமாத்தான் நான் நகைநட்டா இருக்கேனாம். எப்ப எந்த மகா(பாவி)ன் என்னை முதல்முதலில் தோண்டுனானோ..........நான் பாட்டுக்கு நிம்மதியாக் கிடந்துருப்பேன்.....ஹூம்........



என்னாலே எவ்வளவு மகிழ்ச்சி மக்களுக்குத் தரமுடியுமோ அதே அளவு துக்கத்தையும் தரமுடியும்! கொலை கொள்ளையெல்லாம் பலசமயம் எனக்காகவே, என்னைக் கைப்பற்றவே நடக்குது. சிலசமயம் வெறும் காப்பவுனுக்குக்கூட புள்ளைகளைக் கொன்னு போட்டுடறானுங்கன்னு செய்தி வரும்போது அப்படியேத் துடிச்சுப்போயிடறேன்..... கல்யாணக் கனவு நிறைவேறாமக் கண்ணீர் வடிக்கும் பெண்கள் நிலை......... சொல்லவே வேணாம்(-:


பவுனு பவுனுன்னு சொல்றமே....... அப்படி வாங்கும் ஒரு பவுனில் எவ்வளோ சுத்தத் தங்கம் இருக்கு? அதான் 22 கேரட்ன்னு சொல்லி இருக்குல்லே. 22 பங்கு தங்கம். அப்ப அதுலே இருக்கும் மீதி ரெண்டு கேரட்?


நாம பொதுவா நினைப்பது போல அது செம்பு மட்டும் இல்லையாம். அதுலே ஒரு பங்கு வெள்ளியும், நாலு பங்கு செம்பும் சேர்த்து 'அலாய்'ன்னு கலக்கறாங்க.


அதான் கலப்படமுன்னு தெரிஞ்சிருச்சுல்லே..... சரியான அளவுதான் கலக்குறாங்களான்னா..... அது அவுங்களுக்கு மட்டுமே தெரிஞ்ச 'ரகசியம்'
இந்தியாவிலே அதிலும் குறிப்பாச் சென்னையில் வாங்கும் தங்க நகைகளில் 22 கேரட்ன்னு சொல்லி விக்கறாங்களே தவிர, அதுலே 21, 19 கேரட் இருந்தாவே ஜாஸ்தியாம். சிங்கப்பூர், துபாய் தங்க நகைகளில் 22ன்னா 22 இருக்காம். அதான் அதோட கலர் மங்காம பளிச்சுன்னு இருக்குன்னு மக்களோட எண்ணம்.



இந்த அழகுலே, பேஷன் மாறுதுன்னு நகைகளைத் திரும்பத்திரும்ப மாத்தி எடுத்தோமுன்னா.....கழுதை தேய்ஞ்சுக் கட்டெறும்பு ஆன கதைதான். ஒவ்வொருமுறையும் பழைய நகைகளை மாத்தும்போது சேதாரமுன்னு சொல்லி, துண்டுக்கடுதாசியில் நிறைய என்னென்னவோ எழுதிக் கூட்டிக் கழிச்சு 'இவ்வளவு வரும்மா இதுக்கு. நீங்க மேலே இன்ன தொகையைக் கட்டிட்டு இந்தப் புது நகையை எடுத்துக்குங்க'ன்னு சொல்றாங்க.


பணமாக் கொடுப்பாங்களா? ஊஹூம்..... அதுக்கு மேனேஜரைப் பார்க்கணும். அங்கே போனா இன்னும் துண்டுக் கடுதாசி. கடைசியில் அவுங்க சொல்லும் தொகைக்கு வெறுத்துப்போய், ச்சீ.... இதுக்கு பேசாம மொதல்லே சொன்னக் காசை நாமே(கொஞ்சூண்டு பேரம் பேசித்தான்) கொடுத்துட்டுப் புது நகை வாங்கிக்கலாமுன்னு தோணிப்போகும். இருந்துட்டுப்போகட்டும் இன்னொரு கம்மலு.... கடைக்காரர்களுக்கு நம்ம காசை வாங்கும்போது இருக்கும் ஜோர்
நமக்குத் திருப்பிக் காசாக் கொடுக்கும்போது இருக்கவே இருக்காது.



இந்தக் கஷ்டம் வேணாமுன்னுதான் புதுசா KDM வச்சுப் பத்த வச்ச நகைகள் கவர்ச்சியா இருக்கு. இதை வித்தால் சேதாரமுன்னு 'அவ்வளவா'க் காசு கொறையாது. இது எப்படி? (அப்படின்னு நாம் நினைக்கும்படிப் பண்ணுவாங்க KDM soldering செஞ்சதை வாங்கும்போது)


பொதுவா 22 கேரட் தங்கம் 1000 C சூட்டுலே உருகும். நகையில் பத்தவைக்கும்போது அதே 22 கேரட் தங்கத்தூளில் பத்தவைச்சா பத்தவைக்கும் இடத்தில் உள்ள நகையும் சேர்த்து உருகி அந்த இடத்தோட டிசைன் அழிஞ்சுருமே.. இதைத் தவிர்க்கத்தான் cadmium பயன்படுத்தறாங்க.


பத்தவைக்கும் விசயத்துக்கும் 22 கிராம் சுத்தத் தங்கத்துடன் 2 கிராம் கேட்மியம் சேர்த்து இளக்கி வச்சுக்குவாங்களாம். இதுவும் 22 கேரட் ஆகிருது. இதோட உருகும் சூடு 800 C. நகையில் பத்தவைக்கும்போது இது சட்னு உருகிப் பத்திக்குமாம். நகை டிஸைனுக்கு கெடுதி வராது.


திரும்ப இந்த நகைகளை அழிச்சுச் செய்யறதுக்குன்னு உருக்குனா சேதாரம் இல்லாம 22 கேரட் தங்கமே இருப்பதால் அன்னிக்கு விலையில் 22 கேரட் தங்கம் இருக்கும் விலை மதிப்பு இதுக்கு வந்துருமாம். இப்படியெல்லாம் சொல்லி 'கஷ்டமர்'களைக் கவர்கிறார்கள்.


பலசமயங்களில் பார்த்தீங்கன்னா...நல்ல கடைகளில் வாங்குன நகைகளில்கூடப் பத்தவச்ச இடம் பல்லை இளிச்சுக்கிட்டு லேசா வேற நிறத்தில் மங்கலாத் தெரியும். ஆனா மேலே சொன்ன முறைகளில் பத்தவச்ச நகைகளில் எல்லா நிறமும் ஒன்னுபோல (மங்கலாவா? ச்சீச்சீ...) இருக்கு(மாம்)


சந்தேகம் இருந்தால் 'Red heat solder test' ன்னு ஒன்னு செஞ்சு பார்க்கலாம். இது எப்படி?

பத்தவச்ச பகுதியை நல்லாப் பழுக்கச் சிவந்த நிறம் வரும்வரைச் சூடாக்கிக் குளிரவைக்கணும். ஆறுனதும் நீர்த்த கந்தக அமிலக் கரைசலில் போட்டுக் கொதிக்க வைக்கணும். இவ்வளவு செஞ்சதுக்கப்புறமும் பத்தவச்ச இடம் நிற மாறுதல் இல்லாம 22 கேரட் தங்க நிறத்துலேயே இருக்கணும். பெரிய கடைகளில் இதைச் செஞ்சு காமிப்பாங்க போல. அதுக்காக ஒரு கிராம் தங்கம் வாங்கி இதைச் செஞ்சுகாமின்னு கேக்கறது டூ மச்:-)



எனக்கென்னன்னா..... எதுக்கு இவ்வளோ சிரமம்? பேசாம 24 கேரட் சுத்தத் தங்கத்துலேயே நகைகள் செஞ்சுக்கிட்டா என்ன? ஆங்...... ரொம்ப மிருதுவா இருக்குமாம் சுத்தத் தங்கம். டிசைன் செஞ்சு எடுக்கத் தாங்காதாம். ஆனா தாய்லாந்து, சீனா, ஹாங்காங் எல்லாம் 24 கேரட் தங்கநகைகள்தான் செய்யராங்க. போட்டுக்கவும் போட்டுக்கராங்க. அப்படி ஒன்னும் ஆனதாத் தெரியலையே.....


இன்னொண்ணு சொல்லிக்கறேன். இந்த எடை விசயம்? பூனா, பாம்பாய்லே நகை எதாவது வாங்குனோமுன்னா.... நாம் தேர்ந்தெடுக்கும் நகையைக் கடைக்காரப்பையன் கொண்டுபோய் ஒரு இடத்துலே எடை போட்டு அவுங்க கொடுக்கும் ரசீதைக் கொண்டுவருவான். இந்த எடைபோடும் இடம் எல்லா நகைக்கடைக்காரர்களுக்கும் பொது. ஏமாத்தும் வேலையெல்லாம் இருக்காது.
அவுங்க எழுதி அனுப்பும் எடையை நம்பி வாங்கலாம். 'சத்திய பீடம்'ன்னு இதுக்குப் பெயர். இப்படி ஒரு அமைப்பு நம்ம பக்கங்களில் இல்லையே...ஏன்?


என்னதான் விலை உச்சாணிக்கொம்பில் ஏறிக்கிட்டேப் போனாலும் இந்த நகை ஆர்வம் மட்டும் நம்ம மக்களிடம் குறைவதே இல்லை. கஷ்டப்பட்டுச் சம்பாரிச்சக் காசை நகையிலே போடும்போதுக் கவனிச்சுப் பார்த்து வாங்குங்கப்பா.


சேமிப்பு என்ற வகையில் வாங்கும்போது நகையா வாங்காமல் பிஸ்கோத்து வாங்குனா விக்கும்போது சுலபம். ஆனா...... ஆண்டு அனுபவிச்சுப் பார்க்காமல் அது என்ன வாழ்க்கை? இப்பெல்லாம் ஆம்புளைங்களுக்கும் நகை ஆசை கூடிக்கிட்டு வருது.


கல்யாணங்களுக்கு இத்தனை பவுன் நகை போடணுமுன்னு மாப்பிள்ளை வீட்டு நிர்ப்பந்தங்கள் எல்லாம் மாறிப்போச்சாம். கேக்கவே மகிழ்ச்சியா இருக்கா? ஸ்டாப்.....


இப்பெல்லாம் கிலோக் கணக்குதானாம். எங்கே? கேரளாவில்.


எல்லாத்தையும் காப்பியடிக்கும் நம்மூர் மக்கள் இதை மட்டுமாவது காப்பியடிக்காமல் இருக்கணும்.


சரி. இப்பத் தேர்வுக்கான கேள்விகள்:


ஒரு ட்ராய் அவுன்ஸ் தங்கம் என்றால் எத்தனை கிராம்?
தண்ணீரைவிடத் தங்கம் எத்தனை மடங்கு அடர்த்தி கூடியது?

Wednesday, May 21, 2008

புதிய மொந்தையில் பழைய கள்ளு

வெய்யில் வந்துருச்சாம்லெ! அது வீணாப் போகலாமோ?
பரீட்சை முடிஞ்சு பெரிய லீவு விட்டதும் ஒரு திருவிழா மாதிரிதான் நம்மூட்டுலே வத்தல் வடாம் போட ஆரம்பிச்சுருவாங்க. இதுக்குன்னே ஒரு ஈவெண்ட் கோஆர்டினேட்டர் வந்துருவாங்கப்பா ஊருலே இருந்து. எல்லாம் எங்க பெரியம்மாதான்.



பசங்க காக்காமாதிரி சுத்தறோமுன்னு எங்களை வச்சே காக்கா விரட்டப் போடும் திட்டம்தான் இது.



திட்டம் பக்காவா இருக்கும். அரிசியை மாவு மில்லில் கொடுத்து அரைச்சுவாங்கறதென்ன, அன்னிக்கு ராத்திரியே அதைக் களியாக் கிளறி
வைக்கறதென்னன்னு திமிலோகப்படும் வீடு. பச்சமிளகாய் அரைச்சுக் கொடுத்துட்டுப் பெரியக்கா 'ஐயோ அம்மான்னு' அலறிக்கிட்டேத் தேங்காயெண்ணையைக் கையில் பூசிக்கிட்டு நாட்டியம் ஆடுவாங்க.
அப்பெல்லாம் இந்த மிக்ஸியா பாழா? எல்லாத்துக்கும் அம்மியும் ஆட்டுக்கல்லும்தான்.



சலவையில் இருந்துவந்த பழைய வேட்டிகளையெல்லாம் எடுத்து அண்டாவில் ஊறவச்சுருவாங்க பெரியம்மா. எங்கே கட்டியிருக்கும் தன்னுடைய வேட்டியும் பறி போயிருமோன்னு அண்ணன் பதறிக்கிட்டு, அலமாரியில் இருக்கும் அவரோட வேட்டிகளை எடுத்துக்கிட்டுப்போய் தன்னுடைய படுக்கையில் ஒளிச்சுச் சுருட்டி வச்சுருவார். அண்ணன் அப்ப ஹைஸ்கூல் மாணவர்தான். ஆனாலும் ஊர்நிலவரத்தை அனுசரிச்சு வேட்டிதான் கட்டுவார். அப்பெல்லாம் வத்தலகுண்டுலே பேண்ட்ஸ் போட்டுட்டாலும்.....................




குட்டிச்சாத்தானுக்கு வேலை கொடுப்பதுபோல எனக்கும் ஒரு வேலை வந்துரும். எலுமிச்சம்பழத்தையெல்லாம் தரையில் அமுக்கி நசுக்கி உருட்டிக்கொடுக்கணும். அப்பத்தான் அதுலே இருந்து சாறு நிறைய வருமாம்.
வாசத்திண்ணையில் கருங்கல் போட்டுருக்கும். அங்கேதான் எனக்கு ட்யூட்டி.



மறுநாள் எதோ தீவாளிக்கு எந்திரிக்கிற மாதிரி, பொழுது விடியறதுக்குள்ளே எழுந்து குளிச்சு, காபித்தண்ணியெல்லாம் போட்டுக்குடிச்சுட்டு அக்காக்கள் தயாரா இருக்கணும். எல்லாம் ஈவண்ட் கோஆர்டினேட்டர் ஆட்டுவித்தலின் படி.




வெய்யில் வருமுன் பிழிஞ்சுறணுமுன்னு பெரியம்மா பிழிஞ்சு எடுத்துருவாங்க. வேலைக்கு உதவிசெய்ய வரும் முனியம்மா(க்கா எனக்கு மட்டும்) வந்து வேட்டிகளையெல்லாம் அலசிப் பிழிஞ்சுருவாங்க. பாயெல்லாம் மொட்டைமாடிக்குப் பறக்கும். காலையில் கண்ணைத்தொறந்து பார்த்தா நான் தரையிலே கிடப்பேன். உருட்டித் தள்ளிவிட்டுருப்பாங்க போல. கேட்டா வர்ற பதிலைப் பாருங்க.....'.நீ என்னிக்கு ஒழுங்காப் பாயிலே இருந்துருக்கே.... தெனமும் படுத்தப் பத்தாவது நிமிசம் உருண்டுக்கிட்டே போயிச் சுவத்துலே முட்டிக்கிறவதானே?'




பரபரன்னு முறுக்கு அச்சுலே மாவை நிறைச்சுக் கொடுக்கறதும், அதை அக்காக்கள் வாங்கிப் பாய்மேல் விரித்திருக்கும் ஈரவேட்டிகளில் பிழியறதும் ஜரூரா நடக்கும். பெரியம்மா பயங்கரி. இதுக்காகவே ஊரில் இருந்து வரும்போது கையோடு ரெண்டு மூணு முறுக்குப் பிழியும் தேன்குழல்படிகளையும் கொண்டுவர்ற ஆள்தான்.




எல்லா மாவும் தீர்ந்து இனிமேல் படியில் அடைக்க முடியாத நிலையில் வரும்போது அதையும் அடுக்கில் ஒட்டிப்பிடிச்சுக் கிடக்கறதைச் சுரண்டிவரும்
மாவையில் கலந்துக் கையால் கிள்ளிக்கிள்ளி சின்ன உருண்டைகளா ஒரு ஓரத்தில் அங்கங்கே முறுக்குக்களுக்கு இடையில் கிடைக்குமிடத்தில் வைச்சுருவாங்க.




இனிமேத்தான் என்னோட வேலை ஆரம்பிக்கும். நான் மொதநாளே என்னோட தோழியருக்குத் தகவல் சொல்லிட்டதாலே(அதான் எலுமிச்சம்பழம் உருட்டலின்போது) அவுங்களும் ஆஜராயிருவாங்க. அன்னிக்கு மட்டும் எங்க கூட்டத்துக்குச் சுதந்திரம் ஜாஸ்தி. காவல்காரிகள்!




முனியம்மாக்கா உதவியால் ரெண்டு பழைய நாற்காலிகளும் இன்னேரம் மாடிக்குப் போயிருக்கும். நாங்க நாலைஞ்சு பெட்ஷீட், நாலைஞ்சு அரைச்செங்கல் எல்லாம் எடுத்துக்கிட்டு மாடிக்குப் போவோம். பக்காவா ஒரு டெண்ட் போட்டுக்குவோம். படுக்கைவிரிப்பு எடுத்து ஒருபக்கமா ரெண்டு மூலைகளில் செங்கலைச்சுத்தி, மொட்டைமாடிக் கைப்பிடிச்சுவரில் வச்சுக்கணும். அடுத்தப் பக்கத்தை நாற்காலியின் முதுகுப்புறத்தில் மாட்டிவிட்டுத் துணிக்குப்போடும் கட்டைக்ளிப்பாலே இணைக்கணும். ஆச்சு நம்ம கூடாரம்.



படபடக்கும் காத்துலே பெட்ஷீட் அப்படியே தூக்கும்போதுச் செங்கல்லையும் இழுத்துத் தள்ளும். இந்தப் பக்கம் விழாமத் தெருப்பக்கம் விழுந்து, அந்தச் சமயம் யாராவது அங்கே போய்க்கிட்டு இருந்தா....... கடவுள்தான் அவுங்களைக் காப்பாத்தணும். கூடவே ரெண்டு குடைகளை விரிச்சு வச்சுக்குவோம்.




இதுக்குள்ளே வெய்யில் ஏறிவர ஆரம்பிச்சு மாவு உருண்டைகள் லேசாக் காஞ்சுவரும். சரியான சமயம் இதுவே. விரல்நுனியால் அசங்காம எடுத்து வாயில் போட்டுக்கணும். பிச்சுக்குன்னு நாக்குலே ஒட்டிக் கரையும். என் தோழிகள் கூட்டத்துக்கு இது ரொம்பப் பிடிக்கும். அவுங்க வீட்டுலே இதெல்லாம் செய்ய மாட்டாங்களாம். உருண்டை தீர்ந்ததும் முறுக்குவத்தலைத் திங்க ஆரம்பிப்போம். அதுக்குள்ளெ பெரியம்மா நாலைஞ்சுதடவை வந்து மிரட்டிட்டு, திங்க வேற எதுனாச்சும் கொண்டுவந்து தருவாங்க.




நாங்க போடும் கூக்குரலில் காக்காய்கள் பயந்துக்கிட்டு அந்தப் பக்கமே வராது. சாறு எடுத்த எலுமிச்சம்பழ மூடிகளையும் தொடப்பக் குச்சி, அக்கா போடும் லேஸுக்கான நூல்கண்டுலே இருந்து களவாண்ட நூல் எல்லாம் வச்சுத் தராசு செஞ்சு கடைவச்சு விளையாடுவோம். கடைக்கான பொருள், காசு எல்லாம் .....அதான் வடாம் காயுதுல்லே அதுதான்.




பதினொருமணியானதும் வெய்யில் கூடிப்போச்சுன்னு எங்களையெல்லாம் கீழே கூப்புட்டுருவாங்க. மாடியிலெ இருந்து இறங்கி வீட்டுக்குள்ளெ வந்தால் ஒரு அஞ்சு நிமிசத்துக்குக் கண்ணே தெரியாது. இருட்டிக்கிட்டு இருக்கும்.


அடிக்கிற வெயிலுக்குச் சீக்கிரமே வடாம் காய்ஞ்சுரும்போல. வேட்டிகளை அப்படியேச் சுருட்டிக்கிட்டு வந்து அதுலே பின்னம்பக்கம் லேசாத் தண்ணி தெளிச்சு வடாமெல்லாம் உதறி எடுத்துப் பெரிய பெரிய சுளகு, தாம்பாளம் எல்லாத்திலும் பரத்தி, வீட்டு முற்றத்திலேயே காயவிடுவாங்க பெரியம்மா. நம்ம ஆட்டம் க்ளோஸ். இனி அதுலே கைவைக்க முடியாது(-:


பெரியம்மா திரும்ப ஊருக்குப்போறதுக்குள்ளே பாவக்காய், சீனியவரைக்காய் வத்தல்,மோர்மிளகாய், வெங்காய வடகம் இப்படி எல்லாம் தயாராயிரும். இப்ப இந்தக் காலத்துலே யாராவது வேலைமெனெக்கெட இதையெல்லாம் போட்டுவைக்கிறாங்களான்னு இருக்கு. போனமுறை சென்னையில் சூப்பர்மார்கெட்டில் வடாம் பாக்கெட்டுகள் வச்சு இருந்ததைப் பார்த்தேன். ஹும் ............கொடுத்துவச்ச மக்கள்.

இங்கே நியூஸி வந்தபிறகு இதுக்கெல்லாம் ஏது வழி? கொஞ்சம் கொஞ்சமா இதையெல்லாம் மறந்துபோகும் நிலையில் இருந்தப்ப ஒரு டீஹைட்ரேடர் சேலில் அரைவிலையில் இருந்ததைப் பார்த்தேன். நமக்குத்தான் எதையாவது பரிசோதிச்சுப் பார்த்தே ஆகணுமே..... வாங்கிக்கிட்டேன். கூடவே கூடுதலா அஞ்சு தட்டுகள் உள்ள ஒரு பெட்டி. அம்பதும் பத்தும் அறுபது வெள்ளி. வாங்கும்போது கவனமா இவர் பார்வையைத் தவிர்த்ததையும் சொல்லணுமோ?:-) எங்கியோ பார்த்துக்கிட்டுச் செக்கவுட் கவுண்ட்டர்லே கொண்டுவந்து வச்சுறணும்!

அடுத்து இந்த மாவு கிளறும் வேலை. யாராலே களிக்கிண்டிக்கிட்டு இருக்கமுடியுது? நாமோ புதுமைப்பெண். புதுவழி கண்டு பிடிக்கலைன்னா எப்படி? மாவு வெந்து இருக்கணும். அதுதானே முக்கியம்?
அரிசியை வேகவச்சு அதை அரைச்சாக் களி வந்துறாதா? சோறுன்றதைத்தான் கவுரவமாச் சொல்றேன். மைக்ரோவேவில் சோறு ஆக்கிக் கொஞ்சம் ஆறுனதும் அதைப் ஃபுட் ப்ராஸசர்லே போட்டு நாலுசுத்து சுத்துனதும் களி மொத்தை வந்துருச்சு. ஆஹா.....இனி நம்ம கற்பனைக் கொடியைப் பறக்க விட்டால் ஆச்சுன்னு......கொஞ்சம் உப்பு, சீரகம் ரெண்டுமூணு பச்சமிளகாயைச் சேர்த்துக்கூடவே அரைச்சேன். மொளகாய்தான் சரியாக அரைபடாமல் திப்பித் திப்பியா இருந்துச்சு.

டீஹைட்ரேட்டர் தட்டில் தேன்குழல்படியில் மாவு நிறைச்சுப் பிழிஞ்சு பார்த்தேன். மொளகாய்த் திப்பிகள் ஓட்டையில் அடைச்சுக்கிட்டுக் கஷ்டமாப் போச்சு. அதுக்கென்ன? கிள்ளிவச்சால் ஆச்சு. ஒரு கப் அரிசிதான் என்றதால்
ரெண்டு தட்டுக்குத்தான் மாவு வந்துச்சு. அடுக்கிவச்சு ஸ்விட்ச் போட்டுவிட்டேன். ஒருமணி நேரம் கழிச்சுப் பார்த்தால் லேசாக் காஞ்ச உருண்டைகள். ஹைய்யோ...... கொசுவர்த்தி ஏத்திருச்சு. கொஞ்சம் தின்னு பார்த்தேன். நாட் பேட் அட் ஆல்:-))))

மறுநாள் காய்ஞ்சு இருந்ததை வறுத்துத் தின்னா, சூப்பரா இருக்கு. இப்பத்தான் வழிமுறை தெரிஞ்சுருச்சே. இன்னும் ரெண்டு கப் அரிசியைச் சோறாக்கி எடுத்துக்கிட்டேன். சட்னி ஜாரில் மிளகாய், பெருங்காயம், உப்பு எல்லாம் சேர்த்து மைய்ய அரைச்சுக்கிட்டு அதையும் சோறோடு சேர்த்து ஃபுட் ப்ராஸசர்லே களியாக்கி முறுக்கு அச்சில் போட்டுப் பிழிஞ்சுட்டேன்.
எட்டுமணி நேரத்தில் நல்லாக் கலகலன்னு காஞ்சுபோச்சு. அடுத்தடுத்த முறைகளில் யார் பச்ச மிளகாயை அரைச்சுக்கிட்டுன்னு சோம்பல் வந்ததில்,
ஓமம் போட்டது, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், வெறும் சீரகம் இப்படி ஒவ்வொரு தட்டுக்கும் ஒரு வகைன்னு நிறைய முன்னேறியாச்சு.
படங்கள்: பொரிக்குமுன்
பொரித்த பின்:-)
வேலைமெனெக்கெட அதுக்குன்னு யார் சோறாக்கணும்? நேத்து மீந்த சோறு இருந்தால் ஆகாதா? இப்படி முன்னேற்றமோ முன்னேற்றம். இதோட சோதனையை நிறுத்தினால் நான், நானா?

கொத்தவரங்காய் கொஞ்சம் கூடுதலா வாங்கிவந்து பாதியைச் சமைச்சுட்டு மீதியை கொதிக்கும் வெந்நீரில் கொஞ்சம் உப்புச்சேர்த்து அதில் காயைப் போட்டு ஒரு கொதி வந்ததும் எடுத்து வடியவிட்டேன். ஈரம் கொஞ்சம் உலர்ந்ததும் எடு அந்த டீஹைட்ரேட்டரை......

கொத்தவரங்காய் வத்தல் ரெடி!

பாவக்காய் கிடைக்கும்போது அதை வாங்கி வட்டம்வட்டமாய் நறுக்கி கொஞ்சம் உப்புப் போட்டுப் பிசறி வைக்கணும். பத்து நிமிசத்துலே தண்ணீர்விட்டிருக்கும். அதை ஒட்டப் பிழிஞ்சுட்டு மேலே சொன்னபடிக் காயவச்சு எடுத்துக்கிட்டா..... பாவைக்காய்க் கொண்டாட்டம். எண்ணெயில் பொரிச்சு எடுத்தா கசப்பே கிடையாது.

இப்பெல்லாம் சோறு மீந்துபோச்சுன்னாக் கவலையே இல்லை:-)))))

ஜவ்வரிசி வடாம் இதுலே சரிப்படாது. தட்டிலிருக்கும் ஓட்டையில் நிக்காம வழியுது(-: அதையும் விடாம பிஸ்கெட் பேக் பண்ணும் ஷீட்டில் 'எழுதி' அவன்லே 50 டிகிரியில் வச்சு எடுக்கலாம்தான். உடம்பு வணங்கலை
என்ன ஒன்னு, பழைய அட்மாஸ்ஃபியர் வேணுமுன்னா.....காக்காயைத்தான் கண்ணுலே காணலை(-:

Tuesday, May 20, 2008

எங்கூர் நர'சிம்ஹர்'

நேத்து நம்ம கோயிலில் நரசிம்ஹர் ஜெயந்திக் கொண்டாட்டம். பிரஹலாதன் கதையைச் சொல்லிக்கிட்டு இருந்தார் ஒருத்தர். வழக்கம்போல் சொதப்பல். அதையெல்லாம் வழக்கம்போல் நாமும் கண்டுக்கலை. ஆனால் ஒரே ஒரு விசயம் அவர் சொன்னது எனக்குப் புதுசா இருந்துச்சு.



"ராமா அவதாரத்தில் ராமர் நடந்துவந்த பாதையில் ஹிரண்யனின் எலும்புக்கூடு ஒரு இடத்தில் இருந்தது. ஸ்ரீராமர் அதன்மேல் தண்ணீர் தெளித்ததும் பொன்னுருவாக ஹிரண்யன் உயிர்த்தெழுந்தான். ராமரை வணங்கிப் பின் மேலுலகம் சென்றான்."


நெசமாவா?




நம்ம கேயாரெஸ் ஆழ்வார் விளக்கம் சொல்வாருன்னு ஒரு எண்ணம்தான்.


ஆரத்திக்கு முன்பு சின்னதா ஒரு ஸ்கிட்.


ஹிரண்யன், பிரஹலாதனிடம் உன் நாராயணன் எங்கே? எங்கே? என்றுக் கேட்டுக்கொண்டு சபைக்கு வந்தான். இந்தத் தூணில் இருக்கிறானா என்று தூணை(கதவை)த் தன் கத்தியால் தட்டியதும் நரசிம்ஹம் வந்தது.



ஹிரண்யனைத் தூக்கித் தன்மடிமேல் போட்டுக்கொண்டு 'சோஃபா'வில் அமர்ந்தது. வயிற்றைக்கிழித்துக் குடலை எடுத்து மாலையாகப் போட்டுக் கொண்டது.




கோபத்துடன் உடல் சிலிர்க்க உட்கார்ந்து இருந்தவரைப் பிரஹலாதன் வணங்கித் தன் தந்தைக்கு மோட்சம் அளிக்கச் சொன்னான்.


மங்கையர் பூமாரி பொழிந்தனர்.

நரசிம்ஹம் அனைவரையும் ஆசீர்வதித்துவிட்டுச் சென்றது.
ஒரே ஒரு சின்ன விளக்கு மட்டுமே அந்த ஹாலில் இந்தக் காட்சிக்காகப் போட்டு மாலைமயங்கும் நேரத்தைக் காட்டியிருந்ததால் படங்கள் 'பளிச்' என்று வரலை.

Sunday, May 18, 2008

ப்ரொ டீ யா

அதென்ன டீ தானே? எத்தனையோ டீ குடிச்சிருக்கோம். இதைக் குடிக்கமாட்டமா?


அடக் கடவுளே..... இது ஒரு செடிங்க.


ப்ரொட்டீயா (Protea)ன்னு செல்லமாக் கூப்புட்டுக்கலாம்:-)


இதோட சொந்த நாடு ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென் பகுதியாம். இந்தச் செடிதான் இப்போ உலகில் இருக்கும் செடிகளுக்கு எல்லாம் மூத்த பாட்டி/தாத்தாவா இருக்கலாம். ஏன்னா இது கண்டங்கள் 'சமீபத்தில் பிரிவதற்கு முன் இருந்த கோண்டுவானாக் காலத்தில் இருந்தே இருக்காம். அதாவது ஜஸ்ட் 300 மில்லியன் வருசங்களுக்கு முன்புதான்.



ஒருமுறைச் சந்தைக்குப் போனப்ப அங்கே வித்துக்கிட்டு இருந்தாங்க. மக்களும் ஆர்வமா வாங்கிக்கிட்டுப் போறாங்க. அப்பத்தான் தெரிஞ்சது இதைப் பூச்சாடியில் அலங்காரமா வைக்கலாம் என்றதே. '


இதுலே 9 வகைகள் இருக்குன்னு இந்த ப்ரொடீயா சொஸைட்டியில் போட்டுருக்கு. கனமான மலர்கள். சின்ன மரமா வளர்ந்துருக்கு நம்ம பழைய வீட்டில். அப்போவெல்லாம் இதை நான் அவ்வளவாக் கண்டுக்கலை. பூச்சாடியில் வைக்கலாமுன்னா இந்தக் கனத்தைத் தாங்கும் அளவில் நம்மகிட்டே சாடிகள் கிடையாதுன்றதும் ஒரு காரணம். எல்லாம் 'கிண்'ன்னு இருக்கு ஒவ்வொண்ணும்:-)



இந்தச் செடிக்கு நாம் வழமையாத் தோட்டத்தில் போடும் உரங்கள் எதுவுமே தேவை இல்லையாம். அப்படிப் போடுன்னானாம். ஆஹா..... நமக்கு வேண்டியது இதுதான். மெனெக்கெட்டு உரங்கிரமெல்லாம் வாங்கிட்டாலும்.....இந்தப் பூ காஞ்சு போச்சுன்னாலும் அப்படியே இருக்குமாம். அதையுந்தான் பார்த்துருவோமுன்னு அங்கே இருந்து நாலைஞ்சை எடுத்துக்கிட்டு வந்தேன்.
மரத்திலேயும் சில வருசமாக் காஞ்சுப்போய்க் கிடக்கறதையெல்லாம் பிச்சுப்போட்டுட்டுக் கொஞ்சம் மரக்கிளைகளை வெட்டி ஒழுங்குபடுத்திட்டு வந்தேன்.


எனக்குத்தான் எது கையில் கிடைச்சாலும் வளருமான்னு சோதிச்சுப் பார்க்கும் குணம் இருக்கே. ஒரு சின்னக் கிளையைக் கொண்டுவந்துத் தொட்டியில் வச்சுருக்கேன். அதுலே ஒரு மொட்டும் இருக்கு.

மற்ற பூக்களை ஒரு சாடியில்(அன்பளிப்பா வந்தது) வச்சுட்டேன். அட! நல்லாத்தான் இருக்கு.


செடிகளை நடும்போது நல்ல காத்தோட்டமான, சூரிய வெளிச்சம் நிறைய வரும் இடத்தில் நடணும். பூமத்திய ரேகைக்கு தெற்கே இருக்கறவங்க மறந்தும் இதை வீட்டின் தென் பகுதியில் நட்டுறக் கூடாதாம். நல்லா வேர் பிடிச்சு வளர்ந்துச்சுன்னா, மூணாம் வருசத்திலே இருந்து பூக்க ஆரம்பிச்சுரும்.
ஆஸ்தராலியாவில் இந்தச் செடிகளும், விதைகளும் விற்பனைக்குக் கிடைக்குதாம். இங்கே நியூஸியில் அவ்வளவா இல்லை. இந்த ஒரு காரணம் போதாதா..... ஓடிப்போய் உபச்சாரம் செய்ய:-)))


இள அரளிப்பூ நிறத்தில் மேலே சின்ன இறகுகள் மாதிரி வெள்ளையா பட்டுப்போல இருக்கு. கூடவே கரும் புள்ளிகளும்.


போனவாரம் நம்ம ரமண் பையா மனைவி ( அண்ணின்னு கூப்புடுவேன்) வந்துருந்தாங்க. இதைப் பார்த்துட்டு 'இந்தச் செடியைத் தோட்டத்தில் கூட தரையில் நடலாம் தெரியுமா'ன்னாங்க. 'ஆமாம்'ன்னேன்.



"அட! பரவாயில்லையே..... தொட்டியில் சின்னச் செடியா இருந்தாலும் மொட்டு கூட வந்துருக்கே. எப்போ இருந்து வளர்க்கிறே?"



"மூணு நாளா "


!!!!

:-)))))))))))
சரியா மூணுவாரத்துக்குப் பிறகு ஜாடியில் உள்ள பூக்களின் நிலை.

Thursday, May 15, 2008

மூன்று வருசத்துக்குப் பிறகு கிடைச்ச மூன்று பைகள்.

லார்நாக் கோட்டையின் தொடர்ச்சின்னு வச்சுக்கலாம்.

நம்ம பழைய வீட்டை விக்கப் போட்டுருக்கு. அதனால் வீட்டைக் கொஞ்சம் ஒழுங்குசெய்யப் போயிருந்தோம். அங்கே காராஜில் இருந்த ஒரு அலமாரியைத் தற்செயலாத் திறந்து பார்த்தால்......மூணு பைகள் இருக்கு. நம்மளுதுதான். எப்படி இங்கே தங்கிப்போச்சு? இந்த அழகுலே வீட்டைக் காலி செஞ்சுருக்கோமா? மூணுவருசமா இந்தப் பக்கமே வரலையேன்னு எடுத்துக்கிட்டு வந்தோம்.


அன்னிக்கு மாலை இருட்டிக்கிட்டு வருது,கூடவே மழையும். நல்ல நேரமா அமைஞ்சுபோச்சேன்னு ஒவ்வொரு பையாத் திறந்து பார்க்கிறேன். எல்லாம் பயணம் சம்பந்தப்பட்ட காகிதங்கள், விவரங்கள், பயணத்தில் வாங்குன பொருட்களின் ரசீதுகள்.


என்னாங்கடா இது? கொசுவத்திக்கே கொசுவத்தியா?


தெற்குத்தீவை முதல்முறைச் சுற்றிய விவரங்கள் முழுசும் அப்படியே லட்டு மாதிரி கையில். ஆஹா......


லார்னாக் காஸில் போய்வந்த சமயம். டனேடின்னு சொன்னதும் கோபுவின் நினைவு. மகளைவிட ஆறு மாசம் பெரியவன். இவன் என்னைச் சந்திச்சப்ப,
இவனுக்கு வயசு ஏழு/எட்டு இருக்கும். இங்கே எங்கூரில் Zoo வில் மீர்கேட் களை முதல்முறையா மக்கள் காட்சிக்கு வச்சாங்கன்னு போயிருந்தோம். அதுக்கு ஒரு மாசம் முன்னாலே இருந்தே அந்தப் படங்களைத் தினமும் தொலைகாட்சியில் காமிச்சு, எங்களை உசுப்பிவிட்டுருந்தாங்க. முதல்நாள் முதல் ஷோ பார்க்கும் வெறியில் இருந்தோம்:-)



அதுகளைப் பார்த்து, 'அய்யடா..... செல்லம் போல இருக்கே'ன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன் மகளிடம்.


பொது இடத்தில் இதுக்குத்தான் வாயைத் திறக்கக்கூடாது......


ஒரு சிறுவன், புன்முறுவலோடு என் அருகில் வந்து 'ஆர் யூ ஃப்ரம் ஸ்ரீலங்கா?' என்றான்.


'இல்லையே. நான் இந்தியாவிலிருந்து. நீ ஸ்ரீலங்காவா?'


"நானும் இந்தியாதான்"


" இந்தியாவில் எங்கே?"


" கேரளா"

" தானெந்தா இவிடே ஒற்றைக்கோ?"


" இல்லா. அச்சனும் அம்மையும் அதா அவிடே"


இது போதாதா? பாப்பநியூகினி யூனியில் வேலை அப்பா & அம்மாவுக்கு. இங்கே நியூசியில் நிரந்தரக்குடியுரிமைக்கு விண்ணப்பிக்க எண்ணம். அதான் ஒருமுறை நேரில் வந்து ஊர்நிலவரம் பார்த்துட்டுச் செய்யலாமுன்னு பயணத்தில் இருக்காங்க.


அன்னைக்கு இரவுச் சாப்பாடு எங்கள் வீட்டில். மூத்ததாக ஒரு மகளும் உண்டு. மறுநாள் காலை ஃப்ளைட்டில் திரும்பிப்போயாச்சு. அதுக்குப்பிறகு
மகள் இங்கே மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைச்சுவந்து படிப்புத் தொடங்கியாச்சு. இங்கே மருத்துவம் படிக்க டனேடின் யூனியில்தான் தொடங்கணும்.



அடுத்தரெண்டாம் வருசம் குடும்பம் இடம்பெயர்ந்தாச்சு. விரிவுரையாளர் வேலைகளை விட்டுட்டு வந்துட்டாங்க. இங்கே சொந்தமா எதாவது தொழில் செஞ்சுக்கலாமுன்னுதான்.


அவுங்களைப் பார்க்கத்தான் நாங்களும் போயிருந்தோம். என்னை எப்படிப் புடிச்சேன்னு கேட்டதுக்கு,அந்த 'அய்யடா...............' வால்தானாம்!


நர்ஸரி, டெலிவரி ரூம் இப்படி 'வழிகாட்டி' விவரிச்சதும், 'புள்ளி பிரசவிச்சது இவிடேயா' ன்னு கோபுவின் அம்மா சொல்லிக்கொண்டிருந்தார்.


( போன பகுதியின் முதல் பாரா இங்கே வரணும்)


மகளுக்குப் பிரசவம் என்ற சொல்லின் பொருள் தெரியாமல் முழிக்கிறாள். பொதுவா நாம் குழந்தை பெத்தாங்கன்னு சொல்லிடறோம் இல்லே?


கோட்டையில் மேலும் கீழுமா ஒரு இடம்விடாம ஏறி இறங்குனோம். இங்கே இருக்கும் ஒரு தொங்கும் ஏணிப்படிக்கட்டு அபூர்வமானதாம். பூமியின் தென்கோளத்தில் இப்படி இது ஒன்னுதான் இருக்காம்.


இவ்வளவு வீட்டுச்சாமான்கள், கட்டிடச் சாமான்கள் எல்லாம் எப்படி 1000 அடி உசரத்துக்குக் கொண்டுவந்து சேர்த்தாங்களாம்? காளைகள் இழுத்துக்கிட்டு வந்துச்சாம். அப்ப பிரமிட் கட்ட சரிவான ரேம்ப் போட்டு இருப்பாங்கன்னு சொல்வதைக் கற்பனை செஞ்சு பார்க்கலாம். நம்ம தஞ்சாவூர் கோயில் கோபுரத்துக்குக் கல்லை இப்படித்தான் ஏத்துனாங்கன்னு படிச்ச நினைவு வந்துச்சு.


சரி. கதையை எங்கே விட்டேன்? வில்லியம் லாநார்க் தற்கொலை செஞ்சுக்கிட்டார். அப்ப அவருக்கு வயசு 65.


உயில் எழுதுன மனுசர், அதுலே கையெழுத்துப் போடாம வச்சிருந்துருக்கார். தன்னோட முடிவை அவரே எதிர்பார்த்திருந்துருக்க மாட்டார், இல்லே?



கோட்டை யாருக்கு என்ற போட்டியிலும் சொத்தைப் பிரிக்கவும் தகராறு வந்துச்சு. ஒரு மகள்தான் இறந்துபோச்சே. இப்ப இருக்கும் அஞ்சு மக்களுக்கும், கடைசி மனைவிக்கும் நியாயமாப் பாகம் பிரிச்சுக்க வழி இல்லாமப்போச்சு. பேசாம வித்துத் தொலைக்கலாமுன்னு முடிவு செஞ்சாங்க. பிள்ளைங்க எல்லாம் எலிஸாவுக்குப் பிறந்ததுதான். மற்ற ரெண்டு மனைவிகளுக்கும் சந்தான பாக்கியம் இல்லை.



இவ்வளோ பெரிய கோட்டையை யாரு வாங்குவாங்க? கொஞ்சம் கொஞ்சமா அதுலே இருந்த மரச்சாமான்களையெல்லாம் ஏலத்துலே வித்துருக்காங்க.
ஆறுவருசம் இதுக்கிடையில் ஓடிப்போச்சு. கன்னியா ஸ்த்ரீகள் மடமாக் கொஞ்சநாள் இருந்துச்சு.



அந்தக் காலத்துலே 125,000 பவுண்ட் செலவுலே கட்டுனதை........ அரசாங்கமே வாங்கிக்கிச்சு. விலை? வெறும் 3000 பவுண்ட். எதுக்கு வாங்குச்சாம்?


மனநோயாளிகளுக்கான ஆஸ்பத்திரி நடத்த! பத்துப் பன்னெண்டு வருசம் நடந்த ஆஸ்பத்திரியை அப்புறம் வேற இடத்தில் புதுக் கட்டிடத்துக்கு மாத்துனதும் காலியாக் கிடந்த கோட்டை விஷமிகள் கையிலே மாட்டிப் பாழாக ஆரம்பிச்சது.


ஒரு தம்பதிகள் இதை வாங்கிக் கொஞ்சம் புதுப்பிச்சுவச்சாங்க. கோட்டைக்கு இப்ப மின்சாரவசதி கிடைச்சது. அவுங்களாலும் 12 வருசத்துக்கு மேலே இதைக் கட்டிக் காப்பாத்த முடியலை. இவுங்களுக்கோ வயசாகிக்கிட்டுப் போகுது. வித்துறலாமுன்னா யாராவது வாங்க முன்வரணுமே.


ஏலத்துலே போட்டுப் பார்க்கலாமா? வாங்கறவங்க இடிச்சுட்டு, அதுலே இருக்கும் விலை உயர்ந்த மரங்களை எடுத்துக்கலாம்னு விளம்பரம் செஞ்சாங்க. ஏலம் நடக்கற அன்னிக்குச் சும்மா வேடிக்கை பார்க்கவந்த ஒரு ஜோடி, திட்டம் ஏதுமில்லாமச் சட்னு ஏலம் கேட்டுட்டாங்க. அல்ப விலைக்குக் கோட்டை, கைக்கு வந்துருச்சு. 1250 பவுண்ட் தான். (தெரிஞ்சுருந்தா நாம் வாங்கி இருக்கலாம்)



ஒரு ஆர்வத்துலே வாங்கிட்டாங்களே தவிர இதை வச்சுக்கிட்டு என்ன செய்யறது? யானையைக் கட்டித் தீனி போட முடியுமா? அடுத்தவருசமே இன்னொரு கைக்குத் தள்ளிவிட்டுட்டாங்க.



இப்படிப் பல கைகள் மாறி 1967 லே பார்க்கர் குடும்பம் இதை வாங்கி நல்லபடியாப் பராமரிக்கிறாங்க இதுவரை.


கோட்டையைப் பார்க்க ஆட்கள் வந்து போறாங்கன்னாலும் அங்கே நிரந்தரமா இருப்பது மூணு பேர்தானாம். வில்லியமோட முதல் மனைவி, அவுங்க செத்த அறைவாசலில் அப்பப்ப வந்து நின்னுக்கிட்டு இருப்பாங்களாம்.


கேத்தி, சின்னப்பொண்ணுதானே? தனக்காகக் கட்டுன டான்ஸ் ஹாலில் தனியா உலாத்துமாம்.


வில்லியம், இனியும் அங்கே இங்கேன்னு சுத்தி 'வாழ்க்கை'யைத் தொலைக்காம, இப்பவாவது கோட்டையைக் கவனிக்கலாமுன்னு வந்துட்டாராம்.


ஜிலோன்னு இருக்கும் கோட்டையில் தனியாச் சுத்திப்பாருங்க நீங்க. மிதந்துவரும் மூணுபேரையும் உங்களுக்கும் அதிர்ஷ்டமிருந்தால் உணர்வீங்க.

இப்பத்துக் கோட்டைச் சொந்தக்காரம்மாவுக்கு ஒரு 'அனுபவம்' கிடைச்சதாம். நடுங்கிப் போயிருப்பாங்க....பாவம்.


குதிரைலாயத்துலே வந்து தங்குறவங்களும் இப்படித் தென்படுதான்னுப் 'பார்க்க' வர்றாங்களோ என்னவோ?


மகளின் முத்துப்போன்ற கையெழுத்தில் ஒரு காகிதம் கிடைச்சது. என்னவா இருக்குமுன்னு பார்த்தால்..........என்னை அப்படியே பின்னாலே பயணப்பட வச்சுட்டாளே.......


அட! மகள் பதிவு எழுதி இருக்காள்:-))))) அப்ப அவளுக்கு வயசு 11. நம்ம வீட்டின் மூத்த பதிவர்:-)))


அதையே இங்கே போட்டுருக்கேன்.
சரியாத் தெரியலைன்னா கீழே இருக்கு பாருங்க அதில் என்ன இருக்குன்றது.






other things we did in Dunedin. We went to a castle in the which was built in the 1860's. The castle is called 'Larnach's Castle' because William Larnach built it. The castle is quite big inside. You have to pay $9.50 per adult and $3.50 per child!.


It's expensive isn't it?


In the front garden there is a small fountain, a smalla square pond with a few white geese in it. Small archways in a row facing the pond. Vines and flowers have growed up the archways. The archways looked pretty but the pond didn't because nobody had cleaned it had gone yucky greeny colour. On the front entrance there aretone lions,one on each side of the steps going up. Like this




இடப்பக்கம் படிக்கட்டுவரிசை, அதில் இருக்கும் சிங்கம்:-))))

மூன்று பைகளில் கிடைச்ச விவரங்கள் ஒரு 500 பதிவுக்காவது தேறும்.
பார்க்கலாம் என்ன எழுத மூடு வருதுன்னு.

கோட்டைக்குப் பிறகு அங்கே பெங்குவின் பறவைகள் சிலைருக்கும் கடற்கரைக்குப் போனோம்.. ஒருத்தர் மட்டும் 'காணக் கிடைச்சார்'
கோபுவுடன், வீட்டின் மூத்த பதிவர்:-)

இன்னிக்கு ரொம்பவே பணக்காரி ஆகிட்டேனாமே......

இன்னிக்கு ரொம்பவே பணக்காரி ஆகிட்டேனாமே......
அடிச்சது லாட்டரி:-))

மொதல்லே ஒரு பவுண்டுக்கு எத்தனை ரூபாய்ன்னு பார்க்கணும். கொஞ்சம் இருங்கப்பு.


http://www.xe.com/ போய்ப் பார்க்கலாம் வாங்களேன் கூடவே.
1GBP = INR 82.6530

பரவாயில்லையே நல்ல ரேட்தான் போல.


இப்ப எல்லாரும் கால்குலேட்டர் கையிலே எடுத்துக்குங்க. இன்னிக்கு நம்ம வகுப்புலே கணக்கு. கணக்குதான்.


500 தவுஸண்ட் பவுண்டுக்கு எவ்வளோ வருதுன்னு பார்த்துச் சொல்லுங்க.
நானும் அதுக்குள்ளே என்ஸ்ச்சேஞ்சுலே போய்க் கேட்டுட்டு வரேன்.

5,000,00.00 GBP
=
413,150,71.96 INR
United Kingdom Pounds India Rupees 1 GBP = 82.6301 INR 1 INR = 0.0121021 GBP

அந்த 96 பைசா வேணாம் போனாப் போகட்டும்!

வெறும் நாலு கோடிச் சொச்சம்தானா?


யாஹூ & மைக்ரோசாஃப்ட்லே இருந்து மடலில் வந்து காசு கொடுக்கறாங்கப்பா.


கீழே இருக்கு பாருங்க, இதுதான்.

பார்க்கவும் படிக்கவும் இன்னொசெண்ட்டா இருக்குல்லே.



-- Yahoo / Microsoft Incorporation.
Baley House,
Har Road,
Sutton,
Greater London SM1 4te,
United Kingdom.



Dear Sir/Madam.This is to inform you that you have won a prize money of Five hundredthousand,Great Britain Pound Sterlings(£500,000.00)for the month ofMAY 2008 Lottery promotion, which is organized by YAHOO/MICROSOFTLOTTERY INC & WINDOWS LIVE.YAHOO/MSN & MICROSOFT WINDOWS,collects all the email addresses of thepeople that are active online,among the millions that subscribed toYahoo and Hotmail we only select five people every Month as ourwinners through electronic balloting System without the winnerapplying,we congratulate you for being one of the people selected.


You are to contact the events manager on or before your date of Claim,Winners Shall be paid in accordance with his/her SettlementCentre.


These are your identification numbers:

Batch number.....................YM 09102XN


Reff number.......................YM35447XN


Winning number...................YM09788



These numbers fall within your Location file, you are requested tocontact the events manager,send your winning identification numbers tohim,to enable him verify your claims.How ever you will have to filland submit this form to the events manager for verification & directionon how you can claim your winning fund.


1. Full name..............


2. Contact Address........

3. Age....................

4. Telephone Number.......

5. Marital Status.........

6. Sex....................

7. Zip Code...............

8. Occupation.............

9. Company................

10.State:.................

11.Country................

12.Nationality............

Reference and Batch number:(CONTACT EVENTS MANAGER)


Name: Mr.Melvin JohnE-mail: melvin.john007@live.com

Tele Number: +44 70457 54964


Thank you and Accept my hearty congratulations once again!

Yours faithfully,

Mrs.Gloria Bent(Yahoo/Msn Lottery Games/Lottery Coordinator).--


Saunalahti Ykkönen: Puhelut kaikkiin liittymiin 0,069 e/min ja nyt kaupan päälle Sisärengas-puhelut ja tekstarit viiteen valitsemaasi liittymään 0 e!http://saunalahti.fi



மனுசனைச் சும்மா இருக்கவிட்டாலும்.....................

Tuesday, May 13, 2008

மச்சினிச்சியைக் கட்டுனாத் தப்பாமே......

பிரசவம் என்ற சொல் கோபுவுக்குப் பயங்கரக் கிளுகிளுப்பாக இருந்துச்சு போல. இந்த அறையிலா, இந்த அறையிலான்னு நாலைஞ்சுமுறை கேட்டுட்டான். முகத்தில் ஒரு கள்ளச் சிரிப்பு.....



அது ஒண்ணுமில்லை...... இங்கே டனேடின் என்ற ஊரில் இருந்து ஒரு 15 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு கோட்டை இருக்குன்னு வேடிக்கைப் பார்க்கப் போனோம். இங்கே நம்மூர் கிறைஸ்ட்சர்ச்சில் இருந்து சாவகாசமாக் காரை ஓட்டிக்கிட்டுப் போனால் டனேடின் ஒரு அஞ்சு அஞ்சரை மணி நேரத்தில் வந்துரும். கோபுவின் குடும்பம் வசிக்கும் ஊர் அது. இந்த கோபு எப்படி 'என்னை'ப் பிடிச்சான்னு இன்னொருநாள் சொல்றேன்.




போன அன்னிக்கு இரவு உள்ளூரைச் சுத்திப் பார்த்துட்டு, மறுநாள் வேற எங்கே போகலாமுன்னு தேடுனப்பக் கிடைச்சது கோட்டை விவரம். கோட்டைவிட்டுறக் கூடாதுன்னு கிளம்பிப் போனோம்.....




மலைப்பாதையா இருக்கேன்னு பார்த்தால் தரைமட்டத்தில் இருந்து 1000 அடி உயரத்தில் கட்டிவச்சுருக்கு. 35 ஏக்கர் நிலத்தில் நடுவுலே கோட்டை. சுத்திவர அட்டகாசமான தோட்டம். மேலே மாடியில் இருந்து பார்த்தால் ஹைய்யோ......
கடல், துறைமுகம் காடுன்னு கலந்துகட்டிக் கிடக்கு.




குற்றவாளிகளைப் பிடிச்சு ஆஸ்தராலியாவுக்குக் கொண்டுவந்து விட்டுட்டுப் போனது பிரிட்டிஷ் அரசு. நினைவிருக்குல்லே? அதுக்கப்புறம் ரொம்ப வருசங்களுக்குப் பிறகு ஸ்காட்லாந்துலே இருந்து முதன்முதலா (குற்றவாளிகளா இல்லாமல்) ஆஸ்தராலியாவுக்குக் குடிபெயர்ந்த குடும்பங்களில் ஒண்ணுதான் லார்னாக் குடும்பம். அந்தக் குடும்பங்களுக்குள்ளேயே கல்யாண சம்பந்தமும் அப்ப நடந்துருக்கு.




ஜானோட மகன் வில்லியம் பிறந்தது சிட்னிக்கு வடக்கே ஒரு ஊரில். எப்ப? சமீபத்துலேதான்....1833லே. குடும்பத்தொழில் தங்கம் தோண்டுதல். தங்கச்சுரங்கம் எப்பவுமே நல்ல பிஸினெஸ்தான் இல்லே? கூடவே நியூ சவுத் வேல்ஸ் பேங்குலே வேலை.




26 வயசுலே கல்யாணம். நல்ல பணக்கார வீட்டுப்பொண்ணு எலிஸா. ஃப்ரான்ஸ்லே இருந்து வந்த குடும்பம். வரதட்சணையா 85 ஆயிரம் பவுண்ட் கிடைச்சதாம். நூத்தியம்பது வருசத்துக்கு முன்னாலே கிடைச்ச இந்தக் காசுக்கு இப்ப மதிப்பு என்னவா இருக்கும்? என்னாலே கணக்கெல்லாம் போட முடியாது........ நெறய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய இருக்கும் அம்புட்டுதான்.




அந்தக் காலக்கட்டத்தில்தான் இங்கே நியூஸியிக்கு வெள்ளைக்காரர்கள் வந்து துண்டு போட்டது. இங்கேயும் ஒட்டாகோ பகுதியில் தங்கம் இருக்குன்னு கண்டுபிடிச்சாங்க. தோண்டவும் ஆரம்பிச்சாங்க. தங்கமுன்னதும் பணம் கொழிக்காதா என்ன?




ஒட்டாகோ பேங்க்''ன்னு ஒன்னு வந்துச்சு. அதுக்குத் தலைவரா இங்கே வந்து சேர்ந்தார் வில்லியம். ஆளுக்கு வயசு 33. இங்கே நியூஸியில் ஆள், கூட்டம் இருந்தாத்தானே? ஜிலோன்னு கிடக்கு நாடு. இங்கே ஒரு வீடு கட்டிக்கலாமுன்னு நினைச்ச வில்லியம் இந்த இடத்தை(1000 ஏக்கர்) வாங்கி(??) வீடு( வீடா இது? கோட்டை மாதிரி ஒரு வீடு)கட்ட ஆரம்பிச்சது 1871லே.



அஸ்திவாரம் போட்டுக் கட்டிடம் எழும்ப 3 வருசமும், அதுக்குப்பிறகு உள்வேலைகள் நடக்கப் 12 வருசமும் ஆச்சாம். 200 ஆட்கள் விடாமல் வேலை செஞ்சுருக்காங்க. பளிங்கு வேலைக்கு இத்தாலியில் இருந்து பளிங்கும் அதைக் கையாள ஆட்களும். இப்படி வெனிஸ் நகரில் இருந்து கண்ணாடி, இங்கிலாந்தில் இருந்து தரையில் & சுவத்தில் பதிக்கும் டைல்ஸ், மரவேலைகளுக்காக மரங்கள் உலகின் பல பகுதிகளில் இருந்து வந்துருக்கு கப்பல்கள் மூலம்.

அந்தக் காலத்துலே கப்பல் போக்குவரத்து மெதுவாத்தானே..... அதான் மாளிகை நிர்மாணம் ஆடிஅசைஞ்சு முடிய நாளெடுத்துருக்கு. மொத்தம் நாப்பதாயிரம் சதுர அடிகள். அடுக்களை, தோட்டம், சுத்தம் செய்யன்னு வீட்டுவேலைக்கே 46 பேர் வேலையாட்கள்.




இவருக்கு 6 பிள்ளைகள். பெரிய மகளுக்கு 21 வயசு ஆனதுக்கு பார்ட்டி கொடுக்கன்னே ஒரு பால்ரூம் கட்டினார். 3000 சதுர அடிக்கு ஒரு ஹால்.
அந்தப் பொண்ணு அதிர்ஷ்டம் பாருங்க....... விழா நடந்தபிறகு கொஞ்ச நாளிலே(சில வருசங்கள்) 'டைஃபாயிடு ஜுரம்' வந்து செத்துப்போச்சு(-:




கோட்டைப்பணி முழுசும் முடியறதுக்குள்ளேயே வீட்டம்மா ஸ்ட்ரோக் வந்து இறந்துட்டாங்க. சாகற வயசா அது? வெறும் 38. த்சு...த்சு...த்சு...த்சு...



அப்ப அந்த நேரத்துலே புருசனும் சரி, பெரிய புள்ளைகளும் சரி நாட்டுலேயே இல்லை. கடைசி ரெண்டும்தான் தாயோடு இருந்துருக்கு. அதுலே ஒண்ணு கைக்குழந்தை. த்சு...த்சு...த்சு...த்சு...த்சு...




இந்தக் காலக்கட்டத்துலே இவர் பார்லிமெண்ட் அங்கத்தினராத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டனேடின் தொகுதிக்கான எம்.பி.



மனைவி இறந்ததும், மனைவியின் தங்கச்சி(சித்தியின் பொண்ணு)யைக் கல்யாணம் செஞ்சுக்க நினைச்சார். மாற்றாந்தாயாக நினைக்காமப் பசங்களை
வளர்ப்பான்னு இருக்கலாம். அப்ப இந்த மாதிரி இறந்துபோன மனைவியின் தங்கையைக் கல்யாணம் செஞ்சுக்கறது சட்டப்படிக் குற்றம். இவர்தான் பார்லிமெண்ட் அங்கமாச்சே. அந்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்துட்டார்.
தனிப்பட்ட அந்த பில் பாஸாகிருச்சு.




கல்யாணம் முடிச்சுட்டார். அந்தம்மாவும் பாவம் அஞ்சே வருசத்தில் மண்டையைப் போட்டுட்டாங்க(-:



ரெண்டு மரணமும் இயற்கை மரணம்தான். சூழ்ச்சி ஏதும் இல்லை. அவர் கொடுத்துவச்சது அவ்வளோதான்.......




அதுக்குப்பிறகு மூணாங்கல்யாணம் கட்டுனார். இப்ப அவர் சுரங்கப் பிரிவுகளுக்கான மந்திரி வேற. எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு.




இவருக்கு நல்ல தொலைநோக்குப் பார்வை. நாட்டுக்குப் பல நல்ல காரியங்கள் செஞ்சார். கப்பல்களில் குளிர்சாதன வசதி செஞ்சது இதுலே முக்கியமான ஒண்ணு. இதனால் இங்கே இருந்து இறைச்சி, பாற்கட்டி எல்லாம் கெடாம ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆச்சு. நாட்டுக்கு வருமானம் கொட்டுச்சு.



வீ(கோ)ட்டை விட்டுட்டுப் பல நாட்கள் பாராளுமன்ற வேலைகளிலே முழுகிப் போயிட்டவருக்கு, அங்கே அவர் குடி முழுக ஆரம்பிச்சது ரொம்பக் காலதாமதமாத்தான் தெரிஞ்சிருக்கு. அங்கே அவரது இளமனைவிக்கும், மூத்த மகனுக்கும் எதோ கசபிசா........ ( யூகிச்சுக்குங்க. இதுக்கெல்லாமா விளக்கம் சொல்லிக்கிட்டு இருக்க முடியும்?) நாட்டைப் பார்த்துக்கறேன்னு இப்படிக் கோட்டை விட்டுட்டார் பாருங்க.......




தாங்க முடியலை மனுசனுக்கு..... பாராளுமன்றக் கட்டிடத்தில் அவர் அறையைப் பூட்டிக்கிட்டுத் துப்பாக்கியால் தன்னை முடிச்சுக்கிட்டார். (அடப் பாவமே)



இவர் சாவுக்குப்பிறகுக் கோட்டையை வித்துட்டாங்க. பல கைகள் மாறி இப்ப 1967 லே ஒரு குடும்பம் வாங்கி இதைப் பார்வையாளர்களுக்குத் திறந்து விட்டுருக்கு. இவுங்க வாங்குனப்ப உள்ளே காலியாத்தான் இருந்துச்சாம். பார்த்துப்பார்த்துச் செஞ்ச சாமான்களும் அங்கே இங்கேன்னு போயிருக்கு. இவுங்களும் விடாம அதையெல்லாம் திரும்ப ஒவ்வொண்ணா வாங்கி அதோட ஒரிஜனல் நிலைக்குக் கொண்டுவந்துட்டாங்க.




முதல் & ரெண்டாம் உலகப்போர்களில் படைவீரர்கள் சும்மாக்கிடந்த கோட்டையில் வந்து தங்கி இருந்தாங்களாம். ஒரு கட்டத்தில் அந்த அழகான பால்ரூம் டான்ஸ் ஹால் முழுக்க ஆடுகளை அடைச்சு வச்சுருந்தாங்களாம்.
காலம்..........


இப்ப இது உள்ளே போய்ப் பார்க்க ஒரு கட்டணம் வசூலிக்கிறாங்க.



பராமரிப்புச் செலவுக்குப் பணம் வேணுமே.




நம்மூர் அரண்மனைகளுக்கு நேர்ந்த கதிபோல இங்கே ப்ரைவேட் ஹோட்டல் மாதிரி வந்து தங்கிக்கவும் வசதி செஞ்சுருக்கு. தங்குமிடம் (பழைய)குதிரை லாயம்.



குதிரைன்னதும் இன்னொண்ணு ஞாபகம் வருது. இங்கத்து மெயின் ஹாலில் இருக்கும் சரவிளக்கு அந்தக் காலத்துலேயே பயோகேஸ் மூலம் எரிஞ்சதாம்.


எப்படி?



ஆங்........ அதான் குதிரை சாணம் குவியுதே. அதுக்கு ஒரு தனிக்கிடங்குக் கட்டி அதன்மூலம் கேஸ் எடுத்து, ஒரு ஆளை வேலைக்கு வச்சு பெடல்மூலம் பம்ப் செய்வாங்களாம்.




இப்ப என்ன திடீர்ன்னு இந்த கோட்டையைப் பத்தி?



விஷயம் இருக்கே....சொல்றேன் அடுத்த பகுதியில்.

Monday, May 12, 2008

கத்தரிக்கா.....குண்டு கத்தரிக்கா

குட்டிக்குட்டியாக் குண்டுகுண்டா இருக்கும் கத்திரிக்காயைப் பார்த்ததும் எங்க ரெண்டு பேருக்கும் எப்பவுமே வரும் எண்ணம் இப்பவும் வந்துச்சு. லா.ச.ராவின் கத்தரிக்காய்க் கதை!



ரொம்ப வருசங்களுக்கு முந்தி எங்கியோ (விகடன், குமுதமா இருக்கலாம்) படிச்சோம். அப்பெல்லாம் நம்ம வாசிப்புகள் இந்த ரெண்டையும் விட்டால் மூணாவதா கல்கி.



"வறுமை நிறைந்த குடும்பத்திலே, சாப்பிட ஏதுமில்லாமல் குழந்தைகள் எல்லாம் போய் எங்கியோ வேலி ஓரத்தில் முளைச்சுக்கிடக்கும் கத்தரிச்செடியில் இருந்து பறிச்சுவந்த கத்தரிப்பிஞ்சுகளைக் கறியாக்குவாங்க அம்மா. கொழந்தைகள் எல்லாம் வெறுமனே அதை மட்டும் தட்டுலே போட்டு வழிச்சுத் தின்னுட்டுத் தரையில் உருளுங்கள்.''


மனசை விட்டு அகலாத கதை. இதை ஒருசமயம் சொல்லப்போய், நம்ம கீதா சொன்னாங்க அவுங்க மனசுலே இதைப்போல நிற்பது 'வளை'ன்னு. நானோ ஒரு திண்டிப்போத்து. அதான் தின்னும் சமாச்சாரம். அவுங்கவுங்களுக்கு ஏதுவா ஏதோ ஒண்ணு:-)



கத்தரிக்காயிலும் நீட்டுக்கத்தரி எனக்குப் பிடிக்காது. உருண்டையா இருக்கணும்.

கோல்கோல்வாலா ச்சாஹியே. லம்பாவாலா பஸந்த் நை.

இது நம்மக் கடைக்காரம்மாவுக்கும் நல்லாவே தெரியும். எல்லாம் ஃபிஜியில் இருந்து வருவதுதான்.



இன்னிக்கு என்னவோ ஏறக்குறைய ஒரே மாதிரி அளவில் கிடைச்சது. பொடி அடைச்சு முழுசா வதக்கித் தரவான்னு கேட்டதும் கோபாலுக்கு வாயெல்லாம் பல் & மனசெல்லாம் ஜில்.



நம்ம 'தனி' வழியில் அடுப்பு & மைக்ரோவேவ் அடுப்புக் காம்பினேஷனில் சமைச்சு எடுத்தேன். எண்ணெய் ரொம்பச் சேர்க்காமல் நேரம் ரொம்பச் செலவாகாமல் செஞ்சது.



முழுக்கத்தரிக்காய் எண்ணெய்க் கறி.


கத்தரிக்காய் - 8

மிளகாய் வத்தல் 8

தனியா விதை 2 டேபிள் ஸ்பூன்

உ. பருப்பு 1 டேபிள் ஸ்பூன்

க. பருப்பு 1 டேபிள் ஸ்பூன்

பெருங்காயத்தூள் அரைத் தேக்கரண்டி

தேங்காய்த் துருவல் 1 மேசைக்கரண்டி( கொத்ஸ்க்கு இது மைனஸ்)

எண்ணெய் 1 தேக்கரண்டி

இன்னும் ரெண்டு மூணு தேக்கரண்டி எண்ணெய் வேணும். எதுக்குன்னு அப்புறமாச் சொல்றேன்.

வாணலியை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெயில் தனியாவிதை, பருப்புகள் சேர்த்து வறுக்கணும். முக்கால் வாசி வறுபட்டதும் மிளகாய் சேர்க்கணும். கூடவே பெருங்காயத்தூள். கடைசியா அந்தத் தேங்காய்த்துருவல்.


அடுப்பை அணைச்சுட்டுக் கத்தரிக்காயை நறுக்க ஆரம்பிங்க. பாவாடை(?) இல்லாமல்தான் இங்கே வருது. காம்பை நறுக்கிட்டு, நாலாப் பிளந்துக்கணும். அடிவரை நறுக்க வேணாம். பார்க்க முழுசா இருக்கணும். ஆனால் நாலுபாகமாத் திறக்கவும் வரணும்.



புழுப் பூச்சி இருக்கான்னு பரிசோதிச்சுக்குங்க.





நறுக்குனதை தண்ணீரில் போட்டு வையுங்க.


வறுத்துவைத்திருக்கும் சாமான்களைச் சட்னி ஜாரில் போட்டு ஒரு தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி ஆம்ச்சூர் ( பயந்துறாதீங்க. காய்ஞ்ச மாங்காய்த் தூள்தான் இது. இந்தியன் கடைகளில் கிடைக்கும். நானே ஒரு காம்ச்சோர். அதான் ஆம்ச்சூர். கிடைக்கலைன்னா கவலையை விடுங்க. கொஞ்சூண்டு புளி சேர்த்துக்கலாம். கொட்டையை எடுத்துறணும்) சேர்த்துப் பொடிச்சுக்கணும்.



வாணலியைக் கழுவ வேணாம்:-) இன்னொருக்கா அதுக்கு வேலை இருக்கு.



கத்தரிக்காய் மிதக்கும் தண்ணீரை வடிச்சுட்டு, அதை ஒவ்வொண்ணா எடுத்துத் திறந்து இந்தப் பொடியை அடைக்கணும். மீதி இருக்கும் பொடியை ஒரு குட்டிக் கண்டெயினரில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கணும். அதை இன்னொரு சமையலுக்கு எடுத்துக்கலாம்.




பொடிஅடைச்ச காய்களை ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் அடுக்கி ஒரு 25 மில்லித் தண்ணீர் சேர்த்து மைக்ரோவேவ் அவனில் 100 சதமானம் பவரில் அஞ்சு நிமிஷம் வச்சு எடுங்க.



அந்தக் 'கழுவாத' வாணலியை மீண்டும் அடுப்பில் ஏத்தி, அந்த ரெண்டுமூணு தேக்கரண்டி எண்ணெய் ஊத்திக் காய்ஞ்சதும் அரைடீஸ்பூன் கடுகு, ஒரு இணுக்குக் கறிவேப்பிலை சேர்த்துக் கடுகு வெடிச்சதும் வெந்தக் கத்திரிகளை அலுங்காம நலுங்காம வாணலியில் ஒவ்வொண்ணாச் சேர்த்து மிதமான தீயில் வதக்கணும். அப்பப்பத் திருப்பி விடுங்க. எல்லாப் பக்கமும் வறுபட்டு, ப்ரவுண் நிறமா வரணும். இதுக்கு ஒரு அஞ்சு நிமிசம் எடுக்கும்.



ரொம்ப மெனெக்கெடாம, சீக்கிரம் செஞ்சு வச்சுட்டேன்.


நல்லா இருந்துச்சாம்........
நானாக நொய்நொய்ன்னு கேட்டபிறகு சொன்னார்:-))))