Sunday, October 12, 2008

அனந்த பத்மநாபனும் அல்ஃபோன்ஸாவும்.

தலைப்பு அருளுதவி: கோபால்:-)

வீட்டுலே ஒருவிசேஷம் வச்சா வேலை நெட்டிமுறிஞ்சுருது. நம்மூர்லேன்னா உதவிக்குச் சிலபேர் கிடைப்பாங்க. இங்கே அரசனும் நாமே, ஆண்டியும் நாமேதான். சோஸலிசமா:-))) நம்மவீட்டுலே ஜனநாயக முறைப்படிதான் எல்லாமே. நான் சொன்னபடி அவர் கேட்க, அவர் சொன்னதை நான் கேட்க(!)ன்னு..... சந்தேகம் இருந்தால் தலைப்பைப் பாருங்க. அவர் சொன்னத் தலைப்பை வச்சேனா இல்லையா?

விஜய துவாதசிப் பூஜைக்கானத் திட்டம். வீட்டை 'ஒழுங்கு' படுத்தணுமுன்னு ஒரு நாள் ஆணிபிடுங்கப் போகலை.அதான் வீட்டுலேயே ஏகப்பட்ட ஆணிகள் இறைஞ்சு கிடந்ததே!


கோபால் சரியா விரிப்பு எல்லாம் போட்டரான்னு பரிசோதிக்க நான் அனுப்புன ஏஜெண்ட்.

இரவு விருந்துக்கான சாப்பாடு, இந்தியன் ரெஸ்ட்டாரண்டில் இருந்து வருது. பிரசாதம் மட்டும் வீட்டில் பண்ணிக்கலாம். கைவலி காரணம் ஏழை நாலாக் குறைச்சோம்.

சர்க்கரைப்பொங்கல், எலுமிச்சைச் சாதம், தயிர்சாதம், சுண்டல். அஞ்சாவது வகைக்குப் பழங்கள்.( அப்பாடா ஒத்தைப்படை வந்துருச்சு)

சனிக்கிழமை மாலை ஆறேமுக்கால் மணிக்கு வரணுமுன்னு அழைப்பு. சாமர்த்தியமா இருக்கேன்னுத் தப்புக் கணக்குப் போட்டுட்டேன்ப்பா.......எப்படியும் மக்கள்ஸ் கொஞ்சம்(?) தாமதமாத் தான் வருவாங்க. 15 நிமிஷக் கிரேஸ் டைம். 'டாண்'ன்னு ஏழுமணிக்குப் பூசை ஆரம்பம். எட்டுமணிக்கு முடிஞ்சுரும். அதுக்குப்பிறகுச் சாப்பாடு.

ஆறரைக்கு அழைப்புமணி அடிக்குது. தோழியின் கணவர், 'இன்னிக்குத்தானே பூஜைன்னு சொன்னீங்க?'ன்னார்.

"ஆமாம். என்ன சந்தேகம்? தனியா வந்துருக்கீங்க....தோழி எங்கே? "

"இல்லை.....வாசலில் செருப்புகளைக் காணோமே..அதான்....
தோழி வண்டியில் உக்கார்ந்துருக்காங்க. வாசல் வெறுமையா இருந்ததும் இன்னிக்குத்தானான்னு 'டவுட்' ஆகிப்போச்சு."

"போனமுறை, அழைத்த நேரத்தை மறந்துட்டு ஒரு மணிநேரம் தாமதமா வந்தீங்க. அதுக்குப் பரிகாரமா இன்னிக்குப் போணி பண்ணியாச்சு:-)"

தோழிகள் வீட்டில் இருந்து வந்த பூக்கள்.



இடதுபக்கம் இருக்கும் வெள்ளைப்பூக்கள் லில்லி ஆஃப் த வேலி(?)யாம்


ஏழேகாலாச்சு. ஏழு குடும்பம் வந்தாச்சு.

"எப்பப் பூஜை? ஏழுன்னு சொன்னியே......"

"இன்னும் யார்யார் வரணும்?"

"இன்னிக்கு நல்ல வெய்யில் வந்துச்சே. மக்கள்ஸ் நிதானமா வருவாங்களோ என்னமோ?"

கேள்விக்கணைகள்.....எல்லாருக்கும் சேர்த்து ஒரே பதில். "இன்னும் ஒரு குடும்பம் வரட்டும். அப்ப 50 சதமானத்துக்கும் மேலே ஆகும். உடனே ஆரம்பிச்சுடலாம். நியாயமா நடக்கணுமில்லே....."

சொல்லிமுடிக்கலை...வந்துட்டாங்க.

(என்னவோ 'சாட்'லே பேசுனதைப் பதிவாப் போடுவாங்களாமே..அப்ப வீட்டுலே பேசுனதைப் போட்டா என்ன? எல்லாம் 'காலம்'தான்)

அதெப்படியோ ஆண்களும் பெண்களுமாத் தனித்தனிக் குழுவாத் தானே பிரிஞ்சு பேசிக்கிட்டு இருந்தவங்களைக் கூப்புட்டு பூஜையை ஆரம்பிச்சோம்.

வந்தவங்களை வரவேற்று நாலுவரி சொன்னார் கோபால். முக்கியமாச் சொன்ன புள்ளிவிவரம்(மருதைக்காரரில்ல!) இது நம்ம வீட்டில் நடக்கும் பத்தாவது பூஜை. சாமி விக்கிரகங்கள் வந்து 10 வருசமாகுது. ஆகிவந்த பண்டிட் இல்லாத்தால் துளசிதான் தாற்காலிக பண்டிட்.

பூஜைகளுக்கான சாஸ்திர சம்பிரதாயம் விவரமுள்ள புத்தகம் வாங்கிவச்சுருந்தாலும்...இடும்பிக்கு வேற வழியாச்சே.(கெத்தாப் புத்தகத்தைக் கையில் பிடிச்சிருந்தேன்) சரியாக் கண்ணில் பட்ட வரி,
'கணபதிக்குத் துளசியால் அர்ச்சனை கூடாது'

அடப் புள்ளையாரப்பா.....


ராசித் தட்டு!

கஸ்தூரி மஞ்சளில் 'பிடிச்சுவச்சப் பிள்ளையார்', 12 ராசிகளின் அடையாளம் வச்ச்ச் செம்புத் தாம்பாளத்தில் உக்கார்ந்துருக்கார். உலக மக்கள் இந்தப் பனிரெண்டில் ஒன்னா இருந்துதானே ஆகணும்? அனைவருக்கும் அருள் பாலிக்கிறார்ன்னு சிம்பாலிக்கா சொல்றேனாம்(!) 16 நாமாக்களுடன் கும்பிட்டாச்சு. அடுத்து, எல்லோருமாச் சேர்ந்து விஷ்ணு சகஸ்ரநாமம் படிக்கிறதுதான். நண்பர்,விஷ்ணு சகஸ்ரநாமத்தைக் குறிச்சு ஒரு சின்ன விளக்கம் கொடுத்தார். நம்ம வீட்டுலே கூடி இருக்கும் நண்பர்கள் இந்திய ஒருமைப்பாட்டுக்கு அடையாளமா இருந்தாங்க. உலக நாடுகளுடன் இந்தியாவுக்கு உள்ள நட்பைப் பாராட்டும் விதமா வேற்றுநாட்டு மக்களும் வந்துருந்தாங்க.

எம் எஸ். சுப்புலட்சுமி அம்மாவின்( குறைஞ்ச பட்சம் ஒருவராவது சரியான உச்சரிப்பில் இருக்கட்டுமேன்னு) குரல் பின்னணியில் ஒலிக்க, கூடி இருந்த அனைவரும் சகஸ்ரநாமம் சொன்னோம். தமிழிலும், ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் உள்ள போட்டோக் காப்பிகளை எல்லாருக்கும் கொடுத்தாச்சு. (பொதுவா வெளிநாடுகளில் நம்மாட்கள் கூடும் விசேஷங்களில் இருக்கும் இந்த பழக்கம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு)சத்தமாச் சொல்லலைன்னாலும் மனசுலேப் படிச்சுக்கிட்டே கூட வரலாமே. எப்ப முடியப்போகுதுன்னும் தெரிஞ்சுக்கலாமில்லை:-)

ஒரு அரைமணி நேரம்தான்னாலும் கீழே உக்காரமுடியலை. கால் 'மரக்காலா' ஆகிருது. வேற மாற்றுமுறை என்னன்னு பார்க்கணும்.




பிரசாதம் (உண்மையிலேயே 3 வகை சாதம்தான்)சமர்ப்பியாமி


தீபாராதனை (கற்பூரத்தை விட்டுறலாமுன்னு) ஆச்சு. கோபால், இன்னொரு நண்பரையும் அழைச்சுக்கிட்டு வேகமாக் கிளம்பறார். சாப்பாடு டெலிவரி செய்ய அங்கே யாருமில்லையாம். நாமே வந்து எடுத்துக்கணுமுன்னு ரெஸ்டாரண்ட் ஓனர் கேட்டுக்கிட்டார். அஞ்சாறு நிமிஷ ட்ரைவ்தானே? கோபால் வரும்வரை மக்கள்ஸை பாட வைக்கணுமுன்னு முன்கூட்டிய ஏற்பாடு. ஸ்வாமிக்கும் கீதம் சமர்ப்பியாமி ஆச்சு, இல்லீங்களா?

தோழிகள் ஒவ்வொருவராகப் பாட ஆரம்பிச்சாங்க. ஆஃப் கீ, ரகசியம், பரவாயில்லை, அருமை இப்படிப் பல ரகம்!


புடவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்:-)


"தும் பி காவ்னா நீலா. தும் அச்சா காத்தி ஹோ" நினைவுக்கு வந்துச்சு. (ஷபானா ஆஸ்மியின் பழைய படத்தில் ஒரு வசனம். ஷ்யாம் ரங்கு ரங்காரே....) என் அருகில் இருந்த தோழியின்( இவுங்க ரங்குதான் கோபால்கூட சாப்பாடு கொண்டுவரப் போனவர்) பொருள்பதிந்த பார்வை.
விஷயத்தைக் காதுலே முணுமுணுத்தேன். அதுக்குள்ளே கச்சேரி கேக்காமத் தப்பியோடிய ஆண்கள் சிலர் சீர்வரிசை சுமப்பதுபோல் பாத்திரங்களைத் தூக்கிக்கிட்டு அடுக்களைப் பகுதிக்குப் போறதைப் பார்த்துட்டேன்.

'சாப்பாடு வந்துருச்சு.ஸ்டாப் மூஜிக்' சொல்லலாமா?

எட்டே ஐட்டம். நான், சோறு, தால் மக்கானி, பாலக் பனீர், ஆலு கோபி,
பப்படம், வெள்ளரிக்காய் ரைத்தா, குலாப் ஜாமூன்.


இதுக்குப் பெயர் சொல்லணுமா? :-)))


பந்தி போட்டாச்சு


பரபரன்னு பந்தி போட்டுப் பரிமாறுனாங்க சில தோழர்கள்.


இன்னும் என்னம்மா செய்யணும்? சொல்லு....




பூஜையில் உக்கார்ந்துட்டதால் படம் எடுக்கவிட்டுப்போச்சு. நண்பர் ஒருவர் அங்கிருந்த கெமராவை எடுத்து க்ளிக் பண்ண ஆரம்பிச்சார். ரெண்டு மூணைத்தவிர ஒன்னும் தேறலை. ஆனால் அவரும் எடுத்துருக்காட்டி அந்த ரெண்டுமூணும் கிடைச்சிருக்காதுல்லே.... அவருக்கு ஒரு நன்றி.

மீதிக்கதை நாளைக்கு.......



மங்கைக்காக எடுத்துவச்சது. கொடுத்தனுப்ப மறந்துபோச்சு.

ஆண்டாளம்மாவுக்குக் கொலஸ்ட்ரால் விஷயம் தெரிஞ்சுருக்காது. அதான் முழங்கை நெய்வாரன்னுட்டு ............

48 comments:

said...

//(பொதுவா வெளிநாடுகளில் நம்மாட்கள் கூடும் விசேஷங்களில் இருக்கும் இந்த பழக்கம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு)//

எனக்கும் :) உங்க வீட்டு பூஜைக்கு நிஜமாவே வந்த மாதிரியே இருந்தது. நன்றி அம்மா :)

கைவலி இப்ப எப்படி இருக்கு?

said...

படங்கள் அருமை, அதைவிட விவரித்த விதம் அருமையோ அருமை.

விழாக்கள் வருவது அனைவரையும் ஒன்று திரட்டி மகிழ என்பதற்குத்தான் என்பதை உங்கள் எழுத்தும், அதற்கான பின்னனி செயலும் நன்றாக உணர்த்துகிறது.

தனித்து வாழ்ந்து என்னத்தைக் கண்டோம் என்று பலரையும் நினைக்க வைக்கும்..

//அனைவருக்கும் அருள் பாலிக்கிறார்ன்னு சிம்பாலிக்கா சொல்றேனாம்(!) //

வர வர துளசி அம்மா முற்போக்கு வாதியாக மாறிக்கொண்டு வர்றாங்க என்று நினைத்தேன். இன்னும் சில வரிகள் கூட //( அப்பாடா ஒத்தைப்படை வந்துருச்சு)// இது போல் அசத்தலாக சொல்லி இருக்கிங்க. ஆக நமக்கே தெரிகிறது, பல விசயங்களில் எல்லாம் பார்மாலிட்டிஸ் ஒப்புதல் இல்லை என்றாலும் ஒப்புக்காக செய்தாகவேண்டும் என்கிற உண்மை !

:))))

said...

சக்கரைப் பொங்கல் எனக்கு எடுத்து வச்சீங்களா...

அதென்ன உங்க ஸ்பை இவ்வ்ளோ
கடமையே கண்ணாயிரமாய்
உட்கார்ந்துட்டு இருக்கார்...அவ்ர்ட்ட தப்பிக்க முடியாது போல...

ரோஸ் கலர் பூக்கள்.. நம்ம ஊர் பன்னீர் ரோஜா மாதிரி இருக்கே?

said...

அட்டகாசம். தேசி பண்டிட் லோகல் பண்டிட் ஆயிட்டீங்களாக்கும்:)

இத்தனை அழகாப் படமெடுத்துக் கொடுத்தவருக்கு நன்றி.

என்னப் பாட்டேல்லாம் பாடினாங்க. அம்ப நீ இரங்காயெனில் புகலேது உண்டா??
பூக்கள் ரொம்ப அழகுப்பா. அது மல்லிகைதானா?
சிறப்பான பூஜாத் திலகம்னு பேரு வச்சுட்டேன் உங்க ரெண்டு பேருக்கும். அடுத்த பூஜைக்கு நான் கட்டாயம் வரேன்பா:)

said...

வாங்க கவிநயா.

பூஜைக்கு வந்ததுக்கும், கைவலி விசாரிச்சதுக்கும் நன்றிப்பா.

யானைக்கால் மாதிரி யானைக்கை வியாதி வந்துருக்கு. அங்கே கால்ஸியம் சுரங்கம் இருக்காம்.!

said...

வாங்க கோவியாரே.

சந்நியாஸிக்குச் சடங்குகள் தேவை இல்லைன்னு சொல்வாங்க.

கடவுளைப் பத்தி நினைச்சுக்கிட்டே போனோமுன்னா.....கடைசியில் ஒன்னுமே இல்லாத ஒரு வெற்றுவெளியில் நிற்போம். ஆன்மீகம் முற்றினாவே அடுத்தபக்கம் போயிருவோம்னு தோணுது.

அதைத்தான் உரிக்க உரிக்க ஒன்னுமில்லாத பொருளாச்சொல்லி இருக்கார் ஒரு பெரியவர்.

பலவிஷயங்கள் ஏன்னு கேள்விகேக்காம தொடர ஆரம்பிச்ச சம்பிரதாயங்கள்தான். குடும்பப்பழக்கம்
ஆரம்பிச்சது எல்லாம் இப்படித்தானே?

ஒருவேளை மகள் கொலுவைக்கும் நாள் வந்தால்(!!!) எங்க வீட்டுலே யானைக்கொலுதான் வைக்கறது வழக்கமுன்னு சொல்வாளோ என்னவோ:-))))

said...

கலக்கிட்டிங்க டீச்சர் ;))

\\எட்டே ஐட்டம். நான், சோறு, தால் மக்கானி, பாலக் பனீர், ஆலு கோபி,
பப்படம், வெள்ளரிக்காய் ரைத்தா, குலாப் ஜாமூன்.\\

அட நானும் இருக்கேன் போல!! ;)))

ஆனா எனக்கு பிடிச்ச அயிட்டம் (குலாப் ஜாமூன்) இருக்கு அதை நான் எடுத்திகிறேன்.

said...

வாங்க மங்கை.

செஞ்சதும் சுடச்சுட எடுத்துவச்சாச்சு உங்களுக்கு. பெருமாள் கோயில் சக்கரைப் பொங்கலாச்சே, குணம் மனம் உள்பட.

கொடுக்க மறந்துட்டேன் (பிஸியா இருந்துட்டேன்னுத் தனியாச் சொல்லணுமா?)

இதோ இப்ப கொடுத்தாச்சு. பதிவை ஸ்க்ரோல் பண்ணிக்கிட்டே வாங்க......கடைசியில் (கோபால் கட்டுன பட்டு வேஷ்டி ஜரிகைபோல மின்னுதே) ஆங்... அதுதான்:-)

அது என்னவோப்பா..... சக்கரைப்பொங்கலுன்னா மங்கை, கேசரின்னா அம்பி, போண்டான்னா டோண்டு, வடைன்னா துளசி இப்படி நினைவுகள் வர்றதைத் தடுக்க முடியலை.

புதுப் பதிவாப்போட நல்ல ஐடியா வந்துருச்சு. உணவு வகைகளில் யார்யாருக்கு எது விருப்பமுன்னு கேட்டுறலாம்:-)


பார்க்க ரோஜா மாதிரியே இருக்கும் பூக்கள் 'கெமீலியா'. இது குளிர்காலப்பூ வகை.

said...

வாங்க வல்லி.

படம் எடுத்தவர் எடுத்ததில் சுமாராத் தேறுன ரெண்டைப் பதிவில் போட்டுருக்கேன். (மக்கள்ஸ் எல்லாம் பூஜையில் இருப்பது, ரங்குகள் கையில் ப்ரிண்ட் அவுட் வைத்திருப்பது)

மீதி எல்லாம் இந்தத் தங்குவின் உபயம்தான்:-)

said...

வல்லி,
கட்டாயம் வாங்கப்பா. எப்ப வந்தாலும் ஸ்பெஷல் பூஜைக்கு ரெடி பண்ணிறலாம். பிரச்சனை இல்லை:-)

said...

வாங்க கோபி.

ஆலு மட்டர் வச்சுக்கலாமான்னு கேட்டதுக்கு நாந்தான் ஆலூ'கோபி' இருக்கட்டுமுன்னு சொன்னேன்:-)

நாப்பதையும் எடுத்துக்குங்க பிரச்சனையே இல்லை.

said...

நான் பூஜைக்கு வந்தபோது எடுத்த படத்தைப் போடலியே?.. ;))

படங்கள அருமை... குலோப் ஜாமூனைப் பார்த்ததும் ஏக்கமாகிடுச்சு..ம்ம்ம்ம் எம்புட்டு நாளாச்சு சாப்பிட்டு.. ஊருக்குப் போய் பாத்துக்கிறேன்.

கோகி படம் டாப் டக்கர்!

said...

அருமையான நிகழ்வு! விவரித்த விதமும் அருமை (இன்னும் பார்ட் பார்டா நிறைய விசயங்கள் இருக்குல்ல!)

மீ த வெயீட்டீங்க்!

(குலோப் ஜாமுன் கூட பார்சல் பண்ணலாம் !- வெயிட் பண்றதுக்கு!)
:)))

said...

/புடவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்:-)//


அதானே பார்த்தேன்!:)))))

நோட் பண்ணியாச்சா!

(வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்தாச்சுல்ல!)

said...

//மங்கை said...
சக்கரைப் பொங்கல் எனக்கு எடுத்து வச்சீங்களா...

//

எனக்கும் :))

said...

உங்க ஸ்பை அழகா போஸ் கொடுத்திக்கிட்டு!

எல்லாரையும் அங்க உக்காந்து வாட்ச் பண்ணிக்கிட்டுத்தான் இருந்துச்சா???

said...

உள்ளேன் ரீச்சர்!

said...

ஆண்டாளம்மாவுக்குக் கொலஸ்ட்ரால் விஷயம் தெரிஞ்சுருக்காது. அதான் முழங்கை நெய்வாரன்னுட்டு ............
//

:))))))))))))))))))))))

said...

\\எப்ப முடியப்போகுதுன்னும் தெரிஞ்சுக்கலாமில்லை:-)//

சரியாச்சொன்னீங்க..

:) விழா விமரிசையா நடந்திருக்கு ... தலைப்பு சூப்பர்.

said...

இலவசம், பார்த்தாயா தம்பி துளசி அம்மையார் கோவியாருக்கு தந்த பதிலை? இதுதானடா நுண்ணரசியல். அப்பாவி என்ற
பட்டம் சூட்டிக் கொண்டு வலையுலகில் வலம் வரும் அம்மையாரின் வேடம் கலைந்துவிட்டது பார். அதிக நாட்கள் மக்களை ஏமாற்ற முடியாது என்பது அம்மையாருக்கு தெரியவில்லை. மக்கள் இனி விழித்துக் கொண்டு விடுவார்கள்.

said...

புடவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்:-)//


அதானே பார்த்தேன்!:)))))

நோட் பண்ணியாச்சா!

(வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்தாச்சுல்ல!)
ஆயில்! வளைச்சி வளச்சி போட்ட எடுக்க துளசி ஆண் இல்லை. அதெல்லாம் ஓர கண்ணால் பார்த்து மனசுல நோட் பன்ணி வெச்சிக்கிட்டு, சத்தமில்லாம வாங்கி பீரோவுல ஏத்திடுவோமில்லே :-)

said...

வாங்க தமிழ் பிரியன்.

உருவமா வந்தாவே எனக்குக் கண்ணு தெரியாது(கண்ணாடியை மாத்தணும்) இதுலே அருவமா வந்தா எப்படி?

ஒரு குரல் கொடுத்துருக்கக்கூடாது?
(எனக்குக் காது நல்லாத்தான் கேக்குது. அதான் இயர் பட்ஸை எடுத்தாச்சே)

கோகி இல்லாம வீடே இல்லைன்னு ஆகிப்போச்சு. தினம் சாப்பிடும்போது வந்து நின்னுத் தட்டைப் பார்த்துட்டு, 'சீச்சீ... இதையா திங்கறே?' ன்னு ஒரு பார்வை வீசிட்டுப்போகும்.

said...

வாங்க ஆயில்யன்.

குலாப் ஜாமூன் ஃப்ரீஸ் செஞ்சாலும் ஒன்னும் ஆகறதில்லை. ஃப்ரீஸரோடு அனுப்பவா?

இல்லேன்னா ஹல்திராம் அங்கிள் டின் கட்டறார். அங்கேயும் கட்டுவாருன்னு நினைக்கிறேன்.

பொங்கல் எனி டைம் ஓக்கே. அதெல்லாம் பொங்கிருவோம்லெ:-)

ஏஜெண்ட் 009 தோட்டத்தில் ஓய்வெடுத்துக்கிட்டு இருந்தார். கோஷ்டிகானம் ஆகலையாம். விருந்தினர் விடைபெறும் சமயம் வந்து அட்டெண்ட்டன்ஸ் எடுத்தார்:-)

said...

வாங்க கொத்ஸ்.
ஆஜர் பதிவேட்டைக் காணோம்(-:

said...

வாங்க புதுகை அப்துல்லா.

என்ன சிரிக்கிறீங்க?
அந்தக் காலத்தில் எந்தக் கவலையும் இல்லாம வாய்க்கு ருசியாத் தின்னுட்டு வேளைவந்தாப் போயிரும் வாழ்க்கையே மேலுன்னு இப்பத் தோணுது.

அதைத் திங்காதே, இதைத் திங்காதே, சுருக்கமாச் சொன்னா எதையும் திங்காதேன்னு இருந்துக்கிட்டு........ஹூம்....

said...

வாங்க கயலு.

சிலர் ரெஸ்ட்லெஸ்ஸா இருப்பதை ஓரக்கண்ணால் பார்த்துருக்கேன். சிலருக்கு வெளிப்படையாச் சொல்றதும் உண்டு. வெரி லாங் ப்ரேயர். யூ கேன் கம் லிட்டில்பிட் லேட்டுன்னு.

ஆனாலும் வெள்ளைக்காரர் ஒருவர், புரியலைன்னாலும் கேக்கறப்ப மனசுக்கு பீஸ்ஃபுல்லா இருக்குன்னு சீக்கிரம் வந்துருவார்.

எல்லாம் அவரவர் ,மனசுக்குத் தோணியபடி:-))))

said...

//தலைப்பு அருளுதவி: கோபால்:-)//

உங்கள் தலைப்பு அருளுதவியால் நான் இன்னிக்கு ஒரு பதிவைப் போட்டேன்.

:)

said...

வாங்க உஷா.

அருமை மாணவருக்குப்போட்டுக்கொடுப்பது நல்லா இல்லே ஆமாம்.....:-)

ப்ரூஃப் ரீடரா இருந்த அனுபவம் இப்பப் பேசுது. ஆனா அது ஆங்கிலத்தில்.
'அதே கண்கள்' இப்போத் தமிழையும் கண்காணிக்குதுப்பா.

சொற்பிழை இருந்ததால் வந்த திருத்தம்

said...

உஷா,

ஆயிலுக்கு நல்லாச் சொல்லுங்க:-))))

இப்பெல்லாம் ஞாபகசக்தி குறைவா இருக்குன்னுதான் படம் எடுத்துவச்சுக்கறது. வேணும் என்ற டிசைனும் கலரும், வாங்கும்போது மறந்துறக்கூடாதுல்லே?

பீரோவுலே ஏத்தும் வழக்கத்தை குறைக்கணும்ப்பா.

said...

வாங்க கோவியாரே.

கோபால சாமியாரின் 'அருள்' உங்களுக்கும் கிடைத்ததில் மகிழ்ந்தோம்:-)

said...

உஷா, நுண்ணரசியல்னா இதுதானா:))))

இதுக்குக் 'கண்டுக்கறதுனு' ஒரு பேரு உண்டே????

துளசிம்மா, ஆண்டாளுக்கென்ன சொல்ல்லிட்டுப் போயிடாங்கன்னு சொன்னதும் 'பக்' என்றிருந்தது. நம்ம பூர்வாசிரமப் பேரையும் கொலஸ்ட்ராலையும் ஒண்ணு சேர்க்கிறாங்களேன்னு:))))

பாலு காய்ச்சி,தயிர் உறை குத்தி, கடஞ்செடுத்து,வெண்ணையையும் உருக்குனாங்க. வேலை செய்யத் தெம்பு இருந்தது!!
சாப்பிட்டாலும் செரிமானம் ஆச்சுது. என்னை மாதிரி பொட்டியைத் தட்டிக்கிட்டு, பேரன்களோட விளையாடிகிட்டு சாஅப்பிடவும் செய்தா கொலெஸ்ட்ரால் சார் காத்திட்டு இருக்கார்.

கைல கால்சியமா!!!!
ஓஹோ!!!!
ஊசி கீசி போடறேன்னு சொன்னா ஒத்துக்காதீங்க.பிரயோஜனமே கிடையாது.
தங்கமணிதான் போட்டோவா. பூக்கள்தாம்பா மனசைத் திருடுது.

said...

நாங்களும் உங்க வீட்டு பூஜையில கலந்துகிட்ட உணர்வு டீச்சர்... என்ன, அந்த ஜாமுனைத்தான் டேஸ்ட் பண்ண முடியல :)))

said...

//சத்தமாச் சொல்லலைன்னாலும் மனசுலேப் படிச்சுக்கிட்டே கூட வரலாமே. எப்ப முடியப்போகுதுன்னும் தெரிஞ்சுக்கலாமில்லை:-)//

ஹிஹி!
நான் பண்ணுறதை எல்லாம் இப்படி பப்ளிக்கா பதிவுல சொன்னா எப்பிடி டீச்சர்?

யாராச்சும் வீட்டுல விருந்து-ன்னு கூப்பிட்ட பொறவு, இப்படி புக் எல்லாம் கொடுத்து படிக்கச் சொன்னா, நாங்க கடைசி பக்கத்தைத் தான் முதலில் பார்ப்போம். இன்னும் எத்தனை பக்கம் இருக்கு? இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்? அது வரை யாரோடு பேசலாம்?....

சாரி...பின்னூட்ட நேரமில்லை!
குலாப் ஜாமூன் இஸ் வெயிட்டிங் ஃபார் மீ...

said...

ஆஹா இவ்வளவு நண்பர்கள், விருந்து வெட்டிப்பேச்சு எனக்கு கொடுத்து வெக்கல.

நான் இப்போ இருக்கிற ஊர்ல அவ்வளவா இந்தியர்கள் இல்லை.
கொஞ்சம் பேர இங்க அனுப்பி வைங்க டீச்சர் நிறைய சாப்பாடு கொடுத்து

said...

உஷாக்கா

மாதா பிதா குரு தெய்வம் அப்படின்னு சொல்லுவாங்க. இங்க மாதாமகியே குருவா இருக்கறதுனாலதான் நான் பேசும் கொஞ்சம் நுண்ணரசியலும். அதெல்லாம் தெரியாம இல்லை. என்ன இந்த மாதிரி அப்பாவி வேஷம் போட்டுக்கிட்டு நுண்ணரசியல் பேசறதுதான் நமக்கு வர மாட்டேங்குது. அதான் புல்லி, இணையக்கிரிமினல் அப்படின்னு ஏகப்பட்ட பட்டங்கள்! :))

said...

துளசி,

அருமை அருமை - பூஜை அருமை
கொண்டாடிய விதம் அருமை
விவரித்த விதம் அதை விட அருமை
கோபால் கூட உதவி செய்தது அருமை
கண்காணிப்பாளர் கடமையைச் செய்தது அருமை
படங்கள் அருமை
பதார்த்தங்கள் அருமை
விருந்தினர் அருமை
சமர்ப்பயாமி எல்லாம் அருமை
ஒத்தப்படை அருமை
பேசியதைப் பதிவிட்டது அருமை
புள்ளி விபரங்கள் அருமை
பண்டிட் ஆன கதை அருமை
சகஸ்ரநாம விளக்கம் அருமை
எம் எஸ் அருமை
போட்டோ காப்பிகள் அருமை
ராசித்தட்டு அருமை
பிடித்துவைத்த பிள்ளையார் அருமை
அவரது சமர்த்து அருமை
கஸ்தூரி மஞ்சள் அருமை
மரக்கால் அருமை
எட்டு அயிட்டமும் அருமை

துளசியால் மட்டுமே இவ்வளவு அருமைகள் தரமுடியும் - அதுவும் அருமை

said...

வல்லி,

நம்ம வகுப்பிலே 'நுண்ணரசியலை' நல்லாப் புரிஞ்சுக்கிட்டீங்க போல:-))))

ஊசி கீசி எல்லாம் இல்லைப்பா. இதுக்கு மருந்து இல்லைன்னு டாக்குட்டரம்மா சொல்லிட்டாங்க.

சுரங்கம் வச்சதுதான் வச்சதே அது தங்கமா இருக்கக்கூடாதா? வெறும் சுண்ணாம்பூ........ வெறுத்துப்போச்சுப்பா.

பூர்வாசிரமத்தை மறக்கமுடியுமோ:-))))

said...

வாங்க வெண்பூ.

//என்ன, அந்த ஜாமுனைத்தான் டேஸ்ட் பண்ண முடியல //

நான் பண்ணிட்டேன். நல்லாத்தான் இருந்தது:-)))

said...

வாங்க கே ஆர் எஸ்.

மாணவர்களைப் பற்றி டீச்சருக்குத் தெரியாதா?

'தாயறியாத சூல் இல்லை':-)

தாய்ன்னதும் நினைவுக்கு வருது. ஊருலே விசேஷம் நல்லா மனசுக்குத் திருப்தியா நடந்ததா?

said...

வாங்க குடுகுடுப்பை.

இந்தியர்கள் வேணுமா? தாராளமா அனுப்பிரலாம். இங்கேயும் பலரை எப்படித் தள்ளிவிடறதுன்னு யோசனையா இருந்தேன். தீர்ந்தது என் பிரச்சனை:-))))

இந்த 21 வருச நியூஸி வாழ்க்கையில் கற்றதும் பெற்றதும், ஐயோ...வேணான்னு போனதும் நிறைய:-)

said...

எந்தமாதிரி அப்பாவி வேஷம் கொத்ஸு?

said...

வாங்க சீனா.

அருமை அருமை என்று வரிசைப்படுத்தி வரிவரியாப் பாடிட்டீங்களே..

உங்க 'பாட்டு' அருமை.

கேபிஎஸ் நினைவுக்கு வராங்க. 'என்ன என்ன என்ன என்ன'ன்னு கேக்காதீங்க:-)

said...

வெளிநாட்டில் இருந்து கொண்டு நீங்க அழகாகக் கடைப்பிடிக்கும் சம்பிரதாயங்கள், விருந்தோம்பல் போன்ற விவரிப்புகள் இங்கே பல குடும்பங்களில் குழப்பம் உண்டாக்கி விடும் போல் இருக்கிறதே.

தலைப்புக்கான மேட்டர் அடுத்த அத்தியாயத்திலா? படிக்கிறேன்.

said...

வாங்க ரத்னேஷ் சீனியர்.

இந்த சம்பிரதாயங்கள் எல்லாம் என்னோடு முடிஞ்சிரும். குடும்பச் சங்கிலியின் கடைசி லிங்க்.

மகள் இதையெல்லாம் செய்யமாட்டாள். அவள் ஒரு atheist ன்னு சொல்லிக்கறாள்.

கடவுளுக்காக இதைச் செய்யறோமுன்னு நான் சொன்னாலும் கடவுள் என்ற ஒன்று ஒவ்வொருவருக்கும் தனி 'அனுபவம்' தானே?

அதான் உடம்பில் சக்தி இருக்கும்வரை, முடிஞ்ச அளவில் செஞ்சுக்கலாமுன்னு......

விழாக்கள் ஏன் நடத்தறோமுன்னு கோவியார் சொல்லி இருப்பதுதான் பொருத்தமா இருக்கு.
//விழாக்கள் வருவது அனைவரையும் ஒன்று திரட்டி மகிழ என்பதற்குத்தான்...//

சரியாச் சொல்லிட்டார் இல்லை?

said...

பூஜைக்கு புளியோதரை கிடையாதா?? ;)

said...

வாங்க ஸ்ரீமதி.

இங்கே புளியை விட எலுமிச்சம்பழம் மலிவு:-)))))

வேலையும் எளிது:-))))

said...

இந்த முறை ஓகே... ஆனா நெக்ஸ்ட் பூஜைக்கு எனக்கு கண்டிப்பா புளியோதரை வேணும்..!! :))

said...

கவலையை விடுங்க ஸ்ரீமதி.

நான் நல்லாவே காய்ச்சுவேன்.(புளிக்காய்ச்சலைச் சொல்றேன்)

கிளம்பி வாங்க. பிரமாதப் படுத்திறலாம்:-)