Wednesday, December 03, 2008

அக்கா ( பாகம் 6)

மாமா ஒரு வேலையும் செய்யமாட்டாருன்னு நான் சொன்னதை வாபஸ் வாங்கிக்கணும். அந்தூருலே வாரச்சந்தை, திங்கக்கிழமை கூடும். சந்தை கூடும் இடம் ஆசுபத்திரிக்குப் பக்கத்துலே இருக்கும் மைதானம். இதைத் தொட்டு ஒரு ஆரம்பப்பாடசாலையும் இருக்கு. பள்ளிக்கூடம் திங்கள் மதியத்துக்கு மேலே லீவு. சந்தைக்கூட்டம் பிள்ளைங்களுக்குத் தொந்திரவா இருக்குமுல்லே?

வாராவாரம் சந்தைக்குப்போய் சாமான் வாங்கிவர்றது மாமாவோட வேலை. நானும் ராணியும் கூடவே நாலைஞ்சு பைகளைக் கொண்டு போவோம். காய்கறி, வெங்காயம் பூண்டுன்னு வாங்கி அந்தப் பைகளில் பாதி வரை ரொப்புன ஒன்னை நான் தூக்கிக்குவேன். கனமான சிலது மாமா. நம்ம ராணிக்கும் ஒரு பெரிய பை. கவலைப்படாமத் தூக்கிக்கிட்டு வருவாள். அதுலெ என்ன இருக்குமுன்னு சொல்லுங்க பார்க்கலாம். பொரியும், பொரிகடலையும். வறுத்த நிலக்கடலை ஒரு உழக்கு தனியா வாங்கிக்குவார். அது அக்காவோட ஸ்பெஷல்.

நம்ம பக்கத்துவீட்டு கணேஷ் சாரும் சந்தைக்கு வந்துக் கொஞ்சம் சுத்திட்டு, கொஞ்சம் காய்கறின்னு வாங்கிக்குவார். அவரும் பொரி, நிலக்கடலை ரெண்டும் சேர்த்து ஒரு பெரிய பொட்டலம் வாங்குவார். கோமாளித் தொப்பி மாதிரி கூம்பா இருக்கும் இந்தப் பொட்டலம். அன்னிக்கு அவருக்கு ராச் சாப்பாடு பொரிதான். கூம்பை ஒரு கையில் புடிச்சுக்கிட்டு, இன்னொரு கையாலே பள்ளிக்கூட வேலைகளைப் பார்த்துக்கிட்டோ, இல்லை பொஸ்தகம் எதானும் படிச்சுக்கிட்டோ பொரியை அள்ளி அள்ளி வாயிலே போட்டு அரைச்சுக்கிட்டு இருப்பார். அரிக்கேன் விளக்கு ஒன்னு அவரோட ட்ரங்குப் பொட்டி மேலே உக்காந்துருக்கும். அதுதான் அவரோட மேஜை. அது கல்லு வீடுல்லே.... பக்கவாட்டுலே ஒரு ஜன்னல் இருக்கு. அதுவழியாத் தெரியறதுதான்! பச்சைக் காய்ங்க எதுவும் ஒருவாரம் வரை தாங்காதுன்றதாலே எல்லாரும் ரெண்டு மூணு நாளைக்கு வர்றமாதிரிதான் வாங்கறது.

வாரத்துக்கு நடுவுலே காய் எதாச்சும் வேணுமுன்னா, இன்ஸ்பெக்டர் வீட்டுலே போய் வாங்கி வருவேன். அவர் டீவோவா இருந்து ரிட்டயர் ஆனவராம். நல்ல நாய் இருக்கு அங்கே. முதல்லே ரெண்டு வாட்டி என்னைப் பார்த்துக் குரைச்சது. அப்புறம் அடிக்கடி அங்கே போனதுலே பழகிருச்சு. இன்ஸ்பெக்டரம்மா நல்லா தாட்டியா இருப்பாங்க. என்ன வேணுமுன்னு கேட்டுக்கிட்டு அவுங்களே போய் காய்களைப் பறிச்சுக்கிட்டு வந்து தருவாங்க. நாங்க யாரும் கூடப்போய்ப் பார்க்க விடமாட்டாங்க. 'நான் வர்றவரை இங்கே உக்காந்துரு'ன்னு சொல்லிட்டுப் போவாங்க. நான் அந்த டைகர் கூட விளையாடிக்கிட்டு இருப்பேன். முருங்கைக்காய், கத்தரிக்காய், முள்ளங்கி, முளைக்கீரை பூசணிக்காய், அவரை, புடலைன்னு அங்கே கிடைக்கும்.

இந்தப் பேட்டை எனக்கு நல்லாப் பழகிருச்சு. ரெண்டு மூணு வீட்டுலே பன், பிஸ்கட்டு எல்லாம் செஞ்சு கடைக்குப் போடுவாங்க. வீட்டுக்கு வெளியே பெரிய சமாதிபோல கட்டி இருக்கும். நான்கூட மொதப் பார்த்தப்ப அங்கெ யாரையோ புதைச்சுருக்கு நினைச்சேன். அப்புறம் பார்த்தா தகரத்துலே ஒரு குட்டிக் கதவு இருக்கு. அதுக்குள்ளே தான் பன் மாவைத் தகரத் தட்டுலே அடுக்கி உள்ளே வைச்சு எடுக்கறாங்க. சூடா பன் வாசனை நல்லா இருக்கும். சிலநாள் அங்கே போய் வாங்கிக்கிட்டு வருவேன். ஒரே ஒரு பொட்டிக்கடை இருந்துச்சு. துணி துவைக்க நீலக்கலர் பார் சோப் அங்கே வாங்குவோம். 'நிப்பட்டு' அங்கே நல்லா இருக்கும். சோம்பலே இல்லாம ஓடிப்போய் ஓடி வருவேன்.

அந்த ஏரியா முழுசும் செம்மண் பூமி. வெறுங்காலுலே நடந்து நடந்து காலெல்லாம் மண்ணு புடிச்சுக் கிடக்கும். 'செருப்புப் போட்டுக்கிட்டுப் போ'ன்னு அக்கா கத்தும். செருப்பை கூரைச் சரிவிலே உள்புறமா சொருகி வச்சுருப்போம். அதை எடுத்தாவே தரணி கண்டுக்கும். அக்கா எப்பவும் பாதித்துணிக்குச் சோப் போட்டுக்கிட்டு இருக்கும்போதுதான், 'சோப் பத்தாது, ஓடிப்போய் வாங்கியா'ன்னும். நம்ம லைன் தான் ஊருக்கே கடைசி. அங்கெ இருந்தே சோளக்காடுதான் கண்ணுக்கு எட்டுன தூரம் வரை. ரொம்ப தூரம் காட்டுக்குள்ளே போனா ஒரு எட்டி மரம் வரும். அதுதான் இந்தப் பகுதிக்கு கொல்லைக்காடு. ஆளுக போய்வந்தே சோளக்காடுலே ஒரு ஒத்தயடிப் பாதை உரம்புடிச்சுக் கிடந்துச்சு. வீட்டுலே ஒரு காந்திக் கக்கூஸ் கட்டிக்கலாமுன்னு அக்கா கேட்டுக்கிட்டே இருந்துச்சு. அடுத்தவருசம் பார்க்கலாமுன்னு மாமா சொல்லிக்கிட்டே இருந்தார். அக்கா எப்பவும் இருட்டோட எந்திருச்சு போயிட்டு வந்துரும். ஒருதடவை 'சரசர'ன்னு ரெண்டு பாம்பு பின்னிப்பிணைஞ்சு போறதைப் பார்த்தது முதல் டார்ச் லைட் எடுத்துக்கிட்டு போக ஆரம்பிச்சது.

பள்ளிக்கூடத்துலே என்னைச் சேர்க்கறதுக்கு முன்னாலே மூணு செட் பாவாடை சட்டைத் துணி எடுத்துத் தைக்கக் கொடுத்துருந்தோம். இப்பப் பொழுதெல்லாம் தேவை இருக்கோ இல்லையோ, துணிமணிகளை வாங்கிக் குவிச்சுக்கிட்டு இருக்கோமே அப்படியா அந்தக் காலத்துலே? தீபாவளி, பொங்கல், பொறந்தநாள் இப்படித்தான் துணிமணி எடுப்பாங்க. பள்ளிக்கூடம் திறக்கச்சொல்ல அதுக்குன்னு ரெண்டு மூணு சட்டைத்துணி.

அக்காவுக்கும் புள்ளைங்களுக்கும் மாமாவே துணிமணி எடுத்தாருவார். பொதுவா ஆம்புளைங்களுக்குத் துணியில் 'கலர் பார்க்கத்' தெரியாது. என்னவோ ரெண்டு நூல்புடவை, அதுக்குக் கொஞ்சமும் பொருத்தம் இல்லாத ஜாக்கெட்டுத் துணின்னு இருக்கும். அக்கா ஒன்னுமே வாயைத் திறந்து சொல்லாது. பேசாம வாங்கிவச்சுக்கும். இதே எங்கூட்டுலே இருந்தப்ப?

அப்பவும்தான் அக்கா கடைகண்ணிக்குப்போய் துணி எடுக்கக் கூட வராது. ஆனா அம்மா, கடைக்காரப்பையன் கிட்டே ஏழெட்டு எடுத்து வீட்டுக்குக் கொண்டுவரச் சொல்வாங்க. உள்ளூர் மருத்துவர்ன்னா ஒரு மரியாதை இருந்துச்சுல்லே. கடையிலும் வியாபாரம் ஆகணுமே. அவுங்க சொன்னதுக்கு ரெட்டையா நல்லதுகளையெல்லாம் மூட்டைகட்டிக்கிட்டு கொண்டாந்துருவாங்க. அந்தப் புடவைகளைப் பார்த்து அக்கா தனக்குப் பிடிச்சதை ரெண்டு மூணு எடுத்துக்கும். சின்னக்காவும் நானும் கடையிலேயே போய்ப் பார்த்து எடுத்துக்குவோம்.

புள்ளைங்க பாடு பிரச்சனையே இல்லை. அதான் அடுக்கடுக்கா இருந்துச்சுங்களே. அதுங்க வளர வளர நல்ல கவுனுங்க கைமாறிக்கிட்டே வரும். தினப்படிப் போட்டுக்கும் சீட்டி கவுனுங்க, இதுங்க பிரட்டற பிரட்டலில் நாலுமாசம் வந்தா ஜாஸ்தி. எனக்குத் துணி எடுக்கணுமுன்னதும் நான் மாமாகூடவே போய் வாங்கியாந்தேன். அங்கெல்லாம் கடைக்காரரே, பசங்களைப் பார்த்துட்டு, எவ்வளவு துணி எடுக்கணுமுன்னு சொல்வார். நாலுகெஜம் வேணும். வளர்ற புள்ளையில்லே. பாவாடைக்கு டக் வச்சுத் தைச்சுக்கிட்டா வேணுங்கறப்பப் பிரிச்சுவிட்டுக்கலாம்னு. சரி...இது கிடக்கட்டும். எங்கே விட்டேன்......

அந்த தையல்காரர் பெயர் மன்னார். அவுங்க வீட்டுலே வீட்டுக்குள்ளேயே ஒரு பெரிய பாம்புப் புத்து, கூரையை தொடும் அளவில் இருக்கும். மனைப் பாம்பாம். மஞ்சள் குங்குமம் எல்லாம் புத்துக்கு பூசி வச்சுருப்பாங்க.....
மேல்சட்டை இல்லாம, ஒரு துண்டைக் கழுத்துலே போட்டுக்கிட்டு, வீட்டுக்கு முன்புறம் நாலைஞ்சு தென்ன ஓலைப் போட்டுருக்கும் பந்தலில் தைய்ய மிஷினைப் போட்டுக்கிட்டுத் தைப்பார். சுருள் சுருளா ஸ்பிரிங்குத் தலைமுடி அவருக்கு. நம்மூட்டுலே எல்லாருக்கும் அவர் தச்சுக் கொடுக்கறதுதான். நம்மூட்டுக்குப் போகும் வழியிலேதான் பாம்பு வீடுன்றதால் பகல் நேரத்துலே அந்தப் பக்கம் போனால் உள்ளே எட்டிப் பாப்பேன்,சினிமாவில் வர்றதுபோலப் புத்துலே பாம்பு உக்கார்ந்துருக்கான்னு. ஒருநாளும் அது கண்ணுலே அகப்படலை.


பள்ளிக்கூடம் திறந்த மொத நாள் மாமா கூட்டிட்டுப்போய் சேர்த்துவிட்டார். வகுப்புக்குப் போய் உக்காந்தா எல்லாம் புது முகங்கள். பெல் அடிச்சதும் மொத்தப் பள்ளிக்கூடமும் முன் மைதானத்துலே கூடி கடவுள் வாழ்த்து, தலைமை ஆசிரியர் பேச்சு எல்லாம் ஆச்சு. திரும்ப வகுப்புக்குப்போய் உக்கார்ந்தோம். புது சார் எங்களுக்கு வகுப்பாசிரியர். அவர் உள்ளே நுழைஞ்சதும் எனக்கு திடுக்குன்னு ஆகிப்போச்சு. நம்ம டெய்லர் இங்கெ எங்கெ வந்தார்?

எனக்குக் கண்ணு பொட்டையாத்தான் போயிருக்கு. இவர் எங்கே அவர் எங்கே? போனவருசம்தான் பி.டி. முடிச்சாராம். கலியாணம் ஆகி ரெண்டு மாசம் ஆச்சாம். எங்களுக்கு வகுப்பு ஆசிரியரா வந்ததுக்கு ரொம்ப மகிழ்ச்சியாம். நங்க எல்லாம் அமைதியா(!) வகுப்பில் உக்கார்ந்து இருப்பதே சொல்லுதாம் நாங்க எவ்வளவு நல்ல மாணவர்கள்ன்னு. சுய அறிமுகம் செஞ்சுக்கிட்டார். இவர் பெயர் திருமால். ரொம்ப ஸ்டைலா, ஸ்மார்ட்டா இருந்தார். தலையில் சுருள்சுருளா ஸ்பிரிங்கு போல முடி.

வீட்டுக்கு வர்றவழியில் மன்னார் வழக்கம்போல, வெளியே துணிகளைத் தச்சுக்கிட்டு இருந்தார். வந்து அக்காகிட்டே 'எல்லாத்தையும்' சொன்னேன். திருமால் சாரும் மன்னாரும் ஒருத்தரா இல்லையான்னு எனக்குப் பயங்கர சந்தேகம். அக்கா விழுந்துவிழுந்து சிரிச்சாங்க.

மாமாதான் திருமால் சாருக்கு நம்ம வீட்டுக்கு இடதுபுறம் இருந்து ஆரம்பிக்கும் தெருவில் வாடகை வீடு பார்த்துக் கொடுத்தார். அந்த உரிமையில் நானும் ராணியும், அக்கா கொடுத்து அனுப்புன பூவை எடுத்துக்கிட்டு அவர்வீட்டுக்குப் போனோம். வாத்தியார் வீட்டம்மா கதவைத் திறந்தாங்க. பாவாடை தாவணி போட்ட ஒரு அக்கா! ரொம்ப அழகா இருக்காங்க. திருமால் சாரும் பகல்தூக்கத்துலே இருந்து எழுந்துவந்தார். கொஞ்ச நேரம் எங்களைப் பத்தி விசாரிச்சுக்கிட்டு இருந்தார். திங்கறதுக்கு என்னமோ கொடுத்தாங்க. சார் முன்னால் வச்சுத் திங்க எனக்கு வெக்கமா இருந்துச்சு. ராணிதான் ஒன்னுவிடாம எல்லாத்தையும் வேட்டுவச்சாள். சிமெண்டுத் தரையோடு வீடு நல்லா இருந்துச்சு. புது வீடு. சீமை ஓடு போட்டக் கல்வீடு.

அடிக்கடி வந்துட்டுப்போன்னு அந்த அக்கா சொன்னாங்க. சரின்னு தலையாட்டுனேன். கொஞ்சநாள் கிணத்தடி லேடீஸ் க்ளப்புலே திருமால்சார் வீட்டு அக்கா, பாவாடைதாவணியில் இருக்கறதே பேச்சா இருந்துச்சு. கல்யாணம் ஆனபிறகு புடவைதான் கட்டணுமாமே!!

தொடரும்.........

62 comments:

said...

அப்படியே எங்க ஊரிலே நடக்கிற மாதிரியே இருக்கு, ரெம்ப இயல்பாகவும் அருமையாகவும் இருக்கு

said...

'நிப்பட்டு' ன்னா என்ன?

said...

இயல்பா வந்திட்டு இருக்கு.
அவசரப்பட்டு நிறுத்திவிடாதீங்க.

said...

பதிவு ரொம்ப நீளமாயிட்ட போகுதோ டீச்சர்.

திங்கள் சந்தையார் பாவந்தான்.

படிக்காம போடர முதல் செல்லாது நசரேயன்.

said...

நிப்பட்டுன்னா என்ன?

said...

வாங்க நசரேயன்.

ஒரு நாப்பது நாப்பத்தியஞ்சு வருசத்துக்கு முன்னாலே அநேகமா எல்லா ஊரிலும் வாழ்க்கை இப்படித்தான் இருந்துருக்கும்.

இந்த டிவிச் சனியன் வீடுபுகாத காலமில்லே!!!

said...

வாங்க பழமைபேசி.

இது என்ன நம்ம அக்கா 'ஜொலிக்கிறாங்களே'ன்னு பார்த்தேன்.

நட்சத்திரமே வந்ததுக்கு நன்றி.

தட்டை(முறுக்கு)ன்னு ஒரு பலகாரம் இருக்கு பாருங்க. அதைத்தான் நிப்பட்டுன்னு சொல்வது.

said...

வாங்க சிஜி.

பேராசிரியர் சொன்னா, அப்பீல் ஏது?

சரின்னு கேட்டுக்கறேன்.

said...

வாங்க குடுகுடுப்பை.

நீளம் கூடுதுனா சொல்றீங்க?

நோட்பேட்லே மூணு/நாலு பக்கம்தான் எப்பவும்.

சட்னு எங்கே,எந்த இடத்தில் 'தொடரும்' போடன்னு ஒரு தயக்கம் வந்துருது.

said...

வாங்க கொத்ஸ்.

நிப்பட்டு = தட்டை(முறுக்கு)

said...

எங்கேயோ உக்காந்திட்டு இதை படிக்கும்போது, மறுபடியும் அந்த காலகட்டத்துகே போய் வந்த உணர்வு...ரொம்ப நன்றி

said...

துளசி இப்பொதான் அஞ்சாவது பாகம் படிச்சிட்டு அப்படியே ஆறு கண்டின்யூ பண்ணினேன்.ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு அனுபவத் தொடர்.ரொம்ப சரளமான எழுத்து நடை. அந்த டக் வச்ச பாவாடை பத்தி படிக்கும்போது நியாபகம் வந்தது.யூனிஃபார்ம் பாவாடை டக் வச்சு தைச்சுட்டு அப்புறமா உசர உசர பிரிச்சு விட்டுக்குவோம். அப்ப மத்த இடமெல்லாம் வெளுத்து டக் வச்ச இடம் மட்டும் அப்படியே புத்தம் புதுசா கலரோட இருக்கும் இல்ல?? ஹ்ம்....!
நிப்பட்டுன்னா தட்டை ஒப்புட்டுன்னா போளி..!!!

said...

//தரணி கண்டுக்கும்.//
அப்படீன்னா என்னக்கா?

said...

வாங்க நரேந்திரபூபதி.

வணக்கம். நலமா?

முதல்முறையா வந்துருக்கீங்க. மகிழ்ச்சி.

அந்தக் காலக்கட்டமுன்னா.... தனிமனிதச் 'சரித்திரம்' ஆகிருது பாருங்க:-))))

said...

வாங்க ராதா.

போங்க ராதா....ஒப்புட்டுவை இப்ப எதுக்கு ஞாபகப்படுத்துறீங்க?????

ப்ரீஸர்லே போட்டுவச்ச பூரணத்தை இப்பத் தேடும்படி ஆயிருச்சு!!!

//பாவாடை டக் வச்சு தைச்சுட்டு அப்புறமா உசர உசர பிரிச்சு விட்டுக்குவோம். அப்ப மத்த இடமெல்லாம் வெளுத்து டக் வச்ச இடம் மட்டும் அப்படியே புத்தம் புதுசா கலரோட இருக்கும் இல்ல?? ஹ்ம்....!//


இவ்வளவு ஜோராவா இருந்துருக்குன்னு ஆச்சரியம்தான் பலசமயங்களில்:-)))))

said...

வாங்க பொன்ஸ்.
எங்கேப்பா ஆளையே காணோம்??

நலமா?

தரணி கண்டுக்கும்= இந்தப் பூவுலகு கண்டுபிடிச்சுரும்.

ச்சும்மா:-))))

தரணி, அக்காவின் மூணாவது குழந்தை.

Anonymous said...

//கல்யாணம் ஆனபிறகு புடவைதான் கட்டணுமாமே!!//
அதானே, சஸ்பென்ஸ் வச்சிடீங்க. ஒரு வேளை அவங்க கல்யாணம் இன்னும் பண்ணலையோ

said...

எல்லா நினைவுகளும் அள்ளிக் கொண்டு வருகின்றீர்கள்..:)

said...

///சின்ன அம்மிணி said...

//கல்யாணம் ஆனபிறகு புடவைதான் கட்டணுமாமே!!//
அதானே, சஸ்பென்ஸ் வச்சிடீங்க. ஒரு வேளை அவங்க கல்யாணம் இன்னும் பண்ணலையோ////
ஏனுங்கம்மணி... எனக்கும் இதே யோசனை தான் வந்ததுங்கோ..;)

said...

வாங்க சின்ன அம்மிணி.

அதான் கலியாணமாகி ரெண்டு மாசமுன்னு ஸார் சொன்னாரேப்பா.

கலாச்சாரக் காவலர்கள் அப்ப இருந்தே இருக்காங்கப்பா:-))))

said...

வாங்க தமிழ் பிரியன்.

தெரியாத்தனமா ' அக்கா' வை எழுதப்போய், மனசுக்குள்ளே புதைஞ்சு கிடந்தது எல்லாம் தானாய் வருது. நிறுத்தத் தெரியாம முழிக்கிறேன்(-:

said...

டக் வச்சப்பாவாடை.. காரக்கடலை, ஹ்ம்..
நீங்கபாட்டுக்கு நியூஸியிலிருக்கீங்க...
மெகா தொடர் போட பிடிச்சிருந்திருப்பாங்க இல்லன்னா..

said...

வாங்க கயலு.

அப்பச் சென்னைக்கு வந்தால் பிழைச்சுக்க ஒரு சான்ஸ் இருக்கு:-))))

said...

டீச்சர், அக்கா ரொம்பத்தான் பொறுமைசாலி .. எப்படித்தான் எல்லா அக்காக்களுக்கும் இந்தப் பொறுமை வாய்க்குதோ? எல்லா ஊர்லையும் இதே கதையா இருக்கே..

said...

அப்புறம் டீச்சர், அந்த மனைப் புற்றுல பாம்பு இருந்திச்சா? வீட்டுக்குள்ள பாம்பை வச்சுக்கிட்டு எப்படி நிம்மதியா வாழ முடியும்? :(

said...

சரி..அந்த தையல்காரரும் வாத்தியாரும் ஒருத்தரா? என்ன சம்பந்தம் இருவருக்கும்? எப்படி ஒரே மாதிரி?

சீக்கிரம் சொல்லுங்க டீச்சர்..சஸ்பென்ஸா நிறுத்தியிருக்கீங்க...

said...

துளசி, டக் வச்ச பாவாடை போடாதவங்களே இருக்க முடியாது போல:)
நாமதான் அப்படின்னா,இப்பத்திய இளைய தலமுறைக்காரங்களும் அழகா எடுத்துச் சொல்றாங்களே.!!!!

இதைத்தவிர பாவாடைக்கு மேல இன்னோரு பிட் துணி வச்சுத் தைக்கிறது. இல்லாட்டா பாவாடைக்குக் கீழே பார்டர் மாதிரி தைக்கிறது இதெல்லாமும் செய்துருக்கோமே.:)

எல்லாம் நடுத்தரக் குடும்பங்களுக்கே உரித்தான பெருமைகள்.

நாகரத்தினம் சித்தி மீண்டும் படிச்சேன்.

இப்ப நல்லா இருக்காங்களா.ரொம்ப வயசாயிருக்கும் இல்லையா,.

ஒரு தடவ கூட அந்தப் பாம்பைப் பார்க்கலியா நீங்க.:(

said...

நல்லா அனுபவிச்சுப் படிச்சேன், என்னிய மாதுரியே நெறய பேரு படிக்கறாங்கப்பா:)))

எங்க வீட்டுல எனக்கும் போட்டு கிழிச்ச பாவாடை சட்டை தான். மத்தவங்க போட்டு போட்டு எனக்கு வர்றதுக்குள்ள பாவாடை கால்பக்கம் அடி நைஞ்சு போயிடும். டக் பிரிச்சு //மத்த இடமெல்லாம் வெளுத்து டக் வச்ச இடம் மட்டும் அப்படியே புத்தம் புதுசா கலரோட இருக்கும் //, அதுக்கப்புறம் கீழ மடிச்சுத் தச்சுக்கணும்.... குச்சி ஐஸ், கொடுக்காபுளி, இலந்தைவடை எல்லாமே 'ஞாபகம் வருதே'.... ஹ்ம்!!!!

கலாசார காவலர்கள் எப்பிடியெல்லாம் தெரியுமா? 'குட்டைக்கை ப்ளவுஸ்' பத்தி அத்தை சொல்லியிருக்காங்க, க்ராப் வெட்டினது, காபி குடிச்சது பத்தி அப்பா.., எங்க கிட்டயே "பின்னாடி விஷேப் வர்ற மாதிரி தாவணி கட்டாதே"லேருந்து இன்னும் பல சொன்ன தெரிஞ்சவங்க‌...

ம், அப்புறம் என்ன ஆச்சு?

said...

நான் சரியான ட்யூப்லைட். சிவராமன் தான் உங்க மாமா!

said...

//தெரியாத்தனமா ' அக்கா' வை எழுதப்போய், மனசுக்குள்ளே புதைஞ்சு கிடந்தது எல்லாம் தானாய் வருது. நிறுத்தத் தெரியாம முழிக்கிறேன்(-://

நிறுத்தாம தொடருங்க. ஒவ்வொரு விஷயமும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றை நினைவு படுத்துது பாருங்க. அதிலதான் இருக்கு இந்தத் தொடரின் வெற்றி.

said...

ம்.. தரணியை மிஸ் ்பண்ணிட்டேன்.. ஹி ஹி.. அட்டெண்டன்ஸ் போடுறதில்லையே ஒழிய அக்காவை தினமும் படிச்சிடறேனாக்கும்..

said...

வாங்க ரிஷான்.

எல்லா அக்காக்களுக்கும் நம்ம பங்கு பொறுமையையும் சேர்த்துக் கொடுத்துட்டதாலேதான் 'தங்கைகள்' இப்ப்டி ஆடிக்கிட்டு இருக்கோம்.

மனைப்பாம்பு?????

அடுத்தபகுதியில் ஒரு விஷயம் வருது:-)

தைய்யக்காரருக்கும் திருமால் ஸாருக்கும் ஒரே ஒற்றுமை ஸ்ப்ரிங் முடி மட்டும்தான்.
அதான் சொன்னேனே...எனக்குக் கண்ணு பொட்டையாப் போயிருந்துச்சுன்னு:-))))

said...

வாங்க வல்லி.

'பாம்பைப் பார்த்தேன்':-)))))

இப்பெல்லாம் நடுவிலே டக் வைக்காமப் பட்டுப்பாவாடைகளின் பார்டரை ஒட்டி வைக்கிறதைப் பார்த்தீங்களா?

மகளின் பாவாடைகளில் டக் வச்சுருக்கு. பிரிச்சும் விட்டாச்சு. நல்லவேளை..... புதுசாவே இருந்ததால் நிற வித்தியாசம் தெரியலை:-)

said...

வாங்க கெக்கேபிக்குணி.

வி ஷேப், குட்டைக் கை மட்டுமா? சினிமாவில் நகைச்சுவைக் காட்சி வரும்போது சத்தமாச் சிரிச்சாவே எங்க பாட்டிகிட்டே பாட்டுக் கேக்கணும். அவுங்க பாட்டு டீச்சர் வேற:-)

ட்யூப் லைட் இப்பப் பத்திக்கிச்சு:-))))

said...

வாங்க ராமலக்ஷ்மி.

வெற்றி அது இதுன்னு எனக்குப் போதையை ஏத்திறாதீங்க.
அப்புறம் நீங்கெல்லாம் கதறும்படி ஆகிறப்போகுது:-)))

said...

பொன்ஸ்,

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?
:-)

said...

நரேந்திரபூபதி,

உங்க விருப்பத்தின்படி உங்க பின்னூட்டத்தை வெளியிடலை. ஆனால்......
அருமையான பின்னூட்டம் அது. மனசுக்கு மகிழ்வைத் தந்துச்சு.

வெளியிடமுடியலை என்ற வருத்தம் தான் இப்போதைக்கு!

said...

என்ன அக்கா இதுக்கு போய்...நீங்க தாரளமா வெளியிடலாம்

said...

அவசரப்பட்டு நரேந்திரபூபதியின் பின் 'ஊட்டத்தை' ரிஜெக்ட்டு பண்ணிப்புட்டேனே..... இப்ப அவர் வெளியிட்டுக்கலாமுன்னு சொன்னதாலே அது இதோ இங்கே.(காப்பி & பேஸ்ட்)


Narendraboopathi has left a new comment on your post "அக்கா ( பாகம் 6)":

அக்கா, பின்னூட்டம் தான் முதல் முறையே தவிர நான் உங்களோட நீண்ட நாள் வாசகன். உங்க மரத்தடி பதிவுகள் எல்லாம் படிச்சுருக்கேன். உங்களோட செல்லச் செல்வங்கள், வத்தலகுண்டு ஸ்கூல்(அப்பள குடுமி வைத்தி), புனே லைப்..அனேகமா அங்கிருந்த எல்லா பதிவுகளுமே படிச்சிருப்பேன். அப்புறம் ரொம்ப நாளா மரத்தடியில் உங்களை பாக்க முடியலை.. ஒரு நாள் சாவாகசமா தமிழ்மணத்துல சுத்திகிட்டு இருக்கிறப்போ உங்களை புடிச்சேன்..இப்போ மறுபடியும் உங்க எழுத்துகளுக்கு வாசகன் ஆயிட்டேன். உங்க நியூஸிலாந்து அப்புறம் பிஜி பதிவுகளை விட வத்தலகுண்டு பதிவுகள் ரொம்ப நல்லா இருக்கு. 80 களின் இறுதி வரைக்குமே வாழ்க்கை(பள்ளி, கிராமம்) எல்லாருக்கும் ஒரே மாதிரி தான் இருந்திருக்கு..வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி, வெயிலோடு மல்லுகட்டி தான்...எல்லாம் இந்த டிவி வந்த பின்னாடி தான்...(New Generation, New Economic Policies and New Technologies...Metriculation Schools) இந்த குழந்தைகள் எதையுமே அனுபவிக்கலியோனு தோணுது...உங்க பதிவுகளை படிக்கும்போது மறுபடியும் அந்த வாழ்க்கை ஒரு மௌன படமா மனசுல ஓடுது...சந்தோசம், துக்கம், சிரிப்பு, கண்ணீர்னு பலவிதமான உணர்வுகள்..ரொம்பவும் சந்தோசம் அக்கா... நீங்க நெய்வேலி ஜவகர் ஸ்கூல்ல படிச்சீங்களா? மரத்தடியில் பதிவு பார்த்த மாதிரி ஞாபகம்... இது உங்களுக்கான மின் அஞ்சலா மட்டும் இருக்கட்டுமே...

அன்புடன்
நரேன்


(வாசகரை விடமுடியுதா சொல்லுங்க)

said...

மேடம்,

உங்க profile photo ல இருக்குறது எங்களை எல்லாம் அழ வெச்ச 'கப்பு'வா?

said...

வாங்க ப்ரியா.

ஆமாங்க. அவ(ன்)ள் கப்புவேதான்.

இன்னும்கூட மனசுலே இருந்து இறங்க மாட்டேங்கிறான்.

அக்டோபரோட வருசம் மூணு ஆச்சு(-:


ரொம்ப அழகா இருக்கான், இல்லை பிரியா?

வருகைக்கு நன்றிப்பா.

said...

மேடம்,
அக்கா பாகம் 5,6 இரண்டையும் ஒரே நேரத்தில் படிக்க வேண்டியதா போச்சு. பாகம்5 - ல் இருந்த 'நடு வீடு'...இதுல இத்தனை matter இருக்கா? நான் ஏதோ மஞ்சள் பூசி நடுவுலே பொட்டு வக்கிறாங்க சும்மான்னு நினைச்சேன்.... :))

//தட்டை(முறுக்கு)ன்னு ஒரு பலகாரம் இருக்கு பாருங்க. அதைத்தான் நிப்பட்டுன்னு சொல்வது.//

'நிப்பட்டு' புதுசா இருக்கு. நாங்க 'தட்டை' , 'தட்டடை' -ன்னு சொல்லுவோம்.

//இப்பெல்லாம் நடுவிலே டக் வைக்காமப் பட்டுப்பாவாடைகளின் பார்டரை ஒட்டி வைக்கிறதைப் பார்த்தீங்களா?//

என்னோட 'பட்டு பாவாடைகளுக்கெல்லாம்' border கிட்டதான் டக் பிடிப்பாங்க என் அம்மா. அதெல்லாம் ரொம்ப costly -ன்னுட்டு இப்பவும் என் குழந்தைகளுக்காக எடுத்து வச்சு இருக்காங்க :))

said...

ரொம்ப இயல்பான எழுத்து நடை, எங்களின் ஞாபகங்களும் அள்ளிக்கொண்டு வருகிறது.

திங்கறதுக்கு என்னமோ கொடுத்தாங்க. சார் முன்னால் வச்சுத் திங்க எனக்கு வெக்கமா இருந்துச்சு. ராணிதான் ஒன்னுவிடாம எல்லாத்தையும் வேட்டுவச்சாள்//
ம், பாவம் ராணிக்கு அன்னைக்கு வயிறு வலிச்சிருக்குமே, அத சொல்லாம விட்டுட்டீங்களா.

said...

//தட்டை(முறுக்கு)ன்னு ஒரு பலகாரம் இருக்கு பாருங்க. அதைத்தான் நிப்பட்டுன்னு சொல்வது.//

இது ரொம்பப் புதுசு.

said...

வாங்க ஹேமா.

நடுவீட்டுலே பல விவகாரம் இருக்குதுங்க:-))))

எவ்வளவு சிம்பிளான லாஜிக் பாருங்களேன்!!!

பட்டுப்பாவாடைகளை என் பேத்திக்குன்னு எடுத்து வைக்கவா?:-))))

எல்லாம் ஃபுல் சைஸூ!!

said...

வாங்க அமித்து அம்மா.

சின்ன வயசு. ஓடியாடற புள்ளைங்க. கல்லைத் தின்னாலும் செரிச்சுறதா?

இந்த ஊர் தமிழ்நாடு கர்னாடகா ரெண்டுத்துக்கும் நடுவில் என்பதால் கன்னட 'ஒப்பட்டு, நிப்பட்டு' எல்லாம் புழக்கத்தில் இருக்கு போல!

said...

ஆமா ரொம்ப அழகு.

நான் ஒரு ஒரு வருஷத்துக்கு முன்னாடி மரத்தடி ல உங்க 'என் செல்லங்கள்' முழுக்க விடாம ஒரே நாள் உக்காந்து படிச்சேன். அப்போலேர்ந்து உங்கள் கிட்ட பேசணும்னு நெனைப்பேன். தாளிக்கும் ஓசை ல உங்களை கமெண்ட்ஸ் படிச்ச்சப்போல்லாம் உங்களை கிட்ட கப்பு பத்தி ஏதாச்சும் பேசணும் ன்னு நெனச்சு நெனச்சு அப்றோம் விட்ருவேன்....ஆனா இன்னைக்கு எங்க இருந்தோ உங்களை பதிவில் வந்து நின்னேன்......உங்கள் பதிவில் அந்த போட்டோ பாத்தோன எனக்கு மனசுல இது கப்புவா இருக்குமோ ன்னு தோணுச்சு..... அதான் கேட்டுட்டேன்.

said...

அடிக்கடி 'ஒப்பட்டு'-வை ஞாபகபடுத்துறீங்களே!!! உங்களுக்கு freezer -ல பூரணம் இருக்கும்... நாங்கல்லாம் என்ன பண்ணுறது?? செய்யும்போது எங்களுக்கும் கொஞ்சம் கொடுத்துரணும் ஆமா!!! :))

said...

ப்ரியா,

செல்லங்கள் ஒரு 18 இல்லை 19 பகுதி வருமே. ஒரேநாளிலா படிச்சீங்க. நன்றி ப்ரியா.

ப்ளோ நல்லா ஈஸியா இருந்துச்சா?

தாளிக்கும் ஓசை கூட இப்பெல்லாம் வரலை. தாளிக்காமலேயே சமையல் ஆகுதோ என்னவோ!!!!

said...

ஹேமா,

அனுப்பிறலாம். நோ ப்ராப்ளம்:-)

said...

ஆமா ஒரே நாள் படிச்சுட்டு, ஆனா மூணு நாள் அழுதுருப்பேன்.

said...

டீச்சர் ஆறு பகுதி எழுதிட்டிங்களா ஹையையோ நான் தொடர்ந்து படிக்கலையே...:(

said...

பதிவு வேற பெரிசா இருக்கும் போல மொத்தமா எழுதி முடிங்க அப்புறமா ஒரு புத்தகம் மாதிரி படிச்சுக்கறேன்...

said...

டீச்சர் கதை சூப்பராப் போகுது!
"சித்தீ"-ன்னு முன்னெல்லாம் ஒரு குரல் ஒலிக்கும் டிவி-ல!
இப்பல்லா என் காதுல "அக்கா"-ன்னு தான் ஒலிக்குது! :)

//தெரியாத்தனமா ' அக்கா' வை எழுதப்போய், மனசுக்குள்ளே புதைஞ்சு கிடந்தது எல்லாம் தானாய் வருது. நிறுத்தத் தெரியாம முழிக்கிறேன்(-://

நிறுத்தாதீங்க! நிறுத்தாதீங்க!
இந்தத் தொடரை என் தங்கச்சிய படிக்கச் சொல்லி இருக்கிறேன்!
(உண்மையச் சொல்லணும்-னா படிச்சித் திருந்து-ன்னு சொன்னேன்! :))

said...

//நிப்பட்டு = தட்டை(முறுக்கு)//

தட்டையா?
முறுக்கா?
ரெண்டும் வேற வேற!

தட்டையில் எள்ளு போட மாட்டாங்க! வெண்ணெயும் கிடையாது!
முறுக்கில் ரெண்டும் உண்டு!

எதுன்னு படம் போட்டூக் காமிங்க டீச்சர்!

இல்லீன்னா நிப்பட்டு சுட்டு எனக்கு அனுப்பி வைங்க! நான் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுறேன்! :)

said...

என்ன ப்ரியா,

இப்படிப் பூஞ்சை மனசா இருந்தாக் கஷ்டம்தான்ப்பா. நானும் பலநாட்கள் கப்புவை நினைச்சுக் கண்ணீர் விட்டுருக்கேன். அவனைப் பற்றிப் பேசும்போது, கண்ணிர் தானாவே வந்துருதேப்பா(-:

said...

வாங்க தமிழன்-கறுப்பி.

புத்தகம் போட்டதும் முதல் காப்பி உங்களுக்கு வித்துறலாமுன்னு சொல்லுங்க:-))))

said...

வாங்க கே ஆர் எஸ்.

//(உண்மையச் சொல்லணும்-னா படிச்சித் திருந்து-ன்னு சொன்னேன்! :))//

'திருத்த' ன்னு இருக்கணுமோ!!!!!

தட்டையும் முறுக்கும் வேற வேறன்னாலும் மக்களுக்கு விளக்கப் படுத்தும்போது தட்டைமுறுக்குன்னு சொல்றது ஒரு வழக்கம். நியூஸியைக் குறிப்பிடும்போது 'ஆஸ்தராலியா நியூசிலாந்து'ன்னு சொல்றதைப் போல:-))))

said...

//இந்த டிவிச் சனியன் வீடுபுகாத காலமில்லே!!!//

சரியாச் சொன்னீங்க...

said...

வாங்க நான் ஆதவன்.


குடும்பத்துக்குள்ளே இருந்த(???) கலந்து பேசும் பேச்சுக்களைக் குறைச்சதுலே இதுக்கு முக்கிய பங்கு உண்டு.

அப்படியே பேசுனாலும், இதுலே வர்றதைப் பத்தித்தான் பேச்சு(-:

said...

//பொதுவா ஆம்புளைங்களுக்குத் துணியில் 'கலர் பார்க்கத்' தெரியாது.///

ஹா ஹா..."துணியில" கலர் பாக்கத்தெரியாது... வெல் செட்..

//சார் முன்னால் வச்சுத் திங்க எனக்கு வெக்கமா இருந்துச்சு.//

அது எப்படி உங்களுக்குமா.. எனக்கும் டீச்சருக்கு முன்னாடி திங்க வெக்கப்பட்டிருக்கேன்...

said...

வாங்க மங்கை.

பலர், கலர் ப்ளைன்ட்ஸ்ப்பா :-)))))))