Thursday, January 29, 2009

குழந்தைங்க..... படு ஸ்மார்ட்.

இன்னும் நாமெல்லாம் இங்கே அருங்காட்சியகத்தில்தான் சுத்திக்கிட்டு இருக்கோம்,நினைவிருக்குல்லே? பாவாச் சிப்பி சேகரிக்க இவ்வளோதூரம் வந்தது வந்தோம். இன்னும் ஒரு எட்டுவச்சா அண்டார்ட்டிக்காவுக்கே போயிறலாம். ஹைய்யோ.......... இப்படி ஒரு குளிரா?குளிர் கூடுதலாத்தான் இருக்கும். அதுக்கு நாம் என்ன செய்யறது? அது அப்படித்தான். போற வழியிலேயே கடல் சிங்கங்கள், கடல்புறாக்கள், அல்பட்ராஸ், பெங்குவின் வகைகள் எல்லாம் பார்த்துக்கிட்டே போகலாம். ஓமரு என்ற ஊரில் பெங்குவின் பறவைகள் காலனி இருக்குன்னாலும் அதெல்லாம் நம்மூர்க் கோழி சைஸில் இருக்குதுங்க. அண்டார்ட்டிக் பகுதிகளில் எம்பரர் பெங்குவின்கள் ஆளுயரத்தில் கம்பீரமா நிக்குதே. பேரரசர் என்ற பட்டம் பொருத்தம்தான். 'அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்' இங்கே இதுக்குப் பொருத்தமா இருக்காது. துயரமான வாழ்க்கைன்னா இதைத்தான் சொல்லணும். ஒருமுறை இந்தப் பறவைகளின் விவரணப்படம் ஒன்னு பார்த்துட்டுப் பெருகிவந்த கண்ணீரை அடக்கவே முடியலை. இயற்கையின் படைப்பில் உள்ள விசித்திரத்தில் இதுவும் ஒன்னு.

இந்தப் பகுதிக்குப்போகும் வழியில் தாற்காலிகக் கண்காட்சியா உள்ளூர் பத்திரிக்கை ஒன்னு ஒரு முப்பதுவருசக் கணக்கைக் காமிச்சுக்கிட்டு இருந்துச்சு. ஆடுவாங்கி மேய்ச்சு ஒரு பண்ணை உண்டாக்கணுமுன்னு ஆசையோடு இங்கே வந்த ஒருத்தர் ஆடுவாங்கக் காசு இல்லாமப் பப்ளிஷரா தினசரிப் பத்திரிக்கை ஒன்னை, The Press ஆரம்பிக்கவேண்டியதாப் போச்சு. 1861லே.. ஒரு கம்பெனியா, வெறும் 500 பவுண்டு காசு முதலீடு செஞ்சு ஆரம்பிச்சது இன்னிக்குக் கணக்குக்கு 148 வருசமாகுது. காலைப் பத்திரிக்கையா இருக்கு. இப்போ இந்த ப்ரெஸ் அலுவலகத்தில் 'த மெயில்' ன்னு ஒன்னு வாரம் ரெண்டு முறை வெளிவரும் மாலைப் பத்திரிக்கையும் நடத்தறாங்க. இந்த மெயில் பத்திரிக்கை முற்றிலும் இலவசமா எல்லா வீடுகளுக்கும் வந்துருது. காலைப் பத்திரிக்கை மட்டும் காசு கொடுத்து வாங்கிக்கணும். நானோ கருமி நம்பர் ஒன்னு. எல்லா சேதிகளும், வலையிலும், ஓசிப் பத்திரிக்கையிலும், தொலைக்காட்சியில் மூணு நாலு சானலில் ஒரு பத்துப் பதினைஞ்சுமுறையும் வந்துருதே...எதுக்குக் காசை தேவையில்லாமச் செலவு செய்யணுமுன்னு வாதிப்பேன்.

இந்த ப்ரெஸ் பத்திரிக்கையைத் தவிர்த்துக் 'கிறைஸ்ட்சர்ச் ஸ்டார்'ன்னு ஒன்னு மாலை நேரத்துப் பதிப்பா ஒரு 20 வருசம் முந்திவரை வந்துக்கிட்டு இருந்துச்சு. விற்பனை சரி இல்லாம அதை மூடிறலாமான்னு நினைச்சப்ப, புதுசா ஒரு உத்தி கண்டுபிடிச்சப் புண்ணியவானுக்கு நன்றி சொல்லி மாளாது. இதையும் இலவசப் பத்திரிக்கையாவே ஊர் முழுசும் விநியோகிக்கறாங்க. அப்ப வருமானம்? எல்லாம் விளம்பரம்தான். ஒவ்வொரு வீட்டுக்குள்ளிலும் போகமுடியுதேன்னு இதுலே விளம்பரம் கொடுக்குதுங்க அநேகமா எல்லா நிறுவனங்களும். தவறாமல் புதனும், வெள்ளியும் வந்துருது. . பேப்பர் போடும் பசங்க சிலநாள் சோம்பேறித்தனமா இருந்துட்டு, மறுநாள் காலையில் போட்டுட்டுப் போவாங்க. தொலையட்டுமுன்னு விடறதுதான். ஆனா சில நாள் வராமலேயேப் போனா ஓசிப் பத்திரிக்கைதானேன்னு.... , இருக்கமாட்டேன். போன் அடிச்சுச் சொல்லி அதெல்லாம் கறாரா வாங்கிருவேன்:-) எனக்காகவா இதெல்லாம்? நெவர்! பாவம், கோபால். பேப்பர் படிக்கணுமுன்னா உசுரு. (அதென்ன, ஆம்பளைங்களுக்குத்தான் இப்படிப் பேப்பர் பைத்தியம் இருக்கோ?
'ஆண்களும் தினசரிகளும்' என்ற தலைப்பில் ஒரு பதிவாப் போடுமளவு விஷயம் இருக்கு. ஒருநாள் எழுதுனால் ஆச்சு. இப்போ ப்ரெஸ்ஸைக் கவனிக்கலாம்)


1940 முதல் 1970வரை இருந்த காலக்கட்டத்தில் நடந்த சம்பவங்கள், சேதிகள் வாழ்க்கை நிலவரம், அப்போ வெளியான பதிப்புகள்ன்னு ஒரு சின்ன ஹால் முழுக்க வச்சுருந்தாங்க. நம்ம கன்னிமாராலே இருப்பது போல தினசரிகளை பைண்ட் பண்ணி வச்சுருந்துச்சு. (இப்பெல்லாம் சேமிப்புகளைத் தாளா வைக்காம எல்லாத்தையும் மைக்ரோ ஃப்லிமா மாத்தி ரீல்ரீலா வச்சுருக்காங்க. நம்ம ப.மு. (பதிவராகுமுன்) காலத்தில் ஒரு நாள் பத்திரிக்கை அலுவலகம் இயங்கும் முறையைப் பார்த்துருக்கேன்.)
வால் பேப்பர் மாதிரி முதல் பக்கத்தைப் பெரூசாக்கி ஒட்டிவச்சுருந்தது படிக்கச் சுலபமா இருந்துச்சு. இங்கே ஹைலைட் என்னன்னா கண்காட்சி வைக்கும் காலம் முழுக்க, அன்றன்று வெளியாகும் தினசரியை ஒரு இடத்தில் ( ஒரு 100 காப்பி இருக்கும்) வச்சுட்டு, இலவசமா எடுத்துக்கோ எடுத்துக்கோன்னு கெஞ்சறதுதான்:-) ஒருத்தர் மனம் நோகப் பொறுக்கமாட்டார் எங்க கோபால். பேப்பரை எடுத்த கையோட ஒரு இருக்கையில் அமர்ந்து படிக்க ஆரம்பிச்சுட்டார். திருத்தவே முடியாது(-:
இந்தக் கண்காட்சி இருக்கும்வரை சோம்பல் பார்க்காம தினம் ஒருநடை வந்து தினசரியை எடுத்துக்கிட்டுப்போனா நல்லா இருக்குமுல்லே? நான் மட்டும் 'பறவைகளைப் பிடிச்சுக்கிட்டு' அடுத்தபகுதிக்குப் போனேன்.





ஆல்பி பாப்பா

அடுத்த ஹாலில் 'ஆசியக் கலைகள்'ன்னு சீனப் பொருட்கள். ரெண்டு பெரிய சிங்கங்கள் வரவேற்கும் முகமா எதிரும் புதிருமா. அதுக்குள்ளே இவரும் வந்து சேர்ந்துக்கிட்டார். இந்த ஹாலை முந்தி எப்பவோ அவசர அடியில் பார்த்தேன் இன்னிக்குக் கொஞ்சம் விலாவரியாப் பார்க்கணுமுன்னு இருந்தேன், அதுக்கே பொறுக்கலை போல.
ஒரு சின்னப் பொண்ணு மூணு மூணரை வயசு இருக்கும் அழுதுக்கிட்டே வந்து கோபால் பக்கத்துலே நிக்குது. இந்தியக் குழந்தைதான். பெயர் சுஜாதாவாம். அம்மா, காணாமப் போயிட்டாங்களாம். கோபாலின் இளகுன மனசுக்கு வந்த சோதனை......குழந்தையை ஒரு கையில் பிடிச்சுக்கிட்டு அது காமிச்ச திசையில் ஓடிக்கிட்டு இருக்கார். ஏழெட்டு ஹாலைத் தாண்டி, மாடிப்படிகளில் இறங்கி கீழ் தளத்தில் ரெண்டுபேரும் ஓடறதை வேடிக்கைப் பார்த்துக்கிட்டேப் பின் தொடர்ந்து போய்க்கிட்டு இருக்கேன். கடைசியா அவுங்க போய் நின்னது கட்டிடத்தின் மறு கோடியில் இன்னொரு மாடிப் படிக்கட்டின் அருகே. நீங்களே ஏறிப்போங்கன்னு நான் நின்னுட்டேன். ஏன்? இந்தப் படிக்கட்டுப் போய்ச் சேரும் இடம் அந்தச் சீனச் சிங்கம் பக்கத்துலேதான். அம்மா, அங்கே இருந்த ரெஸ்ட் ரூமுக்குள்ளே நுழைஞ்சதைப் பொண்ணு கவனிக்கலை. திடுக்கிட்டுப்போன குழந்தை, கரெக்ட்டா ஒரு(அப்பாவி) இந்தியனை வந்து பிடிச்சுச்சு பாருங்களேன். இப்பத்துக் குழந்தைகள் படு ஸ்மார்ட்!!!!
மூச்சு வாங்கிக்கிட்டு நிற்பவரைப் பார்த்தால் பரிதாபமா இருந்துச்சு. 'ஆறு பிள்ளைங்களோட என்னையும் ஒருசமயம் இதே மியூஸியத்துலே தொலைச்சுட்டாங்க'ன்னு சொன்னதும் இவருக்கு ஆச்சரியமாப் போச்சு. 'கண்டுபிடிச்சுட்டாங்களே கடைசியில்' ன்னு இவரோட உள்மனசுலே ஒரு துக்கம் இழையோடுனதா எனக்கு தோணுச்சு.

Tuesday, January 27, 2009

வீடு மாத்திக்கிட்டு வர்றதுன்னா இப்படியா?

அந்த வீட்டுலே இருந்து சாமான்களைக் கொண்டுவந்து புது இடத்துலே நமக்கு ஏத்தாப்போல அடுக்கமாட்டாங்களாம். அந்த வீட்டையே பெயர்த்து எடுத்துக்கிட்டு வந்து வச்சுருவாங்களாம். பிரமிப்புதான்.

எங்க பக்கத்துலே ஒரு அபூர்வமான கடல் சிப்பி கிடைக்குதுங்க. உலகத்துலே அழகான வர்ணங்கள் உள்ளதுன்னு இதை எல்லோரும் நம்ம விக்கிபீடியா உள்பட புகழுறாங்க. நியூஸியின் தெற்குத் தீவில் கட்டக் கடைசி வால் இருக்குபாருங்க, அந்தப் பாகத்துலே இருந்து அண்டார்ட்டிக் வரைக்கும் இடைப்பட்டக் கடல் பகுதிகளில் உயிர்வாழும் ஒரு சிப்பி இனம் பாவாச் சிப்பிகள். Paua shells. நல்லா விரிச்சுவைச்ச உள்ளங்கை அகலத்துக்கு இருக்கு. ச்சும்மாப் பார்த்தீங்கன்னா அழுக்கு வெள்ளை நிறத்தில் மொத்தையா இருக்கும். எல்லாம் அதுமேலே ஒட்டிப் பிடிச்சிருக்கும் கால்சியம், கடலுப்பு சமாச்சாரங்கள். வெளிப்புறமாச் சுரண்டி எடுத்தீங்கன்னா...... நம்ம ஆரெம்கேவி, சென்னைசில்க்ஸ் எல்லாம் தோத்துச்சு. அப்படி ஒரு நிறம். மயிலை நினைவுபடுத்தும் வண்ணம்.



நம்ம வீட்டுலே ஒரு காலத்துலே வாங்கிவச்சது. இன்னும் முழுசாச் சுரண்ட நேரம் கிடைக்கலை(-:

சிப்பிகளைக் கண்டமானம் தேய்ச்சுறமுடியாது. கொஞ்சம் மென்மையான வகை. அப்படியே நொறுங்கிப்போயிரும் சில சமயம். இதுக்குன்னே காரையைச் சுரண்டி எடுக்கப் பயன்படும் கருவிகள் இருக்கு. எல்லாத்தையும் செவ்வனே செதுக்கி, பாலீஷ் செஞ்சீங்கன்னா.....வச்ச கண்ணை எடுக்க முடியாது. இந்தச் சிப்பித் துண்டுகளை வச்சு நகை நட்டெல்லாம் செய்யறாங்க.

நியூஸி நாட்டின் தென்கோடியிலே (Bluff) ப்ளஃப்ன்னு ஒரு ஊர் இருக்கு. அங்கே ஒரு ஜோடி. ஐயா பெயர் Fred அம்மா பெயர் Myrtle. ஃப்ரெட் அங்கே துறைமுகத்தில் கட்டட வேலை. இந்த பாவாச் சிப்பிகள் மேலே ஒரு ஈடுபாடு. மனைவிக்கும் இதே மாதிரி. கல்யாணம் கட்டுனது 1930லே. சிப்பிகளைச் சேகரிச்சு, வீட்டு வரவேற்பறை முழுக்கப் பரத்தி வச்சுத் தரையில் நடக்கவே முடியாம இருந்துச்சாம். 27 வருசமா இந்த அறையைப் வீட்டைப் பெருக்கவே இல்லையே. கொஞ்சம் இதையெல்லாம் நகர்த்தி வையுங்கன்னு அம்மா சொன்னதுதான் ஒரு டர்னிங் பாய்ண்ட்.

Fred & Myrtle Flutey


'இதோ.... இப்பப் பாரு'ன்னு நல்லாச் சுத்தம் செஞ்ச பாவாச் சிப்பி ஒன்னை, வீட்டுச் சுவத்துலே ஆணி அடிச்சு மாட்டுனாரு ஐயா. ஆஹா.... ஐடியாக் கிடைச்சிருச்சு. இது நடந்தது 1961 வது வருசம். அப்ப நினைச்சுக்கூடப் பார்த்திருக்க மாட்டாங்க வீட்டுச் சுவர் முழுக்க ஆணியாலே நிரம்பப் போகுதுன்னு!!!!! உள்ளங்கை அகலச் சிப்பிகள் ஏறக்குறைய 1200.

ஆர்வம், அதீத ஆர்வம் பயங்கரமாப் பெருகி வீட்டு வரவேற்பு அறை முழுசும் பாவா(ய்) பாவா(ய்) கூடவே திமிங்கிலத்தில் பற்கள், கொஞ்சம் வெவ்வேற வகையான சங்கு, சிப்பின்னு மனுசர் கால் வைக்க இடமில்லாம எங்கெங்கு காணினும் சிப்பிகள். வேடிக்கை பார்க்க ஊர் ஜனம் வர ஆரம்பிச்சு , வெளிநாட்டு மக்கள் கூடத் தேடிவந்து பார்த்துட்டுப்போனாங்க. அந்த ஊருக்கு ஒரு ஐகானா மாற ரொம்ப நாள் எடுக்கலை. எண்ணி ரெண்டே வருசம். தினம் தினம் வீட்டைப் பொதுமக்கள் பார்வைக்கு விடறதுன்னா ச்சும்மாவா?
1963 முதல் 2000 வருசம்வரை தினம் காலை 9 முதல் மாலை 5 வரை 37 வருசம். இவுங்களோட 70 வருசத் திருமணவாழ்க்கையில் கடைசி 37 வருசம் கோலாகலமா, புதுசுபுதுசாச் சந்திச்ச மக்கள் மட்டும் 10 லட்சத்துக்கும் கூடுதலாம். இங்கே வேணுமுன்னாப் போய்ப் பார்த்துட்டு வாங்களேன்.

சாதாரணமா ஒரு சிப்பியைச் சுத்தம் செஞ்சு பாலீஷ் செய்ய ரெண்டு மணி நேரத்துக்கும் மேல் எடுக்குமாம். இந்த ஐயா ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் இதே வேலையா இருப்பாராம்!!!

சுற்றுலாத் துறை, இவுங்க சேவையைப் பாராட்டிப் பத்திரமெல்லாம் வழங்குச்சு. நியூஸியில் தொலைக்காட்சி ஆரம்பிச்சக் காலக்கட்டங்களில் அம்மாவும் ஐயாவும் ஐஸ்கிரீம், ப்ரெட் இதுக்கெல்லாம் மாடலிங் செஞ்சு விளம்பரப்படங்களில் வந்துருக்காங்க. ரொம்ப ஜாலியான தம்பதிகள்.

மே மாசம் 2000 வருசம், அம்மா தன்னோட 89 வயசுலே இறந்தாங்க. அதுக்குப்பிறகு ஒன்னரைவருசம்தான் ஐயா தாக்குப் பிடிச்சார். பல்லைக் கடிச்சுக்கிட்டு இன்னும் ரெண்டுவருசம் இருந்துருக்கலாம், நூற்றாண்டைக் கொண்டாடி இருப்பார்(-:. வீட்டை அப்படியே ஒரு ம்யூஸியமா வைக்கணுமுன்னு அவுங்களுக்கு ஆசை இருந்துருக்கு. ஆனா வாரிசுகளுக்கு வேற ஆசைகள் இருந்துருக்குமில்லே?


shells inside house
உயில்படி வீட்டுக்குச் சொந்தக்காரனான பேரன், ஒருநாள் ராவோட ராவா வந்து எல்லாச் சிப்பிகளையும் கழட்டி எடுத்துக்கிட்டு வீட்டை விக்கப் போட்டுட்டார். எங்க ஊர் மியூஸியத்துக்கு அந்தச் சிப்பிகளை 10 வருச ஒப்பந்தத்துக்கு விட்டுருக்கார் பேரன்.

இதுதான் ப்ளஃபில் இருந்த ஒரிஜனல் வீடு

எங்க மியூஸியம் ஆளுங்க என்ன பண்ணாங்கன்னா...... ஐயா & அம்மா வீட்டை அப்படியே பெயர்த்துக் கொண்டுவந்தமாதிரி அதே டிஸைனில் இங்கே மியூஸியத்துக்குள்ளேயே ஒரு ஹாலில் வீட்டைக் கட்டிட்டாங்க. வரவேற்பு அறை அங்கே எப்படியோ அதே போல. கூடவே ஒரு குட்டித் தியேட்டர் (20 பேர் உக்காரலாம்) அதுலே ஐயா அம்மா இதை எப்படி ஆரம்பிச்சாங்கன்னு எடுத்த குறும்படம் போட்டுக் காமிக்கிறாங்க. சின்னக் குழுவா உள்ளே அனுப்புறாங்க. 10 நிமிசப் படம். அது முடிஞ்சதும் வெளியேவந்து 'பாவா' வீட்டுக்குள் போறோம். தொடர்ந்து காலை 9 முதல் 5 வரை இங்கே பார்வையிட முடியும். எனக்கு அவ்வளவா மன சம்மதம் இல்லாமப்போனது ஒரே ஒரு விஷயம்தான். குறும்படம், நியூஸி தேசீய கீதத்துடன் ஆரம்பிக்குது. காலநேரம் இல்லாம தினமும் 9 மணிநேரம் ஒவ்வொரு 20 நிமிசத்துக்கும் தேசிய கீதம் ஒலிப்பது சரின்னு எனக்குப் படலை. தேசிய கீதம் இசைக்கும்போது அதுக்குரிய மரியாதை காமிக்கப்படவேணாமா? இதைப் பத்தி ம்யூஸியத்துக்கு ஒரு கடிதம் எழுதணுமுன்னு இருக்கேன்.

வீட்டைக் கட்டி......


ஆணிகள் அடிச்சு.........


காட்சிக்கு வச்சாச்சு!!!!

இதுவரை 75,000 பேர் வந்து பார்த்துட்டுப் போயிருக்காங்க. நமக்கும் 609 கிலோமீட்டர் பயணம் மிச்சம்:-)

என்னதான் இந்த விசேஷச் சிப்பிகள் அழகுன்னு சொன்னாலும்................ வீட்டை விட்டு வெளியில் வரும்போது ஒரே ஒரு பழமொழிதான் மனசுக்குள்ளே வந்தது.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும்........................

Saturday, January 24, 2009

எங்க மம்மிக்கு சி டி ஸ்கேன் எடுத்தோம்......

(பதிவைப் படிக்காமல் பின்னூட்டமிடும் வகுப்புக் கண்மணிகளுக்கான டெம்ப்ளேட்:
(பதிவைப் படிக்காமல் பின்னூட்டமிடும் வகுப்புக் கண்மணிகளுக்கான டெம்ப்ளேட்:

1.விரைவில் மம்மி குணமடைய வேண்டுக்கின்றோம்.

2. எங்கள் கண்ணீர் அஞ்சலி. மம்மியின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்)


எங்கூர் பப்ளிக் ஆஸ்பத்தியில்தான் நடந்துச்சு. ரிப்போர்ட்டை வேணுமுன்னா ஸ்கேன் செஞ்சு போடவா?
உயரம் அஞ்சடிக்கும் குறைவு. அவுங்க எடை அம்பது அம்பத்தியஞ்சு கிலோதான் (ஹைய்யோ தாஜ்மஹால்!!) சரியாச் சாப்புடாமக் கொள்ளாம உடம்பைக் கெடுத்துக்கிட்டு இருந்துருக்காங்க. இருபத்தியஞ்சு வயசுலேயேப் போய்ச் சேர்ந்துட்டாங்க. ஹூம்........ சாகற வயசா? ஆயுசு என்னவோ அவ்ளோதான் விதிச்சிருந்துருக்கு(-:

இன்னிக்கான சர்க்யூட்க்கு எங்கே போகலாம்? அதுவும் காசே செலவு பண்ணாம..... ஆ............. ஆப்டுக்கிச்சு. நான் ஒரு ஏழெட்டு வருசமா இங்கே வரவே இல்லை. உள்ளூர் சமாச்சாரமுன்னா இவரைக் கிளப்பிக்கிட்டு வர்றதே பெரும்பாடு.

ஆர்ட் காலரி அனுபவத்துக்குப் பிறகு, நாமும் கொஞ்சம் சூதானமா இருக்கணும்தானேன்னு வரவேற்பு மேசையில் இருந்தவர்கிட்டே, படம் புடிச்சுக்கலாமான்னு கேட்டால்........ எவ்வளோ வேணுமுன்னாலும் புடிச்சுக்கோன்னுட்டார். இந்த கோடை காலத்துக்குன்னு என்னென்ன ஸ்பெஷல் போட்டுருக்காங்கன்னு ஒரு லிஸ்ட் கொடுத்தார். எங்கெங்கே என்னென்ன என்ற விலாவரியான விவரமும் கூடவே கிடைச்சது.
அப்படியே கொஞ்சூண்டு சரித்திரத்தையும் சொல்றேன் ( இது பரிட்சைக்கு வரும் பகுதி)

1867 வது ஆண்டு நமக்குன்னு ஒரு ம்யூசியம் கட்டணுமுன்னு பொதுமக்கள் கேட்டுக்கிட்டதுக்கு இணங்க எந்த இடம் வாகா இருக்குமுன்னு ஆராய்ஞ்சு தாவர இயல் பூங்காவை ஒட்டுன இடம் சரியா இருக்குன்னு தீர்மானிச்சு( இதுக்கே ரெண்டு வருசம் ஆயிருச்சு. எது செய்யணுமுன்னாலும் இங்கிலாந்துக்குச் சேதி அனுப்பி அங்கிருந்து அனுமதி வாங்கணுமே. இமெயிலா பாழா அப்போ!!! )உள்ளுர் பத்திரிக்கையில் கட்டிடம் கட்ட ஒரு டெண்டர் அறிவிப்பு செஞ்சாங்க.
பொல்லாத கட்டிடம்...... ஒரே ஒரு ஹால். 70 அடி நீளம் 35 அடி அகலம்.

கட்டிடத்தைக் கட்டி முடிச்சு திறப்புவிழா செஞ்சது 1870 வது வருசம். அதுக்குப்பிறகு கொஞ்சம் கொஞ்சமா விஸ்தரிச்சுப் புதுசா மாடியெல்லாம் வச்சுக்கட்டி (107 வருசத்துக்குப் பிறகு) அண்டார்டிக் கண்டத்துக்குன்னு உண்டானத் தனிப்பட்ட சுவையான விஷயங்களையெல்லாம் சேர்த்துத் தனி ஹாலில் வச்சாங்க. அதுக்கு நம்ம எடின்பரோக் கோமகனார் (Duke of Edinburgh) இங்கே வந்துருந்தப்ப அவர் கையால் முன்னாள் அருங்காட்சி இயக்குனர் Roger Duff என்பவர் பெயரை அந்த ஹாலுக்குச் சூட்டினார்.( என்னத்தைக் கோமகனோ, தன் பெயரை வச்சுக்கத் தெரியலை போங்க)

சமீபத்தில் 1995 வது ஆண்டு ஒன்னேகால் நூற்றாண்டு விழா அமோகமா நடந்தது. நாலு மாடிக் கட்டிடமுன்னு சொன்னாலும் ரெண்டு மாடி முழுக்கத்தான் காட்சிக்கு இருக்கு. மத்த மாடிகளில் அலுவலகம், சேமிப்புக் கிடங்கு, அது, இது கிடக்கு. இயக்குனர்கள், நிபுணர்கள் எலோரும் ரொம்ப நட்பாவே இருக்காங்க.

ஒருமுறை மகள் பள்ளிக்கூடச் சுற்றுலான்னு Fossil ஃபொஸில் இருக்கும் ஆற்றங்கரைப் பகுதிக்குப் போனப்ப, அங்கிருந்து ஒரு கல் போல ஒன்னைக் கொண்டுவந்துருந்தாள். ரெண்டுபக்கம் ஒரே அளவா, அமைப்பா நடுவில் அரைவட்டக் குழியோடு ஒரு ராட்சஸப் பறவை மூக்குபோல இருந்துச்சு. அது என்னவா இருக்கும்முன்னு கேட்க ம்யூஸியத்துக்குப் (Curator)போன் பண்ணிக்கேட்டு, அவர் கொண்டுவரச் சொன்னாரே போய்ப் பார்த்தோம். அதை என்னவோ பரிசோதனையெல்லாம் செஞ்சுட்டு, 1.25 மில்லியன் ஆண்டு பழமை வாய்ந்ததுன்னு ஒரு சர்ட்டிஃபிகேட்டும் எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். ஆற்றுப்படுகையில் இருந்தப்பத் தண்ணீர் அதை மெதுவா அரிச்சு ஓட்டைவிழுந்து அதுவழியா நீர் போயிருக்குன்னார்.

உள்ளே நுழைஞ்சதும் நம் கண்ணில் விழுவது உள்ளூர் மவோரிகள் அந்தக் காலத்தில் (வெள்ளையர்கள் இங்கே வந்து சேர்ந்த காலக் கட்டம்) எப்படி இருந்தார்கள், அவுங்க வாழ்க்கை முறை என்ன? என்பதெல்லாம் அப்படியே விவரிச்சு இருக்கு. நிஜ ஆள் அளவிலான உருவப் பொம்மைகள்.

ஐயோ.... அப்பவும் சமையல் செய்வது பொம்பளை வேலை தானான்னு மனசுக்குப் பட்டுச்சு.
மீன் பிடிக்க உதவும் தூண்டில்முள் செஞ்சுக்கிட்டு இருக்காங்க சில ஆண்கள்.

அட! சுரைக்குடுக்கை இருந்துருக்கு. (அப்போ ஏன் சுரைக்காய் இங்கே கிடைக்கலை???)

குளிருக்குப் பயனாகும் உடை இந்த ஃப்ளாக்ஸ் என்னும் நாரில் உண்டாக்குன கோட்.


கிவிப் பறவைகளின் சின்னச்சின்ன இறகுகளைக் கொண்டு உண்டாக்குன உடை, அவர்கள் பயன்படுத்துன படகு, மரச்சிற்பங்கள், அவுங்களுடைய வீடுகள் இப்படி நிறைய தெரிஞ்சுக்க முடிஞ்சது.

'எதையும் தொடாதே' என்ற அறிவிப்பைப் பார்த்தவளுக்கு இந்தக் கல்லைத் தொட்டுப் பாருன்னு ஒரு அறிவிப்பு வச்சுருந்தது..... ...
நியூஸிலாந்து ஜேடு எனப்படும் பச்சைக் கல். மவோரிகளுக்கு ரொம்பப் புனிதமான கல்.

மோஆ என்ற பறவை இனம். முற்றிலும் அழிஞ்சு போச்சு. இப்படிப் பார்த்தால்தான் உண்டு.

மாடி ஏறிப்போனால் மம்மி படுத்துருந்தாங்க.. ஒரு ரெண்டாயிரத்து நூத்து அறுபது வருசமா இப்படிப் படுத்த படுக்கைதான். இந்த ம்யூஸியத்தின் தந்தை(???) ரெண்டு மம்மிகளை கெய்ரோ நகரில் இருந்து கிறைஸ்ட்சர்ச் நகரத்துக்கு வரவழைச்சார். அவுங்க வந்து சேர்ந்தது 1888. இவருக்கு என்ன அவசரமோ, காத்திருக்காம அவுங்க வர்றதுக்குக் கொஞ்சம் முன்னாலேப் போய்ச் சேர்ந்துட்டார். பாவம்..... வந்தவங்க ரெண்டு பேரும் ம்யூஸியத்துலே தங்கி இருந்தாங்க. 1957 இல் ஒருத்தரை ஆக்லாந்து ம்யூஸியத்துக்கு அனுப்புனாங்க. இங்கேயே தங்கிட்டவங்க பெயர் டாஷ் பென் கொன்சு Tash Pen khonsu (ஹைய்யோ பேருலேயே கொஞ்சு கொஞ்சுன்னு கொஞ்சறாங்கப்பா)

மம்மியோட மர்மத்தைத் தெரிஞ்சுக்க மம்மியை எக்ஸ்ரே எடுத்து, சி டி ஸ்கேன் எல்லாம் செஞ்சு பார்த்தோம். பொட்டிக்குள்ளே அமுக்கிவைக்கணுமுன்னு இடுப்பைக் கொஞ்சம் உடைச்சுப்புட்டாங்கப்பா(-:
' பாடம்' எப்படி பண்ணுவாங்கன்னு விலாவரியா பக்கத்துலே எழுதி வச்சுருக்கு. உள் உறுப்புகள் சிலதைத் தனியா எடுத்து ஒரு ஜாடியில் போட்டு மம்மிகூடவே வைப்பாங்களாம். அந்த ஜாடிகளில் ஒன்னு பபூன் வேஷம் கட்டிக்கிட்டு இருக்கு. ஹைய்யோ..... பபூன் மூஞ்சு செல்லம்போலப் பார்க்கவே ஆசையா இருந்துச்சு.

மம்மி, எகிப்து இந்த விசயங்கள் எல்லாம் எப்பவுமே ஒரு அபூர்வ ஆசையைத் தூண்டும் சமாச்சாரமுல்லே? ரகசியம் புதைஞ்சு கிடக்கும்னு சொன்னாவே போதாதா? போதாக்குறைக்கு இவுங்களுக்குப் பூனை சாமி. நான்கூட போன நாலைஞ்சு பிறவிக்கு முன்னே எகிப்துலே (கிளியோபாட்ராவுக்கு வேலைக்காரியாவா? ) பொறந்துருப்பேன் போல. பழைய ஜென்ம வாசனை விடலை இன்னும். இதை எழுதிட்டு நம்மாளைத் திரும்பிப் பார்த்தேன். ஒத்தைப் பல்லாலே சிரிப்புக் காட்டிக்கிட்டு இருந்தான் ஜிகே சாமி!
நம்மூரு பசங்க மம்மிபைடு பண்ணிவச்சுருக்கு பாருங்க. என்னவா இருக்குமுன்னே தெரியலைப்பா:-))))



ஒருமுறை பிரிட்டிஷ் ம்யூஸியத்துலே இருந்த கடைகளில் மம்மி மாதிரி லெட்டர் செட் கிடைச்சதேன்னு ரெண்டு செட் வாங்குனேன். மகள் மம்மி பைத்தியம். அவளுக்கு ஒன்னும், பயணத்துலே அடுத்துப்போகும் சென்னையில் உள்ள உறவினர் மகனுக்கு ஒன்னுமா. ஆனா உறவினர் இதைப் பார்த்துட்டு மம்மி படம் வீட்டுலே வச்சாக் குடும்பத்துக்கு ஆகாதுன்னு திருவாய் மலர்ந்தாங்க. டபக்னு எடுத்து பைக்குள்ளே வச்சுக்கிட்டேன். அவரவருக்கு ஆயிரம் நம்பிக்கைகள்!!!!


Thursday, January 22, 2009

கடவுளே.... எங்களுக்குக் காட்சி கொடுத்தீரே......

எண்ணி இருபத்துநாலு மணி நேரம் ஆகுமுன்பே புதுவருசத் தீர்மானத்தில் ஒன்னு மண்டையைப் போட்டுருச்சு. இன்னிக்குத்தான் ஆங்கிலப்புத்தாண்டு ஆரம்பம். வருசப்பிறப்பன்னிக்கு எதாவது நல்லது நடந்தால் அது வருசம் பூராவும் தொடரும் என்ற (மூட) நம்பிக்கைக்கு உரம்போடலாமுன்னு வீட்டைச் சுத்தம் செஞ்சோம்.

உச்சிக்காலப் பூஜைக்கு நம்ம கோவிலுக்குப் போய்வந்தோம். சாமிக்கு ஒரு அதிர்ச்சி கொடுக்கலாமுன்னு சுடிதாரை விட்டுட்டுப் புடவை கட்டிக்கிட்டேன்:-) நமக்கு வாழ்த்துச் சொல்லும்விதமா நம்மூட்டுலே அன்றலர்ந்த தாமரைப்பூக்கள் மூணு. கோபாலகிருஷ்ணனுக்கு மட்டும் விசேஷ விருந்து.


மூணுகுடம் தண்ணி ஊத்தி மூணு பூ பூத்தது:-)


கோயிலில் இப்பக் கொஞ்சநாளா , (ஒரு மாசம் இருக்கும்) ஒரு புதுப் பூசாரி வந்துருக்கார். அன்னிக்கொரு வாரம் கோயிலுக்குப் போக முடியலை, வேற நாட்டுக்குப் போயிருந்தேன். வந்த பிறகு வந்த சனிக்குப் போனால்....புதுமுகம் ஒருத்தர் பூஜை செய்யறார். எங்களைப் பார்த்ததும் வழக்கமா வரும் இன்னொரு 'பக்தர்' இவுங்க தமிழ்க்காரங்கன்னு அவருக்குச் சொன்னார். முகத்தின் புன்முறுவல் விரிந்து பற்கள் தெரிந்தன. பத்து நிமிசம் கழிச்சு வந்த வேறொரு அன்பர் 'இவுங்க....'ன்னு ஆரம்பிச்சவுடனே 'தமிழ்க்காரங்க'ன்னு முடிச்சுவச்சேன். பூசாரிக்கு இன்னொரு தமிழனைக் காமிக்க இப்படியாப் போட்டா போட்டி!!!!

பெயர் கிஷோர் சந்த். ஊர் கிருஷ்ணகிரி. இங்கே வந்து 10 நாளாச்சாம். ஊர்லே லைட்டிங் பிஸினெஸ். அதுவும் எந்த மாதிரி? சினிமாப் படப்பிடிப்புகளுக்கு லைட்டிங் ஏற்பாடு செஞ்சு கொடுக்கும் விஷயம். சொந்தக் கம்பெனி. அஞ்சாறு பேர் வேலைக்கு வச்சுருக்கார்/வச்சுருந்தார். எப்படி இந்தச் சின்ன வயசுலே..... ? இயக்கத்தில் சேர்ந்து நாடுவிட்டு வந்து .........

" அதுவா? ஒரு நாள் த்வாரகா கோயிலுக்குப் போயிருந்தேன். சாமி கும்பிட்டுட்டு வெளிவரும்போது தெருவில் கால் வச்சதும் நிலம் அப்படியே குலுங்குச்சு. பக்கத்துலே பூஜ் லே ஏற்பட்ட பூகம்பத்தின் ஆட்டம். மனசுக்குள்ளே இருந்த லௌகீகமெல்லாம் பட்னு தெரிச்சு விழுந்துச்சு. என்னடா வாழ்க்கைன்னு தோணுனதும் எல்லாத்தையும் விட்டுட்டு ஹரே க்ருஷ்ணா இயக்கத்தில் அப்படியே சேர்ந்துட்டேன்."

" எங்களாலே லௌகீகத்தையெல்லாம் சட்னு விடமுடியாது . சம்சார சாகரத்துலே உழன்றுகிட்டு இருக்கோம்." ( இதுலே,எப்பப் பார்த்தாலும் நாளைக்கு என்ன பதிவு எழுதலாமுன்னு நிலத்தடி நீர் போல மனசுக்குள்ளே ஒரு ஓட்டம். இந்த நோய் ஆரம்பிச்சு நாலுவருசமா தீவிரமா வளர்ந்துக்கிட்டே போகுது. புத்தைவிட மோசம்)

"இங்கேயே ப்ரசாதம் சாப்புட்டுட்டுப் போங்க"

வாயைத் திறந்து எதையும் கேக்கவிடாம இந்த சாமி வேற ஆன்னா ஊன்னா சோத்தைப் போட்டே என் வாயை அடைச்சுரும்.

பரவாயில்லை. இன்னொரு சமயம் பார்க்கலாம்.

"இல்லீங்க. நான் சாம்பார் வச்சுருக்கேன். என் சமையல்தான். நீங்க சாப்பிட்டுப் பார்த்துச் சொல்லுங்க"

சாமீஈஈஈஈஈஈஈஈ....விடமாட்டயே........

முதல்முறையா இந்தக் கோவிலில் சமைச்சுருக்கார். எண்ணிப் பார்த்தால் 12 வகை. கத்தரிக்காய் சாம்பார், பீன்ஸ் பொரியல், முட்டைக் கோஸ் பச்சைப் பட்டாணி கூட்டு, உருளைக்கிழங்கு கறி, காலி ஃப்ளவர் கறி, காய்கறிகள் சேர்த்த ஒரு பஜ்ஜியா, பச்சைப் பயறு சாலட், சாதம், சப்பாத்தி, பால்பாயசம், பர்பி. ஹல்வா. குடிக்க எலுமிச்சம் ஜூஸ் வேற.

ஆர்வக் கோளாறு அதிகமா இருக்கே இவருக்குன்னு கோபால்கிட்டே முணுமுணுத்தேன். இத்தனை வகை தேவையே இல்லை. நாலைஞ்சு இருந்தாலே போதும். அதுவும் சாமிக்கு என்றதால். (வீட்டுலே ரெண்டே வகைதான். அதுக்கு மேலே செய்யமாட்டேன்)

கோயிலில் பூஜாரி வேலை இங்கே அவ்வளவு சுலபமில்லை. நைவேத்தியமுன்னு செஞ்சு கொடுக்க மடைப்பள்ளி ஆட்கள் யாரும் இருக்கமாட்டாங்க. மகாநைவேத்தியம் மட்டும் போதும்முன்னு விட்டுற முடியாது. அஞ்சாறு வகைகள் செஞ்சு ஒரு ட்ரேயில் விளம்பிக் கொண்டுவந்து சாமிமுன்னால் வச்சு நைவேத்தியம் சமர்ப்பியாமி. திரைன்னு தனியாப் போடாமல் சின்னதா மூணு மடிப்புள்ள ஒரு மீட்டர் உயரம்வரும் தடுப்பு ஒன்னைக் கொண்டுவந்து வச்சுட்டு அதுக்குப் பின்னால், சாமிக்கு முன்னால் ட்ரேயை வைப்பாங்க. இன்னொரு பூஜாரியும் இந்தியாக்காரர்தான். அவருக்கு ஊர் மாயாப்பூர். பெயர் கோவிந்தா. எல்லாம் சின்ன வயசுப் பசங்க. 23 இருந்தாலே அதிகம்.. ஒருத்தர் பூஜை செஞ்சா இன்னொருத்தர் சமைப்பார். ரெண்டு பேரும் மாறி மாறி பூஜை , சமையல்ன்னு நடக்குது.
இது நடந்து நாலைஞ்சு வாரமாச்சு. இடையில் ஒரு நாள் கிஷோர் சந்த் பூஜாரியைப் பார்த்தப்ப முகத்துலே 'தேஜஸ்' குறைவு. அடுத்து வந்த வாரங்களில் முகவாட்டம் கூடி இருந்துச்சு. நம்ம தொலைபேசி எண், விலாசமெல்லாம் கொடுத்துட்டு வீட்டுக்கு வாங்கன்னு அழைச்சோம். சமையல் ட்யூட்டி இல்லாத நாளில் பகல் 2 மணி முதல் அஞ்சரை வரை ஃப்ரீ டைம் இருக்குன்னார். வரணுமுன்னு தோணினால் ஒரு ஃபோன் அடிங்க. வந்து கூட்டிட்டு போறேன்னேன்.

வருசப் பிறப்புக்குக் கோயிலுக்குப் போனப்ப இவர் இருந்தார். கொஞ்ச நேரம் பேசிட்டு, புதுவருச வாழ்த்து(க்)களைச் சொல்லிட்டு வந்தோம். முகத்தில் சிரிப்பே இல்லை. உடம்பு சரி இல்லையோ என்னவோன்னு கேட்டதுக்கு நல்லா இருக்கேன்னார்.

'கோயிலில் வேலை நெட்டி முறியுது போல. வெளிநாடுன்னு வந்துட்டு இப்படித்தான் நம்மாளுங்க ப்ரெஷர் தாங்காம ஆயிடறாங்க'ன்னு கோபால்தான் வீட்டுக்கு வரும்போது சொல்லிக்கிட்டு இருந்தார். வீட்டு நினைவு வந்துருச்சோ என்னவோ பாவம்(-:


'போனவருச'ச் சாப்பாடே, இப்பப் பகலுக்குப் போதுமுன்னு இருந்ததால் ஒன்னும் சமைக்கலை. போனாப் போகட்டும். சாயங்காலத்துக்கு ஆக்குனால் ஆச்சு. இன்றொருநாள் நல்லதா ஆக்கிப்போட்டால் வருசம் முழுசும் ஆக்கிப்போட்டதுக்கு சமமாகுமேன்னு சமையலை முடிச்சேன்.
இந்த 34 அரை(?) வருச வாழ்க்கையில் 'நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்' ஒருமாதிரி செட் ஆகி இருக்குன்னு புரிஞ்சுக்கும் வாய்ப்பு ஒன்னும் வந்துச்சு. பேசாம சாப்பாட்டை, பீச்சுக்குக் கொண்டுபோய் சாப்பிடலாமே! (சிலநாள் வீட்டுலே டீ போட்டு எடுத்துக்கிட்டு பீச்சுலே உக்கார்ந்து குடிச்சுட்டு வர்றது உண்டு. என்னென்ன கொண்டு போகணுமுன்னு கோபாலுக்கு அத்துப்படி. நல்லாப் பழக்கியாச்சு)

கிளம்பியாச்சு. இங்கே ரெண்டு பீச் நல்லதா இருக்கு. ஒன்னு நியூ ப்ரைட்டன் பீச். கட்டிடங்கள் சூழ ரொம்பச் செயற்கையா இருக்கும். ஷாப்பிங் மால் வேற பீச்சுக்கு எதிரில். உள்ளூர் வாசகசாலையின் கிளை, புதுக் கட்டிடம் கட்டிவச்சுருக்குக் கடற்கரையிலே. கூட்டம் எப்பவும் ஜேஜேன்னு இருக்குமிடம். சரிப்படாது. இன்னொரு பீச் சம்னர் என்ற இடத்தில். கடற்கரை கிராமம்(?). இங்கேதான் நம்ம பே வாட்ச் புள்ளையார் இருக்கார். இயற்கையான சூழல். கடற்கரை, கடற்கரையா இருக்கும். போற வழியில் ஒரு திருப்பத்தில் கடலில் இருந்து எழுந்து நிற்கும் உயரமான பாறையின் பெயர் (Shag Rock) ஷாக் ராக். தமிழில் சொன்னாச் சரியான உச்சரிப்பு வரலையே.... நம்ம தருமியின் கஷ்டம் புரிஞ்சுதா இப்ப!!!!
இந்த shag rockகை மவொரி மொழியில் Rapanui னு சொல்றாங்க. (Rapanui means "the great sternpost")இந்தக் கல் தூணுக்குப் பொருத்தமான பெயர்தான். ஷாக் பறவைகள் கூட்டம்கூட்டமா இங்கே கூடுகட்டிவசிக்கிறதைப் பார்த்து வெள்ளையர்கள் வச்ச பெயர்தான் ஷாக் ராக்.

இதுலே இருந்து சுமார் ஒரு கி.மீ பயணிச்சால் Cave Rock. கேவ் ராக். கடற்கரையின் மணலிலேயே நடந்து போகலாம். இந்த கேவ்ராக்கை முதல்முதலில் பார்த்ததும் எனிட் ப்ளைடனின் ஃபேமஸ் ஃபைவ் கதைதான் நினைவுக்கு வந்துச்சு. பசங்களும் டிம்மியும் குகைக்குள்ளே போய்ப் பார்த்துக்கிட்டு இருக்கும்போது வில்லன் கூட்டம் வந்துரும்!!!! இந்தக் குகையின் மேலே கப்பல் கொடிமரம் மாதிரி ஒன்னு நட்டுவச்சுருக்காங்க. போட் ஆட்களுக்கு ரேடியோ சிக்னல் இதுவழியா அனுப்புறாங்கன்னு கேள்விப்பட்டேன்.

இந்த கல்லுக்கு மவொரி பெயர் Tuawera. கடல் அரசனா இருந்த திமிங்கிலம் ஒன்னு இங்கே வந்து செத்துப் போச்சு. அதோட பூதவுடல் இப்படிக் கல்லா மாறி இருக்குன்னு மவொரி கதை.

Tūrakipō என்ற மவொரித் தலைவர், பக்கத்துப்பேட்டை தலைவருடைய மகளைக் கல்யாணம் கட்ட ஆசைபட்டார். அந்தப் பொண்ணு, மாப்பிள்ளை பிடிக்கலைன்னு சொன்னதும் தலைக்குக் கோபம் வந்து பொண்ணைச் சபிச்சுட்டார். பொண்ணோட அப்பா ச்சும்மா இருப்பாரா? அவர் கை என்ன மாங்காய் பறிச்சுக்கிட்டா இருந்துருக்கும்?

விடுவிடுன்னு கடலை நோக்கி நிக்கும் மலைமேலே ஏறுனார். ரொம்ப சக்தி வாய்ந்த karakia (மந்திரம்/ப்ரேயர்) ஒன்னை ஜெபிச்சார். கடல் அரசன் திமிங்கிலம் கரைக்கு வந்து சேர்ந்து ஒதுங்குச்சு. தரை தட்டுன கப்பலுக்கும் திமிங்கிலத்துக்கும் ஒரே கதிதானே?

விஷயம் தெரியாத Tūrakipō வும் அவர் குடிகளும் திமிங்கிலத்தை வெட்டி, ஆக்கித் தின்னாங்க. மந்திரத் திமிங்கிலமுல்லே..... எல்லாருக்கும் மயக்கம் வந்துச்சு. மயங்கி விழுந்த யாரும் பிறகு எந்திரிக்கவே இல்லை.

இந்தத் திமிங்கிலத்தின் மிச்சம்மீதிதான் இப்போ இங்கே கிடக்கும் கேவ்ராக்.

சம்னர் கிராமத்துக்கு லேண்ட் மார்க்காக இருக்கும் இந்த ரெண்டும். எப்பவோ இருந்து அணைஞ்சு அழிஞ்சுபோன எரிமலையின் மிச்சங்கள். கேவ் ராக்கிலிருந்து கடலை ஒட்டியே பீச் ரோடு ஒன்னு போகுது. வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அதனால் நடைப்பயிற்சிக்குப் போகும் மக்களும் நாய்களும் நிரம்பி இருப்பாங்க. கட்டைச் சுவத்துலே உக்காந்து கடலைப் பார்த்துக்கிட்டே கடலையும் போடலாம் ரொம்ப ஏதுவான இடம். இருக்கைகளும் அங்கங்கே போட்டுவச்சுருக்காங்க.

இங்கே வந்தால் மட்டும், 'பெட்ஸ்ம் அதன் ஓனர்'களும் ஒரே மாதிரி இருக்காங்களான்னு ஆராய்தல் என் முக்கிய பொழுதுபோக்கு. 99 சதமானம் சரியாவே இருக்கும் என்பது வியப்பு. நீண்ட நடைக்குப் பிறகு இந்த ரெண்டு ராக்ஸ்க்கும் இடையில் இருக்கும் கார் பார்க்குக்கு வந்து கடலைப் பார்த்தபடியே சாப்பாட்டை முடிச்சோம். சூரியன் மறையத் தொடங்கி மசமசன்னு ரொம்பலேசா இருட்டு கவ்வும் நேரம். தற்செயலா கிழக்கே திரும்பினால்...... ஆகாயத்துலே இருந்து இறங்கி வந்தாப்லெ அந்தரத்துலே ஒளிக்கீற்றா ஒரு சிலுவை தொங்குது......

ஆ............. கடவுளே எங்களுக்குக் காட்சி கொடுத்தீரே..........

(பட உதவி. கோபால். ப்ளாக்பெர்ரியில் எடுத்தது)

கெமெரா எங்கே? ஆஹா.... புதுவருசத் தீர்மானம், இன்னிக்கே மண்டையைப் போட்டுருச்சே...... கெமெராவை எப்படி மறந்தேன்.....(-:

கேவ் ராக் மேலே மெலிசா ..... அடிவானத்துலே மறையும் சூரியனின் கதிர்கள் இப்படி இந்தக் கொடிமரத்துலே படுதோன்னு பார்த்தால் .....ஊஹூம் சூரியன் போய் பத்து நிமிசமாச்சே. மணி இப்போ ஒம்போதரை ஆகப்போகுதே.

அப்படியே விழுந்தாலும் கொடிமரம் முழுசும் வெளிச்சம் இல்லாம...... எப்படி? ஒருவேளை அந்த சிலுவை அளவு மட்டும் இருட்டில் ஒளிரும் பெயிண்ட் அடிச்சு வச்சுருப்பாங்களோ?

காரைக் கிளப்பிக் குகைவரை போய்ப் பார்த்துட்டு வீட்டுக்கு வந்தோம்.

சிலுவை அளவுக்குச் சின்னதாக் குட்டியா சீரியல் பல்ப் மாட்டிவச்சுருக்காங்க. புதுவரவு. இந்த வருசத்துக்கான கிறிஸ்மஸ் அலங்காரம்.

அல்லேலூயா அல்லேலூயா.....

Tuesday, January 20, 2009

குப்பைத் தொட்டி வைக்கலேன்னா...... இப்படித்தான்.

ரெண்டுவிதமான கருத்துகள் (இப்போதைக்கு) இருக்கு இந்தக் குப்பை விவகாரத்துலே. குப்பைத் தொட்டின்னு ஒன்னு வச்சால் அதுலே குப்பை போடுவோம். வைக்கலைன்னா? கண்ட இடத்தில் குப்பைகளை வீசி எறிஞ்சுட்டுப் போவோம். (குப்பைத் தொட்டி வச்சாலும் அதுலே போடாமல் கண்ட இடத்துலே போடும் 'மாக்கள்' இந்தக் கணக்கில் இல்லை(-: யாராலே முடியுது, பத்தடி நடந்து போய்க் குப்பைத்தொட்டியில் போட! )

மூணாவது கருத்து.........குப்பைத் தொட்டி வச்சால் அதுலே குப்பையைப் போடுவோம். இல்லேன்னா எங்க குப்பைகளை நாங்களே கையோடு எடுத்துக்கிட்டுப்போய் எங்க வீட்டுக் குப்பையில் சேர்த்துருவோம். இது எப்படி இருக்கு?

பகல் சாப்பாடு ஆனதும் நார்த்லேண்ட் மால் வரை போகலாமுன்னு கிளம்புனோம். நகரின் அடுத்த கோடியில் இருக்கு. லீவு காலத்தை வீட்டுக்குள்ளேயே ஓட்டலாமா? ஆன்னா ஊன்னா 'மால் டெவெலெப்மெண்ட்'ன்னு உள் & வெளி அமைப்புகளை மாத்தி மாத்திக் கட்டிக்கிட்டே இருக்காங்களே. எப்பப் போனாலும் புதுமைதான். அக்கம்பக்கம் இருக்கும் கடைகளையெல்லாம் வளைச்சுப்போட்டு அந்த ஏரியாவிலேயே பெரியமால்னு நமக்குக் காட்டிக்கிட்டு இருந்தாங்க. அடப்போய்யா..... எப்படின்னாலும் எங்க ரிக்கர்ட்டன் மாலை அடிச்சுக்க முடியாது. தெற்குத் தீவிலேயே பெரூஊஊஊஊஊசு எங்களுது.


முட்டாய்க் கடை ஒன்னு புதுசா வந்துருக்கு. கண் எதிரில், கண்ணாடித் தடுப்புக்குப் பின்னே முட்டாய் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. ஒரு முட்டாய் 135 டாலராம். எப்படிப் புடிச்சுத் தின்னணுமுன்னு தெரியாததால் வாங்கிக்கலை:-))))கிறிஸ்மஸ் அலங்காரங்கள் எல்லாம் இன்னும் ஒரு 10 நாள் வரை அப்படியே இருக்கும். அழகா அலங்கரிச்சு இருந்தாங்க. எல்லா மால்களிலும் சாண்ட்டாவுக்கு ஒரு இடம். அழகான நாற்காலியில் சேண்ட்டா குறிப்பிட்ட நேரங்களில் வந்து அமர்ந்துருப்பார். பிள்ளையும் குட்டிகளுமா வரும் மக்கள் சேண்ட்டாவுடன் படம் புடிச்சுக்கலாம். இதுக்குன்னே ஒரு ஃபோட்டோக்ராஃபர் எல்லா முஸ்தீபுகளும் செஞ்சுவச்சுக்கிட்டு தயாரா இருப்பாங்க. சில குழந்தைகள் அழுது அமர்க்களப்படுத்திரும். அவ்ளோ பெரிய தாடியைப் பார்த்துப் பயந்துரும்போல. எத்தனை காப்பி வேணுமோ அதுக்குண்டான காசைக் கட்டிட்டு வாங்கிக்கலாம். உற்றார் உறவினருக்கு அனுப்பணுமே.
நம்ம வீட்டு சேண்ட்டா:-)

இதுலேகூட எங்க வீட்டுக்கிட்டே இருக்கும் ஒரு ஷாப்பிங் செண்டர் தாராளமனசோடு ஒரு குடும்பத்துக்கு ஒரு படம் இலவசம் ன்னு விளம்பரம் கூடச் செஞ்சாங்க. அப்படியாவது ஆள் வருதான்னு பார்க்கறாங்க.

நார்த் லேண்ட் மாலின் சுற்றுப்புறக் கடைகள் ஒன்னில் ரொம்ப நாளாப் பார்த்துவச்ச (வேற ஒரு இடத்தில்) சக்கூலண்ட் அரைவிலையில் கிடைச்சது. கடைகளைப் பொறுத்தவரை எல்லாமே செயின் ஸ்டோர்ஸ்.
புத்தருக்கு முன்னால் வச்சால் அம்சமா இருக்கும். ஆனால் கொளுத்தமாட்டேன். இன்னிக்குன்னு பார்த்து அரைவிலை. புத்தர் அதிர்ஷ்டம் செஞ்சவர். (புத்தர் இதைவிட மலிவு)
என்ன இது வெய்யில், இந்தப் போடு போடுது இன்னிக்கு. பேசாம க்ரோய்ன்ஸ் பார்க் போகலாம். இங்கிருந்து 10 நிமிஷ ட்ரைவ்தான். இதுவும் நம்ம சிட்டிக் கவுன்ஸில் பராமரிக்கும் தோட்டம்தான். குப்பைகள் இல்லாத குடும்பப் பார்க். Litter free zone!!!! அங்கங்கே பார்பெக்யூ செஞ்சுக்க கேஸ் அடுப்புகள் வச்சுருக்காங்க. காசு போட்டால் அடுப்பெரியும். அவுங்கவுங்க, சுட்டுக்கிட்டுச் சுத்தம் பண்ணிட்டால் வேலை ஆச்சு. எங்கேயும் குப்பைத் தொட்டிகள் இல்லை. அவரவர் குப்பைகளை அவரவர் கையோடு எடுத்துக்கிட்டுப் போயிறணும்.

அங்கங்கே குப்பைத் தொட்டிகள் வச்சு அதுக்கு ப்ளாஸ்டிக் பை மாட்டி அப்பப்போ சுத்தம் செஞ்சு, இதுகள் சுத்தத்தைப் பராமரிக்கன்னு ஆள் போட்டு, அவருக்கு சம்பளம் அது இதுன்னு ஆகும் செலவைச் சரிக்கட்ட மக்கள் வரிப்பணத்தைச் செலவு செஞ்சுன்னு......இப்படி ஒன்னுபின்னாலே ஒன்னுன்னு தொடர்ந்துக்கிட்டு இருக்கு பாருங்க. இந்தக் குப்பையில்லாத் திட்டத்தை ஒரு பரிசோதனைக்காகன்னு ஆரம்பிச்சு இப்போ முழு இடமும் பளிச்ன்னு இருக்கு.

மொத்தம் 93 ஹெக்டேர் இடத்தைக் கொண்டிருக்கும் இந்தத் தோட்டத்துலே நாய்களுக்கான தனிப் பகுதி ஒன்னு இருக்கு. நாய்களுக்கு தினசரி உடற்பயிற்சி செஞ்சுக்கச் சரியான இடம். முழுசும் வேலிகள் போட்டு, நாய்களும், அவுங்க உடமையாளர்களும் கவலையில்லாமல் வந்து பொழுது போக்கிட்டுப் போகலாம். இங்கே குப்பைத் தொட்டி வசதிகள் செஞ்சு வச்சுருக்காங்க. நாய்களின் மானிடத் தோழர்கள் Dog doo bag கையோடு கொண்டுவந்து அவுங்கவுங்க நாய்த் தோழர்களின் 'வஸ்து'க்களை வாரி எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டுறணும். மனுசங்களை நல்லாப் பழக்கிவச்சுருக்கோம். (இங்கே மட்டுமில்லை பொதுவா நாய்களைத் தெருக்களில் நடக்கக் கொண்டுபோகும்போதும், கடற்கரைக்கு விளையாடக் கொண்டுபோனாலும் கடைப்பிடிக்கவேண்டிய முறை இது)

தொங்கு பாலம் ஒன்னு கம்பிவலைகளால் அமைச்சுருக்காங்க. இங்கே கறுப்பு அன்னப் பறவைக் குடும்பம் ஒன்னு இருக்குமேன்னு தேடுனேன். காணோம். பாலத்துக்கு இந்தப் பக்கம் பசங் (ஒருமை) தண்ணீரில் குதிச்சு விளையாடிக்கிட்டு இருக்காங்க. அந்தப் பக்கம் தெளிஞ்சு கிடக்கும் தண்ணீரில் வாத்துக் குடும்பங்கள். ஒரு பாப்பா மட்டும் அம்மாகூடவே வந்து அஞ்சு நிமிசத்துக்கு, ஒருமுறை தண்ணிக்குள்ளே முங்கி இரைதேடும் பயிற்சி எடுத்துக்கிட்டு இருந்துச்சு. பாலம் கட்ட வலை பின்னுவதில் உதவி செஞ்சவுங்க உள்ளூர் உயர்நிலைப்பள்ளி மாணவமணிகள். மகள் படிச்ச பள்ளிக்கூடம்.




கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி போல, இங்கே வாத்து போல மாறு வேஷம் போட்டுக்கிட்டு ஒரு பறவை. கொண்டையை மறைக்கத் தெரியலை பாருங்க:-))))



பாலத்துக்கு அந்தப் பக்கம் படகுச் சவாரி. ( நம்ம முட்டுக்காடு ?)
வலது கைப்பக்கம் இருக்கும் ஒத்தையடிப் பாதையில் காட்டுக்குள்ளே போனால் 'ஜோ'ன்னு தண்ணீர் விழும் குட்டி அணை. Groyne ன்னு சொல்லும் காங்க்ரீட் தடுப்புச்சுவர் வச்சுருப்பதாலே இந்த இடத்துக்கும் Groynes Park ன்னு பெயர் வந்தாச்சு. (நம்ம வடுவூரார் சுவர் விளக்கம் தருவார் என நம்புகின்றேன்) வைமாக்காரிரி(Waimaakariri River) ஆத்துத் தண்ணி ஓடையா இங்கே வந்து சேருது. சூடுதாங்காம தண்ணீர் திரைக்குப் பின்னால் உக்கார்ந்துருக்காங்க மக்கள். ப்ரிட்டிஷ்காரங்கன்னு 'பேச்சு' சொல்லுச்சு.



ஒருக்கால் குளிக்கலாமுன்னு இருக்காரோ?


அணையில் இருந்து வழியும் தண்ணீர் சின்ன ஆறா ஓடிக்கிட்டு இருக்கும் இயற்கை அழகை எல்லாம் கெமெராவில் புடிச்சுக்கிட்டு, ஒரு சுத்து சுத்திவந்துப் படகுத் துறைக்கு எதிரில் மரத்தடி மீட்டிங் போட்டோம். எழுத்தாளர் & வாசகர்/க்ரிடிக். புதுக்கெமரா வாங்கவேண்டியதின் அவசியத்தைப் பற்றி ஒரு மணிநேர லெக்சர் கொடுக்கும்படியா ஆச்சு எனக்கு. எதிராளி கப்சுப்!
ஏரித்தண்ணீர் நிறைஞ்சு வழிஞ்சு ஒரு பச்சைத் திரை போட்டது. எல்லாம் பாசி பிடிச்சுக்கிடந்த இடம். ஆனால் கலைக்கண்ணோடு பார்த்தேனா.......... ஹைய்யோ.......இதுவும் ஒரு அழகுதான்.

(பதிவின் நீளம் கருதி என்னுடைய ஐஸ்க்ரீம் வாயில் வைக்குமுன் கீழே விழுந்ததையும், கெட்ட எண்ணத்துக்கு அப்படித்தான் நடக்குமுன்னு கோபால் சொன்னதையும், கடைசியில் ஐஸ்க்ரீம் தின்னக் கொடுத்து வைக்காதவங்க யார் என்பதையும் உங்க ஊகத்துக்கே விடுகிறேன்)