Friday, November 20, 2009

கொல்ல கொண்டா

ஆடுமாடு மேய்ப்பர்கள் இருக்கும் மலை. இப்படித்தான் தெலுங்கில் இதுக்குப் பொருள். கதையும் அப்படித்தான் போகுது. காகதீயமன்னர்கள் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலக் கட்டம். 1143 வது ஆண்டு. ராஜா ப்ரதாப் ருத்ரதேவ் என்ற அரசர் இந்தக் கருங்கல் மலைக்கருகே ஒரு மேய்ப்பனைச் சந்திக்கிறார். மலையின்மேல் ஒரு கோட்டை கட்டுனா நல்லா இருக்குமுன்னு பேச்சுவாக்கில் அவன் சொல்ல, அட! ஐடியா நல்லா இருக்கேன்னு ராஜா ஒரு குச்சா (கோட்டைன்னு சொல்ல முடியாது) கட்டுனாராம். ( இடையர் பேச்சைக் கேட்டுக்கிட்டு அதன்படி 'நடக்க முயற்சிப்பது' நமக்குப் புதுசா,என்ன?) இது சின்ன அமைப்பாக இருந்துருக்கணும். கொல்ல கொண்டா என்ற பெயர் காலம் போகப்போக மருவி இந்த இடத்துக்கே கோல்கொண்டான்னு நிலைச்சுருச்சு. ஆச்சு ஒரு 220 வருசம். ராஜா க்ருஷ்ண தேவ் ஆட்சி. இவுங்க தலைநகரம் வாராங்கல். இம்மாந்தூரம் வந்து கோட்டையை(?!) கவனிச்சுக்க முடியலைன்னு பாமினி ராஜ்ஜியத்துக்காரரான மொகம்மது ஷா என்பவருக்கு கொடுத்துட்டாராம். அவர் இதுக்கு ' மொகம்மது நகர்'ன்னு பெயர் வச்சுட்டார். அரசாங்க ஆவணங்களில் இந்த விவரம் பதிஞ்சது இப்பவும் இருக்காம்!

இது நடந்தது 1363. அப்ப இருந்து ஒரு 155 வருசம் பாமினி ராஜாங்கத்துக்கிட்டேதான் பொறுப்பு இருந்துருக்கு. அந்த பாமினி ராஜ்ஜியத்தில் அஞ்சு சுபேதார்கள், அரசருக்கு வேலை செஞ்சுருக்காங்க. அரசு ஆட்டம் கண்டதும் இந்த ஐவரும் தனித்தனியாச் சுயேச்சையா நாட்டின் வெவ்வேற பகுதிகளில் செயல்பட ஆரம்பிச்சுட்டாங்க. சுல்தான் க்யூலி (Sultan Quli) என்றவர் இந்த கோல்கொண்டா என்னும் மொஹம்மது நகர் பகுதியை எடுத்துக்கிட்டு (Qutub Shahi Dynasty )அவருடைய காலத்துக்குப் பின் மகன், பேரன், கொள்ளுப்பேரன் எள்ளுப்பேரன் இப்படி ஏழு தலைமுறையா ஆட்சி செஞ்சாங்க. (இந்த ஏழுபேரின் சமாதிகளைத்தான் போன இடுகையில் பார்த்தோம்) அரசாண்ட காலக் கட்டம் 1518 முதல் 1687 வரை. முதல் மூணு தலைமுறைகளில்தான் கொஞ்சம்கொஞ்சமா இந்தக் கோட்டையை விரிவுபடுத்தி இப்போ நாம் பார்க்கும் நிலைக்குக் கொண்டுவந்துருக்காங்க. இதுக்கே 62 வருசம் ஆகி இருக்கு. (பாரசீகத்தில் பிறந்த இந்த க்யூலி, குதிரை வியாபாரம் செய்ய, பாமினி ராஜ்ஜியத்தில் அரசாங்க வேலையில் இருந்த மாமா வீட்டுக்கு வந்தவராம். ஏழு தலைமுறையா இங்கே நிலைச்சுட்டாங்க )

அதானே.... கருங்கல் மலையை வெட்டி அதுலே இருந்த எடுத்தக் கற்களாலேயே இத்தவை பெரிய கோட்டையைக் கட்டுறதுன்னா லேசுப்பட்டக் காரியமா? நவீன ரக மெஷீன்கள் எல்லாம் இல்லாத ஒரு காலத்தை மனக்கண்ணில் பார்த்துக்குங்க! ஒரே 'உளியின் ஓசை'யாத்தான் இருந்துருக்கும்!

நாலாவது தலைமுறை, பட்டத்துக்கு வந்த ஏழாவது வருசத்தில்(1587) கட்டுனதுதான் பாக்யநகர்.(இப்போதைய ஹைதராபாத்) புது நகர் கட்டுனதும் குதூப் சாஹி வம்சம் ஆண்ட காலம் முழுசும் பாக்யநகர்தான் தலைநகர். இவுங்க ஆட்சி ஒரு முடிவுக்கு வந்தது அரசர் ஔரங்கசீப் படையெடுப்பினால். இவர் ரெண்டு முறை இந்தக் கோட்டைக்குப் படை எடுத்துருக்கார். முதல்முறை வந்தப்ப இவர் இளவரசர்தான். வயசு அப்போ 37. சண்டையில் ஜெயிப்பு. ஆனா அப்போ ஆட்சியில் இருந்த குதூப் ஷாஹி அரசர் சமரச உடன்படிக்கை செஞ்சுக்கிட்டு தன்னுடைய மகளை ஔரங்கசீப்பின் மகனுக்குக் கல்யாணம் கட்டிக் கொடுத்துட்டார். ( சரித்திரத்தைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் அரச வம்சத்துப் பெண்கள் பகடைக்காயாத்தான் உருட்டிவிடப்பட்டுருக்காங்க.) சம்பந்தி ஆனதுக்கு அப்புறம் என்ன செய்யறதுன்னு கோட்டையை விட்டுட்டுத் திரும்பிப் போயிட்டார். அரச பதவிக்காக நிறையக் கொடுமைகள் செஞ்சு (அதெல்லாம் பெரிய கதை. அந்தக் கடலுக்குள்ளே பின்னொருநாள் மூழ்கலாம்) தன்னுடைய 47 வது வயசுலே(1658) அரசராகப் பட்டம் சூட்டிக்கிட்டார் ஔரங்கசீப்.
கோட்டைக் கொத்தளம்

பழைய தோல்வி மனசுலே அப்படியே பதிஞ்சுகிடந்துருக்கும் போல. பழிவாங்கணுமுன்னு தோணிப்போயிருக்கும்( நாவல் எழுத சரியான களம். நம்ம பதிவர்கள் யாராவது எழுதலாம்). 32 வருசம் கழிச்சு, 1687லே (69 வயசு) ரெண்டாவது முறையா படை எடுப்பு. இதுக்குள்ளே இங்கேயும் கோட்டைப் பாதுகாப்பை நல்லாவே பலப்படுத்தி இருக்காங்க. முற்றுகை எட்டுமாசம் தொடர்ந்தது. இந்த எட்டு மாசக் காலத்துலே சாமி கும்பிட இடம் வேணுமுன்னுதான் 'பேகம் ஹயட் பக்ஷி' சமாதிக்குப் பக்கத்துலே சின்னதா ஒரு மசூதி தனக்குமட்டுமேன்னு கட்டிக்கிட்டார். இந்த இடத்தை அவர் குறிப்பாத் தேர்ந்தெடுத்ததுக்கும் ஒரு காரணம் சொல்றாங்க. இந்த பேகம்தான் முதல் படையெடுப்பில் 'அந்த' சமரச ஐடியா கொடுத்தவுங்களாம்.

ரெண்டாவது முறையும் இந்தக் கோட்டையைப் பிடிக்கமுடியாமல்தான் திரும்பிப் போயிருக்கணும். ஆனா.....கூட இருந்தே குழி பறிக்கும் துரோகம் எக்காலத்துக்கும் பொது இல்லையா? அரசரின் 'தளபதி'களில் கோட்டையின் கிழக்குப் பகுதிக்குப் பொறுப்பானவரா இருந்த ஒருத்தர், நடு இரவில் கிழக்கு வாசலைத் திறந்து எதிரிப்படை உள்ளே நுழைய உதவி செஞ்சுட்டார். துரோகம் வென்றது(-: இது 1687வது வருசம்.

கடைசியில் அரசரைச் சிறைப்பிடிச்சு தௌலதாபாத் கோட்டைச் சிறையில் அடைச்சுட்டாங்க. 14 வருசம் அங்கே கிடந்துக் கடைசியில் மேலே போய்ச் சேர்ந்துட்டார் ஷாஹி வம்சத்தின் கடைசி அரசர். (Abdu Hasan Tana shahi)

ஔரங்கசீப் ( ஐயோ இதென்ன சீப் சீப்புன்னு சீப்பாக் கிடக்கு) இந்த ஔரங்கசீப்ன்னு நம்ம சரித்திரப் புத்தகங்களில் படிச்ச நினைவு மனசுலே பதிஞ்சு போனதால் இப்படியே எழுதவேண்டியாகிருது. Aurangzeb என்ற பெயரை நல்லாத்தான் தமிழ்ப் 'படுத்தி' இருக்கோம். கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தால் வேற்று நாட்டு மக்களின், இடங்களின் பெயர்களையெல்லாம் அப்போ இருந்த தமிழறிஞர்கள்தான் இப்படி எழுதணும், இப்படிச் சொல்லணுமுன்னு சொல்லிக் கொடுத்தாங்களா இல்லை..... அரசாங்க து(வி)பாஷிகள் வேலையான்னு தெரியலை.

ஜெயிச்சுக் கோட்டையைப் பிடிச்சுட்டாலும் தானே இங்கே இருந்து அரசாள முடியுமா? டெல்லி வேலையெல்லாம் பின்னே யார் பார்ப்பது? தனக்குப் பிரதிநிதியா ஒருந்தரை கவர்னரா நியமிச்சுட்டுப்போனார் ஔரங்கசீப். இவர்தான் ருஸ்தும் தில் கான். 23 வருசம் ஹைதையின் பொறுப்பாளர். ஔரங்கசீப் மரணத்துக்குப் பின் பட்டத்துக்கு வந்த சீப்பின் மகன் கம் பக்ஷ் ( Kam Baksh) கவர்னரை கொன்னுட்டு தானே இந்த டெக்கன் பகுதியை ஆள ஆரம்பிச்சார். அதுக்கு அப்புறம் பஹதூர் ஷா ஆலம் இந்தப் பகுதிக்குள் புகுந்து இளவரசர் கம் பக்ஷ் கொல்லப்பட்டது எல்லாம் இன்னுமோர் தனிக்கதை. விடுங்க.....இந்த இடுகை ரொம்ப ரத்தம் பார்த்துருச்சு.

இப்படி ஆட்சிகளும் சிற்றரசர்களும் மாறி மாறிக் கடைசியில் 1947 வது வருசம் ஆந்திர மாநிலம் ஆச்சு. கடைசி அரசரா இருந்தவர் நவாம் மீர் ஒஸ்மான் அலி கான்.( Nawab Meer Osman Ali khan). இப்போதும் மாநிலத்தின் தலைநகரம் ஹைதராபாத் தான்:-)

அந்த ஏழு சமாதிகளில் இருந்து புறப்பட்டு ஒரு பத்து நிமிஷ ட்ரைவில் கோல்கொண்டாவுக்குள் நுழைஞ்சோம். சரித்திரக் கதைகளில் வாசிச்சதை நினைவுபடுத்தும் விதம் பெரிய மதிலில் உள்ள வாசலைக் கடந்து பயணிக்கிறோம். தெருக்களுடன் கூடிய ஊர். மக்கள் நடமாட்டம், கடை கண்ணின்னு இருக்கு.

(அதிகாலையில் கோட்டைக் கதவுகள் திறக்கப்பட்டன. கோட்டையின் சுற்றுப்புறப் பகுதியில் இருக்கும் கிராமங்களிலே இருந்து நகருக்குள், பால் தயிர், பூக்கள் காய்கறிகள் இப்படிப் பொருட்களை விற்பதற்குக் கொண்டு செல்லும் மக்களின் கூட்டமும், வியாபாரிகள் விலைகளையும் பொருட்களையும் கூவிக் கூவி விற்கும் சப்தமும், பண்டக சாலைகளில் பொருட்களை வாங்கி அடுக்கும் கூட்டமுமாக அந்த இடமே கலகலவென்றிருந்தது. குதிரையை மெதுவாக நடக்கச் செய்து, எல்லா வேடிக்கை விநோதங்களையும் பார்த்தவாறே அரண்மனை இருக்கும் பாதையில் போய்க் கொண்டிருக்கும் வீரன்(கதாநாயகன்) ஏதோ நினைவு வந்தது போல தன் இடுப்பைத் தொட்டுப் பார்த்தான். அரசருக்குக் கொண்டுபோகும் ஓலை பத்திரமாக இருக்கிறது)

சின்ன ஊர்தான். ட்ரைவர் நவீனுக்கு வழி தெரியாதா என்ன? வேடிக்கை பார்த்துக்கொண்டே போய்ச் சேர்ந்தோம். மாலை ஆறுமணிவரை பார்வையாளர்களுக்கு அனுமதி. நுழைவுச் சீட்டு வாங்கிக்கிட்டோம். கேட்டில் நுழைஞ்சதும் அருமையான புல்வெளி. சின்னதா நடுவில் ஒரு பாதை. பாதை முடியும் இடத்துலே கோட்டையின் வரைபடம் ஒன்னு இருக்கு. இங்கேயும் வழிகாட்ட வரவான்னு ஒருத்தர் கேட்டார். தலையை இடம் வலமாக ஆட்டிட்டு பெரிய மதில்சுவரைத் தாண்டிப்போனோம். இந்த மதிலுக்குத் திரைசீலைச் சுவர்ன்னு பெயராம். சுவரின் மேல்பகுதியில் இருக்கும் துவாரங்கள்,இடைவெளி வழியாக உள்ளிருந்தபடியே எதிரிகளின் நடமாட்டத்தைக் கவனிக்கறதுக்கான ஏற்பாடாம்.

இந்த இடத்தில், கோட்டையின் விளக்கம் வரைபடம் எல்லாம் இருக்கும் புத்தகம் ஒன்னு இருபது ரூபாய்க்குக் கிடைச்சது. Owais Firdos Khan publications.(OFK). ரொம்ப வசதியாப் போச்சு, இல்லேன்னா இவ்வளோ கதை உங்களுக்குச் சொல்லி இருக்கமுடியாது. ஏழு ராஜா சரித்திரம் அதைப் பார்த்துத்தான். புத்தகம் போட்ட புண்ணியவானுக்கு நன்றி சொல்லிக்கறேன்.

பெரிய கதவுகளைக் கடந்து உள்ளே காலடி வச்சோம். பலாஹிஸார் வாசல். இங்கே இருக்கும் ஆர்ச் வளைவுகளுக்கு மேலே இருக்கும் துளைகளின் வழியாக, போர் நடக்கும் காலங்களில் கோட்டை வாசலைத் திறக்க முயலும் யானைப்படைகளையும் வீரர்களையும் விரட்டக் கொதிக்கும் எண்ணெய், உருக்கிய ஈயம் எல்லாம் ஊத்துவாங்களாம்.
(அடப்பாவமே....யானை.........)

இங்கே நடுவிலே நின்னு கை தட்டினால் அந்த சத்தம் கோட்டையின் உச்சியில் தொலைவில் இருக்கும் மண்டபத்தில் கேட்குமாம். ஆளாளுக்குக் கைதட்டிப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. நமக்குக் காது செவிடாயிரும் இன்னும் கொஞ்சம் நேரம் அங்கே நின்னால்(-:

அங்கே இருந்து குன்றின் உச்சியைப் பார்த்த கோபால் யானை இருக்குன்னார். எங்கே? எங்கே? அதோ அந்த வாசல் இருக்கு பாரு. அதுக்கு ரைட் ஸைடு. அட! ஆமாம். நீங்க சொன்னது ரொம்பவே 'ரைட்'

சமயம் பார்த்து நம்ம கெமெரா பேட்டரி மண்டையைப் போடப்போறேன்னு சொல்லுச்சு. நாலைஞ்சு படத்துக்காவது தேறணுமேன்னு கவலையாப் போயிருச்சு. பாதை இங்கே மூணாப் பிரிஞ்சது. இடது பக்கம் ஒரு நீளமான கட்டிடமும், நமக்கு வலப்புறம் கீழ்த்தளத்துத் தோட்டத்துக்கும் நேராப் போறது குன்றின்மேல் ஏறவுமுன்னு. கால்வலி வருமுன் குன்றேறலாம். கொஞ்சம் லேசான ஏத்தம். ரெண்டு பக்கமும் பெரிய பெரிய ஹால். படைவீரர்கள் தங்கும் இடமோ? வலது பக்கம் இருக்கும் ஹாலுக்கு கீழ்த்தளத்திலிருந்துதான் போகமுடியும்.ஆனால் அங்கே வரிசையா இருக்கும் ஜன்னல் போன்ற அமைப்பால் கீழே பார்க்கலாம். ஏதோ பிக்னிக் வந்த கூட்டமோ என்னவோ. பெரிய பாத்திரங்களை வச்சுச் சமைச்சு வரிசையா உக்கார்ந்து பந்தி நடந்துக்கிட்டு இருக்கு. இறைச்சிக் குழம்பை பெரிய ஜல்லிக் கரண்டியால் துழாவிவிட்டு, கறித்துண்டுகளைக் கோரி ஒரு பாத்திரத்தில் போட்டுக்கிட்டு இருந்தார் ஒருத்தர். ஓக்கே.... படைவீரர்கள் இப்படித்தான் அந்தக் காலத்துலே இதை கிச்சன் & டைனிங்கா பயன்படுத்தி இருப்பாங்க. கண் முன் டெமோ:-)

இன்னும் கொஞ்சம் மேலே ஏறி வலப்புறம் திரும்பினால் இன்னொரு சுற்றுச்சுவர் வருது. படிக்கட்டும் ஆரம்பிக்கும் இடம்வரை நடந்தோம்.
முகலாய அரண்மனைகளில் வழக்கமாக இருக்கும் , தர்பார், திவானி ஆம், திவானி காஸ், இப்படி முக்கிய விருந்தினர்களை மன்னர் சந்திக்கும் இடங்கள் எல்லாம் இருக்கு. மன்னரின் இந்து மனைவிகளுக்காகக் கட்டிய தனித்தனி மாளிகைகள், பக்த ராமதாஸ் இருந்த சிறை, மசூதிகள், இப்படி அதுபாட்டுக்கு எங்கே பார்த்தாலும் பிரமாண்டமான கட்டிடங்களா இருக்கு. நல்லாச் சுத்திப் பார்க்கனுமுன்னா ஒரு அரை நாளாவது வேணும்.
பாக்யமதி மாளிகை

சாயங்காலம் கோட்டையில் ஒளி ஒலி ஷோ நடக்குது. அதைப் பாருங்கன்னு புதுகைத் தென்றல் பரிந்துரை செஞ்சுருந்தாங்க. தினமும் 7 முதல் 8 வரை ஆங்கிலத்திலும், 8 முதல் 9 வரை (செகண்ட் ஷோ) தெலுகு, ஹிந்தின்னும் இருக்காம். குளிர்காலத்துலே சீக்கிரம் இருட்டிப்போகுதேன்னு 6.30. 7.30ன்னு இருக்குமாம். இப்போ நவம்பர். குளிர் காலம் வந்தாச்சாம்.

எந்த இடத்துலே நடக்குமுன்னு தெரியலை. டிக்கெட் அங்கேயே கிடைக்குமுன்னு கீழே நுழைவுச்சீட்டு வாங்குன இடத்தில் சொல்லிட்டாங்க. உக்கார இருக்கை இருக்குமான்னு என் கவலை. இதுக்குண்டான ஏற்பாடுகள் ஒன்னும் இதுவரை கண்ணில் படலை. எல்லாம் தரையிலேதான் உக்காரணுமுன்னு கோபால் அடிச்சு விடறார்!
இன்னும் கொஞ்சம் அங்கே இங்கேன்னு பார்த்துட்டு இடப்புறம் படிக்கட்டு இல்லாம இருந்த பாதை வழியா நடந்து இன்னொரு பிரமாண்டமான கட்டிடத்துக்குள் நுழைஞ்சு வெளிச்சம் வந்த வாசலை நோக்கிப் போனோம்.


ஒலிஒளி நடக்குமிடம்

ஒரு முற்றத்தில் போய் முடியுது. செயற்கை நீரூற்று ஒன்னு வச்சுருக்காங்க. (வேலை செய்யலை) ஏராளமான ப்ளாஸ்டிக் நாற்காலிகள் போட்டு வச்சுருப்பதைப் பார்த்ததும் 'உயிர்' வந்துருச்சு(எனக்கு)
இந்த இருட்டு ஹால் வெளிச்சம் போட்ட பிறகு எப்படி இருக்குன்னு பாருங்க.


டிக்கெட் கொடுக்கக் கொஞ்சம் நேரம் ஆகுமாம். அதுவரை....அப்பாடான்னு சாய்ஞ்சேன். இந்த இடம் ப்ரேமாமதியின் மாளிகை(இருந்த) இடம். சிதிலமாகிப்போனச் சுவர்கள். 'மசமச'ன்னு இருட்ட ஆரம்பிச்சுருந்தது.

ஷோ ஆரம்பிக்கும்வரை மனக்கண்ணில் இன்னொரு ஷோ பார்த்தால் போச்சு. பழையபடி கற்பனைக் குதிரையில் ஏறிப்போனேன்.

ரெண்டாம் ஜாமம் முடிந்ததின் அடையாளமான மணியோசை தொலைவில் கேட்டது. இளவரசி **** உறக்கம் பிடிக்காமல் நந்தவனத்தில் பளிங்குக்கல் இருக்கையில் ஏதோ நினைவுகளுடன் அமர்ந்திருந்தாள். வானத்தில் பவனி வந்துகொண்டிருந்த சந்திரன் மேகத்திரையின் மறைவில் ஒளிந்தான். பெருமூச்சுடன் பார்வையை அப்புறம் செலுத்தும்போது....சலசலவென்று அசைந்தாடிய செடிகளின் பின்னாலிருந்து ஒரு உருவம் வெளிப்பட்டது. வீல் என்று ஓசை வருமுன்னே முரட்டுக் கையொன்று அவள் வாயைப் பொத்தியது. மிரண்ட பார்வையுடன் இருந்தவளின் செவி அருகே மெல்லிய குரலில் இளவரசி என்றதும்..... இதுக்குத்தான் அந்தக் காலத்துலே ஏகப்பட்ட சரித்திர நாவல்களைப் படிச்சுத் தொலைச்சிருக்கக்கூடாதுன்றது)

ஆமாம். கதைகளில் எல்லாம் ரெண்டாம் ஜாமம், மூன்றாம் ஜாமம்ன்னு அரசர்கள் நடமாடிக்கிட்டு இருக்காங்களே...தூங்கவே மாட்டாங்களா? அந்தக் காலத்துலே எல்லாம் வெளிச்சம் போடறது கொஞ்சம் கஷ்டம்தானே. தீவட்டியை விட்டால் வேற! மாலை இருட்டுமுன்பே எல்லோரும் ராச்சாப்பாடு முடிச்சுட்டுச் சீக்கிரம் படுக்கை போட்டுருவாங்க. நீண்ட இரவுகளா இருக்கும். இப்போதைய 9 மணின்றது.... அப்போ அதுவோ???

உச்சியில் இருக்கும் மாளிகையில் இருந்து அரசர் மாறுவேடத்தில் கீழே இறங்கி வர்றார். காவலாளி திகைக்கிறான். 'உஷ்'.......ஓசைப்படாமல் மனைவிகளில் ஒருத்தர் மாளிகைக்குப் போறார். என்னதான் அரசரின் மனைவிகள் என்றாலும் சக்களத்திச் சண்டை, பொறாமை எல்லாம் இருக்காதா? (அய்ய...புத்தி போற போக்கைப் பாரேன்) அரசனா இருந்தாலும் புருஷன் என்ற பதவியின் நிலை..... கொஞ்சம் யோசிக்கத்தான் வைக்குது.

டிக்கெட் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்களாம். ஒரு டார்ச் லைட்டை வச்சுக்கிட்டு ஒருத்தர் சீட்டுக் கொடுத்துக்கிட்டு இருந்தார் ஸீட்டுக்காக. 50, 100ன்னு ரெண்டு வகை. கொஞ்சம் நல்ல இருக்கையாவே இருக்கட்டுமுன்னு வாங்கிட்டு வந்துட்டார். கொஞ்ச நேரம் ஆனதும் மக்கள் வரத்தொடங்கி இருக்கைகள் எல்லாம் அநேகமா நிறைஞ்சது. 300 மில்லி தண்ணியும், 250 மில்லி (மாம்)பழரசமும் 100க்கு மட்டும் கொண்டுவந்து கொடுத்தாங்க.

ஷோ ஆரம்பிச்சது. உரையாடல் வகையில் பின்னணிக்குரல். அமிதாப் பச்சன்.
பரவாயில்லை. நல்லாத்தான் இருந்துச்சு. அந்த வர்ண விளக்குகளில் இந்த இடம் ரொம்பவே ஸ்பூக்கியா....... கதையின் நடுவில் ஒரு ஸீனில் நீரூற்றிலே இருந்து பளீர்ன்னு நீர் பெருகி ஜாலம் காட்டுச்சு. வெரி நைஸ். ஏழேகாலுக்கு முடிஞ்சது. நிகழ்ச்சி பார்க்க வந்த மக்களில் பலருக்கு முன்னுரையில் சொன்ன ஆங்கிலம் 'ஒரு இடத்தில் மட்டும்' புரியலை. படம் எடுக்கவேணாமுன்னு தாழ்மையா அறிவிப்பு வந்துருந்தாலும்....... எரிச்சல் ஊட்டும்விதமா ஃப்ளாஷ் வேற போட்டுக்கிட்டு படமெடுத்துத் தள்ளிக்கிட்டு இருந்தாங்க. என்ன ஜனங்களோ(-:

கீழே இறங்கி வரும்போது வழியில் அங்கங்கே மின்சார விளக்கு வச்சு கோட்டை கொத்தளங்களை இன்னும் கொஞ்சம் பயமாவும் வசீகரமாவும் காட்டியிருந்தது ரொம்பவே பிடிச்சது. பிடிச்சுக்கிட்டேன் சிலதை. இதே இடங்கள் பகலில் ஒருவிதமாவும் இரவில் ஒருவிதமாவும் இருக்கு!

ஸ்பூக்கி ?



ஒரே இடம் இரவிலும் பகலிலும்
இந்த மாதிரி இடங்களில் இருந்து போகும்போது அந்தப்புரமாதரைப் பற்றி எழும் அனாவசியச் சிந்தனைகள் வழக்கம்போல் இப்போதும் வந்து மனசுலே பாரம் ஏத்துனதென்னவோ நிஜம்.

கொஞ்சம் கனத்த மனத்துடன் அறைக்கு வந்து சேர்ந்தோம்.
கோட்டையில் இருந்து வெளிவந்தால் ஊர் இருட்டில் ஜொலித்தது:-)


தொடரும்........:-)

36 comments:

said...

// ( இடையர் பேச்சைக் கேட்டுக்கிட்டு அதன்படி 'நடக்க முயற்சிப்பது' நமக்குப் புதுசா,என்ன?)//

:) நீங்க கண்ணைத்தானே சொல்றிங்க !

said...

// ( இடையர் பேச்சைக் கேட்டுக்கிட்டு அதன்படி 'நடக்க முயற்சிப்பது' நமக்குப் புதுசா,என்ன?)//

அப்ப இடையர் என்றால் பெண்கள் இல்லையா ? அவ்வ்வ்வ்வ்வ்

கொடியிடை, மெல்லிடை, நூலிடை என்றெல்லாம் சொல்லுவார்களே

said...

வாங்க கோவியாரே.

பாய்ண்ட்டை 'கப்'னு புடிச்சுட்டீங்க:-)))))

ஆனாலும் ரெண்டாவது பின்னூட்டத்தில் இருக்கும் 'தெளிவு' முதலில் இல்லை பாருங்களேன்.

கண்கள் இரண்டல்லவோ:-)))))

said...

ஓ நீங்க இடையர் பேச்சுன்னு கண்ணனின் கீதையைச் சொல்லுறீங்களோன்னு எனக்கு நினைப்பு:))

ஒளிஒலீ காட்சி நல்லா இருந்திருக்கணும். ஏன்ன படம் நல்லா இருக்கு. ஏம்பா அப்போ பெண்கள் எண்ணிக்கை நிறைய இருந்ததோ. இவ்வளவு பொண்டாட்டி ஏன் கட்டினாங்க.
கட்டிக்கிட்டதும் மாளிகைகள் வேற கட்டி இருக்காங்க.!!
ஹ்ம்ம்.. ஏழு ராஜா கதையை இவ்வளவு சிரமம் எடுத்து எங்களுக்குக் கொடுத்த சரித்திர டீச்சருக்கு ரொம்ப நன்றி.அப்புறம் அங்க தண்ணிர்க் குழாய்கள் எல்லாம் கற்பாறையிலியே செய்து கீழ வர படி செய்திருந்தாங்களாமே

said...

வாங்க வல்லி.

//இடையர் பேச்சு...கண்ணனின் கீதை....//

ரொம்பச் சரி. அதைத்தான் நானும் குறிப்பிட்டு இருந்தேன்.

கோட்டையில் மட்டுமில்லேப்பா...அங்கே சமாதியில்கூட டர்கிஷ் பாத் ன்னு குறிப்பிட்டு இருந்த இடத்தில் வெந்நீர், தண்ணிர் ரெண்டுக்குமே கல்லில் ஓடை மாதிரி செதுக்கி வச்சுருந்தாங்க.

அங்கே வெராந்தாவில் பார்த்த சமைக்கும் பாத்திரங்கள் வெந்நீர் அண்டாவாத்தான் இருந்துருக்கணும்:-)))

said...

நல்ல பகிர்வு,... வரலாற்று செய்திகளுடன் சொல்லியிருப்பது நல்ல குறிப்பேடாக இருக்கு மிக்க் நன்றிங்க

said...

வாங்க ஞானசேகரன்.

பதிவு கொஞ்சம் நீளமா(???) போச்சேன்னு பயமா இருந்துச்சு.

நன்றி

மியாவ்......

said...

History is a long subject Thulasi.
So the post , given in accurate form will be long.
no worries. I enjoyed it:))

said...

ஆகா நல்ல பதிவு, டீச்சரை வந்தியத் தேவனும், குந்தைவியும் ரொம்ப பிடிச்சிருக்கும் போல. ஓலை எடுத்த குதிரை வீரன், கண்கள் பொத்துவது என பொன்னியின் செல்வன்னில் மூழ்க வைத்து விட்டீர்கள். டீச்சர் ஒரு வருத்தம் எனது பத்ராச்சல ராமதாசர் சிறை இருந்த இடத்தை ஒரு போட்டே போட்டுருக்கலாம், நன்றி.

said...

எங்கள் ஊர் !!!!!!!!!

உங்கள் பார்வையில் 'சால மஜாக உந்தி' ;-)

said...

ஹைதையைப் பத்தி யாராவது கேட்டால் உங்க ப்ளாக் பக்கம் கைகாட்டிடறேன். எல்லா இன்பர்மேஷனும் இருக்கே. :))

நான் இன்னும் லைட் & நைட் ஷோ பாக்கலை. பாத்து பதிவு போடறேன்.

said...

Thanks Valli

said...

வாங்க பித்தனின் வாக்கு.


இன்னும் கொஞ்சம் மேல்தளத்துக்கு ஏறிப்போயிருந்தால் ராமதாஸ் இருந்த சிறையைப் பார்த்துருக்கலாம்(-:

ஒலிஒளிக் கணக்கை மனசுலே வச்சுக்கிட்டதால் மேலே ஏறிப்போக நேரம் இல்லை. வெளிச்சம் மங்குமுன்னே போனால் கவனமா ஏறிப்போக முடியும்.

said...

வாங்க வெற்றி மகள்.

ஆஹா....உங்க ஊரா?

இடுகையில் இருக்கும் விவரங்களில் தவறுகள் இருப்பின் சொல்லுங்கப்பா.

said...

வாங்க புதுகைத் தென்றல்.

கொசு மருந்து கையில் எடுத்துக்கிட்டுப் போகும்படி பரிந்துரை செய்கிறேன்:-)

said...

அக்கா...அண்ணா ஒக்காந்திருக்கிற சிம்மாசனந்தான்,100, க்கான பால்கனி டிக்கட்டா..

நெறய விவரம் கலெக்ட் செஞ்சாச்சு.. நன்னி.

கோட்டைகளும், கொத்தளமும் நல்லாத்தான் இருக்கு..'சந்திரமுகி'தான் ஞாபகத்துக்கு வர்றா..

" நல்லா வாழ்ந்திருக்காங்க".அடிபுடிய கணக்குல எடுக்காதீங்க:-))))

said...

ஏன் துளசி "கொல்ல கொண்டா, கொல்ல கொண்டா நு ரத்தவெறி பிடிச்ச இனம் பக்கத்துல வந்து இசைபாடலையா? !! ஒடம்பு முழுக்க odomos ஆ இல்லை வெய்யிலுக்கு இல்லையா?

said...

//சமயம் பார்த்து நம்ம கெமெரா பேட்டரி மண்டையைப் போடப்போறேன்னு சொல்லுச்சு//

உங்க காமெரா நம்ம காமெரா மாதிரியே இருக்குங்க... அவ்வ்வ்வ்... (wot.. all cameras hv their own batteries..? k.. k... veettukku veedu vaasappadi)

வழக்கம்போல... கட்டுரை அருமை...! படங்கள் அழகோ அழகுங்க... ))-:... பொர்ர்ர்ர்றாமையா இருக்கு...

said...

வாங்க ஐம்கூல்.

அதே அதே.....
பால்கனி நல்லா இருக்கா?

ஜூஸ், தண்ணின்னு ஒரு 25 ரூபா நமக்கே திருப்பி வந்துருது.

அதுவுமில்லாம ராஜ காரியம் பாருங்க. சிம்மாசனம்தான் பொருத்தம் இல்லீங்களா?:-))))

said...

வாங்க ஜெயஸ்ரீ.

கொலைவெறிப் படை இருக்குன்ற விஷயமே புரிபடாத அப்பாவிகள் நாம். ஆனா நமக்குப் பக்கத்திலும் பின்வரிசையிலும் இருந்தவங்க போட்டுக்கிட்ட ஸ்ப்ரே தயவால் நாம ஒரு வியூகத்துக்குள்ளே பாதுகாப்பா இருந்துட்டோம்:-))))

கச்சேரி கேக்க நேத்து சென்னையில் ஒரு ஓப்பன்ஏர் ஆடிட்டோரியம்(?) போயிட்டேன்.

'அதுகள்' போட்ட போடில் துண்டைக்காணோம் துணியைக் காணோமுன்னு வீட்டுக்கு ஓடிவந்துட்டேன். குளிர் காலமாம். கொசுப்படைப் பிடுங்குதுப்பா(-:

said...

வாங்க கலகலபிரியா.

பயணத்துக்கு சார்ஜர் கொண்டு போகாம, கூடுதலா இன்னொரு பேட்டரியை மட்டும் சார்ஜ் பண்ணிக் கொண்டுபோயிருந்தோம்.

'ஞாபகமா'அதை அறையிலேயே விட்டுட்டுப் போயிட்டோம்.

எல்லாம் புத்தி கொள்முதல் அனுபவங்கள். அடுத்தமுறை எக்ஸ்ட்ராவை ஹேண்ட் பேகில் வச்சுக்கணும். ஆனா.....கைப்பையை (மட்டும்)மறந்துடக்கூடாது:-))))

said...

அடடா ரொம்ப பாடங்களை மிஸ் பண்ணிட்டேனே டீச்சர்...விட்டுபோன பாடங்களை படிச்சுட்டு வர்றேன்.

said...

'Ghar ki Murgi Dal barabar" என்று இங்கு சொல்வார்கள்.நான் பார்த்ததோ எத்தனையோ வருடங்களுக்கு முன்பு. அழகான பாறை பிரதேசத்தில் இருந்த கோட்டை, இப்போது குடியிருப்புகளால்மூச்சு திணறுவதை பார்க்க சகியாமல் போவதையே நிறுத்தி விட்டேன்.

கோல்கொட்ணாவின் அழகும் பெருமையும், நீங்கள் எழுதிய விதத்தில் இன்னும் மிளிர்கிறது.

said...

Sorry !!

"கோல்கொண்டாவின்' என்று வரவேண்டும்.

said...

அப்பா... நிறைய விஷயங்கள் உங்களுடைய பதிவில் இருக்குது. எப்ப உங்களுடைய பதிவில் வந்தாலும் சந்தோஷமா திரும்பி போறேன் துளசி... புது விஷயத்தை தெரிந்து கொண்டதிருப்தியுடன்.

said...

ur blog s so nice. today only i saw that....

said...

!!!!!!!!!!!!!! யப்பா...எப்படி தான் இம்புட்டு விஷயத்தையும் எழுதுறிங்களோ!! ;)

said...

வாங்க சிந்து.

நிதானமாப் படிங்க. எங்கே ஓடிறப்போகுது!

(பரிட்சைக்கு வரும் பகுதின்னு சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்)

said...

வாங்க வெற்றிமகள்.

குடியிருப்பு & கூட்டம் பெருகிக்கிட்டே போகுதேங்க. முற்றுப்புள்ளி வைக்கலைன்னாலும் ஒரு 'கமா' போடக்கூடாதா?

இது இந்தியா முழுசுக்கும்தான்!

said...

வாங்க கிருஷ்ண பிரபு.

கிருஷ்ணனே 'சொன்னா' மிகச்சரியாத்தான் இருக்கும்:-))))

said...

வாங்க மாயா.

நலமா? வருகைக்கு நன்றி. மீண்டும் வரணும் மாயா.

said...

வாங்க கோபி.

யப்பா.....பதிவைப் படிச்சீங்க(முழுசுமாய்)ன்னு நம்பறேன்:-)))))

said...

//ஆனா.....கைப்பையை (மட்டும்)மறந்துடக்கூடாது:-))))//

mm... onnu pannunga.. cell phone la 'handbag' reminder koduthu... cell ku charge poda marakkaama... blog ku use panra mailla oru reminder poattu... er... athum work out aagalainaa sollunga... naan fax anupparen... :-s joot..

said...

வாங்க கலகலப்ரியா.

அட! இம்புட்டு எளிதான வழி இருக்குன்னு தெரியாமப்போச்சேப்பா.

எவ்ரி'திங்(க்)' நோட்டட்:-))))

said...

உங்கள் விஜயங்களை பின்தொடர்ந்து வருகிறேன்.இதே இடங்களுக்கு நான் சென்றிருந்தாலும் உங்கள் மொழிநடையில் புதிய இடங்களுக்கு சென்ற உணர்வு ஏற்படுகிறது.

ஒரு கருத்துப்பிழை (factual error)- ஆந்திர மாநிலம் நவம்பர் 1,1956இல் ஹைதராபாத் மாநிலமும் கர்நூலைத் தலைநகராகக் கொண்ட ஆந்திர மாகாணமும் இணைந்து உருவானது. இந்த ஆந்திர மாகாணமும் 1953இல் உருவானதே. 1948இல் தான் ஹைதராபாத் நிசாம் ஆட்சியை இந்திய அரசு கைபற்றியது.
ஆகவே 1947இல் மதராஸ் மாகாணம் மட்டுமே இருந்தது.

said...

வாங்க மணியன்.

கருத்துப்பிழையைச் சுட்டியதுக்கு ரொம்ப நன்றி. ஐயோ.... சரித்திரத்தையே சரித்திரம் ஆக்கப் பார்த்தேனே(-:

இடுகையில் போய்ச் சரிசெய்யலாமுன்னா முடியலை. நம்ம சொந்தப் பதிவுகளுக்குள்ளேயே போகவிடாமல் ப்ளொக்கர் 'எர்ரர்' மெஸேஜ்ன்னு கூவுது.

எந்த இடுகையையும் 'எடிட்' செய்யமுடியாமத் தவிக்கிறேன்.