Tuesday, February 09, 2010

கீர்த்தி மந்திரில் ஒரு 'குடும்பப்படம்'..... (குஜராத் பயணத்தொடர் 18)

சௌராஷ்டாவின் ஒரு பகுதியான போர்பந்தர் துறைமுகம் ரொம்பப் புகழுடன் இருந்த காலக்கட்டம். அரசர்கள் ஆட்சி ராஜபுத்திரர்களான ஜெத்வா & ஜடேஜா வம்சத்தினர் மாறிமாறி ஆண்டுகொண்டிருந்தனராம். எல்லாம் 16 ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்த கதை. அதுக்குப்பிறகு மொகலாயர் ஆட்சியில் கொஞ்சநாள். அதுக்குப்பின் ஆங்கிலேய ஆட்சியில். துறைமுகம் இருப்பதால் மவுசு அதிகம் இந்த ஊருக்கு அந்தக் காலக்கட்டங்களில். அப்ப இந்தியாவில் 'ஆங்கில அரசின் கீழ் சிற்றரசர்கள் வெவ்வேற சமஸ்தானங்களை .ஆட்சி செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. கத்தியவார் சமஸ்தானத்தில் இருந்த இடம்தான் இந்த சுதாமாபுரி என்ற போர்பந்தர். ஆங்கிலேயர்களின் வியாபாரத்துக்கு முக்கிமான இடமா இந்த ஊர் இருந்துருக்கு. பரம்பரையா போர்பந்தர் 'ராஜா'வுக்கு திவானா இருந்தவங்கதான் காந்தியின் அப்பாவழி குடும்பத்தினர். பிற்காலத்திலே மகாத்மான்னு உலகத்தார் அன்போடு கூப்பிட்ட நம்ம மோகன்தாஸ் காந்தி இந்த ஊரில்தான் பிறந்தார். அவருடைய வீட்டை நினைவுச்சின்னமா ஆக்கி இருக்காங்க. வீட்டை ஒட்டி கீர்த்தி மந்திர் என்ற பெயரில் அவருக்கு நினைவு மண்டபம் ஒன்னும் கட்டிவச்சுருக்காங்க. அங்கேதான் இப்போப் போய்க்கிட்டு இருக்கோம். அந்தப் பகுதியில் ஒருவழிப் போக்குவரத்துன்றதால் பக்கத்துலே ஒரு சதுக்கத்துலே வண்டியை நிறுத்திட்டு இறங்கினால் பழைய கால அரண்மனையின் கோட்டைக் கதவு ஒன்னு கம்பீரமா நிக்குது. கீர்த்தி மந்திர் வந்தபிறகு இதோட முக்கியத்துவம் காணாப்போயிருக்கு போல. விவரம் ஒன்னும் சரியாக் கிடைக்கலை.

கேட் படம் இங்கே வரணும் சொக்காப் போட்ட ஆடு பார்த்தேன்!

அழகான ரெண்டடுக்குக் கட்டடம். சர்தார் படேல் திறந்து வச்சுருக்கார் 1950 இல். வாசலுக்கு நேர் எதிர்ப்பக்கம், நடுநாயகமா ஒரு அலங்கார மண்டப அமைப்பில் மிஸ்டர் & மிஸஸ் காந்தியின் ஆளுயரப் படங்கள். காந்தியின் வாழ்க்கை வரலாறு, படங்கள் அடங்கிய சின்னக்கண்காட்சி இருக்கு மாடியில். அதுலே காந்தியின் குடும்பமரம் பார்த்தேன். ஒரு மரம் எப்படி வளர்ந்துருக்குன்னு பார்க்கும்போது, இன்றைய ஏறக்குறைய 1200 மில்லியன் முகத்தில் அறைவதுபோல் இருக்கு.


காந்தி பிறந்தவீட்டை நினைவகமா ஆக்கி இருக்காங்க. சின்ன முற்றத்தைக் கடந்து உள்ளே கூடத்துக்கு வந்தால் ஒரு பக்கத் தரையில் கோலம் போட்டு வச்சுருக்கு. 'பிறந்த இடம்' அதுவாம். (இந்த வீட்டுக்குள்ளே மட்டும் படம் எடுக்க அனுமதி இல்லை) 22 அறைகள் உள்ள மூணுமாடிகள். சாமான்கள் ஏதும் இல்லாததால் அறைகள் விசாலமாக இருப்பதைப்போல் ஒரு தோற்றம் தருது. எல்லாம் சின்னச்சின்ன அறைகள். ஆளோடி, தாழ்வாரம் நடைபாதை எல்லாத்தையும் சேர்த்தால்தான் 22 வருது. மாடிக்குப்போகக் குறுகலான மரப்படிகள். உத்தரத்தில் இருந்து கயிறு ஒன்னு முடிச்சுக்களோடுத் தொங்குது. கையில் ஆதரவுக்குப் பிடிச்சுக்கிட்டு மாடியேறவாம். நல்ல டெக்னிக். சின்னப் பிள்ளைகள் அதைப் பிடிச்சுத் தொங்கிக்கிட்டே 'ஹைவாத்தா மாதிரி இறங்கி இருக்கலாம். கற்பனை இனிச்சது:-)
சுற்றுலாப் பயணிகளின் சின்னக்கூட்டம் இருந்துக்கிட்டே இருக்கு. வந்தவழியே வண்டி நிற்கும் இடத்துக்கு போனபோது , இந்தத் தெருமுழுசும் வெத்தலைபாக்குக் கடைகள் ஏரா\ளமா இருக்கு, கொட்டைப் பாக்கைப் , சீவல்களாக்க பாக்குவெட்டியால் வெட்டிக் குமிச்ச சின்ன மலையைப் பார்த்தேன். பகல்சாப்பாடை இங்கே இந்த ஊரில் முடிச்சுக்கலாமுன்னு தேடுனதில் சீனவகை உணவுதான் அநேகமா எல்லா இடங்களிலும். ஹொட்டேல் நட்ராஜ் பெயரைப் பார்த்தவுடன் விசாரிச்சால் அவரும் சீனராகிட்டார். குஜராத்லே சிம்பிளான குஜராத்தி சாப்பாடு கிடைக்கலை பாருங்களேன். அங்கே இங்கே சுத்தி எம் ஜி ரோடில் (நாடு முழுசும் ஊர் ஊருக்கு இருக்கும் எம் ஜி ரோடு இங்கே இல்லேன்னாத்தான் ஆச்சரியம்) ஸ்வாகத்னு ஒரு ரெஸ்டாரண்டுக்குப் போனோம். கல்லாவுக்கு மேலே சீனக்கடவுளரின் படங்கள், அந்த வகை அலங்காரங்கள் ஊதுவத்தின்னு..... சீனாவை வரவேற்க நாடே ஒத்துழைக்குதோ என்னவோ!

எதாவது தேறுமான்னு பார்த்தால் அதிசயம் ஆனால் உண்மைன்னு ஒரு சவுத் இண்டியன் மெனு இருக்கு. இட்லி, சாம்பார் வடை. 'அடிபட்ட' அனுபவத்தால் ஒரு ப்ளேட் மட்டும் கொண்டுவரச்சொன்னோம். எனக்குத்தான்இப்போ ஆச்சரியமான ஆச்சரியம் . இட்லி பரவாயில்லை. நல்லாவே இருக்கு! வடையும் மோசமில்லை. இன்னொரு ப்ளேட்டும் வாங்கிக்கிட்டோம். உணவின்போது கோக் மட்டும் இல்லைன்னா உணவு ருசிக்கவே ருசிக்காதாம். அடப்பாவிகளா? சக்கரைத்தண்ணிக்கா இந்த பில்டப்பு?

பொரைன்னு அங்கே அந்த ஏரியாவில் ஒரு உள்ளூர் சாமி (கிராமதேவதை) இருக்காம். பந்தர்ன்னா துறைமுகமுன்னு பொருளாம். ரெண்டும் சேர்ந்துதான் போர்பந்தர் என்ற பெயர் உருவாகி இருக்குன்னு 'லோக்கல்ஸ்' சொல்றாங்க. அப்படியே துறைமுகத்துப்பக்கம் ஒரு ரவுண்டு(காரில்தான்) போய்ப் பார்த்தோம். நல்ல பராமரிப்பு. சமீபத்துலே சில கோடிகள் செலவு செஞ்சு துறைமுக வசதிகளைப் பெருக்கி இருக்காம் அரசு. இந்தத் துறைமுகம் இல்லைன்னா எதுக்கெடுத்தாலும் மும்பைவரை இல்லே சரக்குகளை அனுப்பவேண்டி இருக்கும்!
குழந்தைகள் விளையாடுமிடம் ஒன்னில் யானை நிக்குது! இன்னொரு மாளிகையையும் பார்த்தோம். இது சமஸ்தானத்து மாளிகைகளில் ஒன்னு. உள்ளே போய்ப் பார்க்க ஆவல் இருந்தாலும், ஏதோ புதுப்பிக்கும் வேலை நடப்பதால் போற போக்கில் ஒரு க்ளிக்.

நகரைவிட்டு வெளிவந்ததும் ஏதோ கேரளக் கிராமத்துக்கு வந்ததைப்போல் எங்கே பார்த்தாலும் தென்னைகள். சாலையில் ஒரு பக்கம் நம்மோடுவரும் கடல், மறுபக்கம் பச்சைப்பசேலுன்னு வயல்கள். அரபிக்கடலின் அழகான அம்சம் இப்படித்தான் இருக்கும்போல்!
சோர்வாட் னு ஒரு கிராமம். மீன்பிடித் தொழிலாளர்களின் இருப்பிடம். அங்கேயும் ஒரு மாளிகை இருக்குன்னு போய்க்கிட்டு இருக்கோம். எப்படியும் இது நாம் போற வழிதான். மெயின் ரோடுலே இருந்து கொஞ்சம் உள்ளே பிரியும் சாலையில் போகணும். போனோம். அங்கே கிராமத்தில் நிறுத்தி மாளிகை எங்கேன்னு விசாரிச்சுக்கிட்டுப் போய்ச் சேர்ந்தோம். கண்ணில் பிரமிப்பைக் கொண்டுவரும் லொகேஷன். சினிமா செட் போட்டதுபோலக் கிடக்கு. கடற்கரையை ஒட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டிக் கட்டியிருக்காங்க. சமஸ்தான ஆட்சியில் கோடைவெயிலில் இருந்து தப்பி ஓய்வெடுக்கக் கட்டுன மாளிகை.
சமஸ்தானம் போன கையோடு இதுவும் கவனிப்பார் இல்லாமச் சீரழிஞ்சு கிடக்கு. கடலைப் பார்க்கும்விதம் இருக்கைகள் எல்லாம் போட்டு நல்லாத்தான் அந்தக் காலத்துலே அனுபவிச்சு இருக்காங்க. 'அம்பானி' இந்த இடத்தை வாங்கத் தயாரா இருந்தாருன்னும், ஆனால் அரசு இது சரித்திர சம்பந்தமுள்ள இடம். விக்கமாட்டோமுன்னும் சொல்லிருச்சாம். மறுபடி லோக்கல்ஸ் அளித்த செய்தி. அம்பானியின் விருந்தினர் மாளிகை!
அதானே பாழடைஞ்சு மண்ணோடு மண்ணானாலும் சரித்திரத்தைக் காப்பாத்திருவொம்லெ! இதைமட்டும் பழையபடி சீராக்கணுமுன்னா பல கோடிகள் வேணும். காசு இருக்கற மவராசாவுக்கு லீஸுக்கு விட்டு, 'பழமை மாறாமல் அப்படியே புதுப்பிச்சுக்கோ. வெளி அழகு அப்படிக்கப்படியே இருக்கணும். உள்ளே மட்டும் நவநாகரீக வசதிகளைச் செஞ்சுக்கோ'ன்னு பக்காவாப் பத்திரம் எழுதி விட்டுருக்கலாம். இதுக்குள்ளே என்ன அரசியலோ? யாரு கண்டா?

இந்த இடம் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து இழுக்குமாம். இழுத்துருச்சே ஒரு 9 மாசத்துக்கு முன்னால் ராஜ்கோட் நகரிலே இருந்து வந்துருந்த ஒரு பள்ளிக்கூடச் சுற்றுலாப் பயணிகளை! தண்ணீர்ப் பக்கம் காலைப்போட்டுக்கிட்டு ஜாலியா உக்கார்ந்துருந்தவங்களை பெரிய அலை ஒன்னு வந்து இழுத்துக்கிட்டுப் போய் கடைசியில் 11 பேரை மட்டும் காப்பாத்துனாங்களாம். 7 டீச்சர்கள் உட்பட 9 பேருக்கு ஜலசமாதி.
அடடா...... பயங்கரமான இடமால்லெ இருக்கு! இடத்தின் அழகைக் கெடுக்கும்விதமா ஒரு கட்டிடம் கட்டிவச்சுருக்கு. அதுவும் ஏறக்குறைய பாழாத்தான் கிடக்குன்னு வையுங்க. அதுலே ச்சும்மாப் பேருக்கு 'இந்த இடத்தில் கடலில் நீந்தினால் அபாயம்' எழுதிவச்சுருக்காங்க. பராமரிப்பில்லாமக் காடா மண்டிக்கிடக்கும் செடிகளுக்கிடையில் ஒரு பூத் பங்ளா......ஹூம்.............'நானே வருவேன்....இங்கும் அங்கும்........ நானே.......வருவேன் வருவேன்' ........மனசு பாடும் பாட்டு கேட்டுச்சா?

பேருக்கேத்தமாதிரி திருடர்கள் வந்து தங்குனாக் கூடக் கேக்க நாதி இல்லை. சோர்வாட்!
சோம்நாத் போகும் பாதையில் போறோம். பொழுதோட போய்ச் சேரணும். சாலையின் ரெண்டு பக்கமும் ஆலமரங்கள் செழிப்பா வளர்ந்து ரெண்டும் சேர்ந்து கமான் வடிவத்துலே கிடக்கு. ஏதோ சோலைகளுக்கிடையில் போற மிதப்பு நமக்கு. ஏறக்கொறைய ஒரு மணிநேரப் பயணம். சோம்நாத்தில் ஒரு இடம் ஏற்கெனவே நெட்டில் பார்த்து வச்சு முன்பதிவு செஞ்சுருந்தாலும், வேற நல்ல இடம் கிடைச்சால் எடுக்கலாமுன்னு நினைப்பு. ஊருக்குள் நுழையுமுன்பே புதுசாக் கட்டி இருக்கும் ஹொட்டேல் 'சுக் ஸாகர்' கண்ணுலே பட்டுச்சு. விசாரிச்சதுலே காலி இருக்காம். ராயல் ரூம் கூட இருக்காம். ஒன்னுமில்லை ஒரு பால்கனி கூடுதல். கதவைத் திறந்து பார்த்தால் .... வெறும் நெடுஞ்சாலை.... ஏகப்பட்டப் போக்குவரத்து. ஒரே ஹார்ன் சத்தம். இதை 'ரசிக்க' ஆயிரம் ரூபாய் எக்ஸ்ட்ரா!
சத்தமில்லாத அமைதியான அறை வேணுமுன்னு வேற ஒன்னு எடுத்துக்கிட்டோம். கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கிட்டு 'ஜெய் சோம்நாத்'ன்னு போகப்போறோம். எல்லாரும் ரெடியா இருங்க. வர்ட்டா

படங்களைத் தனியா ஆல்பத்துலே போட்டுருக்கேன் பாருங்க.. ஒரு நாலைஞ்சு வாரத்துலே இந்த ஆல்பங்களை நீக்கிருவேன். புதுப்படங்களுக்கு இடம் வேணுமே!


பயணம் தொடரும்..............:-)))))

34 comments:

said...

காந்தி பிறந்தவீடு நினைவகம் மிகவும் பெரிதாக இருக்கிறதே.

சோர்வாட் அரண்மனை வெறிச்சோடி தனிமையாக நிற்கிறது சற்று பயத்தைத் தருகிறது.

ஆலமரச் சோலைகளின் சாலை யூடாக இனிதே நானும் பயணித்தேன்.

பயணத் தொடர்களுக்கு நன்றி துளசிகோபால்.

said...

வாங்க மாதேவி.

காந்தியின் வீடும் பெருசுதான்.ஆனா உயரத்தில் போகுது!

விடாமல் தொடர்வது மகிழ்ச்சியா இருக்கு. நன்றிப்பா.

said...

தாத்தா வீட்டுக்கு போயிட்டு வந்தாச்சா!!!

குடும்ப மரம் அடேயப்பா!!இதுல புதுவரவுகளை எப்படி இணைப்பாங்க???

ஆலமரச்சோலை ஒருகாலத்திய முப்பந்தலை நினைவு படுத்திவிட்டது.

said...

நம்ம தாத்தாவோட வீட்டை பார்த்துட்டு வந்துட்டீங்களா ரீச்சர்..!

நம்ம பங்கு எவ்ளோ வரும்..? கேஸ் போட்டா கொடுப்பாங்களா..?

22 ரூம் இருக்குள்ள.. ஒண்ணு கொடுத்தா போதுமே..!!!

said...

அருமையான இடங்கள் ..அந்த ஆலமரக்குகையும் , கடற்கரையும்.. ஆகாவா இருக்கு..

\உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
நம்ம தாத்தாவோட வீட்டை பார்த்துட்டு வந்துட்டீங்களா ரீச்சர்..!

நம்ம பங்கு எவ்ளோ வரும்..? கேஸ் போட்டா கொடுப்பாங்களா..?

22 ரூம் இருக்குள்ள.. ஒண்ணு கொடுத்தா போதுமே..!!!//

:))

said...

பாட்டு ரொம்ப சூப்பர். நல்ல சூழ்நிலைக்கு ஏத்தமாதிரி. காந்தியின் வீடு அருமை. பகிர்வுகளுக்கு நன்றி.

said...

ÐǺ¢, «ó¾ ¬ÄÁÃį̀¸ «ÆÌôÀ¡.
¸¡ó¾¢ƒ¢ ţΠ¦À⺡ þÕ째. þÃñÎ §ÀÕõ §ƒ¡Ê¡ ¿¢ì¸È¨¾ô À¡÷ò¾ô ¦ÀÕãîÍ ÅÕÐ.
À¡Åõ «ó¾ «õÁ¡.
Íì º¡¸÷ «í¸Ôõ þÕ측.!
«¨Ä ÅóÐ þØòÐðÎô §À¡ÈŨÃ
±ýÉ¡ôÀ¡ ¦ºöÐðÎ þÕó¾¡í¸. ¾ûÇ¢ò¾¡§É þÕìÌ ¸¼ø!!
´Õ§Å¨Ç ¨¼ð Á¡È¢ þÕì̧Á¡ ±ýɧš.
§¸¡ð¨¼ì ¸¾× ¯ûÇÀʧ «Æ¸¡ þÕìÌ.

¸¡ó¾¢ƒ¢ Å£ðÎì ¸Â¢ÚÄ ¬¼Ä¡õ Á¡¾¢Ã¢ ¬¨º ÅÕÐ:)

said...

//நம்ம பங்கு எவ்ளோ வரும்..? கேஸ் போட்டா கொடுப்பாங்களா..?//

@உண்மைத்தமிழன் அண்ணாச்சி, கேஸெல்லாம் போட வேணாம். தாத்தா சொத்து பேரன், பேத்திகளுக்குத்தானாம். சட்டமே இருக்குது :-)))))

said...

வல்லியின் பின்னூட்டம்:

துளசி, அந்த ஆலமரக்குகை அழகுப்பா.
காந்திஜி வீடு பெரிசா இருக்கே. இரண்டு பேரும் ஜோடியா நிக்கறதைப் பார்த்தப் பெருமூச்சு வருது.
பாவம் அந்த அம்மா.
சுக் சாகர் அங்கயும் இருக்கா.!
அலை வந்து இழுத்துட்டுப் போறவரை
என்னாப்பா செய்துட்டு இருந்தாங்க. தள்ளித்தானே இருக்கு கடல்!!
ஒருவேளை டைட் மாறி இருக்குமோ என்னவோ.
கோட்டைக் கதவு உள்ளபடியே அழகா இருக்கு.

காந்திஜி வீட்டுக் கயிறுல ஆடலாம் மாதிரி ஆசை வருது:)

said...

//கேட் படம் இங்கே வரணும்//

அப்போ கேக்காம‌ ப‌டம் எங்கே வ‌ர‌ணும் டீச்ச‌ர்? :‍‍)

இந்த‌ இட‌த்துக்கெல்லாம் போகும் வாய்ப்பு கிடைக்குமான்னு தெரிய‌லை. ஆனா உங்க‌ ப‌திவுக‌ளும், ப‌ட‌ங்க‌ளும், நேரா போய் பார்த்த‌ மாதிரியே ஒரு உண‌ர்வைத் த‌ருது. உங்க‌ளுக்கு ந‌ன்றிக‌ள் ப‌ல‌ப் ப‌ல‌ டீச்ச‌ர்.

said...

தெளிவான, விரிவான பயணக்கட்டுரை...

வாழ்த்துகள்.

காந்தி வீட்டுல வேற என்னலாம் இருக்கு?

said...

அந்த ஆலமரக்குகை ரொம்ப அழகுப்பா.
கஸ்தூரிபா,காந்திஜி படத்தைப் பார்த்தாத்தான் பெரு மூச்சு வரது.
பாவம் அந்த அம்மா.மகாத்மாவின் வீடுதான் எவ்வளவு பெரிசா இருக்குப்பா!
அந்தக் கயித்தில ஆட ஆசையா தான் இருக்கு:)
சுக் சாகர் அங்கயும் இருக்கா. இட்லி வடை போட்டோ போட்டு இருக்கலாம்:)

said...

உள்ளேன் டீச்சர் ;)

said...

வழக்கம் போல நாங்களும் உங்களுடன் பயணித்தோம்,
தாத்தா வீடு கலவையான உணர்வுகளை எழுப்பியது.
அன்புடன் எழிலரசி பழனிவேல்

said...

nalla padhivu! keep writing more sir.

Find my scribbling at:

http://encounter-ekambaram-ips.blogspot.com/

keep blogging

said...

துளசி , படங்களைப் பார்த்தேன். படு சூப்பர்.
இட்லிவடை இருக்கே:)
இவ்வளவு சிரத்தையா யாரும்மா எழுதப் போறாங்க.
படங்கள் பார்க்கப் பார்க்க அழகு. மிக மிக நன்றின்னு சொன்னாப் போறாது. ''பயணக் கட்டுரைத் திலகம்''
னு பெயர் கொடுக்கணும்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

வேறொரு படம் இன்னும் பெருசா வரைஞ்சு வச்சால் ஆச்சு!

said...

வாங்க உண்மைத் தமிழன்.

அதான் தாத்தா சொத்து பேரப்பிள்ளைகளுக்குன்னு சொல்லிட்டாங்கல்லே.

22 அறையை 1200 பில்லியனால் வகுத்துக்குங்க. உங்களுக்கு எவ்வளவு வருதோ அதேதான் எல்லோருக்கும்!

said...

வாங்க கயலு.

தமிழ்ப்பட ஆளுங்க இந்தச் சாலையை இன்னும் விட்டுவச்சுருக்காங்க பாருங்க. அதான்..... கொஞ்சம் வியப்பா இருக்கு எனக்கு.

said...

வாங்க பித்தனின் வாக்கு.

தொடர்ந்து வருவது மகிழ்ச்சி.

said...

வாங்க ப்ரசன்னா.

பதிவு எழுதும்போதே எது எங்கே வரணுமுன்னு குறிப்பு வச்சுக்குவேன். அப்புறம் எடுக்க விட்டுப்போய் இது 'கேட்'பாரற்றுக் கிடந்துருக்கு. இப்ப நீங்க 'கேட்'டத்துக்குப்பின் பார்த்தேன்!

இப்ப அதைத் தூக்குனா..... உங்க பின்னூட்டம் ...நம்ம மக்கள்ஸ் அது என்னன்னு 'கேட்'பாங்க. இருந்துட்டுப்போகட்டும்:-))))

said...

வாங்க ஆடுமாடு.

காந்திவீடு காலியாக் கிடக்கு.

சத்தியம், உண்மை, நேர்மை, நியாயம், நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்யும் அரசியல்வாதிகள் இப்படி எதுவுமே நம்ம நாட்டில் மிச்சம்மீதி இல்லைன்னு சிம்பாலிக்காச் சொல்லும் வண்ணம் வீடு காலி!

said...

வாங்க வல்லி.

உங்க கட்& பேஸ்ட் திஸ்கியிலே வந்துச்சுன்னு நான் அதை யூனிகோடில் மாத்திப் போட்டுருந்தேன்.

காந்தி வீடு அப்படி ஒன்னும் பெருசு இல்லைப்பா. அந்த கீர்த்தி மந்திர் வீட்டையொட்டியே கட்டி இருப்பதால் பெருசாத் தெரியுது. இந்த வளாகத்துலே இருந்துதான் வீட்டுக்குப்போகும் வாசல் இருக்கு.

said...

வாங்க கோபி.

டீச்சர் என்னதான் கஷ்டப்பட்டுப் பாடம் நடத்துனாலும் கடைசி பெஞ்சு, 'ஆஜர்' சொல்லிட்டுத் தூங்கிருமாமே. அது உண்மையோ!!!!!

said...

வாங்க எழிலரசி.

கூடவே வருவதற்கு நன்றிப்பா.

said...

வாங்க யுவராஜ்.

முதல் முறை வந்துருக்கீங்க போல!

வணக்கம் நலமா?

'பசங்க' பார்த்த தாக்கமோ!!!

வகுப்புக்கு வந்ததுக்கு நன்றி.

என்றும் அன்புடன்,
டீச்சர் மேடம்

said...

வல்லி,
விழாவுக்கு ஏற்பாடு செஞ்சுருங்க. நான் டைரி பார்த்துத் தேதி சொல்றேன்

ஆளுயர மாலை கட்டாயம் இருக்கணும்,ஆமா:-))))

said...

//சாலையின் ரெண்டு பக்கமும் ஆலமரங்கள் செழிப்பா வளர்ந்து ரெண்டும் சேர்ந்து கமான் வடிவத்திலே
கிடக்கு.ஏதோ சோலைகளுக்கிடையில் போற மிதப்பு நமக்கு//

அப்படித்தான் இருக்கிறது,எங்களுக்கும்.

படங்கள்,உங்கள் எழுத்து நடை எல்லாம் அருமை.

said...

வாங்க கோமதி அரசு.

கூடவே வருவதற்கு நன்றியோ நன்றி.

said...

அருமை துளசி.

நாங்க சுக் சாகர்லதான் தங்கினோம். அங்கே ஏற்பட்ட பேய்க்கனவுகள் பத்தி ஒரு இடுகை போடலாம்

இப்பிடி கடல் அடிச்சுக் கொண்டுபோறவங்க பேயா உலாத்துறாங்கன்னு செய்தி வேற.

கீர்த்தி மந்திர் ஆலமரம் எல்லாம் சூப்பர்.2010 லேயா.. ஃபோட்டோ இடுகை.. அட. !

said...

வாங்க தேனே!

நன்றிப்பா.

said...

கடற்கரை ஓரம் நாங்கள் செல்லவில்லை. அந்த பூத் பங்களா இன்னும் அப்படியே தான் இருக்கிறது எனத் தகவல். குஜராத்திலும் பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே உண்டு. நான்கு நாள் பயணத்தில் பார்க்க முடிந்தது கொஞ்சமே... மீண்டும் ஒரு முறை குஜராத் செல்லும் எண்ணமுண்டு..... :)

என்னுடைய தளத்தில் வந்த பதிவையும் படித்து இப்பதிவில் சுட்டி கொடுத்தமைக்கு நன்றி!

said...

காந்தி பிறந்த வீட்டில் நான் எடுத்த புகைப்படங்கள் இவை:
https://photos.google.com/share/AF1QipNcaOClPdTRjmYxQe4b3MfInmDV5ny08ACokkCLaDD7NeaoGpBeEAw5HgIaQLE3Sw?key=VGFqYXhpNHVKZW8wVHFrUUVaRmxSRzJvc2E4MGZB

- ஞானசேகர்

said...

சத்தியம், உண்மை, நேர்மை, நியாயம், நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்யும் அரசியல்வாதிகள் இப்படி எதுவுமே நம்ம நாட்டில் மிச்சம்மீதி இல்லைன்னு சிம்பாலிக்காச் சொல்லும் வண்ணம் வீடு காலி!


பதிவை விட இந்த விமர்சனம் ரொம்ப பிடித்து இருந்தது.

இப்போப் போய்க்கிட்டு இது போன்ற வழக்கு மொழிகள் எப்போதும் நீங்க எழுத மாட்டீர்களே,

இந்தப் பதிவு எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. நிச்சயம் ஒரு நாள் இங்கே போவோன்.