Friday, October 22, 2010

சந்த்ராக்காவின் லட்டுக் கம்மல் ( அ.க.ஆ.ஐ. 2)

மற்ற கிழமைகள் எப்படியோ......ஆனால் பொழுது விடிஞ்சதும், அன்னிக்கு வெள்ளிக்கிழமை என்பது மட்டும் பின்பக்கத்து ஜன்னல்கிட்டே போனவுடன் தெரிஞ்சுரும். வீட்டுக்குப் பின்னாலே இருக்கும் நெல்லிமரத்தடியில் எல்லாச்சாமானும் வந்து விழுந்துருக்கும். எல்லாச் சாமானுமுன்னா....எல்லாச் சாமானும்தான். வெளியே இருக்கும் சார்ப்பில் ட்ரங்கு பொட்டி ஒன்னும், ஒரு கள்ளிப்பெட்டியும், அதுமேலே அடுக்கிவச்ச பாயும் தலைகாணியும்.

வீடு என்னங்க பெரிய வீடு..... நம்ம வீட்டு ஓனர் பின்னாலே இருக்கும் காலி இடத்துலே ஒத்தைக்கல்லை வச்சு கோமணமாட்டம் நீளமா ஒரு அமைப்பைக் கட்டி மேலே கூரை போட்டு வச்சுருக்கார். அதை நாலாத் தடுத்து நாலுவூடு கட்டுனதுதான். பாகம்பிரிக்க நடுவுலே மண் சுவர். செங்கல் சுவருக்கும் வெறும் களிமண் பூச்சுதான். சிமெண்ட் பூச்செல்லாம் ஒன்னும் இல்லை.

மொத வூட்டுலே ஒரு இட்டிலிக்கார ஆயா. ரெண்டாவது வூட்டிலே டவுன் நாதெள்ளா சம்பத்து நகைக்கடையிலே வெள்ளி வேலை செய்யறவரும் அவர் குடும்பமும். புதுக்கலியாணம் கட்டுனவர். மூணாவது வூடுதான் நம்ம சந்த்ராக்காவுது. நாலாவது வூட்டிலே மரவேலை செய்யற ஒரு வயசானவர், அவருடைய மனைவி ரொம்ப நல்லா தன்மையா இருப்பாங்க. வரிசையா அடுக்கு மாதிரி நிறையக் குழந்தைகள். குழிக்குள்ளே போனதெல்லாம் கணக்குலே இல்லே! மூத்த பொண்ணைக் கட்டிக்கொடுத்தாச்சு. அந்தப்பொண்ணு புள்ளைத்தாய்ச்சியா இருக்கும்போது அம்மாவுக்கும் கர்ப்பம். வீட்டைவிட்டு வெளியில் தலை காமிக்காம உள்ளேயே இருந்தாங்க.....பாவம். ஒரு நாள் இடுப்புவலின்னு ஆஸ்பத்திரிக்குபோய்.....பையன் செத்தே பிறந்தான். ரெண்டு காதுலேயும் குண்டலம் மாதிரி இருந்துச்சுன்னு மக வந்து சொன்னதும் கர்ண மகாராஜாவை நினைச்சுக்கிட்டு நாங்களும் புள்ளையைப் பார்க்க ஓடுனோம். கிடங்குலே ரெண்டு ரூபா கொடுத்தபிறகுதான் துணிமூட்டையைக் கொண்டுவந்து பிரிச்சுக் காட்டுனாங்க. நல்லா பழுத்த இலந்தைபோல ரெண்டு காதுலேயும் லோலாக்கு.....பாவம்......

சரி. சந்த்ராக்காவைப் பார்க்கலாம். கை ரொம்ப கெட்டி. புளிபோட்டு தேய்ச்சப் பித்தளைப் பாத்திரங்கள் அப்படி ஜொலிக்கும். தேய்ச்சுக் கழுவுனதைப் பாயை விரிச்சுப்போட்டுக் காயவச்சுட்டு, வீட்டைப் பரபரன்னு மெழுகி முடிக்கும். அதுக்குள்ளே நல்லாக் காய்ஞ்சுபோன பாத்திரங்களை எல்லாம் உள்ளே எடுத்துப்போய் அடுக்கி வச்சுட்டுக் குளிக்கப்போகும். கால்வீசை மஞ்சளைப்போட்டுத் தேய்க்குமோ....... ஏற்கெனவே லேசான மஞ்சள் நிற உடம்பு இப்போ தகதகன்னு மின்னும். வெளியே வரும்போது புடவையைச் சுத்திக்கிட்டு ஒரு துண்டைத் தலையிலே கட்டி இருக்கும் பாருங்க....... ரெண்டாவதா ஒரு தலை முளைச்சதைப்போல..... இதுதான் எங்களுக்கு அப்போ ஆர்வத்தைக் கிளறும்.... நம்புங்க.... நாங்க சொல்றது அந்த ரெண்டாவது தலையை....துண்டை அவுத்துத் துவட்ட ஆரம்பிச்சா...... கண் கொட்டாமப் பார்ப்போம்.

எம்மாம் நீள முடி........... ஒரு வளைவும் நெளிவும் இல்லாம நேரா ஏதோ நீர்விழ்ச்சியில் இருந்து விழும் செங்குத்துத் தாரைபோல! சந்த்ரா அக்காவுக்கு ஒரு பர்மீஸ் கலப்பு இருக்கு. அந்த மஞ்சள் நிறம், கீறிவிட்ட கண்கள், நீளமுடி, கோணல்மாணல் இல்லாத குட்டிக்குட்டியானப் பல் வரிசை, கொஞ்சம் உசரம் குறைவான உடல் இப்படி எல்லாம் பார்த்தவுடன் 'சட்'னு தெரிஞ்சுரும். வாயைத் திறந்தா மட்டும் பக்கா லோக்கல் மெட்ராஸ் 'தமிள்'தான்.

சந்த்ராக்காவுக்கு ஒரு பையன். பெயர் பளனி. வயசு அப்போ ஒன்னரை, ரெண்டு இருக்கலாம். கண்ணுமட்டும் பளிச்ன்னு துருதுருன்னு இருக்கும்.
அக்காவுக்குச் சம்பந்தமே இல்லாத நேர்மாறான கச்சலான உடல்வாகு. அதானே அக்காவுக்கு சம்பந்தம் எப்படி இருக்க முடியும்? அக்கா வீட்டுக்காரர் இவன் ஒரு மூணுமாசக் குழந்தையா இருக்கும்போது 'எங்கிருந்தோ' கொண்டுவந்து கொடுத்தாராம். சந்த்ராக்காவுக்கு ரொம்ப வருசமாக் குழந்தைங்க இல்லையேன்ற ஏக்கம் தீர்த்தவன் பளனி. அக்காவோட சந்தோஷம், துக்கம், கோபம் எல்லாத்துக்கும் இவந்தான் ஒரு வடிகால். பளனியைப் பார்த்தாலே அக்காவோட மூடு எப்படின்னு கண்டுபிடிச்சறலாம்.

பகுடர் அடிச்சுத் தலைசீவி, நல்ல துணி போட்டுப் பளிச்சுன்னு இருந்தான்னா........ குஷி கூத்தாடுது.
ஙொய் ஙொய்ன்னு சிணுங்கிக்கிட்டு இருந்தால் அக்கா மனவருத்தமா இருக்கு. கத்தலும் கதறலுமா இருந்தா பளனி பழம் தின்னுருக்கார். ஒதைப்பழம். இதுலே வேடிக்கை என்னன்னா...கண்ணுமண்ணு தெரியாமக் குழந்தையை பின்னிட்டு, அக்கா தன் தலையிலேயே டம்டம்ன்னு அடிச்சுக்கிட்டு அழும். அந்தச் சின்னக் கண்ணுலே அப்படி ஒரு ஆறு எங்கே இருந்து வருதுன்னு தோணிப்போகும் நமக்கு.

ஆனா...ஒன்னு, இந்த அழுவாச்சி கிளுவாச்சி எல்லாம் வெள்ளிக்கிழமை தவிர்த்த மத்த நாட்களில்தான். வெள்ளிக்கிழமை மணி பன்னெண்டு ஆகும்போது அம்மாவும் மகனும் குளிச்சு முடிச்சு நல்ல துணி மாத்திப் பளிச்சுன்னு இருப்பாங்க. அன்னிக்கு மட்டும் இட்லிக்கார ஆயாகிட்டே வாங்கும் இட்லிதான் பகல் சாப்பாடு. அப்பவே அக்கா ப்ரஞ்சு பழக்கம் வச்சுருந்துச்சு:-)))))

சரியா ஒரு மணிக்குக் கிளம்புனாதான் டிக்கெட்டுக் கிடைக்குமாம். வெள்ளி வெள்ளிக்குப் புதுப்படம் போடுவாங்கல்லே. எந்தப்படம் என்றது பிரச்சனை இல்லை. வெள்ளிக்கிழமை பகல் ஆட்டம் பார்த்துறணும். முதல்நாள் முதல் ஷோ. அப்பெல்லாம் இந்தக் காலைக் காட்சிகள் புழக்கத்துக்கு வரலை.

சந்த்ராக்கா வீட்டுக்காரர் லாரி ஓட்டுறார். வாரத்துலே ஒரு நாளோ ரெண்டு நாளோதான் வீட்டுலே இருப்பார். சினிமாவுக்குக் கிளம்பும்போது அக்காவைப் பார்த்தால் அவரு வந்துட்டாரா இல்லையான்னு தெரிஞ்சுரும். காது மூளியாக் கிடந்தா அவர் வரலை. வியாழன் சாயந்திரம் அஞ்சுவரை காத்துக்கிட்டு இருக்கும் அக்கா, (அஞ்சடிச்சுருச்சா அடிச்சுருச்சான்னு நாலுதபா வந்து கேட்டுக்கிட்டுப் போகுமே) சட்னு நம்ம தெருவிலேயே இருக்கும் மார்வாடி கடைக்குப் பாயும். லட்டுக்கம்மலைக் கழட்டிக்கொடுத்து பத்து ரூபா வாங்கிக்கும். சினிமாச் செலவுக்குக் காசு வேணுமுல்லே? அஞ்சு பத்துன்னு யாருகிட்டேயும் கடனுக்குக் கை நீட்டாது. இருக்கும் ஒரே நகை மார்வாடி கடைக்குப் போறதும் வாறதுமாத்தான்.
நிறைய வெள்ளைக்கல்லை வட்டமா அடுக்கிவச்சத் தோடுதான் லட்டுக்கம்மல். இதுகூட சந்த்ராக்கா வச்ச பெயர்தான். சினிமாவுக்குப்போய் வந்ததும் தண்ணி பிடிக்கற சாக்குலே நம்ம வீட்டு முற்றத்துக்குக் குடத்தைத் தூக்கிட்டு (அடிப்பம்பு அங்கேதான் இருக்கு) வந்ததும் சினிமாக் கதையையும் அதுலே வந்த பாட்டுகளையும் விஸ்தாரமாச் சொல்றதைக் கேக்கவே நாங்கக் காத்துக்கிடப்போம். பாடல்வரிகள் எல்லாம் நினைவுருக்காதுன்னாலும் பொருள் மட்டும் நல்லாவே நினைவிருக்கும். பட்டப்'பகல்லே உன்னை பாக்க வந்தா.... நீ நைட்டுத்தான் வருவேன்னு அவ திருப்பிவுட்டுட்டா......பாடிகினே அழுவா.' (பகலிலே சந்திரனைப் பார்க்கப்போனேன். அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்) எந்த விதமான பையாஸும் இல்லாம மனசுலே இருந்து வரும் உண்மையான விமரிசனம் அது.
குடும்பக் கதை பார்த்துட்டு வந்துச்சுன்னா .....கதை சொல்லும்போதே கண்ணுலே குளம் கட்டிக்கும். நாயகனோ நாயகியோ கஷ்டப்பட்டா...... சந்த்ராக்காவுக்கு கண்ணீர் பொத்துக்கிட்டு ஊத்தும். அடுத்த வெள்ளி வரும்வரை சினிமாப் பேச்சு வந்தா துக்கம் தொண்டையை அடைக்கத்தான் பேச்சே.

நாங்க அந்த வீட்டைக் காலி செஞ்சுபோய் ஒரு நாலைஞ்சு வருசம் இருக்கும். சந்த்ராக்காவை வேற பேட்டை மார்கெட்டில் பார்த்தேன். அக்காவுக்கு முடி எல்லாம் கொட்டி எப்படியோ இருந்தாங்க. அந்த வட்ட முகமும் சின்னக்கண்ணும் இன்னும் வத்திப்போய்க் கிடந்துச்சு. காதுலே மட்டும் லட்டுக்கம்மலின் மின்னல். அதை வச்சுத்தான் நானும் அடையாளம் கண்டுக்கிட்டேன்னு வையுங்க. ஒரு வருசமா உடம்பு ரொம்ப முடியலையாம். இந்தப் பேட்டையிலே புருசனுக்குத் தூரத்துச் சொந்தக்காரர் வீட்டுக்கு வந்துட்டாங்க. பளனி இஸ்கோலுக்குப் போறானாம். தர்மாஸ்பத்திரியிலே தினம் ஊசி மாத்திரைன்னு போய்க்கிட்டு இருக்குது.

பளனி அப்பா என்ன செய்யறாருன்னு கேட்டேன். லாரிதான் ஓட்டறாராம். அவருக்கும் இப்பெல்லாம் அவ்வளவா சுகமில்லைன்னு சொன்னாங்க.

அன்னிக்கு வெள்ளிக்கிழமைன்றது சட்னு ஞாபகம் வந்துச்சு. ஏங்க்கா.... சினிமாவுக்குப் போலையான்னு கேட்டால்.....ஊஹூம் னு தலை ஆட்டி, 'சினிமாவுக்குப் போறதில்லை இப்பெல்லாம்'னு சொன்னப்ப எனக்கு மனசுக்குச் சங்கடமாப்போச்சு.


PIN குறிப்பு: நம்ம ரிஷானுக்காக லட்டு + கம்மல் படம் போட்டுருக்கேன்:-)




28 comments:

said...

லட்டுக்கம்மல்..பேரே அசத்தல்.பதிவை படிக்கும் போது அப்படியே காட்சிக எல்லாம் கண் முன்னாடி வருது டீச்சர்.

said...

\\ப்ரஞ்சு பழக்கம் வச்சுருந்துச்சு:-)))))
//

இந்த பழக்கமெல்லாம் சரிதான்.. லாரிக்காரர் பழக்கவழக்கம் சரியில்லயோ
:((

said...

சுவாரஸ்யமா இருந்தது.. லட்டிலிருந்து கடைசியில் வெச்சிருந்த 'பொடி' வரை..

said...

லட்டு+கம்மல் பார்த்துதான் கம்மல் எப்படி இருக்கும் புரிந்தது டீச்சர்.கதையும் நன்றாக உள்ளது டீச்சர்:))))

said...

நடை அருமை...

ஸ்வாரஸ்யம் கூட்டுகிறது...!

said...

ஆஹா..லட்டு படத்தைப் பார்த்ததுமே மனசு நிறைஞ்சு போச்சு டீச்சர். எனக்காகப் படம் போட்டதற்கு முதலில் நன்றி. :-)

லட்டுக் கம்மல் பார்க்க நல்ல பார்வையா இருக்கு டீச்சர். இந்த டிசைன் இப்பவும் இருக்கு.. சுற்றி வர வைரக் கல் பதித்த கம்மல் அழகாக இருக்கும்..அல்லது ரூபி சிவப்புக் கல்.

சந்த்ராக்கா சினிமா பார்த்து அழுறதக் கேட்டு சிரிப்பா வருது..நல்லவேளை நம்ம காலத்து விஜய், பேரரசு, டீ.ஆர் எல்லாம் அப்ப இல்ல.. இருந்திருந்தா ஒரு மாசம் பூரா அழுதுட்டே இருப்பாங்கல்ல? :-)

ரொம்ப அழகா எழுதுறீங்க டீச்சர்..நேர்ல பார்க்குற மாதிரியே இருக்கு..

அப்புறம் கதைகள்ல இன்னும் நிறைய மிச்சமிருக்குல்ல :-)

said...

முக்கியமான கவலைகள்:
1. //நல்லா பழுத்த இலந்தைபோல ரெண்டு காதுலேயும் லோலாக்கு.....பாவம்......// ஆஹா, பிறக்கும்போதே லோலாக்கு போட்டுட்டு பிறந்தாரா?
2. //ப்ரஞ்சு பழக்கம்// ???
3. //லட்டுக்கம்மலைக் கழட்டிக்கொடுத்து பத்து ரூபா வாங்கிக்கும். சினிமாச் செலவுக்குக் காசு வேணுமுல்லே? அஞ்சு பத்துன்னு யாருகிட்டேயும் கடனுக்குக் கை நீட்டாது. இருக்கும் ஒரே நகை மார்வாடி கடைக்குப் போறதும் வாறதுமாத்தான்.// சரி மார்வாடி கடைக்குப் போறது பத்தி சொல்லிட்டீங்க, வாறது எப்பூடி?

கதை கேட்டோமோ, நடையக் கட்டினோமா என்றில்லாமல், கேள்வி கேட்போர் சங்கம்.

said...

கம்மல விட லட்டு ஸூப்பர்.PADMASURI

said...

லட்டு கம்மல் நல்லா இருக்கு. ஆனால் லட்டு வேறயாவும் ,கம்மல் எனக்குத் தெரிஞ்சவங்களோடதும் இருந்தது. பாவம் சந்திராக்கா. பழனி என்ன ஆனானோ. தொடருமா.வேற கதைக்குப் போறோமான்னு தவிப்பா இருக்கெ.

said...

லட்டு+கம்மல் கண்டு கொண்டோம். கதையும் அறிந்து கொண்டோம்.

said...

ரொம்ப சுவாரஸ்யமா இருந்ததுங்க!

said...

Good Story.Pictures are nice too.

said...

கம்மல் எப்படி மீண்டும் மீண்டு வரும்? :-)))

said...

லட்டு+கம்மல் சுவாரஸ்யமா இருந்தது..

said...

வாங்க சிந்து.

அது அக்கா வச்ச பெயர்!

said...

வாங்க கயலு.


குறிப்பால் உணர்த்தியதைக் கண்டுபிடிச்சுட்டீங்களே!!!!!

சபாஷ்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

வரிகளுக்கிடையில் வாசிச்சதுக்கு ஸ்பெஷல் நன்றி:-)

said...

வாங்க சுமதி.

இந்தக் கம்மல் என்ற பெயரே ஆண்ட்டீக் ஆயிருச்சுப்பா.

இப்போ 'இயரிங்' ன்னு சொல்லணும் இல்லே:-)))))

said...

வாங்க ராஜ ராஜ ராஜன்.

'பராக்'ன்னு சொல்லணுமோ:-))))

முதல் வரவு!! வணக்கம். நலமா?

வருகைக்கு நன்றிங்க.

said...

வாங்க ரிஷான்.
இப்படி படம் படமுன்னு படம் வாழ்க்கையில் அதி முக்கியமாப் போயிருச்சே:-)))))

படத்தில் இருப்பது லட்டுக் கம்மல் இல்லை:(

ஆண்டவன் அளிக்கலைப்பா:(

மிச்சம் ஏகப்பட்டது இருக்கு!

said...

வாங்க கெக்கேபிக்குணி.

கவலை உடம்புக்கு ஆகாது.

1. ஆமாம்.

2. அது Brunch :-)

3. வூட்டுக்காரர் வந்தவுடன் அன்னிக்கு மாலையோ இல்லை மறுநாள் காலையோ கம்மல் வூட்டுக்கு வந்துரும். வரும் நேரம் முக்கியம். நான் சொல்வது வீட்டுக்காரர் வரும் நேரம்.

said...

வாங்க பத்மா சூரி.

விதவிதமான பெயர்களில் உலா வர்றீங்க போல!!!!

லட்டு..... சுட்ட லட்டு.

said...

வாங்க வல்லி.

நமக்குத் தெரிஞ்சவுங்கதான் கம்மல்காரங்க. ஜி ஆர் டி:-))))

பளனியை அந்தப் பழனியாண்டவந்தான் காப்பாத்தி இருப்பார் என்று நம்புவோமாக.

said...

வாங்க மாதேவி.

நன்றிப்பா.

said...

வாங்க மோகன் ஜி.

வருகைக்கு நன்றி. அப்பப்ப வந்து போங்க.

said...

வாங்க சந்தியா.

டேங்கீஸ்!

said...

வாங்க ஹுஸைனம்மா.

வூட்டாம்பிளை வந்ததும் அதுவும் வந்துரும். பத்தே ரூபாய் பொறட்ட முடியாதா அப்ப!!!

said...

வாங்க ஜிஜி..
வருகைக்கு நன்றிப்பா.