Monday, January 31, 2011

(ஒரே கேக்குலே) நாற்பெரும் விழா!

முதல்லே பருப்பும் நெய்யும். அப்புறம் ஒரு சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொரியல், அப்பளம் ஊறுகாய்ன்னு ரொம்ப சிம்பிளா வீட்டுச்சாப்பாடு ருசியில் அதிகம் காரமில்லாம வயித்துக்கு இதமா சாப்பாடு! எல்லாம் ஞானாம்பிகா கேட்டரர்ஸ்தான். ரெண்டு நாளைக்கு முன்னால் பகல்நேரக் கச்சேரியும் மாலை எதோ நாடகமுன்னு சொன்னாங்களே அதெல்லாம் என்னன்னு கண்டுக்கலாமுன்னு வாணி மஹால் வந்தா...........நமக்கு அவ்வளவா சுவாரசியமில்லாத நிகழ்ச்சி போய்க்கிட்டு இருக்கு. கீழே இருக்கும் ஹால் காலி. வாசலுக்குப் பக்கத்தில் இருந்தவங்ககிட்டே என்ன நிகழ்ச்சி அடுத்துன்னா............... 'நாங்க சாப்பிட வந்துருக்கோமு'ன்னு சொன்னாங்க. "இங்கெயா? சாப்ட்டாச்சா?"

"இனிமேத்தான். சில ஃப்ரெண்ட்ஸ் வரவுக்குக் காத்துருக்கோம். "

மனசுலே குறிச்சு வச்சுக்கிட்டதை இன்னிக்கு வெளியே எடுத்தேன். வாங்கி வந்த புத்த்கங்களையெல்லாம் பெட்டியில் அடுக்கிட்டு வாணிமஹாலுக்குக் கிளம்பினோம். மணி பனிரெண்டேகால்தான். அவ்வளவா பசி இல்லை. ஆனாலும் கேண்டீன் பக்கம் எட்டிப்பார்த்தோம். மதியச் சாப்பாட்டுக்காக டைனிங் ஹால் மேசைகளை மாத்தி மூணு வரிசையா பந்தி ஏற்பாடு. பகல் மூணுவரை சாப்பாடு இருக்குமாம். பேசாம ஒரு காஃபியைக் குடிச்சுட்டு ஒருமணி கச்சேரியைக் கேட்டுட்டு வந்து பகல் சாப்பாட்டை ஒரு கை பார்க்கலாமுன்னு ஐடியா வந்துச்சு.
மாடிப்படி அருகில் பச்சைச் சட்டை இளைஞர் தோளில் மிருதங்க பையுடன் நின்னுக்கிட்டு இருந்தார். ஒரு மணிக் கச்சேரிக்கான்னேன். ஆமாம்ன்னார். எங்கேயோ பார்த்த நினைவு...............

ஏஸி ஜாலில் ஈ காக்காய் இல்லை. நிம்மதியா உக்கார்ந்துக்கிட்டுக் குட்டித்தூக்கம் போடலாம். அழகான ராமர் படம் ஒன்னு மாட்டிவச்சுருக்காங்க. ஓபுல்ரெட்டிகாருவின் படமும் தொங்குது.

ஒரு மணிக்குக் கால்மணி இருக்கும்போது சரசரன்னு சத்தம். கிடுகிடுன்னு நாலைஞ்சு பேர் அரங்கத்தில் நுழைஞ்சாங்க. மேடைக்குப் போனாங்க. மைக் செட் பண்ணுவதும் ஸ்ருதி செக் பண்ணுவதுமா பரபரன்னு ஆரம்பிச்சு......... 'டாண்' னு ஒரு மணிக்குக் கச்சேரி ஆரம்பிச்சது.
எண்ணி மூணே பேர். சுஷ்மா சோமசேகரன்(சிங்கை) பாட்டு, ஸ்மிதா கிருஷ்ணன்(அமெரிக்கா) வயலின். குரு பரத்வாஜ் (உள்ளூர்) மிருதங்கம் (காரைக்குடி மணியின் சிஷ்யர்) எல்லாம் அண்டர் 23 டீம். அதுவே கண்ணுக்குக் குளுமையா இருந்துச்சு.

சுஷ்மாவின் குரல் வளம் அருமை. 'நம் கணபதே நமோ நமோ'ன்னு ஆரம்பிச்சதுலேயே நம்மைக் கட்டிப்போடப் போறாங்கன்னு புரிஞ்சுபோச்சு. சங்கரி, அம்பா, ஷ்யாமளே, சந்த்ரமௌலி, சாவித்ரி, பஞ்சஷாந்தி ஸ்வரூபிணி, பாண்ட்யகுமாரின்னு படபடன்னு அம்பாள் பெயர்களே பாட்டுமுழுசும் சுத்திச்சுத்தி வருது. யார் எழுதுனாங்களோ?

இந்த இசைக்கச்சேரிகளில் எப்பவும் எனக்கொரு சின்னக் குறை இருக்கும். என்ன பாட்டு, ராகம், தாளம்னு ஒரு வரி பாட்டின் ஆரம்பத்துலே சொல்லிட்டா நல்லா இருக்குமே................. அனாவஸியமா அது என்ன ராகமுன்னு மண்டையைக் குடைஞ்சுக்கிட்டு பாட்டை அப்போ அனுபவிக்காமல் கோட்டை விடுவதில் இருந்து நாம் தப்பிக்கலாமேன்னுதான்....................... இதே போல நிகழ்ச்சி முடிஞ்ச வினாடியே திரை போட்டுட்டு அதுக்குப்பிறகு உள்ளே சன்மானம் கொடுப்பதையும் கொஞ்சம் மாத்திக்கலாம். திரையை ஒரு வினாடி மறுபடித் திறந்து ரசிகர்கள் முன்னிலையில் அந்தக் கவரைக் கொடுக்கப்படாதோ? நாமும் கைதட்டி ஊக்கப்படுத்தலாமே..... அது ஒருவேளை வெறுங்கவராக இருந்தாலுமே!

வயலின் ஸ்மிதா நல்லாதான் வாசிச்சாங்கன்னாலும் விளையாட்டுப் புள்ளையா வயலினை ரெண்டு முறை கைநழுவ விட்டுட்டாங்க. oops...........
முதல் கச்சேரியா இருக்கலாம். இசைவிழாவின் சீரியஸ்னஸ் புரிபடலை போல!

குரு பரத்வாஜ் மேடை அனுபவம் நிறைய இருக்குன்னு வாசிப்புலேயே காமிச்சார். (இப்ப நினைவுக்கு வந்துருச்சு. போன வருசம் பாரதிய வித்யாபவனில் இவர் வாசிப்பைக் கேட்டுருக்கேன்). தாயே த்ரிபுர சுந்தரி உமா மஹேஸ்வரி, இதி ஜென்மமிதியா ஓ ராமா (தியாகராஜர். முதல்முறையாக் கேட்கறேன்) படிப்படியா நம்மை உயர்த்தும் படி பதினெட்டாம் படி (சீஸன் அனுசரிச்சு) இப்படிப் படபடன்னு நாலைஞ்சு பாட்டு, 20 நிமிசத்துக்கு ஒரு ராக ஆலாபனைன்னு ஒரு மணி நேரத்துலே கச்சிதமா இந்த ஒருமணிக் கச்சேரி முடிஞ்சது. கீழே போய் சாப்பிடப்போனோம். முதல் பாராவைப் படிச்சீங்கதானே?

ரொம்பப்பிடிச்ச சமாச்சாரம் உபசரிப்பு. என்னமோ அவுங்க வீட்டு விசேஷத்துக்கு வந்துருக்கோமுன்னு நம்மை நினைக்க வச்சுடறாங்க. நான் வெறும் பருப்பு சாதம் மட்டுமேன்னதுலே பரிமாறுனவர் இது வேணாமா, அது வேணாமான்னு கேட்டே பரிதவிச்சுப் போயிட்டார். மறுநாள் புத்தாண்டை முன்னிட்டு பெரிய விருந்தே நடக்கப்போகுது. மெனுவைக்கூட வெளியில் எழுதிப்போட்டாச்சு. 200 ரூ மதிப்புள்ள உணவு வெறும் 120தான்னு வேற காதில் ஓதினார். இருக்கட்டும். இன்னிக்கு சாப்பாடு வயித்துக்கு ஒத்துக்கிட்டால் நாளை பார்க்கலாம்.

மூணு மணிக்கு ஒரு காத்திருப்பு. மூணரைக்கு சீனா ஐயாவும் அவர் மனைவி செல்வியும் வந்தாங்க. அடுத்த சில நொடிகளில் கவிதாயினி மதுமிதாவும் அவுங்க கணவரும் வந்தாங்க. இன்னும் சில தோழிகளுக்கும் சொல்லி வச்சுருந்தேன். சீனா ஐயாவைச் சந்திக்க வாங்கன்னு. போதிய அவகாசம் கொடுக்காமத் திடீர்னு அழைச்சதால் அவுங்களாலே வரமுடியலையாம்

நேத்து நீங்க செல்லில் கூப்பிட்டப்ப, மக்கள் வரிப்பணத்தில் உண்டாக்கிய 'கலைஞரின் செம்மொழி பூங்கா' வில் இருந்தேன்னு சீனாவிடம் சொன்னால்......... 'அட! நானும் அங்கே இருந்துதான் கூப்பிட்டேன்'றார். அட ராமா............. அப்புறம் பதிவுலகம், பதிவர்கள்ன்னு கொஞ்சம் பேச்சு போனது. தருமியை செல்லில் கூப்பிட்டார். நாங்களும் அவரோடு நாலு வார்த்தைகள் பேசுனோம். நாலு பதிவர்களும் ஒரு வாசகரும், ஒரு ஆதரவாளருமா பதிவர் (குடும்ப) சந்திப்பு ஜேஜேன்னு களை கட்டிருச்சு:-)
சீனாவும் செல்வியும் அருமையா ஒரு கேக் கொண்டு வந்துருந்தாங்க. கூடவே பழங்களும். அன்னிக்கு அவுங்க மகளின் பிறந்தநாள். சரியா வருசக் கடையில்!!! மதுமிதாவும் தீனிகளோடு ஆஜர். நாமும் ஏற்கெனவே வாங்கி வச்சுருந்த இனிப்புகளுடன் கீழே ரெஸ்ட்டாரண்டில் இருந்து காஃபி வரவழைச்சுட்டோம். பிறகு? பார்ட்டிதான்!
நம்ம சீனா ஐயா ஒரு 12 நாளுக்கு முன்னால்தான் மணி விழா கொண்டாடி இருந்தார். நமக்குத்தான் போய்க் கலந்துக்க முடியலை. அதனால் இப்போ அவரைக்கொண்டே கேக் வெட்டியாச்சு. கோபால் சொல்றார் 'மணியைப் பாரு'ன்னு! அப்போ மணி சரியா நாலரை. எங்க நியூஸிக் கணக்குப்படி அங்கே இரவு 12. புது வருசம் பொறக்குது:-)

ஆஹா.... இப்படி நாற்பெரும் விழா! டேட் லைனில் நியூஸி இருப்பதால் எப்பவும் போல உலகிலேயே புதுவருசத்தைக் கொண்டாடுன முதல் ஆட்களா நாங்க:-)))))))))))) (எங்கே இருந்தாலும் விட்டுறமாட்டொம்லெ)
ஒரு ஆறுமணி போல கிளம்பிட்டாங்க. நாங்களும் ஒரு ஆட்டோ பிடிச்சு ம்யூஸிக் அகெடமி போனோம். புத்தாண்டைக் கொண்டாட சென்னை ரெடியா இருந்துச்சு. எங்கே பார்த்தாலும் மின்விளக்கு அலங்காரங்கள். இந்த முறை ஆட்டோக்காரர் ரவி நியாயமான தொகையாக் கேட்டார். கழுத்தில் மாலையைப் பார்த்து முதலில் கொஞ்சம் தயங்குனேன். பேச்சுக்கொடுத்ததில் அது 'துளசி' மாலையாம். சின்னவயசு முதலே போட்டுருக்காராம். கல்லூரி நாட்களிலும் கழட்டவே இல்லையாம். பட்டதாரி. எல்ஜியில் வேலை செஞ்சுக்கிட்டு இருந்துருக்கார். அந்த வேலை போயிருச்சாம். இப்போ ஆட்டோ ஓட்டறார். மாலை 7 மணிக்கு அப்புறம் வேலை செய்யமாட்டாராம். நேரா வீடு. குழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கணும். மனைவிக்கு சன் தொலைக்காட்சிச் செய்திப்பிரிவில் பணி. ஆறு வயசில் ஒரு பெண் குழந்தை. பெயர் ஜனனி ( எனக்கு ரொம்பப் பிடிச்ச பெயர்) தனியார் பள்ளிக்கூடத்தில் படிப்பு. மாசம் 3500 செலவாகுதாம் கல்விக்கு. இயல்பா பேசிக்கிட்டே அகெடமி உள்ளே கொண்டுபோய் இறக்கினார்.
வருசக் கடைசியிலாவது ஒரு நல்ல ஆட்டோக்காரரைச் சந்திச்சதுலே பரம திருப்தி எனக்கு. புதுவருச வாழ்த்தைச் சொல்லிட்டு டிக்கெட் எடுக்கப் போனோம். இன்னும் முக்கால் மணியில் உஸ்தாத் ஆலம் கான் சரோட் வாசிக்கிறார். இப்போ உள்ளே காயத்ரி க்ரீஷ் பாட்டு நடந்துக்கிட்டு இருக்கு. அதையும் போய்க் கேளுங்கன்னு தாராள மனசோடு சொன்னார் கவுண்ட்டரில் இருந்தவர்.
பால்கனிக்குப்போய்ச் சேர்ந்தோம். (இங்கே ரெண்டு பால்கனிஸ் இருப்பதை இன்னிக்குத்தான் கவனிச்சேன்) 'தனி' நடந்துக்கிட்டு இருக்கு. பிடிச்ச ஐட்டம் என்பதால் சுவாரசியமாப் போச்சு.
ஏழு மணிக்கு உஸ்தாத் ஆலம் கான் ஆரம்பிச்சார். இவர் சரோட் புகழ் உஸ்தாத் அலி அக்பர் கான் அவர்களின் மகன். அதனால் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகம்தான். இவரோட தம்பி தம்பூரா. தப்லாவுக்கு மிட்டாய்க்கலர் ஜிப்பாவுடன், சுபாங்கர் பானர்ஜி.
ரெண்டு மணி நேர நிகழ்ச்சி. அதுலே ஒன்னரை மணி நேரம் சரோடுக்கு ஸ்ருதி சேர்க்கறதும், மைக்கை அட்ஜஸ்ட் பண்ணச் சொல்றதும்,. அப்பப்ப தம்பியின் தம்புராவை வாங்கி அதுக்கு ஸ்ருதி சரியாக்குறதுமா குனிஞ்ச தலை நிமிராம உஸ்தாத் ஆலம்கான் பார்த்துக்கிட்டார். 'விறுவிறுன்னு வாசிக்கப்போறார்............ நாம் வா வா சொல்லத் தொண்டையை ரெடியா வச்சுக்கணும்'னு திட்டத்தோடு வந்த எங்களுக்கு.............. எப்படி இருந்து இருக்கும்னு உங்க ஊகத்துக்கே விட்டுடறேன்..........

ஹிந்துஸ்தானி சங்கீத ரசிகர்களா வந்துருந்த அத்தனைபேரும் தலையைத் தொங்கப்போட்டுக்கிட்டு வெளியே வந்தோம். உண்மையைச் சொன்னால் கூட்டமே இல்லை. அதிலும் பாதிப்பேர் தாங்கமுடியாம பாதியிலேயே எழுந்து போயிட்டாங்க. இதோ வாசிக்கப்போறார் இதோ வாசிக்கப்போறாருன்னு கடைசிவரை அஞ்சாநெஞ்சர்களா இருந்தவங்க கொஞ்சம்பேர்கள்தான். போகட்டும் 2010 வருச நட்டக் கணக்குலே............... எழுதிறணும்..

Friday, January 28, 2011

(பூம்பூம்)மாட்டுப்பொங்கல் கொண்டாடினோம்.

இருக்குன்னு தெரியும். ஆனா எட்டுமாசமா போக வாய்க்காதது இந்த மாட்டுப் பொங்கலுக்கு வாய்ச்சது. திடீர்னு செஞ்ச ஏற்பாடுன்னு அழைப்பிதழ் நொடியில் வந்தது டெக்ஸ்ட் மெஸேஜ் மூலமா. இடத்தை உரப்பிக்கணுமுன்னா கார்த்திக் ரெஸ்ட்டாரண்டுலே முன்பதிவு செஞ்சுக்குங்கன்னாங்க. தமிழர்களுக்கான சேதி முதல் சோறு வரை ஒருங்கிணைப்பாளரா இருப்பது 'கார்த்திக்'தான். முதல்நாள் போய் பதிவு செஞ்சு ஸீட்டுக்கான சீட்டு வாங்கியாச்சு.

மனிதப் பொங்கலாச்சேன்னு நேத்து மாலை சண்டிகர் முருகனைப் பார்க்கப்போனால் கோவில் வாசலில் சாம்பலும் கரியுமா ஏதோ அடுப்பு வச்ச அடையாளம். காலையில் வாசலில் பொங்கல் வச்சாங்களாம். அட! இதைப்பத்தி ஏன் முன்னாலேயே சொல்லலைன்னு நம்ம குருக்கள் கிட்டே கேட்டால்...... 'அவுங்க வந்து பொங்கல் வச்சாங்க'ன்னார். இந்த 'அவுங்க' என்பது நம்ம தமிழ் ஆட்களைத்தான். ஏறக்கொறைய அம்பதாயிரம் தமிழர்கள் இங்கே இருக்காங்க. அவுங்க யாரும் கோவில்பக்கம் வராதது நமக்கு ரொம்பவே மனக்குறைதான். இன்னிக்குப் பொங்கல் வைக்கவாவது வந்தாங்களேன்னு கொஞ்சம் மகிழ்ச்சியா இருந்துச்சு.

இவுங்க எப்படி இங்கே வந்தாங்கன்னா............. காமராஜர்தான் காரணம்.


இங்கே சண்டிகர் நகர நிர்மாணத்திற்கு (1954) வேலை செய்ய, காமராஜர் ஆட்சி காலத்தில் இங்கே அனுப்பி வைக்கப்பட்டவர்கள். ,வேலையில்லாத் திண்டாட்டத்தில் இருந்து தப்பியவர்கள், இப்போ இங்கே சண்டிகர் நகராட்சியில் நிரந்தரப் பணியாளர்களாக நல்ல மாதச் சம்பளத்துடன் வாழ்கிறார்கள். மூணுதலைமுறையா ஆகி இருக்கு. குடும்பங்கள் பெருகி இன்னிக்கு ஏறக்கொறைய அம்பதாயிரம் தமிழர்கள். நகரின் மொத்த ஜனத்தொகையில் ஏழு சதமானத்துக்கும் மேல்.

மேலே உள்ள பத்தி நம்ம தளத்தில் போனவருசம் எழுதுனது. இன்னும் கொஞ்சம் விவரம் வேணுமுன்னா இங்கே பாருங்க.


பத்தரைக்கு விழா ஆரம்பம். சரியா பதினோருமணிக்குப் போய்ச் சேர்ந்தோம். பாரதி பவன். செக்டர் 30B. கட்டிடத்தின் முன்வாசலில் போட்டிருக்கும் பெயர்ப்பலகையில் முன்னே நிற்பது தமிழ்! சண்டிகர் தமிழ் மன்றம். ஆஹா..............ஒரு பத்துப்பேர் நமக்கும் வேணுமுல்லே? அவுங்க படங்கள் வரிசையா நிலைவாசல் மேலே. அண்ணாதுரை, காமராசர், வ.உ.சி, வள்ளுவர், காந்தி, பாரதி, நேரு, சுபாஷ் சந்த்ரபோஸ், இந்திரா அம்மையார், பகத் சிங். அகலமான ரெட்டைக் கதவுகளோடு வாசல். பதினோராவது படமாக வாசல் நிலையில் முருகனின் குடும்பப் படம். உள்ளே நுழைஞ்சால் பத்தடி அகலத்தில் ஹால். வலது பக்கம் மாடிப்படி. இடது பக்கம் ரெண்டு கழிப்பறைகள். எதிர்ப்புறம் கொஞ்சம் தள்ளி ஒரு கதவு.
மாடிப்படி ஏறி மேலே போனால் கீழே இருப்பது போலவே சின்னதா நீண்ட ஹால். தெருப்பக்கம் பார்த்த பால்கனிக்கு ரெண்டு பக்கமும் பக்கத்துக்கொன்னா ரெண்டு சின்ன அறைகள். அவ்ளோதான் கட்டிடமே!
யுனிவர்ஸல் ஸ்டூடியோவில் படத்துக்கு போட்ட செட் நினைவுக்கு வருதே!

கீழே இறங்கிவந்து எதிர்ப்பக்கக் கதவைத் திறந்து வெளியே வந்தால் துணிச்சுவர்கள் வச்ச பந்தல். அலங்காரத்தோடு களைகட்டுது. நல்ல பெரிய இடம்தான். 2 Kanal இருக்கும். வடக்கே ஹரியானா பஞ்சாப், ஹிமாச்சல் ப்ரதேஷ், ஜம்மு & காஷ்மீர் இங்கெல்லாம் நில அளவை இப்படித்தான் கனால் ன்னு சொல்றாங்க. ஒரு கனால் என்பது 510 சதுர மீட்டர். பழங்கணக்குன்னா அரைக்கால் ஏக்கர். இன்னும் நம்மூர் கணக்குன்னா 2 கிரவுண்டுக்கும் கொஞ்சம் அதிகம். இந்த தமிழ் மன்றம் இருக்குமிடம் ரெண்டு கனால் என்பதால் நாலரை கிரவுண்டுக்கு பரந்துருக்கு.

அந்தக் காலத்துலே (1972) தமிழன்பர் ஒருத்தர் 35 ஆயிரத்துக்கு வாங்கித் தமிழ்ச்சங்கத்துக்கு தானமாக் கொடுத்துட்டார். இன்றைய மதிப்பில் இது 40 கோடிக்கு உசந்துருக்கு. இவ்வளோ பெரிய இடத்துலே பக்காவா ஒரு கட்டிடம் கட்டி தமிழ்ச்சங்கப் பயன்பாட்டுக்கு வச்சுக்கணுமுன்னு ஆசைதான். ஆனால்.............. நிதி வசதி இல்லையே:( தமிழ்மன்றக் காரியதரிசி நம்ம ஆல் இன் ஆல் ராஜசேகரின் கவலையைக் கேட்டால் நமக்கும் கவலையா இருக்கு.

பெரிய ஹால் ஒன்னு வசதிகளோடு கட்டி நம்முடைய பயனுக்குப் போக மற்ற நாட்களில் கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு வாடகைக்கு விடலாம். வருமானம் வரும். கட்டிடம் கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். வாடகையில் கிடைக்கும் வருமானத்தில் இருந்து கடனை அடைக்கலாம். இப்படி எல்லாம் எங்களுக்கு யோசனை இருந்தாலும் கோடிகளைக் கடன் வாங்க பயமா இருக்கு, நம்மைப்போல சாதாரண மனுசர்களுக்கு. அங்கங்கே என்னன்னா............. லட்சக்கணக்கான கோடிகளில்........... சரி. நல்ல நாளுலே, இன்னிக்கு அந்த கொடுங்கணக்கெல்லாம் வேணாம்........... அப்புறம் ஒரு நாளு வச்சுக்கலாம்

காஞ்சி சங்கர மடம், ஒரு முறை இங்கே கட்டிடம் கட்டித் தருவதாகவும், அதுலே ஒரு பகுதியை மடத்தின் தேவைகளுக்குப் பயன்படுத்திக்குவாங்கன்னும் ஐடியா கொடுத்துருக்காங்க. நம்ம ராஜசேகர்தான் முதல் ஆளா நின்னு இதுக்கு எதிர்ப்பைக் காமிச்சிருக்கார். தமிழ்மன்றத்தில் மதத்தின் குறுக்கீடு இருக்கக்கூடாது. அனைத்து மதத் தமிழர்களுக்கும் பொதுவா இருக்க வேண்டிய இடமுன்னு சொல்லி இருக்கார். அதனால் அந்த ஐடியா கைவிடப்பட்டுச்சாம். இது எங்களுக்கு பரம சந்தோஷமே!

வங்கின்னதும் இன்னொன்னு சொல்லத்தான் வேணும். இங்குள்ள தென்னாட்டு வங்கிகள் பலவிதங்களிலும் தமிழ்மன்ற நடவடிக்கைகளுக்கும், நம்ம கார்த்திகேயஸ்வாமி கோவிலுக்கும் உதவிக்கிட்டே இருக்காங்க. அதிலும் 'கெனெரா பேங்க் அது உங்களுடைய பேங்க்' என்னும் விளம்பர வரிகளை உண்மையாகவே கடைப் பிடிக்கிறாங்க.

இங்கே இருக்கும் தென்னிந்தியர்களும் நம்மாலான உதவிகளைச் செய்யணும் என்ற எண்ணத்தோடு, உதவி செய்யப் பின் வாங்குவதே இல்லை.

இப்பக்கூடப் பாருங்க நம்ம கோவிலுக்கு ராஜகோபுரம் கட்ட நிதி சேகரிப்பு ஒரு பக்கம் நடந்துக்கிட்டு இருக்கு. அதுக்கு சண்டிகரிலும் சுற்றிலுமுள்ள பல ஊர்களிலும் இருக்கும் எல் அண்ட் டி கம்பெனி மக்கள்ஸ் நல்லாவே வாரிக் கொடுக்கறாங்க.

இந்த வங்கிகளும், எல் அண்ட் டியும் இல்லைன்னா பலவிதத் திட்டங்கள் நடந்துருக்குமா என்பதுகூட சந்தேகம்தான். இன்றைய விழாவிலும் இந்த தென்னிந்திய வங்கிகளின் அதிகாரிகள்தான் எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு உதவிக்கிட்டு இருந்தாங்க.
மேடை அலங்காரம், இசைக்கருவிகள், சவுண்டு சிஸ்டம், ஒலிபெருக்கி எல்லாம் சரிப்படுத்தக் கொஞ்ச நேரம் ஆயிருச்சு. இந்த நிகழ்ச்சி நடத்திக்க நிதி வேணுமே..... வருகை தந்தவங்க ஆளுக்கு நூறு ரூ என்ற கணக்கில் பணம் செலுத்திக்கலாமுன்னு ஒரு ஏற்பாடு. அதை இப்போதான் அறிவிச்சாங்க. அதுக்கு நிதி வசூல் பொறுப்பாளரா கண்ணன் என்றவரை உடனடியா நியமிச்சாங்க..

இந்தக் குளிரிலும் நடன நிகழ்ச்சிகளுக்கான சிறப்பு உடை அணிஞ்ச சின்னப்பெண்கள் நடுக்கத்தோடு காத்திருந்தாங்க. பரதநாட்டிய உடைகள்! பார்த்தாவே மனசுக்கு நிறைவா இருந்துச்சு எனக்கு.
'நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்...........' தமிழ்த்தாய் வாழ்த்தோடு.....நிகழ்ச்சிகள் ஆரம்பம். ராதா & ரம்யா சகோதரிகள் அழகாப் பாடுனாங்க. தெரிஞ்சவரை மக்களும் கூடச் சேர்ந்துக்கிட்டோம். உள்ளுர் சுந்தரகாண்டம் பஜன் ஸ்பெஷலிஸ்ட்டுகளின் மகன் (குழந்தைப்பிள்ள)ரொம்ப அழகா கணபதியை நமஸ்கரிச்சுப் பாடுனது ரொம்பவே நல்லா இருந்துச்சு.

முதல் நடனமா பிள்ளையார் பாடலுக்கு ரெண்டு சிறுமிகள். வடக்கும் தெற்குமா சேர்ந்து ஆட கலைநிகழ்ச்சிகள் ஆரம்பமாச்சு.
எங்களுக்கு சூடான காஃபி வந்தது. குளிரில் உக்காந்துருக்கோமே! காபியோடு நிக்காம பஜ்ஜியா, பனீர் பக்கோடா. ரச வடை, லட்டு இப்படி அடுக்கடுக்காத் தீனிகள் வரவர கண்ணுக்கும் வாய்க்கும் வேலையோ வேலை.
லட்டு உபயம் எல் அண்ட் டி( ராஜ்புரா) காரர்.


இத்தனை விதமா எப்படி? பக்கத்துலே ஒரு கலியாணம் நடக்குதாம். இங்கே சிலவகைச் சமையலுக்குப் பொறுப்பேத்துக்கிட்டவர்தான் அங்கேயும் சமைக்கிறாராம். அங்கே செய்யும் ஸ்பெஷல் ஐட்டங்களை இங்கேயும் அனுப்பிக்கிட்டே இருக்காராம். ஆஹா.... இனி மேல் முஹூர்த்தநாளில்தான் தமிழ்ச்சங்க நடவடிக்கைகளை வச்சுக்கணும்:-))))
' கேசாதி பாதம் தொழுன்னேன் கேசவா' பாட்டுக்கு மூன்று சிறுமிகள் ஆடுனாங்க.
ரம்யா ராஜசேகரின் 'ராரா..............' பாட்டு தூள் கிளப்பிருச்சு. 'லகலக சொல்லத்தான் யாருமில்லை! வயசான(?) மக்களுக்குக் கொசுவத்தி ஏத்த ராதா ராஜசேகரின் 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?'.
நிகழ்ச்சியைத் தொய்வில்லாமல் நடத்திக்கிட்டே போன சுரேஷ் (வங்கி) அருமையான தமிழில் பேசியது, ஆள் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதில் பழம் தின்னு கொட்டை போட்டவர்னு சொல்லாமல் சொன்னது.
இடைக்கிடை பலவிதங்களில் உதவி செய்துகொண்டிருக்கும் மக்களுக்கு மாலை மரியாதைன்னு நன்றி சொல்லிக்கிட்டே இருந்தார் நம்ம ராஜசேகர். இது உண்மையாவே போற்றப்படவேண்டிய குணம். நம்ம கிருபானந்த வாரியார் அவர்கள் கூட 'குமுதம் வினா விடை புத்தகத்தில் புண்ணியங்களில் அனைத்துக்கும் தலையானது நன்றி பாராட்டுதல். பாவங்களில் பெரிய பாவம் நன்றி மறப்பது என்று சொல்லி இருக்கார்.
நடனம் ஆடி முடிச்சவுடன் மேடையை விட்டு ஓடும் சிறுவர்சிறுமிகளை அப்படியே விட்டுடாமல் திரும்பக்கூப்பிட்டு சபைக்கு முன் நிறுத்தி அவர்களை நம்ம ராஜசேகர் பாராட்டிய விதமும் அருமை. ( இவரிடமிருந்து நிறைய பாடம் கத்துக்கலாம்)

பரதம் ஆடிய குழந்தைகள் மாடிக்குப்போய் உடை மாற்றி அடுத்துவரும் நடனங்களுக்கு சட் புட்டுன்னு தயாராகி வந்தாங்க. கொஞ்சம் கூட சோம்பல் இல்லாமல் வளை, பொட்டு, நகை நட்டுன்னு எல்லாத்தையும் கவனமாப் பார்த்து மேட்ச் பண்ணிக்கிட்டு வந்தது, அவுங்க ஆர்வத்தை விளக்கிச்சு. இந்த முறை எல்லாம் ஹிந்திப் பாட்டுகள். பர்ஸோரே மேஹா மேஹா ன்னு ஆடுனப்ப.............. ரொம்ப ரசிச்சு இயல்பா ஆடுறமாதிரி இருந்துச்சு. பெற்றோரின் விருப்பத்துக்காக பரதம் கத்துக்கிட்டாலும், சினிமா நடனமுன்னு வரும்போது சிறகடிக்கும் உணர்வுதான். அப்படி ஆக்கி வச்சுருக்கு இந்த சினிமா என்னும் பவர்ஃபுல் சமாச்சாரம்.

ஒரு நிமிசம் சூழலை மறந்து நியூசியில் இருப்பதுபோல் இருந்துச்சு எனக்கு. அங்கேயும் தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பாடல்கள் மட்டுமில்லாம ஹிந்தி, ஆங்கிலம் இப்படி எல்லா மொழிகளிலும் கர்நாடகம், ஹிந்துஸ்தானி, சினிமாப் பாட்டுன்னு பாரபட்சமில்லாம கலந்துகட்டி அடிப்பதுதான். (பத்து வருசமா கலை கலாச்சார ஒருங்கிணைப்பாளரா இருந்த என் அனுபவம் பேசுது)

ஒரு சிறுமி, I'm a barbie girl ஆட ஆரம்பிச்சதும் மொத்தக் குழந்தைகள் பட்டாளத்தையும் மேடையில் ஏத்திவிட்டுட்டார் ராஜசேகர். பார்ட்டி டைம்!!!!!
ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு.... பாடுன இளம்பெண் குரல் அருமை. தமிழ் படிக்கத்தெரியாத ஒரு தமிழ் இனம் வெளிமாநிலங்களில் தமிழ் பாட்டை ஆங்கிலத்தில் எழுதி வச்சு பாடுறாங்க. குறைஞ்சபட்சம் தமிழ் பேசத்தெரியுதேன்னு தான் நாம் நினைக்கணும். தமிழ்நாட்டுலேயே தமிழ் படிக்கத்தெரியாத குழந்தைகளுக்கு இவுங்க எவ்வளவோ மேல். இல்லையா?

நம்ம கோவில் வழிபாடுகளிலும் சரி, இது போன்ற கலை நிகழ்ச்சிகளிலும் சரி, ஒரு வித்தியாசமும் இல்லாம தென்னிந்தியர் அனைவரும் சேர்ந்தே பங்களிப்பு செய்யறாங்க. அதே போல் வடக்கர்களும் வேறுபாடில்லாமல் கலந்துக்கறாங்க.

வடக்கர்கள் வழக்கப்படி ஒரு பார்ட்டின்னா எல்லோருமே ஆடனும் என்ற நியதியை அப்படி லேசா விட்டுறமுடியாதுன்னு எல்லா ஆண்களையும் 'வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்னு கைதட்டி ஆடவச்சார் ராஜசேகர். பிறகு அதே பாட்டுக்கு அங்குள்ள அனைத்துப் பெண்களையும்.!
சம்பிரதாயத்தை மீறக்கூடாதாமே...........:-)
16 வகை சாப்பாடு வாழை இலையில் பரிமாறுனாங்க. இருக்கைகள் பத்தலைன்னு மூணு பந்தி. நாங்க ரெண்டாவது பந்தியில் இருந்தோம். சாப்பிடும்போது எத்தனை வகைன்னு எண்ணுனீங்களான்னார். தண்ணீரோடு பதினாறுன்னேன். இன்னும் மூணு இருக்குன்னார். ஐஸ்க்ரீம், பீடா, அரை அடி நீளக் கரும்புத்துண்டுகள். மேடை அலங்காரத்தில் வச்சுருந்த கரும்புகளை அழகாத் துண்டு போட்டு அடுக்கி வச்சுருந்தாங்க ஒரு பக்கம்.

மனநிறைவோடு கொண்டாடி மகிழ்ந்தாலும்............'அவர்கள்' வந்து கலந்துக்காதது கொஞ்சம் குறையாகத்தான் எனக்குப் பட்டது.

எதாவது செய்யணும் பாஸ்..............



Wednesday, January 26, 2011

பெருந்தலைவர் என்ற பெயருக்கு .............

அடுக்குமாடிக் குடி இருப்புகள் வராத காலக்கட்டத்தில் அநேகமா எல்லா வீடுகளும் இப்படித்தான் இருந்துருக்கும் இந்த ஏரியாவில் என்பதற்கு அத்தாட்சியா நிக்குது, திருமலைப்பிள்ளை சாலையில் இருக்கும் இந்த பங்களா.


புத்தகப்பைகளோடு காமராஜர் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம். காம்பவுண்டுக்குள்ளில் தெருவைப் பார்த்தபடி இடதுகையை இடுப்பில் வைத்தபடி நிற்கும் சிலை. காமராஜர் நினைவு இல்லம் காலை 9 முதல் மாலை ஆறுமணிவரை திறந்துருக்கு, தமிழக முதலமைச்சர் எம் ஜி. ராமச்சந்திரன் அவர்களால் 1978 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டுருக்கு.
வீட்டு வாசலில் நின்னு, நம்மை அன்போடு வரவேற்று உள்ளே கூட்டிட்டுப் போனாங்க.

வாசலில் இருக்கும் போர்ட்டிகோவில் ஒரு மூலையில் மேசை நாற்காலி போட்டு அதுலே தமிழகக் காவல்துறைக் காவலர் சீருடையோடு ஒரு பெண் ட்யூட்டியில் இருந்தாங்க. ஒரு வயசான அம்மாள் வீட்டைச்சுத்தம் செஞ்சு வைச்சுக்கறாங்க. இந்தம்மாள் பத்து வயசா இருக்கும்போது ஐயா வீட்டுக்கு வேலைக்கு வந்தவங்களாம். (குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாத காலக்கட்டம்)

சுருக்கமா ஐயாவைப் பற்றிய குறிப்புகள் ஆங்கிலத்திலும் தமிழிலுமா வாசலுக்கு ரெண்டு பக்கமும் எழுதி வச்சுருக்காங்க.


வீட்டுக்குள் நுழைஞ்சவுடன் வலதும் இடதுமா ரெண்டு அறைகள். வலப்பக்கம் அறை நூலகம். இடப்பக்க அறை ஐயாவின் படுக்கைஅறை. காலம் உறைஞ்சு நிக்கறமாதிரி நாள்காட்டி அக்டோபர் ரெண்டுலேயே நிக்குது. ஐயாவின் இறுதி நாள்:(
அடுத்துள்ள சின்ன ஹாலின் நடுவில் ஒரு மேசை. ரொம்ப சாதாரணமா ஒரு ப்ளாஸ்டிக் மேசை விரிப்பு. டைனிங் டேபிள். அந்த ஹாலில் அலுமினியச் சட்டங்களோட ஏராளமான படங்கள். இளவயது தொடங்கி முதல் அமைச்சரா இருந்தவரை சந்தித்த முக்கியஸ்த்தர்களுடன். முந்தி காலத்துலே சினிமாலே நியூஸ் ரீலுன்னு ஒன்னு போடுவாங்களே அந்த நினைவு வந்துச்சு.
அம்மாவுக்குச் செல்ல 'காமாட்சி'யா இருந்தவரின் கல்வி ஆறாம் வகுப்பு வரை. 12 வயசாகும்போதே அரசியல் ஆர்வம். (இப்பவா இருந்தால் பிஞ்சுலே பழுத்ததுன்னு சொல்வோம் இல்லை?)

ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் போராட்டம், சைமன் கமிஷன் புறக்கணிப்பு, வெள்ளையனே வெளியேறு, உப்பு சத்தியாகிரகம், கள்ளுக்கடை மறியல்ன்னு பலதில் பங்கெடுத்து எட்டுவருசம் சிறை வாழ்க்கை.

33 வயசில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயலாளர். தொடர்ந்த அடுத்தவருசத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர். இப்படிப் படிப்படியா உயர்ந்து நாட்டுக்கு சுதந்திரம் 1947 கிடைச்சப்ப அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்.

1954 முதல் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளா தமிழ்நாட்டு முதலமைச்சர். தன்நலமில்லாமல் நாட்டின் நலம் மட்டுமே நோக்கம் என்று கருதிய வாழ்க்கை.

இப்ப எல்லோரும் சொல்லிக்கிட்டுத் திரியறாங்களே 'காமராஜர் ஆட்சியை அமைப்போம்'ன்னு...இதுலே இருந்தே தெரியுதே அப்போதைய ஆட்சி உண்மையாவே நல்லா இருந்துருக்கணும் என்பது. இல்லையா?


ஹாலை ஒட்டிய மாடிப்படி. மேலே ஒரு ஹால். மேலே ஏறிப்போனால் வலப்பக்கம் ஒரு திறந்தவெளி( பின்பக்கம் மொட்டைமாடி) இடப்பக்கம் இன்னொரு ஹால். இங்கே ஐயாவின் மொத்த வார்ட்ரோபும் காட்சிக்கு இருக்கு., எண்ணி மூணு சட்டை, மூணு வேஷ்டி. நாலாவது ஒன்னு பிரிச்சுக் கண்ணாடிக் கதவுக்குப்பின் காட்சிக்கு வச்சுருக்கு. ஒரு பக்கம் இருக்கும் கப்போர்டில் அவர் சமையலுக்குப் பயன்படுத்திய அஞ்சாறு பாத்திரங்களும், ஒரு அலுமியக் குக்கரும்.
வெளிப்புறம் தெருவைப் பார்த்தமாதிரி இருக்கும் பால்கனியில் நாலு பிரம்பு நாற்காலிகளும் ஒரு டீபாயும். விருந்தினர்கள் வந்தால் அவுங்களோடு உக்கார்ந்து பேசறதுக்காம்.

அங்கங்கே பெரிய சைஸில் கண்ணாடிச்சட்டமிட்ட ஐயாவின் உருவப்படங்கள். "இதெல்லாம் எதுக்குத் தேவை இல்லாம? வேணாங்க்றேன்" ஐயா சொல்வது போல் மனசுக்குள் கேட்டது ஒரு குரல்.
இந்த வீட்டுக்கு சிவகாமி அம்மா வந்துருக்காங்களான்னு கேட்டதுக்கு இல்லைன்னு சொன்னாங்க இங்கே இருந்த பணியாளரம்மா. வயசானதுலே ஒருவேளை மறந்து போயிருக்கலாம் அந்தம்மா. ஒரே ஒருமுறை வந்துருக்காங்கன்னு இவர் சொல்றார் பாருங்க.

எளிமையா இருக்கணும். அதுக்காக இவ்வளோ எளிமையா? மனசு கசிந்தது உண்மை. இந்த வீடும் அப்போ வாடகைக்கு எடுத்த வீடுதான். இதை அரசாங்கம் விலைக்கு வாங்கி, நினைவு இல்லமா ஆக்கி வச்சுருக்கு. வீட்டைச் சுற்றி மரங்கள் செடிகள் எல்லாம் நல்ல குளிர்ச்சியா நிக்குதுங்க.
மாடியிலும் நிறைய புகைப்படங்களைக் கண்ணாடி போட்டு வரிசையா வச்சுருக்காங்க. அதுலே இவரோட இறுதி யாத்திரை பார்த்ததும் என்னையறியாமல் கண்ணு தளும்பிருச்சு. ஐயா....நாட்டைக் கெடுத்துட்டாங்கையா..............மனசின் ஓலம்:( எப்பேர்ப்பட்ட மனிதர்..

இப்படிப்பட்டத் தலைவர்கள் கூட இருந்துருக்காங்களான்னு இப்போது இருக்கும் தலைமுறை வாயைப் பிளக்கத்தான் வேணும். எனக்கே இழப்பின் அருமை இப்போதான் தெரியுது .
வாசலில் ஒரு கல்வெட்டு போல ஒன்னு. பெருந்தலைவர் என்ற பெயருக்கு இவரை விட்டால் வேற யார் பொருத்தம்? ரெண்டு நிமிஷம் மௌனமா மனசில் அஞ்சலி செலுத்திட்டு அறைக்கு வந்தோம்.

PIN குறிப்பு: நடந்த நிகழ்வுகளை வரிசையா எழுதும்போது எப்படியோ குடியரசு தினத்தில் வெளியிடும்படியா அமைஞ்சுபோச்சு இந்தப் பதிவு. தன்னலம் கருதாமல் நாட்டுக்கு உழைத்த மகான்களுக்கு 'மட்டும்' இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறேன்.

அனைவருக்கும் 'குடி' அரசு தினத்திற்கான இனிய வாழ்த்து(க்)கள்.



Monday, January 24, 2011

பட்டிக்காட்டாள் முட்டாய் கடையைப் பார்த்தா............

நகைக்கடையோ, துணிக்கடையோ எனக்குப் பிரச்சனையே இல்லை. ஆனால் எதை எடுக்க, எதை விட்டுடன்னு மயங்கி நிற்பது புத்தகக் கடைகளில்தான். மனசுக்குள்ளே குறிச்சு வைக்கும் லிஸ்ட் எல்லாம் அப்படியே மாயமாப் போயிரும் உள்ளே நுழைஞ்சதும்.

எங்கூர்லே எங்க நூலகத்துக்குப் புத்தகம் தெரிஞ்செடுத்து வாங்கும் மூவர் கமிட்டியில் நானும் ஒருத்தி. குழந்தைகளுக்கான நூலகம் என்றதால் படம், கருத்து, கதை சொல்லிய விதம், ப்ரிண்ட் சைஸ், புத்தக வடிவமைப்பு, எந்த வயதுக்கேற்ற குழந்தைகளுக்கானதோ அதை அவர்களால் கையில் பிடிச்சு ஹேண்டில் செய்ய முடியுமா, அட்டைப்படம் குழந்தைகளைக் கவரும் விதத்தில் இருக்கா? இப்படிப் பலகோணங்களில் கவனிச்சுத் தெரிவு செய்யணும். பிறந்த குழந்தை முதல் ஒரு வயசு வரைன்னா புத்தகம் தண்ணீரில் விழுந்தாலும் சேதம் ஆகாம இருக்கும்படியும் அளவு பெருசா இல்லாமல் ரொம்பக் குட்டியாவும் இல்லாமல், பக்கங்கள் ஆறு அல்லது எட்டு இருக்கும்படியான போர்டு புக் என்பவைதான் சரியாக இருக்கும். குட்டிக் கைகள் கிழிச்சுப்போட உஷாரா இருக்குமே:-))))

இதெல்லாம் அடுத்தவங்களுக்கு வாங்கும்போது. தனக்குத் தனக்குன்னா......
நம்ம பேட்டையின் மாலுக்குப் போகும்போது, அங்கிருக்கும் புத்தகக்கடைகளில் ( மாலுக்கு ரெண்டு புத்தகக் கடைகள் கேரண்டீ) ஒருமுறை புரட்டிப் பார்த்துட்டு பெரியவங்களுக்கான நூலகத்தில் அந்தப் புத்தகம் இருக்கான்னு பார்த்துட்டு, இல்லைன்னா ஒரு ரிக்கொஸ்ட் போட்டு வச்சாப் போதும். நூலகம் அதை வாங்கிட்டு நமக்கு போன் செஞ்சு 'நீ கேட்டது வந்துருக்கு. வந்து எடுத்துக்கிட்டுப் போ'ன்னுவாங்க. நாலு வாரம் வச்சுக்கலாம். ஏற்கெனவே இருந்து, வெளியே யாராவது எடுத்துப்போயிருந்தால் அதுக்கும் நமக்கு அது தேவைன்னு ஒரு ரிக்கொஸ்ட் போட்டு வச்சால் அது வந்தவுடன் நம்மைக் கூப்பிட்டுச் சொல்வாங்க. ஆன் லைன்லே கூட ரிக்கொஸ்ட் போட்டுக்கலாம். நூலகங்கள் ரொம்ப நல்ல முறையில் நடப்பதால் தனியாக் காசு போட்டு வாங்கிக்கணும் என்ற அவசியமே இல்லை. அப்படியும் வாங்கித்தான் ஆகணும் என்ற தேவை இருந்தால் பழைய புத்தகக்கடையில் சின்ன விலைக்குக் கிடைக்கும். வாங்கிப் படிச்ச யாராவது படிச்சு முடிச்சதும் ஸ்ப்ரிங் க்ளீனிங்ன்னு பழையபுத்தகக் கடையில் தள்ளி விட்டுருவாங்க. என்ன.... சில மாசங்கள் பொறுத்துருக்கணும், அவ்ளோதான்.

நமக்கான வரவேற்பா ரெண்டு யானைகளும் புள்ளையாருமா புத்தக அடுக்குக்கு மேலே இருந்து 'வா வா' ன்னு கூப்புடறாங்க புதுப்புத்தக உலகில்:-)

தமிழ்ப்புத்தகங்கள் வேணுமுன்னா நமக்குச் சென்னையை விட்டால் வேற கதி இல்லை. எவ்வளவு காசு செலவு செய்யறோம் என்பதைவிட எவ்வளவு கனம் இருக்கும் என்ற ஒரே கவலைதான். இருக்கும் 20 கிலோவில் அஞ்சு கிலோவுக்கு மேல் வாங்கிக்க முடியாது.

இப்பதான் உள்நாட்டு வாசமாச்சேன்னு போனவருசமும் நியூ புக்லேண்ட்ஸ் போய் மேய்ஞ்சுட்டு வந்தேன். இந்தப் பயணத்திலும் வருசக்கடைசி நாளில் போனேன். பொதுவா புத்தகத்திருவிழாவில் வாங்கறதில்லை. நாம் சென்னை வரும் சமயம் புத்தகத்திருவிழா நடக்கணுமே அதைச் சொல்லுங்க. இதுவரை ரெண்டே முறைதான் திருவிழா பார்த்துருக்கேன்:(

இந்தக் கடைக்கே பட்டிக்காட்டாளுன்னா..புத்தகத்திருவிழாவில் .......அம்மாடா......... கண்ணு பிதுங்கி வெளி வராதது என் முன்னோர் செஞ்ச புண்ணியம்!
கண்ணில் பட்டவைகளைப் பார்த்து அங்கே சில அங்கே சிலன்னு பொறுக்கி வச்சுக்கிட்டு இருக்கேன். கோபால் இன்னொரு அடுக்குலே தீவிரமா என்னமோ தேடறார். என்னவா இருக்குமுன்னு பார்த்தால்............. நம்ம புத்தகங்கள் இருக்கான்னு தேடறாராம்:-)))))) தேடியது கிடைச்சதும் ஒரு (அல்ப) சந்தோஷம் அவர் முகத்தில்.

இரவில் கொஞ்ச நேரம் படிக்கன்னு தோழி வீட்டில் இருந்து சுஜாதாவின் தேர்ந்தெடுத்த கதைகள் முதல் பாகம் எடுத்து வந்தேன். தினம் ஒன்னு ரெண்டுன்னு 20 கதைகளைத்தான் படிச்சு முடிச்சுருந்தேன். நைஸா ஆட்டையைப் போட்டுருக்கலாம். தோழிதானேன்னு............. ஆனால் அதுலே சுஜாதா கையெழுத்துப் போட்டுக் கொடுத்துருக்கார். அபேஸ் செஞ்சால் நியாயமே இல்லை.

கடையில் தேடுனப்ப முதல் தொகுதி கிடைக்கலை. போனாப்போகுதுன்னு விட்டுட்டு வாங்கிய புத்தகங்கள் பட்டியலைப் பாருங்க. முட்டாய்க்கடையைக் கண்டு மிரண்டு நிற்கும் மனநிலையில் புத்தகங்களை தலைப்பின் கவர்ச்சிக்காக, அட்டைப்படத்துக்காக, மனசில் வந்துபோன எழுத்தாளர்களுக்காக, முன்னே எப்பவோ படிக்கணுமுன்னு நினைச்சதுக்காக, தெரிந்த பெயர்களுக்காக, விஷ்ணுபுரம் வாசிப்பு முடிஞ்சு தோழியுடன் சின்ன விமரிசனம் செஞ்சப்ப, 'நீங்க பின் தொடரும் நிழலின் குரல்' முதல்லே வாசிச்சுட்டு அப்புறம் விஷ்ணுபுரம் வாசிக்கனும் என்ற பரிந்துரைக்காகன்னு வாங்குனதுதான். இந்தப் பயணத்துலே கலந்துகிட்டப் புத்தக வெளியீடுகளில் வாங்கிய சில புத்தகங்களையும் கடைசியில் சேர்த்துருக்கேன்.

கடைசியில் இருக்கும் பக்திப்பரவசம் எல்லாம் கோபால் வாங்கியிருக்கார். (ஆனாலும் மனுஷருக்கு ஆழ்ந்த பக்தி இருக்கு, கேட்டோ!!)



சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் 2

பின் தொடரும் நிழலின் குரல் ஜெ.மோ

வண்ணதாசன் முத்துக்கள் பத்து

தலைகீழ் விகிதங்கள் நாஞ்சில் நாடன்

பூமியின் பாதிவயது அ.முத்துலிங்கம்

கூப்பிடுவது எமனாக இருக்கலாம் வாமு கோமு

மாலை நேரத்து மயக்கம் பாலகுமாரன்

தப்பித்தால் தப்பில்லை : சுஜாதா


டிசம்பர் தர்பார் எல்லேராம்

சாப்பாட்டு புராணம் சமஸ்

அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது எஸ் ரா

கஜராஜன் குருவாயூர் கேசவன்

பெண்ணே ரிலாக்ஸ் ப்ளீஸ்


குமுதம் வினா விடை கிருபானந்த வாரியார்

பாடிக்களித்த 12 பேர்

நலம்தரும் நாராயணீயம்

பக்தி ஸுதா

தெய்வீக துதிப்பாடல்கள்

மகாலக்ஷ்மி வழிபாடு

Learn Tamil in 30 days

Learn Himdi in 30 days


புத்தக வெளியீடுகளில் வாங்கியவை

ஒப்பனையில் ஒளிர்ந்திடும் உலகம்: முருகேசபாண்டியன்

இப்போது அவை இங்கு வருவது இல்லை: கிருஷ்ணன்ரஞ்சனா


துயில்: எஸ் ரா



சென்னை ஏர்ப்போர்ட்டில் காத்துருந்த போது வாங்குனது.

கரையோர முதலைகள் பாலகுமாரன்

இனி நேரம் உண்டாக்கிக்கணும் ஒன்னொன்னா வாசிச்சு முடிக்க. அடுத்த கொள்முதல் அநேகமா நாடு திரும்பும் சமயமாக இருக்கலாம்.


கைக்கடக்கமா ரெண்டு புத்தகப் பைகளைத் தூக்கிக்கிட்டு அடுத்துப் போனது ஒரு 'உண்மையான பெரியவர்' வீட்டுக்கு.


Friday, January 21, 2011

பேச்சு...... எங்கள் மூச்சு.

அடையார் அனந்த பத்மநாபனிடம் கொஞ்சம் 'பெர்ஸனலா பேசிக்கிட்டு' இருந்தப்ப....தோழி ஃபோன் செஞ்சு 'இன்னும் கிளம்பலையா?ன்னாங்க. 'வந்துக்கிட்டே இருக்கேன்"'னேன். சந்திப்புக்கு நொறுக்ஸ் வேணுமான்னப்ப..... நான் கிராண்ட் ஸ்வீட்ஸ் போய் கொஞ்சம் 'சமாச்சாரங்கள்' வாங்கிக்கணும் அப்படியே நொறுக்ஸ் எதாவது வாங்கினால் ஆச்சுன்னேன்.
திருவான்மியூர் மாமி வீட்டுக்குப்போய் கொஞ்சம் கதையடிச்சு (நாட்டு நிலவரம் தெரிஞ்சுக்க வேணாமா?) இன்றைய மற்ற எங்கேஜ்மெண்ட்களைச் சொன்னப்ப.... 'முந்திமாதிரி எல்லாம் நம்பர் வாங்கிக்கிட்டுக் காத்திருக்கவே வேணாம். வேணுங்கறதைச் சட்னு வாங்கிக்கலாம். அக்காதங்கை ரெண்டு பேரும் கடையை பாகம் பிரிச்சுக்கிட்டாங்க. ஒருத்தர் இனிப்பு வகைகளும் ஒருத்தர் காரப்பலகாரமுமா இருக்காம். ஆனா தயாரிப்பு எல்லாம் ஒரே இடத்தில் செஞ்சு வருது. க்ராண்டின் சரித்திர நிகழ்வு விளங்குச்சு.
குழிப்பணியாரம், அடை செய்யும் தனிச்'சந்நிதி'யின் பக்கத்தில் ஜிலேபி அடுப்பு ஒன்னு புதுசா முளைச்சுருக்கு. வியாபாரம் நடக்கும் பெரிய ஷெட் ரெண்டாய் தடுப்பு சுவர் வச்சு பிரிக்கப்பட்டு அடுத்த பகுதியில் மேஜை நாற்காலிகள் எல்லாம் போட்டு சாப்பிடும் வகையில் உரு மாற்றம்.
என்னதான் வீட்டுச்சமையல் 'மாதிரி'ன்னாலும் அடுப்படியைக் கொஞ்சம் நீட்டா வச்சுக்கக்கூடாதா என்ன?

புளிக்காய்ச்சல் ரெண்டு பாட்டில், பருப்புப்பொடி ஒரு பாட்டில் . நம்ம ஷாப்பிங் ஆச்சு. இப்போ சந்திக்கப்போகும் நண்பிகளுக்காக நொறுக்ஸா கொஞ்சம் கை முறுக்ஸ்.
திருவான்மியூருக்குப் புறப்பட்ட நிமிசம் முதல் 'எனக்கு சரியா ரோடுங்க தெரியாது மேடம். இதுக்கு முன்னே கம்பெனிக்கு வண்டி ஓட்டிக்கிட்டு இருந்தேன்'னார் ட்ரைவர். கோடி அர்ச்சனையின் பயன்! 'இது நம்ம பேட்டை. நான் வழி சொல்றேன்' னு நேரா, இடது வலதுன்னு வழி சொல்லிக்கிட்டே பெஸண்ட் நகரில் ஒரு வேலையை (என்ன பொல்லாத வேலை? தமிழ்ப்படங்கள் டிவிடி விக்கும் தள்ளுவண்டியில் பர்ச்சேஸ். சண்டிகரில் படங்கள் ஒன்னும் கிடைக்கறதில்லை) முடிச்சுக்கிட்டு திருவான்மியூர், அடையார், காந்திநகர்னு சுத்தி 'செம்மொழிப் பூங்கா'வுக்குப் போய்ச் சேர்ந்தோம்.

இப்போதைய ஸ்பெஷல்? தோழியருடன் ஒரு சந்திப்பு. இங்கே வர்றதுக்குள்ளே ரெண்டு மூணு முறை அலைபேசி அழைப்பு. வந்தாச்சா? எங்கே இருக்கே? முன்னாடியே இருங்க. வந்துக்கிட்டே இருக்கேன். குடும்பத்தோடு வர்றேன் கூட்டம் அதிகமா இருக்கு. நான் டிக்கெட் வாங்கி வச்சுடவா? இப்படித் தகவல் பரிமாற்றம். இடம் என்னவோ வழக்கமா பதிவர் சந்திப்பு நடந்துக்கிட்டு இருந்த உட்லேண்ட்ஸ் ட்ரைவ் இன் தான். புது வேஷம் போட்டுருக்கு இப்போ. அதனால் எப்படி இருக்குமோ என்ற ஆர்வம் எங்களுக்கு.

ஜே ஜேன்னு கூட்டம். வண்டியைப் பார்க் பண்ணிட்டு வந்து சேர்ந்துக்குங்கன்னு கோபாலிடம் சொல்லிட்டுத் தோழிகள் கும்பலில் கலந்தேன். குடும்பத்துடன் வந்த தோழியின் குடும்பத்துடன் இவர் தோட்டம் சுத்திப் பார்க்க எஸ் ஆகிட்டார் ஒரு சுத்துப் பார்த்துட்டு அறைக்குப் போயிடுவார். நான் அப்புறமா என் 'பேச்சை முடிச்சு(?) ஆட்டோ பிடிப்பேன். தோழி ஒருவருக்கு கால்மூட்டுப் பிரச்சனை என்றபடியால் அவரை அலையவிடாமல் முன்பகுதியிலேயே காத்துருந்து அவரைப் பிடிச்சோம். அங்கேயே ஒரு இடத்தில் உக்கார்ந்தாச்சு. மேடைமேடையாச் சுவர் வச்சுக் கட்டி இருக்காங்க. அந்தக் குட்டிச்சுவர்லே எதிரும் புதிருமா உக்காந்துக்கிட்டோம். முகம் பார்த்துப் பேசணுமுல்லெ? செயற்கை நீரூற்றுகள், லைட்டிங் எல்லாம் நல்லாவே இருக்கு.

என்னைத்தவிர மற்றவர்கள் உள்ளூர்வாசிகள்தான். ஆனாலும் சந்திக்க நேரமில்லாம ஓடும் மக்கள். இதுலே இன்னொரு தோழி வந்துக்கிட்டே இருக்கேன்னு அரைமணிக்கொரு தடவையா ரெண்டரை மணி நேரமாச் செல்லிக்கிட்டே இருக்காங்க. இதுக்கிடையில் நம்ம சீனா சார் 'செல்'லினார். 'வெளியே இருக்கேன். அறைக்குப் போனதும் பேசறேன்'னு சொன்னேன்.

ஏழரை ஆனதும் கைப்புள்ளெக்காரி நெளிய ஆரம்பிச்சாங்க. பொழுதோட வீட்டுக்குப் போய்ச் சேரணுமே. கடமைகள் காத்திருக்கே. வந்துக்கிட்டு(??) இருந்த தோழி இன்னும் வந்தே சேரலை. 'எல்லோரும் கிளம்பும் சமயம். இனிமே வந்தா ........... பூங்காவின் வாசலைத்தான் பார்க்கணும். திரும்பிப்போங்க'ன்னு சேதி சொல்லிட்டுக் கிளம்பிட்டோம். ரெண்டரை மணி நேரம் 'பேசோ பேசோ'ன்னு பேசித் தீர்த்துருக்கோம். ஆனாலும் என்னமோ சொல்ல விட்டுப்போனமாதிரி இருக்கு!

நம் தேசிய குணம். விட்டுட முடியுமா? நாடு முழுக்க ஒரு நாள் பேசத் தடா போட்டால் மக்கள் தொகை அம்பது சதம் அவுட் ஆகிரும். பேசாமயே செத்துருவோம்லெ!


இந்த கலாட்டாவில் பூங்காவைப் படம் எடுக்கணும் என்பதே சுத்தமா மறந்துபோச்சு. சுத்திப்பார்க்கப் போனவரிடமாவது கெமெராவைக் கொடுத்து அனுப்பி இருக்கலாம்:(

அதான் இருட்டிப் போச்சேன்னு சமாதானம் செஞ்சுக்கிட்டேன்.
சுட்ட படம். சென்னை ஆன்லைனுக்கு நன்றி.

பதிவர் செந்தில்குமார் எடுத்த செம்மொழிப் பூங்கா படங்கள் இங்கே. அருமையா இருக்கு. அவருக்கு என் நன்றிகள்.


அறைக்கு வந்து சீனா சாரைக் கூப்பிட்டால் 'சென்னைக்கு வந்துருக்கோம். உங்களை சந்திக்க ஆவல்'ன்றார்! மறுநாள் பகல் மூணு மணிக்கு அவருக்கு நேரம் ஒதுக்கியாச்சு.

தினம்தினம் வெளியிலே சாப்பாடு அதுவும் ஒரே ரெஸ்ட்டாரண்டுன்னா உண்மையிலேயே போரடிச்சுத்தான் போகுது. வெங்கட நாராயணா ரோடு சரவணபவன் இந்தப் பயணத்துக்கு வாய்ச்சது. பாண்டி பஸாரை விட இங்கே கொஞ்சம் சுத்தமாவே இருக்கு. இரவு சாப்பாடுக்கு அவ்ளோதூரம் போகணுமான்னு ஒரு நாள் சோம்பல். அடுத்து இருந்த அமராவதியில் 'டேக் அவே' வாங்கினோம். ஆர்டர் செய்ய உள்ளே போனப்ப எல்லா இடமும் காலியாக் கிடந்துச்சு. பத்து நிமிசம் காத்திருந்து வாங்கிவந்தோம். மெனுகார்டில் போட்டுருந்த விலைப்படி 210. ஆனால் நம்மகிட்டே வாங்கினது 325. அது பழைய மெனு கார்டாம். அம்பது சதமானம் விலை ஏற்றம்? கொள்ளைதான் போங்க:(

கொள்ளைன்னதும் இன்னொன்னு நினைவுக்கு வருது. சுற்றும் தூரம் அதிகமுன்னா ட்ராவல்ஸ் வண்டி. அக்கம்பக்க்க்க்க்க்க்ம் மட்டுமுன்னா ஆட்டோன்னு இருந்தோம். அதிலும் மலைக்குப்போக மாலை போட்டுருக்கும் ஆட்டோக்காரகள் கொள்ளை அடிப்பதில் ரொம்பவே தீவிரமா இருந்தாங்க. ஒரு கிலோ மீட்டர் தூரம் போகக்கூட அம்பது. வேணாமுன்னு தலை அசைச்சதும் பின்னாலேயே வந்து நிக்கும் சாதாரண ஆட்டோக்காரர் முப்பதுன்னுவார். ஒருமுறை தி நகர் க்ளோபஸ்லே இருந்து லஸ் சர்ச்சுக்கு 200 கேட்டார் ஒருத்தர்! அதனாலே 'மாலை போட்ட ஆட்டோ'ன்னா........ வேணவே வேணாமுன்னு வெறுப்பா இருந்தது.