Friday, March 25, 2011

நகர்வலம் போகும் நேரமிது.............



யானை மேல் குடை நிழலில் வந்த உற்சவருக்குப் பூரணகும்பம் ஏந்தி வரவேற்றார் நம்ம கோவில் குருக்கள் பிரகாஷ். வேதபாடசாலை மாணவர்கள் வேத கோஷங்கள் ஓத, ஆரத்தியெடுத்து மாலை மரியாதை, பட்டு உருமால் சாத்துதல் எல்லாம் ஆகி நம்ம கோவில் கருவறை அர்த்தமண்டபத்தில் வச்சு பூஜைகள் செஞ்சுட்டு, வசந்த மண்டபமேடையில் கொண்டுபோய் தரிசனத்துக்கு வச்சாங்க.
வேதபாடசாலை மாணவர்கள் முன்வரிசையில்
ஐய்யப்ஸ் கோவில் உள்ளே ஒவ்வொரு சந்நிதிக்கும் போய் அங்கிருக்கும் சக ஸ்வாமிகளுடன் ரெண்டொரு வார்த்தை பேசிட்டு அப்புறமாக் கருவறைக்குள்ளில் போய் முருகனுடன் நாலு வார்த்தை பேசுனார்.
தந்திரிகள் விசேஷ பூஜை செய்ய செண்டைக் கொட்டு முழங்க எல்லாம் திவ்யமா நடந்துச்சு. தீபாராதனை, தீர்த்தம் (கல்கண்டுத் தண்ணீர்) எல்லாருக்கும் கிடைச்சது. வழக்கம்போல் தீர்த்தம் வாங்கித் தலையில் தெளிச்சப்பிறகுதான் ............கையெல்லாம் பிசுக்........... :(

இதுக்கிடையில் வெள்ளைக் கொண்டைக்கடலை சுண்டல், தண்ணீர், ஏலக்காய் தட்டிப்போட்ட தேநீர் எல்லாம் விநியோகம் ஆச்சு. சரியா ஒரு மணி நேரத்தில் விஸிட்டிங் முடிச்சுட்டு டாண்னு அஞ்சரைக்குப் புறப்பட்டுட்டார் ஐய்யப்பன். போகுமிடம் வெகுதூரமில்லை. அவருடைய கோவில் பக்கத்து செக்டர்தான்.

பிரசாதம் விளம்ப, தாலப்பொலித் தட்டில் தீபம் ஏற்றன்னு நம்ம கோபால் பயங்கர பிஸியாக்கும் கேட்டோ! நம்ம கோபாலுக்கு இந்த பிரசாத விநியோகம், பந்தியில் சாப்பாடு பரிமாறுதல் எல்லாம் ரொம்பப் பிடிக்கும். சந்தோஷத்தைக் கெடுப்பானேன்னு விட்டுருவேன்.
குழந்தைக்குக் காலை மடிச்சு உக்காரத் தெரியலை:( இன்னும் சரியாப் பழக்கலை போல இருக்கு! நம்மூர் யானைகளுக்குச் செய்யும் அலங்காரமும் மிஸ்ஸிங். ஒரு ஃபேஸ் பெயிண்டிங் உண்டா? ஒரு மணி உண்டா? கையை நீட்டிக் காசு வாங்கிப் பாகனாண்டை கொடுத்தானோ? ஊஹூம்.........இவ்வளோ என்னத்துக்கு..... கோவிலில் கொடுத்த வாழைப்பழத்தைச் சரியா வாங்கி வாயில் போட்டுக்கத் தெரியலை!!!!!


தெருவின் ரெண்டு பக்கங்களிலும் மங்கையர் தாலப்பொலியோடு நடக்க, செண்டை மேளக்கார் அடிச்சு வாசிக்க, ஸ்வாமி மண்டபத்தோடு ட்ரெயிலர் உருள, கனகம்பீரமா நம்ம குஞ்ஞன் ஆனை உற்சவரையும் அவருக்குப் பிடிச்ச குடையையும் சுமந்து காலடி எடுத்து வச்சு நடக்கன்னு........... எல்லாம் கேமமாயிருந்நு!

நல்ல தெரக்கு. இத்தரை மலையாளிகளோ??? அதும் ஈ நேரத்து..........
ஊர்வலத்துக்குப் பாதுகாப்பா ஒரு வேன் நிறைச்சு சண்டிகர் போலீஸ் வந்து இறங்கி அவுங்க பாட்டுக்குக் கதையடிச்சுக்கிட்டு இருந்தாங்க கோவில் மைதானத்துலே! உள்ளூர் பத்திரிகை போட்டோகிராஃபர்கள் பெரிய பெரிய கேமராக்களுடன் பாய்ஞ்சு பாய்ஞ்சு படம் எடுத்துக்கிட்டு இருந்தாங்க. வரிசையில் தாலப்பொலி ஏந்தி நிற்கும் மங்கையரை பயங்கரமா zoom செஞ்சு எடுத்துக்கிட்டு இருந்தாங்க. மறுநாள் சண்டிகர் நியூஸ்லைனில் சுண்டுவிரல் அளவு ஒரு படம் வந்துச்சு:(
ஐய்யப்பன் கோவிலில் இந்த மூணு நாளும் பகல் இரவு ரெண்டு நேரமும் பப்படம், ப்ரதமன், அவியலோடு சத்யா. கச்சேரிகள்னு கொண்டாட்டம். கோவில் முன்பக்க மைதானத்தில் துணிக்கூடாரம், மேடை எல்லாம் வடக்கத்தி ஸ்டைலில் அமைச்சுருந்தாங்க. கூடாரத்தில் சரவிளக்குகள் கூடப் போட்டு வைக்கிறாங்க இந்தப் பக்கங்களில். தமிழ்நாட்டில் இப்படிக் கூடாரங்கள் அமைச்சுத் தரைவிரிப்பெல்லாம் போட்டு நான் பார்த்ததே இல்லை. ரசிகர்கள் உக்கார உறைபோட்ட நாற்காலிகள். தில்லி பஞ்சவாத்ய ட்ரஸ்ட் ஏற்பாடு செஞ்சுருந்த கதகளி, மோஹினியாட்டம், ராஜஸ்தானி பாவா டான்ஸ், மணிப்புரி டான்ஸ்ன்னு இருந்துருக்கு. நமக்குக் காணக் கிடைக்கலை.
மஹாகணபதி ஹோமம், ஸ்ரீசுதர்சன ஹோமம், சர்ப்பபலி, ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம், விளிச்சிச்சொல்லி ப்ராயச்சித்தம் பகவதி சேவான்னு பலவித பூஜைகள் நடந்துருக்கு.

கடைசி நாள் மட்டும் கொஞ்சநேரம் போயிருந்தோம். விளக்கு பூஜை நடந்துக்கிட்டு இருந்துச்சு. ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் அர்ச்சனை. மைக்கில் நம்பூதிரி ஓவ்வொன்னாச் சொல்லச்சொல்ல பக்தர்கள் திருப்பிச் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. நாமும் கலந்தோம்.

கோவிலின் முன்பக்கம் பெரிய ஹால் .ஹாலுக்கு அந்தப்பக்கம் ஓட்டுக்கூரைகள் போட்ட மூணு சந்நிதிகள். முன்வாசலுக்கு நேரா இருக்கும் சந்நிதி ஐயப்பனுக்கு. ரெண்டு பக்கமும் இடுப்பளவு கம்பித்தடுப்புப் போட்டு அதனிடையில் வரிசையா நடுத்தர சைஸில் கேரள வகைக் குத்து விளக்குகள். வாசல் பக்கம் ஒரு ஏழடுக்குப் பித்தளை விளக்கு. சந்நிதிக்கு முன்னால் ஆள் உயரக் குத்துவிளக்குன்னு எல்லாம் அம்சமா இருக்கு. ஐய்யப்பனுடைய இடது பக்கம் சந்நிதியில் பகவதி. வலது பக்கம் சந்நிதியில் புள்ளையார். புள்ளையாருக்குப் பக்கம் சின்ன மரத்தின் சுவட்டில் கல் பாம்புகள் நாலு. (ஸர்ப்பக்காவு)

இன்னிக்கு மூவரும் சந்தனக்காப்பில் ஜொலிச்சுக்கிட்டு இருந்தாங்க. சந்நிதியின் வெளிப்புறச் சுவற்றில் பிடிப்பிச்சு இருந்த அகல்விளக்குகளையெல்லாம் ஏற்றியிருந்தாங்க. சந்நிதி வாசலை சுத்தி இருந்த விளக்குகளும் எல்லாக் குத்துவிளக்குகளும் ஏற்றி அந்த இடம் பூராவுமே அமைதியான அழகோடு சொல்ல முடியாத மனநிறைவு தந்தது.

ஒரு டீ கெட்டிலில் எண்ணெய் ஏந்திய நபர் ஒருமுகமான கவனத்துடன் தேவையான விளக்குகளுக்கு எண்ணெயை ஊத்திக்கிட்டே இருந்தார். இன்னொருவர் பெரிய தாம்பாளத்தில் உதிரிப்பூக்களுடன் விளக்குப்பூஜை செய்யும் பெண்களுக்கு, அவர்கள் தட்டில் பூக்கள் குறையக்குறைய அதை நிறைவு செஞ்சுக்கிட்டு இருந்தார். எல்லாம் பயங்கர சிஸ்டமேடிக்கா நடத்தறாங்க.

கோவிலுக்குள் கடைப்பிடிக்க வேண்டிய நியதிகள் ஒரு போர்டில் எழுதி வச்சுருக்காங்க. சொன்னால் நம்ப மாட்டீங்க. எட்டுக்கட்டளையில் முதல் விதியே 'பகவான் கா ஃபோட்டோ லேனா மனா ஹை! ஆஹா...... பாடில்லா.............. ஆய்க்கோட்டே:(
மற்ற எதுக்கும் காத்திருக்காமல் நம்ம முருகன் கோவிலுக்கு வந்தோம். பங்குனி உத்திர ஸ்பெஷலைக் கொஞ்சமாவது பார்க்கணுமே. கோவில் மைதானத்தில் ஹோலிகா எரிஞ்சுக்கிட்டு இருந்தாள். வளாகத்தில் இருக்கும் லக்ஷ்மிநாராயணன் கோவில் நிகழ்ச்சி. நம்ம கோவிலுக்குள்ளில் மயில் வாகனத்தில் ஏறி பிரகாரம் சுற்றி ஆற அமர ஓய்வெடுக்கும் உற்சவர்கள்.
ரொம்பப் பக்க்க்க்க்க்க்க்க்க்கத்தில் நின்னு தரிசனம் செஞ்சேன்.
கோவில் மேடையில் ஒரு பக்கம் சத்தியநாராயணா பூஜை நடந்துக்கிட்டு இருந்துச்சு. வழக்கமா இருக்கும் கூட்டம் மிஸ்ஸிங். ஒரே சமயத்துலே எல்லாம் நடந்தால் ஜனங்க எங்கேன்னு போகும்?


வழக்கமா ஒவ்வொரு பவுர்ணமிக்கும் மாலையில் நடக்கும் கிருஷ்ண மாரியம்மனுக்கான அபிஷேகம் ஆரம்பிச்சது.பொறுமை காக்க முடியாதாம், கோபாலுக்கு. எதோ வேலை இருக்காம். வீடுவந்து சேர்ந்தோம். இந்த கலாட்டாவில் பெரிய நிலவை விட்டுட்டேன். சாஸ்த்திரத்துக்கு நம்ம மொட்டை மாடியில் இருந்து நாலு க்ளிக்.

16 comments:

said...

ஆஹா.... அருமை.

said...

super pics:)

said...

படங்களும் ஹோலிகாவும் சூப்பர். சூப்பர் மூனையும் அனுப்பி இருக்கலாமே துளசி.
எதுக்கு இந்த சர்ப்ப காவு?
நாக பூஜையா. முருகன் அழகு அள்ளிக் கொண்டு போறார்.

said...

யானை எப்படியிருந்தாலும் அழகாத்தான் இருக்குன்னாலும், குறைஞ்சபட்சம் மணியையாவது கட்டிவிட்டுருக்கலாம்.

பழமொழியை பொய்யாக்கலாமோ
:-))))))

said...

அருமையான
நகர்வல தரிசனம்

said...

"...பிரசாதம் விளம்ப, தாலப்பொலித் தட்டில் தீபம் ஏற்றன்னு நம்ம கோபால் பயங்கர பிஸியாக்கும் கேட்டோ! நம்ம கோபாலுக்கு இந்த பிரசாத விநியோகம், பந்தியில் சாப்பாடு பரிமாறுதல் எல்லாம் ரொம்பப் பிடிக்கும்..."

நல்ல விடயம், சமூக அக்கறை மகிழ வைக்கிறது

said...

வாங்க சித்ரா.

நன்றிப்பா.

said...

வாங்க சமுத்ரா.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க வல்லி.

நாகபூஜையாத்தான் இருக்கணும். கேரளக் கோவில்களில் சர்ப்பக்காவு கட்டாயம் இருக்கும்.

உண்மைக்கும் இங்கே முருகன் நல்ல அழகுப்பா!!!!

said...

வாங்க அமைதிச்சாரல்.

இந்திக்காரவுகளுக்குத் தமிழ்(பழ)மொழி எப்படிப்பா தெரியும்?
கட்டாயப்படுத்தலையே நாம்!

யானைக்கு மணி கட்டுவது யார்????????

said...

வாங்க ஹரி.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

said...

வாங்க டொக்டர் ஐயா.

உங்க பின்னூட்டம் பார்த்து கோபாலுக்குப் பரம திருப்தி!

said...

குழந்தைக்கு உட்காரத் தெரியலைத்தான் பாவமா இருக்கு.

”கதகளி, மோஹினியாட்டம், ராஜஸ்தானி பாவா டான்ஸ், மணிப்புரி டான்ஸ்ன்னு” நாங்களும் மிஸ்பண்ணியிட்டோம் :(

அப்புறம் கிடைக்காமலா போகும் பாத்திடுவோம்.
இவ்வளவு ஊர் சுற்றுகிறோமே:)

said...

அன்புடன் அருணாவிடமிருந்து ......

சூப்பர்!
என்னங்க மார்ச் மாதக் கடைசிலெ ஜெய்ப்பூர் வரேன்னு சொன்னீங்களே ஒண்ணும் தகவலைக் காணோம்?


PIN குறிப்பு: அவுங்க மெயில் ஐடி இருந்ததால் பின்னூட்டத்தை வெட்டிக் காப்பி அண்ட் பேஸ்ட் செஞ்சுருக்கேன்.

said...

வாங்க மாதேவி..
பொடியனை இன்னும் பழக்கலைப்பா. ஆனால் அதுவும் நல்லதுக்குத்தான். யானை யானையாவே வளரட்டும்.

said...

வாங்க அன்புடன் அருணா.

தனிமடல் பாருங்க:-)