Monday, June 18, 2012

மஹா 'கனம்' பொருந்திய ஶ்ரீ செல்வ விநாயகர் (ப்ரிஸ்பேன் பயணம் 4)

இன்னிக்கு ஒரு குடை வாங்கிக்கணும். இதென்ன விடாம இப்படி விட்டுவிட்டு மழைன்னு அலுப்பு, காலையில் பால்கனி கதவைத் திறந்து அடங்கி இருக்கும் நகரைக் க்ளிக்கி வச்சுக்கிட்டேன். பிற்கால 'பிட்' போட்டிக்கு எதாச்சும் கிடைக்குமோ என்ற ஆவலாதி.

சண்டிகர் முருகன் கோவில் ராஜகோபுரம் கட்டி இன்னிக்குத்தான் கும்பாபிஷேகம். மனசெல்லாம் அங்கேயே வட்டம் போடுது. நல்லபடியா நடக்கணுமேன்னு 'அண்ணனை' 'வேண்டிக்கணும். ஏழரைக்குக் கிளம்பினால் சரியா இருக்கும். 40 கிலோ மீட்டர் தூரம்தான். நமக்கு வழி மறந்து போச்சு. மௌண்ட் லின்ட்ஸே ஹைவேயில் சௌத் மக்லீன் என்பதுமட்டும் நினைவிருக்கு. கோவில் வலைப்பக்கத்தைப் பார்த்தால் சரியா ஒன்பது மணிக்குப் பூசையாம்.

இந்தியாவுக்கும் ப்ரிஸ்பேனுக்கும் நாலரை மணி நேர வித்தியாசம். அப்போ இங்கே காலை ஒன்பதுன்னா அங்கே அதிகாலை நாலரை! ஆஹா..... அந்த நேரத்துக்குதான் சண்டிகர் கோவில் கும்பாபிஷேகம் ஆரம்பிக்குது. இன்னிக்கு வைகாசி விசாகம் வேற! அட்டகாசமா அமைஞ்ச நாளை விட்டுறக்கூடாது.


வண்டியை வெளியே எடுத்துக் கிளம்பும்போதே மணி எட்டு. ஞாயிறு என்பதால் அவ்வளவாக ட்ராஃபிக் இல்லை. கோவில் வாசலை முந்தி மாதிரி தவறவிட்டுறப்போறோமுன்னு நினைக்கும்போதே..... கண் முன் தெரியுது கேட்! முன்பக்கம் இருந்த செடிகொடிகளையும் புதர்களையும் நீக்கி சரி செஞ்சுருக்காங்க. அரக்கப்பரக்க வண்டியில் இருந்து இறங்கி கோவிலுக்குள் போகும் பாதையில் ஓடினால்.... ரெண்டு மயில்கள் சாவகாசமா  'அன்ன நடை ' நடந்து போகுதுகள். ஆஹா......


கோவிலுக்குள்ளே நுழைஞ்சால்...... 'சாமி 'இல்லை!!!!! அடராமா..... எங்கே போனீர்? எம்மைப் பார்க்க பயமோ?


சாமி மேடைகள் எல்லாம் காலி, கலசச்செம்புகள் மட்டும் கூட்டமா தரையில் ஒரு திருவாச்சி மட்டும் தனியே! ரெண்டு மூணு பேர் சாமான்களைச் சேகரிச்சுக்கிட்டு இருக்காங்க.



புதுக்கோவில் வரப்போகுது. நேற்றுதான் யாகம் எல்லாம் செய்து, எல்லா கடவுளர்களையும் எதுத்தாப்போல இருக்கும் ஷெட்டுக்கு இடம் மாற்றினார்களாம். ஷெட்டை நோக்கிப் பாய்ஞ்சோம். ஷெட்டுக்குப் பக்கத்தில் சின்னதா புள்ளையார் சந்நிதி. கும்பிடுபோட்ட கையுடன் ஷெட்டுக்குள் நுழைஞ்சால் ரெண்டடி உசரம் இருக்கும் நீ.....ள மேடையில் நடுநாயகமா செல்வ விநாயகரும் அவருக்கு வலப்பக்கம் தேவியருடன் ஸ்ரீ நாராயணன், பிரம்மா, சரஸ்வதி, ஆஞ்சநேயர். புள்ளையாருக்கு இடது புறம் தட்சிணாமூர்த்தி, உமை. வள்ளி தேவானையுடன் முருகன் , அமிர்தகதேஸ்வரர், துர்கை, பைரவர் சிலைகளுமா இருக்காங்க.




எல்லோரும் ஒரே வரிசையில் தான். நாரதருக்கு வேலை மிச்சம். தனித்தனியா சத்யலோகம், விஷ்ணு லோகம், கைலாசம் இப்படி எந்த லோகத்துக்கும் போக வேணாம்:-) மூட்டும் கோளை கால்வலிக்காமல் மூட்டலாம். நாராயணா நாராயணா......

நமக்கு வலப்பக்கம் ஒரு பெஞ்சுலே உற்சவர்கள் எல்லோரும் நால்வருடன் நிற்கிறார்கள். ஷெட்டின் நுழைவு வாசலுக்கு வலப்பக்கம் சின்ன மேடையில் நவகிரகங்கள். குருக்கள் வந்து பேருக்கு தொங்கும் திரையை விலக்கிப் பூஜையை ஆரம்பித்தார். பத்தே நிமிஷம். எல்லாம் ஆச்சு.


போன முறை பார்த்த குருக்கள் இவரில்லை. கொஞ்சம் குசலம் விசாரிப்பு. புதுசாக் கோவில் கட்ட ஏற்பாடுகள் எல்லாம் முடிஞ்சு போனவாரம் தமிழ்நாட்டுலே இருந்து ஸ்தபதிகள் குழு வந்தாச்சு. திரு செந்தில் என்பவர் தலைமை ஸ்தபதி. அவருடன் இன்னும் நால்வர் வந்துருக்காங்க. ஒரு வருஷத்தில் கட்டி முடிச்சுருவோம் என்றார் செந்தில். இடமிருந்து ரெண்டாவதா நிற்பவர் தலைமை ஸ்தபதி திரு செந்தில்.



கோவில் வரைபடம் (முகப்பு, பக்கவாட்டு தோற்றங்கள் எல்லாம் உள்ளவை) பார்த்தோம். அட்டகாசமா இருக்கு. 642 ஆயிரம் டாலர்கள் பட்ஜெட். இதுவரை மூணில் ஒரு பாகம் சேர்த்தாச்சு. இன்னும் ரெண்டு பாகத்துக்குப் புள்ளையார் வழி பண்ணிக்கணும். பண்ணிக்குவார். சந்தேகம் எதுக்கு?
 

1983 வது ஆண்டு சில தனிநபர்களின் வீடுகளில் புள்ளையார் பூசை என்று ஆரம்பிச்சுருக்கு. கொஞ்சநாளில் வீடுகளை விட்டுட்டு சின்ன ஹால்களில் வாரம் ஒரு நாள் எல்லோரும் சேர்ந்து கூடிக் கும்பிட்டு வந்தாங்க. கோவில் ஒன்னு கட்டணும் என்ற ஆசையும் தேவையும் கூடிப்போனதால் அதுக்குன்னு ஒரு கமிட்டி அமைச்சு 1986 வது ஆண்டு ஹிந்து ஆலய சங்கம் என்ற பெயரைப் பதிவு செஞ்சாங்க. பொருத்தமான இடம் தேடுனதில் இப்போ இருக்கும் இந்த நாலரை ஏக்கர் இடம் கிடைச்சது, சங்கம் ஆரம்பிச்ச நாலாவது வருசம் 1990. பண வசூல், கோவில் கட்டுமான திட்டம். கோவில் கட்டிக்க பெர்மிட் அது இதுன்னு மூணு வருசம் ஓடிப்போயிருச்சு.

1993 ஜூனில் அடிக்கல் நாட்டி அஸ்திவாரம் போட்டுருக்காங்க. ஒரே ஒரு பெரிய ஷெட். செங்கல் சுவர்கள். முன்பக்கம் சின்னதா ஒரு மூணு நிலை கோபுரம். 1995 வது ஆண்டு ஃபிப்ரவரி மாசம் அஞ்சாம் தேதி(!!!) முதல் முறையாக் கும்பாபிஷேகம் நடந்து புள்ளையார் ஜாம் ஜாமுன்னு குடி வந்துட்டார்.

 கோவில் வரக்காரணம்  இலங்கைத் தமிழர்கள் என்பதையும் சொல்லிக்கறேன்.



போன முறை பார்த்ததை விடச் சில முன்னேற்றங்கள் கோவிலில் வந்துக்கு. முதலாவதா நாம் பார்த்த மயில்கள். மொத்தம் ஆறு இருக்காம். தனியா ஒரு ஷெட் போட்டு அங்கே காண்டீன் ஆரம்பிச்சு இருக்காங்க. ஞாயிறுகளில் மட்டும் நடக்குதாம். போர்டு வச்சுருக்காங்க. படங்கள் பார்த்தாவே தின்னே தீரணும் போல இருக்கு!



அடிக்கும் மழையைச் சட்டை செய்யாம கூடாரத்துக்குள் நுழைஞ்சோம். வாசலில் ரெண்டு மூணு அட்டைப்பெட்டிகளில் சினிமா டிவிடிகள். ஆசையோடு தேடுனதில் எல்லாமே ஹிந்திப்படங்கள்:( மருந்துக்கு ஒரு தமிழ்? ஊஹூம்......:(




பழைய படங்கள்தான் எல்லாமே! ஒன்னு ஒரு டாலர். கோவிலுக்குக் காசு போகுது. நாமும் ஒரு நாலு வாங்கிக்கிட்டோம். வீடுகளில் முக்கியமானவைகளைத் தயார் செஞ்சுக்கிட்டு வந்து இங்கே இட்டிலி, தோசை, பூரி, வடைகள் தயாரிச்சு விளம்புறாங்க. ஆரம்பிச்சு ரெண்டு வருசம் ஆகுதாம். கீழே படத்தில் உள்ளவர் நிர்வகிக்கிறார்.

வடைப்ரேமிக்கு புள்ளையாரே மசால்வடை ஏற்பாடு செஞ்சுட்டாரேன்னு மகிழ்ந்து போனேன். வடை மட்டும் வாங்கிக்கலாமுன்னா.... டேக் அவே ஆப்ஷன் இருக்காமே. பகல் சாப்பாட்டுக்கு வாங்கிட்டுப் போகலாமுன்னு கோபால் ஆசைப்பட்டு கா.மா. போலே கம்பங்கொல்லையில் விழுந்தார்.


இட்டிலி ரெண்டு செட், மசால் தோசை ரெண்டு செட், பூரிக்கிழங்கு(மகளுக்கு) உளுந்து வடைகள். பருப்பு வடைகள்ன்னு ஏகத்துக்கும் ஆர்டர் கொடுத்து பில் போட்டு பணம் கட்டியாச்சு. இததனை ஆர்டர்கள் வருமுன்னு எதிர்பார்க்கலையோ என்னவோ.... பொதிஞ்சு கொடுப்பதில் ஏகப்பட்ட தடுமாற்றங்கள். வடைப் பொதியை மட்டும் தனியா எடுத்து வச்சுக்கிட்டார்.


இன்னொரு குடும்பத்தைக் கோவிலில் சந்திச்சோம். மூணு மாசக் கைக்குழந்தையுடன் வந்துருந்தாங்க. தூத்துக்குடின்னதும், என் நெருங்கிய தோழி வீரபாண்டிப்பட்டினமுன்னு சொன்னேன். குழந்தையின் அப்பா மூர்த்தி இங்கே சிலவருசங்களா இருக்காராம். மனைவி லக்ஷ்மிப்ரபா. எவ்வளவு அழகான பெயர்! ரசனையுடன் பெயர் வச்ச அம்மாவைப் பாராட்டணும். மூர்த்தியின் தம்பி செந்திலும் அவர்கூட இங்கே இந்த ஊரில் வேலை செய்யறார். குழந்தை பிறப்புக்கு உதவியா இருக்க ஒரு ஆறுமாசத்துக்கு வந்துருக்காங்க மூர்த்தியின் பெற்றோர்.

 

முதலில் பிரபாவின் அம்மா என்றுதான் நினைச்சேன். மாமியார் என்று தெரிஞ்சதும் ஏகப்பட்ட மகிழ்ச்சி. காலம் மாறிவருது! மருமகள்தான் மகளைக் காட்டிலும் ஒசத்தின்னு நம்ம ரெண்டு பைசாவைச் சொல்லிவச்சேன்:-))))

நாங்க தூத்துக்குடி மாவட்டம் என்று மூர்த்தியின் அப்பா சொன்னதும், மாவட்டத்தில் எங்கேன்னேன். கோவில்பட்டி.

அட! கடலமுட்டாய்ன்னு நான் சொன்னதும் அவர் முகம் மலர்ந்து போச்சு. கூடவே லேசா ஒரு வாட்டம். எல்லாக் கடையிலும் கேட்டுப்பார்த்தாச்சு. கடலமுட்டாய் கிடைக்கலைன்னார். அடப்பாவமே..... பேசாம வீட்டுலே(யே) செஞ்சுக்குங்கன்னு ஆறுதல் வழங்கினேன்.

அவருக்கு எப்போ ஊருக்குப்போவோமுன்னு இருக்காம். இங்கே ரொம்ப போர் அடிக்குதுன்னார். ஆண்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்குதான். அப்பப் பெண்களுக்கு?

அதான் பொழுதுபோக்க அடுப்பு இருக்கே! எங்கே போனாலும் ஆக்கிப்போட்டே வாழ்க்கை போயிருது. இடம் வேறயே தவிர தொழில் அதேதான்.

  நம்ம வீட்டில் அண்ணனும் அண்ணியும் மகள்கள் வீட்டுக்கு அமெரிக்கா போய்வந்தாலும் இதே கதைதான். அங்கே இடதுபக்க ட்ரைவிங் என்பதால் காரை எடுத்துக்கிட்டுத் தனியா எங்கியும் போகவும் முடியாது. முக்கியமா சாலை விதிகளைக் கடைப்பிடிக்கணுமே! சிங்காரச்சென்னை மாதிரி வருமா?


கோவிலில் கொஞ்சம் செடிகளை விற்பனைக்கு வச்சுருக்காங்க. பாவம் புள்ளையார் பணம் சேர்க்க செய்யாத வியாபாரமில்லைன்னு இருக்கார் போல! தளதளன்னு பசுமையா, அப்பதான் பறிச்ச கருவேப்பிலைக் கொத்துகள் அங்கே வச்சுருந்தாங்க. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இலவசமா அள்ளிக்கிட்டுப் போகலாமாம். ப்ரிஸ்பேன் நகரில் வசிக்கமுடியலையேன்னு எனக்கு மகா பொருமல்:(

போனமுறை கோவில் விசிட் இங்கே! 

தொடரும்.........:-)

29 comments:

said...

அட
உங்களுக்கு மட்டும் எப்படியும் ஒரு கோவில் எல்லா ஊர்லயும் மாட்டிடுதே
எந்த ஊரா இருந்தாலும் கோவில் பிரசாதம் என்றாலே தனி சுவை தான்.அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு கோவிலில் buffet முறையில் பிரசாதம் தருகிறார்கள்.சனி ,ஞாயிறில் இதற்காகவே கும்பல் அள்ளும்.

said...

வாங்க விஜி.

கூட்டம் சேர்க்க இப்படி(யும்) ஒரு உபாயம் இருக்கே!

சிட்னி பெருமாள் கோவிலிலும் வீக் எண்ட் பயங்கர கூட்டம் இந்த கேன்டீனுக்காகவே!!!

சுவை நல்லா இருந்துச்சு.

தமிழ்மணத்துக்கு என்னவோ ஆயிருக்கு. காணோம்!!!!!

said...

செல்வ விநாயகரும் புதுவீட்டில் குடியிருக்கப் போகின்றார்.

வீடு நல்ல பெரிதாக இருக்கின்றது.:)

said...

/பிற்கால 'பிட்' போட்டிக்கு / நிச்சயம் கை கொடுக்கும்:)!

நாரதர் கலகம் நன்மையில்தானே முடியும்? சுலபமா வேலையை முடிச்சாருன்னா பூமிக்கு நல்ல காலம் பொறக்கட்டும்:)!

அன்ன நடை போடும் ஆறுமுகனார் வாகனங்கள் அழகு! சண்டிகர் முருகன் கோவில் கும்பாபிஷேகமும் சிறப்பாக முடிந்திருக்குமென நம்புகிறோம்.

said...

எங்கே இருந்தாலும் நமக்கு ஒரு கோவிலும் வேண்டிருக்கே....

அழகா சொல்லி இருக்கீங்க....

தில்லியில, கொஞ்சம் கொஞ்சமா ஆரம்பிச்சு தென்னிந்தியக் கோவில்கள் ஐம்பதைத் தொடப்போகுது!

said...

டீச்சர், வந்தேன்-ரசித்தேன்- வடை ருசித்தேன்.

:-)

said...

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்னு பிரசாதங்களை மனசுல வெச்சித்தான் சொல்லீருக்கனும் :)

திருச்செந்தூர் புட்டமுது
பழநி பஞ்சாமிர்தம்
ஸ்ரீரங்கப் புளியோதரை
அழகர்கோயில் ரவைத்தோசை
சுவாமிமலை சர்க்கரைப்பொங்கல்/வடை
திருப்பதி லட்டு (இப்போ அவ்ளோ சுகமில்லை)

இப்படி வகைவகையா ஆராய்ச்சிகளைச் செஞ்சு நம்ம மக்கள் பெருஞ்சேவை செஞ்சுக்கிட்டிருக்காங்க. :)

பிறர் செய்யும் சாதங்களைப் பிற சாதங்களாகக் கருதாமல் பிரசாதங்களாகக் கருதும் நம்மைப் போன்றோரின் நல்ல உள்ளங்கள் வாழ்க.

தூத்துக்குடி-கோயில்பட்டி.. என்னடா நம்ம பக்கத்து மக்களாயிருக்காங்களேன்னு பாத்தேன். :) கோயில்பட்டிக்கு கூடிய விரைவில் போக வேண்டி வரும். கடலை மிட்டாய் வாங்கீர வேண்டியதுதான். :)

said...

ரீச்சர்

க்ளாசுக்கு லேர்ரா வந்ததுக்கு மன்னிக்கவும். பெண்களூர் விஜயத்தில் இருக்கேன்.

மொதல்ல ஒரு மேட்டர். அதி ஆவல்ன்னு சொல்வதை ஆவலாதின்னு சொல்லலாமோ? ஆவலாதி பொதுவா கொஞ்சம் எதிர்மறையா சொல்லிதான் கேட்டு இருக்கேன்.

கம்ப்ளெயிண்ட்ன்னு ஒரு அர்த்தம் வேற இருக்கே! (ஒரு வேளை அதனாலதானா?) ஆவல் என்ற பொருள் வரும்படி ஆவலாதின்னு சொல்லி கேட்டது இல்லை. அதனாலதான் இந்தக் கேள்வி.

எங்க வீட்டிலேயும் மாமனார் வந்தா ரொம்ப போர் அடிச்சுப் போயிடுவார், மாமியார் சமையல் குழந்தைகள்ன்னு செட்டில் ஆயிடுவார். பழைய வீடுன்னா பக்கத்திலேயே ரயில். அதைப் பிடிச்சு நியூயார்க் போவார். அது இப்போ இல்லை எங்க போகணும்னாலும் நானோ தங்கமணியோ கார் ஓட்டணும். அதனால கடுப்பாயிடுவார். வீவீவா!! :))

said...

தமிழ்மணம் காணோம் ! எங்க போய்ச் சொல்றது.
அங்க ஒரு கும்பாபிஷேகம். இங்க அண்ண கோவிலா. சரிதான். வடை அரசியும் மன்னனும்னு தலைப்பு வச்சிருக்கணும்.
பிப்ரவரி அஞ்சாம் தேதி நல்ல நாளே. அன்னிக்கா கட்ட ஆரம்பிச்சாங்க:)
மயிலுகளும் ,குட்டிப்பாப்பா குடும்பமும் அழகு.

said...

ஆஹா நேரடியாகவே பார்ப்பதுபோல
அத்தனை தெளிவான படங்கள்
அருமையான விளக்கம்
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

said...

//ஆவலாதி//

இந்த வார்த்தைக்கு திருனேலி பக்கத்துல 'குறை, குறை சொல்லுதல்'ன்னு அர்த்தமுண்டு.

எங்கே?.. எங்கே?னு அலையறதை நாஞ்சில் பக்கத்துல 'அலவலாதி'ன்னு சொல்லுவோம். ஆனா அது ஒரு பேட் வார்த்தை யூ நோ :-)

அன்ன நடை பழகும் மயில்கள் அழகு. அம்மணிகளை வீட்டுல விட்டுட்டு ஐயாக்கள் ஜாலியா வாக்கறாங்க :-))

said...

அழகான படங்களோடு, துல்லியமாய் விவரங்கள் தருவது உங்கள் பதிவின் தனித்துவம். இப்போதும் அப்படியே... பிரிஸ்பேன் கோயில் பற்றிய பழைய பதிவையும் படித்தேன். காக்கா கத்துவதைக்கூட அழகாய் பிரஸ்தாபிக்கும் உங்கள் ரசனை என்னை வியக்கவைக்கிறது. இங்கு வந்த புதிதில் பிரிஸ்பேன் காக்காவின் ஆ... ஆ... என்ற கரையலைப் பற்றி ஊருக்குப் பேசும்போதெல்லாம் சொல்லி சொல்லி வியந்ததை நினைத்து சிரித்துக்கொள்கிறேன். படங்களுக்காகவும் பதிவுக்காகவும் பெரிதும் பாராட்டுகிறேன்.

said...

வாங்க மாதேவி.

வீடு பெரிதானால் நல்லதுதான். ஏகப்பட்டவர்கள் உண்டு. பெரிய கூட்டுக்குடும்பம்.!

மனுசனுக்கு அந்தக் கொடுப்பினை இல்லை பாருங்க:(

said...

வாங்க ராமலக்ஷ்மி.

உண்மைதான். பூமிக்கு நல்ல காலம் பொறந்தால் சரி.

இன்னும் சண்டிகர்கோவிலின் வலைப்பக்கம் புதுப்பிக்கப்படலை.
ஒரு வருசமா ஆடிஆடி ஓய்ஞ்சு போயிட்டாங்க போல. கொஞ்சநாள் ஓய்வும் தேவைதானே:-)))))

ஒருநாள் ராஜசேகரிடம் தொலைபேசிக்கணும்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அட! அம்பது கோவில்களா?

எங்களுக்குத்தான் இங்கே விடிவு காலம் வரலை.

அதென்னமோ சாமி கிறைஸ்ட்சர்ச்சுக்கு லேசில் வரமாட்டேங்கறார்:(

நிலநடுக்க விவகாரம் அவருக்கும் தெரிஞ்சு போயிருக்கு!

said...

வாங்க நன்மனம்.

உங்க நல்ல மனதை நானும் ரசித்தேன்:-)

said...

வாங்க ஜீரா.

அதென்ன அழகர்கோவில் ரவைதோசை? அது கல்தோசை இல்லையோ?

அந்தக்காலத்துலே என்னமா ஆராய்ச்சி செய்து எப்படியெல்லாம் பிரசாதங்களைக் கண்டுபிடிச்சு அததற்கு அததுன்னு ஒதுக்கி வச்சதுமில்லாம இன்றுவரை பாரம்பரியமா சமைச்சு நிவேதனம் பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு நினைக்கும்போது.....
வியப்புதான்.

இதுலே ஒவ்வொரு பண்டிகைக்கும் வெவ்வேற பலகாரங்கள்!!

said...

வாங்க கொத்ஸ்.

பெண்களூரில் அனைவரும், குறிப்பா பெண்கள் அனைவரும் சுகம்தானே?

ஆவலாதி என்பதற்கு அற்பத்தனம், அலையும் டைப் என்றெல்லாம் கூடப் பொருள் உண்டு.

ஆவல் அதிகமாப்போயி அலைவதைத்தான் சொல்றாங்களோ:-))))

வாசப்படிகள் எல்லோருக்கும் இப்படி ஒன்னாகிப்போச்செ!

said...

வாங்க வல்லி.

தலைப்புக்கு நன்றி. எடுத்துவச்சுக்கிட்டேன். குச் காம் கோ ஆயேகா:-)))

இன்னொரு மயில் அடக்கமா போஸ் கொடுத்துச்சு. அதைப் பதிவில் போட விட்டுப்போச்சு. அதுக்காக சும்மா விட முடியுமா?
அடுத்த பதிவில் நுழைச்சுடணும்:-))))))

said...

வாங்க ரமணி.

வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றிகள்.

கால் வலிக்காமக் கூட்டிப்போவேன் கேட்டோ:-))))

said...

வாங்க அமைதிச்சாரல்.

டீச்சர் பேட் வார்த்தை சொல்றாங்கன்னு இப்படிப் போட்டுக் கொடுக்கலாமா? உங்க பின்னூட்டம் பார்த்ததும்தான் நினைவுக்கு வருது..... அங்கே மயிலன்கள் மட்டுமே கண்ணில் பட்டாங்க என்பது!

மயிலிகளைக் காணோமே;(

அவுங்களுக்கும் வீட்டு(லே) வேலையோ?

said...

வாங்க கீதமஞ்சரி.

வித்தியாசமான கரைதல்தான் அது!!!!

கவனிச்சுச் சொல்லி இருக்கீங்க நீங்களும்.

பாராட்டுகளுக்கு மனமார்ந்த நன்றி.

said...

இக்கோயில் வரக் காரணம் இலங்கைத்தமிழர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். பொதுவாக இலங்கைத்தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் கட்டும் கோயில்கள் விநாயகர், பிள்ளையார், அம்மன், முருகன், சிவன் என்ற பெயர்களில் இருக்கும். இந்தியவைச் சேர்ந்தவர்கள் கட்டும் கோயில்கள் சிவா விஸ்ணு, கணேஸ், மீனாட்சி, சிவா மந்தீர் என்ற பெயர்களில் இருக்கும்.

said...

துளசி கோபால் said...
வாங்க விஜி.

கூட்டம் சேர்க்க இப்படி(யும்) ஒரு உபாயம் இருக்கே!

சிட்னி பெருமாள் கோவிலிலும் வீக் எண்ட் பயங்கர கூட்டம் இந்த கேன்டீனுக்காகவே!!!

சுவை நல்லா இருந்துச்சு.

தமிழ்மணத்துக்கு என்னவோ ஆயிருக்கு. காணோம்!!!!!

------------------------

சிட்னியில் இருந்து 45 நிமிடப்பயணத்தில் இக்கோவில் இருப்பதினால் கெலண்ஸ் பேர்க் கோவில் அல்லது வொலங்கோங் கோவில் என்றுதான் இங்கு அழைப்பார்கள்.

said...

வாங்க அரவிந்தன்.

அட! ஆமாம்! கோவில் பெயர் வைக்கும் விவரங்களை நீங்க சொன்னபிறகுதான் கவனிச்சேன்!!!!

ஹெலன்ஸ்பர்க் கோவில் பற்றி முந்தி எழுதுனது இங்கே. அது ஆச்சு ஆறு வருசம்.

http://thulasidhalam.blogspot.com/2006/10/t-d-3.html

said...

Ms. Thulasi Gopal:
Thanks for the info from Kalvetu.

My sincere apologies for the mistaken identity. It is a mistake committed, probably, because one of my friends name is Thulasi; of course his last name is Venkat. A lesson learned. One has to be careful with names such as krishna, bala, sakthi, etc

said...

வாங்க நம்பள்கி.

பரவாயில்லைங்க. இது என்ன ஒரு பெரிய தப்பா?

நம்ம வீடுவரைக்கும் வந்ததுக்கு நன்றி.

Anonymous said...

:) நாங்க அடிக்கடி போகும் இடங்கள்.படங்களில் பார்க்க அருமையாக தான் இருக்கு :)

said...

வாங்க தூயா.

அடுத்த முறை போகும்போது மசாலா சமாச்சாரத்தைச் சொல்லிக்குடுத்துட்டு வாங்கப்பா.