Friday, July 27, 2012

நகருக்குள்ளே(யே)ஒரு காடு (ப்ரிஸ்பேன் பயணம் 20).

ஆச்சரியமான விஷயம், காலெடுத்து உள்ளே வச்சவுடன் சட்ன்னு வந்த ஒரு அமைதி. வெளியுலக இரைச்சல்கள் எல்லாம் எங்கே? ஒருவேளை இதுவரை காதுலே கேட்டுக்கிட்டு இருந்த சத்தங்கள் எல்லாம் மனசுக்குள்ளேயே இருந்துச்சோ? ரெண்டு பக்கங்களிலும் நெடுநெடுன்னு வளர்ந்திருக்கும் மரங்களுக்கிடையில் அகலமான நீண்ட பாதை, பாதை போய்ச் சேருமிடத்தில் ஒரு வட்டக் கட்டிடம். தோட்டத்துக்கான தகவல் நிலையம். கவுண்டரில் ஆளைக் காணோம். ஒருவேளை அவுங்கதான் இப்போ அரைமணி முன்னால் ஆரம்பிச்ச தோட்ட டூர் கைடோ?

 நான் இல்லைன்னா என்ன? நீங்களே உங்களுக்கான கைடா இருக்கலாமேன்னு கொஞ்சம் தோட்ட விவரங்கள் அடங்கிய ப்ரோஷர் வச்சுட்டுப்போயிருக்காங்க. வெறும் 22 பக்கங்கள்தான்!!!!

 இந்த ரொடண்டாவுக்கு வலப்பக்கம் குளம் ஒன்னு. அலங்காரமா தண்ணீரை வாரித் தெளிக்கும் பம்பு, தன் கடமையைச் செஞ்சுக்கிட்டு இருக்கு. தொட்டடுத்தே ஒன்னுக்கொன்னு இணைஞ்சு இருப்பதைப்போலவே இன்னும் சில அலங்காரக்குளங்கள். உள்ளூர் பறவைகள் ஒய்யாரமா தண்ணீருக்குள்ளே போறதும். வாரி இறைக்கும் தண்ணிரில் ஷவர் பாத் எடுக்கறதுமா இருக்கு. வாத்துகள், வாத்தைப் போலவே தண்ணீரில் நீந்தும் சிவந்த மூக்குப்பறவைகள். இதுகளுக்கு வாயில் நுழையாத ஒரு பெயர். கோழித்தலையும் வாத்து ஆக்ட்டுமா இருக்குதுங்க.

 மரங்களும் புதர்களுமா இருக்கும் இடைவெளியில் நடந்து போக ஒரு ஒத்தையடிப் பாதை! பிங்க் நிறப்பூ ஒன்னு கவனத்தை இழுத்துச்சு. பழங்கள் போல கொத்தா அந்தப்பூவுக்கருகில் இருக்கேன்னா.... அந்த மின்னும் பழங்கள்(!)தான் இந்தப்பூக்களின் மொட்டுகள்! ஆஹா..... என்னமால்லெல்லாம் செஞ்சு வச்சுருக்கேடான்னு சாமியைப் பாராட்டத்தோணுச்சு.

 குளக்கரையைச் சுத்தி மரங்கள் பார்டர் போட்டன. எங்கே குளம், காமி பார்க்கலாம்? என்று எட்டிப்பார்க்கும் அடுக்குமாடிக் கட்டிடங்களும் அழகாத்தான் இருக்கு!

 புல்வெளியில் ஒரு உலோகச் சிற்பம்! 1988 உலக எக்ஸ்போ நடந்ததை நினைவுகூறும் சின்னமாம். அது ஆச்சே 24 வருசம். இன்னும் எப்படி புதுக்கருக்கு அழியாம இப்போ போனமாசம் செஞ்சு வச்சது மாதிரி மின்னுது? நல்ல எவர்ஸில்வர் தகடுகள்! ஒவ்வொரு கோணத்திலும் தோட்டத்தின் காட்சிகள் பிரதிபலிப்பது போட்டோ எடுத்து ஒட்டிவச்சது போல தெரியுது!

 பேசாம இந்த ஐபிஸ் பறவையை ஆஸியின் தேசியப்பறவையா ஆக்கிடலாம். ஏகப்பட்டவை அங்கும் இங்குமா ஒரே உலாத்தல் கொஞ்சம் நேரம் நீந்துனவுடன் கால் வலிக்குதுன்னு கரையில் வந்து உக்கார்ந்துக்கும் வாத்துகள். வரிசை:-)






குத்துக்குத்தா அங்கங்கே மூங்கில் புதர்கள். குட்டியா ஒரு நீர்வீழ்ச்சி, பர்ட் ஆஃப் பாரடைஸ் செடிகளில் அழகுப்பூக்கள். பழையகாலத்து கிராமஃபோன் குழல்போல பெரிய பூக்கள் உள்ள மரங்கள்.







உக்காந்து யோசிக்கிறார் போல!








வட்டக்கட்டிடத்தின் பின்புறம் புதுப்பாத்திகள்.குவீன்ஸ்லேண்ட் கரும்புக் காடுகளுக்கும் சக்கரைத் தொழிற்சாலைகளுக்கும் ஆரம்பப்புள்ளி  இங்கிருந்துதான், பார்க்கின் க்யூரேட்டரா இருந்த வால்ட்டர் ஹில் வெவ்வேற நாடுகளில் இருந்து செடிகள் பயிர்வகைகளை வரவழைச்சு அவைகளை நட்டுப் பரிசோதனைகள் செஞ்சு பார்த்துருக்கார் எப்படிப்பட்டவை இங்கே இந்த நாட்டின் இந்தபகுதியின் காலநிலைக்கும் மண்வளத்துக்கும் ஒத்து வருமுன்னு இடைவிடாத சோதனை முயற்சிகள். இப்ப இருப்பதுபோல் ஒரு பூவோ பழமோ நாட்டுக்குள்ளே கொண்டுவரக்கூடாது என்ற கஸ்டம்ஸ் கெடுபிடிகள் எல்லாம் அப்போ ஏது? 

வியாபாரத்துக்கு அங்கங்கே போய் வரும் கப்பல்காரர்களிடம் சொன்னால் ஆச்சு. பார்படோஸ் போய்வந்த கப்பலில் இருந்து  கிடைச்சக் கரும்புத்துண்டுகளை இப்போ இந்த வட்டப்பாத்திகள் இருக்கும் இடத்தில் நட்டுவச்சு அவை வளர்ந்து மூத்தபின் சாறு பிழிஞ்சு அதைக் காய்ச்சிப் பார்த்தால் சர்க்கரை கிடைச்சுருச்சு.

ஜகரண்டா மரம், புளிய மரம், மஹோகனி, மெகடாமியா, பனை வகைகள், மூங்கில் வகைகள் இப்படி எந்த மரவகைகளை எடுத்துக்கிட்டாலும் அவை வால்ட்டர் ஹில்ஸின் கைவண்ணங்களே!  மூங்கில் மட்டுமே 23 வகைகள் இருக்குன்னா பாருங்க!



 அகலமான பாதையின் இருபுறமும் மூங்கில்காடுகள். உக்கார்ந்து அழகை ரசிக்க அங்கங்கே பெஞ்சுகள். இங்கே தோட்டத்துக்குள் நாய்களுக்கும் சைக்கிள்களுக்கும் கூட அனுமதி உண்டு. டாக் வாக் ஆட்கள் அங்கங்கே. ஒன்னு இடத்தை மார்க் பண்ணிட்டுப்போச்சு. பேரு வில்ஸ் (வில்லியம்)  ஹாய் வில்ஸ்!

 வால்டர் ஹில் ஃபவுண்டெய்ன் என்ற போர்டைப் பார்த்துட்டு அங்கே போனால்.... சிங்கம்! இப்படிக் கொசுவத்தி ஏத்திருச்சே........

 ஒரு காலத்துலே வத்தலகுண்டு வாழ்க்கையில் ராஜாஜி மைதானம் என்ற திடல் ஒன்னு நம்ம வீட்டுக்குப்பக்கத்தில் இருந்துச்சு. அதில் ஒரு பக்கம் பெரிய பார்க் ஒன்னு. பஞ்சாயத்து போர்டு ஆஃபீஸ் இருந்த இன்னொரு பக்கம் ஓவல் ஷேப்லே சின்னதா ஒரு நீர்த்தொட்டி. அதுக்குத் தண்ணீர் தொட்டியின் கைப்பிடிச்சுவரின் நடுவில் எழும்பி இருக்கும் தூணில் பதிச்ச சிங்கத்தின் வாயில் இருந்து விழும். நான் அந்தத்தூணில் மேலே இருக்கும் உருளையில் ஏறி உக்கார்ந்துக்கிட்டு சிங்கத்தின் தலையில் காலை வச்சுக்குவேன். அப்ப நான் ஒரு சரியான குரங்கு. ஒரு மரத்தைக் கண்டால் விடமாட்டேன். எல்லா கவுனும் கிழிஞ்சது இப்படித்தான்:-) 


 சில வருசங்களுக்கு முன்னே வத்தலகுண்டு வழியாப்போனபோது இந்தத் திடலைத்தேடி விசாரிச்சால் இப்படி ஒன்னு இல்லவே இல்லைன்னு சொன்னாங்க:( அப்புறம் நம்ம பதிவுலக நண்பர் வத்தலகுண்டுக்காரர் விசாரிச்சு இப்ப அந்தத் திடலின் பேர் மாறிப்போச்சு. பஞ்சாயத்து திடலுன்னு கேக்கணும் என்றார். ராஜாஜி என்ற பெயர் கெட்டதா என்ன? என்னவோ போங்க......:( 


 இந்த சிங்கவாய்த் தண்ணீர் மனசின் ஒரு மூலையிலேயே இருந்துச்சு போல. ஒரு நாள் இங்கே கிறைஸ்ட்சர்ச்சில் கடையில் ஒரு சிங்க பவுண்டெய்ன் பார்த்துட்டு உடனே அதை வாங்கியாச்சு. சுவரில் மாட்டி வைக்கும் டிஸைன். அதுலே முன்பக்கத்துலே சின்னதா ஒரு கிண்ணம் அதுலே தண்ணி ரொப்பிட்டு நீர் ஊற்றுக்கு வச்சுருக்கும் ப்ளக்கை மின்சார இணைப்புக்குக் கொடுக்கணும்.

 சிங்கம் வாயிலே தண்ணி வருது! கன்ஸர்வேட்டரியில் வச்சுருக்கோம். நல்லா இருக்கா? தண்ணீர் தெறிக்குதுன்னு ஒரு பாலிகார்பொனேட் ஷீட் வச்சுருக்கேன். தண்ணீர் விழும் ஓசை கேட்டபடி அங்கே உக்கார்ந்தால் அதுவும் ஒரு தியானம்:-) 

 இந்த பொட்டானிக் ரிஸர்வுக்கு 26 வருசம் உழைச்ச வால்ட்டர் ஹில் பெயரை இந்த நீரூற்றுக்கு வச்சுருக்காங்க. 1867 இல் சேண்ட் ஸ்டோனும் மார்பிள்மா வச்சுக் கட்டுனது. நாலு பக்கமும் சிங்க முகங்கள்.   'ஓ' ன்னு வாய் இருக்கு:-)



 குவீன்ஸ்லேண்டில் முதல்முதல் கட்டிய எனோக்கெரா Enoggera Dam அணையில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ப்ரிஸ்பேன் நகருக்குக் குடிதண்ணீர் வர ஆரம்பிச்சதை நினைவூட்டக் கட்டுனது குடிதண்ணீர் நீரூற்று இப்பக் காஞ்சுப்போய்க்கிடக்கு. . அதுலே தண்ணி வந்தால் குடிச்சுப் பார்த்துருப்பேன்.

 சிங்கத்தைக் கடந்தால் ஒரு சன் டயல் அமைப்பைச்சுத்தி  ஹைய்யோ!!!!!

அடுத்த பதிவு அந்தப் பூக்களுக்கே சமர்ப்பணம்:-)


 தொடரும்.............:-)))))

23 comments:

said...

நல்ல படங்கள், ரசித்தேன்.

said...

காட்டுப்பயணம் அமைதி.
எங்கவீட்டுக்கும் ஒரு ஃபௌண்டெயின் வந்திருக்கு. இதுக்கு யானை முகன்:)
படங்கள் சூப்பர் துளசி.

said...

அருமையான அனுபவம்.....

பூக்களின் மொட்டுகளைப் பார்த்தால் என்ன பூவுக்குப் பக்கத்தில் நாவல் பழங்கள் இருக்கே என நினைக்கத்தோன்றியது....

said...

படங்களைப்பார்த்த உடன் அங்கு சென்று வந்த உணர்வு...

said...

காட்டுக்குள்ளே திருவிழா
கன்னிப்பொண்ணு மணவிழா
சிரிக்கும் மலர்கள் கூடி சிங்காரிக்கும் பொன்விழா ஹோய்

இப்படியொரு பாட்டு இருக்குல்ல.

அமைதியான இயற்கைச்சூழல் நிறைந்த காட்டுப்பகுதிக்குச் சுற்றுலா போகனும்னு ஆசையாத்தான் இருக்கு. எப்ப குடுத்து வெச்சிருக்கோ.

படங்களே ரொம்ப அழகாயிருக்கே. அதுலயும் நவாப்பழம் போல மொட்டுகள். அதிலிருந்து அழகான மலர்கள். அடடா!

சிங்கத்தோட வாயில தண்ணி வர்ரதுன்னா இப்பல்லாம் சிங்கப்பூர் சிங்கந்தான். நம்மூர்ல அதெல்லாம் இப்ப வெக்கிறதில்ல.

said...

பாட்டி....நல்லாருக்கு ஆனா போரடிக்குது..

said...

பூக்களின் மொட்டுகளைப் பார்த்தால் என்ன பூவுக்குப் பக்கத்தில் நாவல் பழங்கள் இருக்கே என நினைக்கத்தோன்றியது....சேம் பீலிங்

said...

பூக்களின் மொட்டுகளைப் பார்த்தால் என்ன பூவுக்குப் பக்கத்தில் நாவல் பழங்கள் இருக்கே என நினைக்கத்தோன்றியது....சேம் பீலிங்

said...

அழகான பகிர்வு.

/அந்த மின்னும் பழங்கள்(!)தான் இந்தப்பூக்களின் மொட்டுகள்! ஆஹா..... என்னமால்லெல்லாம் செஞ்சு வச்சுருக்கேடான்னு சாமியைப் பாராட்டத்தோணுச்சு./

ஆமா, பலநேரம் இது போன்ற ஆச்சரியங்கள் அடங்குவதே இல்லை. பூக்களுக்கே சமர்ப்பிக்கவிருக்கும் அடுத்த பதிவுக்கு ஆவலாக வெயிட்டிங்.

காட்சிகளை பிரதிபலிக்கும் அந்த ‘தகடு..தகடு..’ அமைப்பு நல்லாருக்கு:)!

said...

வாவ்!!அருமையாக இருக்கு.

said...

வாங்க பழனி.கந்தசாமி ஐயா.

நட்சத்திர பிஸியிலும் வருகை தந்ததற்கு நன்றிகள்.

said...

வாங்க வல்லி.

ஆஹா.... யானை முகனா? சூப்பர்!
படத்தோடு ஒரு பதிவு எதிர்பார்க்கிறேன்:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அசல் நாவல்பழங்களின் மினுமினுப்பு பார்த்து அசந்து போனதும் உண்மையே! வருகைக்கு நன்றி.

said...

வாங்க சங்கவி.

ஆஹா.... அப்ப கண்டதைச் சொல்வதில் தேறிட்டேனா!!!!

said...

வாங்க ஜீரா.

சிங்கைச்சிங்கம் பெருசுல்லே! அது ஊருக்கே பெயர்க்காரணம் சொல்லும் சிலை!

முந்தி நம்ம ஊர்களிலும் பூங்காக்களில் அங்கங்கே சில நீரூற்று அமைப்புகள் இருக்கும். எல்லாம் அந்தந்த பஞ்சாயத்தைப் பொறுத்தது.

said...

வாங்க நான்.

அடடா..... போரடிக்குதா?

அதோ அங்கே சின்னப்பிள்ளைக்களுக்கான காப்பகம் இருக்கு. அங்கே போய் சமத்தா விளையாடுங்க.

சரித்திர வகுப்பு டூர் முடிஞ்சு ஊருக்குப் போகும்போது வந்து கூட்டிக்கிட்டுப் போறேன்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

அடுத்த பதிவு இன்னிக்கு வெளியிட்டாச்சு.

பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

said...

வாங்க குமார்.

ரசிப்புக்கு நன்றிகள்.

said...

ஃபௌண்டன்ல உக்காந்து குளிக்கிறார் பறவையார். செம அழகான படம்.

said...

காட்டுக்குள்ளே மலர்வனம் மகிழவைக்கின்றது.

said...

வாங்க அமைதிச்சாரல்.

பொழுதன்னிக்கும் சாரல் குளியல் அவருக்கு :-))))

said...

வாங்க மாதேவி.

நகருக்குள்ளே இப்படி ஒரு அமைதி அபூர்வமா இருந்துச்சுப்பா.

said...

படங்கள் மிகவும் அருமை.