Friday, June 28, 2013

ராஜான்னா ராஜாதான் இல்லே? (பாலி பயணத்தொடர் 7 )

மெங்வி தேசத்துக்கு ராஜகுடும்பத்தின் கோவிலுக்குள்ளே நுழையறோம்.Pura Taman Ayun ,  Desa Mengwi  தெருவிலிருந்து அகழிப்பாலம் போகுது. அகழி நல்ல அகலம். முப்பதடி  இருக்கும். முதலை இருக்கான்னு கண்ணு தேடுச்சு. நாம் , குரங்கன்ஸ் பார்த்த குஷியில்  கிளம்பிக்  காமணியில் இங்கே வந்துட்டொம். எல்லாம் அப்படி ஒன்னும் அதிக தூரமில்லை.  வெறும் ஏழே கி மீ.  முன்னாடியே நல்லா ப்ளான் போட்டு வச்சு , நமக்கு  நல்ல ஒரு கைடும் காரும் இருந்தால்  நாலே நாளில் மொத்த பாலியையும் இண்டு இடுக்கு விடாமல் பார்த்துறலாம்.  சின்னத்தீவுதான்.

பொதுவா சுற்றுலாப் பயணிகளுக்கு முகம் சுளிக்காமத்தான் மக்கள்ஸ் இருந்தாலும்,  நாமாகக் கேட்டால் மட்டுமே  உள்ளூர் சமாச்சாரங்களும் விவரங்களும் சொல்றாங்க. என்ன இடம் சொல்றோமோ அதுக்கு இவ்ளோ சார்ஜ்ன்னு  காரோட்டிகள்  'கோடி 'காமிச்சு,  நாம் பேரம் பேசிக்கணும். நம்ம காரோட்டி ந்யோமேனின்  முதலாளிக்கு  ஏழு வண்டிகள்  இருக்கு. அவை எல்லாமே இதே ஹொட்டேலுக்குன்னு ஒப்பந்தம் போட்டுருக்காராம். வாசலில் நிற்கும் வண்டிகள் எல்லாம் ஒரே கம்பெனிக்கு உரியவைகளாம்.
அஞ்சு வருச அனுபவம் இந்தக்கம்பெனியில் நம்ம ந்யோமேனுக்கு!

கோவிலுக்கு நுழைவு சார்ஜ் ஆளுக்கு பதினைஞ்சாயிரம். கார் பார்க் வெளியேதெருவில் என்பதால்  இலவசம்தான். டிக்கெட் கொடுக்கும்போதே கோவில்பற்றிய 'சரித்திரக்குறிப்பு ஒன்னும் தர்றாங்க.  அதை வாசிக்கும்போது சின்னதா ஒரு குழப்பம் வந்தது உண்மை.  மெங்வி ராஜாங்கம்  ஆரம்பிச்சது 1627 BC.    ராஜாங்கத்தின் முதல் ராஜா   Gusti Agung Ngurah Made Agung கோவிலைக் கட்டுனது  1634 AD ஆண்டு. தட்டச்சுப் பிழையாத்தான் இருக்கணும், இல்லை?


ராஜ குடும்பத்திற்கான தனிக் கோவிலாத்தான் இதைக் கட்டி இருக்காங்க. குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்குத் தனித்தனி சந்நிதிகள், குடும்ப தெய்வங்களுக்கும், மற்ற பெரிய தெய்வங்களுக்கும்  பகோடா ஸ்டைலில்  மேரு என்ற அடுக்கு கோபுரங்கள் இப்படி. இந்த  அடுக்கெல்லாம்  அழகா வெட்டிய  ஓரங்கள் உள்ள  வைக்கோல் வச்ச கூரைகள்தான். எத்தனை அடுக்கு இருக்கோ அத்தனை  சக்தி அந்த தெய்வங்களுக்கு!  அங்கேயும்  க்ளாஸ் இருக்கு பாருங்களேன்!


 நம்ம மேருமலையைத்தான் சிம்பாலிக்கா மேருன்னு இவுங்க கட்டுறாங்க. வைக்கோல் கூரைன்னு நான் நினைச்சது  வைக்கோலே இல்லையாம்.  கருப்பு வகைக் கரும்பின் தோகையாம். ஓலை மாதிரிதானே இருக்கு. ஆமாமில்லே!!!


 புரா டமன் அயூன்  (Pura Taman Ayun ) என்று பெயர். அழகான தோட்டக்கோவில் என்று இதற்கு பொருளாம்.   பாலியில் இருக்கும் புகழபெற்ற ஏழு கோவில்களில் இதுவும் ஒன்னு.  பெயருக்கேத்தாற் போலவே  பெரிய தோட்டம் கோவிலுக்குப் பின்புறத்தில் பரவிக்கிடக்கு.  மொத்தம் 10 ஏக்கர் நிலம். இந்தக் கோவில் மூணு பகுதியா அமைஞ்சுருக்கு.


கோவிலைச் சுற்றிப்போகும்  அகழியைக் கடந்து  பாலி ஸ்டைல்  Candi bentar (நேர்பாதி கட் ஸ்டைல் )கேட் கடந்து முன்புறத்தோட்டத்திற்குள் நுழையறோம். விஸ்தாரமான கோவிலின் நான்கு மூலைகளிலும்  சின்னக்குடில் போன்ற  அமைப்புகள். காவல் தெய்வங்களுக்காக இருக்கலாம். வலப்பக்கம் டிக்கட்டு கவுண்ட்டர். அங்கே ஏராளமான பச்சைக்குடைகள்  ஒரு பீப்பாயில் போட்டு வச்சுருக்காங்க.   விருந்தினர்கள், மழையோ வெயிலோ கஷ்டப்படவேணாம். இதுதான் ராஜ உபசரிப்பு என்பது.


இடப்பக்கம் பெரிய ப்ரமாண்டமான புல்வெளி.  அதில் செயற்கை நீரூற்று.  கவுண்ட்டருக்கு எதிர்ப்புறமா சின்னதா ஒரு சந்நிதி. கோவில் பூனை ஒன்னு பூஜை செய்ய வந்துருக்கு!



 கல்பாவிய நீண்ட பாதையின்  வலப் பக்கம் ஒரு அழகான கட்டிடத்தில் ரெஸ்ட் ரூம்ஸ். வெரி குட்.

ஏழெட்டுப் படிகளுடன் உள்ள இன்னொரு ஸ்ப்ளிட் கேட் வாசல் கடந்து  உள்ளே போனால் பரந்த புல்வெளியின் நடுவில் காவல் மாடம்போல் வச்ச உயர்ந்த சிம்மாசனம்  ஒன்னு.  ராஜா அங்கே உக்கார்ந்து  தன் நாட்டைப் பார்வையிடலாம் போல!   (அப்புறம் விசாரிச்சப்ப சொல்றாங்க.... கோவில் மணி கட்டி இருக்காம். மரமணி என்பதால் நான் சரியாக் கவனிக்கலை. கண்ணாடி மாற்றும் நேரம் வந்துருக்கு)



அழகழகா  சின்னச்சின்ன குடில்கள் புல்கூரை அமைப்புடன்  அங்கங்கே.  டிக்கெட் செக்கிங் கூட இப்படி ஒரு குடிலில்தான்! பெரிய சாவடி ஸ்டைலில்  சில கட்டிடங்கள்.  உச்சிவெயிலுக்குப் படுத்தால் தூக்கம் அப்படியே இழுத்துரும். திருவிழா சமயங்களில் கலை நிகழ்ச்சிகள் இங்கே நடத்துவாங்களாம். அட! அரங்கு!

பாதையின் இடதுபக்கம் பிரியும் பகுதியில் ரெண்டு சாவடிக் கட்டிடங்கள். ஓவியர் ஒருவர் வரைஞ்சுக்கிட்டு இருக்கார். ஏகப்பட்ட அழகான ஓவியங்கள் வரிசைகட்டி நிக்குது. விற்பனைக்கு இருக்கலாம். நாம் ஒன்னும் கேட்டுக்கலை:(  செவ்விளநீர் குலை ஒன்னும் பாதிரிப்பூக் கொத்து ஒன்னும் மனசை அள்ளுச்சு.காலையில் நாம் பார்த்த டனாலாட் கூட அருமையா வரைஞ்சுருக்கார்.







இரண்டாம்  (நடுப் பகுதி) பிரகாரம் (?) முடிஞ்சு  கருவறைக்குடில்கள் இருக்கும்  முதல் பகுதிக்குப்போக கதவுள்ள மூடின வாசல் (Paduraksa style) ஒன்னு இருக்கு.  வழக்கம்போல் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி இல்லை. ஆனால் கோவிலுக்குள்ளே என்ன இருக்குன்னு  பார்க்கும் வகையில்  சுற்றுச்சுவரை சின்ன உயரத்தில் கட்டி இருக்காங்க.




ஒரு நாலடிச்சுவர்.  வலம் வர நல்ல கல்பாவிய பாதை.  இந்த பாதையில் வலம் வரும்போது நமக்கிடது பக்கம் மரங்களும் செடிகொடிகளும் அடர்ந்த   அழகான தோப்பு.   மங்குஸ்தான், ரம்புத்தான்,  மாங்காய், டூரியன் வகைப் பழமரங்களும்  ஏராளம்.  பாதிரிப்பூ, செம்பகப்பூ, மனோரஞ்சிதம் ஆகிய   வாசனை மலர்களுக்கான  மரங்களுக்கும் பஞ்சமில்லை.  தோட்டத்தின் அக்கரை அகழியை ஒட்டியே போகுது.

தோப்புக்குள்ளே இருந்து அங்கும் இங்குமா அகால நேரத்துலே சேவல்கள்  விடாமக் கூப்புடுது!  இந்நேரத்துக்கு  என்ன கொக்கரக்கோ!!!!


நாம் எட்டிப்பார்க்கும் உட்பிரகாரத்தில்  சுற்றிலும்  இன்னொரு சின்ன அகழி. அல்லிப்பூக்கள் நிறைந்து  அழகாச் சுத்தி வருது.  நடுவில்தான்  சந்நிதிகளுக்கான சின்னச் சின்னக் குடில்கள். பதினோரு அடுக்கு மேருகள் முதல்  மூணடுக்குகள் வரை!  சிவனுக்கு  பதினொரு அடுக்கு. ப்ரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் ஒன்பது அடுக்குகள். (ஹா.... ஒரு படி கீழே!)


குடும்பக் கோவில்களில் கூட  அடுக்குகளை எண்ணினால் அவுங்க என்ன சாதின்னு தெரிஞ்சுருமாம்.  பதினோரு அடுக்கு  ராஜ வம்சம். அப்புறம் ஒரு அடுக்கு(?)  கீழ் சாதி. இடைப்பட்டவை எல்லாம்  அந்தந்த சாதிகளின் மதிப்புக்குத் தக்கபடியாம்.  இந்தியாவில் இருந்து போன மதம் சாதியை உதறித்தள்ளாமக் கூடவே கொண்டு போயிருக்கு பாருங்க:(


'டேவி ஸ்ரீ ' (Dewi Sri) என்ற அதி முக்கிய தேவதைக்கு ஒரு சந்நிதி வச்சுருக்காங்க. நானும் கையெடுத்துக் கும்பிட்டேன்.  போகும்வரை சோத்துக் கவலை இருக்கவேணாம் பாருங்க. அன்ன லட்சுமி தேவி ஸ்ரீ அரிசிக்கான சாமி.

சுட்ட படம். நன்றி விக்கியண்ணே /\

அங்கங்கே  பிரமாண்டமான  சாவடிகள்.  பூஜை புனஸ்காரம் நடத்துவாங்க போல. பூனைகள் ஓடித் திரியுதுகள். அங்கங்கே தினம் சாமிக்குப் படைக்கும்  ஓலைத்தட்டு சமாச்சாரங்களில் இருக்கும் முக்கிய வஸ்து ஒருவேளை இவுங்களுக்கான ஸ்பெஷலாகக்கூட  இருக்கலாம்.  கருவாடு வேணாமுன்னு  பூனை சொல்லுமா என்ன?

மெங்வி (MENGWI) மஹாராஜாக்கள் கோலோச்சி வளமா  இருந்தாங்க. பத்து தலைமுறை ஆகி இருக்கு.  அப்போ 1890 வது வருசம் பக்கத்து தேசமான படுங் (BADUNG)மகாராஜா இவுங்களோடு போர் தொடுத்தார்.

இந்த ரெண்டு தேசத்துக்கும் இடையில் இருக்கும் தூரம் வெறும் அஞ்சு கிமீதான்! உழக்குக்குள் கிழக்கு மேற்கு பார்த்த மாதிரிஒவ்வொரு கிராமமும் ஒவ்வொரு தேசமாத்தான் இருந்துருக்கு அப்ப.

போரில் வெற்றி படுங் ராஜாவுக்கே!  தோல்வியடைஞ்ச மெங்வி ராஜா  பாலித்தீவின் வடகிழக்குப்பக்கம்  குடிபெயர்ந்துட்டார்.  மெங்வி நாடு இப்போ படுங்கோடு சேர்ந்துருச்சு. படுங் ராஜா... தன் ஆட்சிக்குக்கீழ்வந்த மெங்வி நாட்டை சரியா கவனிக்கலை.  கோவிலும் பராமரிப்பு இல்லாம பாழாக ஆரம்பிச்சது.  நல்லவேளை ஒவ்வொரு ராஜாக்கள் போல  தோல்வி அடைஞ்ச நாட்டுக் கோவில்களை இடிச்சுத்தள்ளி பாழாக்கலை என்ற வரை நிம்மதி!

ஆச்சு 21 வருசம்.  மெங்வி ராஜ குடும்பத்தில் சிலர் மீண்டும் மெங்வி தேசத்துக்குத் திரும்பிவந்தாங்க. கோவிலின் கதி பார்த்து ரத்தக்கண்ணீர் வந்துருக்கு. மெள்ள மெள்ள கோவிலைத் திருப்பிக்கட்டும்  பணியை ஆரம்பிச்சாங்க. இது 1911 வது வருசம்.

படுங்  ராஜா எதிர்ப்பு ஒன்னும் தெரிவிக்கலை போல. நல்லதாப்போச்சுன்னு  இருந்துருக்கலாம்.

எல்லாம் நல்லபடியாப்போய்க்கிட்டு இருக்கும்போது  ஜனவரி 20, 1917 இல் ஒரு பெரிய நிலநடுக்கம்.  இடிஞ்சு விழுந்த ஏராளமான பழங்கோவில்கள், கட்டிடங்கள் கூட்டத்தில் இந்த ராஜகுடும்பக் கோவிலும் ஒன்னு:(
படிப்படியா பழுது பார்த்து மீண்டும் நல்ல நிலைக்குக் கொண்டு வந்துட்டாங்க. பாரம்பரிய சரித்திரப்புகழ் இருக்குன்னு யுனெஸ்கோ நிதி உதவி செஞ்சுருக்கு.


கோவிலைச் சுற்றி வரும்போது ஒவ்வொரு மூலையிலும்  கூண்டு ஒன்னு. அதில் சேவல்.  உள்ளூர் வாஸ்து போல!


அப்புறம் கோபால் ரெஸ்ட்ரூம்வரை போனவர் சேதி கொண்டு வந்தார். இங்கே சேவல்சண்டை நடக்குமாம். அதுக்கான ஒரு அரங்கு ரெஸ்ட் ரூம் போற வழியில் இருக்குன்னார். அரங்கு இருக்கட்டும் படம் இருக்கான்ன்னா.... எடுத்தாச்சுன்னார். அது போதும். வாஸ்து பிரச்சனை இல்லைன்னு  தெரிஞ்சுக்கிட்டோமே:-)



பகல் ஒன்னேகால் ஆச்சு. போதும் பார்த்தது.  கொஞ்சம் ஓய்வு வேணும். அறைக்குப் போகலாமுன்னு கிளம்பி 21 கிமீ பயணம் செஞ்சு ஹொட்டேலுக்கு வந்தோம். இதுக்கே  பகல் மணி ரெண்டு.


மாலை நாலு மணிக்கு மீண்டும் கிளம்புவதா ப்ளான்.  ட்ராஃபிக்  ஆரம்பிச்சுரும். அதனால் மூணரைக்குக் கிளம்பினால் சரியா இருக்குமென்றார்  நம்ம ந்யோமேன். சரி, நீங்களும் போய் சாப்பிட்டு ஓய்வெடுங்கன்னு சொன்னார் கோபால்.

தொடரும்.......:-)


Wednesday, June 26, 2013

யப்பா... என்னெவிட்டுப் போகாதேப்பா........... (பாலி பயணத்தொடர் 6 )

கோபாலின் காலைக் கட்டிப்புடிச்சுக்கிட்ட சின்னது  இப்படித்தான் நினைச்சு இருக்கும்!


அதுக்குள்ளே இன்னொன்னு ஓடி வந்து  எனக்கு என்னாப்பா வாங்கியாந்தேன்னு  ஷார்ட்ஸ் பாக்கெட்டைக் குடையுது:-)


ஒன்னும் இல்லை செல்லங்களான்னு கையை விரிச்சுக் காமிக்கிறார் இவர்.

இது எதையுமே எதிர்பாராத நான்  கேமெராவைக் கிளிக்கவும் விநாடி நேரம்  மறந்து போனேன் என்பதே உண்மை.


கூடவே வந்த கைடு மேடி (இங்கேயும் மேடிதான்!) அங்கெ பாருன்னு  கண் உயர்த்திக் காமிச்சதும் அதிசயமாத்தான் போச்சு.  தலைக்குமேல் ஒன்னு !

அப்புறம் அது தோளில் இறங்கி நிக்குது.  சடார்னு க்ளிக்கிட்டேன். (வீடு திரும்பி,  மகளிடம் காமிச்சபோதுதான்  'பாப்பா இருக்கு' என்று  சொன்னாள்.)

கணினியில் படங்களை லோடு செஞ்சு பெருசாக்கிப் பார்த்தால் முத்துப்போல் கண்  முழிச்சுப் பார்க்குது பேபி!!!!


என்னைவிட்டு ஓடிப்போகமுடியுமா  நாம் இருவரல்ல மூவர் என்று தெரியுமா?

டனாலாட்டிலிருந்து  Alas Kedaton  என்ற இடத்துக்குப் போயிருக்கோம். இதையும் தேடிபார்த்து வச்சுக்கிட்டுச் சொன்னவர்  நம்ம கோபால்தான். வெறும்18 கிமீ பயணதூரம்.  அவ்வளவாக் கூட்டமில்லாத சாலை. காமணியில் வந்து சேர்ந்துருந்தோம்.

நுழைவுக் கட்டணம் இங்கே ஆளுக்குப் பதினைஞ்சாயிரம் ரூபாய். பார்க்கிங் சார்ஜ்  இல்லை.

இங்கே பாலியில்  நுழைவுக் கட்டணம் செலுத்த தனிக் கட்டிடத்தில்  கவுண்ட்டர்கள்  முகப்பிலேயே வச்சுருக்காங்க.  அதை வாங்கிக்கிட்டுக் கொஞ்சதூரம் போனதும்தான் டிக்கெட் கிழிச்சுக் கொடுக்கும்  இடம் வருது.

இது   ரொம்பவே ' ஸ்நேகமுள்ள  குரங்கன்'மாரின் காடு.  Friendly Monkey Forest .  மொத்தம்  கிட்டத்தட்ட  முப்பது ஏக்கர்கள். நுழைவு வாசலில்  டிக்கெட் கிழிச்சுக் கொடுக்கும்போதே  நமக்கான ஒரு  கைடும்  கிடைக்கறாங்க. கையில் ஒரு நீளமான குச்சி. சும்மா ஒரு இதுக்குத்தானாம். கோலெடுத்தால் குரங்கு ஆடாதோ?

வாசலைக் கடந்து போகும் பாதையின் ரெண்டு பக்கமும் சின்னச்சின்ன கடைகள்.  கடைகளின் வெராந்தாவில்   நண்பர்களின்  நடமாட்டம். நமக்கு அவ்வளவா பரிச்சயமில்லாத முகங்கள். இவுங்கெல்லாம் macaque வகையினர்.

நொறுக்குத்தீனி வாங்கிப்போடுவீங்களான்னு  மேடி கேட்டதுக்கு  இருபதினாயிரம் எடுத்துக்கொடுத்தார் கோபால். ஆனால்.... அவுங்க ரெண்டேரெண்டு சின்னப்பொதி வெறும் நாலாயிரத்துக்கு வாங்கி வந்துட்டு மீதிக் காசைக் கையில்  கொடுத்தாங்க. (ஐ மீன் நம்ம கையில் !)


பொதியைப் பிரிச்சதும் நண்பர்கள் ஓடி வந்து கையில் இருந்து எடுத்துக்க ஆன நேரம்  ஒரு விநாடிக்கும் குறைவுதான்!


இந்தக் காட்டுக்குள்ளே  மூணு பகுதிகள்  இருக்காம்.  உள்ளே  மலைப்பாம்பு, ராக்ஷஸ  சைஸ் வௌவால்கள்  எல்லாம் இருக்கு.  கடைகள் உள்ள வெளிப்பகுதியை ஒட்டியே ஒரு கோவில்.  ஹனுமன் கோவிலோ?  இந்தக் குரங்கன்மாரெல்லாம்  கோவிலுக்கான காவல்தெய்வங்களா (வும்) இருக்காங்க(ளாம்).  புனிதக்குரங்கர்!

சுமார்  24 விதமான மரக்கூட்டங்கள்,   வசிக்கும் 'மக்களுக்கு' ஏத்தமாதிரி படு செழிப்பா வளர்ந்து நிற்கும் அடர்த்தியான காடு இது.


இதைப்போல  புனிதக் குரங்குக்காடுகள்  இந்தத் தீவில் இன்னும் நாலைஞ்சு இருப்பதாகவும் கேள்வி. ஆனால்  ரொம்பவே ஸ்நேகம் என்றால் அது இங்கே மட்டுமே! மேடிக்கு இதைச் சொல்லும்போதே ஏகக்குஷி!


பாலித் தீவு ஹிந்துக்களுக்கு ஒரு வருசம் என்பது ஒன்பது மாசங்கள்தான். அதனால் ஒவ்வொரு 210 நாட்களுக்கும் ஒரு வருசப்பிறப்பு வந்துருது.  வருசப்பிறப்புக்கு இந்த  ஹனுமன் கோவிலில்  திருவிழா நடக்குதாம்.

கேட் மூடிக்கிடந்த கோவிலை உள்ளே போய்பார்க்க விருப்பமான்னு கேட்டதுக்கு  ஆமாமுன்னு சொல்றதுக்குப் பதிலா வேணாமுன்னு தலை ஆடிருச்சு:(  உள்ளேதான் சாமி இல்லையேன்னு  ஒரு எண்ணம். ப்ச்.....   போகட்டும்   .......



மேடிக்கு எதாவது  கொடுக்கணுமுன்னு  காசை வெளியில் எடுத்தால்.... எனக்கு கைடு கூலி ஒன்னு வேணாம். இங்கே நான் வச்சுருக்கும் கடையில் எதாவது வாங்கினால் போதுமுன்னு  சொல்றாங்க.  முகப்பில் நாம் பார்த்த கடைகளின் பின் வரிசைகளிலும்  ஒரு பத்துப் பதினைஞ்சு கடைகள் இருக்கும்.

கடையின்  கதவாக  இருக்கும்  ஒரு துணியை (குரங்கன்மார் துணிக்கு அடியில் நுழைஞ்சு  எளிதாப் போகலாம்)  எடுத்தவுடன் கடைப்பொருட்கள் கண்ணில் பட்டன. நினைவுப்பொருட்கள், டீ ஷர்ட்ஸ், ஸராங் இப்படி.  பத்து பாதிரிப்பூ அஞ்சு நிறங்களில் இருக்கும்  பத்து ஹேர்க்ளிப்புகள் இருக்கும் அட்டையை வாங்கினேன்.  கூடவே மரத்தால் செய்த   சின்ன சைஸ் முகங்கள் (ராமர் & சீதா)  ரெண்டு.

மரச்சாமான்கள் கொண்டு போக முடியாது என்பது மறந்து போச்சா? வேணாம் வெணாமுன்னு பதறினார் கோபால். டிக்ளேர் செஞ்சுக்கலாம்.  ட்ரீட்டட் வுட் என்பதால் விட்டுருவாங்க.அப்படி இல்லைன்னா.... போயிட்டுப் போகுது.

நாளைக்குப் போகும் ஊர்,  கலைப்பொருட்களுக்குப் பேர் போனது. அங்கே பார்க்கலாமேன்னு இழுத்தார்.  அட! அப்படியா அங்கேயும் வேறெதாவது வாங்கலாம் என்றதும் கப்சுப்:-))))

பூவுக்கு ஒரு அம்பதாயிரம், முகங்களுக்கு  பேரம் பேசி  நூற்றியம்பதை பாதியாக் கேட்டு  எழுபத்தியஞ்சு.

திரும்ப கார் பார்க் வரை கூடவே வந்து வண்டியில் ஏறும்வரை  கையில் குச்சியோடு  நின்னாங்க மேடி.  குரங்கன்ஸ் எந்த ஒரு தடையும் இல்லாம  கார்பார்க் முழுசும் ஓடித் திரியுதுங்க.



வண்டியில் ஏறுனதும் ஆர்வ மிகுதியால்  இதுவரை க்ளிக்குன படங்களை ரீவைண்ட் செஞ்சு பார்த்தேன். இந்த 39 வருசத்துலே இவ்ளோ சிரிச்ச முகமாவும், திருப்தியான மனசோடும்  கோபாலை  பார்த்ததா ஞாபகமே இல்லை:-))))))


வெறும் இருபது நிமிட சொர்கம்!


தொடரும்...........:-)))))