Friday, December 13, 2013

GIMME FIVE

அந்த திருவாரூர் மோகனாங்கி  என்னமாத்தான்  ஆடுறாளுன்னு  பார்த்துட்டு வாரேன். ஓட்டுக்கு விட்டதில் 51-49 லே தோத்துப்போயிட்டோம்:(
யார் அந்த கருங்காலி, கையிலே மாட்டணும்...மகனே....

முன்கதைச் சுருக்கம்:  இங்கே!

கட்டுவோம் கட்டுவோமுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு வேலையை ஆரம்பிச்சுட்டாங்க. நாங்களும்  ஒருபக்கம் அழுதுகிட்டே......  என்னதான்  நடக்கும் நடக்கட்டுமேன்னு  அப்பப்ப ஒரு நடை போய் இடத்தை எட்டிப்பார்த்துக்கிட்டு வர்றது,  ' கடமை'களில் ஒன்னாச்சு.

யக், கண்ராவி,சகிக்கலை,ஊரையே அசிங்கம் பண்ணிட்டாங்க. , திருஷ்டி கழிஞ்சது,  Eyesore,  காசைக் கரியாக்கறாங்கன்னு  அப்ப இருக்கும் மனநிலைக்கு ஏத்தமாதிரி பொருமிட்டு வருவோம். எதுக்குத் தலைவலி?  போகாம இருக்கலாமுன்னா....  பாழாப்போன மனசு கேக்குதா?


Shigeru Ban  என்ற  ஜப்பானியர்தான் டிஸைனர். அட்டைவேலையிலே நல்ல பழக்கமும் அனுபவமும் இருக்கும்போல!

சின்னவயசுலே ஜப்பானைப் பத்தி 'டீச்சர்''  சொன்னது.... 'பூகம்பம் அடிக்கடி வருவதால் அங்கே அட்டையில் வீடு கட்டுகிறார்கள்' அதெல்லாம் இப்போ நினைவுக்கு வந்துச்சு. வீடென்ன வீடு...இங்கே கோவிலே கட்டுறாங்கப்பா.....

ஒரு ரெண்டுமூணு  வருசத்துக்கு முந்தி போடிக்குப் போயிருந்தேன்  அங்கே நம்ம சொந்தக்காரங்க ஒருத்தர் ( தமிழ் டீச்சர்)  நியூஸியிலே அட்டைவீடா கட்டுவீங்கன்னு கேட்டாங்க. இல்லையே யாரு சொன்னான்னு கேட்டதோடு சரி.  விஷயம் மட்டும் அப்போ தெரிஞ்சுருந்தால்.....  அட்டையிலே வீடு கட்டமாட்டோம். கோவில்தான் கட்டுவோமுன்னு சொல்லி இருப்பேன்:-)


இன்னொரு சர்ச் (எல்லாம்  இதே ஏஞ்சலிக்கன்  பொறுப்பில் உள்ளதுதான்)  இடிஞ்சு விழுந்துருச்சுல்லே அதே இடத்தை சரியாக்கிக் கட்ட ஆரம்பிச்சு இருக்காங்க.  2011 நிலநடுக்கம் ஊரில் ஒரு சர்ச்சை விட்டு வைக்கலை.  அதுக்கு மத பேதமோ, வாதமா இல்லைன்னு காமிக்க  இருந்த ஒரே  ஹிந்துக் கோவிலையும் போட்டுத் தள்ளிருச்சு.

உள்ளுர் பத்திரிகை சும்மா இருக்குமா?  இதுவுமில்லைன்னா வேற செய்தி?  அட்டை வந்து இறங்கிருச்சு.  அட்டையை அடுக்கிட்டாங்க.முகப்பு கண்ணாடி பொருத்தியாச்சு. இதுலே ஒரு கண்ணாடி பழைய  கதீட்ரலில் இருந்து  கொண்டு வந்தது.  அது இதுன்னு பிட்ஸ் போட்டுக்கிட்டே இருந்துச்சு.

ஒருநாள்  நேஷனல் டிவியில் செய்தி...  பெரிய மழையினால் கார்ட்போர்டு நனைஞ்சு ஊறிப்போய்,   சர்ச்சில்  தண்ணி நிக்குது. போச்சுடா.... அஞ்சு மில்லியன்:(  ஆனால்....உள்ளூக்குள்ளே ஒரு சின்ன சந்தோஷம் வந்தது நிஜம்.

ரிப்பேர் செய்யறோமுன்னு  வீடுகளுக்கு  wrap போடுவது போல  அங்கேயும் ப்ளாஸ்டிக்  போர்வை சுத்துனாங்க.


அழிவு பார்க்க வந்துக்கிட்டு இருந்த டூரிஸ்ட் கூட்டம்....  இப்பெல்லாம்  ஆக்கம் பார்க்க வருது.  சுத்திப்பார்க்க மாடி பஸ்ஸெல்லாம்  போட்டுருக்காங்க. இன்னும் பத்தே வருசத்தில் எங்களுக்கு ப்ராண்ட் நியூ சிட்டி, கேட்டோ!


ஆகஸ்ட் 15 க்கு அட்டைக்கோவில் திறப்பு விழா கோலாகலமாக  நடந்துச்சு. மற்றநாள் சனிக்கிழமை தினப்பத்திரிகை முழுசும் இதுதான் செய்தி. அன்னிக்குப்போக முடியலைன்னு  அடுத்த வீக் எண்ட் போனோம்.  பதிவின் முதல் வரி இங்கே வரணும்:-))))

பெரிய  அட்டைக்குழாய்கள் 98. ஒவ்வொன்னும் 20 மீட்டர் நீளம். இதன் எடையே  120 கிலோ  ஆகி இருக்கு.  இங்கே அடிக்கும் காத்துக்கு இது தாங்காதுன்னு  அட்டைக் குழாய்க்குள்ளே மரக்கம்பங்களையும் செலுத்தி இருக்காங்க. எல்லா குழாய்களுக்கும்  பாலியூரித்தீன்  பூச்சு உண்டு. (அப்படியும் ஒழுகியிருக்கு பாருங்க!)



இடிஞ்சு விழுந்த தேவாலயத்தில் இருந்த 'ரோஸ் விண்டோ'  விலிருந்து  சில பாகத்தை எடுத்து  அட்டைக்கோவில் முகப்பில் வரும் 1.2 மீட்டர் உசரம்  இருக்கும் முக்கோண ஜன்னலில் வைக்கலாம் என்று பழையதை  படம் புடிச்சு அதை அப்படியே  கண்ணாடியில் பதிச்சு  கண்ணாடிக் காளவாய்லே சுட்டு எடுத்தாங்களாம்.

கண்டெய்னர்களை  சுத்திவர வச்சு,  அதன் மேல் சட்டம் அடுக்கிக்  அட்டைக் குழாய்களைப் பொருத்தி இருக்காங்க. உள்பக்கமா கண்டெய்னர்களைத் திறந்து அறைகள் அமைச்சு, ஜன்னலும் வச்சதும்  புது ஆட்களுக்கு வெளியிலிருந்து  பார்க்கக் கட்டிடம் போலவே தெரியுது.

முன்வாசக்கதவு கடந்தால் ஒரு பெரிய ஃபோயர். சின்ன ஹால் போல இருக்கு.  அடுத்த கதவைக்  கடந்தால்  சர்ச். 700 பேர்கள் கொள்ளும் என்கிறார்கள். எனெக்கென்னமோ சின்னதாத்தான் தெரியுது.


ரெண்டு பக்கமும்  ஒல்லியா  இருக்கைகள். (தனித்தனி நாற்காலிதான்) நேரெதிரே  சுவற்றில்  இருக்கும் மரச் சிலுவை. கீழே ஒரு நீண்ட மேடை. இதுதான் ஆல்ட்டர் இப்போதைக்கு! பழைய கோவிலில் இருந்து கொண்டுவந்த  பருந்து ஸ்டேண்ட் ( இதன் சரியான பெயர் தெரியலை) இருக்கு.

பழைய கோவிலுக்கு நம்ம சிட்டி கவுன்ஸில் வருசத்துக்கு   ரெண்டு லட்சத்து நாப்பதாயிரம் டாலர் (எல்லாம் மக்கள்  கட்டும் வரிப்பணம்தான்) கொடுத்துக்கிட்டு இருந்துச்சு.  கோவில் நம்ம சிட்டி ஐகான்  ஆச்சே!  இலவச சேவையா பழைய கோவிலை  சரிப்படுத்திக் கட்டித்தர  வல்லுநர்கள் பலர்   நிலநடுக்கம் வந்த சமயமே முன்வந்தாங்க. பல நாடுகளில் இருந்தும் பொருளுதவியும் தரேன்னாங்க.  நாங்களும் தனிப்பட்ட முறையில் தாராளமாத் தர்றோமுன்னு  கெஞ்சினோம். ஆனா...... பிஷப் விக்டோரியாதான் எதுக்கும் சம்மதிக்கலை. கோவிலை இடிச்சே ஆகணுமுன்னு   ஒத்தைக்காலில் நின்னாங்க.  கோர்ட்டுக்குப் போனோம்.  தோற்றோம்:( ப்ரைவேட் சொத்து. அவுங்க என்னமும் செஞ்சுக்கலாமுன்னு  தீர்ப்பு  ஆச்சு.

ஆனால்.... இப்போ அந்தக் காசு 240,000 தர்றயான்னு  கேக்கறாங்க.  ஒரு ஒற்றைச் சொல்தான் நாங்க சொல்வோம்..  'ஊஹூம்'....

அட்டைக்கோவில் நடத்த ஒரு நாளைக்கு  $ 600  செலவாகுதாம். உண்டியலில்  குறைஞ்சது அஞ்சு போட்டுட்டுப் போங்கன்னு  சொல்றாங்க.  கிம்மீ ஃபைவ் கிம்மீ  ஃபைவ்.


அஞ்சு மில்லியன் என்பது இப்போ  கிட்டத்தட்ட  ஏழு மில்லியன் ஆகிப்போச்சுன்னு  ஒரு சேதி. நமக்கென்ன அவுங்க காசுன்னு  இருக்கலாமுன்னா.... அட்டைக் கோவிலுக்கு ஏழா???? இத்தனைக்கும்,  ஜப்பான்கார கட்டிடக்கலை நிபுணர்  Shigeru Ban ஒத்தை பைஸா கூலியா வாங்கிக்கலை(யாம்)  உலக நாடுகளின்  முதல் அட்டைக்கோவில் என்ற பெத்த பேரு கிடைச்சுருக்கு.

'கட்டுனது எதுதான் பட்ஜெட்டுக்குள்ளே அடங்குது',  சொல்லுங்க!


பழைய கதீட்ரல்  முழுசும் இடிச்சு நிரவி புதுசு கட்டப்போறாங்களாம். பழைய கம்பீரமும் கலையழகும் இனி இல்லை. மாடர்ன் டிசைனாம்.  அதைக் கட்டி முடிச்சதும்  அட்டைக்கோவிலை அங்கே மாத்திட்டு,  கல்யாணம் கார்த்திகைன்னு  அட்டையை ஃபங்ஷன் செண்டரா மாத்திருவாங்களாம். அதுவரை தாங்குனா ஆண்டவன் புண்ணியம்!



21 comments:

said...

வியப்பான தகவல்கள்... நன்றி அம்மா...

said...

அட்டைகளை வைத்து ஒரு காஸ்ட்லி விளையாட்டு?????!!

said...

பழமை மாறாமல் அப்படியே கதீட்ரல் சர்ச்சை புதிப்பிச்சால் நல்லா இருக்குமே!!

said...

ரொம்ப கஷ்டம்.ஒருவேலை "பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்பதை தப்பா புரிந்து இருப்பார்கள்,பணம் பத்தும்செய்யும்.அட்டை building செய்யும்

said...

பழைய கட்டிடத்தினை அழகாய் புதுப்பிக்க வேண்டும்.

அட்டை எத்தனை நாள் நிற்கும்....

விரைவில் புது கட்டிடம் அமையட்டும்.

said...

அட்டை வெளிப்பார்வைக்கு அழகு...

பழமை தான் என்றுமே அழகு...

said...

படிப்படியாக அட்டைக்கோவில் உருவாவதை அழகாய்ப் படம்பிடித்துக் காட்டிவிட்டீர்கள். எவ்வளவு செலவு! ஆனாலும் ஒரு மழைக்குத் தாங்கவில்லையே... முதல் பத்தியை வாசித்து வாசித்து ரசித்தேன்.

said...

அட்டையில் கோவிலா என்று வியப்புத்தான் ஏற்படுகிறது.

said...

// சின்னவயசுலே ஜப்பானைப் பத்தி 'டீச்சர்'' சொன்னது.... 'பூகம்பம் அடிக்கடி வருவதால் அங்கே அட்டையில் வீடு கட்டுகிறார்கள்' //

நானும் சின்ன வயதில் பள்ளியில் படித்ததுதான். அட்டைக் கோயில் ஒரு அழகான ரெஸ்டாரெண்ட் போல இருக்கிறது. இப்போது நீங்கள் இருக்கும் இடத்தில் எல்லாம் என்ன மாதிரி கட்டிடம் கட்டுகிறார்கள் என்று தெரியவில்லை. இங்கு மணலுக்கு ஒரே அடிதடி.

said...

அட்டைக் கோயில் அழகோ அழகு!
அதிலும் அந்த "முக்கோணச் சன்னல்"!

//இடிஞ்சு விழுந்த தேவாலயத்தில் இருந்த 'ரோஸ் விண்டோ' விலிருந்து சில பாகத்தை எடுத்து அட்டைக்கோவில் முகப்பில் வரும் 1.2 மீட்டர் உசரம் இருக்கும் முக்கோண ஜன்னலில் வைக்கலாம் என்று//

கிறிஸ்துவ தேவாலயங்களில் பெரும் அழகே = சன்னல் தான்!

Altar (எ) பீடம் அழகு தான் என்றாலும்..
சன்னல்களின் பலப்பல வண்ணம் = மனசை என்னமோ பண்ணும்!

குறிப்பா, சூரிய ஒளி படும் போது, வண்ண வண்ணச் சன்னல் வழியா விழும் ஒளி இருக்கே! Thatz too romantic!
--------

கோபால் சார், இப்போ தான் புதுசா ஞானஸ்நானம் வாங்குன பையன் போலத் தெம்பா வராரு!
மிக்க மகிழ்ச்சி!
உடல் நலத்தில் உரம் சேர்ந்து, உயர்ந்தேலோ ரெம்பாவாய்:)

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

வியப்பை தரிசிக்க பயணிகள் வர்றதும் எங்களுக்கு நல்லதாப் போச்சு. கோஸ்ட் டவுனால்லே கிடந்துச்சு:(

வருகைக்கு நன்றி.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

சீட்டுக்கட்டு (மாளிகை) போலவேதான்:-)))

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ராஜி.

இதைத்தான் சொல்லிக்கிட்டு இருக்கோம். சர்ச் மேலிடம் சட்டை செய்யலையே:(

said...

வாங்க சுபா.

புதுப்பிச்சால் செலவு கூடுமாம்.இன்ஷூரன்ஸ் கிடைச்சும் பணம் போதாதுன்னு சொல்லிக்கிட்டே. இப்படி காசை வீண்செலவு செய்யறாங்கப்பா:(

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அட்டை அம்பது வருசமுன்னு சொல்லி இப்போ இருவதுக்கு வந்துருக்காங்க!

பழைய கதீட்ரலை முழுசுமா இடிச்சுட்டு அங்கே மாடர்ன் கதீட்ரல்கட்டுவாங்களாம்!

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

150 வருச சரித்திரம் போச்சு:(

அதுதான் பலரின் ஏக்கம்!

said...

வாங்க கீதமஞ்சரி.

நானும் நம்மூட்டுச் செல்லங்களுக்கு கோவில் ஒன்னு அமைக்கணுமுன்னு சண்டிகரில் இருந்து பளிங்கு மாடம் வாங்கியாந்தேன். அதில் இப்போ கலசம் இடம் பிடிச்சு உக்கார்ந்துருக்கு.

பேசாம துணி சுற்றிவரும் கார்ட்போர்டு உருளைகளைச் சேகரிச்சு பசங்களுக்கு வீட்டுத்தோட்டத்தில் கோவில் ஒன்னு கட்டினால் என்னன்னு யோசிக்கிறேன் இப்போ!

எப்படியோ அட்டைக்கோவில் ஐடியா கொடுத்துருச்சு பாருங்க!

said...

வாங்க ரஞ்ஜனி.

தென் துருவத்தில் இருந்து வீசும் குளிர் காற்றுக்கு இது எவ்ளோநாள் தாங்குமுன்னு தெரியலையே! அவுங்க சொன்ன 20 வருசம் தாக்குப்பிடிச்சால் உண்மையிலேயே வியப்புதான்!

said...

வாங்க தமிழ் இளங்கோ.

வீடு எப்படிக் கட்டுவோமா? ஆஹா.... உங்களை விடுவதாக இல்லை.

நம்ம வீட்டைக் கட்டுனதையே பதிவா எழுதி இருக்கேன். ஜஸ்ட் 46 பகுதிகள்தான்.

முதல்பகுதி இங்கே. அப்படியே நூல் பிடிச்சுப்போங்க நேரம் இருக்கும்போது.

http://thulasidhalam.blogspot.co.nz/2007/07/1.html

said...

வாங்க கே ஆர் எஸ்.

பொதுவா சர்ச்சுகளில் ஜன்னல்கள்தான் அழகு என்பதே என் எண்ணமும்.

ஸ்டெய்ன்டு க்ளாஸ் விண்டோ கதைகள் பூராவும் சொல்லுமே!

அதில் உள்ள கதைகளைக் கண்டுபிடிச்சுக் கோபாலுக்குச் சொல்லும்போது மனசுக்குத் திருப்தியா இருக்கும் எனக்கு.

said...

பழமைதான் அழகு.