Monday, May 05, 2014

மதரும் மங்கியும் ....

இன்னும் ஒரு  கோவில்  பார்த்துட்டு   இன்றைய சுற்றை முடிக்கணும். சலோ மதர் இண்டியா டெம்பிள்!  அஸ்ஸியில் இருந்து  அரைமணி தூரத்தில் இருக்கு!
பெரிய  மைதானமும்  காம்பவுண்டு சுவருமா இருக்கு இந்த இடம்.  ஒரு பக்கம் கிணறு ஒன்னு.  நிறுவியவரின்  மனதைப் புண்படுத்தாமல்  கோவிலுக்கு(!)  வெளியில் காலணிகளை கழட்டிட்டு வரணுமுன்னு கைகூப்பி  விநயத்துடன் கேட்டுக் கொள்வதாக ஒரு போர்டு. சொன்னபடி செஞ்சோம்.

பெரிய ரெண்டு மாடிக் கட்டிடம். நுழைவு வாசலில்  வந்தேமாதரம்,  காயத்ரி மந்த்ரம்  எழுதி வச்சுருக்காங்க. கூடவே ஒரு ஸ்வஸ்திக் சின்னம்.  உள்ளே கடந்தால்  நாலு பக்கமும் தாழ்வாரம் ஓடும் வகை.  நடுவில் ஒரு பெரிய முற்றம். முற்றம் நிறைச்சு பாரதநாடு  3Dயில்.  இது நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்குமுன் இருந்த நிலையில்.  துண்டாடப்படாத  முழு இந்தியா ! வடக்கே பரந்து கிடக்கும் இமயமலை  தன்  ஆயிரக்கணக்கான  சிகரங்களுடன்!



  நாட்டின் மற்ற மலைகளும் குன்றுகளும் அவைகளின் அளவுக்கேற்றபடி!  எல்லாம் பளிங்கில் செஞ்சது!  ராமேஸ்வரத்தை  அடுத்து  இலங்கைத் தீவுகூட இருக்கு!  நாலு பக்கமும் நாட்டைச் சுற்றிப்பார்க்கலாம். முக்கியமா படம் எடுத்துக்கலாம். க்ரேட்!  இங்கேமட்டும் நோ ஃபோட்டோன்னு இருந்தால் என் மனசு உடைஞ்சே போயிருக்கும், கேட்டோ!

 பாபு ஷிவ் ப்ரஸாத் குப்தா என்ற தேசபக்தர், தன்னுடைய சொந்த செலவில் இந்த பாரதமாதா கோவிலைக் கட்டி இருக்கார். இதுலே விசேஷம் என்னன்னா.....  கட்டி முடிச்ச கோவிலைத் திறந்து வச்சது நம்ம மஹாத்மா காந்தியேதான்!


பாபு ஷிவ் ப்ரஸாத் குப்தா, வாரணாசியில் பிறந்தவர். பெரிய ஜமீந்தார் குடும்பம். தொழிலதிபரும் கூட.   சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகிச்ச  தலைவர்களில் ஒருவரா இருந்திருக்கார்.  அந்தக் காலக்கட்டத்தில் முக்கிய தலைவர்களா இருந்த மஹாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, பால கங்காதர திலக், பண்டிட் மதன் மோஹன் மாளவியா போன்ற தேசியத் தலைவர்களின் நெருங்கிய தோழர். மேற்பட தலைவர்கள்  காசி நகரம் போகும்போதெல்லாம் தங்குவது  இவருடனே!


 'மஹாத்மா காந்தி காசி வித்யாபீடம்' என்ற கல்லூரியை நிறுவியவரும் இந்த பாபு ஷிவ் ப்ரஸாத் குப்தா அவர்களே.  சுதந்திரப்போராட்டத்தில்  ஈடுபட்டு, தங்கள் கல்வியை  தொடரமுடியாமல் போன இளைஞர்களுக்காகவே  ஆரம்பிச்சது இது.  உள்ளூர் மக்களுக்காக  ஒரு இலவச மருத்துவமனை கூட கட்டி விட்டுருக்கார்.  இதைத்தவிர  'ஆஜ்' (இன்று)  என்ற தினப்பத்திரிகையும் (ஹிந்தி மொழி) இவருடையதே!  அந்தக் காலக்கட்டத்தில் வந்த தினசரிகளில் மூத்தது இது. ஆரம்பித்தவருசம் 1920.

பாரதத்தின்  முதல்  காந்தி ஆஸ்ரமம்  நிறுவ  150 ஏக்கர் நிலத்தை நன்கொடையாகக் கொடுத்த தயாளர். கதர் நூல்,  கதர் துணிகள்  உற்பத்திக்கும்   விற்பனைக்கும்  இந்த ஆஸ்ரமம் முன்னோடி.

தினமும் காலை ஒன்பதரைக்குத் திறந்தால்  கோவிலை மூடுவது மாலை /இரவு எட்டு மணிக்குத்தான். வருசம்பூராவும் திறந்து வைக்கிறாங்க. (9.30AM  - 8 PM  Daily ) நாட்டுமக்களுக்கு அர்ப்பணித்த பெரிய மனசைப் பாராட்டத்தான் வேணும். நுழைவுக் கட்டணம் கூட இல்லை.

பனாரஸ் ஹிந்து யுனிவர்சிட்டி ஆரம்பிக்கலாமுன்னு  மதன் மோஹன் மாளவியா அவர்கள் நிதி திரட்ட ஆரம்பித்தவுடன்,  குப்தாஜிதான் முதல் ஆளா  ஒரு லட்சத்து ஓராயிரம் ரூபாயை  நன்கொடையாகக் கொடுத்தார்.  1912/13 இல்  இது மிகப்பெரிய தொகை!!!!    புரவலர் என்ற பட்டத்துக்கு முற்றிலும் தகுதியானவர், இல்லே? காந்தி இவரைப் பாராட்டி ராஷ்ட்ர ரத்னா என்ற பட்டம் கொடுத்து கௌரவிச்சு இருக்கார்.


இருபது ஏக்கர் பரப்பு உள்ள வளாகம். இதில்  'கோவில்' கட்டிடம் மட்டும்  எழுபத்தி ஐந்தாயிரம் சதுர அடிகள்(75,000) !  இந்தக் கட்டிடம் கூட இவர்  எழுப்பலையாம்.....  அந்தக் காலகட்டத்தில்  வாரணாசியின் கலெக்டர்  Mr. Catley, அவர்களுக்காக  ஒரு வெள்ளையர்(  Sir Edwin Lutyens)  டிஸைன் செஞ்சு,கட்டித்தந்ததை    இவர் வாங்கி இருக்கார்.பெரிய முற்றம் பார்த்ததும் ஐடியா வந்துருக்கும் போல! . கட்டிடம் வாங்கியது 1910 ஆம் ஆண்டு. Seva Upawan, என்று  கட்டிடத்துக்குப் புதுப்பெயர் கொடுத்தவர் மஹாத்மா காந்தி. அதே பெயரில்தான் இன்றும் இருக்கு.

சரி. கோவிலில் மூலவர் சிலை என்ன மாதிரி? ன்னுகேட்டால்..... மூலவரே அந்த முற்றத்தில் இருக்கும் பாரதம்தான்! அகண்ட பாரதம்.!!!

ஒரு வருத்தமான சேதி என்னன்னால்.....   தேசத்தின் மீது  இவ்வளோ அன்பு வச்சுருந்த குப்தாஜி,  நாடு சுதந்திரம் வாங்குனதைப் பார்க்காமல்  1944 இல்  சாமிகிட்டே போயிட்டார்:( அப்போ அவருக்கு  வயது  61தான்.  இன்னுமொரு மூணு வருசம் இருந்திருக்கப்டாதோ:(
கெட்டதில் நல்லதுன்னா....   அவருடைய  அகண்ட பாரதம்  துண்டானது அவருக்குத் தெரியாமலேயே போயிருச்சு பாருங்க. அது!

நிறைஞ்ச மனசுடன், வண்டிக்குத்  திரும்பினால்... அங்கே சின்னதா ஒரு கூட்டம்.  நம்ம கைலாஷும்  ரசிச்சுக்கிட்டு நிக்கறார்.  ரெண்டு குரங்குகளுடன் வேடிக்கை காமிச்சுக்கிட்டு இருக்கார் ஒருத்தர்.   பாம்பு வைக்கும் ஓலைக்கூடை ஒன்னு பக்கத்துலே இருக்கு.

 பொண்ணு காசைக் காமிச்சதும்  நொடியில் தாவிப்போய் வாங்கிக்கறா.  இன்னும் கொஞ்சம் காசு கொடுத்தால்  பக்கத்துலே நின்னு போஸ் கொடுக்கறாள்.


பையர்?  கோபால் கொடுத்த ரூபாய் நோட்டை எட்டி வாங்கிக்கிட்டார்.  சட்டைப்பையில் கை விட்டவுடன் தரப்போறாங்கன்னு  தெரிஞ்சுக்குது. அப்படி பழக்கி வச்சுருக்கார் 'அப்பா'!

எதிரி நாட்டு  வில்லன்களை  என்ன செய்யலாம் என்று கேட்டதற்கு ........  'அதெல்லாம் ஷூட் பண்ணிருவொம்லெ !'   ஆக்‌ஷனில் காமிச்சது நல்லா இருக்குன்னாலும்........  பாவம். அதுகளுக்கு வன்முறை சொல்லித் தரணுமா:(  போகட்டும்.... அது துப்பாக்கின்னு அதுகளுக்குத் தெரியவா போகுது.

அஞ்சு நிமிசம் வேடிக்கை பார்த்துட்டு நாங்களும் கிளம்பி அறைக்கு வந்து சேர்ந்தோம். சும்மா சொல்லக்கூடாது, ரெண்டும்  செம அழகு. இதுலே கண்ணுக்கு மை தீட்டி காதளவோடிய கண்களஆக்கி வச்சுருக்கார் 'அப்பா'

நாளைக்கு வேற ஒரு இடத்துக்குப் போய் பார்க்கலாமா?

தொடரும்..........:-)






18 comments:

said...

பாரதமாதா கோயில் படங்களும் செய்திகளும் மெய்சிலிர்க்க வைக்கின்றன ஐயா

said...

கோவிலில் மூலவர் சிலை என்ன மாதிரி? ன்னுகேட்டால்..... மூலவரே அந்த முற்றத்தில் இருக்கும் பாரதம்தான்! அகண்ட பாரதம்.!!!//


அருமையான பாரதமாதா கோவில்.
அகண்ட பாரதம்.
பகிர்வுக்கு நன்றி.
நாங்கள் பார்க்க வில்லை இப்போது உங்கள் பதிவில் பார்த்து விட்டேன்.

said...

எங்கள் மனதும் உடைஞ்சே போயிருக்கும்... படங்கள் அனைத்தும் அருமை... நன்றி அம்மா...

said...

இவ்வளவு ஆசையாக பாரதமாதவிற்குக் கோவில் கட்டியவர், இந்தியா உடைந்ததைப் பார்த்திருந்தால், எத்தனை மனம் உடைந்து போயிருப்பார்? அதனால்தான் சுதந்திரம் வந்ததையோ, இந்தியா பிரிந்ததையோ பார்க்காமலேயே இறைவனடி சேர்ந்துவிட்டார் என்று தோன்றுகிறது.

முழு இந்தியாவைப் பார்க்க நம் மனத்தில் சந்தோஷமும், சங்கடமும் ஒரே சமயத்தில் ஏற்படுகிறது, இல்லையா?

said...

பாரதமாதாவுக்குக் கோயிலா... வியப்புதான். அதுவும் விடுதலை வாங்குறதுக்கு முன்னாடியே.

கோயில் நல்லா அமைப்பா இருக்கு. நல்லா யோசிச்சுக் கட்டியிருக்காங்க. படங்கள் அருமை.

ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்... அதுவும் 1940ல... அடேங்கப்பா.. எவ்வளவு பெரிய தொகை. கொடுக்க நல்ல மனம் இருந்திருக்கு.

குரங்குகள் அழகு. மைவிழிக் குரங்குகள்.

said...

அருமை !!அருமை!! இப்படி ஒரு கோவில் இருக்குன்னே தெரியாது . பகிர்ந்தமைக்கு நன்றி :)

said...

பழைய இந்தியா. வெகு நட்களுக்கு இந்தப் படம்தான் மேப்பாக இருந்தது. கொஞ்சமே கொஞ்சம் பாகிஸ்தானிற்குக் கோடு. என்ன அழகான் படம். வரைந்து வரைந்து மனசில் பழகினது. நல்லமனிதர் சங்கடங்களைப் பார்க்காமல் போய்ச் சேர்ந்தார் துளசி. எத்தனை படங்கள் ....அத்தனையும் பார்க்கப் பார்க்க அழகு. குரங்கழகனும் அழகியும். சூப்பர். கையில் துப்பாக்கி. இந்த ஊரில் நடக்கும் கொடூரங்களைப் பார்த்தால் மனம் நடுங்குகிறது.

said...

காசி பயணத்தில் செல்லாத இடங்களில் இதுவும் ஒன்று......

குரங்கன்கள்.... - வெகு அழகு

said...

வாங்க கரந்தை ஜெயக்குமார்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஐயா என்பதை விட அம்மா என்றால் மகிழ்வேன்:-)

said...

வாங்க கோமதி அரசு.

நாம் ஹரித்வாரில் ஒரு பாரதமாதா கோவில் பார்த்தோமே நினைவிருக்கா?

எட்டுமாடிக் கட்டிடம். மாநிலங்களாப் பிரிச்சு வச்சது! அதைப்போல் இல்லாமல் உண்மையில் 'அகண்ட பாரதமா' இருந்தது அற்புதம்தான்!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

மாடி ஏறிப்போயிருந்தால் படங்கள் இன்னும் பளிச்ன்னு இருந்திருக்குமேன்னு இப்ப தோணுது.

திருப்தியில்லா துளசி:(

said...

வாங்க ரஞ்ஜனி.

உண்மைதான். சங்கடம் மனசின் மூலையில் இன்னும் இருக்கு:(

said...

வாங்க ஜி ரா.

உண்மையான தேசபக்தியைப் பார்க்கும்போது, அவர் எவ்வளவு உயர்ந்தவர் என்று மதிப்பும் மரியாதையும் மனசில் தோன்றுகிறது.

மேன்மக்கள் மேன்மக்கள்!

said...

வாங்க சசி கலா.

எனக்கும் முதலில் பாரதமாதா கோவில் என்றதும் ஹரித்வார் நினைவு வந்தது. போகவேணாம்னு கூட ஒரு விநாடி நினைச்சேன்:(

நம்ம கைலாஷும், 'பாரத் மாதா மந்திர் சலோ'ன்னதும், 'உதர் குச் பி னஹி ஹை'ன்னார்!

நல்லவேளை மிஸ் பண்ணலைன்னு இப்போ மகிழ்ச்சி.

ஹரித்வார்: http://thulasidhalam.blogspot.co.nz/2011/03/blog-post_11.html

said...

வாங்க வல்லி.

ஆமாம்ப்பா.... அட்லஸில் முழு இந்தியாதான் இருக்கும் . பாகிக்கு ஒரு கோடு மட்டும். எனக்கும் நல்லாவே நினைவிலிருக்கு.

இந்தியாவின் படம் வரைகன்னதும் சட்னு வரைஞ்சுருவோம் இல்லே!

பெரியவர் போனதும் நன்மைக்கே!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அதான் அடிக்கடி போயிட்டு வர்றீங்களே! அடுத்த முறைக்கு வச்சுக்குங்க:-)

said...

அடடா! அற்புதம் நம்ம இலங்கையும் பாரதமாதாவுடன்.

said...

ஆஹா ஏராளமான விவரங்கள், செய்திகள். அருமை