Friday, October 03, 2014

அஞ்சஞ்சா..... மும்மூணா.... இப்படி இருந்தால் தப்பா?

முதலில்  அனைத்து வாசக நண்பர்களுக்கும் விஜயதசமிக்கான இனிய வாழ்த்து(க்)கள். நவராத்ரின்னு ஒன்பது நாட்களும், தசரான்னு  மொத்தமாச் சேர்த்தால்  பத்து நாட்களுமா  இருக்கும்  விழாக்காலம், இந்த வருசம் , ஒன்பது நாட்களிலேயே  தசராக் கொண்டாட்டமா ஆகி இருக்கு.  நவமி தினத்தில் பாதியை தசமி எடுத்துக்கிச்சு! பதிவராக ஆனபின் இப்படி வருவது ரெண்டாம் முறைன்னு நினைக்கிறேன். (அதெல்லாம் பழசை எடுத்துப் பார்த்துட்டோம்ல!)
இந்த அழகில், நம்ம வீட்டுலே வழக்கமா தசராவையொட்டி வரும் வார இறுதியில் நடக்கும் விஜயதசமிக்கான(!) பூஜை,   இந்த முறை இன்னும் கூடுதலா எட்டு நாள் தள்ளிப்போய் இருக்கு.  இடும்பியின் கொலுக் கொண்டாட்டம்  அதுவரை தொடரும்.  சுண்டலுக்கு பயந்தோ என்னவோ, நவராத்ரி விழா சமயம் மூணாம் நாளிலிருந்தே  கோபால் 'எஸ்' ஆகிட்டார்!  அதுக்காக அப்படியே விட்டுற முடியுதா?
.
இந்த ஒன்பது நாட்களும், நம்ம வீட்டுச் சாமிகள் (கொலுச்சாமிகளையும் சேர்த்துத்தான்)  ஆரோக்கியமான நிவேதனங்களை மட்டுமே சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க. அவுங்களுக்கு மட்டும் கலிகால ஹெல்த் கான்ஷியஸ், கவனத்துக்கு வந்துருக்காதா என்ன?  கோபால் எஸ்ஸாகுமுன் ஒருநாள்  சுண்டல் செஞ்சது  உண்மை!

கேஸட் வச்சு அஞ்சு படிகள் கட்டுன காலம் போய், நிரந்தரக் கொலுப்படி  போனவருசம் வந்துட்டதால்,  கொலுப்படிச் சமாச்சாரம் இப்ப கொலுவறை சமாச்சாரமா மாறிப்போச்சு. உண்மையைச் சொன்னால் நிரந்தரக்கொலு!  போன வருசம், படிகள் கிடைச்ச முதலாண்டு.  கொலு முடிஞ்சதேன்னு  பொம்மைகளை எடுத்துட்டோம். ஆனால்  காலிப் படிக்கட்டுகளை, கராஜ்லேயோ, தோட்டத்தில் இருக்கும் ஷெட்லேயோ கொண்டு போய்ப் போட மனசு வரலை. உண்மையைச் சொன்னால் பொம்மைகளை விட அழகா அம்சமா இருப்பது இந்தப் படிக்கட்டுகளே:-)  அழுக்குப் படிஞ்சு வீணாகிடுமோன்னு ஒரு பயம் வேற.  சாமி அறையிலேயே இருக்கட்டுமுன்னு விட்டு வச்சோம்.

எதாவது ச்சும்மாக் கிடந்ததாக சரித்திரம்  உண்டா?   ஒன்னு ரெண்டு குட்டி பொம்மைகளை வச்சுருந்தேன்.  இந்தப் படிகள் கிடைக்குமுன்  எங்கேயாவது  அஞ்சடுக்கு,மூணடுக்குன்னு  ஷெல்ஃப்களைப் பார்த்தால் ஒருவேளை கொலுவுக்குச்   சரிப்படுமோன்னு  வாங்கி வந்து  வைக்கிறதுண்டு.  அதுவும் கொலு வரும்வரை  ச்சும்மாக் கிடக்குமோ?

இதுக்கிடையில் நம்மூரில் புதுசா ஒரு  LED lights மட்டுமேயான  ஒரு  கடை வந்துருச்சு. கடைக்காரர்  ஒரு இந்தியர்.  போய்ப் பார்த்துட்டு,  ரெண்டு  விளக்குகள்  வாங்கியாந்தோம்.  அஞ்சு மீட்டர் நீளமுள்ள ஸ்ட்ரிப் லைட்ஸ்  ஒன்னு கொலுப்படிக்கட்டுகளுக்காகன்னு  வாங்கியாந்தது,  அதுக்குச் சரிப்படலை:(  சாமிக்குக்கொடுத்துட்டேன்.  இன்னொன்னு க்றிஸ்டல் வகை.  ரிமோட் கண்ட்ரோலோடு இருக்கு.  பதினாலு வகை நிறங்களை மாற்றிமாற்றிக் காட்டும். நமக்கு விருப்பமுன்னா  நமக்குப் பிடிச்ச ஒரு நிறத்திலேயும்  எரியவிடலாம்.



கிறிஸ்டல் கனம் அதிகமா இருக்கேன்னு அதுக்கு  வேற மாதிரி  (சொந்தமா யோசித்து!) ஒரு ஐடியா செஞ்சேன்.  அதை நிறைவேற்றிக் கொடுத்தார் நம்ம கோபால். இப்ப அதை எங்கே வைக்கலாமுன்னு யோசனை. நம்ம ராஜலக்ஷ்மி (ரஜ்ஜூ) தான்  சரியான இடத்தைக் காமிச்சுக்கொடுத்தாள். என் செல்லம்!  அங்கே வச்சதும் படு பொருத்தமா அமைஞ்சு போச்சு.  'ஆசையே கூடாது'ன்னு சொன்னவரை அப்படியே விடமுடியலை பாருங்களேன்!  அத்தனைக்கும் ஆசைப்பட வச்சுட்டோம்ல:-)

இன்னொரு ஹோம் ஷோவில் புகையில்லா மெழுகுவத்தி கிடைச்சது.  இதுவும் நிறம் மாறும் வகையே!

இன்னொரு குழுவில், கொலு வைக்கும்போது  பல்லாங்குழி சோழிகளுடன், கோலாட்டக் குச்சிகள், அம்மானை ஆட  சின்ன உருண்டைக் கற்கள் இப்படி சில சமாச்சாரங்களைக் கட்டாயம் வைக்கணும் என்று சொல்லி இருந்தார்கள்.
அட! அப்படியா!  செஞ்சுருவொம்லெ:-) நம்மூட்டுக் கோலாட்டக் குச்சிகளுக்கும், பல்லாங்குழிக்கும்  மறுவாழ்வு  கிடைச்சது.


இந்தக் கொலுவுக்கு, கொலுவுக்குன்னே  நினைச்சு இப்ப ஏகப்பட்ட அலங்காரங்கள்  சேர்ந்துதான் போச்சு.  அதனால்....  இனி  வரும் கொலுக்களுக்குப் புதுசா அலங்காரங்கள் ஒன்னும் வாங்க வேணாமுன்னு  இந்த வருசம், (இப்போதைக்கு ) முடிவு செஞ்சுருக்கேன். (இதை வாசிக்கும் கோபால் மனம் மகிழட்டும்!)

போகட்டும், இப்பச் சொல்லுங்க.... அஞ்சஞ்சா..... மும்மூணா.... இப்படி இருந்தால் தப்பா?



சாமி அறை சின்னதா இருக்குன்னு இப்பத்  தோண ஆரம்பிச்சு இருக்கே... என்ன செய்யலாம்?


அனைவருக்கும் இனிய விழாக்கால வாழ்த்து(க்)கள்.




15 comments:

said...

போகட்டும், இப்பச் சொல்லுங்க.... அஞ்சஞ்சா..... மும்மூணா.... இப்படி இருந்தால் தப்பா?//

தப்பே இல்லை.

எல்லாம் அழகு.
புத்தரை இப்படி ஆசைபட வைத்துவிட்டீகளே!

said...

புத்தருக்கு வகைவகையா நகைநட்டெல்லாம் போட்டு அவரைப் பார்த்து எங்களை ஆசைப்பட வைத்துவிட்டீர்களே!
கொலு எப்படியிருந்தாலும் அழகுதான்!
ஜமாயுங்க!

said...

வாங்க கோமதி அரசு.

ஆஹா.... தப்பே இல்லை!!!

புத்தர் ஆசைப்பட்டுத்தான் நம்மூட்டுக்கு வந்துருக்கார். அப்ப ஜோதியில் கலந்துக்க வேணும்தானே:-)

said...

வாங்க ரஞ்ஜனி.

அவருக்கு நேரம் சரி இல்லாம நம் கையில் மாட்டிக்கிட்டாருன்னு சொல்ல முடியாதுப்பா.

அங்கங்கே பாருங்க...அஞ்சரை டன் சொக்கத் தங்கம்!!!!

said...

சாமி அறை சின்னதா இருக்குன்னு இப்பத் தோண ஆரம்பிச்சு இருக்கே... என்ன செய்யலாம்?

தொப்பிக்குத்தகுந்த மாதிரி தலை பெரிசாகாதா...!

said...

ஆஹா. உலக மஹாக் கொலுவா இருக்கும் போல இருக்கே. ரங்கநாதரைக் காணமே .இல்ல எனக்குத்தான் தெரியலையா. நல்ல அலங்காரம். இது நவரத்தினக் கொலு ஆகிட்டது பாருங்க. வண்ணத்துக்கு வண்ணம். கல்லுக்குக் கல்லு. உங்க வீட்டுக்கு வந்தா என்னையும் உட்கார வச்சு அலங்காரம் செய்திருப்பீங்க. இத்தனை ஆசையா யார் அழைக்கப் போகிறார்கள் நவராத்திரி நாயகியை. அற்புதம் பா. இனிய விஜயதசமி வாழ்த்துகள்.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

//தொப்பிக்குத்தகுந்த மாதிரி தலை பெரிசாகாதா...!//

இந்த நம்பிக்கையில்தான் நம்ம லக்ஸ்க்குத் தைத்த பாவாடை நீளம் கொஞ்சம் அதிகமா வச்சுட்டேன். வளர்ற பொண்ணு, வளர்ந்துறமாட்டாளா?

இப்பப் பார்த்தா எதோ 'ஸ்டில்ட் வாக்கர்'போல உசரமா இருக்காள். பக்கத்துலே நிக்கும் பெருமாள் கண்களில் வியப்பு:-)

said...

வாங்க வல்லி.

ரங்கநாதர், எப்பவுக்ம் சாமி மேடையில் நம்ம ஆஞ்சிக்குப் பக்கத்துலே!

ரெண்டுபேரும் படுத்துண்டே பேசிப்பா:-)

கிளம்பி வாங்க. அலங்காரம் பண்ண நான் ரெடி!

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

தனிமடல் ஒன்னு ரெண்டு நாளுக்கு முன்னால் அனுப்பினேன். பார்க்கலையா?

said...

சிறந்த பக்திப் பதிவு
தொடருங்கள்

said...

டீச்சர் இதை ஒத்துக்க முடியாது.

ஒவ்வொரு நாளும் என்ன சுண்டல்னும் பட்டியல் போடனும் :)

போட்டிருந்த நகை நட்டு பட்டு பீதாம்பரம் எல்லாம் தூக்கிப் போட்டுட்டுப் போன சித்தார்த்தன் புத்தன் ஆனான். அந்தப் புத்தனை சித்தார்த்தனா ஆக்கி யோசதரை கிட்ட சேத்திருவீங்க போல. :)

said...

கொலுவை பாத்துட்டே இருக்கலாம் போல அவ்வளவு அழகா இருக்கு!.. புத்தர் முன்னாடி இருக்கும் க்றிஸ்டல் கண்ணக் (அங்க இங்க நகரவிடாம) கட்டுது!...கொலு அறை அலங்காரங்கள்லருந்து நானும் நிறைய டிப்ஸ் எடுத்துக்கிட்டேன்..

said...

வாங்க யாழ்வாணன்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஜிரா.

தினமும் சுண்டல் என்றில்லை. ஆனால் ததிபாஸ்தா, லாப்ஸி பொங்கல், கப்பக்கிழங்கு புட்டு உட்பட வகைவகையா நாளுக்கு ஒன்னுன்னு செஞ்சு சாமிக்குக் கொடுத்தாச்சு:-)

//அந்தப் புத்தனை சித்தார்த்தனா ஆக்கி யோசதரை கிட்ட சேத்திருவீங்க போல. :)//

இல்லையா பின்னே? கடமையைச் செய்யாமல் மனைவியை அம்போன்னு விட்டுட்டுப்போறவங்களை எனக்குப் பிடிக்காது:(

said...

வாங்க பார்வதி.

சரியாப்போச்சு.... நான் உங்க தகவல்களில் இருந்துதான் பல்லாங்குழி, கோலாட்டக்குச்சி சமாச்சாரங்கள் எல்லாம் தெரிஞ்சுகிட்டேன்.

நீங்க என்னன்னா.... இங்கே இருந்து டிப்ஸ் கிடைச்சதுன்னு சொல்றீங்க!

உண்மையான தகவல் பரிமாற்றம் நடக்குது:-)))

அந்த க்றிஸ்டல் வெவ்வேற நிறங்களில் ஜொலிக்கும்போது உண்மையிலேயே ரொம்ப அழகா இருக்கு!

said...

அழகியகொலு. வாழ்த்துகள்!