Friday, January 30, 2015

வானத்தில் ஒரு வெள்ளைக்குதிரை!


பட்டத் திருவிழா நடக்கப்போகுதுன்னு எங்கூர் சம்மர் டைம்ஸ் ஈவன்ட் புக்கில் போட்டுருந்தாங்க.  சிட்டிக் கவுன்ஸில் ஸ்பான்ஸர் செய்யும்  ஐட்டங்களில் இதுவும் ஒன்னு.  வருசாவருசம்  நம்ம  சிட்டி கவுன்ஸில், சம்மர் டைம்ஸ் கேலண்டர் புத்தகம் ஒன்னு போட்டு வீட்டுவீட்டுக்கு (நம்ம தபால் பெட்டிக்கு) அனுப்பிருவாங்க.

பலசமயம், இந்தப் புத்தகமும் குப்பைப் பேப்பரோடு பேப்பராக் காணாமப் போயிரும். அப்புறம் ஒரு நாள் முழிச்சுக்கிட்டுத் தேடோ தேடுன்னு தேடியும் கிடைக்கலைன்னா.....பேசாம பக்கத்துலே இருக்கும் எதாவது சிட்டிக்கவுன்ஸில் லைப்ரரிக்குப்போய் எடுத்தாறலாம். இதுக்குள்ளே இதை மறந்து போய் பல நிகழ்ச்சிகளைக் கோட்டை விட்டுருப்பேன்:(
இந்த முறை கொஞ்சம் கவனமா இருந்து புத்தகத்தை எடுத்து  நம்ம வீட்டு லைப்ரரியில்(!) வச்சேன்.

எங்க கோடைகாலம் டிசம்பர் முதல் தேதி முதல்  ஃபிப்ரவரி கடைசி நாள் வரை என்பது ஒரு கணக்கு. கூடக் கொஞ்சம் கொசுறு போட்டுத்தான் தரும் சூரியன் என்பதால் மார்ச் பாதிவரையும் (கிடைக்கும்வார இறுதிகளைப் பொறுத்து)  நிகழ்ச்சிகள் நடத்திருவாங்க. இதுலே டிசம்பர் பிறந்ததும் வரப்போகும் க்றிஸ்மஸ் பண்டிகைக்குஏற்பாடு செய்யணுமுன்னு சனம் ஆலாப் பறந்து பறந்து ஷாப்பிங் செஞ்சுகிட்டு இருப்பதால்  கோடை  முதல் மாசக் கொண்டாட்டத்தை அவ்வளவாக் கணக்கில் எடுத்துக் கொள்ளமாட்டோம்.

ஆனால் எப்படியும்  ஃபயர் ஒர்க்ஸ் மட்டும் கூடியவரை தவறவிடுவதில்லை. வானவேடிக்கை நாட்களில் மாலை 6 மணிக்கே இசை நிகழ்ச்சிகள் ஆரம்பிச்சு  நடந்துக்கிட்டு இருக்கும். நியூஸி வந்த புதிதில் போய்வந்துக்கிட்டுத்தான் இருந்தோம்.அப்புறம் வரவர   'போயிட்டுப்போகுது, இளையராஜா நிகழ்ச்சியா பாழாப்போகுது'ன்னு ஒரு மெத்தனம் வந்துருச்சு. அதனால்  ஒரு ஒன்பதரை மணி வாக்கில்  கிளம்பிப்போய்  சரியாப் பத்துமணிக்கு பட்டாஸ் விடும் நேரத்தில்   அங்கே  மைதானத்தின் பக்கம்  சாலை ஓரம் வண்டியை நிறுத்திட்டு, காரில் இருந்தே  வானவேடிக்கையைப் பார்த்துவிட்டு வீடு வருவது வழக்கம். இந்த வருச நியூ இயர் ஈவ் நிகழ்ச்சிக்கு இப்படிப் போனால் நம்மைப்போலவே  நினைக்கும் சனம் ஏகப்பட்டது இருக்குன்னு தெரிஞ்சது:-))))
மேலே: புதுவருசம் பொறந்தப்ப:-)

குடும்பத்தோடு கலந்துகொள்ளும் வகையில் இருக்கும் நிகழ்வுகள் எல்லாம்  வார இறுதிகளுக்கே நேர்ந்துவிட்டுருக்கும் என்பது நமக்கு(ம்) ஜாலி.
 இந்த வருசம் உலகக்கோப்பை க்ரிக்கெட் போட்டி நம்மூரில் நடப்பதால்  ஃபிஃப்ரவரி 12 தேதி மாலை  ஓப்பனிங்  ஸெரிமனியும் வா(ண)ன வேடிக்கையும் கூடுதல் கவர்ச்சி.

போன சனிக்கிழமை (ஜனவரி 24)  பகல்  ஒன்னரைவரை வீட்டுவேலையே சரியாக இருந்துச்சு. சாப்பாடு ஆனதும், இன்றைய நிகழ்ச்சி எதேனும் உண்டான்னு சம்மர்டைம்ஸ் பார்த்தால்  (kite day) கைட் டேன்னு போட்டுருக்கு! பகல்  ஒன்னு முதல் நாலு மணி வரை.

நம்ம வீட்டில் இருந்து  நியூ ப்ரைட்டன் கடற்கரை  சுமார் 19  கிமீ தூரம்தான். சிட்டிக்குள்ளே போகும் பாதை என்பதால்  அரைமணியாவது ஆகும். கிளம்பினோம். எங்கூரில் நிலநடுக்கம்வந்து ஊரில் பாதி அழிஞ்சுபோன கதை தெரியுமோ?  அப்படியா? தெரியாதே என்பவர்கள் இங்கே பார்க்கலாம்,  அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  இந்த நியூ ப்ரைட்டன்னும் உண்டு.
மேலே:  நிலநடுக்கம் 2011 


 கிழித்தெறியப்பட்ட சாலைகளை  அப்போது பழுது பார்த்து ஓரளவு சரி செஞ்சுருந்தாங்கன்னாலும், ( இந்த தாற்காலிக பழுது பார்த்ததே நாலுவருசம்  ஆச்சு. இன்னும் நல்லாத்தான் இருக்கு ) இன்னும் நல்ல சாலையாக  இருக்கணுமேன்னு  தொடர்ச்சியா  ஊர்முழுக்க சாலை மேம்பாடு நடந்துக்கிட்டு  இருக்கு இந்த நாலு வருசங்களாக. அதனால் ஒரு குறிப்பிட்ட இடத்தில்  வேலை நடப்பதால்  மாற்றுவழியில் போகணுமுன்னு அம்புக்குறியோடு அறிவிப்பு பார்த்து  அந்த வழியில் போய்க்கிட்டு இருக்கோம்.  நகரின் அத்தனை வண்டிகளும் ஊர்வலம் போற தினுசில்  மெதுவான  நகர்தலில்.  நாமும்  அங்குலம் அங்குலமா முன்னேறிக்கிட்டு இருக்கோம்.  சாலை விதிகளைக் கண்டிப்பாகப் பின்பற்றும் மக்கள் என்பதால் எல்லாமே ஒரு ஒரு ஒழுங்கோடு முன்னேறுது.


'இங்கே இருக்கு பாரு, நாம்ம  தேடிக்கிட்டு இருந்த  நர்ஸரி'ன்னார் கோபால்.  அட!  ஆமாம்.  நாம் இந்தியாவில் கொஞ்சநாள் இருந்துட்டு நியூஸி   திரும்பி வந்தப்ப,  நம்ம தோட்டத்துச் செடிகளெல்லாம்  போச்சுன்னு ஒப்பாரி வச்சேன். மீண்டும் தோட்டம் போட  மலிவுவிலை நர்ஸரிகளைத் தேடுனபோது உள்ளுர் பத்திரிகை சொன்ன  இதுக்கு வந்து நல்ல நல்ல பூச்செடிகளை வாங்கினோம்.  அப்புறம் காலப்போக்கில் இந்த நர்ஸரி விலாசம் மனசில் தங்காமல் போச்சு:(
இப்போ தேடிப்போன மூலிகை காலில் ஆப்ட்டது போல்:-)  பெயர், விலாசம் எல்லாம் சரியாப்பார்த்து வச்சுக்கிட்டோம்.



கடற்கரை டவுனுக்குப்போய் சேரும்போதே  மூணு மணிக்கு  சமீபம். பார்க்கிங் கிடைக்காமல் சுத்தோ சுத்துன்னு  சுத்த வேண்டியதாப் போச்சு. வந்தவர் எல்லாம் தங்கிவிட்டதால்  அந்த மண்ணில் நமக்கு இடமில்லை!  எந்த வண்டியாவது  கிளம்பும் நிலையில் இருந்தால் அதுக்குப் பத்துப்பேர் காத்திருக்காங்க.  ஒருவழியா பார்க்கிங் கிடைச்சு  வண்டியை நிறுத்திட்டு  சாலையைக் கடந்து எதிர்ப்புறமிருக்கும் மணல்மேட்டில் ஏறிப்போனோம்.

தலைக்குமேல் காற்றாடிகள் . முதலில் தூரத்தில் இருந்து பார்த்தப்பவே அசையாமல் வானத்தில் மிதக்கும் உருவங்களைப் பார்த்திருந்தோம். காற்றே இல்லையோ.... எல்லாம்  ஒரே இடத்தில் அப்படியே நிக்குதே!

ஏகப்பட்ட கூட்டம். நம்மூர் க்றிஸ்மஸ் பரேடுக்கு அடுத்து இவ்ளோ மக்கள்ஸ் பார்ப்பது எனக்கு  முதல்முறை! அறுபதினாயிரம் பேர் வந்தாங்கன்னு  மறுநாள் உள்ளூர் பத்திரிகைத் தகவல்!

சமுத்திரக்கரையில்  ஜன சமுத்திரம்!


குன்றின் அடுத்த பக்கத்தில் இறங்கி தண்ணீருக்குப் பக்கம் போனால்  காற்றாடிகள் அசையாமல் இருக்கும்  மர்மம் விடுபட்டது:-)  காரோடு கட்டிப்போட்டு வச்சுருக்காங்க. கூடுதல் சப்போர்ட்டுக்கு  ஈரமணல் குவிச்ச  சாக்குப்பைகள்!  ஆஹா.....

படங்கள் எடுத்துத் தள்ளிக்கிட்டு இருந்தேன்.  கெமெரா ஸ்க்ரீனில்  ஒன்னுமே  தெரியாத அளவுக்கு வெய்யிலின் வெளிச்சம்.  ஈஸ்வரோ ரக்ஷிது....க்ளிக் க்ளிக் க்ளிக்...... (ஜஸ்ட் 415தான் எடுத்தேன்) 

சின்னதும் பெருசுமா காற்றாடிகள் வானத்தில்.  பட்டம்  மட்டும் இருந்தால் நாமும் பறக்கவிடலாமேன்னு நினைக்கும்போதே.... பட்டக் கடை ஒன்னு!  பதினைஞ்சில் தொடங்கி  120  டாலர் வரை விதவிதமாய்.  'கையில் காசில்லை, ஐ மீன் கேஷாக இல்லையே'ன்னு  ஆசையை நிறைவேத்திக்காமப் போகும் மனுசர்களைக் கரையேத்த  எஃபோஸ் EFOS மிஷின் வச்சுருக்காங்க கடைக்காரம்மா.

ஒரு பட்டம் வாங்கிக்கலாமுன்னா..... கடை(சி)யில் என்னை பட்டம் வாங்க விடலைங்க, நம்ம கோபால்:-(
அதுக்காக சும்மா இருக்கமுடியுமா? துப்பட்டா இருக்க பயம் ஏன்?


எங்கூர்லே   நியூப்ரைட்டன், சம்னர் என்ற பெயரில் ரெண்டு பீச் இருக்கு.  இதுலே  சம்னர்தான் எனக்குப் பிடிக்கும். இயற்கை அழகில் இருக்கும். கண்களை உறுத்தும் கட்டிடங்கள்  இல்லாத கடற்கரை. அடிக்கடி போகுமிடம்.

போனமாசம் ஒருநாள் சம்னர்  பீச்சுக்குப்  போனபோது  ஒரு பாட்டி(!)  காத்தாடியைப் பறக்கவிட முயற்சி செஞ்சுக்கிட்டே இருக்காங்க. அது  பறப்பேனான்னு  இழுக்குது.  பாட்டியுடன் வந்த மகள், பேரன், பேத்தி, செல்லம்  (அல்சேஷன்)  எல்லோரும் உதவி செஞ்சாலும் வானத்தின் மீது ஏறாமல் பழி வாங்கிக்கிட்டு இருந்துச்சு அந்தக் காத்தாடி.  'ஒரு பக்கம் மட்டும் கயிறு இருக்கு அதான் மேலெழும்பலை'ன்னு என் கண்டுபிடிப்பைச் சொல்லிக்கிட்டு இருந்தேன்.  அன்றைக்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் எனக்கு இதுதான் வேடிக்கை. பாட்டி ஒரு பசுப்ரேமி போல !

இன்றைக்குப் பார்த்தால் பாட்டி ஜெயிச்சுட்டாங்க. மணல் மூட்டை ஆதாரத்தில் கொடிகட்டிப் பறக்குது  கன்னுக்குட்டிகள்  காத்தாடி.

வெள்ளைக் குதிரை யொன்னு மனத்தைக் கொள்ளை கொண்டுட்டுப் போகுது!  இதுதான்  இருப்பதில் டாப்ன்னு என் நினைப்பு.

பெரிய பெரிய பலூன் காத்தாடிகளா இருக்கே. ஒருவேளை ஹீலியம் நிறைச்சுட்டு காத்துலே பறக்கவிடறாங்களோன்னு ஒரு சம்ஸயம். அப்பதான்  ஒரு வானவெளிவீரரை மேலே ஏத்திக்கிட்டு இருந்தவரிடம்போய் மேட்டர் என்னன்னு விசாரிச்சார் கோபால்.





ஹீலியம் நிரப்பும் வேலை  எல்லாம் இல்லையாம். ஜஸ்ட் ப்ளெயின் உருவம்.  நெற்றியில் ஒரு துளை. அதன்வழியா இயற்கைக் காற்று உள்ளே போனதும் மேலெழ ஆரம்பிச்சுருது.  ஒரு விசேஷத் துணி பயன்படுத்தறாங்க, உருவங்களுக்கு என்று சொன்னார்.  tapa cloth .  ஃபிஜியில் தாபா துணிகள் என்றால் மரப்பட்டையில் செய்யப்பட்டவைகள்.  இங்கே.... எப்படின்னு தெரியலை.  விண்ட் சீட்டர் துணி போல  இருக்கு  இது.

அப்புறம் கவனிச்சுப்பார்த்தால் குறி பார்த்துச் சுட்டாப்லெ  எல்லா உருவங்களின் நெற்றியிலும் துளை!  நம்ம கப்புகூட பறந்துக்கிட்டு இருந்தான்.

சின்னதா ஒரு பாய்மரப் படகு. ஹாங்காங் ஸ்டைலில் . வட்டவட்டமா சுத்தும்வகைகள்  சில நல்லாவே இருந்தன!

சம்மர் டைம் கொண்டாட்டத்தில் ஒரு  நிகழ்வா 'பஸ்க்கர்' திருவிழா நடக்கப்போகுது. அதுக்கான கலைஞர்கள் உலகெங்கிலும் இருந்து வந்து குவிய ஆரம்பிச்சுட்டாங்க. அதுலே ஒருத்தர்   கடற்கரை வார் மெமோரியலை அடுத்து இருக்கும்  ஹாஃப் பாஸ்கெட்பால் கோர்ட்டில்  'வித்தை' காமிச்சுக்கிட்டு  ஒத்தை ஏணிமேல் நின்னுக்கிட்டு  கத்திகளோடு ஜக்கிள் பண்ணிக்கிட்டு இருந்தார்.

வார் மெமோரியலுக்கு  ஏறும் படிக்கட்டுகளால்  இந்த இடத்துக்கு ஒரு ஆம்ஃபி தியேட்டர்  எஃபெக்ட்  இருக்கும். இங்கேயும் நல்ல கூட்டம்!



மகள் செல்லில் கூப்பிட்டு 'எங்கே இருக்கீங்க'ன்னாள்.  'கடல் குதிரைக்குக் ' கிட்டேன்னேன். அவள் 'நீலத்திமிங்கிலத்தின்' பக்கமாம்.  சுட்டு முடிச்சு கடற்கரைக்கு எதிரே இருக்கும் நியூப்ரைட்டன் மாலுக்குப் போனோம்.

 அன்றைக்கு அங்கே மார்கெட் டே!  இது  அடுக்கு மாடிகள் இல்லாத  ஒற்றைக்கட்டிடங்களால் ஆன திறந்த வெளி மால்.

எங்கூர்லே பீச்சில் ஒரு  நூலகம்  இருக்கு தெரியுமோ!

கோபாலின் பின்புலம் நூலகத்தின் புழக்கடைக் கதவு:-) இந்தப்பக்கம் நேரா நடந்தால்  Pier முனைக்குப் போயிடலாம்.

கீழே: நூலகத்தின் முன்பக்கம். 


மார்கெட் தினம் முடிஞ்சு கடைகளை ஏறக் கட்டிக்கிட்டு இருந்தாங்க. நமக்கு ஒன்னும் தேறலை. கார் நிறுத்தியிருந்த இடத்துக்கு  நடந்து போகும்போதும்   திமிங்கிலங்களையும், காதல் பாம்பையும், ஆக்டபுஸ்ஸையும் பார்த்துக்கிட்டே நடந்ததில் களைப்பு தெரியலை.

இதையெல்லாம் நீ வீடியோவா எடுத்துருக்கணும் என்றார் கோபால். அப்பத் தோணாமப் போச்சே:(

வீட்டுக்கு வந்ததும்  நம்மூரில் இந்தக் காத்தாடித் திருவிழா எப்போலே  இருந்து ஆரம்பிச்சு இருக்காங்கன்னு 'ஆராய்ஞ்சால்'  பெரிய அளவில்  நடப்பது இப்போ சில வருசங்களாத்தானாம்.  போன வருச விழாவை புண்ணியவான் ஒருவர் வீடியோ எடுத்து யூட்யூபில் ஏத்தி இருக்கார். அட்டகாசம்!



அவருக்கு ஒரு பின்னூட்டம் போட்டுப் பாராட்டினேன்.  அப்பப்ப பட்டம் விடுவது உண்டாம். 'ஒரு நாள்  பீச்சுக்கு வந்து, ஹலோ சொல்லேன்' என்றார். சொன்னால் ஆச்சு:-)

எந்த பீச்சுன்னு கேட்டுக்கணும்!

PINகுறிப்பு:  முப்பதுசொச்சம்  படங்களை மாய்ஞ்சு மாய்ஞ்சு வலை ஏத்தினபிறகுதான் இந்த வீடியோ  கிடைச்சது. முதலிலேயே  பார்த்து வச்சுருந்தால்..... மெனெக்கெட்டிருக்க வேணாம்:(

 ஆங்..... அதெப்படி? அது போன வருசம். இது நாம் போன,  இந்த வருசம் இல்லையோ:-))))


Wednesday, January 28, 2015

அடேயப்பா....நாப்பது லட்சம் பிரதிகள் வித்துப் போச்சாம்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 17)

பயணக்கதை நகரவே இல்லை. நீ முடிக்கறதுக்குள்ளே அடுத்த 'பயணம்' வந்துரும்  என்கிறார்  நம்ம கோபால்.  அதுக்காக தினமும் எழுதமுடியுதா?  நானென்ன ஜெமோவா?  சரி. நம்ம கதையை ஆரம்பிக்கலாம்.  நேற்று தீபாவளி  ஒருவழியா முடிஞ்சது.

இன்றைக்குப் பெரிய மனிதர்களின் சந்திப்பு நாள் என்று(ம்) வச்சுக்கலாம். காலையில் வழக்கம்போல்(!) வல்லியம்மாவுடன் சந்திப்பு.  வீட்டுலே எல்லாம் ஒரு மாதிரி சரியாச்சுன்னு அங்கேயே  இடம் மாறிப் போறாங்க இன்றைக்கு. காலையில் சீக்கிரம் அவுங்க கிளம்புவதால்  ப்ரேக்ஃபாஸ்ட் சேர்ந்து சாப்பிட நேரமில்லை:( அவுங்களுக்கு டாட்டா சொல்லிட்டு கொஞ்சம் துக்கத்தோடு போய் ரெண்டு மசால்வடையும் கொஞ்சம்  வெண்பொங்கலுமா  காலை உணவை முடிச்சேன்:-)


தினமும் காலங்கார்த்தாலை எதுக்கு ஓடணுமுன்னு சீனிவாசனை பத்து மணிக்கு வந்தாப்போதுமுன்னு சொல்லி இருந்தோம். அவர் வந்ததும் போனது நம்ம   காற்றுவெளிப்பதிவர் கவிதாயினி மதுமிதா அவர்கள் வீட்டுக்கு. சென்னைப் பயணங்களில்  இது வழக்கமான  ரவுண்டு என்பதால் தெருப்பெயரை மட்டும் சொன்னால் நம்ம சீனிவாசன் 'டான்'னு கொண்டு போய் வீட்டுவாசலில் நிறுத்திருவார்:-)

கவிதாயினியைப்பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. இலக்கிய வட்டாரத்தில் பெரும்புள்ளி. மொழிபெயர்ப்பதில் முக்கிய புள்ளி. இதுவரை ஏராளமான கவிதை, கட்டுரை,  முழிபெயர்ப்புப் புத்தகம் என்று வெளி வந்துள்ளன. வாங்கின பரிசுகளை எண்ணி மாளாது!  ஆனாலும்  துளிகூட கர்வமே இல்லாத எளிமையான பாங்கு! என் மரத்தடி காலத் தோழியும் கூட! ஏகாம்பரியும் நம்ம மரத்தடித்தோழிதான்.

 இங்கே போய்ப்பாருங்க, அசந்துருவீங்க.




தீபாவளி இனிப்புகளும் மற்றவைகளுமா கொஞ்சம் அரட்டை.  மகள் வேலைக்குக் கிளம்பிக்கிட்டு இருந்தாங்க. வேலை டென்ஷனில் இருந்து விடுபட மகளின் இப்போதைய பொழுது போக்கு காதணிகள் செய்வது. ஏற்கெனவே செஞ்சு வச்சுருந்தவைகளைப் பார்த்தேன். அழகோ அழகு.

பாராட்டுகளுக்குப் பதிலா'உங்களுக்கு எதெது பிடிச்சிருக்கோ அதையெல்லாம் எடுத்துக்குங்க ஆண்ட்டி'ன்னாங்க மகள். மதுவுக்குக் கொண்டு போய்க் கொடுங்கன்னாங்க. இந்த மது என் மகள் மதுமிதா. அவள் நீலக்கலர் ஆள் என்பதால் நீலத்தில் செஞ்சு வைக்க 'ஆர்டர்' (!!!) கொடுத்துட்டுக் கிளம்பினேன்:-))))

சொந்த ஷாப்பிங் கொஞ்சம் செஞ்சுக்க சென்னை சில்க்ஸ் போனோம். கடைக்குப்  பின்பக்கம் கார் பார்க்கிங் வசதி அட்டகாசமா இருக்கு!  எதிர்பார்க்கவே இல்லை!    காத்திருக்கும் நேரத்தில் காஃபி குடிச்சுக்கலாம். இருக்கைகள் போட்டு வச்சுருக்கு.  இங்கே ரெஸ்ட் ரூம்கூட இருக்குன்னு  பார்த்ததும்  'அட!' என்றே இருந்துந்தது!!!!!

ஸால்வார் கமீஸுக்கான சில  துணிகளை வாங்கிக்கிட்டு மகளுக்கு எதாவது தேறுமான்னு பார்த்தால் ஒரு நீலக்கலர் கண்ணில்பட்டது.  என்னதான் அவளுக்குப் பிடிச்ச நீலம் என்றாலும் சட்னு அனுமதி இல்லாமல் வாங்கிறமுடியாது.  ஷோவாக மாட்டியிருந்த உடுப்பை செல்லில்  படம் எடுத்து மகளுக்கு அனுப்பினார் கோபால்.  பதில் வரும்வரை காத்திருக்கணும்.


அப்படியே பொடி நடையில் அடுத்த கடை போத்தீஸ்க்குப் போனோம். அங்கேயும்  ரெண்டு செட் எனக்கு. என் விருப்பத்திற்கேற்ற வகை கிடைப்பது ரொம்பக் கஷ்டமா இருக்கு. அப்படி இருந்தாலும்  கலர் சாய்ஸே இல்லை:(  எதைப் பார்த்தாலும் உன்னிடம் இருக்கேங்கறார் கோபால். உண்மைதான். ஏற்கெனவே ஒரே காம்பினேஷனில்  ரெண்டு மூணு  (வெவ்வேற பயணங்களில் தான்) எடுத்துக்கொண்டு போய் ஊர் திரும்பியதும்தான்  'ஐயோ' என்றிருக்கும்.  போயிட்டுப்போகுது. ஒன்னு  பழசானால் ரீப்ளேஸ்மெண்ட்  கைவசம்:-)

மகளின்  பதில் வந்தது எஸ்ஸு.  மறுபடி சென்னை சில்க்ஸ்.  போதீஸில் இருந்து பரிசுப்பொருளாக துளசி கிடைத்தது. துளசிக்கே துளசி பாருங்க:-)

 மகளுக்கான துணிகளை வாங்கிக்கிட்டு  நேரா நம்ம முஸ்தாஃபா  டெய்லர் கடை. எங்கள் அளவுகளை ஏற்கெனவே  குறிச்ச  அட்டைகள் கைவசம் இருப்பதால் அதைக் காமிச்சாலே அவர் எழுதிக்குவார். மகளுடையதை மட்டும் வெட்ட வேணாம்.அவளிடம் இன்னொருமுறை கேட்டுட்டுச் சொல்றேன் என்றேன்.

அப்படி இப்படின்னு கடிகாரம் ரொம்ப வேகமா ஓடுதோ?  மணி ஒன்னரை தாண்டியாச்சு.  வெங்கடநாராயணா சாலை சரவணபவன் அடுத்த ஸ்டாப்.  என்னென்னவோ காம்போக்கள். சப்பாத்தியும், மினிமீலுமா சாப்பாடு ஆச்சு. லேசா மழை வேற நச் நச்சுன்னு......

அறைக்குத் திரும்பி கொஞ்ச நேரம் ஓய்வெடுத்த பிறகு  நம்ம லோட்டஸுக்கு  அடுத்து ரெண்டாவது  கட்டிடத்துக்குள்  நுழைஞ்சோம். மூணு மணி அப்பாய்ண்ட்மெண்ட். மழை நிக்கவேஇல்லை.  காருக்குள் சீனிவாசன் நல்ல தூக்கத்தில்!  அடுத்த பில்டிங் போக அவரை ஏன் எழுப்புவானேன்?  தூங்கட்டும், தூங்கட்டும்.

நம்ம பதிவர் முத்துச்சிதறல் மனோ சாமிநாதன் ஒரு சமயம் மாற்று மருத்துவம் பற்றி எழுதி இருந்த பதிவைப் படிச்சுட்டு, என் கை (தோள்)வலி தீர உபாயம் இருக்கான்னு கேட்ட போது,  'தஞ்சையில் ஒரு மருத்துவர் இருக்கார், வாங்க நான் கூட்டிட்டுப்போறேன்'  என்றாங்க.  தஞ்சைக்கு இப்போ வரும் சான்ஸ் இல்லை. சென்னைதான் என்றதும், ஒரு விலாசம் கொடுத்தாங்க. பழம்  நழுவி பாலில் விழுந்தது. நம்ம லோடஸ் இருக்கும் அதே வெங்கட்ராமன் தெரு. டாக்டர்  ஜெயலக்ஷ்மி,   19 வுட் ப்ரிட்ஜ் அபார்ட்மெண்ட்ஸ்.

வீடுதான். இங்கேயே ஒரு அறையில்  சிகிச்சை சொல்லிக்கொடுக்கறாங்க. அகுப்ரெஷர்.  நம்மைப் பற்றிய உடல் நல விவரம் எல்லாம் எழுதிக்கொடுத்தோம். நம் பாதங்களில் இருக்கும் பல்வேறு நரம்பு உள்ள இடங்களில்  அழுத்தம் கொடுத்து  குறித்துக்கொண்டார் உதவியாளர்.

டாக்டரம்மா அறைக்குள் கூப்பிட்டாங்க. உள்ளே போய் உட்கார்ந்தோம்.  'எத்தனை நாள் இருப்பீங்க?  இன்றைக்கும் நாளைக்கும்தான். அப்ப ரெண்டு நாளைக்குள் உங்களை சரியாக்கணும்.  ஆக்கிடலாம்  'புன்முறுவலுடன் சொன்னபோதே  காவாசி வலி குறைஞ்ச ஃபீலிங்:-)

ஹாலில் ஒரு  இளம்தம்பதியின் ஃபோட்டோ பார்த்தேன்.  ரொம்ப அழகான அமைதியுடன்  இருக்காங்க  அந்தப்பெண். இப்போ வயசாச்சுன்னாலும் அதே அமைதியான அழகு  டாக்டரின் முகத்தில் இருக்கு!

எங்கெங்கே தொட்டு,  எத்தனை முறை   அழுத்தம்  கொடுக்கணுமுன்னு சொல்லிக் கொடுத்தாங்க.  கவனிக்கிறாரான்னு நான் இவரைத் திரும்பிப் பார்த்தால்  இவர் காலை சின்ன ஸ்டூலில் வச்சு உட்கார்ந்திருக்க, உதவியாளர் இவருக்கு  இங்கே வலி இருக்கா, இப்ப வலிக்குதான்னு கேட்டுக்கிட்டு குறிப்பெடுத்துக்கிட்டு இருக்கார்.  நியூஸியில் 'பை ஒன் கெட் ஒன் ஃப்ரீ' நினைவுக்கு வந்துச்சு:-)

தோள்வலிக்குக் காது மடலை அமுக்கணும். பதினாலு முறை ஒவ்வொரு காதுக்கும்.  தோப்புகரணம்  டைப். ஆனால் உக்கார்ந்து எழுந்திரிப்பது போல் பாவ்லா காட்ட வேணாம். அது என்ன பதினாலு முறை?  அது ஒரு கணக்குன்னாங்க.

அப்புறம் பாதத்தில் பெருவிரல் சைடில் மூணு இடம், குதிகால் சைடில், காலில் , உள்ளங்கையில்  இப்படி பதினாலு பதினாலு முறை. பாதத்தின் மேற்பகுதியில் மட்டும் அதில் பாதி. ஏழு!இது மட்டும்  நாளுக்கு ஒரே ஒரு முறை!

அழுத்தம் கொடுக்கவேண்டிய இடங்களை பால்பாய்ண்ட் பேனாவால் வட்டம் போட்டுக் குறிச்சுக் கொடுத்தது சூப்பர்!  (என்ன ஒன்னு.... வருங்காலத்தில் குளிக்காம இருக்கணுமோ!)

கவனமா  இன்றைக்கு  இருமுறை இதையெல்லாம் செஞ்சு பார்த்துட்டு மறுநாள்  வரச்சொன்னாங்க.

அறைக்குத் திரும்பியதும் சிகிச்சையை ஆரம்பிச்சோம். கஷ்டமா ஒன்னும் இல்லை.  ஏறக்குறைய ரெண்டுபேருக்கும் ஒரே சிகிச்சை என்பதால்  நோக்கும் நேக்கும் சரியாப்போச்சு:-)

மழை கொஞ்சம் ஓயட்டுமேன்னு காத்திருந்து, சந்தியா பதிப்பகம் போனோம்.  அசோக் நகர் என்றால் போதும். சீனிவாசன் நேராக் கொண்டுபோய் பதிப்பகத்தின் வாசலில் நிறுத்திருவார்:-) 'அக்கா' வெளிவரும் ஏற்பாடுகள்   எந்த நிலையில் இருக்குன்னு  பார்க்கணும்.  'எல்லா வேலைகளும் முடிஞ்சது. அட்டைப்படம் இன்னும் வரலை. அநேகமா நீங்க ஊர் திரும்புமுன் வந்துரும்' என்றார் பதிப்பக உரிமையாளர்  திரு சௌந்தரராஜன்.

கொஞ்ச நேரம் ஊர் உளவாரம் பேசிக்கிட்டு  எனக்குத் தேவையான புதுப்புத்தகங்களை தெரிவு செஞ்சுக்கிட்டு இருந்தப்ப  உள்ளே  இருந்து  ஒருத்தர் வந்தார். மெய்ப்பு பார்த்துக்கிட்டு இருந்தாராம். 'நீங்க கையிலே வச்சுக்கிட்டுஇருக்கும் புத்தகம் இவர் எழுதுனது' என்றார் பதிப்பாளர்! என் கையில் விந்தைக் கலைஞனின் உருவச்சித்திரம் . சிறந்த நாவல் 2014, சுஜாதா விருது பெற்ற நூல். ஆசிரியர் சி. மோகன்.

இவர் ஒரு சீன நாவலை மொழிபெயர்த்துள்ளாராம். உடனே அதையும் வாங்கிக்கிட்டேன்.
மூலம்:  சீன மொழியில் .நாவல் பெயர்    Lang Tuteng  by jiang Rong
English translation (enguin group)    Wolf Totem




2004 ஆம் வருசம் வெளியான இந்த சீன நாவல்,  சீனாவில்  ரெண்டே வருசத்தில்  நாப்பது லட்சம் பிரதிகள் வித்துப்போச்சாம்.  சீனர்கள் ரொம்ப வாசிக்கிறாங்க போல!

இந்த முழி பெயர்ப்பு சமாச்சாரம் இருக்கு பாருங்க...... நம்ம இந்திய மொழிகளில் இருந்து  தமிழுக்கு முழி பெயர்த்தால் குறைஞ்சபட்சம் சூழல், முக்கியமா  கதாபாத்திரங்கள், இடங்கள் ஆகியவற்றின் பெயர்களைச் சுலபமா எழுதலாம். நமக்கும் அவ்வளவா கஷ்டம் இருக்காது.

ஆனால்...மற்ற நாடுகளின் மொழிகளில் இருந்து அவற்றை தமிழாக்கும்போது ..... ஐயோ போதுண்டா சாமின்னு ஆகிரும். நான்  ஒரு பத்துப்பனிரெண்டு மவோரி கதைகளை மொழி பெயர்த்து முழி பிதுங்கி இருக்கேன். அந்த அனுபவம்தான் பேசுது:-)

அப்புறம் உள்ளே கணினியில் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தவர்களோடு கொஞ்சம் பேசிட்டு, 'அக்காவை நல்லபடியாக் கரை ஏத்துங்கோ'ன்னு சொன்னேன்.  சின்னவயசுப் பெண்கள்தான்.  தினம் கதைகதையா வாசிக்கிறாங்க.  நாம் ப்ரூஃப் பார்த்துச் செய்து கொடுக்கும் திருத்தங்களை  கணினியில் உள்ள நம்ம புத்தகப் பக்கங்களில் திருத்தி எழுதும் வேலை ரொம்பவே சிரமமானதுதான். போதாக்குறைக்குப் புத்தகம் அச்சுக்குப்போகும்வரை திருத்தங்கள் சொல்வது, கூடுதல் பத்திகளை எழுதி, இதை இந்தப் பக்கத்தில் செருகிருங்கோ. அதை அந்தப் பக்கத்தில் இந்த வரிக்குப் பின்னே சேர்த்துருங்கோன்னு  இம்சைஅரசிகளாக இருக்கோமே!  பாவம்,அந்தப்  பெண்கள்.


அக்கா நல்லா வந்துருக்கு மேடம் என்று சொல்லி என் வயிற்றில் ஐஸ்க்ரீம் வார்த்ததும் இவுங்கதான்.  சொன்ன வாக்கு தவறாமல் நான் சென்னையில் இருந்து கிளம்புமுன் அக்கா அட்டையையும் அனுப்பி வச்சாங்க. என்னுடைய விசேஷ நன்றிகளை இங்கேயும் பதிவு செஞ்சுக்கறேன்.  தேங்க்ஸ் லேடீஸ்/\

அதுக்குப்பிறகு அறைக்கு வந்துட்டு வேறெங்கேயும் போகலை. லாங் ஸ்லீவ் உடுப்பு என்பதால் மகள் கை அளவு அனுப்பி இருந்தாள். அவளுக்குக் கை கொஞ்சம் நீளம்:-)

நாளைக் கதை நாளைக்குன்னுட்டு, கீழே ரெஸ்ட்டாரண்டில் எனக்கு ஒரு தோசையும் கோபாலுக்கு ஒரு ஊத்தப்பமும்  ரெண்டு லஸ்ஸியும் வாங்கி முழுங்கிட்டு(ஒவ்வொரு முறைஉணவு ஆர்டர் செய்யும்போதும்  'தோ ப்ளேட் லேகி ஆவ் ' சொல்லணும், இங்கே)  உறக்கம் வரும்வரை அவரவர் வேலையான கணினி மேய்தல்,டிவி பார்த்தலென்று இருந்தோம்.

தொடரும்...........:-)

PINகுறிப்பு: டாக்டரம்மா வீட்டில் அவுங்க வெப்சைட்டில் எல்லாம் இருக்கு . பார்த்துக்கோன்னு  ஒரு போர்டில் எழுதிப்போட்டுருந்தாங்க. அதான் பார்த்து அதில் இருந்து சில படங்களைச் சுட்டுக்கிட்டேன். டாக்டர் வீட்டுக்கும்  அதுவும் முதல்முறையா  நோயாளியாகப் போகும்போது கேமெராவும் கையுமாப்போனா நல்லாவா இருக்கும்?