Wednesday, April 22, 2015

கொசுவத்திக்கே கொசுவத்தி ஏத்தும்படியாப்போச்சே:-) ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 43)

எல்லாமே புதுசாத் தெரியும் இந்த ஏரியாவில்  வீட்டைக் கண்டுபிடிப்பது கஷ்டம் என்று கோபால் சொன்னதைக் கேட்டவள் சோகமாப்போய் வண்டியில் உக்கார்ந்தேன்.  விசாரிச்சுப் பார்க்கலாமுன்னா கண்ணில் பட்டவர்கள் எல்லாம்  நாப்பது வயசுக்குட்பட்ட மக்களாகவே இருந்தாங்க. கொஞ்சம் வயசன்மார் கண்ணுலே ஆப்டலை:(

இந்தப் படம் மட்டுமே அவர்கள் நினைவாக என்னிடம் இருக்கு.  அதுவும் நாங்கள் ஊர்மாறி வரும்போது, ஜோஜோ ஏங்கிப்போயிருவானேன்னு  அன்னம்மாச் சேச்சி வற்புறுத்தி நம்மை ஸ்டூடியோவுக்குக் கூட்டிப்போய் எடுத்த படம்.  இப்ப எல்லோரும் எப்படி உருமாறி இருப்பாங்களோ!!!!

சரின்னு அடுத்த வேட்டையை ஆரம்பிச்சோம். முரிங்கூர் போறோம்.  அங்கேதான்  நாம் கேரளா வந்திறங்கி குடிவந்த முதல்வீடு இருக்கு.

 கோபால் கேபிள் ஃபேக்டரிக்கு ட்ரெய்னிங் எடுக்க வந்துட்டார்.  நான் சென்னையிலே இருக்கேன். நமக்குத் தெரிஞ்சவங்க எல்லோரும், தனியாவா கேரளாவுக்கு அனுப்பிட்டேன்னு  என் தலையைத் தின்னதுமில்லாமல்  மலையாளியோ  **யாளியோன்னு ரைமிங்கா பழமொழி சொல்லிப்பயமுறுத்திக்கிட்டே இருக்காங்க. ரெண்டு வாரம் கூட என்னை நிம்மதியா இருக்க விடலை.

இந்த அழகிலே  எனக்கொரு ஆசை என்னன்னா எனக்கு மணி ஆர்டர்  வந்து, அதைக் கையெழுத்துப்போட்டு வாங்கிக்கணும். அதனால் கேரளா கிளம்பும்போது பத்து ரூபாயைத் தனியா இவரிடம் கொடுத்து போனவுடன் எனக்கு மணி ஆர்டர் பண்ணுங்கன்னு சொல்லிட்டு, தினமும்  மணி ஆர்டர் வரும் வருமுன்னு  பார்த்துக்கிட்டு இருக்கேன். இன்னமும்தான்:-))))


அப்பெல்லாம் செல்ஃபோன்  என்ற சமாச்சாரமே தெரியாத காலக்கட்டம். வீட்டுலே பண்ண அமர்க்களத்துலே ....   நான் நாளைக்குப் புறப்பட்டு வர்றேன்னு ஒரு தந்தி கொடுத்துட்டு மறுநாள் கிளம்பிட்டேன். சின்னதா ஒரு  அட்டைப்பொட்டியில்  ஒரு ப்ரெஷர் குக்கர், கொஞ்சம் பாத்திரங்கள். ஒரு சின்ன ஸூட்கேஸில் துணிமணி.

ரயில் திருச்சூர்  ஸ்டேஷனில் நிற்கும்போதே  அங்கமாலியில் இறங்கணுமுன்னு  சீக்கிரமாத் தயாராகிட்டேன். அடுத்து இரிஞ்ஞாலகுடா கடந்து சாலக்குடி ஸ்டேஷனில் வண்டி நிக்குது. இவர்  பெட்டிபெட்டியா தலை நீட்டிக்கிட்டு என்னைத் தேடிக்கிட்டு இருக்கார். எனக்கோ ஆச்சரியப்படணும். ஆனா  அதுக்கு இப்போ நேரமில்லை.' சடார்னு இறங்கு'ன்றார். உள்ளே வந்து சாமான்களை எடுத்துக்கிட்டதும் இறங்கிட்டோம்.


பார்த்திருக்கும் வீடு இங்கே பக்கத்தில்தான் இருக்கு. சாலக்குடின்னா  ப்ரோப்பர் ச்சாலக்குடி இல்லையாக்கும். தொட்டடுத்து ஒரு குக்கிராமம்!  முரிங்கூர் என்னானு  பெயர். அதான் காலையில் கிளம்பி  இங்கேயே உன்னை இறக்கிடலாமுன்னு வந்துட்டேன் என்றார்.  இவர் கூடவே ட்ரெய்னியா இருக்கும் இன்னொரு  இளைஞர். ரூம் மேட். திருவனந்தபுரத்துக்காரர்.  ஒருவழியா வாடகைக்குப் பார்த்திருந்த வீட்டுக்குப்போய்ச் சேர்ந்தோம்.

வீட்டுக்காரம்மா.... அவ்ளோ சீக்கிரம் குடிவருவோமுன்னு எதிர் பார்க்கலை. வீடு இன்னும் சுத்தப்படுத்தலைன்னு  தொட்டடுத்து இருக்கும் மகள் வீட்டில் எங்களைக் கொஞ்சநேரம் இருக்கச் சொன்னாங்க.

புது இடத்திலே திருதிருன்னு முழிச்சுக்கிட்டு  உக்கார்ந்திருக்கோம்.  வீட்டுக்காரம்மா பெயர் மீனாட்சி அம்மா.  மகள் பெயர்  மணிச்சேச்சின்னு மட்டும் தெரிஞ்சுக்கிட்டேன். குளிமுறி காமிச்சுக் கொடுத்ததும் குளிச்சுட்டு  உடை மாத்திக்கிட்டு  பத்து எட்டு நடந்து   மீனாட்சியம்மா வீட்டுக்குப் போனோம். வீட்டுப்பணி செய்யும் பெண்  மாடியைச்  சுத்தப்படுத்தினதும்  அங்கே போய்  எதெதை எங்கே வைக்கலாமுன்னு  யோசனை.  இருக்கும் நாலைஞ்சு பாத்திரங்களை எங்கே வச்சால் என்ன?
 ( மாடி இப்படி இருக்கும். சுட்டபடம்.  பட ஓனருக்கு நன்றி.)


 பெரிய தரவாடு  வீடு இது.  வாசல் முற்றத்தில் ஒரு துளசிமாடத்தில்  நான். அதைக்கடந்து  வீட்டு முன்கதவை நோக்கிப்போனால்  சின்னத் திண்ணைகளுடன்  முன்பக்க ஹால். சிமெண்ட்பால் போட்டு கண்ணாடி போல் மின்னும் தரை.ஹாலில் ஒரு சாமானும் இல்லை.  ஜஸ்ட் ஹால்!  மின்னும் ரெண்டு பெரிய மரத்தூண்கள் மட்டுமே! நடுவில் வாசக்கதவுக்கு நேரா இன்னொரு உள்வாசல் கதவு. அதைக் கடந்தால் அங்கேயும் ஒரு ஹால். ஆனால் அளவில் சின்னது. இடது கைப்பக்கம் இன்னொரு அறை. சின்ன ஹாலில் ஒரு பக்கமா கட்டில் எதிரே ஒரு மேசையில் ரேடியோ.

இங்கேயும் எதிர்ப்புறச்சுவரில் கட்டிலை ஒட்டியே  ஒரு வாசல். அதைக்கடந்தால்  வராந்தா. இடதுபக்கம்  மாடிக்குப்போகும் மரப் படிக்கட்டுகள். மாடிக்குப்போனால் மூணுபக்கம் விசாலமான வெராந்தாவும் நட்ட நடுவில் ஒரு பெரிய ஹாலும்.  ஹாலின் ஒரு பக்கம் வெராந்தாவுக்கு பதிலா ஒரு நீள அறை. நாலாவது பக்கத்துக்குள்ள வெராந்தாவைத்தான் அறையா வச்சுருக்காங்க போல!  ஹாலுக்கு ரெண்டு பக்கமும் நேருக்கு நேரா கதவு. வீட்டின் முன்பக்க வெராந்தாவுக்குப்போகும் வழி ஒன்னுன்னா இன்னொண்ணு வீட்டின் பின்பக்கத்து தோட்டம் பார்க்குது. முன்பக்கம் நின்னு பார்த்தால்  கீழே  துளசி மாடம் அதுக்குப்பின்னே போகும் அகலமான மண்பாதை. தூரக்கே ஒரு கம்பி கேட்!  இடதுபக்கம் மணிச்சேச்சி வீடு. காங்க்ரீட் கட்டிடம்.

கதவில்லாத சுவரில் பெருசா ரெண்டு ஜன்னல்கள்.  வெராந்தாவுக்கு சுற்றிவர கைப்பிடிச்சுவர்கள்  அழகான மண்கூஜாக்களை வரிசையா வச்சதுபோல். நல்ல அகலமான  கட்டைச்சுவர். நாம் ஏறி, தூணில் சாய்ஞ்சுக்கிட்டுக் காலை நீட்டி உக்கார்ந்துக்கலாம்.  வீட்டைச் சுத்தி மரங்கள். பலாப்பிஞ்சுகள் தொங்குது! ஹைய்யோ!!! இன்னொரு மரத்தில் மாம்பிஞ்சுகள்.  இது ஃபிப்ரவரி மாசம்! தென்னையும் கமுகுமா  கண்னைக் கட்டுது.மாடிஹாலில் காத்து அப்படியே பிய்ச்சுக்கிட்டு போகுது.

ஆஹா என்ன ஒரு அருமையான வீடு ! கண்டதும் காதலில் விழுந்தேன் என்றுதான் சொல்லணும். என் வரவை முன்னிட்டு கோபால் அன்றைக்கு லீவு எடுத்துக்கிட்டார்.  கம்பெனிக்கு அறைத்தோழரிடம் சமாச்சாரம் சொல்லி அனுப்பிட்டார். இப்ப குடித்தனம் ஆரம்பிக்க  மளிகை சாமான்களும்  முக்கியமா சமைக்க ஒரு அடுப்பும் வேணும்.

இந்த வீடு இருக்கும் தெருவின் வலதுபக்கம் போனால்.... ரயில்பாலம் வரும். இடதுபக்கம் போனால்  நாலு வீடுகள். அதைக் கடந்தால் போகும் பாதை ஒரு சின்ன ஏற்றத்தில் போய்  மெயின் ரோடில் சேருது. இங்கே இடது பக்கம் திரும்பினால் ஒரு பாலம்.  சாலக்குடி புழை பாலத்தினடியில் ஓடுது.  வலப்பக்கம் திரும்பினால்  அது  கொச்சி வரை போகும்  நெடுஞ்சாலை. கோபாலின்  ஃபேக்டரிக்கு  இதில்  போகணும்.

பாலம் தாண்டி நேராப்போனால் கொஞ்ச தூரத்தில் சாலக்குடி  டவுன்!  2.8 கிமீ தூரம். நாங்க பேசிக்கிட்டே நடந்து போனோம்.  அங்கே டவுனில் ஒரு  ஹொட்டேலில்   தோசையும் காஃபியும் முடிச்சுக்கிட்டு,  அடுப்பு, அரிசி பருப்பு, சில காய்கறிகள், முக்கியமா மண்ணெண்ணெய்  எல்லாம் வாங்கிக்கிட்டு  ஒரு ஆட்டோ புடிச்சு வீடுவரை வந்து சேர்ந்தோம்.  முரிங்கூரில் எங்கேன்னு கேட்ட ஆட்டோக்காரருக்கு  பாலத்தைக் கடந்து  கீழே ரயில்பாலம் போகும் வழி என்றதும்   அங்கே யார் வீடுன்னார்.  உப்பத்துன்னு சொன்னதும்  மறு பேச்சில்லாம நேராக் கொண்டுவந்து இறக்கி விட்டுட்டார்.  சின்ன ஊரா (அப்போ) இருந்தபடியால்  வீட்டுப்பேரைச் சொன்னதும் எல்லோருக்கும் வழி தெரிஞ்சுருது.  கடைக்காரர்களும் புது ஆட்களைப் பார்த்ததும் என்ன ஏது எங்கிருக்கோமுன்னு தீர விசாரிக்காம  இருப்பதில்லை.  இப்படியாக நம்ம கேரள வாழ்க்கை ஆரம்பிச்சது.

நமக்கு மலையாளம் புரியுமுன்னாலும் சரியாப் பேசவராது. அதனால் வீட்டு ஆட்களோடு இங்லீஷூதான். வீட்டு ஓனர் மீனாட்சியம்மா அருமையா ஆங்கிலம் பேசறாங்க. அவுங்க வீட்டுக்கு வேலைக்கு வரும் விமலாவையே நமக்கும் வேலைக்கு ஏற்பாடு செஞ்சுட்டாங்க. நம்ம வீட்டுக்குப் பின்புறம்தான் சாலக்குடி புழை ஓடுது. அங்கேதான் காலை மாலை இருவேளைக் குளியல்.

புழைக்கும் வீட்டுக்கும் இடையில் இன்னொரு  சின்ன வீடு. தரவாடு இருக்கும் பரம்பு  ஒருகாலத்தில் புழை வரை இருந்ததாம். அதுலே  கொஞ்சூண்டு இடத்தை வித்துருக்காங்க. அதுலே  அந்தப்பன் என்றொருத்தர்,  மனைவி,மூணு பெண்மக்களுடன்  இருக்கார்.   ரெண்டு பசுக்களை வச்சுப் பால்வியாபாரம். அவர்தான் நமக்கு பால் சப்ளை!

கோபால் காலை ஏழரைக்கெல்லாம் கிளம்பிப்போயிருவார்.  அவருக்கு எதாவது கலந்த சாதம் கட்டிக்கொடுத்தால்  என் வேலை ஆச்சு.  அவரை வழி அனுப்ப கீழே துளசிமாடம் வரை வந்து டாட்டா காமிச்ச கையோடு  மீனாட்சியம்மா வீட்டு மேலடுக்களைக்குள் போனால்.......... அவ்ளோதான். அங்கே இருக்கும் சாப்பாட்டு மேசை ஸ்டூலில் உக்கார்ந்திருக்கும் அம்மா மாத்ருபூமி  தினசரியை வாசிச்சுக்கிட்டு இருப்பாங்க. கையில் ஒரு கட்டன் காஃபி.

என்னையும் காஃபி குடிக்கிறயான்னு கேப்பாங்க..... நம்ம நாக்கு  வணங்கிட்டாலும்.........  எல்லாம் காலையில் ப்ரேக்ஃபாஸ்டோடு ஆச்சுன்னுட்டு  தினசரியைப் படிக்க ஆரம்பிப்பேன். நம்ம க, ம, வ, எல்லாம் அதுலே இருக்கும். ஆனால் சிலவற்றின் உச்சரிப்புகள் வேற. ன ண எல்லாம் சுழிக்காமல் இருக்கும் அப்படியும் எது என்னன்னு கொஞ்சம் கொஞ்சமா பெரிய எழுத்துகளில் இருப்பதை மட்டும் வாசிக்கத்தொடங்கி ஒரு வாரத்திலே பிடி கிட்டிப்போயி!

மீனாட்சி அம்மாவையும் விட்டு வைக்காம எழுதி இருக்கேன். பார்த்துக்குங்க.



கொரட்டியில் இருந்து புறப்பட்டு சாலக்குடி போகும் சாலையில் வர்றோம். பாலம் தூரக்கே கண்ணில் பட்டது.  அடுத்து வரும்போதே  லெஃப்ட்டுலே  இறக்கத்துலே போயிருங்கன்னு சீனிவாசனிடம் சொன்னார்.  இது இல்லையோன்னு எனக்கு ஒரு சம்ஸயம். இதுதான்னு இவர் சாதிக்கிறார். அந்த மண் ரோடில் ஒரு பக்கம் மட்டுமே நாலைஞ்சு வீடுகள் இருக்கும். அதில்  நம்ம தரவாடைத்தவிர  மற்றவை காங்க்ரீட் கட்டிடங்கள்தான்.  இப்ப என்னன்னா....   கசகசன்னு   சின்னச்சின்னதா  ஏழெட்டு  வீடுகள் ரெண்டு பக்கமும்.


உத்தேசமா  ஒரு இடத்தில்  காரை நிறுத்தச் சொல்லி இறங்குன கோபால்,  கீழே கொஞ்சம் பள்ளத்தில் இருக்கும் சின்ன வீட்டு  வாசலில் நின்னுக்கிட்டு இருந்த பெண்ணிடம், உப்பத்து வீடு எவிடேன்னு  கேட்டதும்,  மேலேறி வந்து எதிரேன்னு கை காமிச்சாங்க.



பார்த்தால் தரவாடு வீட்டைக் காணோம்!  பச்சை வண்ணச் சுவருள்ள ஒரு காங்க்ரீட்  வீடு  அங்கே!   வலப்பக்கம் இருந்த இன்னொரு வீட்டின் பின்புறம் இருக்கும் கிணத்தடியில் ஒரு  வலியம்மா (மூதாட்டி)  தண்ணி இறைச்சுக்கிட்டு இருந்தாங்க. இவர் வேகமா அங்கே போய்  என்னவோ கேட்டுட்டு,  இங்கே சீக்கிரம் வான்னு கை ஆட்டினார்.  ஓடிப்போய்ப் பார்த்தால் அந்த  முத்தச்சிதான்  நம்ம மணிச்சேச்சி!

கூர்ந்து கவனிச்சால் முகத்தில் பழைய அடையாளம் எஞ்சி இருப்பது தெரிஞ்சது. தொடை வரை தொங்கும் நீளக் கூந்தலை  கேரள ஸ்டைலில் காதோர முடியிழைகளை  மட்டும் சேர்த்து முடிபோட்டு,  அப்படியே விரிச்சு விட்டுட்டு, எளிமையான காட்டன் புடவையில்  கையில் ஒரு சின்ன பர்ஸும் வச்சுக்கிட்டு, விசுக் விசுக்ன்னு நடந்து போன சேச்சியா இது! சேச்சியும் ஜமுனாவில்தான் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க.  முதலில் அவுங்களுக்கு  நம்மை அடையாளம் தெரியலை.

மணிச்சேச்சியின் கணவர் சந்த்ரச்சேட்டன் எப்படி இருக்கார்னு கேட்டால்  ச்சேட்டன் இவிடெல்லா,  பெரும்பாவூர் தரவாட்டிலேயான்னு  சொன்னது  சட்னு மனஸிலாகாம, எப்போ வருவார்னு கேட்டுட்டேன்.   இனி  இவிடே வரில்லைன்னதும் மனசுக்குக் கஷ்டமாப்போச்சு. பிள்ளைகள்  எங்கே இருக்காங்கன்னா...  ஒரு மகன் தில்லி, இன்னொரு மகன் பாம்பே!  இங்கே சேச்சி ஒற்றைக்கா.....தாமஸம்.  மணிச்சேச்சின்னு கூப்பிடுவோமே தவிர அவுங்க பெயர் இந்துமதி. கணவர் சரத் சந்த்ரன்.  என்ன பொருத்தமான பெயருன்னு அப்பெல்லாம் சொல்லிச்சொல்லி சந்தோஷப்பட்டுருக்கேன்.

தரவாடு வீடு என்னாச்சுன்னு கேட்டால்....  தம்பி அதை இடிச்சுட்டுத்தான்  அந்த வீட்டைக் கட்டிட்டாராம்  பாஸி  என்னும் பாலபாஸ்கரன். சின்ன வீடாகப் போனதால் பின்னால் இருக்கும் பரம்பையும் வித்துட்டாங்களாம். அட ராமா......:(

சின்னப்பறம்பிலும்  நிறைய மரங்கள்  இருக்கு என்பதே மகிழ்ச்சி.




பாஸி எங்கே? வீட்டுக்கதவு சாத்தி இருக்கேன்னால்....  பாஸி மகனுக்குக் கல்யாணம் அடுத்த வாரம். மற்ற சொந்தங்களுக்குக்  கல்யாணப்பத்திரிகை கொடுக்கப்போயிருக்காங்க. கதவு சும்மாத்தான் சாத்தி இருக்கு. வீடு எப்படி இருக்குன்னு உள்ளே போய்ப் பாருங்கன்னு சொன்னாங்க.  வேணாம்  என்றேன்.  என் மனசில் உள்ள தரவாடுவீடு அப்படியே இருக்கட்டும் கனவைக் கலைக்க விருப்பமில்லை:(

வீட்டுப்பின்பக்கம் ஏறக்கொறைய இப்படி இருக்கும்.  சுற்றிவர வெராண்டா உண்டு.  ச்சும்மா ஒரு  சாம்பிளா இதை வலையில் சுட்டேன்.  அந்த வீடுபோல வேறெதுவுமே ஆப்டலை:(  அது ஒரு ப்யூட்டி கேட்டோ!


அப்போ.... அந்தப்பன்?

இவுங்க வித்த பரம்பை வாங்கினது அந்தப்பன்தானாம். பின்னால் நல்ல வீடு கட்டியிருக்காராம். தனியா  ஒரு கேட் போட்ட பாதையைக் காமிச்சு அதுவழியாப் போகணுமுன்னு சொன்னாங்க.

உடம்பெல்லாம்  எண்ணெய் தேய்ச்சுக்கிட்டு குளிக்கப்போகும் நேரத்தில் நாம் போயிருக்கோம். கேரளாவில் இந்தப் பழக்கம் எனக்கு ரொம்பப்பிடிக்கும். நமக்குத்தான்  எதுக்குமே நேரம் இருப்பதில்லை:(  குளிச்சுட்டு வந்து வீட்டைக் காமிக்கவான்னாங்க. எதுக்கு? நமக்குத்தெரியாத இடமா என்ன?

கேட்டைத்திறந்து உள்ளே  கொஞ்சதூரம் போனதும் அழகான வீடு!  கதவெல்லாம் திறந்தே இருக்கு.  இங்கெல்லாம் எப்பவுமே இப்படித்தான்.  காலையில் திறக்கும் வாசக்கதவை இரவு படுக்கப் போகுமுன்தான்  அடைப்பது  வழக்கம். கதவைத்தட்டினதும்  வாசலுக்கு வந்து பார்த்து அந்தப்பனேதான். முதலில் நம்மை அடையாளம்  தெரியலை.  உப்பத்து வீட்டு மோளில் என்று ஆரம்பிச்சதும்  ஆச்சரியம்தான் முகத்தில்.  கோபால் அப்படியேதான் இருக்காராம். நாந்தான் ஏகத்துக்கும் மாறி இருக்கேன். தடிவச்சுப் போயல்லோ என்றார்! நல்லாவே எங்களை நினைவுக்கு  வந்துருச்சு:-)

சாய எடுக்காம்னு கிளம்பின அந்தப்பன் மனைவி  ரீத்தாவிடம் அதொக்க  வேண்டா,  இரிக்யூ,  நமக்கு சம்ஸாரிக்காமுன்னு  கொஞ்சம் பழங்கதைகள் பேசினேன்.  பெரியவள் மேரி, கல்யாணம்  பண்ணி குடும்பத்தோடு ஆலுவாவில்  இருக்காளாம்.  ரெண்டாமவள் பெட்டி, லண்டனில்.  மாப்பிள்ளைக்கு அங்கே வேலை!   மூன்றாமவள் மேகி, கன்யாஸ்த்ரீ  ஆகிவிட்டாராம். தங்கல் ஒரு மடத்தில்.

பால்வியாபாரம் ஒன்னும் இப்போ இல்லை. மகள்கள்  இனி ஓய்வெடுத்தால் போதுமுன்னு கண்டிப்பாகச்  சொல்லிட்டாங்களாம்.  மூவரும் பண உதவி செஞ்சு (முக்கியமாக மூன்றாமவள்) இந்த பரம்பு  பாஸியிடமிருந்து  வாங்கி, வீட்டையும் கட்டிக் கொடுத்துருக்காங்க.  வீட்டு செலவையும்  மூணு பொண்ணுங்களே பார்த்துக்கறாங்கன்னார்.

இருங்க. இன்றைக்கு சாப்பாடு இங்கேன்னார்.  இல்லை வேற வேலை இருக்குன்னு கிளம்பினதும்,  அதொக்க கழிஞ்சுட்டு இவிடே வந்நால்  நமக்கொன்னு கூடாமல்லோ என்றார்.  அந்த அன்பு ஒன்னு போதாதா?


 வண்டிக்குத் திரும்பும்போது ரெண்டு பேரும்கூடவே வந்தாங்க. அடுத்த பக்கம் இருக்கும் இன்னொரு  வீட்டில் இருக்கும், தேவகியைக் கூப்பிட்டு, இது யாரா பறயூன்னதும்  கொஞ்சம் முழிச்சவங்க, உப்பத்து மாடின்னதும்  இப்ப ஓர்ம வந்நுன்னு சந்தோஷப் பட்டாங்க. அதுவரை நான் தேவகியைக் கொம்ப்ளீட்டா  மறந்துருந்தேன் என்பதே உண்மை:(


மூணுபேரும்  வண்டிவரை வந்து வழிஅனுப்புனது   மனசிலேயும் கேமெராவிலேயும் சித்திரமா பதிவானதே  நிஜம்:-)

எல்லோர் முகத்திலும்  உண்மையான மகிழ்ச்சி!

தொடரும்............:-)






18 comments:

said...

அழகான வீடு + இடம்...

வீடு மாற்றம் அடைந்தாலும் அன்பான மனம்... அதுவொன்றே போதும் அம்மா...

said...

ஒரே உணர்ச்சிப் பிரவாகம்தான் போல?

said...

உறவுகளைவிட பழக்க வழக்கம் மேல்,
உணர்ச்சி பூர்வமான பதிவு. அருமை.

said...

மகிழ்ச்சியும் வருத்தமும் கலந்து கலந்து உணர்வோட்டமா இருந்தது பதிவைப் படிக்கும் போது. வாழ்க. வாழ்க.

said...

எவ்வளவு அழகான இடம் ! அன்பான ஒரு சந்திப்பு ..சந்தோஷம் அப்படியே தெரியுது அனைவர் முகத்திலும் ..

said...

அன்பான மனிதர்கள் அழகிய ஊர் .நிறைவான பதிவு .

said...

எத்தனை அழகான இடம் துளசி. எத்தனை அன்பான மனிதர்கள். படத்திலிருக்கும் துளசி பால்மணம் மாறாக் குழந்தையாட்டம் என்ன அழகு. அந்தக் குட்டி ஜோஜோ எங்க இருக்கானோ
அச்சு அசல் கேரளாவைக் கண்குளிரக் கண்டாச்சு. மனிதர்களும் பாசமும் பொங்கி வழிகிறது. மனசுக்கு ரொம்ப சந்தொஷம்ம்மா. இந்த இனிமை எப்பவும் மனசில தாங்கும். எனக்கும் புதுக்கோட்டை போய் அந்த மாடி வீட்டைப் பார்க்க ஆ சை கொதிக்கிறது.

நன்றாக இருங்கள் துளசி. இந்த அன்பும ஆதரவும் எப்பவும் கிடைக்கட்டும்.

said...

கிட்டத்தட்ட 7-8 வருஷத்துக்கு அப்புறம் உங்க ப்ளாக் பக்கம் வர்றேன். என்னை உங்களுக்கு நியாபகம் இருக்கான்னு தெரியல. என்ன ஆச்சரியம், இங்க எல்லாம் அப்படியே இருக்கு!! அதே அருமையான நடையில் பயணக்கட்டுரைகள், அதே அழகான பூனைங்க படம், அதே டான்ஸ் ஆடுற யானை. நீங்க மாறவே இல்லை துளசி ;)

said...

நாம் வாழ்ந்த இடங்களுக்குப் பல வருடங்களுக்குப் பிறகு இப்படிச் சென்று நம் நட்புகளைப் பார்ப்பது ஒரு சுகானுபவம்.....

பதிவு படிக்கும்போதே எனக்கு நெய்வேலி செல்ல வேண்டும் என ஒரு ஆசை!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

மனம் நெகிழ்ந்த நேரங்களில் அதுவும் ஒன்று! இனிமை!

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

இருக்காதா, பின்னே:-)))

said...

வாங்க மகேஸ்வரி.

சரியாச் சொன்னீங்க!

நன்றி.

said...

வாங்க ஜிரா.

க்ரிமினல்ஸ், க்ரைம் நடந்த இடத்தைப் பார்க்கப் போவாங்களாமே!!!!

said...

வாங்க ஏஞ்சலீன்.

எனக்கும் மனசு நிறைஞ்சு போச்சுப்பா!

said...

வாங்க சசி கலா.

எஸ்ஸூ! ஆமோதிக்கிறேன்!

said...

வாங்க வல்லி.

குழந்தை முகம் போய் இப்ப குரங்குமுகம் வந்துருக்கேப்பா:-)

இந்த 40 வருசங்களில் என் முகம் வெவ்வேற மாதிரி மாறிக்கிட்டே இருக்கு!

கோபாலுக்குத்தான் அதிர்ஷ்டம். புதுப்புது மனைவிகள்:-)))

said...

வாங்க ரமணி.

நீண்டகாலங்களுக்குப்பின் வந்ததும் மகிழ்ச்சியே!


யானைக்கே இப்ப மறதி வந்துக்கிட்டு இருக்கு என்றாலும்கூட..... சிலந்தி வலை மனசில் வந்து போகுதே!

யானைக்குச் சட்னு திரும்பிப்பார்க்க முடியாது. சைஸ் அப்படி:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பசுமை நிறைந்த நினைவுகள் அவை!

நெய்வேலிக்குப் போகணும்தான். ரோஷ்ணிக்குக் காண்பிக்கலாமே!