Wednesday, May 13, 2015

கேசவனும், க்ருஷும் பின்னே வெங்கியும் கூடாதே... அம்மையும்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 49)

 காலையில்  அஞ்சே காலுக்கு எழுந்து குளிச்சு முடிச்சு கேமெராவுடன் கோவிலுக்குக் கிளம்பிட்டோம். நடந்துதான்.  சூரியன் இன்னும் வரலை.  குளுமையான  காலநிலை.  நடப்பது ஒரு சுகமாத்தான் இருந்துச்சு.  இது கிழக்கு நடை வீதி. நாலைஞ்சு   ஹொட்டேல்கள் இருக்கு இங்கேயே!

 வாகனப்போக்குவரத்து ஒன்னும் இல்லை என்பதால் ஆசுவாசமாக இருந்துச்சு. குருவாயூர் முனிசிபல் ஆஃபீஸ் கூட   இங்கேதான் இருக்கு. அதைத் தாண்டினதும்  சிறகு விரித்த ப்ரமாண்டமான கருடன்.  இருள் பிரியா நேரமானதால்  படம் சரியா வரலை. நிலவிளக்கு ஏத்தி வச்சுருக்காங்க.

கடைகளில்   அன்றைய வியாபாரம் தொடங்கி நடந்துக்கிட்டு இருக்கு.  கோவில் இரவு மூணு மணிக்கே  திறந்துடறாங்கதானே!  நிர்மால்ய பூஜைக்கு வர்றவங்க அத முடிச்சுக்கிட்டுத் திரும்பும்போது  கடைகளை எட்டிப் பார்க்கும் வழக்கம் இருக்குல்லே:-)

கொட்டகைக்குள்  சின்ன சந்நிதிகள் போல  மூணு மண்டபங்கள்  இருக்கு.  அதுலே நிலவிளக்கு ஏற்றி வச்சுருக்காங்க.  கடந்து போனால் கோவில் முகப்பில்   நேத்து இரவு பார்த்ததுபோலவே பெட்டிக்குமுன் வரிசையில் ஆட்கள். நமக்குத்தான் இப்ப உள்ளே போக வழி தெரிஞ்சு போச்சே!  கோவிலுக்கு இடப்பக்கம்  உள்ள வாசலுக்குப் போனோம். போகும் வழியிலேயே க்ளோக் ரூமுக்கு எதிரே கோவிலுக்குள் போய் தரிசிக்கும் வரிசை ஆரம்பிக்குது. எட்டிப் பார்த்தால்  ஒரு பத்துப்பதினைஞ்சு பேர்தான்.  ஆசை யாரை விட்டது?




க்ளோக் ரூம் கவுண்ட்டரில்  கெமெராவையும் செல்ஃபோனையும்  ஒப்படைச்சுட்டுப்போய் கம்பித்தடுப்பு வரிசையில் சேர்ந்துக்கிட்டோம். மணி இப்போ ஆறேகால்தான்.  சாமி தரிசனம் முடிச்சுட்டே  போகலாம்.  ஒரு அரைமணி காத்திருந்தோம். நம்ம வரிசைக்கு வால் வளர்ந்துக்கிட்டுப் போகுதே தவிர முன்னால் தலை நகரும் வழியா இல்லை.  விசாரிச்சால் ஒன்பது மணிக்கு தரிசனமாம்.  அடக்ருஷ்ணா!  நமக்கில்லைன்னு  வரிசையில் இருந்து  திரும்பி  வெளியே வந்ததும்தான்,  பகவதி சந்நிதி வழியா உள்ளே ஒரு முறை போயிட்டு வந்துடலாமுன்னு  தோணுச்சு.




பகவதி சந்நிதி வழியாக உள்ளே போனோம். உள்ளே மக்கள் கூட்டம் இருக்கு.  கோவில் சந்நிதி மூடி இருக்கு.  உள்ளே  உஷத் பூஜைகள் நடத்துறாங்களாம்.
வெளியே கருவறைக்கு வெளிப்பிரகாரத்தில்  புள்ளையார், ஐயப்பன்  சந்நிதிகளைக் கும்பிட்டுக்கிட்டு வடக்கோட்டு வந்தால்  அட்டகாசமான ரெண்டு யானைகள் அலங்காரத்தோடு  தயாரா நிக்கறாங்க.  ஏழேகால் முதல் ஒன்பது மணி வரை  இன்னும் பூஜைகளும் சீவேலியும் நடக்குமாம். இப்போ மணி  ஆறேமுக்கால்தான்.  பூஜை முடிஞ்சு  சீவேலி ஆரம்பிக்க  எப்படியும் எட்டரை ஆகும். அதுவரை நமக்கு காத்திருக்க நேரம் இல்லையே:(  யானைகள் கழுத்தில் பெயர் பொறிச்ச  பதக்கங்கள்.  இதுலே ஒரு ஆள் கோபி கண்ணன்!  அதி கெம்பீரமுள்ள கொம்பனா! நம்ம கோவி கண்ணன் பெயர் நினைவுக்கு வந்தது.  பக்கத்துலே நிற்கும் மற்றவன் பெயர்  கோவிந்தன்!  அடடா....  இப்படியான்னு அதிசயம்தான்!

மேலே சுட்ட படம்: நன்றி சரிதா.  இந்த இடத்தில்தான் கோபி கண்ணனும் கோவிந்தனும் இருந்தார்கள்.

வெளியே போய்  கேசவனையாவது பார்க்கலாமுன்னு வெளியே வந்துட்டோம். கெமெராவை க்ளோக் ரூமில் இருந்து வாங்கிக்கிட்டு  தெற்கு நடைப்பக்கம் போனால்  ஸ்ரீ வல்ஸம் கெஸ்ட் ஹவுஸ் காம்பவுண்டுக்குள்ளே   கேசவன். பக்கத்துலேயே மரப்ரபு நிக்கறார்!

விஷ்ணு சகஸ்ரநாமத்தில்   இப்படி ஒரு இடத்தில் வருது பாருங்க. “அப்ரமேயோ ஹ்ருஷீகேச': பத்மநாபோ (அ)மரப்ரபு”   இந்த மரப்ரபுதான் இவர். 
இவரைப் பற்றி நம்ம வித்யா சுப்ரமண்யம் (எழுத்தாளர்)  சொல்லி இருப்பதைப் பாருங்கள்



 பூந்தானம் சிறந்த குருவாயூரப்ப பக்தர். அனால் அவருக்கு சமஸ்கிருதம் தெரியாது. பாகவதத்தில் பத்மநாபா அமரப்பிரபு என்றொரு வரி யைச் சொல்லு ம் போது பத்மநாபா மரப்பிரபு என்று சொல்லி வழி பட்டிருக்கிறார். இதை கேட்டு மேல்பத்தூர் பட்டத்த்ரி பத்மநாபனை மரப்பிரபு ஆக்கி விட்டாயே. அவன் அமரப்பிரபுவாயிற்றே. அமரப்பிரபு என்றால் அவன் தேவர்களுக்கு தலைவன் என்று பொருள். நீ மரங்களுக்கு தலைவன் சொல்கிறாயே என்று கேலி செய்ய, பூந்தானம் தன தவறுக்கு மிகவும் வருந்துகிறார். பட்டத்திரியிடம் மன்னிப்பும் கேட்கிறார். ஆனால் கருவறையிலிருந்து அப்போது அசரீரி கேட்கிறது. "பட்டத்த்ரி, உன் பக்தியை விட, பூந்தானத்தின் விபக்தி எனக்கு உயர்வானது. "வனானி விஷ்ணு" ! காடுகள் அனைத்திலும் உள்ள விருட்சங்கள் எல்லாம் விஷ்ணுவின் வடிவமே என்பது தெரியாதா உனக்கு? பூந்தானம் சொல்வதில் தவறில்லை. நானே மரங்களுக்கும் தலைவன் " இதைக்கேட்டு நாராயண பட்டத்த்ரி வெட்கி, உண்மை உணர்ந்து பூந்தானத்திடம் மன்னிப்பு கேட்கிறார். நானே மரப்பிரபு என்று கண்ணன் சொல்வதன் அடையாளமாய் குருவாயூரர் கோயிலின் பின் புறம் உள்ள விடுதி ஒன்றில், இது போல் அடிப்பகுதி மரமும் அதன் உச்சியில் கிருஷ்ணனின் முகமுமாய் அமைக்கப்பட்டிருக்கும்

மனம் நிறைந்த  நன்றி  வித்யா.




.


கஜராஜன்  கேசவன் ,  1976  டிஸம்பர் 2 ஆம் தேதி (அன்றைக்கு ஏகாதசி !)  பெருமாள்கிட்டேயே போயிருச்சு. ப்ச்....






கொஞ்சம் க்ளிக்கி முடிச்சு, கெஸ்ட் ஹவுஸ் வளாகத்துலே இருக்கும் குருவாயூரப்பனை தரிசனம்  செஞ்சுட்டு மீண்டும் கொட்டகைக்கு வந்தப்ப, நம்ம சீனிவாசன் அங்கே இருந்தார். ப்ரேக் ஃபாஸ்ட் முடிச்சுக்கிட்டு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தாராம். நம்மைப் பார்த்ததும் நான் போய் வண்டியைக் கொண்டு வரேன்னுட்டு ஓடினார்.  நமக்கு ப்ரேக்ஃபாஸ்ட் கனூஸில்தான். ஹொட்டேல் நல்லாத்தான் வசதியா இருக்கு.  இன்னும் ஒருநாள் கூடுதலாத் தங்கி இருந்துருக்கலாம்தான்......



தெற்கு நடை

ப்ரேக்ஃபாஸ்ட்க்குப்போனால்  எனக்குப் புட்டும் புழுங்கிய பழமும் வடையும் கிடைச்சது. கோபால் இட்லி வடை!  ஹொட்டேல் பில்லை செட்டில் செஞ்சுட்டு  நாங்களும் கிளம்பிட்டோம்.  பக்கத்துலே  வசூல்ராஜா இருக்காருன்னு   நேத்து  பார்த்த போர்டு  நினைவுக்கு வந்துச்சு.  அங்கே போயிட்டுப் போகலாம்.


அதுக்கு முதலில் இன்னொருக்கா கருடன்வரை போயிட்டு வரணும். வெளிச்சம் வரட்டும். திரும்பிப் போகும்போது  க்ளிக்கலாம் என்று  இருந்தவள்,  காரில்  வந்ததால்  கருடனைக் கவனிக்கலை:(  அதுக்காக.... விட்டுறமுடியுமா?


கேரளா திருப்பதி, கேரளத்திலெ திருப்பதி  திருவெங்கிடாசலபதி க்ஷேத்ரம்.(Thiruvenkidom Temple, Chiriyamkandath Nagar, Guruvayoor ) நம்ம ஹொட்டேலை அடுத்துள்ள ரயில்வேகேட் கடந்தால் இடதுபுறம் திரும்பும் சின்ன மண் ரோடில் ஒரு கிமீ மீட்டர் தூரத்தில் இருக்கு. போகும்போதே குருவாயூர் ரயில் நிலையம் கண்ணில்படாமல் போகாது!






கேரள ஸ்டைல் கோவில்தான்.  ரொம்பவே பழைய கோவிலாம்!   ராமானுஜர்  ஸ்தாபிச்ச கோவில்! ஏழுமலையான்  இங்கே  வெங்கிடாசலபதியாக கோவில்கொண்டு   மக்களுக்கு அருள் செஞ்சுக்கிட்டு வர்றார்.    கோவில் திறந்திருக்கும் நேரம் காலை நாலரை முதல்  பகல் பனிரெண்டரை.  மாலை நாலரை முதல் எட்டரை.  நல்ல பெரிய கோவிலாத்தான் இருக்கு.  புள்ளையார், சரஸ்வதி, ஐயப்பன், பகவதி சந்நிதிகளுடன் ஒரு   சர்ப்பக்காவு (ஆதிசேஷனுக்கு)   பெருமாள் இங்கே வந்து 600  வருஷங்களுக்குப் பிறகுதான்  இந்த பகவதி,  கோவில் கொண்டிருக்கிறாள்.  லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்தவளுக்குத்தான் இங்கே பயங்கர டிமாண்ட்! விஷ்ணு துர்கை!


இந்த  ஏரியாவுக்கே திருவேங்கிடம் என்ற பெயர் இருக்கு. ஆதி மூலவர் திருப்பதி கோவிலில் இருந்தே  வந்தவராம்.   பகவதி பிரதிஷ்டையான  சில காலங்களுக்குப்பின்  சில சமூக விரோதிகள்  பெருமாளின் சிலையின் தலையையும் வலது கரத்தையும் உடைச்சு சேதப்படுத்திட்டாங்க. அப்படியெ அதே நிலையில் பலகாலம்  இருந்துருக்கு.  ஆனால் கோவிலில் பகவதி வழிபாடு மட்டும் தொடர்ந்து நடந்து வந்தது.  காலப்போக்கில்   உள்ளே இருக்கும் மூலவர் சிலை யாரோடது என்பதைச் சொல்லும் ஆட்களும் இல்லாமல் போயிட்டாங்க.

பின்னே 1974 இல் தேவப்ரஸன்னம் வச்சுப் பார்த்தப்போ,    அந்த அடையாளம் இல்லாத சிலை பெருமாளோடதுன்னு தெரிய வந்தது.  திருப்பதி கோவிலுக்குத் தகவல் தெரிவிச்சு அங்கிருந்து புது சிலையைக் கொண்டுவந்து மீண்டும் பிரதிஷ்டை செஞ்சவர்  குருவாயூரப்பன் கோவில்  தந்திரி ப்ரம்மஸ்ரீ சென்னஸ் பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாட்.  திருமலையிலிருந்து  பெரிய ஜீயர் வந்திருந்து  அவர் முன்னிலையில்  மூலவர்  பிரதிஷ்டை ஆனதாகச் சொன்னார்கள்.



பகவதிக்கு இங்கே முட்டிரக்கல்  என்னும்  வழிபாடு  பிரபலமா இருக்கு.  வாழ்க்கையில் முக்கியமுன்னு நினைக்கும் சகல காரியங்களுக்கும்   இருவதே  ரூபாயில் இங்கே தீர்வு கிடைச்சுரும் என்ற நம்பிக்கை.
ஆரோக்யம் என்றால் தேக முட்டு,  தொழில் என்றால்  ஜோலி முட்டு, விரோதின்னா  சத்ரு முட்டு, கல்வின்னா  வித்யா முட்டு இப்படி  மங்கல்ய , சந்தான,  வியாபார, ஸ்தல, க்ருஹ, ஐஸ்வர்ய, கார்ய  சாத்ய, ஐக்கிய (எல்லாத்துக்கும் கூடவே முட்டு சேர்த்துக்குங்க) சகலமானவைகளுக்கும் பரிகாரம் இந்த முட்டிரக்கல். இதுக்குன்னே தனி டைமிங்ஸ் உண்டு.  காலை 7 முதல் 9, 10.30 முதல் 12.30, மாலை 4 முதல் 7 வரை மட்டுமே!
என்னமோ ஏதோன்னு பயந்துறாதீங்க.  இந்த வழிபாடு எப்படின்னா, பகவதி முன்னால் தேங்காய் உடைச்சு பிரார்த்தனை செய்வதுதான்.

ஆமா... இதென்ன முட்டு?   தடங்கல் என்று சொல்றோமே அதேதான். முட்டுக்கட்டை! அதை  இறக்கி விடுவது முட்டு இறக்கல். மனஸிலாயோ!!!


இன்னொரு விசேஷ வழிபாடும் நம்ம பகவதிக்கு  இங்கே உண்டு. பூ மூடல்!  பூச்சொரிதல் போல இருக்கும்போல!  தினம் ஒரு முறை மட்டும் பூமூடல் நடக்கும் என்பதால்  கட்டாயம் புக்கிங் செஞ்சுக்கணும்தான்.  இன்னும்  அஞ்சரை   வருசத்துக்குச் சான்ஸே இல்லை. 2020 வரை அட்வான்ஸ் புக்கிங் ஆயாச்சு!




வசூல்ராஜா கோவில் என்பதால்   கோவில் முன்மண்டபத்தில்  நுழைஞ்சவுடனே கண்ணில் படும்படி புக்கிங் கவுண்ட்டர்கள் எல்லாம் பக்காவா அமைச்சுருக்காங்க. வழிபாட்டு விவரங்கள் எல்லாம்  அங்கங்கே!  கேரளத்தில் மற்ற கோவில்களில் (திருநாவாய தவிர) இதுவரை இப்படிப் பார்க்கவில்லை!

பெருமாள் தரிசனம் நல்லபடியாக் கிடைச்சது. பகவதியும் அருள் செஞ்சுருப்பாள்தான்!

எப்ப குருவாயூர் போனாலும் க்ருஷ்ணனைத் தரிசிப்பதோடு சரி.  அக்கம்பக்கம் தலையைத் திருப்புவதே இல்லையாக்கும்.  எல்லாம் குதிரைக்குக் கண்பட்டை போட்டது போலத்தான்:(  இந்தமுறைதான்  வெங்கியைப் பிடிச்சேன்.  நம்ம ஹொட்டேலுக்குப் பக்கத்தில் ஒரு அரை கிமீ தூரத்தில் ஒரு பார்த்தசாரதி கோவிலிருக்காம்.  அதை மிஸ் பண்ணியது  வருத்தம்தான்.  ஆனால் நெவர் மைண்ட், நெக்ஸ்ட் டைம் என்ற எங்கள் கிவி ஆட்டிட்யூட் இருக்கே!!!

நம்ம வீட்டுலே கேசவன்.  வாசக்கதவு பிள்ளையார் கேசவனுடன் ஒரு  வெயில் வந்த நாளில்.



தொடரும்..........:-)





12 comments:

said...

என்னே அழகான படங்கள்...!


ராமானுஜர் ஸ்தாபிச்ச கோவிலின் தகவல் உட்பட அனைத்தும் அருமை அம்மா...

said...

கண்ணார கண்டு ரசித்தேன் .படங்கள் அத்தனை அழகு .நன்றி.

said...


யானை கொட்டடிக்கும் போகலையா. உங்கள் காமிராவுக்கு நல்ல வேளை இருந்திருக்கும் நாங்கள் போனபோது அறுபதுக்கும் மேற்பட்ட யானைகள் அப்பாடா. என் பேரன் ஒரு யானையைக் குளிப்பாட்டினான் நினைவில் நிற்கும் பயணங்களைக்காமிரா நினைத்துப் பார்க்க உதவும்

said...

வசூல்ராஜாவா என்னடா இது புதுக்கோவில்னு பார்த்தேன். வெங்கியா.சரிதான் நல்ல
பேர்தான். கேசவன் தான் என்ன கம்பீரம் . கருடாழ்வார் தான் எத்தனை இடங்களில் இருக்கிறார்..கோவிலும் வெங்கி கோவிலும் பார்த்தசாரதியையும் சென்ற தடவை தரிசித்தோம்.அது ஆச்சு 20 வருஷம்..உங்க படத்தைப் பார்த்ததும் பளிச்சுனு நினைவுக்கு வந்தது.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ரசனைக்கு நன்றி.

said...

வாங்க சசி கலா.

நன்றீஸ்ப்பா!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

புன்னத்தூர் ஆனக்கோட்டைக்கு ரொம்ப வருசத்துக்கு முன்னால் போயிருக்கோம். மகளுக்குத் துலாபாரம் கொடுக்கப்போன சமயம் அது. ஏகப்பட்ட படங்கள் எடுத்துருக்கேன். ஆல்பத்துலே போட்டு வச்சுருக்கு. அப்ப டிஜிட்டல் கேமெரா வராத காலம். எந்த ஆல்பமுன்னு தேடணும்.அதுவே ஒரு முப்பது இருக்கு. நேரம் கிடைக்கும்போது ஸ்கேன் செஞ்சு போடுவேன்.

பழைய படங்களைப் பார்க்கும்போது மனசுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கு!

said...

வாங்க வல்லி.

பழைய நினைவுகளை அசைபோடுவது எனக்கும் பிடிக்கும்ப்பா. கொசுவத்தி:-))))

said...

திரும்பத் திரும்பச் சொல்றேன். கேரளக் கோயில்கள் எல்லாம் ரொம்பத் துப்புரவா இருக்கு. மனமாரப் பாராட்டுறேன். இந்தத் தூய்மையும் துப்புரவும் நம்மூர்க் கோயில்கள்ளயும் வரனும்னு விரும்புகிறேன்.

கேரளக் கோயில்கள்ள முருகன் இருப்பதேயில்ல போல.

அந்தக் கழுகைச் சுத்தி ஒரே ரெட்டையிலையா இருக்கே.

said...

படங்கள் எல்லாம் மிக அ;ருமை சகோதரி! தகவல்கள் அனைத்தும் அருமை! நன்னாயிட்டுண்டு!

said...

வாங்க ஜிரா.

தட்டுலே விழும் தக்ஷணைக்கு மதிப்பு இல்லாத கோவில்கள் எல்லாம் சுத்தமாத்தான் இருக்கு!

சிவன் கோவில்களில் முருகன் உண்டு. நாம் போனது பெரும்பாலும் விஷ்ணு ஆலயங்களே!

அப்படியும், த்ருக்கடித்தானம் விஷ்ணு கோவில் வளாகத்தில் முருகனுக்குத் தனி சந்நிதி இருக்கே! கந்த சஷ்டி நாளில் அங்கே தற்செயலாப் போயிருக்கோம். நல்லதரிசனம். இங்கெல்லாம் அவர் சுப்ரமண்யஸ்வாமியாக்கும், கேட்டோ!

said...

வாங்க துளசிதரன்.

வளரே நன்னி/\