Monday, June 29, 2015

கார் பார்க்குன்னு நினைச்சது...... கண்ணாடி மாளிகையா!!!!

நம்ம ஊருக்கு  நிலநடுக்கம் வந்து போன ஒரு  அஞ்சாம் மாசம் நாங்க  இந்தியாவில் இருந்து  திரும்பி வந்து இங்கே பூமித்தாய்(!!!??)  ஆடிட்டுப்போனதால் ஏற்பட்ட அவலங்களையும் அழிவுகளையும் பார்த்துப் பொருமிக்கிட்டே  வீக் எண்ட் ஆச்சுன்னா நகரில் என்ன நடக்குதுன்னு  பார்க்கப் போய் ஒரு பாட்டம் அழுதுட்டு வர்றது வாடிக்கையா இருந்துச்சு.

சென்ட்ரல் சி(ட்)டியை  ரெண்டு வருசத்துக்கு  மூடியே வச்சுருந்துச்சு( CERA) செரா. (Canterbury Earthquake Recovery Authority)  அப்புறம் ஒவ்வொரு பகுதியா திறக்க ஆரம்பிச்சாங்க. மூடுன பகுதிக்குள்ளே  இடிபாடுகளை அப்புறப்படுத்தி காலி இடமா விட்டதும்தான், இங்கே முந்தி என்ன இருந்துருக்குமுன்னு  ஒரு மனக்குடைச்சல்.

புண்ணியவான் கூகுள் எர்த், 'கவலைப்படாதே நான் காட்டறேன்'னு  கருணை காட்டுனது உண்மை. அடடா... இப்படியா இருந்துச்சு!  சரியாக் கவனிக்காமப் போனமே....  இவ்ளோ அழகா?  அச்சச்சோ... நிரந்தரமுன்னு மெத்தனமா  இருந்தோமேன்னு  சுய இரக்கம்:(   இனிமேலே....  கவனிக்கணும். இன்னும் நல்லா எல்லாத்தையும் கவனிக்கணும் ... தீர்மானம் எடுத்தது அப்போதான்!

'மக்கள்ஸ், உங்களுக்குப் புது நகரம் கிடைக்கப் போகுது.  யாரும் கவலைப்படாதீங்க'ன்னு   ஒரு பக்கம்  அறிக்கை விட்டுக்கிட்டே, எங்கூர் நகரசபை மண்டையைப் பிச்சுக்கிட்டு, நில நடுக்க நிபுணர்களோடும், கட்டிடக்கலை விற்பன்னர்களோடும் சேர்ந்து  சிலபல டிஸைன்களை  பரிசீலித்து,  கட்டிக்குங்கன்னு அனுமதியும் கொடுத்துருக்கு. Futuristic Christchurch  இப்படி இருக்கப்போகுது அப்படி இருக்கப்போகுதுன்னு  தினசரியிலும்,  நிலநடுக்கத்துக்குப்பின் , வீடுவீடா தகவல் அனுப்பிக்கிட்டும்  இருக்கு. Canterbury Regional Council   Environment Canterbury அவுங்க பங்குக்கு   தகவலை அனுப்பி வச்சுடறாங்க.  Rebuild Christchurch  கொஞ்சமும் சளைக்காம ஃபேஸ்புக்லேயும்  தகவல்களைக் கொடுத்துக்கிட்டே நகர மக்களை அப் டு டேட்டா வச்சுருக்குன்னா பாருங்க.

அழிஞ்சு போன கட்டிடங்களின்   சொந்தக்காரர்கள் சிலர், இன்ஷூரன்ஸ் காசை  வாங்கிக்கிட்டு அந்த இடத்தில் திரும்ப கட்டிடங்களை கட்டி எழுப்பாமல், நிலத்தை வித்துக்கிட்டும்  இருக்காங்க.    யாராவது வாங்கும்வரை சும்மாக்கிடக்கும் இடம்,  எதாவது சம்பாரிச்சுக் கொடுக்கட்டுமேன்னு  அதையெல்லாம் ஒரு  கார்  பார்க்கிங் கம்பெனி லீஸுக்கு எடுத்துக்கிட்டு  ஜமாய்க்குது.  ஊருக்குள்ளே எங்கே பார்த்தாலும் கார் பார்க்குகள்தான்.  ஒரு மணி நேரத்துக்கு 2 டாலர்னு  வசூலிக்கறாங்க.  ஒரு பகல் பூராவும் நிறுத்திக்கணுமுன்னா அஞ்சு டாலர் கட்டணும்.  எல்லாம் மெஷீந்தான்.  ஆளாவது அம்பாவது! (மகள்  தினம்  அஞ்சு டாலர் கட்டிட்டு அடுத்துள்ள ஆஃபீஸ்க்குப் போறாள்.) சிட்டிக்குள்ளே  பார்க்கிங் ஸ்பேஸ்   வச்சுருக்கும் கம்பெனிகள் இனிமேல்  வராது போல!  மாடர்ன் லிவிங்:-(

ஒருநாள் நகர்வலம் (வழக்கமானது ) போறோம்....  கீழ்ப்பக்கமா மறைப்பு  வச்சுக் கட்டிக்கிட்டு இருந்தது  வளர்ந்து  இப்போ மேலே தலையை நீட்ட ஆரம்பிச்சுருக்கு.  பெரிய பெரிய  இரும்புப் பாளங்களா என்ன இது?   கார் பார்க்கிங் கட்டிடமா இருக்கணும். இருந்துட்டுப் போகட்டும். அதுவும் வேண்டித்தானே இருக்கு!

(இனிமேல் எங்கூரில் ஆறுமாடிக்கு மேல் கட்ட அனுமதி   இல்லை. அப்ப  ஏற்கெனவே இருந்ததை என்ன செய்வாங்களாம்?  இருந்தாத்தானே எதாவது செய்ய?  இருந்த நாலைஞ்சும் நிலநடுக்கத்தில் மண்டையைப் போட்டுருச்சே!  எனக்குத் தெரிஞ்சு இப்போ ரெண்டே ரெண்டு கட்டிடங்கள்தான்   நகரத்தில்.  ஒன்றின் விதி இன்னும் முடிவாகலை.  இன்னொன்னு எப்படியோ தப்பிச்சுருச்சு.)








இது ஒரு கார்னர் சைட்.  பக்கத்துலே இருந்த காலி இடத்தையும் சேர்த்து வாங்கிக் கட்டிக்கிட்டு இருந்தாங்க.  மொத்தம் 6000 சதுர மீட்டர்.  ஆறுஅடுக்கு.  இதுலே  உச்சியில் இருக்கும் ரெண்டு அடுக்குகளை  Deloitte  என்ற பெயருள்ள    Accountancy firm  எடுத்துக்கிட்டாங்க. ஆதிகாலத்தில் இதே தெருவில் இருந்த (!) கட்டிடங்களில் ஒரு சின்ன இடத்தில் இருந்தவங்க, இப்போ முன்னணிக்கு வந்து மேஜர் டெனன்ட் ஆகிருக்காங்க.

 அவுங்க பெயர்தான்  கட்டிடத்துக்கும்!  மீதி இருக்கும்  நாலு அடுக்குகளை  வாடகைக்கு  விடறதாப்பேச்சு.   இதோ இதை எழுதிக்கிட்டு இருக்கும் இந்த நிமிசம்  80%  இடத்துக்கு  கம்பெனிகள்   லீஸுக்கு எடுத்தாச்சு!

வெளிப்புறம் சுவர்களுக்குப் பதிலா கண்ணாடிகளையே வச்சுக்கட்டிட்டு, அதுக்கு வெளிப்புறமா இன்னொரு வகைக் கண்ணாடிகளை  அமைச்சுருக்காங்க.  வெளிப்புறக் கண்ணாடிகளை  முழுசுமாக வெவ்வேற கோணத்தில் திருப்ப முடியுமாம். எல்லாக் கண்ணாடிகளும் மூடி இருக்கும் சமயம்  எதிர்ப்புறமுள்ள ஏவான் நதியும் அதையொட்டி நிற்கும் தோட்டங்களும்   இந்தக் கண்ணாடிகளில் ப்ரதிபலிச்சு  பெரிய உயிரோவியம்  போல  இருக்குமாம்!  வெளிப்புறக் கண்ணாடிகள்  ஒரு சமயம்  அக்வா க்ரீன் போலவும், ஒரு ஆங்கிளில்  இளநீலமாவும்   என் கண்ணுக்குத் தெரியுது.






இந்தக் கட்டிடத்தில் முக்கியமான சமாச்சாரமாகக் கணக்கில் எடுத்துக்கவேண்டியது  இதோட அடித்தளத்தில் பொருத்தி இருக்கும் Base Isolators (the most advanced seismic protection system) தான்.  சமீபகாலங்களில்  ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நிலநடுக்க அட்டூழியங்களால்  ( After the seismic activities) கட்டிடத்தில் இருக்கும் எவருக்கும்  ஆபத்து ஏற்பட வாய்ப்பே இல்லை என்ற  அளவில் பாதுகாப்பான  கட்டிடமாக இது இருக்கு(ம்)
ஆர்வம் உள்ளவர்கள் இந்த சுட்டியில் போய் இந்தக் கருவிகள் வேலை செய்யும் முறையைப் பார்த்துக்கலாம்:-)





Southbase Construction கம்பெனிதான் இதைக் கட்டிக்கிட்டு இருக்காங்க.  ரெண்டு மாசத்துக்கு முன் கட்டிடம் பூர்த்தி ஆயிட்டாலும் இன்னும்கொஞ்சம் அக்கம்பக்க வெளி வேலைகள் பாக்கி இருக்கு.  நம்மூரில் பெயர் சொல்லக்கூடிய சிலபெரிய ப்ராஜெக்ட்டுகளை இந்தக் கம்பெனிதான் இப்பச் செஞ்சுக்கிட்டு இருக்கு! அண்டை நாட்டிலும் சிலபல கட்டிடங்களைக் கட்டிக் கொடுத்துருக்காங்க.

ஒரு சதுர மீட்டருக்கு   3070  டாலரென்ற கணக்கில் கட்டிடத்துக்கு மட்டும் 22.5 மில்லியன். மத்தபடி நிலம் அது இதுன்னு  40 மில்லியன் மட்டும்தான் செலவாச்சாம். எல்லாத்துலேயும் வெளிப்படையா இருக்கணுமென்பதும் (ட்ரான்பரன்ஸி?) எந்தக் கட்டிடம்  கட்டுறாங்களோ அதில் வேலை செய்யும் ஒவ்வொருவருக்கும் எல்லாவிவரமும்  கொடுத்துடணுமென்பது  இவுங்க கொள்கையா இருப்பதால்,  வேலையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் உண்மையாக உழைக்கிறாங்கன்னு  சொல்றாங்க கம்பெனி மேலிடத்தார்.   எப்படியோ  வாங்குற சம்பளத்துக்கு நல்லபடி உழைக்கிறது ரொம்பச் சரி.
டிஸைனிங் ஆரம்பிச்சு ஒவ்வொரு சிறப்பு வேலைக்கும் யார்யார் பொறுப்பு என்பதையெல்லாம் கூட அவுங்க   வலைப்பக்கத்தில் போட்டு வச்சு நமக்கும் சொல்லிட்டாங்க:-)

எங்கூருக்கு புது லேண்ட் மார்க்கா இனி இதுதான் இருக்கும்!  ( அதான் பழைய லேண்ட் மார்க்கான  கிறைஸ்ட்சர்ச்  கதீட்ரல்  இடிஞ்சுபோய்க் கிடக்கே!)
மேலே படம்:  இப்படி இருக்குமுன்னு  எங்களுக்குப்போட்டுக் காமிச்சப் படம். எங்கூர் கூவத்துலே படகில் போய்க்கிட்டே அழகை ரசிக்கலாம்:-)


நம்மூர் போலீஸ் ஸ்டேஷனுக்குக் குண்டு வச்சாங்க பாருங்க, அன்றைக்குத்தான்  இந்தக் கண்ணாடி மாளிகையைக் கிட்டப் போய்ப் படம் எடுக்கும் வாய்ப்பு கிடைச்சது. எழுதணுமுன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்.  மற்ற வேலைகள் செய்யும்போது இடையூறா இந்த எண்ணங்களே  வந்துக்கிட்டு இருக்கே....   இதை நிறுத்த என்ன வழின்னு  யோசிச்சால்....   கண்டது ஒன்னுதான். எழுதிமுடிச்சுட்டு, சிஸ்ட்டத்திலிருந்து (!!) வெளியேத்திடலாம்:-)

  நம்ம வடுவூர் குமார் இதைப்பற்றித் தெரிஞ்சுக்க ஆர்வமா இருப்பார் என நினைக்கிறேன். உண்மையைச் சொன்னா இந்தப் பதிவே அவருக்காகத்தானோ:-)))) சிங்கையில் இதைவிட க்ராண்டா இருக்கும் எத்தனையோ கட்டிடங்களுக்கு அவர் பணி செஞ்சுருப்பார் என்றாலும், உள்ளூர் பெருமை எனக்குச் சொல்லாமலிருக்கமுடியுதோ!!!!

PINகுறிப்பு:இந்தக் கண்ணாடி மாளிகையின் ,  காரணம் தலைநகர் பயணத்தொடர்  வரும் திங்களன்றுதான். உள்ளூருக்கு முன்னுரிமை!




11 comments:

said...

என்னவொரு தொழிற்நுட்பம்...! அசர வைக்கிறது அம்மா...

said...

பார்க்க நன்றாக இருக்கு.உங்கூரில் காற்று அவ்வளவு அதிகமாக இருக்காதோ? ஏனென்றால் கட்டிடத்துக்கு வெளியே துண்டு கண்ணாடி நீட்டிக்கிட்டு இருக்கே என்ற சந்தேகம்.இதெல்லாம் Design மூலமே சோதித்திருப்பார்கள் இருந்தாலும் என் சந்தேகம். ஸ்டீல் மூலம் கட்டுவதற்கான காரணமே நேர விரயம் இருக்காது. சிங்கை லீ கேப்பிட்டல் டவர் அலுவலகமே இம்முறையில் தான் கட்டப்பட்டது.இன்றைய தேதிக்கு நில நடுக்கத்தை தாங்கும் என்று சர்டிஃபிகேட் கொடுக்க யாரும் இல்லை.பல தொழிற்நுட்பங்கள் இன்னும் சோதனை முயற்சியிலேயே உள்ளது.

என் ஆர்வத்துக்கு தீனி போட்டதற்கும் மிக்க நன்றி.

said...

ஆங்கிலத் திரைப்படங்களில் வரும் இடங்களைப் போல அருமையாக உள்ளன. பதிவு அருமை. அழகான புகைப்படங்களுக்கு நன்றி.

said...

அழகு!

தொழில் நுட்பம் எத்தனை வகை வகையாய்.....

படங்கள் வழமை போல் அழகு!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

தேவையை அனுசரிச்சத் தொழில்நுட்பங்கள் வளரத்தான் வேணும் இல்லையா!

said...

வாங்க குமார்.

கண்ணாடிகள் எல்லாம் ஸ்டீல்லீவரால் இணைக்கப்பட்டு இருக்கு! தேவையான வெளிச்சத்துக்குத் திருப்பிக்கலாமாம்.

இங்கே கட்டுமானத்தில் ஆபத்தான சமாச்சாரங்களை இணைப்பதில்லை. சேஃப்டி ஃபர்ஸ்ட். இதுதான் தாரகமந்திரம்!

It wasn’t just the bold curves of 151 he had in mind. With the entire structure resting on triple pendulum bearings the building literally floats above ground. It means it will be isolated from earthquake movement – a key safety requisite of the brief provided by site owner Stephen Collins.

க்ரீன் பில்டிங் அவார்ட் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்காம் டிஸைனர் சொல்றார்.

வெலிங்டன் சிட்டிதான் காற்றுக்குப் பேர் போனது! இங்கே நம்மூருலே அவ்வளவா இல்லை. ஆனால் குளிர் மட்டும் கூடுதல். பனிமழை சமயம் கண்ணாடிகள் எல்லாம் உள்ளடிங்கிரும்தானே!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

எங்க ஊர் த மோஸ்ட் இங்லீஷ் சிட்டி ஆஃப் நியூஸிலேண்ட்தான்:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இவ்ளோ காலமா இல்லாமல் இப்போ நிலநடுக்கத்தில் இருந்து தப்பிக்கணும் என்ற கூடுதல் நிர்பந்தம் வந்துருக்கே. அதான் மாய்ஞ்சு மாய்ஞ்சு ஆராய்ச்சி செஞ்சுக்கிட்டு இருக்காங்க.

பேரிடர் மேலாண்மைன்னு சொல்றாங்களே அதுலே நம்ம கேண்டர்பரி யுனிவர்சிடி மாஸ்ட்டரா ஆகி இருக்கு இப்போ!

said...

உங்க தளத்துல வெரைட்டியா எழுதறீங்க. எத்தனையோ இடங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வாய்ப்பு.

ஆமா..உங்க ஊர்ல இந்தியன் ஹோட்டல்லாம் உண்டா?

said...

என்ன ஒரு அழகான கட்டிடம் அதீத தொழில்நுட்பத்தோடு . amazing!! அழகான படங்களோடு , உங்கள் விவரமான விளக்கம் நேரில் பார்ப்பது போல் உணர்ந்தோம் .even the colour you described it in such a way we dont miss out the right colour . நன்றி துளசி

said...

வாங்க நெல்லத் தமிழன்.

எங்க ஊரில் மட்டுமே 42 இண்டியன் சாப்பாட்டுக்கடைகள் இருக்கு. இதுலே ஒரு ஏழெட்டுதான் ரெஸ்ட்டாரண்ட். மற்றவைகள் எல்லாம் டேக் அவே/டேக் அவுட் வகைகள்தான். என்ன ஒன்னு எல்லாக் கடைகளிலும் ஒரே மெனுதான். பட்டர் சிக்கன், நவரத்தன் குருமா, தடுக்கா தால் , நான், கடாய் சிக்கன் இப்படி ஒரே வகைகள். மருந்துக்கும்தென்னிந்திய வகைகள் கிடைக்காது:(

பலவகை மாநில உணவுகள் இருக்கும் நாட்டில் இந்தியா என்றால் இதுதான் சாப்பாட்டுவகைன்னு கிளப்பி விட்டவங்க யாராக இருக்கும்?

பொதுவா ஹொட்டேல் என்றால்... அவை தங்கும்விடுதிகளையே குறிக்கும். அதுக்குள்ளேயும் சில இடங்களில் ரெஸ்ட்டாரண்ட் இருக்காது.