Friday, August 07, 2015

குரங்குக்கும் யானைக்கும் முதலைக்கும் இங்கே தரிசனம் உண்டு ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 69)

6.6 கிமீ கடக்கக் காமணி ரொம்பவே அதிகம்! பசுமையான வயல்களையும், திண்ணை வச்சக் கூரை வீடுகளையும் பார்த்துக்கிட்டே  போறோம். திடீர்னு  ரொம்பதூரம் வந்தது போல் இருக்கேன்னு   தெருவில் எதிர்ப்பட்டவரிடம் விசாரிச்சால்....

'இப்படியே வந்த வழியில் திரும்பிப்போங்க. வேகத்தடைக்கு  அப்புறம் வலது பக்கம் திரும்புனா கோவில்' என்றார்.  வேகத்தடை !   ஹைய்யோ.... என்ன  அழகாத் தமிழில் சொன்னார் என்று எனக்கு ஒரே வியப்பு. என்னைத்தவிர எல்லோரும்  நல்ல தமிழில் பேசறாங்க!  எங்க மாமியார் கூட  அருமையான தமிழில் பேசுவாங்க. அவருக்கு வாய்ச்ச மருமகள், அப்படி  ஒன்னும் சொல்லிக்கறதுக்கில்லை:-)
தோ....   கோவில் வந்தாச்சு. மேலகபிஸ்தலமாம்!  உழக்கில் கிழக்கு மேற்கு  பார்த்தாப்போல்:-) தகரக்கொட்டகை மாதிரி  இருக்கும் முன்வாயிலைக் கடந்து உள்ளே போறோம். 'காலனி'களை  இங்கு விடுன்னு சொல்றாங்க.
ரெண்டு பக்கமும் காடாக வளர்ந்து நிற்கும் செடிகளுக்கு நடுவில் பாதை. நேரெதிரில்  கொடிமரமும் பலிபீடமும். பெரிய திருவடி சின்ன அளவில் இருக்கார்.  அடுத்து இன்னொரு தகரக்கூரை.  அதைக் கடந்து  கோவிலுக்குள் நுழைகிறோம்.



கஜேந்திர வரதன், கிடந்த கோலத்தில் புஜங்க சயனத்தில்.  நாபியில் ப்ரம்மா! காலடியில் தேவிகள்!


 மடியில் முருகன்!

தனிச் சந்நிதியில்  தாயார் ரமாமணி வல்லி!  பொற்றாமரை வல்லி என்றும் பெயர்.  ஆண்டாள் சந்நிதி என் கண்ணில் படலை:(




பெருமாளுக்குக் கண்ணன் என்றொரு பெயரும் உண்டு. பஞ்ச க்ருஷ்ண க்ஷேத்ரத்தில் இந்தக்கோவிலும் ஒன்று.  மற்ற நான்கும்..... திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை,  திருக்கண்ணங்குடி என்னும் ஊர்களில். இந்த அஞ்சுமே 108 திவ்ய தேசக்கோவில்கள் பட்டியலில் உள்ளவைதான். நாம்தான் இன்னும் அங்கெல்லாம் போகலை.

கூற்றமும் சாரா கொடுவினையும் சாரா தீ
மாற்றமும் சாரா வைகயறிந்தேந் ஆற்றங்
கரை கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும் மாயன்
உரைக் கிடக்கும் உள்ளத் தெனக்கு

திருமழிசை ஆழ்வார்  பாசுரம்



 சொர்க்கவாசல்..........

நம்ம ஆஞ்சநேயருக்கு தரிசனம் கொடுத்த பெருமாள் இவர். அதுவும்  நேயடுவுக்குப் பிடிச்ச ஸ்ரீராமர் கோலத்தில்! இங்கே இதே இடத்தில் என்பதால்  கபி (குரங்கு) ஸ்தலம் என்று பெயர் வந்துருக்கு ஊருக்கு!  பொதுவா பெருமாள் தரிசனம்  கொடுத்தவர் பெயரோடும் சேர்ந்துக்குவாரே...  இங்கே ஏன்  கபி வரதன்னு  சேர்த்துக்கலைன்னு எனக்கு ஒரு கவலை! 
 ஆஞ்சி மட்டுமில்லாமல்,  வாலி சுக்ரீவனும் வந்து வழிபட்டார்களாமே...  எப்போ ? சண்டை இல்லாமல் இருந்த  காலத்திலா?  இல்லே சீதையைத் தேடி வந்த வாநரர்கள்  வழி பட்டார்களோ என்னவோ?  அப்படின்னா.... வாலி ஏது?   சரி விடுங்க....  குரங்குப்புராணம்  இப்போ எதுக்கு?

இந்ரத்யும்னன்  என்ற அரசன் கடவுள்பக்தி மேலிட்டு தியானம் செஞ்சுக்கிட்டு இருக்கான். அப்பப்பார்த்துஅங்கே துர்வாசர் வர்றார்.  கண்ணை மூடி தவம் செய்யும் அரசன்,தன்னை உடனே கவனிச்சு மரியாதை  செய்யலைன்னு கோபம் பொத்துக்கிட்டு வருது.  அதென்ன எப்பப் பார்த்தாலும் துர்வாசர் அப்படிச் செஞ்சார், இப்படிச் செஞ்சாருன்னே கதை சொல்லிக்கிட்டு இருக்காங்களே.   தேவலோகத்துலே இவருக்கு ரொம்பவே கெட்ட பேர் போல! எல்லாப் பழியையும் தூக்கி இவர்மேல் போட்டு வில்லனாவே ஆக்கிப்புட்டாங்க!

கதை போற போக்கில் சில இடங்களில் இந்தக் கோபக்கார முனிவர் அகத்தியர் என்று சொல்றாங்க. எனக்கென்னமோ அகத்தியரா இருக்கமாட்டாரு என்ற எண்ணம் இருக்கு.  சீர்காழி முகத்துக்குக் கோபம் பொருத்தமா இருக்குமா?  ஊஹூம்....

"அகங்காரம் மிகுந்து நீ என்னை அவமரியாதை செஞ்சதால் நீ மதம் பிடித்த  யானையாக மாறக்கடவாய்"

மமதை பிடிச்சதுக்கு உதாரணமான மிருகம் யானையா? மனுஷன் இல்லையோ!  என்னமோ போங்க.....  நம்ம யானையை இப்படி எல்லாம் திட்டுனா நல்லாவா இருக்கு?

ஐயோ....  முனிவரே....கண்ணை மூடிக்கிட்டு இருந்ததால் கவனிக்கலைன்னு கெஞ்சுனாலும் 'சாபம் விட்டது விட்டதுதான்'னுட்டார் துர்வாஸர். ஆனால் உன் கடவுள் பக்தி மட்டும் உனக்கு எப்பவும் நினைவு இருக்கும். நீ பக்தியுள்ள யானையாத்தான் இருப்பாய் என்றார்.

யானைப்பிறவி எடுத்த மன்னன்,  தாமரை பூக்கும் தடாகங்களில் இருந்து அழகான தாமரை மலர்களை தினத்துக்கொன்னாய் பறிச்சு, பெருமாள் கோவிலுக்குப்போய்   அந்த மஹாவிஷ்ணுவின் காலடியில் வச்சு கும்பிட்டுக்கிட்டு இருக்கார்.  இவருக்கு கஜேந்த்ரன் என்ற பெயர்.

இது இப்படி இருக்க,  கூஹூ என்ற அரக்கன் ஒரு விளையாட்டுப்பிள்ளை! தண்ணீரில் மூச்சடக்கி ரொம்பநேரம் இருக்க அவனால் முடியும். இதையே பயன்படுத்திக்கிட்டு, குளத்துத் தண்ணீக்குள்ளே  கொயட்டா மூழ்கிக்கிடப்பான். யாராவது குளத்துலே இறங்குனாங்கன்னா....  அப்படியே தண்ணீக்கடியிலேயே நீந்தி வந்து அவுங்க காலை லபக்னு பிடிச்சுத் தண்ணிக்குள்ளே இழுத்துருவான். லபோ திபோன்னு அவுங்க போடும் கூச்சலைக் கேட்டால் பரம சந்தோஷம்.

ஒருநாள் தண்ணீருக்கடியில்  அசையாமல் உக்கார்ந்துருக்கான்.  வர்றார் கோபக்கார முனிவர்.  காலைப்பிடிச்சு இழுத்ததும்  தண்ணிக்குள் விழுந்த முனிவருக்குக் கோபம் பொத்துக்கிட்டு வந்துருச்சு. பிடி சாபம். நீ முதலையாகக் கடவாய். இப்போ 'லபோ திபோ'  வர்றது கூஹூ வாயில் இருந்து!

'சாபவிமோசனம் சொல்லுங்க'ன்னு கெஞ்சறான். 'இங்கே ஒரு  பக்தியானை வரும். அப்போ காலைப் பிடிச்சுக்கிட்டு விடாதே'ன்னுட்டுப் போனார்.

ஒருநாள்  இந்தக் குளத்தில்  மலர்ந்து நிற்கும் தாமரைப்பூக்களைப் பார்த்த கஜேந்த்ரன்,  அட! இவ்ளவு அழகான பூக்களா  இருக்கே. இதிலிருந்து பறிச்சுக்கிட்டுப்போய் பெருமாளுக்கு சமர்ப்பிக்கலாமேன்னு தண்ணீரில் இறங்கினதும்,  முதலை மெதுவா நகர்ந்துபோய் யானைக்காலை கவ்வியது!

முதலைக்கு நீரில் இருக்கும்போது பலம் அதிகம். காலைக் கவ்விப்பிடிக்கத் திறந்தவாயை கெட்டியா மூடிக்கிச்சு. பாவம்  யானை!  கால் வாயில். ரெண்டுமா இழுத்துக்கிட்டுக் கிடக்குதுங்க. இருவருமே விடாகண்டர்களா  இருப்பதால்  வெற்றிதோல்வியை முதலில் கணிக்க முடியலை. காலம் கடந்து போய்க்கிட்டு இருக்கு.  இப்படியே ஆயிரம் ஆண்டுகள் ஆச்சாம்!  நெசமாவா? யானைக்கால் புண்ணு புரையோடி இருக்காதோ:-(

அங்கே வைகுண்டத்தில் இந்தக் காட்சியைப் பார்த்துக்கிட்டு டேக் ஆஃப் ஆக ரெடியா இருக்கும் கருடன்மேல் இருக்காராம் பெருமாள்!

தாங்கமுடியாத ஒரு கட்டத்தில், 'ஆதிமூலமே'ன்னு  யானை கதறியதும்  நொடியில் பறந்துவந்து சக்கரத்தை செலுத்தி முதலையின் கழுத்தை  வெட்டி, கஜேந்திரனைக் காப்பாற்றினார்னு புராணம் சொல்லுது.

பக்தனுக்கு ஒரு கஷ்டமுன்னா தானே ஓடி வந்து காப்பாத்த வேணாமோ? இவரே நேரில்  வரணுமுன்னுகூட இல்லையே. ப்ரயோகச்ச் சக்கரத்தை அனுப்பினால்  வேலை முடிஞ்சது. ஆபத்துலே இருக்கும் பிள்ளை, அம்மான்னு கூப்ட்டா வரலாமுன்னா பெற்றதாய்  இருப்பாள்?  இது என்ன  கருணை?  அதுவும் நம்ம 'யானை' ஆபத்துலே இருக்கும்போது! எனக்குக் கொஞ்சம் கோபம்தான் பெருமாள் மீது.....

பெருமாள் கையால்  வெட்டுப்பட்டதும் சாபவிமோசனம் ஆச்சு  அரக்கனுக்கு. மரணத்துடன் அந்தப் பிறவி போயிருதுல்லே!  அரக்கரூபம் கூட மாறிப்போய்  தேவனாட்டம் ஜொலிக்கிறான். ஆனா  யானை மட்டும் யானையாவே இருந்து  தன்னைக் காப்பாத்துனவரை அதே தாமரை மலர்களால் பூஜிக்குது.

ஆமாம்....  முதலைக்குச் சாப விமோசனம் கொடுத்து, கூடவே காட்சியும் கொடுத்து மேலோகத்துக்குக் கூட்டிப்போன சம்பவத்துக்கு   முதலை மோட்சம்  என்று சொல்லாமல் ஏன் எப்பவும்  கஜேந்த்ர மோட்சம் என்று பெயர் வச்சுட்டாங்க?

நேரில் வந்து காப்பாத்துனதுமில்லாமல்  முதலைக்கும் யானைக்கும் கிடந்த கோலத்தில் ஸேவை சாதிச்சாராம்.  அவர் விரும்பினால்  வகைவகையா தரிசனம் கொடுப்பார்.  மாயக்கண்ணன்!

கோவிலைக் கடைசி முறையா  பழுது பார்த்துப் பெயிண்ட் அடிச்சது அநேகமா 1959 இல்தான் போல:-(  அதுக்குப்பின்  ...........  ஒன்னுமே நடக்கலை. பார்க்கும்போதே மனசுக்குள் வலி முள்ளாய் குத்துது.

ஆமாம்... அறநிலையத்துறைன்னு ஒன்னு இருக்காமே!  நெசமாவா? கோவில்களில் இருக்கும் உண்டியல் வரவுக்கு மட்டும் பாய்ஞ்சோடி வரும் இத்துறை, பராமரிப்புன்னுன்னதும் ஓடிப்போய் ஒளிஞ்சுக்குமோ:-(

கபிஸ்தலம் என்றதும்  எப்பவும் எனக்கு முதலில் மனசில் வரும் பெயர் நம்ம கருப்பையா மூப்பனார்தான். அந்தக் காலத்தில் திருவையாறு தியாகராஜர் உற்சவத்தின்போது  அடிக்கடி  காதில் பட்ட பெயர். மஹா சங்கீத ரசிகர்!  அரசியல்வியாதியாகவும் இருந்த  அவரின் மறுபக்கம் பற்றி எனக்கொன்னும் தெரியாதுன்னு சொல்லிக்கறேன்.
2009 இல் நவகிரகக் கோவில்களுக்குப் போனபோது  கபிஸ்தலம் தாண்டித்தான் போனோம். அப்பவும் மூப்பனார்தான் நினைவுக்கு வந்தார். ட்ரைவரிடம் இதுதானே மூப்பனார் ஊருன்னு கேட்டேன். ஆமாம்னு தலையாட்டிக்கிட்டுப் பறந்துட்டார்!  நாம் அப்ப எடுத்தது  நவகிரக டூர் ஸ்பெஷல் நடத்தும் வண்டி. ஒன்பது கோவில்ன்னா ஒன்பதே கோவில் என்ற கணக்கில் ஒரே நாளில் கொண்டு போயிட்டு வந்துருவாங்க. அக்கம்பக்கம் வேற நல்ல கோவில்கள் இருந்தாலுமே அதெல்லாம் அவுங்க கணக்கில் வராது. கண்ணுக்கும் தெரியாது! "கிரகம் பார்க்க வந்தே... கிரகம் பார்த்துட்டுப் போயிரு"  அதுவுமல்லாமல் அப்ப நமக்கு 108 பைத்தியம் வேற பிடிக்கலை பாருங்க!
பட்டரிடம் கோவில்பற்றி விசாரிக்கும்போது   மூப்பனார் குடும்பம் கோவிலுக்கு ஒன்னும் செய்யறதில்லையான்னேன்.   அவுங்க செய்யறதால்தான் பெருமாளுக்கு  தினப்படி பூஜை நைவேத்தியங்கள் நடக்குது. கோவிலுக்குன்னு வர்ற வருமானம் ரொம்பவே குறைவு.  அதனால் மற்ற செலவுக்கெல்லாம் கஷ்டம்தான்னார்.  அடப்பாவமே.... ஊருலகத்தைக் காப்பாத்தறவனுக்கும் இப்படி ஒரு கதியான்னு மனசு  துக்கப்பட்டது:(


பாடல் பெற்ற ஸ்தலம், பரிதாபமாக் கிடக்கே:(  பெருமாளும்  போனால் போகட்டும் போடான்னு கிடந்த நிலையில் கிடக்காரே:(  அவர் கொடுத்து வச்சது இவ்ளோதானா?  ஒரு விநாடி நின்னு பார்க்க முடியாத  அண்டை மாநிலக்கோவிலில்  செல்வம் கொட்டோகொட்டுன்னு  கொட்ட....    ஹூம்....  நீர் இருக்குமிடம் சரியில்லைவோய்ன்னு சொல்லி வச்சேன்.

பாருங்க நான் எங்கே இருக்கேன் என்பதை!
கோவிலைத் தொட்டடுத்து  ஒரு அம்மன் கோவில்.  ஸ்ரீ மனோன்மணி மாரியம்மன் ஆலயம்!
கூரைமேல்  அம்மன் நடுவில் இருக்க சரஸ்வதி வீணை வாசிக்க, லக்ஷ்மி தாளம் தட்டும் சிலை.
ஆனானப்பட்ட மஹாலக்ஷ்மியே  இப்ப செல்வத்துக்குத் தாளம்  போடுறான்னு சிம்பாலிக்காச் சொல்ல வர்றாங்களோ!

 தொடரும்............:-)



19 comments:

said...

ஒரு அழகான சுற்றுலா போன அனுபவத்தைக் கொடுக்கும் பதிவு. கார்ல கூட உக்காந்துட்டு வந்த மாதிரி இருக்கு டீச்சர். திண்ணை வெச்ச குட்டி வீடு ரொம்ப அழகு.

கபித்தலத்துக்குப் பழைய பேர் குரங்காடுதுறை. அங்க குரங்குகள் நிறைய இருந்ததால அந்தப் பேர்னு சொல்வாங்க.

அடடா..... பெருமாள் கோயில்லயே பொருட்தட்டுப்பாடா... நீங்க சொன்ன மாதிரி மகாலட்சுமியே தாளம் போடுறாங்கன்னு ஆயிருச்சே.

துளசிச்செடி தானா வளந்திருக்கு போல. அழகு + செழுமை

said...

வாங்க ஜிரா.

போனபதிவில் நாம் பார்த்த ஜெகத்ரக்ஷகன் கோவிலுக்கு ஆடுதுறைக் கோவில் என்ற பெயரும் இருக்குன்னாங்க. இந்தக் குரங்காடுதுறைதான் குரங்கை இங்கே விட்டுட்டு அங்கே போய் வெறும் ஆடுதுறை ஆகிருச்சோ!
ஆடுதுறை என்ற பெயரில் இன்னொரு ஊரும் இருக்கே!

துளசியைச் சுற்றிலும் வெவ்வேறு களைகள் வளர்ந்து இன்னும் செழிப்பா இருக்கு பார்த்தீங்களா?

இன்னிக்கு நம்ம கடைக்கு நீங்க மட்டும்தான் வந்துருக்கீங்க! மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!

said...

// மடியில் முருகன்!//

அவனையே பாத்துக்கிட்டு இருக்கேன் டீச்சர்..

திருமாமகள் நாச்சியார்..
(சந்தான லட்சுமியின்) மடியில் இருக்கும் சேயைச் = சேயோன் என்று கண்ட உங்கள் நல்லுள்ளம் வாழ்க!

ஒரு பொண்ணுக்கு, அவ காதலன்/கணவன், அவளோட அம்மா-அப்பா மேல் அன்பு வச்சானானா..
அவனை, மனசுக்குள்ள உசுரா வச்சிப்பா.. கடேசீ வரைக்கும்!
அதே போல், தன் அம்மா-அப்பாவும், அவன் மேல் அன்பும்/மரியாதையும் வச்சிருந்தாங்கன்னா.. அதுவே அவளுக்கு ரொம்பப் பெருமிதம்!

அந்தப் பொண்ணு மனநிலை தான் எனக்கும்..
அத்தைப் பையனை, அம்மா சின்ன வயசில் சீராட்டி, பெரிய வயசில் அவனுக்கே மணமுடிச்சிக் கொடுத்தாற் போல..
அத்தைப் பையனான முருகனை, அம்மாவின் மடியில் காணும் சுகமே சுகம்;)

அந்தச் சுகத்தைக் குடுத்த ஒங்களுக்கு என் நனிமிகு நன்றி..


said...

வள்ளி= திருமால் மகள்
வள்ளிக் கணவன் = திருமால் மருகன்
-என்பது சம்ஸ்கிருத ’புராணம்’ அல்ல; தொல்குடித் தமிழே அதான்!

ஆனா அது மேல புராணம் ஏத்தி,
*தமிழ்த் திருமாலை->விஷ்ணு ஆக்கி,
*தமிழ் முருகனுக்கு = தெய்வயானை சேர்த்து,
திருமாலின் ரெண்டு கண்ணுல வந்த ரெண்டு ஆனந்தத் துளிகளே= ரெண்டு பொண்ணா ஆச்சு-னு (வள்ளி / தெய்வயானை) -ன்னும்,
பொண்ணுங்களைத் தங்கச்சிப் பையனுக்கு (முருகனுக்கு) கட்டி வச்சதா, கதை கட்டீட்டாங்க:)))

தமிழ்த் தொன்மம் அது அல்ல!!
*குறிஞ்சி= முருகன்
*முல்லை= திருமால்
இருவரும் குடி காத்த முன்னோர்; பின்னர் நடுகல்!

முல்லை= காடும், குறிஞ்சி= மலையும்.. அடுத்தடுத்து தான்.. மலையில் காடு இல்லாம எப்படி?
அப்படி, ஒத்து வாழ்ந்த குடிகள்,
அவர்களுக்குள்ளே ‘கொண்டு கொடுத்துக்கிட்டது’ தான்.. நம்பி/ மாயோன் மகள் வள்ளியை = குறிஞ்சித் தலைவன், இளையோன் முருகனுக்குக் குடுத்த களவு-கற்பு மணம்!

*மாயோன்= அப்பா
*சேயோன்/ முருகன்= காதலன்
தன் அப்பாவை மெச்சும் காதலனை, எந்தப் பொண்ணுக்குத் தான் புடிக்காது சொல்லுங்க? dei muruga, i love u da:)))

said...

தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான கோவில்களின் இன்றைய நிலை இது தான். அழகிய கோவில் என்றாலும் தொடர்ந்து பராமரிக்காமல் விட்டால் அழிந்து விடும் அபாயம் இருக்கிறது. அறநிலைத் துறை பற்றி பேசாமல் இருப்பது மேல்!

உங்கள் மூலம் நானும் கபிஸ்தலம் சென்று வந்த உணர்வு. 106-ல் இன்னும் எத்தனை பாக்கி?

said...

மிக அருகிலிருந்தும் இத்தலத்திற்குச் சென்றதில்லை. அடுத்த கோயில் உலாவின் போது செல்ல முயற்சி செய்வேன். படங்களுடன் பதிவு அருமை.

said...

’துளசி’ முழுக்கப் பச்சைப் பசேல்;)
ஆயிரம் காட்டுச் செடி, களைகளுக்கு மத்தியில் இருந்தாலும், துளசியின் வாசம் ஒன்னு போதுமே.. ஒங்க தனித்தன்மை அதான் டீச்சர்..

படங்களைப் பார்க்கையில், எங்கூரு வாழைப்பந்தல் கிராமம் தான் நினைவுக்கு வருது.
ஏன்னா.. அங்குள்ள பெருமாளும் = கஜேந்திர வரதன்
கஜேந்திர வரதராஜப் பெருமாள்= ஆனைக்கருளிய அருளாளப் பெருமாள்

இந்தக் கோயிலில் தான், சின்ன வயசில், அர்ச்சனைத் தட்டுல, ஊதுவத்தி கூட tortoise கொசுவத்தியும் வைச்சி, செம திட்டு/அடி வாங்கினேன், அந்த அய்யங்கார்-அர்ச்சகர் கிட்ட;)
கோயில் மண்டபத்தில் எக்கச்சக்கமா கொசுக்கள்; பாவம், பெருமாளைக் கடிக்காம இருக்கட்டுமே-ன்னு குடுத்தா.. விடுங்க சின்னப் பையனைப் புரிஞ்சிக்கலை;))

எங்க பெருமாள் கோயிலைப் பார்த்தாப்புல மாரியம்மன் கோயிலும் இருக்கும்; நீங்களும் அதே போல இந்த ஊரில், மனோன்மணி கோயிலைக் காட்டுனீங்களா? எங்கூரு ஞாபகம் வந்துருச்சி
--

மூப்பனார் ஊரு= சுந்தர பெருமாள் கோயில்.. கபித்தலத்தின் எல்லை தான்..
*கபி= குரங்கு
*கபி ஸ்தலம்= குரங்காடு துறை
ஆலயத்துக்குச் சிறிதளவேனும் இன்னும் செய்து கொண்டிருக்கும் அவர் குடும்பத்தார் வாழ்க..

மயிலாடு துறை
குரங்காடு துறை
சேலாடு துறை
மானாடு துறை
-ன்னு பல ஆடுதுறைகள், தமிழ் நிலத்தில் உண்டு.. அதான் போல, அந்தூருக்காரரு, நீங்க விசாரிச்சதுக்கு, ‘வேகத்தடை’ -ன்னு அழகுத் தமிழில் சொன்னாரோ?;)

said...

//அதென்ன எப்பப் பார்த்தாலும் துர்வாசர் அப்படிச் செஞ்சார், இப்படிச் செஞ்சாருன்னே கதை சொல்லிக்கிட்டு இருக்காங்களே. தேவலோகத்துலே இவருக்கு ரொம்பவே கெட்ட பேர் போல!
எல்லாப் பழியையும் தூக்கி இவர்மேல் போட்டு வில்லனாவே ஆக்கிப்புட்டாங்க!//

துர்வாசர் = மிகச் சிறந்த தேவி உபாசகர்
ஆனா, கதைக்காக, இப்படி வில்லத்தனம் ஏத்திப் புட்டாய்ங்க;)
ஒட்டக் கூத்தரும் அப்படியே; அன்னையின் அருள் பாடும் கவிஞரு.. ஆனா அவர் மேலயும் வில்லன் கதைகள்;)
--

//ஒரு விநாடி நின்னு பார்க்க முடியாத அண்டை மாநிலக் கோவிலில் செல்வம் கொட்டோகொட்டுன்னு கொட்ட.... ஹூம்.... நீர் இருக்குமிடம் சரியில்லைவோய்ன்னு சொல்லி வச்சேன்//

செம;)
பேசாம, திருமலை-திருப்பதி, 108 (மண்ணுலக 106) திவ்ய தேசங்களையும் தத்து எடுத்துக்கலாம்; பராமரிக்கலாம்

//ஆமாம்.... முதலைக்குச் சாப விமோசனம் கொடுத்து, கூடவே காட்சியும் கொடுத்து மேலோகத்துக்குக் கூட்டிப்போன சம்பவத்துக்கு முதலை மோட்சம் என்று சொல்லாமல் ஏன் எப்பவும் கஜேந்த்ர மோட்சம் என்று பெயர் வச்சுட்டாங்க?//

என்னமா யோசிச்சிக் கேள்வி கேக்குறீக டீச்சர்;) wow, sooper!

said...

மோட்சம் = ஏதோவொரு இடம் அன்று.. சொர்க்கம் அன்று..
அஃதொரு மனநிலை.. அவனே எனும் மனநிலை! அன்பு ஊறும் நிலை..
யாருக்கு அன்பு ஊறுகிறதோ.. அவங்க பேரில் ‘மோட்சம்’ என்று சொல்லுதலே மரபு..

நம்மாழ்வார் மோட்சம்
கர்ண மோட்சம்
கஜேந்திர மோட்சம்

சக்கரத்தால் இறந்தவர் பேரில் ’மோட்சம்’ என்று சொல்லுதல்= அறியாமையால் வந்தது;)
இராவண மோட்சம், சிசுபால மோட்சம் என்று யாரும் சொல்லுவதில்லை;)
ஆனால், ’கர்ண மோட்சம்’ என்றே சொலல் வழக்கம்; அது கர்ணன் அன்பால் வந்தது.. அஃதொரு மனநிலை..
மோட்சம் = விடுதலை..
ஆன்ம விடுதலை! ‘அவனே’.. என்று ஆகி, ’தான் தான்’ என்பதற்கு (ஆன்மாவுக்கு) விடுதலை கொடுத்து விடுவது = அதுவே மோட்சம்!

’பரம் பதம் ஆய செந்தில்’ என்பார் அருணகிரி..
செந்தில் = செம்மையான இல்.. செம்மை மனமே= பரமபதம்; அதுவே மோட்சம்

அதான் ’முதலை மோட்சம்’ என்று சொல்லாது, ’கஜேந்திர மோட்சம்’!
தன் வலி/ துன்பத்திலும், ஐயோ முதலை கிட்டருந்து ’என்’ உசுரைக் காப்பாத்து-ன்னு அலறாமல்..
இந்தத் தாமரைப் பூ ‘அவனுக்கு’ நல்லாருக்குமே, ஆனா வைக்க முடியலையே.. என்ற ஏக்கம் - அன்பு - செந்துஇல் மனநிலை!! = மோட்சம்

பரம் பதம் ஆய செந்தில்
மோட்சம் உகந்தருளும் பெருமாள்
ஆனைக்கு அருளிய அருளாளப் பெருமாள்
அன்பே உருவான ’யானை’ வாழ்க!

said...

//இவரே நேரில் வரணுமுன்னுகூட இல்லையே. ப்ரயோகச்ச் சக்கரத்தை அனுப்பினால் வேலை முடிஞ்சது//

//ஆபத்துலே இருக்கும் பிள்ளை, அம்மான்னு கூப்ட்டா வரலாமுன்னா பெற்றதாய் இருப்பாள்?
இது என்ன கருணை? அதுவும் நம்ம 'யானை' ஆபத்துலே இருக்கும்போது!//

//எனக்குக் கொஞ்சம் கோபம்தான் பெருமாள் மீது.....//

ha ha ha:))))))))))
very true..
kaadhala muruga, pathil chollu
appa perumaaLe, pathil chollu

---

மதங்களில் சேர்ந்து, மதப் பெருமை பேசி, மத நூல்கள் படிச்சி...
தன்னாலேயே, தன் சுய முயற்சியாலேயே.. பக்தி செய்து கொள்ள முடியும் என்று நினைக்காது..
அவன் அருளாலே, அவன் தாள் வணங்கி..
’சுயம்’ இழப்பதே, ’அவன்’ கொள்வதே = ‘பேரன்பு’

யானை, ’தன் பலம்’ கொண்டே மீண்டு விடலாம்; பின்பு பூவைக் கொண்டு போய் அவனுக்குக் குடுக்கலாம் என்று முதலில் கணக்கு போட்டது
பிறர் வந்து உதவுவதே= இழுக்கு -ன்னு நினைச்சுது..

பெருமாள் அங்கே தவியாய்த் தவிக்குறாரு தாயாரிடம்.. யானையின் சுயமரியாதை/ தன்மானத்துக்குப் பங்கம் வராமல் எப்படி உதவுவேன் -ன்னு தெரியலையே?
மல்யுத்தப் போட்டியில், மகன் அடிபடும் போது, அப்பா கிட்ட போய் உதவினா, மகன் இன்னும் கோவிச்சிக்குவானே? ’என் பலம்’/ என் தன்மானம்.. இது போட்டி, நான் ஒன்னியும் கைக்குழந்தை இல்ல; மானத்தை வாங்காதீங்க, போங்க அப்பாலே-ன்னு சொல்லீருவானே -ன்னு தவிக்குறாரு பெருமாள், தாயாரிடம்!
---

கொஞ்ச நேரம் கழிச்சி..
தன் பலத்தால் முடியாது-ன்னு தெரிஞ்சதும்.. தன் உறவுக்காரச் சொந்த பந்தங்களின் பலத்தை நாடுது மனசு.. மற்ற யானைகள் தன்னை எப்படியும் இழுத்து விட்டுரும் என்ற கணக்கு..
என் உறவுகள் இருக்கும் போது, நீ யாருய்யா வெளி ஆளு? -ன்னு கேக்குறானே.. நான் என்ன செய்வேன்? -ன்னு மறுபடியும் தாயாரிடம் புலம்புகிறார் பெருமாள்.. நானா வெளி ஆளு? நான் தானே உண்மையான உறவு? உறவு இருந்தும் ஒதுக்கறானே-ன்னு கதறல்!

கடேசியில்.. யானை புரிந்து கொண்டது.. யார் உண்மையான உறவு?
தான் தான் என்று போலியான ‘தன்’மானம் பாராமல்... அவன், தன்னிடம் வருவதை, தடுக்காமல் இருந்தாலே போதும்.. என்று ‘புரிந்து கொண்ட’ அடுத்த நிமிடமே.. ஆதி மூலமே.......!

பெருமாள், பறந்தடிச்சிக்கிட்டு வருகிறார்..
தாயாரின் புடைவை, தன் உத்தரீயத்தில் சிக்கிக்கிட்டு இருக்கு.. அவள் ‘அகலகில்லேன்’ என்று காதலில் இருப்பதால்; ஆனா, அவ தடுக்கி விழுவாளே -ன்னு கூடப் பாராமல்.. ஓட்டமும் நடையுமாய்.. அலங்காரப் பிரியன், தலை விரி கோலமாய்..

இனி அவன் என்னைத் தடுக்க மாட்டான்; என் உறவைப் புரிஞ்சிக்கிட்டான்; இதோ ஓடியாறேன்.. லட்சுமி கூட எனக்கு வேணாம்; என் பிள்ளை நீ தான்..
---

அட, இருந்த இடத்திலிருந்தே சக்கரம் விட்டாப் போதாதா? யாராச்சும் assistants கருடன்/ சேனை முதலியாரை அனுப்பிச்சா போதாதா? எதுக்கு இத்தினி தலைவிரிகோலம்?
= ஆயிரம் ராஜ சேவகர்கள் இருப்பினும், அரசன், தன் குழந்தை ஆற்றில் விழுந்துருச்சின்னா.. guards jump ன்னு கட்டளை இட்டுக் கொண்டிராமல், அவர்கள் குதித்தாலும்.. ’உள்ளார்ந்த இயல்பாய்’ தானும் குதித்தாற் போலே..
= பெருமாளும் குதித்து விட்டான்..
= யானையே... இதோ வந்துட்டேன்; என் பிள்ளை டா.. நானே குதிப்பேன்!

அதான், ஆண்டாள், தான் சாகும் முன் எழுதிய கடைசிக் கவிதையில் (நாச்சியார் திருமொழி இறுதிப் பாடல்)..
பல ’புராணக்’ கதைகள் இருப்பினும், அதையெல்லாம் பேசாது.. ‘யானை’ பற்றி மட்டுமே பேசிவிட்டு முடித்துக் கொண்டாள்;

பருந்தாட் **‘களிற்றுக்கு’** அருள் செய்த பரமன் தன்னை
விருந்தா வனத்தே விட்டுசித்தன் கோதை சொல்

மருந்தாம் என்று, தன் மனத்தே, வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ், ’அவனைப் பிரியாது’ என்றும் இருப்பார்களே!!!!
---

ஆனைக்கு அருளிய அருளாளப் பெருமாள்
பரம பதம் ஆய செந்தில்..
முருகவா, உன்னை என் மனத்தே...
வைத்துக் கொண்டு வாழ்வேனே; உன்னைப் பிரியாது என்றும் இருப்பேனே!!

said...

எல்லாம் சரி. அந்தத் தாமரை பூத்த தடாகம் எங்கே? அடுக்குமாடிக் குடியிருப்பாகிவிட்டதா?

said...

dear mam
very nice koil is good and well

said...

அழகான படங்கள்...கதைகளும், தகவல்கள்...தொடர்கின்றோம்...

said...

வாங்க கே ஆர் எஸ்.

பதிவுக்கே சிறப்பு செய்யும் பின்னூட்டங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றீஸ்!

//பேசாம, திருமலை-திருப்பதி, 108 (மண்ணுலக 106) திவ்ய தேசங்களையும் தத்து எடுத்துக்கலாம்; பராமரிக்கலாம்//

ஐயோ... இது மட்டும் வேணாம். திருப்பதி ரூல்ஸ் கொண்டு வந்து இங்கேயும் அராஜகம் செய்ய ஆரம்பிச்சுருவாங்க. 105 நிம்மதியா தரிசிக்க முடியாமல் போயிரும்:-(

பெருமாளுக்குமே கஷ்டம்தான். தூங்கக்கூட விடமாட்டாங்க, பாருங்க!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அது மறநிலையாகிப் பலவருசங்கள் ஆச்சு:-(

மூணில் ரெண்டு முடிச்சு இருந்தாலே அதிர்ஷ்டம்தான். எண்ணிப்பார்க்கணும், இனி.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

கபித்தலம் தரிசனம் விரைவில் அமைய அவனே அருளட்டும்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

ஆ.... அப்படி இருக்க வாய்ப்பு இல்லை. ஊர் சின்னதுதான். அடுக்குமாடிகள் ஒன்னும் கண்ணுக்குத் தென்படலை. தடாகமும்தான். ஒருவேளை தூர்வாறாமல் புல்முளைச்சுக் கிடக்கோ என்னமோ:-(

said...

வாங்க மீரா பாலாஜி.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க துளசிதரன்.

தொடர்ந்து வருவதற்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.