Wednesday, November 11, 2015

இப்ப நினைச்சாலும் வியப்புதான் ! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 93)

இதென்ன வானத்தைப் பொத்துக்கிட்டு இவ்ளோ மழை! ராத்திரி ஆரம்பிச்சது இன்னும் நிக்கலை.  இப்போதைக்கு நிக்குமுன்னும் தோணலை. நம்மை இன்றைக்கு  பதினொரு மணிக்கு சந்திப்பதாக பாபா சொல்லி இருக்காராம். நேற்று ராமராஜ்ஜியத்தில் இருந்து தகவல் வந்தது முதல், ஒரு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செஞ்சது.

படம்: நேத்து தீபாவளிக்காக ஸ்ரீ கிருஷ்ணர் அலங்காரம்! 



சொன்ன நேரத்துக்கு வந்து சேர்ந்துட்டார் நம்ம சீனிவாசன். கிளம்பிப் போறோம். லோட்டஸ் தாண்டும்போதே நெருக்கடி ஆரம்பிச்சுருச்சு. கொட்டும் மழையில் அங்கங்கே  வடிகால் சரி இல்லாமல் சாதாரண தெருக்களில் கூட  பாதம் முழுகும் தண்ணி தேங்கி இருக்கு. இதுலே யாரும் போக்குவரத்து விதிகளை நினைச்சுக்கூடப் பார்க்கலை. வலப்பக்கம் விதி (ரைட் ஹேண்ட் ரூல்ஸ்) காணோம்! அது எப்பவுமே இல்லைன்னாலும் இன்றைக்காவது  கொஞ்சம் எட்டிப் பார்த்துருக்கலாம்.

ராமராஜ்யம் நோக்கி பழைய மஹாபலிபுரம் சாலையில் போய்க்கிட்டு இருக்கோம். ராஜீவ் காந்தி சாலையில் முழங்கால் அளவு தண்ணீர்.  செம்மஞ்சேரி என்ற இடத்தில் ஒரு பெருமாள்!  (ஒருநாள் வந்து கண்டுக்கணும்!)


லோட்டஸில் இருந்து வெறும் 33 கிமீ தூரம்தான் மொத்தமே. ஒன்பதுக்குக் கிளம்பி இருக்கோம்.  இப்போ மணி 11.18.    அதுக்குள்ளே  மூணு முறை செல்லில் கூப்புட்டாங்க. 'வர்றாங்களா? வந்துட்டாங்களா'ன்னு பாபா விசாரிச்சுக்கிட்டு இருக்காராம்.  ஒவ்வொரு  முறை செல்கால் வரும்போதும் எனக்கு மனசுக்குள்ளே பதைப்பா இருக்கு. ரன்னிங் காமென்ட்ரி மாதிரி இப்பதான் சோழிங்கநல்லூர் தாண்டறோம், இப்பதான் செம்மஞ்சேரி வந்துருக்கு, இதோ டோல்கேட் வந்துக்கிட்டு இருக்குன்னு பதில் சொல்லிக்கிட்டு இருக்கேன் நம்ம சுசீலாவுக்கு.

டோல்கேட்டை சமீபிக்கும் சமயம்  நெருக்கடியில் வண்டி நிக்கும்போது , திடீர்னு ஒரு ஆள் வந்து  நம்ம வண்டிக்கு முன்னே வந்து நின்னு முறைச்சுப் பார்த்துக்கிட்டே கைகளை பேண்ட் பாக்கெட்டில் வச்சுக்கிட்டு  நிக்கறார். நான் சுசீலாவிடம் நிலையைச் சொல்லி  'வந்துருவோம் இன்னும் கொஞ்சநேரத்தில், மழை ரொம்ப அதிகமா இருக்கே'ன்னு புலம்பும் சமயம்   என்னமோ நடந்துருக்கு போல!

என்ன ஆச்சாம்?

அவர் வண்டியை நாம் ஓவர் டேக் பண்ணிட்டோமாம்!  அங்கே  ஓவர்டேக் பண்ண இடம் ஏது? வரிசைன்னு ஒன்னும் இல்லாம காமாசோமான்னு  கூட்டமால்லெ வண்டிகள் நிக்குது?  எப்படி  நீ வண்டியை எடுக்கறேன்னு பார்க்கறேன்னு  வீரமா நிக்கறாராம்!  இதுக்குள்ளே பின்னால் இருக்கும் எல்லா வண்டிகளில் இருந்தும் ஹார்ன் ஒலிக்க ஆரம்பிச்சது. மழைச் சத்தத்தையும் தோற்கடிக்கும் சத்தம் இது.  அலறல்.

என்ன ஆச்சுன்னு நம்ம சீனிவாசனிடம் கேட்டால்  நான்  ஆரம்பம் முதலே லெஃப்ட் லேன்தான் வந்துக்கிட்டு இருக்கேன். இவர் எந்தப்பக்கம் இருந்து இப்படி வந்தாருன்னு தெரியலையேன்றார். நமக்கோ நேரமாகிக்கிட்டு இருக்கு. வீம்பா உக்கார்ந்துருந்தா வேலையாகுமா?  நான் போய் அவரிடம் பேசறேன்னு கோபால் இறங்கப்போனார். அதுக்குள்ளே 'நீங்க இருங்க ஸார்'ன்னு சீனிவாசன் இறங்கிப்போய் அவரிடம் என்னவோ சொல்ல  ஒரே வாக்குவாதம். ஊமைப்படம் போல் வெறும் ஆக்‌ஷன் ஸீன்.

தப்பு நம்ம மேல இல்லைன்னாலும் 'சண்டை ஒத்து. சமாதானம் மஞ்சிதி' என்பதால்  சீனிவாசன் 'ஸாரி'  சொன்னாராம்.  அப்புறம்  வண்டியை கிளப்பி டோல் கட்டிட்டு கொஞ்சதூரம் போய் வண்டலூர் சாலையில் திரும்பினோம்.

ராமராஜ்ய கேட் அருகிலேயே குடையுடன் நின்னு பார்த்துக்கிட்டு இருந்தாங்க சுசீலா.  இறங்கி பாபா  அறை வரை நடக்க நேரமில்லைன்னு அவங்களையும் வண்டிக்குள் ஏத்திக்கிட்டு  உள்ளே போய்  அறைக்கு முன் வண்டியை நிறுத்திட்டு  இறங்கி நாலு எட்டு வைக்கறதுக்குள்ளே தொப்பலா நனைஞ்சுட்டோம்.

முக்கால் மணி நேரம் லேட்டா வந்ததுக்கு முதலில் மன்னிப்பு கேட்டுக்கிட்டேன். அவருடைய தரிசனத்துக்காக  உலகின் பலநாடுகளில் இருந்தும் மக்கள் வந்து காத்து நிற்கும்போது,   சொன்ன நேரத்துக்குப் போகாமல் அவரை இப்படிக் காத்திருக்க வச்சுட்டோமேன்னு  மனசு குடைஞ்சுருச்சு :-(


சிரிச்ச முகத்தோடு 'வாங்க, உக்காருங்க'ன்னு சொன்னவரிடம் அதன்பின் பேச எனக்கு மனத்தடை ஒன்னுமே இல்லை. நம்ம  அஸ்ட்ராலியா சுசீலாவும் அங்கே இருந்தாங்க. இன்னொரு பக்தையும் இருந்தாங்க. நமக்கு  குடிக்க ரெண்டு ஸ்ட்ராபெர்ரி மில்க் வந்தது. கூடவே ரெண்டு சாக்லெட்களும்.
இந்த விருந்தோம்பல் பண்பு மெய்யாலுமே பாராட்டவேண்டியதுதான். அதுவும்  ஒரு ஆன்மிகத்தலைவர், முதல்லே இதைக் குடிங்கன்னு சொல்லி உபசரிப்பார்னு  நான் கனவிலும் நினைக்கலை.  பாபாவின் இந்தப் பண்பு ரியலி க்ரேட்!  இவரிடம் இன்னும் ஒரு விசேஷம்.... நாமன்னு இல்லை. அவரை சந்திக்க யார் போனாலும் ஒரே மாதிரி கவனிப்பு.  ஒவ்வொருவருக்கும் தன்னை இப்படிக் கவனிச்சாரேன்ற தனியுணர்வு வரத்தான் செய்யும்.  நமக்கும் செய்ஞ்சது.

ரொம்ப சிம்பிளான கொள்கை. அனைத்தும் அன்பே. அனைவரையும் நேசி!  Love all Love is all.

'நான் சொல்வதைக் கடைப்பிடி. நான் சொல்வதைக் கேள்' என்றெல்லாம் உபதேசிக்கும் குருமார்களில் இவர் கொஞ்சம் வித்தியாசமானவரே!  'நான் சொல்றேன்னு எதையும் நம்பிடாதே!  என்ன ஏதுன்னு நல்லா சிந்திச்சுப் பார்த்து, உன் உள்மனசு என்ன சொல்லுதோ அதைக் கடைப்பிடி'ன்னு சொல்றார்!

What I am saying is, 'don't necessarily believe me'. Go around and search among those whom you believe. Check who give you their unconditional love, who doesn't take money from you, etc. Whomsoever passes the test, hold on to him.
Score them on ten points such as love, patience, wisdom, service, purity of thoughts and deeds, equal treatment of one and all, knowledge, capability and so on. Based on your assessment, stick to one path and don't get confused further. Follow the same path come what may, and follow the principles.
-BABA

இயல்பா நண்பர்களைப்போல பேசிக்கிட்டு இருந்தார். 'முந்தியெல்லாம் டிவியில் வந்து இன்னொரு ஆன்மிக குருவுடன் விவாதம் நடத்துனதாக் கேள்விப்பட்டேனே'ன்னு சொன்னேன். அதுக்கும் சிரிச்சுக்கிட்டே....  மக்களுக்கு நல்லதைச் சொல்லலாமுன்னு ஆரம்பிச்சது....   கடைசியில்  அதை உணர்ந்து நடக்கும் பக்குவம்  அவுங்களுக்கு இல்லாமல் போச்சு. இன்னும் அதுக்கான வேளை வரலைன்னு எல்லாத்தையும் நிறுத்திட்டேன்னார்.

அவருக்கு சிலபல சித்திகள் லபிச்சிருக்குன்னு சொல்லி  மனதை எப்படி ஒருமுகப்படுத்தி ஊழ்கத்தில் இருப்பதுன்னு விளக்கி உடலின் நாடிகளை  எப்படி ஆழ்ந்த யோகாவில்  மனசுக்கும் இறைவனுக்கும் தொடர்பு ஏற்படுத்திக்கமுடியுமுன்னு  செஞ்சு காமிச்சார். எனக்கு ஒரே  திகைப்பாத்தான் போச்சு. நம்மைச் சுத்தி இறையருளும், இறைவனின் அன்பும்  நம் ஊனக் கண்களுக்குத் தெரியாமல் பரவி இருக்குன்னு  சொன்ன விளக்கம்  எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது.

இதேபோல் யாகம் செய்யும்போது  அங்கே களிநடம் புரியும் தீ நாக்குகள் எப்படி ஒவ்வொரு உருவத்தை வெளிப்படுத்துதுன்னும் சொல்லி  ஒரு ஃபோட்டோ ஆல்பத்தையும் காட்டினார். இதை பல வருசங்களுக்கு முன்னே நானும் அவதானிச்சுருக்கேன்.  மேகங்களில் உருவங்கள் தெரிவதைப்போல!   இயற்கைதான் கடவுள் என்பது எவ்ளோ உண்மை!  

நியூஸி வாழ்க்கையில் சூரியன் தான் கடவுள்ன்னு நினைக்கும்படி ஆகியாச்சு. கண்ணுக்கு எதிரில் காட்சி கொடுக்கும் சாமி!  ஞாயிறு போற்றுதும்!!!  இன்றைக்கு வெறும் 10 டிகிரி. இன்னும் 19 நாளில் கோடை (! ) ஆரம்பமாம்)

நம்ம புத்தகங்கள் (முதல் மூணு)  கொண்டுபோய்  ராமராஜ்ய ஆஃபீஸில் கொடுத்துருந்தேனே, அவைகளை வாசிச்சுட்டாராம்.  'ரொம்ப நல்லா எழுதவருது உங்களுக்கு. இன்னும்  எழுதுங்க'ன்னு  சொன்னார். 'இங்கே  ராமராஜ்யத்தில் வெளிவரும் சம்ரக்ஷணா இதழில் உங்க ஸ்பீச் எல்லாம் வருதே! நீங்களும் நல்லாதானே எழுதறீங்க'ன்னுதுக்கு,  ' எனக்கு  அப்படி சுவாரசியமா எழுதவராது.  நான் மக்களுடன் இயல்பா பேசறதை, இப்படி   சுவாரசியமா எழுதிடறாங்க'ன்னார்.


அவருடைய ஆன்மிக அனுபவங்களை ரொம்ப இயல்பாச் சொல்லிக்கிட்டே வந்தார். அவருடைய குருமார், எங்கே எப்படி நல்லவைகளைக் கற்றுக்கொண்டார், அப்போ ஏற்பட்ட அனுபவம் இப்படி  ரொம்ப சரளமான உரையாடல். பேச்சுத் தமிழ்தான்.  பெரிய கதை சொல்லி!  கதை சொல்லிக்குக் கதை கேட்கக் கசக்குமா?

ஆன்மிகத்தலைவர்னு காவி போட்டுக்கிட்டு மிரட்டாமல், தன்னைச் சுத்தித் தேவையில்லாத நாட்டாமைகளை வைத்து ஒரு  அரண் அமைத்துக் கொள்ளாமல்  தேடி வரும் அனைவருக்கும்  எளிய தரிசனம்.  வீட்டுலே நம்ம அண்ணனுடன் எப்படி இயல்பா உக்கார்ந்து பேசுவோமோ அதே உணர்வுதான் எனக்கு!

என்னக் கவர்ந்த இன்னொரு சமாச்சாரம்.........   ஜாதி, மதம், அந்தஸ்து, பொருளாதாரம், மொழி,  கல்வி என்ற  பேதம் ஒன்றுமே இல்லாமல் எல்லோருக்கும் ஒரே மாதிரி கவனிப்பு. உண்மையில் கடவுளுக்கு முன்னும் நீதிக்கு முன்னும்  சகலரும் சமம் என்பதுதானே உண்மை!  பக்தர்கள் அவரைக் கடவுளாகவே நினைக்கின்றனர்.  கணினி யுகத்துக்குக் கடவுள் !

அப்போ மழைக்காகக்  கதவைச் சும்மா மூடி வச்சுருந்த  வாசக்கதவருகில் ஒரு உருவம். 'உள்ளே வா'ன்னு இவரே கூப்பிட்டார். வந்தவங்க ஒரு சின்னப்பொண்ணு. வயசுகூட இருபது இருந்தாலே அதிகம். கையிலே சின்ன ஃப்ளாஸ்கில் எதோ கஷாயம்.  ராத்ரி கனவில் பாபாவுக்கு உடம்பு சரி இல்லாமல் போனமாதிரி கனவு. உடனே கஷாயம் போட்டு எடுத்துக்கிட்டு இந்தக் கொட்டும் மழையில் ஓடி வந்துருக்காங்க. 'நான் நல்லாத்தானேம்மா இருக்கேன் ' என்றவர்  'சரி கொண்டா குடிக்கிறேன். கொஞ்சமாக் கொடு'ன்னு  வாங்கி வாயில் ஊத்திக்கிட்டார்.  தகப்பனுக்கும் மகளுக்குமான  ஒரு அன்பு உணர்ச்சி அங்கே!  'மைக்ரோ பயாலஜி படிச்சுட்டு, இப்ப சித்த வைத்தியம் பண்ணறியா'ன்னு ஒரு சின்ன கலாட்டா:-)



பேச்சு போன போக்கில் அவருடைய கையில் சில அபூர்வ ரேகைகள் இருப்பதாகச் சொன்னதும், எங்கே.  கையைக் காமிங்கன்னுட்டேன். ரொம்ப இன்னொஸென்ட்டா  கையைக் காமிச்சார். அப்படியே இருங்கன்னு க்ளிக்கிக்கிட்டேன். நம்ம கோபாலுக்குக் கட்டிப்புடி வைத்தியம் பண்ணுங்கன்னதும் ஒரு அணைப்பு.





 இதெல்லாம்  இப்ப நினைச்சாலும் வியப்புதான்.  வேறிடத்தில் இதெல்லாம் முடியுமா? என்ன ஒரு எளிமை!

பேச்சு சுவாரஸியத்தில் நேரம் ஓடுனது தெரியலை. நம்மவர்தான் மணி ஒன்னரை ஆகுது. அவருக்கு வேற வேலைகள் இருக்கும். நாம் கிளம்பலாமுன்னு  ஆரம்பிச்சார். அடுத்த முறை  இன்னொரு சந்திப்புக்குக் கேட்கலாம்னு  வணக்கம் சொல்லிட்டுக் கிளம்பினோம்.

எனக்கொரு பரிசு வேற!  மேஜை மேல் வச்சுக்கும் பென் ஸ்டாண்ட் வித்  கடிகாரம்!  என்ன இருந்தாலும் எழுத்தாளர் இல்லையோ நாம்?

நம்ம சுசீலாவிடம்,  'இவுங்களுக்கு லஞ்சுக்கு ஏற்பாடு செய்யும்மா'ன்னார்.  அங்கே வந்தவர்களுக்கு அன்னம் இடல் ஆஸ்ரம தர்மம்!  இவர் அன்னபூரணியிடம் வேண்டுனதும் இதுதான்!


ரெஸ்ட்டாரண்டில் சாப்பாடு.  சாதம், சாம்பார், கூட்டு, அப்பளம், ஊறுகாய்ன்னு எளிமையான ருசியான உணவு. எல்லோரும் (சீனிவாசனும்தான்) சாப்பிட்டு முடிச்சதும்,  அஸ்ட்ராலியா சுசீலாவை  விருந்தினர் மாளிகையில் கொண்டு விட்டோம். இந்த மழை பாருங்களேன்.... இன்னும் நிக்கலை!
 மழையில் நான் எங்கே போவேன்?



இது நாம் தங்கின் அறை!  அன்பால் நிறைஞ்ச அறை இல்லெ!!!!

பாபாவுடன் ஒரு எளிய  சந்திப்பு, சொல்லமுடியாத அளவுக்கு   மனநிறைவைத் தந்தது உண்மை !

தொடரும்......:-)


11 comments:

said...

இவருடைய பெயர் "சிவசங்கரபாபா" இல்லையோ? யாகவா முனிவர்னு ஒருத்தரோட விவாதம் நடத்தி புகழ் பெற்றவராயிற்றே!

said...

உங்களுடைய சந்திப்புகள், பயணங்கள், எதிர்பாரா நிகழ்வுகள், அனைத்திற்கும் மேலாகப் புகைப்படங்கள் அத்தனையும் அருமை.

said...

வாழ்த்துகள் துளசி,. அருள் பெருகட்டும்.

said...

வித்தியாசமான சந்திப்புதான்.!

நீங்கள் தங்கியிருந்த அறை என்று சொல்லியதில் பின்பக்கம் அந்தப் படிகள் ஏறுமிடத்தில் கைப்பிடியில் உள்ள (ப்ளாஸ்டிக்??) கொடியில் ஒரு பாம்பு போன்ற உருவம் இருக்கின்றதே...அதுவும் ப்ளாஸ்டிக்தானே??!!

புகைப்படங்கள் அருமை...முன்பு ராஜ் டிவியில் வந்து கொண்டிருந்த சிவசங்கர் பாபாவை பல வருடங்களுக்குப் பிறகு இப்போது தங்கள் புகைப்படங்கள் மூலம்தான் பார்க்கின்றோம்.

said...

சந்திப்பு பற்றிய தகவல்களுக்கு நன்றி.

தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.


இந்த விவாதங்களைப் பார்க்க எனக்குத்தான் ச்சான்ஸ் இல்லாமப்போயிருச்சு.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

அனுபவங்களின் தொகுப்பே வாழ்க்கை என்பதால் கிடைக்கும் அனுபவங்களை அனுபவிக்கக் கற்றுக்கொண்டேன்.

said...

வாங்க யாழ்பாவாணன்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க வல்லி.

வாழ்த்துகளுக்கும் ஆசிகளுக்கும் நன்றி

said...

வாங்க துளசிதரன்.

மாடிப்படிக் கைப்பிடியில் நிஜப்பாம்பு வச்சால் நல்லாவா இருக்கும்?

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.


வாழ்த்துகளுக்கு நன்றி.