Monday, November 30, 2015

இந்தியாவையே தூக்கி சாப்டுட்டாங்கபா!

கடந்த ஒரு சில பல வருசமா கொடி மாத்தம் வேணுமுன்னு  சில சிந்தனாவாதிகள் சிந்திச்சு  அது அப்படியே விரிவடைஞ்சு  அரசாங்கத்தை ஒரு நெருக்கத்துக்குக் கொணாந்துருச்சு. சரின்னு வேறொரு கொடியை டிஸைன் செஞ்சு நாளை முதல் இதுதான் நம்ம கொடின்னு  சொல்லிட்டுப் போகாம........


முதலில் மக்களையே டிஸைன் செய்யச் சொல்லிட்டாங்க.  இருப்பது வெறும்  நாப்பது லட்சம் சனம் தான் என்றாலும்  எல்லோரும் ஒரே மாதிரியா சிந்திப்பாங்க? அவனவன் மூளை தனி டிஸைன்  இல்லையோ?  இதுலே ஆரம்பப்பள்ளி மாணவர்கள் முதல் அத்தனைபேர்கிட்டேயும்  கேட்டுட்டாங்க!


இத்தனாம் தேதிக்குள்ளே உங்க டிஸைனை அனுப்புங்கன்னு சொல்லுச்சு அரசாங்கம். அனுப்புச்சு சனம்.  10,292  வகையில் வரைஞ்சு தள்ளிருச்சு!  அதுலே  சிறப்பான டிஸைன் எதுன்னு  அதுக்குன்னு  Flag Consideration Panel  என்று 12 நபர்கள் அடங்கிய ஒரு நிபுணர் குழு  கூடி  வடிகட்டி வடிகட்டி  ஒரு  40    டிஸைன்களைத் தேர்ந்தெடுத்தாங்க.
அதுக்கு  ஒரு கருத்துக்கணிப்பு போல  அவைகளை வெளியிட்டு, இதுலே எது நல்லா இருக்குன்னு கேட்டு அதுக்கு ஒரு  இலவச ஃபோன் நம்பரும்,  மெயில் ஐடியும் கொடுத்து சொல்றதைச் சொல்லுங்கன்னும் கேட்டாங்க.

அதுக்குப்பிறகு இன்னொரு ரெண்டு மூணு வடிகட்டல். என்னென்ன கருத்துகள் இருக்கணும்? எப்படி வடிகட்டுனோம்,? இப்படியெல்லாம் விவரிச்சு பொதுமக்களுக்கு ஒரு திறந்த மடல் வேற!  கடைசியா தேர்ந்தெடுத்தது 5.



 இந்த அஞ்சும் என்னென்ன சொல்லுது? நியூஸியின் கலாச்சாரத்தை எப்படி பிரதிபலிக்குதுன்னு  விளக்கங்கள்.  அப்புறம் இந்த அஞ்சையும்  பறக்கவிட்டு, பறக்கும் போது பாருங்க. எது  ரொம்பப் பொருத்தமான டிஸைன்னு பார்த்துச் சொல்லுங்கன்னு  படங்களும், யூ ட்யூப் காட்சிகளும் கூட  காமிச்சாங்க.

பறக்கவிட்டாச்!

மூடிமறைச்சுச் செய்யும் வேலை இங்கே எப்பவும் கிடையாது என்பதால்  அரசு எல்லாத்தையும் வலையிலேயே  வெளியிட்டுரும். ஆர்வம் இருக்கறவங்க வலையில் பார்த்துச் சொல்றதைச் சொல்லிடலாம்.

பத்தாயிரத்துச் சொச்சம் (10,000+)டிஸைன்கள்.

ஒரு லக்ஷத்து நாப்பதாயிரத்துச் சொச்சம் பேர்  (140,000+)நியூஸி கொடியின் சரித்திர வீடியோவை பார்த்தவர்கள்.

நாப்பத்து மூணாயிரத்துச் சொச்சம் பேர் (43,000+) ஆன்லைனிலும், தனிமடலுமா  கருத்தை  அனுப்பி இருக்காங்க.

பதினொரு லக்ஷத்துச் சொச்சம் பேர் (1,100,000+) ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் கருத்து சொல்லி இருக்காங்க.

ஆறாயிரத்துச் சொச்சம்பேர் (6,000+)இதுக்காக வண்டியை எடுத்துக்கிட்டு இதுக்கான தகவல், ஒர்க்‌ஷாப்புகளுக்கு விஜயம் செஞ்சுருக்காங்க.

ஒன்பதாயிரத்து ஐநூற்றுச் சொச்சம் கிமீ  (9,500+)பயணம்  செஞ்சு, நாட்டின் பல பகுதிகளில் 25 முறை பொதுமக்களிடம் போய் மீட்டிங் போட்டு இதைப்பற்றி விவரிக்க Flag Consideration Panel  போயிருக்கு.

எட்டு லக்ஷத்து அம்பதினாயிரத்துச் சொச்சம் முறை (850,000+), கொடி சமாச்சாரத்தை   ஆன்லைனில் மக்கள்ஸ் பார்த்துருக்காங்க.

ரெண்டு மில்லியன் சொச்சம் முறை  ( 2,000,000+ )கொடிகளின் டிஸைன் ஆல்பம் பார்வையிடப்பட்டுள்ளது!

புள்ளி விவரம் சொல்றதில்  நம்ம விஜயகாந்தையே கூட மிஞ்சிட்டோம்:-)

ஆமாம்.... இப்ப என்னாத்துக்கு  இந்தக் கொடிமாற்றம் ரொம்ப முக்கியமா ஆகிருச்சுன்னா....  மற்ற சில(!) நாட்டுக் கொடிகளும் ஏறக்கொறைய இதே டிசைனில் இருப்பதால்... 'கன்ஃப்யூஸ்' ஆகுதாம்!   எனக்குத் தெரிஞ்சு  'அங்கே' அஞ்சு நட்சத்திரம். நமக்கு நாலு!   ஆமாம்பா....    அஞ்சுவரை யாராலே எண்ணமுடியுது சொல்லுங்க?

இப்ப இருக்கும் கொடி 112 வருசப் பழசாம்!   அதனாலே?  இப்பவே மாத்திட்டோமுன்னா இன்னும் ஒரு 50, இல்லே 100 வருசத்துக்கு நிம்மதியா இருக்கலாம். (ஆமாமாம். விலைவாசி எப்பவுமே ஏறிக்கிட்டுத்தானே போகுது! அம்பது வருசமுன்னு வச்சுக்கிட்டாலும் ஒரு இருபத்தைஞ்சு மடங்கு செலவு  கூடிடாதா?)
மேலே படம்:  இப்போ இருக்கும் கொடி!


இப்ப எவ்ளோ செலவு ஆகுமுன்னு சொல்லுங்கன்னா....ஏகதேசமா  ஒரு முப்பதுன்னாங்க.  சமீபத்துலே கணக்குப் பார்த்துச் சொன்னது  25.7   இது ஆயிரம் கீயிரம் இல்லையாக்கும்.  நாங்க எப்பவும் மில்லியன் கணக்குலேதான் பேசுவோம்....:-))))

பழைய கொடியே நல்லா இருக்குன்னு ஒரு கூட்டம் சொல்லிக்கிட்டு இருந்தாலும்,    நூறு வருசத்துக்கு மேலேயே ஸில்வர் ஃபெர்ன் டிஸைன், ஆல் ப்ளாக்ஸ் (ரக்பி) ,  நியூஸி  ஸில்வர் ஃபெர்ன்ஸ்(நெட்பால்) இப்படி எல்லாத்திலும்  இடம் பெற்றிருக்கு என்பதால் இதுதான் கொடியில் இருக்கணுமுன்னு  இன்னொரு கூட்டம் சொல்லிக்கிட்டு இருக்கு!  நம்ம நாட்டு மதம் ஸ்போர்ட்ஸ் பாருங்க. அதனாலே .....   இதுக்குத்தான்  முன்னுரிமைன்னு நினைக்கிறேன் :-)

ஆங்.... சொல்ல மறந்துட்டேனே....  நம்ம நியூஸியின் அஃபீஸியல் நிறம் கருப்பு என்பதால்  அதுக்கும் இடமுண்டு:-)



மக்களிடம் அஃபீஸியலா கருத்து கேக்க எலக்‌ஷன் கமிஷன் நடத்தும்   ரெஃபரண்டமுன்னு  ஒன்னு இருக்கு பாருங்க.  இது போஸ்ட்டல் ஓட்டு.  எல்லா வாக்காளர்களுக்கும் அனுப்பிட்டாங்க. நமக்கும் வந்துருக்கு.  டிசம்பர் 8 ஆம் தேதிக்குள்ளே வாக்குப் பதிவு செஞ்சு அவுங்களுக்கு அனுப்பிடணும். அதுக்குண்டான  என்வலப் எல்லாம் வச்சு, கூடவே எப்படி ஓட்டுப் போடணுமுன்னு விலாவரியா  விவரங்கள் கொடுத்துருக்காங்க.  தவறுதலா வாக்குச்சீட்டை டேமேஜ் பண்ணிட்டா....?   உடனே  இலவச எண்ணுக்குக் கூப்பிட்டுச் சமாச்சாரம் சொன்னா உடனே இன்னொரு வாக்குச்சீட்டை அனுப்பி வைப்பாங்களாம். அதுக்காகக் கள்ள ஓட்டெல்லாம் போட முடியாது கேட்டோ:-))))



இங்லீஷ் உட்பட 26 மொழிகளில்  எப்படி ஓட்டுப்போடணுமுன்னு  சொல்லிட்டாங்க.  அட!  இந்திய ரூபாய் நோட்டுகளிலேயே  ஆங்கிலம் உட்பட 17 மொழிகள்தான் இருக்கு, கேட்டோ!  ஆனா இவுங்க இந்தியாவையே தூக்கிச் சாப்ட்ட மாதிரி!!!!

இந்திய மொழிகளிலேயே நாலு  இதுலே!  ஹிந்தி, குஜராத்தி, பஞ்சாபி மற்றும் தமிழ்!

முருகன் அவ்வையாரிடம் கேட்டாப்லெ... 'ஒன்று இரண்டு மூன்றுன்னு அஞ்சு வரை வரிசைப்படுத்திச் சொல்லுக' தான்!  சொல்லிட்டோம்.  அதுலே ஜெயிக்கிற கொடிக்கும், இப்போ இருக்கும் கொடிக்குமா போட்டி வாக்கெடுப்பு (இதுவும் தபால் ஓட்டுதான்!)  ஒன்னு பாக்கி.


இனி  மார்ச் மாதம் 3 முதல் 24 வரை இன்னொரு ரெஃபரண்டம்  இருக்கும். அதுலே ஜெயிச்சு வரும் கொடியை  எங்கள் கொடி தினமான ஆன்ஸாக் டே அன்னிக்கு  (ஏப்ரல் 25)முதல்முறையா ஏத்திருவோம்!

முதல் கட்டத் தீர்ப்பு என்னன்னு  விடை கிடைச்சதும் சொல்றேன், ஓக்கே?

ஒரு சரித்திர சம்பவத்துலே  நாமும் இருக்கோம் என்பதுதான்  முக்கியம் :-)




22 comments:

said...

புதிய தலைமுறையில் இதனைப் பற்றிய முழுமையாக செய்தித் தொகுப்பு பார்த்த போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. வெளிப்படைத்தன்மை என்பதன் முழு அர்த்தமே இது தான்.

said...

உண்மைதான் வாழ்த்துக்கள் துளசிமா .

said...

நல்லதொரு தகவல் தந்துள்ளீர்கள் நன்றி!

said...

நல்லா சொன்னீங்க. ஓட்டெடுப்பில் பழைய கொடியையே வைச்சுக்க ஒரு ஆப்ஷன் இல்லையா?

said...

கொடி பறக்குது..உங்கள் தளத்தில்....

said...

புள்ளி விவரங்கள் அசர வைக்கிறது அம்மா...

said...

அடேங்கப்பா... ஒரு நாட்டோட கொடியை மக்களே முடிவு செய்ற கோலாகலம். அரசு அருமையாத்தான் செயல்படுத்துது. நம்மூர்ல கொடிய மாத்தனும்னு அரசாங்கம் விரும்பினா நாடு என்னாகும்னு யோசிச்சேன்.. விழுந்து விழுந்து சிரிச்சேன் :)))))))))))))

said...

//ஒரு சரித்திர சம்பவத்துலே நாமும் இருக்கோம் என்பதுதான் முக்கியம் :-)//

கண்டிப்பா , எவ்வளவு பேருக்கு இந்த சந்தர்ப்பம் கிடைக்கும் . உங்க சார்புல நாங்களும் பெருமை பட்டுக்கறோம் துளசி !!

அத்தனை மொழிகளுக்கு மத்தியில் தமிழில் பார்த்தது மிகவும் மகிழ்ச்சி .:))))))))

said...

விவரமான விவரங்கள் தொகுத்து தந்தீர்கள் - அருமை!

[தமிழ் முடிந்ததும் 'தாய்' மொழி (தாய்லாந்து மொழி) வருகின்றதே!]

said...

ஏற்பாடுகளில் இருக்கும் துல்லியம் அசர வைக்கிறது. உங்கள் நடையில் படிக்க (விவரங்கள் அதிகம் என்றாலும்) சுவாரஸ்யம்! புது கொடியுடன் வரும் புதிய ஆண்டைக் கொண்டாடப் போறீங்களா? நியூசிலாந்து மக்களுக்கு - உங்களுக்கும் சேர்த்துத்தான் - வாழ்த்துகள்!
சரித்திரத்தில் இடம்பெற்றதற்கு சிறப்பு நல்வாழ்த்துகள்!

said...

வாங்க ஜோதிஜி.

அட ! புதிய தலைமுறை வரை இந்த சேதி வந்துருச்சா!!!! வெளிப்படைத் தன்மை ஒரு அரசுக்கு ரொம்ப முக்கியம் இல்லையோ!

said...

வாங்க டிடி.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றீஸ்.

said...

வாங்க செந்தழல் சேது.

மனம் நிறைந்த நன்றி.

said...

வாங்க ஜீவா.

ரெண்டாவது ரெஃபரண்டம் இதுக்குத்தான். அஞ்சுலே வெற்றி பெற்ற கொடிக்கும் இப்போதுள்ள கொடிக்கும் 'மோதல்'!!! யாருக்கு வெற்றின்னு ஏப்ரல் மாதம் தெரிஞ்சுரும்.

said...

வாங்க, நான் ஒன்று சொல்வேன்.

சொன்னது ரொம்பச் சரி!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

அதான் நம்ம விஜயகாந்தையே மிஞ்சிட்டோம்லெ:-)

said...

வாங்க ஜிரா.

இன்னும் நியூஸி ராணியம்மாவின் ஆட்சிக்குள்ளே இருக்குதான் என்றாலும் ஜனநாயகம் என்பதை சரியாப் புரிஞ்சுக்கிட்டு நடக்குதே! நம்ம நாடு....... இன்னும் கற்றுக்கொள்ளவேண்டியது அதிகம். ஜனநாயகம், சுதந்திரம் என்பதையெல்லாம் தப்பாவே புர்ஞ்சுக்கிட்டு இருக்காங்க :-(

said...

வாங்க சசி கலா.
நம்ம ஓட்டும் இருக்குன்றதே ஒரு மகிழ்ச்சிதானேப்பா!

said...

வாங்க முகம்மது நிஜாமுத்தீன்.

முதல் வருகைக்கு நன்றி.

இது ஆங்கில அகரவரிசை என்பதால் தமிழுக்குப்பின் தாய்!

said...

வாங்க ரஞ்ஜனி.

புள்ளி விவரம் கூடித்தான் போச்சு. ஆனாலும் சொல்லவேண்டியதைச் சொல்லித்தான் ஆகணுமுல்லையா:-)

ஏப்ரலில்தான் தெரியும் புதுசா இல்லை பழசான்னு! புதுசாத்தான் இருக்குமுன்னு நினைக்கிறேன்.

said...

கொடி புதுசா இருக்க போகுதா...இல்ல அதே பழைய கொடியாங்க்றது கொஞ்ச நாட்களில் தெரிந்து விடும்...ஆனா விஷயம் அது இல்லை இப்ப.... நீங்க சொன்னீங்க பாருங்க...சில விஷயங்கள்...படிக்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துது....அதிலே முக்கியமானது..."மூடிமறைச்சுச் செய்யும் வேலை இங்கே எப்பவும் கிடையாது என்பதால் அரசு எல்லாத்தையும் வலையிலேயே வெளியிட்டுரும். ஆர்வம் இருக்கறவங்க வலையில் பார்த்துச் சொல்றதைச் சொல்லிடலாம்" -- Transparency, encouraging public (Residents (Citizens) & Non Residents) participation, appreciating their efforts & much more -- இதெல்லாம் இருந்தாலே அந்த நாடும் ..அதில் உள்ள எல்லா மக்களும் ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க...அப்புறம் அடுத்தது நீங்க சொன்னது -- "சமீபத்துலே கணக்குப் பார்த்துச் சொன்னது 25.7 இது ஆயிரம் கீயிரம் இல்லையாக்கும். நாங்க எப்பவும் மில்லியன் கணக்குலேதான் பேசுவோம்....:-)))) -- ஆயிரம், லட்சம் (275 லட்சம்), கோடின்னு சொல்றதுக்கு பதிலா...27.5 மில்லியன் ..அப்படி சொல்லும் பொது எவ்வளவு பிரமாண்டமா இருக்கு....சொல்லும்போதே ஒரு சந்தோஷ குறுகுறுப்பு இருக்கே. எல்லாத்தை விடவும் ரொம்ப ரொம்ப முக்கியமானது..."ஒரு சரித்திர சம்பவத்துலே நாமும் இருக்கோம் என்பதுதான் முக்கியம் :-)" -- இது மெய்யாலுமே பெருமைக்குரிய விஷயம்...வாழ்த்துக்கள். :)

said...

வாங்க கண்ணன்.

அரசு புதுகொடியையும் பழைய கொடியையும் இலவசமா இப்ப தருது. ஒரு மெயில் அனுப்பினால் போதும். ஒரே ஒரு கண்டிஷன் மட்டும்தான். ரெண்டு கொடிகளையும் சம உயரமுள்ள கம்பத்தில் பறக்க விடணும். நமக்குக் கொடிக்கம்பம் நட்டு வைக்க வீட்டில் வசதி இல்லாததால் கொடிகளை வாங்கிக்கலை.

மூணு மாசத்துக்கு அவை இரண்டும் பறக்கும் அழகை ரசிக்கலாம். பின்னே தேர்தல் வருது. பழைய கொடிதான் வேணுமுன்னு சொல்லும் மக்கள்ஸ், அவுங்க வீடுகளில் அதை மட்டும் பறக்க விட்டுருக்காங்க. தெருவுக்குப் பத்து கொடிகள் பார்க்கலாம், இப்போதைக்கு:-)