Wednesday, March 02, 2016

தானா வந்த பெருமாள். சுயம்புவா? அப்படித்தான் :-) (இந்தியப் பயணத்தொடர். பகுதி 2)

களைத்த உடலைக் கணக்கில் வைக்காமல் உடம்புக்குள் இருக்கும் கடிகாரம் எழுப்பி விட்டுருச்சு. மணி என்னன்னு கழட்டிவச்சக் கை கடிகாரத்தைப் பார்த்தால் 11ன்னு சொல்லுது!  நெசமாவான்னு பார்த்தால் நியூஸி டைம் மாத்தாமல் அப்படியே விட்டு வச்சுருந்துருக்கேன்.  அசல் மணி மூணரை.

மகளுக்கு வாட்ஸப்பில் 'எப்படி இருக்கே?  நாங்க லோட்டஸுக்கு  வந்தச்சு'ன்னு சேதி அனுப்பினால்....  'அர்த்தராத்ரியில் என்ன செய்யறே?' ன்னு பதில் வருது:-)

கொஞ்சநேரம் வலை மேய்ஞ்சு  ஃபேஸ்புக், மெயில்ஸ் எல்லாம் பார்த்துப் பொழுது போக்கிட்டு, பெட்டிகளில் இருந்து,  பரிசளிப்பாகக் கொண்டுவந்தவைகளைத் தனியா எடுத்து வச்சோம். எங்கே போறோமோ.... அங்கே இருப்பவர்களுக்காக  ஒன்னு  என்ற வகையில்  கொண்டு போனவைகள். அதில் முக்கால்வாசி சாக்லேட்டுகள்தான். வேறென்ன கிடக்கு இங்கே?  கடையில் போய்த் தேடினாலும் கிஃப்ட் ஐட்டம் என்றால் ஃபோட்டோ ஃப்ரேம்கள்தான் அதிகம்:-(  உண்மையைச் சொன்னால்... இப்பெல்லாம் எதுவும் கொண்டுபோகவே வேணாம்.  அங்கேயே உள்ளூர்க் கடைகளில் எல்லாமே கிடைக்குதே!

நம்மவர் டிவி ரிமோட்டை வச்சுக்கிட்டுச் சும்மா  சானல்ஸ் மாத்திக்கிட்டு இருந்தாரா.... அப்போ ஜெயா டிவியின் தீம் ஸாங் வந்துச்சு. 'செந்தமிழ்நாடென்னும் போதிலே.... '  எனக்கு ரொம்பவும் பிடிச்ச பாட்டும், அதுக்குப் பொருத்தமான காட்சியுமா அட்டகாசமா இருக்கும்! அனுபவிச்சுப் பார்த்தேன். இங்கே யூட்யூபில்  பார்ப்பதைவிட தெள்ளத்தெளிவா  உள்ளூர் டிவியில் தெரிஞ்சது!!!! அதுக்குப்பிறகு புள்ளையார், சுப்ரபாதமுன்னு  போய்க்கிட்டு இருந்ததும் அருமை. ஆனா அத்தோடு நிறுத்திக்கணும். அதுக்குப்பின்னால் வருபவை எல்லாம்............. ப்ச் :-(  இன்றுன்னு பஞ்சாங்கம் சொல்லும் குரலைக் கேட்டாலே பத்திக்கிட்டு வரும்.



குளிச்சுத் தயாராகி ப்ரேக்ஃபாஸ்ட்டுக்குப் போனோம்.  லோட்டஸ் தரைத்தளத்தில்  ரெஸ்ட்டாரண்ட் இருக்கு.  முந்தி சென்னை24 என்ற பெயரில் இருந்ததை இப்போ க்ரீன்வேஸ் என்று மாத்தி இருக்காங்க. புது நிர்வாகம் போல!  பக்கவாட்டில் இருந்த வாசலை அடைச்சுட்டு தெருப் பார்த்தமாதிரி  வாசல் அமைச்சு,  முன்னால் தோட்டத்தில் ஒரு சிமெண்ட் பெஞ்சு வேற! பார்க்கில் உக்காரலாம்:-)







 உள்ளே  எப்பவும் போல் தான் பஃபே ப்ரேக்ஃபாஸ்ட் என்றாலும் அதில் புதுசா ஒரு இனிப்பு வேற கூடுதலா இருக்கு!  இட்லி,  ரெண்டுவகை சட்னி, சாம்பார், உப்புமா இல்லைன்னா பொங்கல், வடைன்னு நமக்கும், சப்பாத்தி/ பரோட்டா அதுக்குண்டான ஸப்ஜி, கொஞ்சம்  வேகவச்ச காய்கறிகள்னு நார்த்தீஸ்களுக்கும், ப்ரெட், ஜாம் , பட்டர்,  மஃப்பின், கப் கேக், க்ராய்ஸன்ட், கார்ன்ஃப்ளேக்ஸ்னு  ஒரு பக்கமுமா  யார் யாருக்கு எது வேணுமோ அப்படி  எடுத்துக்கலாம்.கூடவே  பப்பாளி,  தர்பூசனி பழத்துண்டுகள், எதாவது ஒரு பழரசம், காஃபி, டீன்னு இருக்கும். தோசை வேணுமுன்னால், கேட்டால் செஞ்சு தர்றாங்க.

என்னதான் கொட்டிக்கிடந்தாலும் எனக்கு வேண்டியது இதுதான்:-)

 இப்பெல்லாம் பல இடங்களிலும்  ப்ரேக்ஃபாஸ்ட் இன்க்ளூடட் என்பதால் காலையில் உணவைத்தேடி வேறெங்கேயும் ஓட வேணாம் என்பது ஒரு ஆறுதல். பணியாளர்கள் எல்லாம் வழக்கம்போல்  நார்த்தீஸ்களே! அதே போல தங்கி இருக்கும் வடக்கர்களும் நம்ம இட்லி வடை சாம்பாருக்குத்தான் முன்னுரிமை தர்றாங்க:-) ஸப்ஜியை யாருமே சட்டை செய்யலை!


 ஒன்பதுமணிக்குக் கிளம்பி நேராப்போனது நம்ம அடையார் அநந்தபதுமனைத் தேடித்தான்! பெருமாள் அப்படிக்கப்படியேதான்  கிடக்கிறார்.  யாரும் ஜருகு, மாறிக்கோ என்று சொல்லலை:-) நிம்மதியா கண்ணும் மனமும் நிறைய  தரிசித்தேன். பிரகாரம் சுற்றிவந்து  அனைத்து தெய்வங்களையும் நமஸ்கரிச்சு, திரும்பவும் மூலவர் முன்புறம் போட்டு வச்சுருக்கும்  மரப்படிகளில் ஏறி உக்கார்ந்து  இன்னும் ரசிச்சுப் பார்த்து, அவனுடன் பேசி முடிக்கக் கொஞ்சநேரம் ஆனது உண்மை.


கோவிலில் கட்டிடவேலை நடக்குது. அடுத்துள்ள தர்மபரிபாலன சபா கட்டடத்தையும் சேர்த்து  நவக்ரஹ சந்நிதிக்கு மேலே  மேல்தளம்  கட்டிக்கிட்டு இருக்காங்க. கொடிமரத்துக்கு மேல் போட்டுருந்த  கூரையை எடுத்துட்டதால்  கோவிலைப் பார்க்கும்போதே ஒரே வெளிச்சமா, 'ஹோ' ன்னு இருக்கு!

பயணங்களில் முக்கியமா சென்னைப் பயணங்களில்,  சாமிக்குக் கொடுக்கும்  அதே முக்கியத்துவம் ஆசாமிகளுக்கும் கொடுப்பதே வழக்கம். சுற்றமும் நண்பர்களும் இல்லாத  வாழ்க்கை  ஒரு வாழ்க்கையா?
கோவில் இருக்கும் அடையாரிலேயே நம் தோழிகள் சிலர் இருக்காங்க. இன்றைக்குப் போது விடியும்போதே ஃபோனில் கூப்பிட்ட தோழி, 'மத்யான சாப்பாட்டுக்கு மரியாதையா வந்து சேர்'னு சொல்லி இருந்தாங்க.  அங்கேதான் இப்போ முதலில் போறோம், மதிய சாப்பாடு வேணாமுன்னு சொல்றதுக்கு :-)


தோழி வீட்டில்  ஒரு இன்ப அதிர்ச்சி! எனக்காக ரெங்கன் காத்துக்கிட்டு இருந்துருக்கார் அங்கே! பார்த்த முதல் பார்வையிலேயே வாயடைஞ்சு நின்னேன் என்பதே வாஸ்தவம்!

இக்ஷ்வாகு குலதனமா ரெங்கவிமானம் , விபீஷணனுக்குக் கிடைச்சப்போ அவனுக்கு எப்படி இருந்துருக்கும் என்பது  இப்ப எனக்குக் கொஞ்சூண்டு புரிஞ்சது :-)

என்ன கிடைச்சு என்ன? அவனால்  ஒரு கடல் தாண்டிக் கொண்டுபோக முடிஞ்சதோ?  இப்பப் பாருங்க....  ரெங்கனை,  கடல்கள் தாண்டி நியூஸிக்குக் கொண்டுவந்து 'ப்ரதிஷ்டை' பண்ணியாச்:-)

நம்ம வல்லியம்மா இருக்காங்க பாருங்க, அவுங்க என்வசம் சேர்க்கச் சொல்லி ரெங்கனை அங்கே  கொண்டுவந்து விட்டுட்டுப் போயிருக்காங்க. சம்பவம் நடந்து  ஒரு  மூணுமாசம் ஆகி இருக்கும். எனக்கு இது ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டும் என்று சொல்லிப்போனதால் யாருமே  மூச் விடலை!
தானா வந்த பெருமாள்னு உடனே அவனுக்குப் பெயர் வச்சாச்:-) நியூஸிக்குப் போகணுமுன்னு  அவனே விருப்பப்பட்டு வர்றானே!

அப்ப மனசெல்லாம் நிறைஞ்சு போயிருந்துச்சு. ஒன்னும் சொல்லத் தோணலை. பத்திரமா  பொதிஞ்சு கொண்டு போகணும் என்றதுக்குத் தோழியும் அவர் கணவரும், இங்கே ஒரு இடமிருக்கு. நல்லா பேக் பண்ணித் தருவாங்க என்றதால்  அதுவரை அங்கேயே இருக்கட்டுமுன்னு சொல்லிட்டு நல்ல காஃபியா ஒன்னு குடிச்சுட்டுக் கிளம்பினோம்.

வல்லியம்மாவுக்கு நம் அனைவரின் சார்பில் நன்றி சொல்லிக்கறேன்.


தொடரும்......:-)


33 comments:

said...

ஜெயா டிவியில் வரும் அந்தக் குரல் எனக்கும் மிக அதிகமான எரிச்சலை உண்டாக்கும்.

வடக்கர்களுக்கு அவிங்க ஊர்லயே அவிங்களோட ஸப்ஜி எட்ஸெட்ரா கிடைக்குமே.. இட்லி வடைதானே அவிங்களுக்கு அபூர்வம்? அதேன்....!

said...

இன்னிக்கு காலைலே எழுந்த உடனே அடையாறு அனந்த பத்ம நாதனை தரிசிக்க கிழவியையும் கூட்டிக்கொண்டு போவனும் அப்படின்னு நினைச்சுக்கிட்டே எழுந்தேன்.

அது எப்படி உங்களுக்குத் தெரிஞ்சது ?? !!!

கண் முன்னாடி அந்த அனந்த சயன பெருமாளை, அடையாரில் கோவில் கொண்ட பத்மனாபனைக் கூட்டியாந்தீங்க ??

எல்லாமே அந்தப் பெருமாள் அருள்.

துளசி தீர்த்தம் சாப்பிட்ட மாதிரி ஒரு சுகானுபவம்.

துளசி கோபால் அவர்களே !

சர்வ மங்களானி பவந்து.

சுப்பு தாத்தா.
மீனாச்சி பாட்டி.
www.subbuthatha72.blogspot.com

said...

அந்த அனந்த பத்மநாப கோவிலில் ஒரு முறை என் அபிமான அபிஷேக் ரகுராம் கச்சேரி கேட்டது நினைவுக்கு வருகிறது.

சயன ரங்கன் அழகு. அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்? சபாஷ் வல்லிமா...

said...

hey romba cute antha rangan
chitra kailas

said...

அன்பு துளசி,
எனக்கும் அந்தக் குரல் கொடுக்கும் எரிச்சல் சொல்ல முடியாது. பகவான் அவர் சொல்லும்போது மண்டயீல் தட்டிக் கொள்வேன்.

லோடஸில் இத்தனை மாற்றமா. நல்லாதான் இருக்கு.
ரங்கன் பார்க்க அழகா இருக்கான். அவன் மனசை வைத்ததைவிட நீங்கள் பாடுபட்டு
அவனைக் கொண்டுவந்ததுதான் மன்சில் நிற்கிறது.

எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும். நன்றி மா.

said...

பசிக்கிறது அம்மா...

படங்கள் அனைத்தும் அருமை...

said...

//தங்கி இருக்கும் வடக்கர்களும் நம்ம இட்லி வடை சாம்பாருக்குத்தான் முன்னுரிமை தர்றாங்க:-) ஸப்ஜியை யாருமே சட்டை செய்யலை!//

வடக்கர்களுக்கு காலைல சமோசா, கட்லெட், ஜலேபி ஃபாஃப்டான்னு நாஷ்டா வேணும். ரோட்டி சப்ஜியெல்லாம் அவங்க லஞ்ச் டின்னருக்கு எடுத்துக்கறது.

வடக்கர்கள் இட்லி சாப்பிடற அழகிருக்கே.. அட அட அட.. முழு இட்லியைக் கையில் பிடிச்சுக்கிட்டு அதை சாம்பார் சட்னில முக்கி அப்டியே ஒரு கடி. ஆஹாஹா. நம்மை மாதிரி கொஞ்சமாப் பிச்சு சாப்பிடறதை விட அவங்களுக்கு இப்படிச் சாப்பிடறது ரொம்பப்பிடிக்குதாம். :-))

said...

//முழு இட்லியைக் கையில் பிடிச்சுக்கிட்டு அதை சாம்பார் சட்னில முக்கி அப்டியே ஒரு கடி. ஆஹாஹா. //

என்னோட பேரப்புள்ளைங்க கூட இப்படித் தான் செய்யுதுக..

இன்னாடா அப்படின்னு கேட்டா ...

ஈட்டிங்க் இஸ் மோர் இம்பார்டன்ட் தான் டேஸ்டிங் . particularly when u r hungry.

நெசமாவே சுட சுட இட்லியை சட்னி சாம்பார், கூட பாத்தா பசி அதிகமாயிடுது இல்லையா ??

சுப்பு தாத்தா.

said...

படங்களும் நிகழ்வுகளும் அருமை. பள்ளிகொண்ட பெருமாளின் பேரழகுக்கு நிகரேது?

said...

படங்களையும் நிகழ்வுகளையும் ரசித்தோம். பள்ளிகொண்ட பெருமாளின் பேரழகினை அதிகம் ரசித்தோம்.

said...

என்னதான் வித்தியாசமான உணவு கிடைத்தாலும் நமக்குக் கொடுத்து வெச்சது இட்லி வடைதான் படங்களே சுவை சொல்லும்

said...

ஹ அஹா இட்லி தோசைசாம்பார் வடைதான் தான் என் பேவரிட்டும் எங்கே போனாலும் ..இங்கே ஒரு நார்த் பிரண்ட்ஸ் க்ரூப்புக்கு இட்லி சாம்பார் வடை செஞ்சி கொண்டு போனேன் ..முள்கரண்டி கத்தி வச்சி வெட்டி வடை இட்லியை சாப்பிட்டாங்க ..தோசையை ரெண்டு கையாளும் பிசிட்ட்டாங்க ...ஆனா ருசியில் மயங்கி ரெண்டு பேர் டேபிள் டாப் க்ரைண்டருக்கே ஆர்டர் கொடுத்தாங்க !அவ்ளோ ருசி நம்ம சவுத் இட்லிதோசை :)

ஆஹா ! இன்ப அதிர்சியாயிருந்திருக்கும் !உங்களுக்கு ரங்கனை பார்த்ததில் ,,அழகா தூங்கறார் ரங்கன் ..ரஜ்ஜூ வந்து பார்த்தாச்சா !..

said...

வாங்க ஸ்ரீராம்.

பாதாளபைரவியிலே மந்திரவாதி பேசறதைப்போல அது என்ன குரல்னு பிடிச்சுப் போட்டுருக்காங்கன்னு தெரியலையே!

said...

வாங்க அத்திம்பேர்.

மீனாட்சி அக்காவை ஏன் எப்பப் பார்த்தாலும் கிழவி கிழவின்னு அடைமொழி கொடுத்துச் சொல்றீங்க? உங்க பின்னூட்டத்தை அக்கா படிக்கமாட்டாங்கன்ற தைரியம்தானே?:-)

இப்பெல்லாம் இஷ்டதெய்வக் கோவிலுக்குப் போகும்போது புனர்தரிஸன ப்ராப்திரஸ்துன்னு நான் சொல்லிட்டு வர்றேன். அவருக்கும் நம்மைப் பார்க்கணுமுன்னு தோணாதா? பாவம்!

said...

@ ஸ்ரீராம்.

அந்த தர்மபரிபாலன சபாவில் அடிக்கடி நல்ல நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும்.எல்லாமே இலவசம் வேற !

ஸ்வாதித்திருநாள் நாட்டிய விழா நடக்கும்போது அபூர்வ நடனக்கலைஞர்களின் நிகழ்ச்சிகளை ஒரு சமயம் ஒரு வாரம் முழுக்க அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்தது!

said...

வாங்க சித்ரா கைலாஷ்.

கண்டதும் காதல்தான் போங்க!

said...

வாங்க வல்லி.

அன்றுமுதல் ஊர் திரும்பும் வரை ரெங்கன் பாடாப்படுத்திட்டான்ப்பா :-)

ஷாப்பிங் செய்யவே விடலைப்பா!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

அச்சச்சோ.... இன்னுமா சாப்பிடலை?

said...

வாங்க சாந்தி.

ஃபிஜியில் இருக்கும்போது, அர்விந்த் Bபையா வீட்டுக்கு இட்லி கொண்டு போனால் போதும், அனிதா Bபாபி கத்தியைத் தூக்கிட்டு வருவாங்க!

இட்லியைக் கத்தியால் ப்ரெட் ஸ்லைஸ் போல வெட்டி, சட்னியைத் தடவி ஸாண்ட்விச்சா ஆக்கித்தான் சாப்பிடுவாங்க :-)

said...

@ அத்திம்பேர்

ரகம்ரகமா இட்லி சாப்பிட்டாறது:-) இப்போ புதுசா ப்ரஸ்டீஜ் கம்பெனி புது ரக இட்லி தட்டு செஞ்சு விற்பனைக்கு வச்சுருக்காங்க. சதுரம், இதயவடிவம், முக்கோணமுன்னு வகை வகையா செஞ்சுக்கலாம். அடுத்த முறை வாங்கிக்கணும்.

உங்களுக்காக பதிவில் ஒரு படம் சேர்த்துருக்கேன் பாருங்க.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

அவருக்கென்ன?

நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலுமே அழகோ அழகுதான்!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

ஆபத்து இல்லாத உணவுன்னா இட்லியைத் தவிர வேறென்ன இருக்கு? அதான் நாம் அதை கண்டால் விடுவதில்லை :-)

said...

வாங்க ஏஞ்சலீன்.

கொஞ்சம் லாங் ப்ராஸஸ் என்பதைத் தவிர வேறென்ன கஷ்டம் இட்லியில், இல்லையா?

ரஜ்ஜு கோபமா இருந்த காலம் அது. அதனால் முகங்கொடுத்துப் பார்க்கலை. அடுத்த முறை கீழே இறக்கி வைக்கும்போது கட்டாயம் வருவான், அந்த நோஸி:-)

said...

என்ன ஒரு அழகு ..!

வாழ்த்துக்கள் ..அம்மா ....அரங்கன் வருகைக்கு

said...

திண்டுக்கல் தனபாலன் சொல்வது போல, படங்களைப் பார்த்தவுடன் பசி வந்து விட்டது; சாப்பிட வேண்டும் போலத்தான் தோன்றுகிறது. பாம்பணை மீது பள்ளி கொண்ட பெருமாள் உங்களது முகத்தில் ஒரு பரவசத்தையே தந்து விட்டார். வாழ்த்துக்கள்.

said...

ஆகா.. டீச்சர். தொடர் தொடங்கியாச்சா.. சூப்பர். காத்திருக்கிறேன் தொடர்ந்து படிக்க.

தானாய் வந்த பெருமாளை நேரில் பெட்டியில் பார்த்தேன். இங்கே படத்திலும் பார்த்துவிட்டேன்.

said...

படங்கள் ஆஹா ரொமப்வே பசிக்குது....

நார்த்திஸ்க்கு அவங்க ஊர் பண்டம் எல்லாம் எப்பவுமே கிடைக்குமே நம்முதுதானே அபூர்வம் அதான் இட்லி சாம்பார் . இது இங்க எல்லா ஹோட்டலியும், நம்ம ஃபெரெண்டுங்க மத்தியிலியும் பாப்புலர். இட்லி தோஷா அப்படினு அண்ட் அவங்க ரோட்டி சப்ஜி லஞ்சுக்குத்தானே எடுத்துக்குவாங்க...

அந்தப் பஞ்சாங்க ஆளு தாங்காதுப்பா...ஸ்விட்ச் ஆஃப்தான்.

பெருமாள் அழகு!

கீதா: அடையார் அருகில்தான் நம்முதும்...நெக்ஸ்ட் டைம் வாங்க நம்ம வீட்டாண்ட துளசி..

தொடர்கின்றோம்..

said...

அடுத்த முறை கண்டிப்பா முன்னாடியே சொல்லிட்டு வாங்க .வீட்டுக்கு வரணும்.பெருமாள் பரிசு அற்புதம்.வல்லியம்மாக்கு பாராட்டுதலை சேர்த்துடுங்க.

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க தமிழ் இளங்கோ.

அரங்கனின் அழகு மனதை மயக்குதே! அதுவும் எதிர்பாராமல் கிடைச்சதுதான் பரவசம்!

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க ஜிரா.

பொட்டிப்பாம்பா கிடந்தாரே அப்போ:-)

said...

வாங்க துளசிதரன் & கீதா.

வரவர நம்ம தமிழ்நாட்டுலே... நம்ம சாப்பாடு கிடைப்பது கஷ்டமா இருக்கு. சின்ன ஊர்களில் கூட மெனு கார்டை வாங்கிப் பார்த்தால் வடக்கர்கள் & சீனர்கள் சாப்பாடுதான் பெரும்பாலும் :-(


//பஞ்சாங்க ஆளு...// ஹாஹா

அடுத்தமுறை சந்திக்கலாம்!

said...

வாங்க சசி கலா.


அப்படியே ஆகட்டும்!