Friday, April 22, 2016

புள்ளையை விட அப்பன்தான் கொடுத்து வச்சவர்! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 24)

யாருக்குமே  ஏன்  லக்ஷ்மிக்கும், ப்ரஹலாதனுக்கும் கூட கிட்டாத பாக்கியம் இந்த  ஹிரண்யகசிபுக்கு எப்படிக் கிடைச்சுருக்கு பாருங்க!  அவுங்களுக்கெல்லாம்  வெறும் இடது தொடை. இவனுக்கோ ரெண்டு தொடையிலும்  கிடக்கும்  பாக்கியம்! இப்படிச் செத்தாலும் பரவாயில்லைதான்! இது ஒரு கொடுப்பினை, இல்லையோ?  இது எப்படி வாய்ச்சது? கதையை இங்கே சொல்லித்தான் ஆகணும் இப்போ:-)

நம்ம ப்ரம்மா இருக்காரு பாருங்க, அவர்  வேலையில் சேர்ந்த  முதல்நாள், முதல் ட்யூட்டி என்னன்னா.... பூமியில் மக்கள்  பல்கிப்பெருக ஆவன செய்யணும்.  படைத்தல்! முதல் படைப்பா ஒரு நாலு பேரை  உண்டாக்கினார்.  இவுங்கதான் சனகாதிகள். சனகர், சனாதனர், சனந்தனர் அண்ட் சனத்குமாரர் என்று பெயரும் வச்சுட்டார். அடுத்த விநாடியில் நாலு பொண் குழந்தைகளைப் படைச்சிருக்கணும் இல்லையோ?  அங்கெதான்  கோட்டை விட்டுட்டார் :-( பெயர் சூட்டுதலில் பிஸியாகிட்டாராக இருக்கும்.

இந்த சனகாதிகள்  மக்கள் தொகையைப் பெருக்க தங்களால் ஆனதைச் செய்யாமல்  சாமிகளைக் கும்பிட்டுக்கிட்டு தேவலோகத்திலேயே சுத்திக்கிட்டு இருக்காங்க.  ஒவ்வொரு நாளுக்கு  ஒரு இடமுன்னு  சிவலோகம், வைகுண்டம், ப்ரம்ம லோகம் இப்படி  தொடர் பயணம்தான்:-)
மேலே படம்: நம்ம ஹரித்வார் பயணத்தில் எடுத்தது.

ஒரு நாள்  மஹாவிஷ்ணுவைப் பார்க்க  ஸ்ரீவைகுண்டம்  போறாங்க. அங்கே வழக்கமா வாசலைக் காவல் காக்கும் ஜய விஜயர்கள்  ட்யூட்டியில்!  

  ( பெருமாள் கோவில்களில் மூலவர் இருக்கும் கருவறைக்கு வெளியில் பக்கத்துக்கொன்னா நிப்பாங்களே  அவுங்கதான். ) 
மேலே படம்: நம்மசிங்கைச் சீனு. மூலவரும்  வெளியே ஜயவிஜயர்களும்.

எங்கியாவது போனால், கேட்டில் இருக்கும் வாட்ச்மேன்கிட்டே யாரைப் பார்க்க வந்துருக்கோம்னு சொல்லிட்டுப் போறோமே  அந்த லௌகீகம் எல்லாம் தெரியாது போல இந்த சனகாதிகளுக்கு.

கேட் கீப்பரைச் சட்டை செய்யாமல் உள்ளே நேராப்போக ஆரம்பிச்சவங்களை  ஜயவிஜயர்கள் தடுத்து நிறுத்தி, நீங்க யாரு?  என்ன விவரமா வந்தீங்க?  நாங்க உள்ளே போய் நீங்க வந்திருக்கும் சமாச்சாரத்தைச் சொல்லி ஐயா கிட்டே  அனுமதி வாங்கி  வர்றோம். ' சரி. உள்ளே வரச்சொல்லு'ன்னு அனுமதி கொடுத்துட்டாருன்னா  நீங்க உள்ளே போகலாம்னு தன்மையாத்தான் முதலில் சொன்னாங்க.

சொன்னதைக் கேட்டு  சனகாதிகள் சரின்னு சொல்லி இருக்கலாம். ஆனால் விதி யாரை விட்டது?

'ஏய்... நாங்க யார்னு தெரியுமா? நீ யாரு எங்களைத் தடுத்து நிறுத்த?' ன்னு ரகளை பண்ண ஆரம்பிச்சு  பெரிய வாய்ச்சண்டையா முத்திப்போச்சு. 'மரியாதை தெரியாத நீங்க ரெண்டு பேரும்  ஏழு ஜென்மத்துக்கு பூலோகத்தில் அசுரர்களாகப் பிறக்கக்கடவது'ன்னு சாபம் விட்டுடறாங்க!

(பார்த்தீங்கல்லே... மரியாதை இல்லைன்னா பூலோகம்தானாம்!  இப்பல்லாம்  அசுரர்கள் வேற ரூபத்துலே மனுசனாப் பிறந்துடறாங்க. மனுசன்டா...மனுசன்!) 

இவ்ளோ நேரம்  உள்ளே இருந்த எஜமான் (எல்லாம் தெரிஞ்சுக்கிட்டும் ஒன்னுமே தெரியாதமாதிரி இருப்பார் இவர்!)  'என்ன சத்தம் இந்த நேரம்?' னு வெளி வந்து பார்த்தார்.  இந்தப் பக்கம் காவலாளிகள் ரெண்டுபேரும் பேயறைஞ்சமாதிரி நிக்க,  அந்தப் பக்கம் சனகாதிகள் ஒரே கோபமா நிக்க ன்னு இருக்கு ஸீன். 'அடடா  நீங்களா?  வாங்கவாங்க'ன்னு  ரொம்ப அன்போடும் மரியாதையோடும் கைகூப்பி வணங்கி உள்ளே அழைக்கிறார்.

ஜயவிஜயர்கள்  ரெண்டு பேரும் 'எங்க மேலே தப்பு ஒன்னும் இல்லீங்க ஐயா. எங்க ட்யூட்டியை நாங்க செஞ்சதுக்கு  இவுங்க சாபம் வுட்டுட்டாங்க. வாபஸ் வாங்கிக்கச் சொல்லுங்க'ன்னு   அழுகுரலில்  சொல்றாங்க.

"உங்க வாட்ச்மேன் எங்களை மரியாதை இல்லாம நடத்துனதாலே  சாபம் விடவேண்டியதாப் போச்சு. எங்களால் சாபத்தையெல்லாம் வாபஸ் கீபஸ் வாங்கிக்கமுடியாது. விட்டது விட்டதுதான்."

'ஐயா...   நீங்கதான் சூப்பர் சுப்ரீம்  கோர்ட். நீங்கதான்  எல்லோரையும் விட பெரும் ஆள்.  ஹை கோர்ட் தண்டனையை ரத்து பண்ணி எங்களைக்  காப்பாத்துங்க'ன்னு கெஞ்சிக் கதறி  பெருமாள் கால்லே விழறாங்க.

"இல்லைப்பா... தேவலோகத்துலே நியாயங்கள்  வேற மாதிரி.  ஆளுக்கொரு சட்டம், நியாயமுன்னு இருக்க இதென்ன  பரதகண்டமா?  நீங்க தண்டனை அனுபவிச்சுத்தான் ஆகணும். என்னுடைய அதிகாரத்தை வச்சு  வேணுமுன்னா  தண்டனையைக்   கொஞ்சூண்டு குறைக்க முடியும்."

 தூக்குன்றதை ஆயுள் தண்டனை  ஆக்குவது போலவா!

"அந்த ஏழுக்கு பதிலா மூணு  வாட்டி  ஜென்மம் எடுத்தாப் போதும். ஓக்கேயா?"

'சரிங்க  எஜமான். மூணுன்னா மூணு.  ஒவ்வொரு பிறப்பையும் சட்னு முடிச்சுக்கிட்டு சீக்கிரம் இங்கே வந்து ட்யூட்டியில்  சேரணுமுன்னு ஆசீர்வதியுங்க'ன்னு  மறுபடி காலில் விழுந்தாங்க ஜயவிஜயர்கள்.

எடுத்த பிறவியை சட்னு முடிக்க என்ன செய்யலாமுன்னு  பெருமாளையே கேக்க, 'சதா என்னைத் திட்டிக்கிட்டேக் கிடங்க'ன்னாராம். கொடுமை செய்யுங்க. எப்படா இவன் ஒழிவான்னு மத்தவங்க நினைக்கும்படியா நடந்துக்குங்கன்னாராம்.

அவங்களுக்கு இயல்பா இருந்த நல்ல குணத்தால் இதை சட்னு ஒத்துக்க முடியலை. "அதெப்படி எல்லாருக்கும் கொடுமை செய்யறது?  ஒரு நியாயம் வேணாம்? மாத்தி யோசிங்க எஜமானே......"
மேலே படம்: நம்மவீட்டு ஜயவிஜயர்கள் :-)

'சரி. நானே  பூமியில் வந்து பொறக்கதான் போறேன். அந்தக் கெட்டதையெல்லாம் எனக்கே செய்யுங்க'ன்னுட்டார்  பெருமாள்.

 முதல் பிறவியில்  ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷன் என்ற  அண்ணந்தம்பிகளா பூமியில் வந்து பொறந்தாச்சு ஜயவிஜயர்கள். இவுங்க கெட்ட நேரம் இப்ப ஸ்ட்ராங்கா இருக்கு. முதல் பிறவி ஜோர்லே கண்ணுமண்ணு தெரியலை.

அக்ரமம் ஆரம்பிச்சது. ஹிரண்யாக்ஷனுக்கு  போனஸ் மார்க் கொடுக்கும் அளவுக்கு  தீவிரமா போயிட்டான்.  ரிஷிமுனிவர்கள் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டு அப்படியே தேவலோகத்துக்குப்போய் தேவர்களை எல்லாம்  கொடுமை செஞ்சுட்டு, 'எங்கெடா உங்க ஹரி'ன்னு  தேடிக்கிட்டு இருக்கான். அப்போ  அவர் வேற வேலையா வெளியே போயிருக்கார்.  பெரும்ஆள்  வீட்டுலே இல்லைன்னதும் ஆங்காரமா காலை ஓங்கி  பூலோகத்தை  அழுத்த   அது   அப்படியே பாதாள லோகத்துக்குப் போயிருச்சு.

பூமா தேவி  மனதுக்குள்  ஹரியை  வணங்கி தன்னைக் காப்பாத்த வேண்டிக்கறாள். அவரும் வராஹ அவதாரம் எடுத்து, பாதாள லோகம் போய்  ஹிரண்யாக்ஷனோடு சண்டை போட்டு அவனை வதம் செஞ்சுட்டு, தன் வராக மூக்காண்டை இருக்கும் பெரிய   பல்லால் பூமியைத் தோண்டி எடுத்துக்கிட்டு அப்படியே  வெளியே கொண்டு வந்துட்டார்.  இங்கே இருக்கும் நவநரசிம்ஹர்களில்  இந்த  வராஹ நரசிம்ஹர், க்ரோத நரசிம்ஹர்  என்ற பெயரில்  இருக்கார். அதே வராக  முகம்தானாம். நாம்தான் போகலையே :-(
ஹரியைத்தேடிப்போன தம்பி வரலையேன்னு பார்த்துக்கிட்டு இருந்த அண்ணன் ஹிரண்யகசிபுக்கு, தம்பி வதம் தெரிஞ்சதும்  கோபம் இன்னும் அதிகமாகிப் போச்சு. அப்பதான்  மகன் ப்ரஹாலதன் பொறந்து  ஹரியே எல்லாம்னு பக்தி பண்ணிக்கிட்டு இருக்கான்.  ஹரி ஓம் நமஹ தவிர வேற ஏதும் புள்ளை வாயில் வரலை!  அட்லீஸ்ட் ஒரே ஒருக்கா ஹிரண்யாய நமஹ சொல்லுடான்னா,  புள்ளையாண்டான் கேட்டாத்தானே?

அடிச்சு உதைச்சு, விஷப்பாம்புகளோடு அறையில் அடைச்சு, கடும்விஷத்தைக் குழந்தையின் அம்மா கையாலேயே குடிக்கக் கொடுத்து, மலை உச்சியில் இருந்து உருட்டிவிட்டு இப்படி  'தமிழ்சினிமா வில்லன் கணக்கா' என்னென்னவோ செஞ்சு பார்த்தாலும் புள்ளை சாவற வழியைக் காணோம். ஒவ்வொரு சமயமும்  பெரும் ஆள் காப்பாத்திடறார்.

என்ன செய்யலாமுன்னு உக்கார்ந்து யோசிச்சவன், தன்னுடைய தங்கை ஹோலிகாவைக் கூப்பிட்டு குழந்தையை  'அத்தை மடியில் உக்கார வச்சுக்கோ'ன்னான்.  என்னடா இவ்ளோ ஆசை?  காரணம் இருக்கே!  ஹோலிகாவை அக்னி தீண்டாதுன்னு ஒரு வரம்  இருக்கு.   இதையே வச்சுக் கதையை முடிச்சுக்கணுமுன்னு  திட்டம்தான் அப்பனுக்கு.

மடியில்  மருமானோடு ஹோலிகா  உக்கார்ந்ததும்,  அவளைச் சுத்தி தீ மூட்டி விட்டுடறாங்க. சொக்கப்பானை போல குபுகுபுன்னு எரிஞ்சு  எல்லாம் சாம்பலாகுது.  தொலைஞ்சான்  அந்த ஹரி பக்தன்னு  இருக்கும்போது , சாம்பல் குவியலில் இருந்து, என்னமோ இப்போதான் பூத்த தாமரை மாதிரி  எழுந்து வர்றான் ஹரிபக்தன் பிரஹலாதன். அப்ப அத்தை?  தீ தின்னுருச்சு!  அப்போ  அக்னி தீண்டாதுன்ற வரம் என்ன ஆச்சு?

அதுலே ஒரு சின்ன கேட்ச் இருந்ததை  கவனிக்கத் தவறிட்டாங்க அண்ணனும் தங்கையும். தர்ம நிலை தவறாமல் நடக்கும்போது அக்னி தீண்டாது.  பெத்த பிள்ளையை உயிரோடு தீ வச்சுக் கொளுத்தறது  தர்மமா?  அதுக்குத் துணை போனது அதர்மம் இல்லையா?  இப்படி அவள்  தீயிலே போனதைத்தான் ஹோலிப்பண்டிகையாக் கொண்டாடறாங்க நம்ம வடநாட்டில்.

மனம் வெறுத்துப்போய்  'எப்படிடா எவ்ளோ அடிச்சாலும்  தாங்கறே? எப்படிடா ... எப்படி?'  ன்னு கேட்க,  புள்ளை சொல்றான் 'அந்த ஹரிதான் எனக்கு ஒரு ஆபத்தும் வராமக் காப்பாத்தறார்'னு!

எரிச்சல் மண்டிய நிலையில் அந்த ஹரி எங்கேடா இருக்கான்னதும்  புள்ளை சொல்லுது  'எல்லா இடத்திலும் வியாபித்து இருக்கான்.  தூசி துரும்புலேயும் இருக்கார்'

ஹஹா... (கோபச்சிரிப்பு!) தூசி துரும்புலேயும்  இருக்கானா....  தூசியில்கூட  இருக்கான்னா  தூணில் இருக்கானான்னு  அலற,  இருக்காங்குது புள்ளை. எந்தத் தூணில் இருக்கான்?  எல்லாத் தூணிலும்தான் இருக்கான்.  கோபம் தலைக்கேற  எதிரில் இருந்த தூணைக் காமிச்சு  இந்தத் தூணில்  இருக்கானா?  இருக்கான்னு தூணைத் தொட்டுக் காமிச்சான் புள்ளை.

இந்த சமயத்தில் நம்ம பெருமாளுக்கு உள்ளுக்குள்ளே ஒரு உதறல். எந்த தூணுக்குள்ளே போய் நிக்கறதுன்னு? சின்னப்பிள்ளை எந்தத் தூணை  காமிக்குமோன்னு தெரியலையே...  இல்லாத தூணைக் காமிச்சுட்டா கதை கந்தல் ஆயிருமே.... ஒன்னு செய்யலாம், பேசாம இங்கெ இருக்க எல்லாத் தூணிலும் போய் மறைஞ்சு நிக்கலாமுன்னு அப்படியே செஞ்சானாம்.......... :-)

இருக்கானா இருக்கானான்னு வெறிச்சிரிப்போட தூணை எட்டி உதைக்கிறான்  ஹிரண்யகசிபு. அவ்ளோதான்... தூண் மடார்னு  வெடிச்சு ரெண்டாப் பிளக்க,  உள்ளே இருந்து  வர்றான்  பாதி அரியும் பாதி ஹரியுமா  நம்ம  நரசிம்ஹன்.  சிங்கத்தலை! சிங்கக்கை, சிங்க நகம் .பாதிமனிதன் பாதி மிருகம்.
அப்படியே தூக்கி தன்மடியில் வச்சு வயித்தைக் கிழிச்சு குடல் மாலை போட்டுக்கிட்டு   ரத்தம் குடிச்சது எல்லாம் ஆச்சு!





மேலே உள்ள இந்தப்படம்  நம்ம சண்டிகர் இஸ்கானில் எடுத்தது.


மனசில் இப்ப ஒரே ஒரு சந்தேகம். தானாய்த்தோன்றிய சுயம்புவில் ஹிரண்யகசிபுவின் தலை  நரசிம்ஹரின் வலது தொடையில். இன்னொரு  இடத்தில்  தலை இடது தொடையில்.   சம்பவத்தில் இடமா வலமா? நடந்தது என்ன?   இப்ப உண்மை தெரிஞ்சாகணும்.......   

இப்படித்தான் இரு தொடையிலும் கிடக்கும்  பாக்யம்  ஹிரண்யகசிபுக்கு லபிச்சது!  ஹரியின் விரோதியா இருந்து  சதா சர்வ காலமும்  எதிரியையே நினைச்சுக்கிட்டு இருந்தால் ............  இதுவும் ஒரு தியானம்தான் இல்லே?

இதேதான் நாத்திகம் பேசறவங்களும் செய்யறாங்க:-)   'சாமி இருக்கு'ன்றவன் இருக்குன்ற நம்பிக்கையில்  அலட்டிக்காமல் இருந்துடறான்.  சாமி இல்லைன்றவன்தான், இல்லைன்னு நிரூபிக்கறதுக்காக  புராணங்களையும் சாமி கதைகளையும் படிச்சுப் பார்த்துக்கிட்டே இருக்கான்.  அதுலே இருக்கும் சம்பவத்தையெல்லாம் முக்கியமா  கொஞ்சம் அரசபுரசலா இருப்பதையெல்லாம்  கவனிச்சு,  உங்க சாமி யோக்கியதையைப் பாருன்னு சொல்லி கேலி செய்யணுமாம்!

 இப்பச் சொல்லுங்க... சாமி.... எப்பவாவது நினைக்கும் பக்தனுக்கு  உதவுமா, இல்லை  எப்போதும் நினைக்கும்  அபக்தனுக்கு  உதவுமா?

ஆமாம்...  மற்ற ரெண்டு பிறவிகள் என்ன ஆச்சு கேட்டால்....  ராமாவதார காலத்தில்   ராவணனும் கும்பகர்ணனும்,  க்ருஷ்ணாவதார காலத்தில் தந்தவக்ரனும் சிசுபாலனுமா  இருந்துட்டு  மூணு பிறவி முடிஞ்சதுன்னு  வைகுண்டத்து ட்யூட்டிக்குத் திரும்பிப் போயிட்டாங்க.

இதையெல்லாம் நினைச்சுக்கிட்டே  கீழ் அஹோபிலத்தில் இருக்கும்  ப்ரஹலாத வரதர்  கோவிலுக்கு வந்து சேர்ந்தோம்.



17 comments:

said...

உங்கள் ஸ்டைலில் புராணக் கதைகள் கேட்கும் போது ஏற்கனவே கேட்டிருந்தாலும் கூட சுவாரஸ்யமாக இருக்கிறது.

ஏன் ஹிரண்யகசிபுவின் தங்கையை நெருப்பு தீண்டாது என்ற போதும் தீண்டியது? அங்கதா ஒரு காட்ச்.." அஹஹஹ் பாருங்கள் புராணக் கதைகளில் கூட லூப் ஹோல் இல்லாத கதை...ஸ்க்ரீன் ப்ளே...ஹஹ்ஹ


said...

விவரங்களும் நடையும் ஜூப்பரு.. இதை எழுதும்போது துள்சிக்கா செம ஃபார்முல இருந்துருப்பீங்க போலிருக்கு. ரசிச்சேன் :-)

விதவிதமான நரசிம்மர்களும் ஹிரண்யகஷ்புவும் அருமை.

said...

//இதேதான் நாத்திகம் பேசறவங்களும் செய்யறாங்க:-) 'சாமி இருக்கு'ன்றவன் இருக்குன்ற நம்பிக்கையில் அலட்டிக்காமல் இருந்துடறான். சாமி இல்லைன்றவன்தான், இல்லைன்னு நிரூபிக்கறதுக்காக புராணங்களையும் சாமி கதைகளையும் படிச்சுப் பார்த்துக்கிட்டே இருக்கான். அதுலே இருக்கும் சம்பவத்தையெல்லாம் முக்கியமா கொஞ்சம் அரசபுரசலா இருப்பதையெல்லாம் கவனிச்சு, உங்க சாமி யோக்கியதையைப் பாருன்னு சொல்லி கேலி செய்யணுமாம்!//
சாமி இல்லை..இல்லை என்று சொல்பவர்கள் சாமிக்காக செலவிடும் நேரமும் சக்தியும் பார்த்தால், இவர்கள் எல்லோருமே ஜய விஜயர்களின் மறு மறு மறு மறு அவதாரங்களோ என்று தோன்றும் அதே நேரத்தில் ஒன்று சொல்லவேண்டும்.

உண்மையான ஆத்திகரும் உண்மையான நாத்திகருக்குமிடையே சண்டை சச்சரவு இல்லை. நாத்திகவாதிகளின் அறிவு பூர்வமான தர்க்கங்களையும் அதற்கான உரிய பதில்களையும் நாம் பிருஹத் ஆரண்யக உபநிஷத்தில் பார்க்கிறோம்.

இந்தக் கால சண்டை எல்லாம் கடவுளை ஒரு பிசினஸ் ஆக வைத்துக்கொண்டு ஆதாயம் தேடுபவர்களின் கூத்தே. இவர்கள் ஆத்திகர் களில் இருக்கிரார்கள். நாத்திகர் களிலும் இருக்கிறார்கள் .

இது ஒரு தொடர் கதை. பல நாத்திகர் பிரபலங்கள் ஆத்திகர் ஆகி இருப்பதும், பல ஆத்திகர் நாத்திகர் ஆகியிருப்பதையும் காண்கிறோம்.

அடுத்தது.
இது இந்து மதம் ஒன்றில் மட்டும் என்று இல்லை.

வாயார உண்டபேர் வாழ்த்துவதும் நொந்த பேர் வைவதும் எங்கள் உலக வாய்பாடு

உங்களுக்குத் தெரியாததா என்ன !!

சுப்பு தாத்தா.

said...

அருமை. நன்றி.

said...

/சனகர், சதானந்தர், சனாநந்தர் அண்ட் சனத்குமாரர் என்று பெயரும் வச்சுட்டார்/

வைச்ச பெயரை, டீச்சரே மாத்தலாமோ?:)

*சனகர் = என்றும் பழமை மிக்கவர்
*சனாதனர் = என்றும் இருப்பவர் (சதானந்தர் அல்ல)
*சனந்தனர் = என்றும் முடிவில்லாதவர் (சனாநந்தர் அல்ல)
*சனத்குமாரர் = என்றும் இளமையானவர்

வகுப்பில், சில சமயம் ஆசிரியர்.. பேரை மாத்தி எழுதி, Registerஇல்/ சான்றிதழில் அதுவே நின்னுருமாம்:) அது போல ஆயிருச்சின்னா, இந்த 4 பேருக்கும் டீச்சரே பொறுப்பு:)

said...

வெள்ளிக்கிழமை நரசிம்ஹ தரிசனம். அப்பா ....திகட்டாத
படங்கள்.
அம்மா தூண்.
பிள்ளை நரசிங்கம் , பேரன் பிரஹ்லாதன்.
தூண் பாட்டியான கதை.

said...

வாங்க துளசிதரன்.

இதெல்லாம் ஸ்டோரி ரீ டோல்ட் வகையாக்கும்:-)

ரசித்தமைக்கு நன்றீஸ்.

said...

வாங்க சாந்தி.

என்னத்தை ஃபார்ம்லே இருக்கறது! அவன் இப்படியெல்லாம் எழுத வைக்கிறானேப்பா! கீ போர்டுக்குள்ளே புகுந்துட்டானோ :-)

said...

வாங்க சுப்பு அத்திம்பேர்.

சரியாத்தான் சொல்லி இருக்கீங்க. ஒரு வேளை ஆத்திகம் ரொம்பவே முத்தினா நாத்திகம் ஆகவும் வாய்ப்பு இருக்குல்லையா!!!

said...

வாங்க விஸ்வநாத்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க கே ஆர் எஸ்.

ஆஹா... இதுலேயும் ரெண்டு பெயர்களைச் சரியாச் சொல்லியிருக்கேன். 50 மார்க் போட்டுக்கணும்:-) அதுலே மத்த ரெண்டு பேருக்குத்தான் நான் பொறுப்பு

சிலசமயம் ஆண்டவர் இப்படி சின்னத் தப்புகளோடு மற்றவர்களை எழுதவைக்கிறாரோ என்னமோ... நான் வலைவீசிப் பிடிச்சவையே அவை.

நல்லவேளை.... உம் பதில் பார்த்துத் திருத்தியாச்சு. இப்ப இது(வும்) சரியில்லைன்னு யாரும் வந்து சொல்லாமல் இருக்கணுமே.... பெருமாளே....

ஓசைப்படாமல் வகுப்புக்கு வந்து செல்லும் உங்களைக் கண்டுக்கிட்டேன் இப்போ:-)

said...

வாங்க வல்லி.

என்னப்பா இது.... தூண் எப்படி பாட்டியாச்சு? மத்தவங்க செய்வதையெல்லாம் பார்த்துச் சும்மா தூண் போல நிற்பதாலா? ஙே....

said...

ரங்காராவ் நடிச்ச பக்த பிரகலாதா படம் பாத்த மாதிரியே இருந்துச்சு இந்தப் பதிவு. ஹோலிகா கதை இப்பத்தான் கேள்விப்படுறேன்.

எந்த மடில தலை இருக்கனும்? பொதுவா பள்ளி கொண்டவரைப் பாக்குறப்போ அவர் தலை நம்ம இடப்பக்கம் இருக்கும். கால் வலப்பக்கம் இருக்கும். அதே மாதிரி இரணியன் தலை நமக்கு இடப்பக்கமாக.. அதாவது நரசிங்கத்தின் வலது தொடைல இருந்தாதான்.. பாக்க நல்லாயிருக்கும்.

said...

/ஓசைப்படாமல் வகுப்புக்கு வந்து செல்லும் உங்களைக் கண்டுக்கிட்டேன் இப்போ:-)/

ஆகா! வாயக் குடுத்து மாட்டிக்கிட்டேனா?:)
"ஓசைப்படாம"ல்லாம் இல்ல டீச்சர்.. சிற்சில சிக்கல் & மனத் துன்பம்; அதான் முன்பு போல், தொடர்ந்து பின்னூட்ட முடிவதில்லை:)
ஆனாலும் நாள் கடந்தேனும், விடாம படிச்சிடறது, வாழ்வில் 3 வலைப்பூக்கள்:
*துளசி தளம் = பயண இன்பம்
*றேடியோஸ்பதி = இசை இன்பம்
*மாணிக்க மாதுளை = மன இன்பம்

டீச்சருக்கே mark போடும் அளவுக்கெல்லாம் பெரியாழ்வார் நானில்லைப்பா:)
அம்பவதேக்கர் என்ற பெயரை, "அம்பேத்கர்" -ன்னு மாத்தி எழுதினது, அவிங்க டீச்சராம்!
ஆனா, அதுவே மந்திரப் பெயர் ஆகி விட்டதல்லவா?

/இப்ப இது(வும்) சரியில்லைன்னு யாரும் வந்து சொல்லாமல் இருக்கணுமே.... பெருமாளே..../

ha ha ha.. முருகப் பெருமாளே துணை; கூகுளாண்டவரை விடவும் சக்தி வாய்ந்தவர்கள்:)
இணையம் நன்றே!
ஆனா, "மூல நூல் தரவு" போல் வரவே வராது

உங்களுக்கு எதுக்கு வீண் பயம்? இந்தாங்க மூலநூல் வாசகம்!
sa-nakaṁ ca, sa-nandanaṁ ca
 sa-nātanam athātmabhūḥ
sa-natkumāraṁ ca munīn
 niṣkriyān, ūrdhva-retasa
ஸ்ரீமத் பாகவதம் 3.12.4 (4 குமார உற்பத்தி)

சன-கம், சனா-தனம், சன-ந்தனம், சனத்-குமாரம்
4 பேருக்குமே சனா முன்னொட்டு! சனா Brothers & Company:))



said...

/பொதுவா பள்ளி கொண்டவரைப் பாக்குறப்போ அவர் தலை நம்ம இடப்பக்கம் இருக்கும். கால் வலப்பக்கம் இருக்கும்/

ஆமா! அரங்கத்திலும், அடையாற்றிலும்!:)

பள்ளி கொண்டார் தலை= நம்ம இடப் பக்கமே நிறைய!
ஆனா, பள்ளி கொண்டார் தலை= நம்ம வலப் பக்கமும் உண்டு!

"திருவட்டாறு" எனும் மிகத் தொன்மையான தமிழ் ஊரு; நாஞ்சில் நாடு.. திரு-அனந்தபுரத்தை விடத் தொன்மை!
அங்கும், இன்னும் வேறு சில இடங்களிலும், பள்ளிகொண்ட தலை= வலப்பக்கமே! படம் இங்கே: http://goo.gl/RFnBXx

said...

வாங்க ஜிரா.

நான் நினைக்கிறேன் சிம்ஹருக்கு இடது கைப் பழக்கமுன்னா வலது தொடையிலும், வலது கைப் பழக்கமுன்னா இடது தொடையிலும் தலை இருக்குமுன்னு:-)

பள்ளி கொண்டவர் சமாச்சாரத்துலே கிழக்கே பார்த்த திருக்கோலம் என்றால் நம்ம இடப்பக்கம். மேற்கே கிடந்தாருன்னா இடப்பக்கம். அதிலும் அவர் வலக்கையைத் தலைக்குக்கீழே தாங்கிப் பிடிச்சுருந்தால்தான்!

சிற்பியின் மனோபாவம் அனுசரித்து செதுக்கிய சிலைகளாத்தான் இருக்கணும் :-))))

said...

@ கேஆரெஸ்

திருவட்டாரில் மேற்கே பார்த்த கோலமுன்னு அதையே அங்கத்துச் சிறப்பாச் சொல்லி வச்சுட்டாங்களே:-)

மூலநூல் விளக்கத்துக்கு நன்றீஸ்.