Friday, August 12, 2016

ஐவர்பாடி ஸ்ரீ மஹா ப்ரத்யங்கரா தேவி (இந்தியப் பயணத்தொடர். பகுதி 72)

கும்பகோணம் 'ராயாஸ் க்ராண்ட்' போய்ச் சேர்ந்தப்ப மணி 1.20.  வரப்போகும் மகாமகத்துக்காகத் தயார் ஆறது மொத்த ஊரும்!
ஹொட்டேலில் நமக்கு விருப்பமான  அறை கிடைக்கலை. அரசு அதிகாரிகள் ஏற்கெனவே ஒரு மாசமா இங்கேதான் டேராப் போட்டுருக்காங்களாம்.  ஏறக்கொறைய  எல்லா அறைகளுமே அவர்கள் வசம். கிடைச்சவரை லாபம் என்பதுதான் நமக்கு. அறையில் இருந்து குளம் பார்க்க முடியாது என்ற கவலை எனக்கு. காரிடாரில்  கொஞ்சம் நடந்துபோனால் கடைசியில்     இருக்கும் ஜன்னலில் குளம் தெரியுது.

முதல்வேலை முதலில்  என்று கீழே போய் ரெஸ்டாரண்டில் பகல் சாப்பாடு ஆச்சு.  ரைஸ் இன் ஸ்பைஸ் என்று பெயர்.  கொஞ்ச நேர ஓய்வு. இந்தமுறை  வைஃபை வேலை செய்யுது.  இந்த இடத்தில் நாம் ரெண்டாவது முறையா வந்து தங்கறோம். எனக்குப் பிடிச்ச ஹொட்டேலில் இது(வும்) ஒன்னு!

நாலுமணிக்கப்புறம்தான் கோவில்கள் திறப்பாங்க என்பதால் நிதானமாக் கிளம்பலாமுன்னு நம்மவர் கிடக்கப்போனதைத் தடுத்தாட்கொண்டேன்.  நாலுமணிக்கு முன்னால் கிளம்பிடணும். இருட்டாகுமுன் முடிஞ்சவரை  கோவில்கள் போய் வந்து  அப்புறம் தான் தூக்கம்.

தொணப்பு தாங்காமல்  மூணே முக்காலுக்குக் கிளம்பினோம். முதலில் போக வேண்டிய இடம் ஒரு ஏழு கிமீ தூரத்தில். ஏற்கெனவே ஒருமுறை போய் வந்த கோவில். ஆனால்  பகல் உச்சிப்பூஜை முடிஞ்சு மூடும் நேரம் ஆகிருச்சு. வெளியே இருந்தே கும்பிடு போடவேண்டியதாப் போயிருச்சு.



நல்ல விஷயங்களுக்கான ஒரு கோவிலை, எப்படியெல்லாம்சொல்லி பயமுறுத்தி வச்சுருக்காங்கன்னுதான் எனக்கு வியப்பான வியப்பு!

என்ன நடக்கவேண்டுமென்று கடவுளால்  நிர்ணயம் செய்யப்பட்டதோ அது நடந்தே தீரும்.  அதைத் தடுக்க மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் முடியாது.

என்ன நடக்கக்கூடாது என்று கடவுளால்  நிர்ணயம் செய்யப்பட்டதோ அது  நடக்காது.   அதை நடத்த  மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் நடக்காது.

இதைத்தான் எங்க அம்மம்மா.....    அன்று  எழுதிய எழுத்தை ஆண்டவனாலும் அழிச்சு எழுதமுடியாதுன்னு சிம்பிளாச் சொல்லிக்கிட்டு இருந்தாங்கன்னு இப்பப் புரிஞ்சது.

மனிதவாழ்வில் தடுக்க முடியாதது அதிர்ஷ்டம், துரதிஷ்டம், மரணம்!

எழுதிப்போட்டு வச்சுருந்ததை வாசிக்கும்போது  வியக்காமலிருக்கமுடியலை.
 அய்யாவாடின்னு சனம் சொல்லும் ஐவர்பாடிக்கு வந்துருக்கோம்.  ப்ரத்யங்கரா தேவி கோவில்! 'அம்மாவால்' பிரபலமடைஞ்ச கோவில் என்றும் சொல்லலாம்.

பஞ்சபாண்டவர்கள் இங்கே வந்து  தேவியை பூஜிச்சு, 'எதிரிகளை' வெல்லும் வரம் கிடைக்கப்பெற்றார்கள் என்று புராணம்.

நரசிம்மவதாரம் நடந்து  ஹிரண்யகசிபுவை வதம் செஞ்சு முடிச்சும்கூட,  சிம்மத்துக்கு ஆக்ரோஷம் அடங்கலை.  உடம்பே துடிச்சுக்கிட்டு இருக்கு!  மெள்ள ப்ரஹலாதனை முன்னுக்கு அனுப்பினதும்,பாலகனின் குழந்தை முகம் பார்த்ததும் லேசாக் கோபம் தணிஞ்சு  அவனையே ராஜாவா பட்டாபிஷேகம் செஞ்சுக்கச் சொல்றார்.  அப்பனா இருந்தாலும் அரக்கன் உக்கார்ந்த ஆசனம் அது.  எனக்கு அதுலே உக்கார பயமா இருக்குன்றார் பாலகன்.

'அதெல்லாம் ஒன்னுமில்லைடா செல்லம். இதோ நான் உக்கார்ந்து காமிக்கிறேன்'னு ஆசனத்தில் அமர்ந்தார் சிம்மர்.  அப்போ இருந்துதான் அரசர்கள் அமரும் ஆசனத்துக்கு சிம்மாசனம் என்ற பெயர் வந்ததாம்!  என்ன ஒரு அழகான காரணப்பெயர் பாருங்க!!!

அங்கிருந்து கிளம்பிப்போனவர் உடல் இன்னும் அதிர்ந்துக்கிட்டே இருந்ததால் தேவர்கள் பயந்துபோய்  சிவனிடம் முறையிடறாங்க. அவரும் சரபேஸ்வரராக  உருவமெடுத்து,  நரசிம்மத்தை ஆலிங்கனம் செஞ்சு சமாதானப்படுத்தினார். இப்படி ஒரு கதை இருக்கு என்றாலும், ப்ரத்யங்கரா தேவி அவதாரத்துக்குக் காரணம் இருக்கணுமில்லையா?


சின்ன வேரியேஷன் இங்கே வருது. கிளைக்கதை என்னன்னா...........

சரபேஸ்வரரைக் கண்ட நரசிம்மம், ஒரு  பேரண்டபக்ஷியாகி எதிர்த்தார்னு ஒரு இடத்தில் வாசித்தேன்.  நம்ம ஸ்ரீரங்கம் கோவில் உக்ரநரசிம்மர் சந்நிதிச் சுவரில் முந்தி  ஒரு ஓவியம் பார்த்து அதைத் துளசிதளத்திலும் போட்டுருந்தேன்.  எக்கச்சக்கமான கைகளுடன் (32 கைகள்!) நரசிம்மர், அவர் மடியில் பறவை, பறவைக்கு அடியில் இன்னொரு உருவம்......   அப்பப்பா.....


நம்ம கே ஆர் எஸ்  வந்து சில விளக்கப் பின்னூட்டங்கள் தந்தார். அப்போ அந்த மிஸ்ட்ரி ஒரு வழியா ஸால்வ் ஆச்சுன்னு நினைச்சால்.....   இங்கே  இந்தக் கோவில் கதையில் இன்னொரு புதிர் வந்துருச்சு.

தீவிரமா சைவ வைணவ எதிர்ப்புகள் இருந்த சமயத்துலே ரெண்டு பேருக்கும் ஆகாம எப்படியெல்லாம் கதை பண்ணி விட்டுருக்காங்க பாருங்க:(

எனக்குத் தெரிஞ்சவரை நரசிம்ஹரின் ஆவேசம் அடங்காமல் கொதிச்சுக்கிட்டு இருந்த சமயம் சரபேஸ்வரர் வந்து நின்னு அவர் கோபம் தணிஞ்சது என்றவரைதான் கேள்விப்பட்டிருந்தேன்.
முள்ளை முள்ளால் எடுக்கணும் என்பதைப்போல சரபேஸ்வரராக வந்த  மச்சான் சிவன்,  சிங்க உடலும் மனுசத்தலையும், கூடவே ரெண்டு இறக்கைகளுமா வந்தார். தன் இறக்கைகளால்  நரசிங்க மச்சானை அணைத்து ஆறுதல் கூறி சாந்தப்படுத்தும் வேளை இறக்கையில் இருந்து ரெண்டு சிறகுகள்  உதிர்ந்து விழுந்தன.  அவை சக்தியின் அம்சம்!
அதில் இருந்து  ஸ்ரீஅதர்வணகாளி, ஸ்ரீ சூலினிதுர்கா  என்ற தேவியர்கள் எழுந்தருளினாங்க.   அப்போ தவம் செஞ்சுக்கிட்டு இருந்த  அங்ரஸ், ப்ரத்யங்கரஸ் என்ற முனிவர்கள் அதர்வணகாளியின் ப்ரயோக மந்த்ரங்களை  உணர்ந்து ஓதத் தொடங்கினதும்  மஹாப்ரத்யங்கரா  என்ற பெயர் அமைஞ்சது.

கேட்டவரம் தருபவள். வணங்கினால் வெற்றி நிச்சயம்.  நிகும்பலா யாகம் செய்தால் எதிரிகள் அழிஞ்சு போவார்கள்  இப்படியெல்லாம் புகழ்.
ராமாவதார காலம்.   ராமராவண யுத்தம் ஆரம்பிச்சது. ராவணனின்  மகன்  இந்திரஜித், போரில் வெற்றி அடைய என்ன செய்யலாமுன்னு  யோசிச்சவன், அசுரகுரு சுக்ராச்சாரியாரிடம் போய் கேட்கிறான். அவர் எட்டுதிக்கும் மயானம் இருக்குமிடத்துக்கு நடுவில் நிகும்பலாயாகம் செஞ்சால் வெற்றிகிடைக்கும் என்றார்.

 எட்டுத்திக்கும் மயானம் தேடுனதில் சரியான இடமா இது இருக்கு.   இங்கே வந்து நிகும்பலா யாகம் செய்யறான்.  விபீஷணனுக்கு இது தெரிஞ்சு போச்சு. சேதியை ராமனிடம் சொல்ல, பக்கத்தில் இருந்த லக்ஷ்மணனுக்கு ஆவேசம் வந்து  நம்ம ஆஞ்சியுடன் வந்து சேர்ந்தார்.  இன்னும் பூரண ஆகுதி  கொடுக்கவேண்டியதுதான் பாக்கி.  கடைசி நிமிட்லே வந்தது யாருன்னு தலை தூக்கிப் பார்க்குமுன்  யாகசாலைக்குள்  அம்புமாரி பொழிய,  சண்டை வந்துருது. இந்திரஜித் அம்பாலடிபட்டான்.

இவ்வளவு சிரமப்பட்டு  யாகம் செஞ்சும்,  அதர்வணக்காளி தோன்றி நம்மைக் காப்பாத்தலையேன்னு  ஏங்கிய இந்திரஜித்துக்கு,  கடைசியில் உண்மை புலப்பட்டது.  இவள் அதர்மத்துக்குத் துணை போகமாட்டாள்!

கிருஷ்ணாவதாரகாலத்திலும்  மகாபாரதக் கதையின் படி,  நாட்டை இழந்த  பாண்டவர்கள், வனவாசத்தின்போது  இங்கே வர்றாங்க. அப்ப அகஸ்திய முனிவர்  சிவபூஜை செஞ்சுக்கிட்டு இருக்கும்போது  ப்ரத்யங்கராவின் தரிசனம் கிடைச்சது. பாண்டவர்களுக்குப் பூஜாமுறையை உபதேசிக்கச்சொல்லி  ஆணை கிடைக்குது.  அவரும் பாண்டவர்களிடம் வந்து  மஹாப்ரத்யங்கராவை வணங்கும்படிச் சொல்றார்.அதன்படியே வணங்கி,   பாரதப்போரில்  வெற்றி கண்டார்கள் என்று(ம்)  சொல்றாங்க.

பஞ்சபாண்டவர் வந்து போனதுக்கு அடையாளமா கோவில்  தலவிருட்சத்தில் அஞ்சு மரங்கள் ஒன்னு சேர்ந்துருக்கு. ஆலமரத்தில் அஞ்சு வெவ்வேற இலைகள்னு காமிச்சாங்க.

இந்தக் கோவிலில்  முக்கிய மூலவர் அகஸ்த்தீஸ்வரரும், தர்மசம்வர்த்தினியும்தான். அகஸ்திய முனிவர்  பூஜிச்ச சிவன் இவர். ஆனால்  இவுங்க பெயரைச் சொன்னால் சனம் முழிக்கும்!  மஹாப்ரத்யங்கரா கோவில் என்றால் சட்னு வழி சொல்லிருவாங்க.
கோவிலின் விதிகள் எல்லாம்  கறாரா அங்கங்கே எழுதிப்போட்டு வச்சுருக்காங்க.
உள்ளே ருத்ராக்ஷப் பந்தல் இருப்பதால்  கற்பூரம் ஏத்தவே கூடாது.
கோவில் காலை 8 முதல் 12 வரையும்,  மாலை 4.30 முதல் 8.30 வரையும்தான் திறந்திருக்கும்.  நாமும் நாலரைக்கு முன்னே அங்கே போய்ச் சேர்ந்துட்டோம்.
அமாவாசை தினங்களில் மட்டும் காலை 6 முதல் இரவு 9 வரை சந்நிதியைத் திறந்து வைக்கிறாங்க.  ஆயிரக்கணக்குலே வர்ற சனத்தை தரிசனத்துக்கு அனுமதிக்கணும், இல்லையோ!
என்னென்ன செய்யக்கூடாதுன்றதை கவனமா க்ளிக்கிட்டு, கேமெராவைக் கைப்பைக்குள் வச்சுக்கிட்டு தேவியை தரிசிக்கும்  வாசலுக்குள் போனோம். உள்ளே சின்னதா  அறை போலவே ஒரு முன்மண்டபம். கொஞ்சம் வெளிச்சம் குறைவாகத்தான் இருக்கு. கம்பித்தடுப்புகள் போட்டு வச்சுருக்காங்க  சனம் வரிசையில் வர்றதுக்காக. எதிரே கருவறை!  திரை போட்டு மூடி இருக்கு.
சந்நிதி திறக்கும்வரை சுத்துமுத்தும் பார்வையை ஓட்டினேன்.
சுவர்கள் முழுசும் செம்புத்தகடு போர்த்தியது போல இருக்கு. அதுலே சித்திரங்களை என்க்ரேவ் பண்ணி இருக்காங்க.  கோட்டோவியம்! கருவறைச்சுவருக்கு  ரெண்டு பக்கமும் சரபேஸ்வரர், அகத்தியர், இருந்த  அங்ரஸ், ப்ரத்யங்கரஸ் என்ற முனிவர்கள் இருக்காங்க.

மற்ற  சுவர்களில் எல்லாம் பைரவர்களே!  விதவிதமான வாகனங்களில் காட்சி கொடுக்கறாங்க.  யானை, கழுதை, மாடு, மயில்னு ஒன்னையும் விட்டு வைக்கலை!  மொத்தம் 64 பைரவர்கள்.  வெளிச்சம் குறைவா இருப்பதால்  உத்துப் பார்க்கணும்.
நாலரைக்குத் திரை விலகியது. ஹம்மா........ கருகருன்னு பளபளக்கும் சிலை! காலடியில் நாலு சிங்கத்தலைகள்!  இடது காலை மடிச்சு, வலதுகாலைத் தொங்கப்போட்டுக்கிட்டு உக்கார்ந்துருக்காள் ப்ரத்யங்கரா! முகமும் சிங்க முகம்தான். தலைப்பின்னால் ஏழுதலை நாகம் படமெடுத்து குடைபிடிக்க, கண்கள்  ஜொலிக்குது! நிறைய கல் வச்ச நகைகளால் அலங்கரிச்சு, லேசான விளக்கொளியில் மின்னல்தான்!

ப்ரமிச்சு நிக்கறேன்!  பின்னால்  மக்கள் வரிசை  இருக்குன்னு நம்மவர்  ஞாபகப்படுத்தினார்:-)

இங்கே தேவிக்கு அர்ச்சனை, அபிஷேகம் எல்லாம் கிடையாது.  மாசம் ஒருமுறை புனுகு, மற்றும் சிலமூலிகைக் கலவைகளைச் சாத்தறாங்க. வருசத்தில் தை மாசம் முதல்நாள் தொடங்கி 48 நாளுக்குத் தொடர்ந்து  புனுகுக் காப்பு சாத்தறாங்களாம்.  இப்ப நாம் வந்துருக்கோம் தை மாசத்துலே 19 ஆம் தேதி !  அதான் அம்மன் நிகுநிகுன்னு ஜொலிக்கிறாள்!
இங்கே பூஜை செய்பவர்கள் குருக்கள் வகையினர் போல இல்லை. கழுத்து நிறைய ருத்ராக்ஷ மாலைகளும் காவி வேட்டியிலுமா இருக்காங்க. சிவாச்சாரியார்கள்னு சொன்னாங்க.

சாமி கும்பிட்டுட்டு, பின் கதவு வழியாப் போனோம். அங்கே இப்போ வேலை நடந்துக்கிட்டு இருக்கு.   2009 இல் போனப்ப, இங்கேதான் யாககுண்டம் வச்சுருந்தாங்க. இப்ப  இடத்தைப் பெருசு பண்ணிக் கட்டறாங்க போல!
எட்டு  மயானங்கள் இந்த கோவிலைச் சுத்தி இருக்கு.  அதனால் இங்கே சாயரக்ஷை பூஜை முடிஞ்சதும் கோவிலில் யாரும் தங்கவே கூடாதுன்னு சொன்னாங்க.

அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் மட்டும் யாகங்கள் நடந்துக்கிட்டு இருக்குமாம்.  இப்போ கொஞ்ச நாளா பௌர்ணமி யாகத்தை நிறுத்திட்டாங்களாம்.  அமாவாசை யாகத்துலே கலந்துக்க அப்படி ஒரு கூட்டம் வருதாம். இன்னும்  6 நாளில் தை அமாவாசை வருது. நல்லவேளை அமாவாசைக்கு வந்து கூட்டத்தில் மாட்டிக்காமல் தப்பிச்சோமுன்னு நினைச்சு மகிழ்ச்சி.

இந்த அமாவாசை யாகத்தைத் தவிர வேற விசேஷங்கள்  இங்கே கிடையாது. அன்றைக்கு மட்டும் யாகத்தில்   காய்ஞ்ச மிளகாய்களைத் தட்டுதட்டா யாகத்தீயில் கொட்டறாங்க.  சுமார் 30 கிலோ ! எவ்ளோ மிளகாய் போட்டாலும், கமறல் வாசனை வர்றதே இல்லைன்னு  கேட்டப்ப.....  அடடா... அமாவாசையாப் பார்த்து வந்துருக்கலாமோன்னு நினைச்சதும் உண்மை!
ஐப்பசிமாச அமாவாசை(தீபாவளி)க்கு  மட்டும்  மிளகாய் வத்தல் யாகம் இல்லையாம். அன்றைக்கு இனிப்பு வகைகளும் பழங்களும் மட்டும்தானாம்.  ஆங்.... இன்னொன்னு சொல்ல விட்டுப்போச்சே....   கோவிலில்   ப்ரத்யங்கரா சந்நிதியில்       உண்டியல் கிடையாது!

பிரத்யங்கரா தேவியின் மஹிமை  சமீபகாலமா (!!) பரவிப்போனதால் ப்ராஞ்ச் ஆஃபீஸ் போல      எக்கச்சக்கமான புதுக்கோவில்கள் வந்துக்கிட்டு இருக்கு.  புது சிலைகளும் உருவாக்கிக்கிட்டு பிஸியா இருக்காங்க சிற்பிகள்.  சென்னைக்குப் பக்கம் நம்ம ஈஸிஆர்லேயே புதுக்கோவில் வந்துருக்காம்.  பார்க்கலாம்....  போக வாய்க்குதான்னு!
இப்பெல்லாம் சாதாரண    சனத்துக்குக்கூட      ஏகப்பட்ட எதிரிகள்  இருக்காங்க போல!

 இங்கே அய்யாவாடியில்    பார்க்க சிம்பிளான கோவில்தான். பின்பக்கம் வண்டிகளைப் பார்க் பண்ணிக்க இடம்  இருக்கு.

இங்கிருந்து கிளம்பி அடுத்த மூணாவது நிமிசம் இன்னொரு கோவில் நமக்கு!

தொடரும்....  :-)


10 comments:

said...

பிரத்தியங்கரா கோயில் ஈசிஆர்ல இருக்கே. அம்மாவாசை பௌர்ணமியெல்லாம் அந்த வழியாப் போகவே முடியாது. அவ்வளவு கூட்டம் வரும். அத்தனை வண்டிகள் ரோட்டுல ரெண்டு பக்கமும் அடைச்சிக்கிட்டு இருக்கும்.

மிளகாய் வத்தல் போட்டு வேள்வி நடத்துவாங்களாம். வழக்கமா பழம் இறைச்சி போட்டு வேள்வி நடத்தனும்னு வேதம் சொல்லிருக்கு. ஆனா மிளகாய் வத்தல்? அதுதான் காரலை உண்டாக்கி எதிரியை அழிக்குமாம்.

நண்பர்களை உண்டாக்குன்னு அறிஞர்கள் சொன்னா.. எதிரிகளை உண்டாக்கி வெச்சிருக்கான் மனுசன். அவங்களை எப்படி அழிக்கிறதுன்னு தெரியாம இப்படி ஒரு வழி. ம்ம்ம்ம்.

said...

நானும் சென்னையில் பிரத்தியங்கரா கோவிலுக்குச் சென்றுள்ளேன் பக்தியை பயத்தின் மூலம் விதைக்க முடியுமா

said...

அருமை !!!! ஒரு ஏழு வருஷங்களுக்கு முன்னே போனது .. சிவனை பார்த்தேன்னானு சந்தேகத்தை கிளப்பி விட்டுடீங்களே அம்மா :(

said...

படங்கள் பிரமிக்க வைக்கின்றன.

சென்னை கோவில் பார்த்திருக்கிறேன்.

தொடர்ந்து பயணிக்கிறேன்.

said...

வாங்க ஜிரா.

மிளகாய் வத்தலைப்போட்டால் கமறலே இல்லையாமே! அதுவும் மூட்டை மூட்டையா!!!!! அதுதான் அங்கே விசேஷமுன்னு சொல்றாங்க.

நாங்க சின்னப்பிள்ளைகளா இருந்தப்ப எங்க பாட்டி எங்களை உக்காரவச்சு திருஷ்டி சுத்திப் போடுவாங்க. உப்பு, மிளகாய் வத்தல், அப்புறம் வீட்டு வாசலில் இருக்கும் காலடி மண் ஒரு துளி எல்லாம் சேர்த்து சுத்திட்டு அதை விறகு அடுப்பில் எரியும் நெருப்பில் போடுவாங்க.


சிலநாட்களில் ஒன்னுமே மணம் இருக்காது. பார்த்தியா எவ்ளோ திருஷ்டி குழந்தைகள் மேலே... இப்ப எல்லாம் போச்சுன்னு சொல்வாங்க.

சிலநாட்களில் ஒரே கமறலா இருக்கும். எல்லோரும் இருமுவோம். அப்பவும் பார்த்தியா எவ்ளோ திருஷ்டி குழந்தைகள் மேலே... இப்ப எல்லாம் போச்சுன்னு சொல்வாங்க.

இது என்ன லாஜிக்னு கேட்போம். அதெல்லாம் அப்படித்தான்னு சொல்வாங்க. எங்களுக்கு அப்ப எதிர்த்துக் கேக்க வாய் இல்லையாக்கும்:-)

இங்கே ஒருவேளை கமறல் வந்தால் 'உனக்கு எதிரிகளே இல்லை என்பது மிளகாய் போட்டவருக்குப் பதிலாக இருக்குமோ!!!!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

சரியாச் சொன்னீங்க.... பயபக்தின்னு சேர்த்துதானே சொல்றாங்க இல்லையோ :-)

said...

வாங்க பிரபாகரன்.

நன்றி.

said...

வாங்க நாஞ்சில் கண்ணன்.

அங்கே சிவனுக்கு ஏது மவுஸ்? கூட்டம் அப்படியே ப்ரத்யங்கரா சந்நிதிக்குத்தானே ஓடுது!

மனசு கேக்காமத்தான் நான் சிவனையும் அம்பாளையும் எட்டிப் பார்த்துக் கும்பிட்டு வந்தேன்.

வாசலில் விற்கும் தேங்காய் பழம் அர்ச்சனைக்கூடைகள் சிவனுக்குத்தான். ஆனால் பூஜைப்பொருட்கள் ஏற்றுக்கொள்ளமாட்டாதுன்னு போர்டு பார்த்துட்டு சனம் ஒன்னும் வாங்கறதில்லை. பாவம் அந்தக் கடைக்காரர்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நான் இன்னும் சென்னைக்கோவில் பார்க்கலை. போகலாம் அடுத்தமுறை!

said...

ராவணனின் குலதெய்வம் நிகும்பளா தேவி...சுடுகாட்டு காளி என்றும் சொல்வார்கள்...வாசித்திருக்கிறேன்..நரசிம்மா அவர்களின் காலச்சக்கரம் புத்தகத்தில்...

ஈ.சி.ஆர் ரோட்டில் உள்ள பிரத்யங்கரா கோவிலுக்கு போயிருக்கோம்...மாமல்லபுரம் போகும் போது..