Wednesday, January 25, 2017

பதினொரு தலைகளோடு ஒரு பா......ம்....பு.... ( நேபாள் பயணப்பதிவு 6 )

காலை எட்டுமணிக்கு வண்டி வந்துரும்.  இங்கே  ப்ரேக்ஃபாஸ்ட், நம்ம அறை வாடகையில் சேர்த்தி என்பதால்  காலை நேர அலைச்சல் இல்லை.  அநேகமா எல்லா இடங்களிலும் இப்படி ஆரம்பிச்சு வச்சுருக்கறது நல்லாத்தான் இருக்கு.  குளிச்சு முடிச்சுக் கீழே போனோம். லிஃப்ட் இல்லாத    ரெண்டாவது மாடியில் அறை என்பதால்  எல்லாம் கணக்காத்தான் இருப்பேன்.  அடிக்கடி  ஓடிப்போய், ஓடிவர முடியாது பாருங்க....
மற்ற பெரிய ஹொட்டேல் போல பஃபே கிடையாது.  ஒரு   நல்ல  ஐடியாவா மெனு கார்டில் இருக்கும் ஐட்டங்களில் நமக்குத் தேவையானதை மார்க்கர் பேனாவால் டிக் போட்டுக் கொடுத்துட்டால் போதும். அதன்படி நமக்கு தயாரிச்சுக் கொடுத்துருவாங்க. அப்புறமா அந்த  டிக்கை அழிச்சுட்டால் அடுத்த கெஸ்ட்டுக்கு மெனுகார்ட் ரெடி :-)

இன்றைக்கு சமையல் அறை  பொறுப்பில் சுமன் & கேஷவ்.  இதுபோல சின்ன பொட்டீக் ஹொட்டெலில்  தங்குவது எனக்குப் பிடிக்கும். வீட்டில் இருப்பது போல ஹோம்லி. ஹொட்டேல் ஓனர், பணியாளர்களுடன் நமக்கு நேரடித் தொடர்பு. அடுக்களைகூட வீட்டு சமையலறை போலவே!
எனக்கு   தேனுடன்  ஒரு பேன்கேக்,  நம்மவருக்கு டோஸ்ட் வித் பட்டர் & ஜாம்.   கூடவே ஆப்பிள் ஜூஸ்,  பழங்கள், காஃபி.  சிம்பிள் அண்ட் பெஸ்ட். சமையல் தயாராகும்வரை சந்தில் நடந்துட்டு வந்தோம். நாலைஞ்சு ஹொட்டேல்களும் தர்மசாலையுமா....   ஆஹா.....
சரியா எட்டுக்கு  வண்டி  வரலை. கால்மணி லேட்.  கிளம்பிப்  பெருமாளை ஸேவிக்கப்போறோம். சுமார் ஒன்பதரை கிமீ பயணம்.  புதாநீல்கண்டா/ புதாநீல்கந்தா.....

உள்ளே  பதினொரு தலை ஆதிசேஷன்மேல் பள்ளி கொண்ட பெருமாளுக்கும் புத்தருக்கும் நீலகண்டருக்கும்  என்ன சம்பந்தமோ.... எல்லாம் ஒன்று என்ற தத்துவமோ என்னவோ.....
கோவில்வாசலில் எங்களை இறக்கிவிட்டுட்டு எங்கியாவது பார்க்கிங் போட்டுக்கறேன்னுட்டுப் போனார் சூர்யா லாமா.  வளாகத்துக்குள்ளே நுழையறோம். நல்ல கூட்டம்தான். நடுவிலே  சுத்துச்சுவர் போட்ட இடத்துக்குள் குளம்.  சுத்திவர நடைபாதை.  அதைச் சுத்தி ஏகப்பட்டத் தனித்தனி சந்நிதிகள். மேடைகளில் குங்குமம் அப்பிக்கிடக்கும்  சிவலிங்கங்கள். அங்கங்கே   சங்கிலிகளில்  தொங்கும் காண்டா மணிகள்!


முதலில் பெருமாள்னு குளக்கரைக்குப் படிகள் இறங்கினோம். அஞ்சாறு படிகள்தான்.  குளத்தின் நடுவில் இல்லாமல் ஒரு பக்கம் கரைக்கருகில் கிடக்கிறார்.  பெருமாளை விட அந்தப் பாம்புதான் எனக்குப் பிடிச்சுப்போச்சு!  ஃபோம் பெட்டில் கிடந்தால் அங்கங்கே  மெத்தை,  உடம்புக்கு வெளியில் வழியும் பாருங்க அதேபோல்  பின்னிக்கிடக்கும் பாம்பு உடல் வழியுது! (சரியாச் சொல்லத் தெரியலை....)



சின்னப்பையன்தான் பட்டர்.  படம் எடுக்கலாமான்னு கேட்டதுக்கு  வெளிப்புறம் போய் நின்னு எடுத்துக்கலாம். இங்கே முடியாது என்றார். பக்தர்கள் வழிபாட்டுக்குன்னு  பூ, பிரஸாதங்கள்னு கொண்டு வர்றாங்க. அதை வாங்கிக்கிட்டு,  பாம்பு உடல்மேல் நடந்து போய் பெருமாளின் சிரஸில் வச்சு எடுத்துக்கிட்டு வர்றார் பட்டர். பெருமாள் பார்க்கறதுக்கு  மிதக்கறவர் போல் இருந்தாலும்  கீழே ஸாலிட்டாக இருக்கார் போல.
பக்தர்கள் நின்னு பார்க்க  குளக்கரையில் அகலமான  பாதை. தடுப்பு போட்டு வச்சுருக்காங்க. பெருமாளுக்கு எதிரில் நடைபாதையையொட்டி, அடுக்கடுக்கா சின்னச்சின்ன சந்நிதிகள் போல  இருக்கு. படிகளும் திண்ணை போல  இருப்பதால்   அங்கே உக்கார்ந்து பெருமாளைக் கண் நிறைய, நிறையப் பார்த்துக்கிட்டு இருந்தேன்.

வலக்கையில் சக்கரம். இடக்கையில்  கதை. அப்ப சங்கு?  நாலு கைகள் இருக்கே.... அதில் இன்னொரு  இடக்கையில் சங்கு இருக்கு. இன்னொரு வலக்கையில்  உருண்டையா இருப்பது  வெண்ணெயா? இல்லே சாளக்ராமா இருக்கணும்.  கால்களை நீட்டிக்கிடக்காமல், சின்னக்குழந்தைகள் காலை லேசா மடக்கி வச்சுக்கறமாதிரி, கால் மேல் கால் போட்டுக் கிடக்கிறார்.
பதினொரு தலை ஆதிசேஷன்! பொதுவா நம்மூர் கோவில்களில் அஞ்சு தலைகள்தான் அதிகம்.  சில இடங்களில் குறிப்பா கம்போடியா, பாலி, தாய்லாந்துக் கோவில்களில்  ஏழு, ஒன்பதுன்னு பார்த்திருக்கேன்.  பதினொன்னு இங்கே நமக்கு முதல்முறை!

பெரிய சைஸ்.....  பதினெட்டு அடி  நீளம்!  இந்தக் குளமே  நாப்பத்திமூணு அடி அகல நீளம்  இருக்கும்  சதுரக்குளம்.  இவ்ளோ பெரிய குளத்துக்கு  மேற்கூரை கட்ட முடியாதுன்னு நினைச்சோ என்னவோ, பெருமாளுக்கு மட்டும் ஷாமியானா போட்டு வச்சுருக்காங்க. நடுப்பகலில்  அடிக்கும் சுள் வெயில்  முகத்தில் படாம இருக்கட்டும், பாவம்....
கரைக்கு ரெண்டடி தள்ளி தண்ணீருக்குள் இருக்கும் பெருமாளுக்கு அந்தத் தண்ணீரை மொண்டு அபிஷேகம் செஞ்சு மஞ்சள் ஆடை, மலர்மாலை,   க்ரீடம் சார்த்தி,  நெத்தியில் நாமம், உதட்டுக்கு லிப்ஸ்டிக்னு போட்டு  அலங்காரம் செஞ்சுடறாங்க. விசேஷநாட்களில்  பூக்குவியலின் உள்ளே இருப்பார்! கண்ணுக்கு சிகப்பு  மை வேற !!
பார்க்கப்பார்க்க.... இவரைத் தூக்கிட்டுப் போயிடணும் என்ற ஆசையை அடக்க முடியலை. அப்போ அங்கே வந்த இன்னொரு வயசான பட்டரிடம், இவரோட விக்கிரஹம் கிடைக்குமான்னு கேட்டதுக்கு,  'வா என்னோடே'ன்னு  விடுவிடுன்னு முன்னாலே போக ஆரம்பிச்சார்.  ஒல்லி உடம்பு வேக நடை. ஓட்டமும்  நடையுமாப் பின்னே போனால்.... நாம்  உள்ளே நுழைஞ்ச வழியா வெளியே போறார். ரெண்டுமூணு நிமிச நடையில் அந்தத் தெருவில்  இருக்கும்  கடைகளில் முன்னாலே இருக்கும் கடையாண்டை போய் நின்னு  'இங்கே இருக்கு,  பாரு'ன்னார். அடுத்தடுத்து நிறைய கடைகள் இருக்கு.
கண்ணையோட்டிப் பார்த்து நானொரு கடையைத் தேர்ந்தெடுத்தேன்.
பித்தளையாக இல்லாமல் கற்சிலைகளா இருக்கு. சாளக்ராம் ஒன்னு எடுத்துப் பார்த்தேன். ஒரிஜினலாம்!   பெருமாள் வெள்ளைக்கல்லிலும் கருப்புக் கல்லிலுமா  இருக்கார். கருப்பே அழகுன்னு  கருப்பை வாங்கினேன். அதை என்னிடமிருந்து வாங்கிப் பார்த்த பட்டர், 'வா என்னோடு'ன்னு திரும்பக் கோவிலை நோக்கி விடுவிடுன்னு போனார்.

குளத்துப்படிகளில் இறங்கினவுடன், சின்னப் பட்டர், என்னிடம் இருந்த  சயனநாராயணனை வாங்கிக்கக் கைநீட்டுனார். அந்தக் கையைப் பட்டுன்னு தட்டிவிட்ட  பெரிய பட்டர்,  அங்கிருந்த மஞ்சள் துணியொன்னை எடுத்து நம்ம சிலைக்குச்   சுத்தி, குளத்துத் தண்ணீர்விட்டு  அபிஷேகம் செஞ்சு , அங்கிருக்கும் பூக்கள் சந்தனம் எல்லாம் வச்சு அலங்கரிச்சு, மந்திரங்கள் சொல்லிக்கிட்டே  பாம்பின்மேல் நடந்து போய் பெருமாளின் சிரஸில் வச்சு  பூக்களால்  அர்ச்சனை செஞ்சுட்டுத் திரும்ப கரைக்கு வந்து என்னிடம் கொடுத்தார். நான் துப்பட்டா முந்தானையை    ஏந்தி    வாங்கிக்கிட்டேன்.  மடிப்பிச்சை!  பூஜை செஞ்சதுக்கு  நம்மவர் பெரிய பட்டருக்கு தக்ஷிணை கொடுத்தார்.  நம்மவரிடம் உடனே,  சின்னப் பட்டருக்கும் கொடுக்கச் சொன்னேன். பாவம்  குழந்தை.....  ஏமாந்து போகப்டாது இல்லையோ?

எந்தக் காலக்கட்டத்தில் செஞ்ச சிலைன்னு கேட்டதுக்கு, பெரிய பட்டர் ஆடிப்போயிட்டார். ஸ்வயம்புவாம்!!!!  சரின்னு கேட்டுக்கிட்டேன்:-) சுமார் 1380 வருசமாச்சு வயசுன்னு  ஒரு குறிப்பு. இன்னொன்னில்  லிச்சாவி வம்ச அரசர் விஷ்ணுகுப்தா ஆட்சியில் ஏழாம் நூற்றாண்டில் (633  A.D.)செதுக்கப்பட்ட சிலை.  நாம் நினைக்கறதுபோல்   இந்த  ஒரு சிலை மட்டுமில்லாமல் மொத்தம் மூணு சிலைகள் இதைப்போலவே இருக்காம் நேபாளில்!  ஒன்னு இங்கே... இன்னொன்னு (Balaju Gardens) பாலாஜு கார்டனில்.  இது பதினெட்டாம் நூற்றாண்டில் செய்யப்பட்டதாம்.

மன்னர் ப்ரதாப் மல்லா காலத்தில்,  புதாநீல்கந்தாக் கோவிலுக்குப் போகும் அரசர்களை, சீக்கிரம் எமன் கூட்டிட்டுப் போயிருவான்னு யாரோ கிளப்பிவிட,    அதுக்குப்பின் அரசவம்சத்தினர் யாருமே 'கிடப்பவனை'க் கண்டுக்கிடலையாம்.  இவ்ளோ அழகை நம்மால் பார்க்க முடியலையேன்னு  நினைச்ச அரசகுடும்பம் பாலாஜு தோட்டத்தில் ஒன்னு செஞ்சு வச்சுருக்காங்க.  இந்த ரெண்டும் தரிசிக்கப்  பொதுமக்களுக்கு அனுமதி உண்டு.  மூணாவதா ஒன்னு  அரண்மனைக்குள்ளே இருக்குன்னும்,  மக்களுக்கு அங்கே அனுமதி இல்லைன்னும் கேள்வி.

பெயரில் குழப்பம் இருக்கேன்னு  பார்த்தால்  இது புத்தர் இல்லையாம். புட்டா....   கிழவன், முதியவன் என்று பொருள் வரும் ஹிந்திச் சொல். முதுமை, பழசு  .... இப்படி. பதினெட்டாம் நூற்றாண்டில் புதுச்சிலை வந்தபின், ஏழாம் நூற்றாண்டுச் சிலை   பழேசாகிருச்சே...  பூடா ஹோ கயா! இந்த பூடா...மெள்ள மெள்ள புத்தா ஆகிப்போச்சு:-) புத்தர்வேற இங்கே நேபாளில் பொறந்துருந்தார் இல்லையோ!!!

அப்ப அந்த நீல்கந்தா?  வேறென்ன  நம்ம சிவர்தான்!  இப்ப இருக்கும் இந்த  ஜலசயன நாராயணனை அப்படியே திருப்பி வச்சால் (??!!!) அடிப்பக்கத்தில்  சிவனுடைய உருவம் கிடந்த கோலத்தில் இருக்குமாம்.  எப்படி? ஆலகால விஷத்தை உண்டபின் ஏற்பட்ட மயக்கத்தில் கிடக்கிறாரே.... நம்ம  சுருட்டப்பள்ளியில். அதைப்போல!  அதான் விஷம் உண்ட நீல கண்டன்.....

 நல்லாத்தான் கிளப்பி விடுறாங்க.  யாரு, எப்போ, எப்படி சிலையை உள்ட்டா பண்ணிப் பார்த்தாங்களாம்?

  ஜலசயன நாராயணனுக்கு  இப்படி ஒரு பெயர் அமையணுமுன்னு விதி இருந்துருக்கு போல :-)))) ஆனால் ஒன்னு..... எது எப்படி இருந்தாலும் இந்த சிற்பத்தைச் செதுக்கிய கலைஞனுடைய ரசனையைப் போற்றித்தான் ஆகணும்!  ஹைய்யோ!  என்ன ஒரு வேலைப்பாடு!  முக்கியமா அந்தப் பாம்பு!!!

பாம்பு பாம்புன்னு ஆசையா நான் இருக்கறது  ஏன்னு  பின்னால்  கண்டுபிடிச்சேன்,  ஒரு ரெண்டுநாள் கழிச்சு.....   எதிர்பாராத விதமா, எதிர்பாராத இடத்துலே!  அதை  அப்பாலிக்கா சொல்றேன். ஓக்கே :-)

வலம் வரும்போது  நம்ம ஜலசயன நாராயணர் தலைப்பக்கத்துக்கு நேரெதிராத்தான் கோவிலின் முன்வாசலே இருக்கு!

நாராயணரை நெஞ்சிலும் மடியிலும் சுமந்துக்கிட்டுக் கோவிலை வலம் வர்றோம்.  பெரிய வளாகம்தான். இங்கேயும் ஏகப்பட்ட சந்நிதிகள் அங்கங்கே!
லக்ஷ்மி மந்திர்னு  தனியா மேட்டில்  ஒரு சந்நிதி. வளாகத்தில் வலம் வரும்போது  ஒரு மூலையில் சிவனுக்கும் ஒரு சந்நிதி. நேர் எதிரா  இன்னொரு சந்நிதி சரஸ்வதிக்கு! எல்லாம் நாமே உள்ளே போய் சாமியைத் தொட்டுக் கும்பிட்டுக்கலாம். சிவனுக்குத் தலைமேல் உள்ள  பாத்திரத்தில் அபிஷேக நீர்  கொண்டு வந்து  கொட்டிட்டுப்போகுது சனம். முக்கியமாப் பெண்கள்!  அபிஷேகப்பிரியனுக்கு  தாராபிஷேகம்  நடந்துக்கிட்டே இருக்கு!

இந்தப்பக்கம் ஒரு யாக சாலை. அதையடுத்து  க்ருஷ்ணருக்கு ஒரு சந்நிதி.  காளிங்கமர்த்தனம் ஸீன். ஃபயர்ப்ளேஸ் போல  தரையை யொட்டி இருக்கும் இடத்தில் இருக்கு.  நாம் மூணு படிகள் இறங்கிப்போய் கும்பிட்டுக்கணும்.  வெளியே வரும்போது  அங்கெ ஒரு பட்டர், கம்பியில் இங்லீஷ் 'யு' மாதிரி ஒன்னு வச்சு சந்தனக்குழம்பில் முக்கி எடுத்து நம்ம நெத்தியில் பதிக்கிறார்!  ட்டடா.....  யூ நாமம்! சந்தனத்தில்!  எனக்கு அதைப்போல ஒன்னு வேணும். அவரிடமே கேட்டேன். தானே அதைச் செஞ்சாராம்!  நம்மவரிடம் சொல்லி ஒன்னு செஞ்சுக்கணும். எஞ்சீனியர் செஞ்சு தரமாட்டாரா என்ன? :-)

நாமத்துக்கு மேலே அரிசியும் குங்குமமும் குழைச்சு வச்ச மொத்தையில் இருந்து  ஒரு சிட்டிகை நம்ம நெத்திக்கு!
இந்த வெளிப்புறச் சந்நிதிகளில் எல்லாம்    இரும்புக் கம்பியை  சுத்திவரத் தடுப்புக் கம்பியா வச்சு அதுலே வரிசையா பித்தளை விளக்குகளைப் பிடிப்பிச்சுருக்காங்க. அகல் வடிவம் இல்லை. வட்டவடிவ விளக்குகள். அதுலே  விளக்கேத்தும்போது அட்டகாசமா இருக்கும், இல்லே!  விழா சமயங்களில் ஏத்துவாங்களோ என்னவோ?  சாயங்காலமா வர்றவங்க     கண்களுக்கு  செம விருந்து !!!


This photo of Budhanilkantha  க்ருஷ்ணா is courtesy of TripAdvisor  இதுதான் அந்த க்ருஷ்ணர் சந்நிதி. சுட்ட படம் :-)

இங்கே வேதபாடசாலை நடக்குது.  வேதம்படிக்கும் மாணவர்கள் தங்கும் வித்யாஷ்ரம்.  கட்டடவாசலில் நின்னு கவனிச்சால்  எங்கியோ தூரத்தில்   மாணவர்கள் வேதம் சொல்லும் ஒலி ரொம்ப லேசாக் கேட்டது!
கோவிலின்    முன்வாசப்பக்கம் எப்படி இருக்குன்னு பார்க்கப்போனோம்.  பூஜைக்கான பொருட்கள் விற்கும் சிறு வியாபாரிகள் வரிசையில் உக்கார்ந்துருந்தாங்க.  சில பிச்சைக்காரர்களும் அங்கங்கே!

பக்கச் சுவர் மாடங்களில் கடவுளர்களின் சிலைகள்.  வாசலின் நடுவில் பெரிய தாமரைப்பூவில் நிற்கும் மஹாவிஷ்ணு! வலக்கைகளில் சக்கரம், சங்கு!  இடக்கைகளில் கதை,  தாமரை! நான்கு திசைகளுக்கும் ஒவ்வொன்னு என்ற கணக்கில் ஒரே சிலையில் நால்வர்!
முன்வாசல் பக்கம் வந்ததும், கிளம்பலாமுன்னு  சூர்யாவுக்கு ஃபோன் செஞ்சால் சிக்னலே இல்லை.  நாலைஞ்சுமுறை முயற்சி செஞ்சு பார்த்துட்டுக் கோவிலுக்குள் போறோம். அங்கே அவர் நம்மைத் தேடிக்கிட்டு இருக்கார்!
மணி இப்போ பத்தேகால்தான். இன்னொரு இடம் பார்த்துட்டு லெமன்ட்ரீ போகலாம்.

தொடரும்......... :-)

PINகுறிப்பு:  நம்ம வீட்டில் ஜலசயனன்:-)

17 comments:

said...

ஸயனப் பெருமாளை வளைச்சு வளைச்சு படம் எடுத்திருக்கிறீர்கள்! பெருமாள் மல்லாக்கப் படுக்காமல் சற்று பக்கவாட்டில் சயனித்திருக்கலாமோ!

// என்னிடம் இருந்த சயனநாராயணனை வாங்கிக்கக் கைநீட்டுனார். அந்தக் கையைப் பட்டுன்னு தட்டிவிட்ட பெரிய பட்டர், //

ஏன்?

அழகிய படங்கள்.

said...

உங்கள் தயவில் ஜலசயன நாராயணனை தரிசித்தேன்.... படங்கள் வழமை போல அழகு.

நன்றி.

said...

//பாம்பு பாம்புன்னு ஆசையா நான் இருக்கறது ஏன்னு பின்னால் கண்டுபிடிச்சேன், ஒரு ரெண்டுநாள் கழிச்சு....//

பாம்பு நேருல தரிசனம் கொடுத்திருக்குமோ ?

அருமை. அழகு. அற்புதம். நன்றி.

said...

புதாநீல்கண்டா வை உங்கள் வாயிலாக தரிசித்தேன்....

பதினொரு தலை ஆதிசேஷன் ஆஹா ரொம்ப அழகு நீங்க ஸ்லாகிச்சு சொன்ன மாதிரி...

said...

ரொம்ப நல்லா இருக்கு புத்நீலகண்டாவின் தரிசனம். சிலைகளின் முகங்கள் (கோவிலில் இருக்கும் மற்ற சிலைகளும், குறிப்பாக புத்'நீலகண்டா குளத்தின் வெளிப்பக்கத்திலிருக்கும் சிலைகள்) அங்குள்ள மக்களின் முகங்களையொற்றி இருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? கம்போடியா, இந்தோனேஷியா... என்று அந்த அந்த நாடுகளில் கடவுளர் சிலைகள் அந்த மக்களின் முகத்தையொற்றி இருக்கும்.

said...

டீச்சர்.. சுப்ரபாதம் படத்திலிருந்து எம்.எஸ்.வி பாட்டு ஒன்னு யூடியூபில் ஏத்தினேன். அப்போ நல்ல குவாலிட்டி வீடியோ கிடைக்கல. அதுல வடக்க இருக்கும் வைணவத் தலங்களைப் பத்தியெல்லாம் வருது. கடைசியா நேபாளமும் வருது.

https://youtu.be/M-yuSMbZfz0?t=4m13s

இதுல நீங்க பாத்த எடங்கள்ளாம் வரும். நம்பியார் விஜயகுமாரி லதா எல்லாரும் நேபாளம் வரைக்கும் போய் நடிச்சிருக்காங்க. நேபாளத்துக்கும் இசையமைச்சிருக்காரு எம்.எஸ்.வி :)

பள்ளி கொண்ட பெருமாள் அழகுதான். ஆதிசேடனும் தான்.

பெருமாளுக்கும் புத்தருக்கும் என்ன தொடர்புன்னு கேட்டீங்க. ஒரு காலத்துல சமணக் கோயில்கள் எல்லாம் பிள்ளையார் கோயில்களாவும் பௌத்தக் கோயில்கள்ளாம் வைணவக் கோயில்களாவும் மாறியதாகப் படிச்ச நினைவு.

said...

வாங்க ஸ்ரீராம்.

பக்கவாட்டில் சரிய பாம்பு இடங்கொடுக்கலை போல :-)

ஏகப்பட்ட படங்கள் எடுத்தேன். பார்க்கப்பார்க்க இன்னும் ஆசையா இருக்கார் நம்ம நாராயணர்!

தக்ஷிணை சின்னவருக்குப் போயிருமோ என்ற எண்ணம்தான் பெரியவருக்கு:-( சின்னப் பசங்களுக்கும் தன்னைவிட வயதில்மூத்தவரைப் பார்த்தால் கொஞ்சம் பயமா இருந்துருக்காது?

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஒருமுறை போயிட்டு வாங்க. உங்களுக்குப் பக்கம்தான்!

said...

வாங்க விஸ்வநாத்.

முக்திநாத்தில் பதில் கிடைச்சுரும்:-)

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

ரசிப்புக்கு நன்றி.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

சிற்பிக்கு எந்த முகம் பரிச்சயமோ அதேதான் சிலையிலும்!

தெரிஞ்சதைத்தானே வரையவும் செதுக்கவும் முடியும், இல்லையோ!!!

said...

ஒரு வித்தியாசமான கோவில் /
நல்லாத்தான் கிளப்பி விடுறாங்க. யாரு, எப்போ, எப்படி சிலையை உள்ட்டா பண்ணிப் பார்த்தாங்களாம்?/ இப்படியெல்லாம் பேசக்கூடாது உம்மாச்சி கோச்சுக்கும் ....!

said...

வித்தியாசமான பெருமாளாக இருக்கிறாரே!!! நேபால் பற்றிக் கேள்விப்பட்டு போகணும்னு ஆசை எல்லாம் இருக்கு...பார்ப்போம் எப்போ என்று..பழசை எல்லாம் இனிதான் பார்க்கணும்

கீதா

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

உம்மாச்சி வரவர எதுக்குத்தான் கோவிச்சுக்குமுன்னே தெரியலையே :-)

நிலநடுக்கம் சுநாமி எல்லாம் கூட உம்மாச்சி கோபம்தானாமே :-(

said...

வாங்க கீதா,

விட்டதையெல்லாம் பிடிச்சுக்கிட்டு இருக்கீங்க போல :-)

வித்தியாசமா இருந்தாத்தானே நமக்கும் போரடிக்காம இருக்கும்!!!!

said...

வாங்க ஜிரா.

விஷ்ணுகோவில்களையெல்லாம் புத்தர் கோவிலாகவும் ஆக்கி இருக்காங்கன்னு சரித்திரம் சொல்லுதே! அது இது எதுன்னு பார்க்க வேணாம். இனி அதுவோ இதுவோ எதாக இருந்தாலும் ஒன்னுன்னு மனுசனுக்குத் தெளிவு வந்தால் போதும்!!!

சுட்டிக்கு நன்றி. இனிமேத்தான் பார்க்கணும்.

said...

நாராயணர் நல்லா இருக்கார்.

வடநாட்டுக் கோவில்களில் மணி எனக்கு ரொம்பப்பிடிக்கும். சின்னக்குழந்தைகள் கூட ஒலிக்க வைக்கும் வகையில் தாழ அமைத்திருப்பது ரொம்ப நல்லாருக்கும். அதுவும் மணியைத் தொங்க விட அதுக்கொரு அமைப்பு வேற. ச்சான்ஸே இல்ல.