Tuesday, February 07, 2017

ஜம் ஜம்முன்னு ஜொம்ஸம் போய்ச்சேர்ந்தோம்:-) ( நேபாள் பயணப்பதிவு 10 )

ராத்திரியெல்லாம் சரியாத் தூக்கமே வரலை. எங்கே தூங்கிப் போயிருவேனோன்னு அரைத்தூக்கத்துலே நினைச்சுக்கிட்டே இருந்து, தூங்கித்தான் போயிருக்கேன். அலார்ம் கால் நாலு மணி அடிச்சதும், சட்னு எழுந்து ரெடியாகிக் கீழே வந்தாச்சு. இந்தப் பயணத்துக்குன்னே கொண்டு வந்த ஷூக்களைப் போட்டுக்கிட்டு, செருப்புகளை மட்டும் பையில் எடுத்துக்கிட்டோம். ஆளுக்கொரு பை உண்டு. எனக்கு அது  என்  கேபின் பேக்:-) ஆனால் செக்கின் செஞ்சுடணும். துர்கா தயாரா இருக்கார்.  காருக்குச் சொல்லிட்டாராம். இப்போ வந்துருமுன்னு சொன்னார். மணி  அஞ்சுபத்து. நமக்கான ப்ரேக்ஃபாஸ்ட் பார்ஸல்கள்  டைனிங் ரூமில் ரெடி.  கார் வந்ததும் கிளம்பி ஏர்ப்போர்ட் வந்தோம். வாசல் கேட்டில் அரைத் தூக்கத்தில் இருந்த வாட்ச்மேன் வண்டிக்குள் டார்ச் அடிச்சுப் பார்த்துட்டுக் கேட்டைத் திறந்துவிட்டார். ஏர்ப்போர்ட் இப்படி இருந்தது :-)

எங்களை இறக்கிவிட்டுட்டு வண்டி போயிருச்சு. ஒரு அஞ்சு நிமிட் இருட்டுலேயே நின்னுக்கிட்டு இருந்தோம். அப்புறம் ஒரு செக்யூரிட்டி வந்து  கதவைத்திறந்து விளக்குப் போட்டுட்டு, நம்மை உள்ளே வந்து உக்காரச் சொன்னார். காலை அஞ்சரை இப்போ.  பெருமாளை வேண்டிக்கிட்டு 'கேசவா நாராயணா...' சொல்லிக்கிட்டே அப்பப்ப ஒரு க்ளிக்.    தேவுடு காக்கறது இப்படித்தான் :-) இன்னொரு பயணி வந்து சேர்ந்தார்.  அப்புறம் இன்னும் ரெண்டு பேர்ன்னு.... மலையேறும்  பயணிகள்.
முக்கால்மணி காத்திருந்தபின் கவுன்ட்டர் ஆள் வந்து செக்கின் செஞ்சு போர்டிங் பாஸ் கிடைச்சது.  பெட்டி, பைகளையெல்லாம்  எடை பார்த்துட்டு, நம்மையும் தனித்தனியா எடை போட்டுப் பார்த்து  எழுதிக்கறாங்க.  ஒருத்தர்  ஸ்கேலில் ஏறி நிக்கும்போது  பணியாளர், எவ்ளோன்னு பார்த்துட்டுச் சத்தமா  அதை உலகுக்குக்கே அறிவிக்கிறார்!  ஐயோ... இது என்னடா எனக்கு வந்த சோதனை.....  அதுவும் டிஜிட்டல் ஸ்கேல் கிடையாது. ரயில்வே ஸ்டேஷனில் இருக்குமே அதைப்போல முள்ளு காமிக்குது.  அவரும் எல்லாத்தையும் ரவுண்ட் பண்ணிச் சொல்லிக்கிட்டு இருக்கார்.  குறிப்பிட்ட எடைக்கு மேல் விமானத்தில் ஏத்தக்கூடாதாம்.  'பீலிபெய் சாகாடும்  அச்சிறும் அப்பண்டம்... .....'
பைகளை உள்ளே அனுப்பிட்டு உக்கார்ந்துருக்கோம். உள்ளே அனுப்பறதுன்னா....   பைகளுக்கு டேக் போட்டு கவுன்டருக்கு முன்னால் குவிச்சு வச்சுட்டுன்னு பொருள்:-)
என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு வரேன்னு துர்கா போனார். அப்ப ஒரு ஆள் வந்து மாடியில் ரெஸ்ட்டாரண்ட் திறந்துட்டாங்கன்னு  சொல்லிட்டுப்போனார்.  காஃபியாவது  குடிச்சு வைக்கலாமேன்னு துர்காவைத் தேடிப்பிடிச்சுக்  கூப்பிட்டுக்கிட்டு மாடிக்குப் போனோம்.  மொட்டை மாடியில் இருந்து பார்த்தால் முழு விமானதளமும் தெரியுது. இங்கேயும் இருக்கைகள் போட்டு வச்சுருக்காங்க. ராத்திரி பெய்ஞ்ச மழையில் எல்லா இடமும் ஈரம்.


மற்ற பயணிகளும் இப்போ மாடிக்கு வந்துட்டாங்க. நம்மவர்தான்   ப்ரேக்ஃபாஸ்ட் பார்ஸலைத் தூக்கிட்டு  அலைய வேணாம். இப்பவே சாப்புட்டுடலாமுன்னு சொன்னதும், என் பார்ஸலை துர்காவுக்குக் கொடுத்துட்டேன். இன்னொரு பாக்ஸைத் திறந்து  நாங்க ஷேர் பண்ணிக்கிட்டோம். ஸாலட் ஸாண்ட்விச். ஜூஸ், ஆப்பிள், வாழைப்பழம் வச்சுருந்தாங்க. எல்லாம் இதுபோதும் போ..... காபி மட்டும் கப்புச்சீனோ கிடைச்சது!    இங்கே எல்லா இடங்களிலுமே கப்புச்சீனோ நல்லாவே இருக்கு. ஃபில்ட்டர் காஃபின்னா...  கடுங்காப்பிதான்.
இதுக்குள்ளே காலையில் போகும் மூணு ஃப்ளைட் மக்களும் வந்து சேர்ந்துட்டாங்க. ஏழே முக்காலுக்கு  விமானத்தை நடத்தி வந்து நிக்க வச்சு அதுக்கு சாப்பாடு போட்டு முடிச்சு, ஏர் ஹோஸ்டஸ் 'வந்து கேறிக்கோ'ன்னு  கையாட்டுனாங்க. நாங்கதான் ஸிம்ரிக்கையே பார்த்துக்கிட்டு இருந்தோமே.... விடுவிடுன்னு  நடந்து போனோம்.
பிநோக்கியோ மாதிரி நீள மூக்கு ஸிம்ரிக்குக்கு:-) மொத்தம் 18 ஸீட். பக்கத்துக்கு எட்டுன்னு ரெண்டு வரிசை.   இன்னொரு இந்தியக் குடும்பம் இருந்தாங்க . ...  பாலக்காட்டு மும்பைவாலாஸ்.

நான் கடைசியா உள்ளே ஏறுனதாலே கடைசி வரிசை வலப்பக்கம் ஒன்னும் இடப்பக்கம் ஒன்னுமா காலி. ஏர்ஹோஸ்டஸ் கிட்டே எந்தப்பக்கம் உக்கார்ந்தால்  மலைச்சிகரங்கள்   நல்லாத் தெரியும்னு கேட்டால் ரெண்டு பக்கமும் பார்க்கலாம். இடப்பக்கம் நல்லதுன்னு சொன்னாங்க. சரின்னு உக்கார்ந்துக்கிட்டு ஜன்னல்வழியாப் பார்க்கிறேன்.... துர்கா ஓட்டமும் நடையுமா வர்றார். அவருக்கு வலப்பக்க இருக்கை.
வால்பக்கம் சின்ன இடத்துலே  தீனி சப்ளைஸ் வச்சுக்கிட்டு ஏர்ஹோஸ்டஸ் உக்காரணும். அங்கே ஜன்னலே  கிடையாது. அப்ப எந்தப்பக்கம் காட்சிகள் நல்லாத் தெரியுமுன்னு எப்படித் தெரிஞ்சதாம்? எல்லாம் ஒரு யூகம்தான் :-)

ஹோஸ்டஸ் சொல்மா, தில்லியில் கொஞ்சநாள் இருந்தாங்களாம். அப்பா  இண்டியன் ஆர்மியில் இருக்கார். இந்தியா ரொம்பவே பிடிக்குமாம். எல்லோருக்கும் முட்டாய் கொடுத்தாங்க. அம்புட்டுதான்.  'ஏன் ஃப்ளைட் டிலே'ன்னு கேட்டதுக்கு  சிரிச்சுக்கிட்டே... ' பைலட் வரலை. தூங்கிட்டாராம். அவரை எழுப்ப ஆள் போய் கூட்டியாந்தாங்க'ன்னு சொன்னாங்க. இப்ப ஜொம்ஸம் போய் திரும்பி வந்துட்டால் ட்யூட்டி முடிஞ்சதாம்.  இன்னிக்கு ஒரே ஒரு ஃப்ளைட்டோடு  முடிச்சுக்கறாங்க. இன்னும் கொஞ்சம் லேட்டாகி இருந்தால் எல்லாமே கேன்ஸல்தான்.  ஒன்பதுக்குள்ளே திரும்பி வர்றது கஷ்டமாப் போயிருமுன்னு சொன்னாங்க. இப்பவே மணி எட்டடிக்கப் போகுது.  வெறும் இருவது நிமிட் பறக்க இத்தனை கலாட்டா....


கண்ணில்பட்ட காட்சிகளையெல்லாம் க்ளிக்கிக்கிட்டே வந்தேன். வலது பக்கம் நல்லா இருக்கும் காட்சிகளுக்காக  துர்காவுக்கு அப்பப்ப நம்ம கேமெரா கை மாறிக்கிட்டு இருந்துச்சு. அன்னபூரணா மலைத்தொடர்களும் சிகரமும் கண்கொள்ளாக் காட்சி!!  தவளகிரி சிகரமும் சூப்பர்!  என் செல்ஃபோன் கேமெரா நல்லா எடுக்குதுன்னு  நம்மவர் அதுலே க்ளிக்கிட்டு வந்தார். பாருங்க பதிவுக்காக எப்படியெல்லாம் எனக்கு உதவறார்னு!!!  (இந்தப் பயணப் பதிவின் ரெண்டாம் பகுதியில் நம்ம நெல்லைத் தமிழன் சொன்ன மச்சபுச்சரே சிகரம் இப்பதான்  வருது! )  





நீல்கிரி மலையடிவாரத்தில் இருக்கும் ஜொம்ஸொம் ஏர்ப்போர்ட்டில் விமானம் இறங்குது.  உடனே அதுலே கிளம்பிப்போக  தயாரா நிக்குது சனம்.  இந்தப் பள்ளத்தாக்குலே காத்து வந்து சேருமுன் தப்பிச்சுப்  போகணுமே.... அவுங்க!


நீல்கிரியில்  பனி படர்ந்து அழகா இருக்கு!  விடமுடியுமோ? க்ளிக் க்ளிக்....

நீலகிரியுடே  சகிகளே... ஜ்வாலா முகிகளே.....   (பாட்டுதான்.... பழைய படம். பணித்தீராத்த வீடு!  மலையாளம்.  நஸீரிண்டே சூப்பர்ஹிட் மூவி,  கேட்டோ! )











பைகளையும் பொட்டியையும்  கொண்டுவந்து  ஏர்ப்போர்ட் கட்டடத்தின் ஒரு பக்கம் இருக்கும் பெஞ்சுலே வரிசையா வச்சாங்க பணியாட்கள். நம்மதை எடுத்துக்கிட்டு வெளியே போறோம். வாசலில் வலதுபக்கம் திரும்பி நடக்கறார் துர்கா.  கற்கள் பதிச்ச சாலை.  ரெண்டுபக்கமும் ஹொட்டேலும் கெஸ்ட்ஹௌஸுமா ஏராளம்! அநேகமா எல்லாமே ரெண்டடுக்குகள்.

இந்த ஊர்  கடல்மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் அடி உசரம்.  மலைப்ரதேச நாய் கூட  அடர்த்தியா ரோமத்தோடு இருக்கு. முகம்கூட நேபாளி முகமோ? டூரிஸ்ட் நடமாட்டம் பழகிப்போச்சு என்பதால்  குரைக்கக்கூட இல்லை.  இப்பதான் நினைவுக்கு வருது....  அங்கே நிறைய நாய்க்கூட்டத்தைப் பார்த்தாலும் குரைக்கிற சத்தம் கேக்கவே இல்லையே.....  குளிரில்  குரல் அடங்கிப்போச்சோ...

காய்கறி பழங்கள் விற்கும் கடைகள் ஒன்னுரெண்டு.  ஆப்பிளைத்தவிர வேற பழங்களைக் காணோம். ப்ச்....
சாலை  அழகு , கண்ணுலே ஒத்திக்கலாம் போல .....   ஆனால் கண்ணைக்குத்திரும் :-)
'ஹொட்டேல் ஹிமலயன் இன்' நாம் தங்கப்போற இடம்!  வைஃபை இருக்காம். ஆஹா.... பேஷ் பேஷ் :-)வாசலில் ரெண்டுபக்கமும் திண்ணைகள் வேற!!!!  ஆஹா ஆஹா.... முக்கியமான குறிப்பு  இந்த ஹொட்டேலில் குழந்தைத் தொழிலாளர்கள் கிடையாது!! வெளிநாட்டு டூரிஸ்ட்டுகள்  கவனிக்கறாங்க என்பதால் ஏற்பட்ட முன்னேற்றம். (  இவுங்க குழந்தைகள் எல்லாம் இந்தியாவில் குறிப்பா சென்னையில் வேலை செய்யுதோன்னு எனக்கொரு சம்ஸயம். )



துர்கா  போய்  வரவேற்பில் பேசிட்டு  இடுக்கமா இருக்கும் படிகள் வழியே மாடிக்குக் கூட்டிப்போனார். டைனிங் ஏரியா. இன்னும் நமக்கான அறைகள் ரெடி ஆகலையாம். பெட்டி பைகளை வச்சுட்டுப்போய்   உங்க வேலைகளைக் கவனியுங்க. அறை தயாரானதும் அதுலே கொண்டு வைக்கிறேன்னு  பெருக்கித் துடைச்சுக்கிட்டு இருந்தம்மா சொன்னாங்க.  அது சரி. ஆனால் எந்த அறை நமக்குன்னு தெரிஞ்சுக்கணும் என்றேன். துர்கா போய்  வரவேற்பில் நமக்கு ஒதுக்கப்போகும் அறை எண்ணைக் கேட்டுக்கிட்டு வந்தார். அதைப் போய்ப் பார்த்தோம். பரவாயில்லை.  இங்கே எல்லா ஹொட்டேல்களிலும் இப்படி சுமாராத்தான் இருக்கும். ரொம்ப வசதி எதிர்பார்க்கமுடியாதுன்னார் துர்கா. உண்மைதான். ஒரு இரவுதானே தங்கப்போறோம். சமாளிச்சுக்கலாம்னு சரின்னுட்டேன்.

நிறைய செடிகளைத் தொட்டியில் வச்சுருக்காங்க. நியூஸி மணி ப்ளான்ட் கூட இருக்கு! அநேகமா எல்லாச் செடிகளும் இங்கே நியூஸியில் இருக்கும் வகைகள்தான்.  இதில் பலதும் நம்ம வீட்டுலேயே இருக்கு. பார்த்தவுடன்  எனக்கு ரொம்ப ஹோம்லியான ஃபீலிங்ஸ் வந்தது உண்மை :-)

மணி எட்டேமுக்கால்தான் ஆகுது. நான்போய் முக்திநாத் போக வண்டிக்கு ஏற்பாடு பண்ணிட்டு இப்ப வரேன்னுட்டு போனார் துர்கா. நாங்க ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டு,  ரெடியாகி திண்ணையில் போய் உக்கார்ந்து வேடிக்கை பார்த்தோம்.  நம்மவர் கையில்  சின்ன back pack.  தண்ணீர் பாட்டில்,  கொஞ்சூண்டு தீனிகள் (நியூஸியில் இருந்து கொண்டுபோன ம்யூஸ்லி பார்கள்) முக்கியமா என்னுடைய இன்ஹேலர்.  இன்னொரு இன்ஹேலரும்,  கேமராவுக்கான எக்ஸ்ட்ரா பேட்டரியும் என் ஜாக்கெட் பையில்.

வாசலில் வந்து நின்ன வண்டி ட்ரைவரிடம் என்னமோ கேட்டுட்டு வந்த துர்கா,  இன்னொரு வண்டியைக் காமிச்சு அதுலே நாம் போறோமுன்னு சொன்னதும் போய் ஏறிக்கிட்டோம். ரொம்ப உயரமான படி. ஏறி உக்கார கஷ்டமாப் போச்சு.  நாலு கட்டடம் தள்ளி வண்டியை நிறுத்தினதும், துர்கா கீழே இறங்கிப்போனார். இது செக்போஸ்ட்.  போலிஸிடம் அனுமதி வாங்கிக்கணுமாம்.


அப்போதையக் காலநிலை, மற்ற விவரங்கள் எழுதி வச்சுருக்காங்க. 12 டிகிரி த ற்சமயம் :-)

இதே வண்டி குறுக்குப் பாதையில் கண்டகியைக் கடந்து நேரே முக்திநாத் போகுமுன்னு  சொன்னதும் எனக்கு மனசுக்குள்  பெருமாளைப் பார்க்கப்போறோம் என்று  உற்சாகமாகவும் அதேசமயம்.... பெருமாளே  நல்ல தரிசனம் கொடுன்னு வேண்டும்போது,  சட்னு கண்ணீர் எட்டிப் பார்த்துக்   கொஞ்சம் உணர்ச்சிகரமாவும் இருந்துச்சு.

கேசவா நாராயணா கோவிந்தா......


தொடரும்........  :-)


15 comments:

said...

நாங்க பொக்காராவிலிருந்து நேரே முக்திநாத்துக்கு ஹெலிகாப்டரில் சென்றோம். ப்ராப்தம் இருந்தால் ஜொம்சொம் வழியாக இன்னொருமுறை செல்லணும். ஜொம்ஸம் வந்த உடனேயே முக்திநாத்துக்குக் கிளம்பின்டீங்களா? கொஞ்சம் வேகமாப் போறமாதிரி தெரிஞ்சது

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

வந்த ஒரு முக்கால் மணி நேரத்தில் கிளம்பியாச்சு. பொட்டியை அங்கே வச்சுட்டுப்போய்

முதல் தரிசனம் கண்டகி :-)

said...

அருமை. நன்றி. தொடர்கிறேன்.

said...

நீங்க எழுதியிருக்கறதைப் பார்த்தால், கைடையும் கூடவே கூட்டிச்சென்ற மாதிரி இருக்கிறது. நாங்க கண்டகி நதியை பொகாராவுக்குப் போகும் முன்பே பார்த்துட்டோம். ஆனாலும் ஜொம்சொம் அருகே கண்டகி நதி மாதிரி வராதே.. குளிர்ல குளிச்சீங்களா என்றெல்லாம் அறிய ஆசை... காத்திருக்கிறேன்.

said...

ஆமாம். கைடு நமக்குப் பெர்சனல் கைடுதான். நாலுநாள் முழுசும் எங்களோடுதான் இருந்தார். அவருக்கான மொத்த செலவும் நம்முடையதே, விமானப்பயணம் உட்பட.

said...

உங்கள் மூலமாக புதிய இடங்களையும், மக்களையும் காணும் வாய்ப்பு கிடைக்கிறது. அழகான புகைப்படங்களுக்கு பாராட்டுகள்.

said...

அடேயப்பா. 44 படங்கள்! படங்களே பாதிக் கதைகளைச் சொல்லி விடுகின்றன. 32 வது படத்தை அதிகம் ரசித்தேன்.

said...

வாங்க ஸ்ரீராம்.

அடடா.... 48 இல்லையோ!! இப்ப எந்த 32? அந்த ப்ரௌணிதானே? :-)

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

பாராட்டுகளுக்கு நன்றி !

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி !

said...

முக்திநாத் போறதுக்கு இவ்வளவு இருக்குதா.. அடேங்கப்பா.. மலைப்பாதான் இருக்கு டீச்சர். நல்லா திட்டம் போட்டு போயிட்டு வந்திருக்கீங்க.

குளிர் ஊர்கள்ள பொதுவா நாய்கள் குலைக்காது. மனிதர்களும் தான். வெயில் கூடக்கூடத்தான் நாய்கள் நல்லாக் குலைக்கும். மனிதர்கள் அதைவிட நல்லாவே குலைப்பார்கள். :)

நீலகிரியுடே ஷிகிகளே.. பாட்டு பாடியது ஜெயச்சந்திரன். இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன்.

பனி தீராத்த வீடு படத்துல எல்லாப் பாட்டுகளுமே அட்டகாசமா இருக்கும். அணியம் மணியம் பொய்கையில் கண்டோர், மாரில் ஷயமந்தக ரத்னம் சார்த்தும்... எல்லாமே எனக்குப் பிடிச்ச பாட்டுகள்.

said...

மலை சிகரங்கள்..அழகாக இருக்கு..

said...

வாங்க ஜிரா.

அந்தப் படத்தில் எல்லாம் எவ்ளோ நல்ல பாட்டுகள்! இப்போ அங்கேயும் வரும் பாட்டுகள், தமிழ் சினிமா போலவே பாதாளம் நோக்கிப்போய்க்கிட்டு இருக்கு :-(

பயணத்திட்டம் எல்லாம் நம்மவர்தான் :-)

said...

வாங்க அனுராதா ப்ரேம்

நன்றி.

said...

வாவ்....

தொடர்கிறேன்..