Friday, March 31, 2017

143 ன்னா....... ஐ லவ் யூ தானே? சாங்கோனா.....( நேபாள் பயணப்பதிவு 23 )

கோபாலுக்கு 'நேபாளில்' பொறந்தநாள் இன்றைக்கு :-) காலையில்  கண் முழிச்சதும்  வாழ்த்துகளைச் சொல்லிட்டு  முக்கிய கடமைகளான  'மெயில்பாக்ஸ்' வேலைகளை முடிச்சோம். இங்கே லெமன்ட்ரீயில் 'வைஃபை' நல்லாவே இருக்கு.

ப்ரேக்ஃபாஸ்ட்டுக்குக் கீழேபோய் நமக்கு வேண்டியவைகளை மார்க் பண்ணிக் கொடுக்கும்போதே   லெமன்ட்ரீ  ஓனர் ப்ரகாஷ் வந்துட்டார். நம்ம காலை ஆகாரம் ரெடியாகும்வரை  வெளியே  முற்றத்தில் இருந்து பேசிக்கிட்டு இருந்தோம். அப்பதான் கோவிந்தன் நம்பூதிரியை சந்தித்தோம்.  கொறே சம்சாரிச்சு. மும்பையில் வசிக்கும்  கேரளர். நம்முடைய பயணத்திட்டங்களைக் கேட்டவர், நாம் போகும் முக்கிய இடங்கள் இரண்டில் லகுவான தரிசனத்துக்குத் தொடர்பு கொள்ளவேண்டிய  நபரையும் ஃபோன் நம்பரையும் கொடுத்தார்.  உறவினர்களாம். அதிலும் ஒருவர் மைத்துனர். நமக்கு பெருமாளின் மைத்துனர்தான் சிபாரிசு என்றாலும்  'தெய்வம் மனுஷ்ய ரூபேணே' என்பதால்  குறிச்சு வச்சுக்கிட்டோம்.
சரியா ஒன்பதுக்கு வந்து சேர்ந்தார் பவன்.  இன்றைக்கும் நாளைக்கும் நமக்கான கைடு. இங்கே நேபாளில்  கைடுகளுக்கான விதிமுறைகள் நிறைய இருக்கு. அதில் ஒன்னு  நகரங்களில் கைடுவேலை பார்ப்பவர்களுக்கும்,  மலைப்பகுதிகளில் கைடா இருப்பவர்களுக்கும்  தனித்தனி லைசன்ஸ்.  அவரவர் அவரவருடைய பிரிவுகளில் மட்டுமே வேலை செய்யணும்.

அதனால்தான் நமக்கு முக்திநாத்  போய்வர துர்காவும்,  உள்ளுர் காத்மாண்டுவில் சுத்திப் பார்க்க பவனுமா ஏற்பாடு செஞ்சுருக்கார் நம்ம ப்ரகாஷ்.  இந்தப் பவனும் ப்ரகாஷும் சுற்றுலா படிப்பில்  ஒரே பேட்ச். வகுப்புத்தோழர்களாம்.

ஏற்கெனவே ப்ரகாஷ்  நம்மை எங்கெங்கு கூட்டிப்போகணுமுன்னு  பவனிடம் சொல்லி இருந்தாலும், இப்ப நம் முன்னால் மறுபடி எங்கெங்கே போகணுமுன்னு கேட்டுக்கிட்டுத் திட்டத்தை அங்கங்கே கொஞ்சம் மாத்திக் கொடுத்தார். நானும் வலையில் பார்த்து  சில இடங்களைக் கட்டாயம் பார்க்கணுமுன்னு குறிச்சு வச்சுருந்தேன்.

சரின்னு நாங்க நாலுபேரும் கிளம்பினோம். நாங்க ரெண்டு பேர், பவன் & ட்ரைவர் தீபக்.  'சாங்கா' என்ற இடத்துக்கு முதலில் போறோமாம்.  கிட்டத்தட்ட ஒரு மணி நேரப்பயணம். போறவழியில் முக்கியமான கட்டடமா  ஒன்னு  இருக்கு.
ஷிமா தர்பார்னு பெயராம்.  மன்னராட்சி காலத்தில்  கேபினட் ஹௌஸ். இப்ப அது அரசாங்க அலுவலகங்களுக்குன்னு  ஆகி இருக்கு. இதுக்குள்ளேதான் ரேடியோ, டிவி ஸ்டேஷன்கள் எல்லாம் இருக்காம். இந்த விவரங்களை அப்போ சரியாக் கேட்டுக்கலை. இப்ப இதை எழுதும்போதுதான் ஞாபகம் வந்துச்சு. பவனிடம் என்ன ஏதுன்னு விவரம் ஃபேஸ்புக் இன்பாக்ஸ்லே கேட்டுக்கிட்டேன். இப்பப் புரிஞ்சுருக்குமே   நம்ம துர்காவைப்போல் பவனும் நம்மகூட தொடர்பில்தான் இருக்காருன்னு :-)
வண்டியில் போய்க்கிட்டு இருந்தப்பவே தூரக்க எதோ உயரமான சிலை போல ஒன்னு தெரிஞ்சது. என்னன்னு பவனிடம் கேட்டதுக்கு,  இப்ப நாம் அங்கேதான் போறோமுன்னார்.  கைலாஷ்நாத் மஹாதேவ், ஒரு குன்றின்மேல் நின்னுக்கிட்டு இருக்கார்.
நல்லவேளையா  மலைக்குமேலே கார் போகும் வழி இருக்கு. நாம் போய் நின்னது ஒரு ரிஸார்ட் வாசலில். இங்கே ஹெல்த் க்ளப் ஒன்னு இருக்காம். விசேஷம்தான் போல ! அதுக்குள்ளே நுழைஞ்சுதான் அந்தாண்டை போறோம். உள்ளே போக ஆளுக்கு 100 ரூ டிக்கெட்.  இதைத் திருப்பி வாங்கிக்க நாம்  இன்னும் அதிகமா செலவு செய்யணும்! ஹெல்த் க்ளப் ஸ்பா, ரெஸ்ட்டாரண்ட் இதுலே போய் நாம் செலவழிச்சா இந்த நூறை கழிச்சுக்குவாங்க :-)சின்ன மீனைப் போட்டு......
சூரிய ஒளியில் தகதகன்னு  மின்னும் செப்புச்சிலை. 143 அடி உயரம். உலகிலேயே     இவ்ளோ உயரம்  இருக்கும் இந்துக் கடவுள்  இவர் மட்டும்தானாம் இதுவரை!

 இடையில்   புலித்தோலும் விரித்த சடையும் கழுத்தில் சுத்தியிருக்கும் படமெடுக்கும் பாம்பும், கையில் பிடிச்சுருக்கும் த்ரிசூலமுமா.............  ஹைய்யோ   எத்தனை கம்பீரம்! என்னவொரு சாந்தமான முகம்!









அவருக்கு எதிரா, ஒரு பக்கம்  அவர் குடும்பம் மலைமீது உக்கார்ந்து பார்த்துக்கிட்டு இருக்கு!  மனைவியும் ரெண்டு மகன்களும்!  இளையவரின் வாகனத்தைக் காணோம். பறந்து போயிருச்சோ?  ஆனால்  மூத்தவரின்  வாகனம்... கொழுக்கட்டையை உருட்டியபடி :-)  இன்னொரு பக்கம் நந்தி !  எல்லோரும் செப்புச்சிலைகளாவே இருக்காங்க.

சிவனின்  காலடிக்கருகில் சின்னதா ஒரு கோவில். சந்நிதின்னு சொல்லலாம். உள்ளே யாருன்னு எட்டிப் பார்த்தால்  நம்ம பஷுபதிநாத்! ஆனால் நாலு முகங்கள்தான்னு நினைக்கிறேன். ஒருவேளை மேலே போட்டுருக்கும் வெள்ளிக்கவசத் 'தொப்பி'க்குள்  அஞ்சாவது  முகம் இருக்கோ? கவசத்துக்கு மேல்  அஞ்சாறு அடுக்குகளா ருத்திராட்ச சரங்களைச் சுருட்டி வச்சுருக்காங்க. ஆவுடையாரின் மேல்  அமர்ந்துள்ள பஷுபதிநாத்துக்கு நாகம் குடைபிடிக்க,   மேலே கயிறுகட்டித் தூக்கி இருக்கும் ஒரு பாத்திரத்தில் இருந்து  அபிஷேகதாரை சொட்டுச் சொட்டா இறங்கிக்கிட்டு இருக்கு.
சந்நிதியின் பின்புலத்தில்(உள்புறம் இருக்கும் சுவர் )பிள்ளையார், துர்கா மா, ஆஞ்சநேயர் பளிங்குச்சிற்பங்களா இருக்காங்க.


கதவின் மேல்பகுதி திறந்திருக்க, கீழ்ப்பகுதியில்  ஒரு அரைக்கதவை மட்டும் திறந்து உள்ளே உக்கார்ந்திருக்கும்  பண்டிட், கொஞ்சம் முசுடாக இருந்தார்.  எட்டிப் பார்த்துக் கும்பிட்ட என்னைப் பார்த்துச் சின்ன உறுமலோடு, தக்ஷிணைக்காக வச்சுருக்கும் தட்டைத் தொட்டுக் காமிச்சார்.  இடும்பி உடனே போட்டுருவாளோ?  பேசாம இருந்தால் போட்டுருப்பாள்.  போடு என்ற அதிகாரத்தோரணை பார்த்துட்டு சும்மா இருந்துட்டாள்.    (ப்ச்.... போட்டுருக்கலாம். என்னமோ அப்போ தோணலை..... போட்டுருந்தால் கொஞ்சம் பூந்தி கிடைச்சுருக்கும். மிஸ்டு.....  )
அங்கிருந்து படிகள் கீழே குன்றின் அடிவாரத்துக்கு இறங்கிப்போகுது. நல்ல அகலமான படிகளை நடுவில் ரெண்டாப் பிரிப்பதைப்போல சரிவில்  பத்துப்பதினொரு படிகள் இடைவெளிவிட்டு, சின்ன மண்டபங்கள் வரிசை. ஒவ்வொரு மண்டபத்திலும் ஒரு ஜ்யோதிர்லிங்கம் என்றபடி!  மொத்தம் பனிரெண்டு. அப்புறம் படிக்கு இந்தாண்டை புள்ளையார்.




இந்த மொத்த அமைப்பையும் செஞ்சுமுடிக்க சுமார் ஏழு வருசங்கள் ஆகி இருக்கு. 2004 ஆம் ஆண்டு பணி துவக்கம். 2010 ஆம் ஆண்டு பணி நிறைவு.  திரு தன்ராஜ் ஜெய்ன் (பன்ஸாலி)திருமதி கேஷர் தேவி ஜெய்ன் மற்றும் குடும்பத்தினரின் கைங்கர்யம்.
ஜெய்ன் குடும்பத்தினர் எப்படி சிவன்கோவில்னு ஒருவிநாடி நினைச்சது உண்மை. அப்புறம் பார்த்தால் சின்னச் சந்நிதி மண்டபங்களில் ஒரு பக்கம் தீர்த்தங்கரர் மஹாவீர் சிலையும், குரு  ஆச்சார்ய பிக்ஷு ஸ்வாமியின் சிலையும் நிறுவி இருக்காங்க.  சமணமதத்தின் ஒரு பிரிவான ஸ்வேதாம்பர் தேராபந்த் சங்கத்தை ஆரம்பிச்சவர் இவர்.  தீர்த்தங்கரர் மஹாவீரரின் நேரடி சிஷ்யரும் இவரே!   சமண மதத்தின்  இருபத்திநான்கு தீர்த்தங்கரர்களில் கடைசி தீர்த்தங்கரர் மஹாவீர்தான். (மஹாவீர் ஜயந்தின்னு  மத்திய அரசின் விடுமுறை தினம் நினைவில்  இருக்கோ? )ஸ்வேதாம்பர் சங்கம் ஆரம்பிச்ச சமயம், பதிமூணு முனிவர்களும், இவர்களைப் பின்பற்றும் பதிமூன்று ஆட்களும், பதிமூணு விதிமுறைகளும் இருந்ததாம். எல்லாம் பதிமூணு என்பதால் தேரா (ஹிந்தியில் பதிமூணு)என்பதும் சேர்ந்து தேராபந்த் ஆகி இருக்கு!

நல்லா சுத்தமாகப் பராமரிக்கிறாங்க இந்த  இடத்தை.  அலங்காரச் சிற்பங்களும், அழகாச் செடிகளும் புல்வெளிகளுமா  அமைச்சுருக்காங்க. ஹெல்த் ரிஸார்ட்டுக்கான சின்னச்சின்ன விளம்பரங்களும் அங்கங்கே!  ஸாண்ட் பாத்  இருக்காம்!

அங்கே ஒரு நினைவுப்பொருட்கள் விற்கும் கடையும் இருக்கு.    அதுலே  கம்பீரமாகவும் இடக்கையை ஒய்யாரமா இடுப்பில் வச்சபடி, முதுகில் பேக்பேக்கில் சிவலிங்கத்தை வச்சுக்கிட்டு    நிற்கும் சிலை அப்படியே என் மனசை இழுத்தது உண்மை. பளிங்குச்சிலைதான். கொஞ்சம் பெருசும் கூட.  வாங்கிப்போக சான்ஸே இல்லை........... ப்ச்....


அதே மாதிரி நின்னு போஸ் கொடுத்தாங்க கோபாலும் பவனும் :-)
பவன் அப்பப்ப நம்ம ஃபொட்டாக்ராஃபராகவும் டபுள் ட்யூட்டி செஞ்சார். என்னுடைய செல்ஃபோன் கேமெரா ரொம்பவே நல்லா இருக்குன்னு அவருக்கு ஒரு தோணல். க்ளிக்கட்டுமுன்னு அவரிடமே கொடுத்து வச்சுருந்தேன் :-) அங்கெ நில்லுங்க, இங்கெ நில்லுங்கன்னு அப்பப்ப டைரக்‌ஷன் வேற!
உலகத்தின் மிக உயரமான சிவனைக்  கண் நிறையும் வரை பார்த்துட்டுக் கிளம்பினோம். நம்ம பத்துமலை முருகன் கூட இவரை விட மூணடி  உயரம் குறைவாம். போகட்டும்.... அப்பனை மிஞ்சுவானா சுப்பன்?  அப்படி மிஞ்சினால் நல்லாவா இருக்கும்?  தந்தை என்ற பணிவு வேணாமோ?

தொடரும்.......  :-)



Wednesday, March 29, 2017

மச்சானுக்கு மச்சான் பரிந்துரை செஞ்சுருக்கலாம்.... ( நேபாள் பயணப்பதிவு 22 )

மீண்டும் பசுபதிநாத் கோவிலுக்குப்போறோம். ரொம்ப இருட்டாகுமுன் பாக்மதி நதியின் அந்தாண்டைக் கரைக்குப்போய் ஆர்த்தி நடந்த இடத்தைப் பார்க்கணும்  எனக்கு. என்னதான் சட்புட்னு கிளம்பினாலும்,  சாயந்திர ட்ராஃபிக்லே  மாட்டிக்கிட்டு எட்டு கிமீ தூரம் போக ஒரு முக்கால் மணி நேரமாயிருச்சு.  வெளிச்சம் நமக்காகக் காத்திருக்குதா என்ன?  ஆறு மணிக்கே இருட்டிக்கிட்டுக்கிடக்கு. கோவில் வாசலில் இறங்குனதும்,  நாம் போக வேண்டிய இடம் உத்தேசமா  வளாகத்தின் வலது பக்கம் இருக்கலாமுன்னு அந்தப் பக்கம்  ஓடறோம்.
நல்லவேளையா நாம் போனது சரியான பக்கம்தான்.  பாக்மதி   ஆரத்திக்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்துக்கிட்டு இருக்கு. திங்கக்கிழமைகளில் மட்டும் என்று ஆரம்பிச்ச இந்த நிகழ்ச்சி இப்போ தினசரி விசேஷமா ஆகி இருக்காம்.  இந்தக் கரையில் வரிசையா இருக்கும் சந்நிதிகளில் என்ன இருக்குன்னு பார்க்கலாமுன்னா....  உள்ளே இருட்டோ இருட்டுதான். வாசலில் நந்தி உக்கார்ந்துருக்கறதை வச்சு உள்ளே சிவன் இருப்பாருன்னு கெமெராவை ஆட்டோ மோடில் போட்டுக் கிளிக்கினேன்.  உள்ளே சிவலிங்கம்!

பொதுவா நான் பயணங்களில் ஃப்ளாஷ் பயன்படுத்துவதில்லை. பளிச் பளிச்ன்னு  ஆட்கள் முகத்தில் அடிச்சு வைக்குதேன்னுதான்.
கோவிலையொட்டியுள்ள பாக்மதியின் கரையில் நாலைஞ்சு பேர் எரிஞ்சுக்கிட்டு இருந்தாங்க.  கணகணன்னு எரியும் சிதைக்கருகில் ஆண்களும் பெண்களுமாக் குடும்பம் சுத்தி நின்னு நெய்யைக் கோரி  சிதையில் ஊத்திக்கிட்டு இருக்காங்க. இன்னொருபக்கம் பாக்மதியில் கால் நனைச்சபடி 'கிடக்கும்'  உறவினருக்கான சடங்குகள் நடக்குது.  தனி உலகமாவே இங்கே ஒரு இயக்கம்.... நல்ல கூட்டம்!
பசுபதிநாதருக்கு ஆரத்தி  எடுத்து முடிச்சபிறகுதான் பாகுமதிக்கு என்பதால் கூட்டம் கோவிலை நோக்கிப் பரபரன்னு போக ஆரம்பிச்சதும் நாங்களும் அந்தக் கூட்டத்தைத் தொடர்ந்தோம்.  சரியான விளக்கு வெளிச்சம் இல்லாமல்  அங்கங்கே கொஞ்சம் தடுமாறத்தான் வேண்டி இருக்கு.  கோவில் முகப்பில் மஞ்சள் வெளிச்சம் பளீர்!

உள்ளே இருக்கும் ப்ரமாண்டமான   பித்தளை நந்தியின் ப்ருஷ்டமும் மஞ்சளோடு மஞ்சளாக ஜொலிச்சது :-)   சரியாக் கூட்டம்  சந்நிதிக் கதவருகில் போகுதேன்னு கூடவே போய், போனமுறை நின்னு பார்த்த அதே இடத்தில்  நின்னு  ஆரத்தி எடுப்பதை எட்டிப் பார்த்துட்டு கீழே இறங்கிட்டோம்.
முதல்முறை (எல்லாம் நாலு நாளுக்கு முந்திதான், திங்கக்கிழமை!)இங்கே  வந்து பசுபதிநாத்தை தரிசனம் செஞ்சப்ப,  'எந்த அபகடமும் இல்லாம, மச்சானை தரிசிக்க அருள்புரியணு'முன்னு ஒரு கோரிக்கை வச்சுட்டுத்தான் போனேன்.  இந்த    நேபாள் யாத்திரையே மச்சானுக்காகத்தானே :-)  அதேபோல் எந்தத் தடங்கலும் இல்லாமல்  முக்திநாத் தரிசனம் ஆச்சே!  அதுக்கான ஒரு நன்றி சொல்லிக்கத்தான் இப்போ வந்தது.

'மனசு நிறைஞ்ச நன்றி'ன்னு மனசுக்குள் சொல்லிக்கிட்டே கோவிலை வலம் வரலாமுன்னு மேற்கு வாசலில் இருந்து வடக்கு வாசல் பக்கம் போறோம். அப்போ அங்கே திறந்திருந்த வாசல் பக்கம் நின்னுக்கிட்டு இருந்த ஒருத்தர்  உள்ளே வாங்கன்னு கை காட்டினார். என்ன ஏதுன்னு யோசிக்காம சட்னு நுழைஞ்சுட்டோம். அரை இருட்டுலே  சமதளம் சரியாக்கூட இல்லாத தரையிலே தட்டுத்தடுமாறி  அங்கங்கே தரையில் இருக்கும் சமாச்சாரங்களில்  (பலிபீடம் போல்  என்னவோ அங்கங்கே  .... இருட்டில் சரியாத் தெரியலை )  இடிச்சுக்காம  சுத்திக்கிட்டுப்போனால்....  மக்கள் கூட்டம்  கொஞ்சம் இருக்கும் இடத்துக்கு வந்துருந்தோம். எல்லோரும் உள்ளே என்னவோ பார்த்துக்கிட்டு இருக்காங்க. கோவில் பூஜை நேரத்துக்குண்டான  மணிகளின் ஓசையும், டமடமன்னு டமருவின் சப்தமும்  உரக்கக் கேக்குது. நானும் எட்டிப் பார்த்தேன்.

ஹைய்யோ!!!

 சிவனுக்கு ஆரத்தி எடுத்துக்கிட்டு இருக்காங்க.  நல்ல அம்சமான மனித முகம். சந்தனக் காப்பு !  பூக்களால் அலங்கரிச்சுக் கண்களும் புருவங்களும் நெற்றிக் கண்ணுமா பளிச்ன்னு  இருக்கார்.  பெரிய தாம்பாளத்தட்டில் ஓங்கி எரியும் கற்பூர  ஜோதியில்  பார்க்கப் பார்க்கப் பரவசமா இருந்தது உண்மை.

அங்கே ஓரமா நின்னுக்கிட்டு இருந்த ஒருவர் நகர்ந்து போகச் சொல்லி கை காட்டுனதும்,  நகர ஆரம்பிச்ச வரிசையில் நாங்களும் இருக்கோம். வரிசை அப்படியே போய்  கிழக்கு வாசல் முகத்துக்கு முன் நிக்குது. இங்கேயும் அதே படிக்கு கிழக்கு முகத்துக்கு ஆரத்தி நடக்குது. கருவறையை ஒட்டியே இருக்கும் உள்ப்ரகாரத்துக்குள்ளேயே நிக்கறோமுன்னு அப்பதான் புரிஞ்சது எனக்கு!  ரொம்பக் கிட்டக்க நிக்கறதால்  பளிச்ன்னு முகமும் அலங்காரமும் நல்லாவே தெரிஞ்சது.

அதுக்குப்பின் தெற்கு வாசல் முகம்  ஆரத்தி தரிசனம். வரிசையோடு சேர்ந்தே போய்க்கிட்டு இருக்கோம்.  கடைசியா மேற்கு வாசல் முக ஆரத்தி தரிசனமும்  கிடைச்சது.  நாலு முகங்களுக்கும் ஒரே மாதிரி அலங்காரம் செஞ்சு,  ஒரே சமயத்தில் ஒரே மாதிரி ஆரத்தி எடுக்கறாங்க. இந்த வைபவமே சுமார்  நாப்பது நிமிசங்களுக்கு  நடக்குது! வரிசையோடு  வெளியே வாசல் கடந்து வந்தால்....  நாம் உள்ளே போன  வடக்குவாசலில் நிக்கறோம். '

பஷுபதிநாத்துக்கு ஐந்து முகங்கள் இருக்கு. நாலு திசைக்கும் ஒவ்வொன்னு, அஞ்சாவது முகம்  மேலே ஆகாசத்தைப் பார்த்து!  இஷான் என்று பெயர் அந்த முகத்துக்கு!  மற்ற நான்கு முகங்களுக்கும் தத்புருஷா, சத்யோஜதா, வாமதேவா, அஹோரா என்று பெயர்களாம்! இஷானைத்தவிர மற்ற நான்கு முக தரிசனங்களும் கிடைச்சது பாருங்க!!!
இந்த இரண்டு படங்களும் பஷுபதிநாத் எப்படி இருப்பார்னு உங்களுக்கு ஒரு ஐடியாக் கொடுக்கறதுக்காகப் போட்டுருக்கேன். மேலே உள்ள படம்  இந்தியாவில் ஒரு ஊரில் உள்ள பஷுபதிநாத் கோவில். கீழே படம், நான் வாங்கிவந்த  குட்டியான விக்ரஹம்.
எதிர்பாராமக் கிடைச்ச இன்ப அதிர்ச்சின்னுதான் சொல்லணும். இப்படி நாலுமுக தரிசனம்கிடைக்குமுன்னு கற்பனை கூட செஞ்சதில்லை! கண்ணும் மனசும் நிறைஞ்சு போயிருந்தது, எங்க முகத்துலேயே  தெரிஞ்சது. பேச வார்த்தை ஒன்னும் இல்லாம ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டு  கொஞ்சநேரம் பிரமிப்போடு இருந்தோம்.


இந்தக் கோவிலில் நம்ம பஷுபதிநாதரைத் தவிர்த்து  ஏகப்பட்ட சந்நிதிகள்.....  (தனிச்சந்தியா இல்லைன்னாலும்....  தரையில், மாடத்தில் இப்படி ) சரஸ்வதி, நடராஜர், உன்மத்த பைரவர்,  லால் கணேஷ், தக்ஷின்காளி,  சத்யநாராயண், சேஷநாராயண், வாசுகி நாகராஜ், நவதுர்கை, கிருஷ்ணர்,  ஹனுமான், அர்தநாரீஸ்வரர்,  அஷ்ட சிரஞ்சீவி,  ச்சௌசாத்தி லிங்கம் (108 லிங்கங்களோ?)  இன்னும் சிலபல.  நல்ல வெளிச்சம் இருந்தால் நிதானமாப்பார்க்க முடியும். போனமுறை (அதான் நாலுநாளைக்குமுன்) பெயர் தெரிஞ்சுக்காமலே நிறையப் பார்த்துருந்தோம்தான்.  நம்ம பவிஷுக்கு இதுவே அதிகம்னு திருப்திப் பட்டுக்கிட்டேன்.

உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லைன்னு  மனசுக்கு பேஜாராத்தான் போச்சு.
கோவிலின் முகப்பு வாசலுக்கு வந்து  கொஞ்சம் படங்களைக் க்ளிக்கினேன். நேர்ந்துவிட்ட ஆட்டுக்கடாக்கள் ரொம்ப போரடிக்குதுன்னு  ஒன்னோடொன்னு தலைமுட்டி விளையாடிக்கிட்டும், கொஞ்சம் வயசானவைகள் எல்லாம் சாய்ஞ்சு ஓய்வெடுத்துக்கிட்டும் இருந்தன.

அப்பதான் சரிதாவைப் பார்த்தேன். முதல்முறை வந்தப்ப ருத்ராக்ஷம், சாளக்ராம் எல்லாம் வேணுமான்னு கேட்ட சின்னப்பெண்ணின் அக்காவாம்.  எனக்கும் ஒரு தோழிக்காக 'ஆறுமுகம்'  வாங்க வேண்டி இருந்தது. வாங்கி வச்சால் அவுங்க நியூஸிக்கு வந்து எடுத்துக்குவாங்களாம்! நேபாளை விட நியூஸி கிட்டக்கே இருக்கோ....  :-)


சரிதா  எதிர்வரிசையில் இருக்கும் அவுங்க கடைக்குக் கூட்டிப்போனாங்க. சாளக்ராம் எல்லாம் முக்திநாத்திலும் பொகராவிலும் வாங்கியாச்சேன்னு  தோழிக்காக ஒரு ஆறுமுகம் வாங்கினேன்.
அங்கே தரவரிசைப்படி இருக்கும் ருத்ராக்ஷங்களைப் பார்வையிட்டுக்கிட்டே இருந்தப்ப ஒரு ஒத்தை முகம் கண்ணில் பட்டது.  ஒரிஜினலா இல்லையான்னு லேசா ஒரு சந்தேகம் வரத்தான் செஞ்சது ...  ஆனாலும் அங்கே மூட்டை மூட்டையா வச்சுருக்கும் ருத்ராக்ஷங்களையும்,  நான் வாங்க நினைச்சது இன்னும்  மேல் தோலோடும் காம்போடும் ஒட்டிக்கிட்டு இருப்பதையும் பார்த்து, க்ருஷ்ணார்ப்பணம்னு சொல்லி வாங்கிக்கிட்டேன். (பேரம் பேசித்தான் கேட்டோ!)இது விதை என்ற கணக்கில் வருமுன்னா... நியூஸிக்குள் கொண்டு வரப்டாது. கொண்டு வரும் பொருட்களை  டிக்ளேர் செஞ்சு பார்க்கலாம்.....   வீடுவரை வர அதிர்ஷ்டம் இருக்குமோ......
லெமன்ட்ரீக்கு திரும்பி வரும்போது மணி எட்டு.  வரவேற்பில் இருந்த ப்ரகாஷிடம்  நாலு முகங்களையும் தரிசனம் செஞ்சதைச் சொல்லாமல் விட்டுருப்பேனோ? :-)

மறுநாள் எங்களுக்கான ஏற்பாட்டைச் சொல்லி வண்டி எத்தனை மணிக்கு  வரச்சொல்ல என்றவரிடம்.....  தினமும்தான் காலையில் எழுந்து ஓடறோமே....  நாளைக்குக் கொஞ்சம் நிதானமாக் கிளம்பலாமேன்னு ஒன்பது என்றேன்.

தொடரும்........:-)