Friday, April 28, 2017

குமாரி........... குமாரி.......( நேபாள் பயணப்பதிவு 35 )

பா டனில் இருந்து கிளம்பி காதமாண்டு தர்பார் சதுக்கம் வந்து சேர  அரைமணிக்கும் கொஞ்சம் கூடுதலாகிப் போச்சு. இத்தனைக்கும் வெறும் 5.1 கிமீதான் தூரமே!  சாயங்காலம் வேலை விட்டு வர்ற  மக்கள், பள்ளிக்கூடம் விட்டு வர்ற பிள்ளைகள் இப்படி ....     என்னப்பா இப்படி ஒரு ட்ராஃபிக்! எல்லா பெரிய நகரங்களுக்கும் உள்ள சாபக்கேடுதான்....

இந்த அழகில் பார்க்கிங் வேற கஷ்டம் என்பதால்  பிஷால் பஸார் அருகே எங்களை இறக்கி விட்டார் ரவி. பவன் வழிகாட்ட, சாலையின் மக்கள் வெள்ளத்தைக் கடந்து குறுக்கும் நெடுக்குமாப் போய்  ஒரு  சதுக்கம் தொடங்கும் இடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம்.  இந்த இடத்திலிருந்து  வண்டிகளுக்கு  அனுமதி இல்லை என்பதால்  கொஞ்சம் ஆசுவாசமா நடக்க முடிஞ்சது.  கண் பார்த்த இடத்தில் எல்லாம் இடிஞ்சு நிக்கும் கட்டடங்கள்.  ப்ளாஸ்டிக் போர்வைக்குள் இருக்கு முக்கால் வாசி. அங்கங்கே  பெரிய மரக்கட்டைகளால் முட்டுக்கொடுத்து வச்சுருக்காங்க.








கல்பாவிய ஒரு பெரிய இடத்தில் நினைவுப்பொருட்கள் தரையில் பரத்தி வச்சு விற்கும்  கடைகள். ஹைய்யோ!  நின்னு பார்க்க ஆசையா இருந்தாலும்.... முன்னால் ஓடும் பவனை எங்கே விட்டுருவோமோன்னு நம்மவர்  ஓட நானும் காலை வீசிப்போட்டேன். ஓடிப்போய் நின்ன இடம் நவ ஆதர்ஷ ஹைஸ்கூல் கட்டடத்தின் கீழ்த்தளம்.
ஹனுமான் தோகா, தர்பார் ஸ்கொயர் கட்டடங்களை மீண்டும் கட்டி எழுப்பிப் பாரம்பரியத்தைக் காக்கப்போகும்  அலுவலகம் இது.  இங்கேதான்  சதுக்கம் பார்க்க  டிக்கெட் வாங்கிக்கணும்.  காத்மாண்டு தர்பார் சதுக்கம். ஹனுமான் தோ(க்)கா என்ற இடம்  அரண்மனைப்பகுதி. மல்லா அரசர்களின் அரண்மனைகள் நிறைஞ்ச இடம். இங்கே ஒரு ஹனுமன் சிலை (ஸ்வயம்பு) இருப்பதால் ஹனுமந்தோகான்னு  பெயர் வந்துருக்கு!


டிக்கட் கவுண்ட்டரில் ஆள் இல்லை. இன்னொரு பக்கம் சதுக்கத்தில் இருந்த செக்யூரிட்டியாண்டை விசாரிக்கலாமுன்னு போனால்....  அங்கே பேசிக்கிட்டு நின்னவர்தான் கவுண்ட்டர் ஆளாம்.  அவசரப்படுத்தி டிக்கெட் வாங்கிக்கிட்டு  பரபரன்னு ஓடறார் பவன். ஆளுக்கு 150 ரூ கட்டணம்.
பதைக்கப்பதைக்க ஓடிப்போய் நின்னது அடுத்துள்ள இன்னொரு பெரிய கட்டடத்துவாசலில். எட்டிப் பார்த்தால்  உள்ளே இருக்கும் பெரிய முற்றத்தில்  நல்ல கூட்டம். நாங்களும் போய் ஜோதியில் கலந்தோம். இங்கே என்ன விசேஷமுன்னு பவனைக் கேட்டதுக்கு, 'நீங்கதானே குமாரியைப் பார்க்கணுமுன்னு ப்ரகாஷ்கிட்டே  சொல்லி இருந்தீங்க'ன்றார்!
ஆஹா.... அந்த இடம்தானா இது!!!!   கொஞ்ச நேரத்துக்கு முன்னே தங்கக்கோவிலுக்குள் போனப்பவும் அங்கத்து டிக்கெட் கவுன்ட்டருக்கு மேலே குமாரி படங்கள் இருந்தது நினைவுக்கு வந்துச்சு.  இப்படி சர்ப்ரைஸ் கொடுத்துட்டாரே......  போகப்போறோமுன்னு ஒரு வார்த்தை சொல்லி இருக்கப்டாதா?

'எப்படி... மிஸ் பண்ணவும் சான்ஸ் இருக்கே'ன்னு சிரிக்கிறார்.
நேபாள் னு சொன்னதும்  அங்கே 'வாழும்  கடவுள் என்ற வகையில் லிவிங் காடஸ் Living Goddess என்று  ஒரு சின்னப்பெண்ணை  கும்பிடறாங்கன்னு  நினைவுக்கு வராமல் இருக்குமோ?




மேலே இருக்கும் ஐந்து படங்களும்  தங்கக்கோவிலில்  க்ளிக்கியவை:-)

குமாரி என்று இந்த சாமிக்குப் பெயர்.  நாட்டுக்கு ஒரே ஒரு  குமாரி சாமி இல்லையாம். கொஞ்ச நேரத்துக்கு முன் போய்வந்த பா...டன் (லலித்பூர்) என்ற ஊருக்கும் தனி குமாரி உண்டு.  இவுங்களைத் தவிர பக்தபூர், புங்காமதிக்கும் குமாரிகள் உண்டு.

மேலே படங்கள்:  கடையில் வாங்கிய ஃபோட்டோ ஆல்பத்தில் இருந்து ! 


இன்னும் சொல்லப்போனால்  ஒவ்வொரு கிராமத்துக்கும் தனித்தனியா குமாரி சாமிகள் உண்டாம்.   டெலெஜு   அம்மனின் அவதாரங்களா இவுங்களை வழிபடறாங்க. இத்தனை குமாரிகள் இருந்தாலும்  காத்மாண்டு குமாரிக்குத்தான் மதிப்பு  அதிகம்.  ராயல் குமாரி !

இந்த குமாரியைத் தேர்வு செய்யறதுக்குன்னு பெரிய ப்ராஸஸ் உண்டு.  முக்கியமா நெவாரி கம்யூனிட்டி சேர்ந்தவங்களா இருக்கணும். சாக்ய குலத்துலே  விஸ்வகர்மா ஜாதி. வேற ஜாதிப் பிள்ளைகளுக்கு அனுமதி இல்லை.   சின்னக் குழந்தைகளா இருக்கணும். நாலு, அஞ்சு வயசுலே.....

முப்பத்தி ரெண்டு லக்ஷணங்கள் பொருந்திய பெண் குழந்தைகள் கிடைக்கணுமுன்னா  கஷ்டம்தானே?   நல்ல ஆரோக்கியமா இருக்கணும். மான்   போல  தொடைகள்,  தலைமுடியும் கண்களும் நல்ல கருப்பு,  இமைகள்,     பசுவின் இமைகளைப்போல வளைஞ்சு நீளமா இருக்கணும்.  வாயில் இருவது பற்கள். எதுவுமே  சொத்தையாவோ, உடைஞ்சோ, கோணாமாணோன்னோ  இருக்கக்கூடாது. உடம்பு ஆலமரம் போல (!) இருக்கணுமாம். முகத்துலே ஒரு மாசு மருவு கூடாது.  உடம்பில் எங்கேயும் தேமலோ வேற நிற மாற்றமோ கூடாது இப்படி  முப்பத்திரெண்டு சமாச்சாரம். (விடிஞ்சது போங்க !)

இப்பதான் என் நினைவுக்கு வருது என்  சிறுமி காலத்து சம்பவங்களில் சில. எனக்கு அப்போ ஆறேழு வயசிருக்கும். ' உன் சிநேகிதிகளில் ஒரு எட்டுப்பேரை நம்ம வீட்டுப் பூஜைக்கு அழைச்சுக்கிட்டு வா'ன்னு அம்மா சொன்னாங்க. எனக்குத்தான் ரொம்பவே கஷ்டமாப் போச்சு.  மொத்த க்ளாஸுமே என்  சிநேகிதிகள்தான். இதுலே யாருன்னு கூப்பிட?  லிஸ்ட்  போட ஆரம்பிச்சேன். 

 நம்ம வீட்டுக்குப் பக்கத்துலே இருக்கும் சரோஜா?  எதிர்வரிசையில் இருக்கும்  ஸுபைதா, நஜிமுனிஸா, என் க்ளோஸ் ஃப்ரெண்டு பிச்சுமணி, இன்னும்.....  சின்னக்கா கிட்டே  பெயரை எல்லாம் எழுதச் சொன்னா.....  பிச்சுமணி இருக்கட்டும், சரோஜா, ஸுபைதா, நஜிமுனிஸா எல்லாம் வேணான்னு  சொன்னாங்க. ஏன்? ஏன்?  சரோஜாவுக்கு உங்க பெயர் இருக்கறதாலா?  சண்டைக்கு  ஆயுத்தமானேன். 

"அவுங்க நீ கூப்புட்டாலும்  வரமாட்டாங்க.  இது நம்ம சாமியைக் கும்பிட்றவங்களுக்குத்தான்....  நெத்திலே பொட்டு வச்சுக்கிட்டு வர்ற பொண்ணுங்க வேணும்"

  அக்கா சொன்னது புரிஞ்சது போல் இருந்தாலும்.... இப்போ எட்டுப்பேருக்கு எங்கே போவேன்? அக்கம்பக்கத்து சின்ன ஊர்களில் இருந்து  வர்றவங்கதான் எங்க க்ளாஸிலே. பள்ளிக்கூடம் விட்டவுடன்  கிளம்பிருவாங்க. நடந்து போகணுமுல்லே? 

  பாய்ஸ் தான் நிறைய ....  வேணுமுன்னா  வைத்தியோட அக்காவைக் கூப்பிட்டுக்கலாம். அவ என்னைவிட ஒரு க்ளாஸ் மேலே. ஃபோர் ஏ. ம்ம்ம்ம்  அப்புறம்... அப்புறமுன்னு தடுமாறுனதைப் பார்த்து  அம்மாவும் அக்காவுமா சில பேரைச் சொன்னாங்க.  அவுங்கெல்லாம் என் வகுப்பில்லை.....  ஆனா எனக்குத் தெரிஞ்சவங்கதான்.  என்னைவிட ரெண்டுமூணு வயசு பெரியவங்கதான். நம்ம ஸ்டேஷனரிக் கடை வேலுப்பிள்ளை  வீட்டுலெயே மூணு பேர் இருக்காங்க. பெரிய கூட்டுக்குடும்பம். அவுங்க கூடத்தான் நான் மாரியம்மன் கோவிலுக்குக் கொம்புக்குத் தண்ணி ஊத்தப் போவேன், திருவிழா சமயத்துலே! 

அப்படி இப்படின்னு கடைசியிலே எட்டுப்பேரைத் தேத்திட்டோம். நம்ம முனியம்மாகூட ரெண்டு பொண்ணுகளைக் கூட்டியாந்துச்சு.  விளக்கு வச்சதும்   நாங்கெல்லாம் கைகால் கழுவிக்கிட்டு ஹால்லே வரிசையா உக்கார்ந்தோம். மணைக் கட்டை போட்டு வச்சுருந்தாங்க. எங்களுக்கு முன்னாலே ஆளுக்கொரு தாம்பாளம்.

அரைச்ச மஞ்சளை எங்க பாதத்தில் தடவிட்டுக் கொஞ்சம் தண்ணி ஊத்திக் கழுவிட்டு, தாம்பாளங்களை எடுத்துட்டாங்க. அப்புறம்  கன்னத்துக்கும் கழுத்துக்கும் சந்தனம் தடவி, நெத்தியில் குங்குமம் வச்சு, கழுத்துலே ஆளுக்கொரு முழம் கதம்பம்  போட்டுவிட்டு தீபாராதனை காமிச்சாங்க.  நாங்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டு ஹிஹின்னு சிரிச்சுக்கிட்டு இருந்தோம். 

கேஸரி, சக்கரைப்பொங்கல், சுகியமுன்னு தின்னக் கொடுத்துட்டு, ஆளுக்கொரு பாவாடை சட்டை  துணியும் தேங்காயும் பழமும்  வெத்தலைபாக்குமா கொடுத்தாங்க. எல்லாம் சின்னாளம்பட்டுதான். கட்டங்கட்டம் போட்டது. அதுக்கப்புறம் நாங்க யாருக்கு என்ன கலர் கிடைச்சதுன்னு எடுத்துப் பார்த்துக்கிட்டு விளையாடிக்கிட்டு இருந்தோம். ஒரே ஜாலிதான்.   

சின்னக்காவுக்கு ஜாதகத்தில் எதோ தோஷம் இருக்குன்னு  இந்த பூஜை செய்யச் சொல்லி  எங்க அம்மம்மா லெட்டர் போட்டுருந்தாங்களாம்.


பார்த்தீங்களா.....  குமாரியைப் பத்திச் சொல்லிக்கிட்டு இருக்கும்போதே  மனசு எங்கியோ போயிருச்சு. எங்கே விட்டேன்...... ம்ம்ம்ம்ம்....
ஆங்....   முப்பத்திரெண்டு லக்ஷணங்கள். குழந்தை பயமில்லாதவளா இருக்கணும். டெலுஜூ பவானி குடி இருக்கப்போகும் குழந்தையாச்சே! 108 ஆடு, எருமைகளை பலி கொடுத்து அந்த  வெட்டுப்பட்ட தலைகளுடன்   ஒரு இரவு தனியா வேற இருக்கணுமாம். அப்போ முகமூடி போட்டுக்கிட்டு சிலர் பயங்கர ஆக்‌ஷன் காமிச்சு  ஆடுவாங்களாம்.  எதுக்கும்  கலங்கக்கூடாது. பயந்து அழுதா,  அவ்ளோதான்.  ஃபெயில்.  அடுத்த குழந்தைக்கு ச்சான்ஸ் போயிரும்.

இவ்ளோ கவனமாத் தேர்ந்தெடுக்கப்பட்டப் பெண்குழந்தையை  குமாரியாக வச்சுக் கும்பிடறது, அவள் வயசுக்கு வர்றவரைதான்.  வயசுக்கு வந்ததும் உடலில் குடி இருக்கும்   டெலெஜு பவானியம்மன் அங்கிருந்து நீங்கிடுவாளாம்!   குமாரியா இருக்கும் காலக்கட்டத்தில்  ஏதும் ரத்தகாயமோ, உடல்நலக்குறைவோ கூட வந்துடக்கூடாது.  உடனே  குமாரி பதவியில் இருந்து நீக்கம்தான்.  புதுக் குமாரி வந்துருவாங்க.

குமாரியா இருக்கும் சமயம் கட்டுப்பாடுகள் ஏராளம்.   எப்பவும் சிகப்பு வண்ணத் துணிகளைத்தான் போட்டுக்கணும். தினமும்  முக அலங்காரம் செஞ்சு விடுவதைப் பொறுமையோடு ஏத்துக்கணும். நெத்தியில் ஒரு கண் வேறு வரைஞ்சு விடுவாங்க. வீட்டை விட்டு வெளியே போக முடியாது.  அப்படிப்போகும்போது தரையில் கால் பதிக்காமல்  பல்லக்கில் ஏறிப் போகணும். பள்ளிக்கூடத்துப் போகவே முடியாது.  வீட்டுலேயே  கல்வி சொல்லிக் கொடுப்பாங்க.

வீடு வீடுன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன் பாருங்க....  வீடா அது?  ஒரு மாளிகை போல பெரிய முற்றத்துடன் இருக்கு. வாழும் கடவுள் வாழும் வீடுன்னு ......  ( Kumari  Ghar) சொல்றாங்க.

 குமாரி வீடுன்னு  இது ஒரு தனி மாளிகை.  தன்னுடைய சொந்தப் பெற்றோர்களை விட்டுட்டு வந்து  இந்த மாளிகையில் வசிக்கணும். குமாரியின் தேவைகளைக் கவனிச்சுச் செய்ய ஏகப்பட்ட உதவியாளர்களும், மாளிகை வேலைகளுக்கு ஏகப்பட்டப் பணியாளர்களும் இருப்பாங்க. சின்னக்குழந்தை கூட விளையாட சில பிள்ளைகளை  கவனமாத் தேர்ந்தெடுத்து  அவுங்களோடு மட்டுமே விளையாடலாம்.

தினமும் கண்ணெழுதி, பொட்டு தொட்டு,  அலங்காரம் செஞ்சுக்கிட்டு  தனக்கான பூஜைகளை ஏத்துக்கணும்.  மக்களை ஆசீர்வதிக்கணும்.  சத்தம் போட்டுச் சிரிக்கக்கூடாது. பேச்சும் குறைவாகவே இருக்கணும். வணங்க வரும்  பக்தர்களிடம் பேசக்கூடாது.  முகத்தில்   எந்தவித உணர்வையும் காட்டாமல் சிலை போல இருக்கணும்.

பழைய காலத்துலே அரசரே  வந்து  குமாரியின் பாதம் தொட்டு வணங்கி ஆசி வாங்கிக்குவார். இப்போ இருக்கும்  ஜனநாயக ஆட்சியில்  பிரதமரும் மற்ற மந்திரிகள் உயர் அதிகாரிகளும் வந்து வணங்கி ஆசி வாங்கிக்கிட்டுதான் எந்த காரியமும் செய்யறாங்களாம்.

நேபாளில் மன்னராட்சியை ஒழிச்சுக் கட்டிட்டு     இப்ப மாவோயிஸ்ட் பார்டி ஆண்டுக்கிட்டு இருக்குன்னாலும்...பழைய சம்ப்ரதாயங்களில் அவுங்க கை வைக்கலை போல...   சில  சமூக சேவை செய்யறவங்க.... இது குழந்தைகளைக் கொத்தடிமை ஆக்கும் வழக்கமுன்னு  பொதுநல வழக்கு போட்டு, சுப்ரீம்கோர்ட் அதை  ஒதுக்கித் தள்ளிருச்சாம்.

இந்தப் பெண்குழந்தைகளை வாழும் கடவுளா வணங்கறது   பரத கண்டத்தில் 2300 வருசங்களுக்கு முற்பட்ட வழக்கமுன்னு சொல்றாங்க. இங்கே நேபாளில் ஆறாம் நூற்றாண்டுகளில் ஆரம்பிச்சதாம்.

 அந்தக் காலங்களிலே....  டெலெஜு பவானியம்மன்  நேரிலே வந்து அரசரோடு  சொக்கட்டான் விளையாடுவது உண்டாம். அரசர் வேறு எந்த ஜீவராசிக்கும் (தன் மனைவி உட்பட ) தெரியாம இந்த ரகசியத்தைக் காப்பாத்தணுமாம். இரவில் மனைவி தூங்கினபிறகு இவர் வேறொரு  மாளிகைக்குப்போய்   அம்மனுடன் ஆடுவாராம். (மனைவிகளைப் பற்றி இவருக்குச் சரியாத் தெரியலைன்னுதான் சொல்லணும்! )

ஒருநாள்  இரவு இவர் அங்கே போய்க்கிட்டு இருந்தப்ப..... மனைவி மெதுவாகப் பின் தொடர்ந்து வந்து,   இவரும் அம்மனும் ஆடுவதை.... சொக்கட்டான் ஆடுவதை பார்த்துடறாங்க.  அம்மனுக்கும் தெரிஞ்சு போகுது இப்படி மூணாவது நபர் தன்னைப் பார்த்துட்டாங்கன்னு. உடனே கோபத்தோடு அங்கிருந்து போயிடறாங்க.

அம்மனின் கோபத்தால்  நாட்டுக்கும் அரச குடும்பத்துக்கும் கேடு வந்துருமுன்னு பயந்து, அரசியார் சொன்ன யோசனைப்படி ஒரு குழந்தையைத் தேர்ந்தெடுத்து அம்மனா வழிபட்டால்  டெலெஜு பவானியம்மனின் கோபம் தீர்ந்துருமுன்னு  ஆரம்பிச்ச  வழக்கமாம் இது.

இன்னொரு வகைக் கதை ஒன்னும் உலவுது.  அதுலே  சொக்கட்டான்  ஆடுவதுவரை அதே கதை. ஆனால் அதுக்குப்பின் கதையில் கொஞ்சம் மஸாலா....   அரசர் தினம் தினம் பார்க்கும் அம்மனின் அழகிய உருவத்தால் மதி மயங்கி ஒருநாள் தன்னிலை மறந்து அம்மனை 'வேறு  எண்ணத்தோடு  நெருங்கும் போது ' அம்மனுக்குக் கோபம்  வந்து சபிச்சுட்டுப் போயிடறாள்.

 பல வருசங்கள்  கஷ்டப்பட்ட பிறகு  வேறொரு அரசர் காலத்துலே அவர் கனவிலே அம்மன் வந்து ஒரு சின்னப்பொண்ணை எடுத்து வழிபடச் சொன்னதாகவும்,  அந்தக் குழந்தையுடம்பிலே தானே குடியிருப்பதாகவும் சொல்றாங்க. அப்படியே  செய்யறதா அரசர் அம்மனுக்கு வாக்குக் கொடுத்துடறார். அப்போ முதல் இந்த வழிபாடு ஆரம்பிச்சதாம்.

இன்னுமொரு கதையும் இருக்கு.  ஒரு காலத்துலே இருந்த அரசர்,  ஒரு  குழந்தைப் பெண்ணோடு உறவில் ஈடுபட்டப்ப, அந்தக் குழந்தை செத்துப்போயிருக்கு.  அந்த குற்ற உணர்வு தாங்காம... இனி குழந்தைகளை சாமியா நினைக்கணும் என்ற எண்ணத்தோடு  ஒரு குழந்தையை  வழிபடப்போய் இப்படி ஒரு  ட்ரெடிஷன் உருவாகிருச்சுன்னு.... ...   அப்புறம் இதுவே வளர்ந்து  ஏகப்பட்ட நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளுமா இப்ப இருக்கு போல !

குழந்தை வளர்ந்து 'பெரியவளாகும்போது' அம்மன் அவ்வுடலை விட்டு நீங்கிருவாங்க. அதுக்கப்புறம் இன்னொரு குழந்தையை குமாரி ஆக்குவாங்க. மீண்டும் அம்மனை  அவ்வுடலில் ஆவாஹனம் செய்வாங்க போல!

நான் என்ன நினைக்கிறேன்னா....   நடப்பு குமாரிக்கு ஒரு பத்து பனிரெண்டு வயசாகும்போதே புது குமாரியைத் தேர்ந்தெடுத்து ட்ரெய்ன் பண்ணுவாங்களா இருக்கும்.  32 லக்ஷணமுன்னா தேடி எடுக்கவே சில  வருசங்கள் வேணாமா? ராஜரகசியம்! யாருக்குத் தெரியும்?

புதுக்குமாரி வந்தவுடன், இதுவரை இருந்த குமாரி கடவுள் ஸ்தானத்துல இருந்து  கீழே இறக்கப்பட்டு, சாதாரண சனத்தில் ஒன்னா ஆகிடறாங்க. அரசு ஏதோ சின்னத் தொகை ஒன்னு பென்ஷனாக் கொடுக்குதாம்.  அம்பது ரூபாய் மாசத்துக்குன்னு கேள்வி.  சரியாப் போச்சு. இதை வச்சு நாக்குதான் வழிக்கணும்.... ப்ச்.

அப்புறம்  இவுங்க பெற்றோர்களுடைய ஆதரவுலே இருக்காங்க.  எக்ஸ் குமாரியைக் கல்யாணம் கழிச்சா, மாப்பிள்ளை சீக்கிரம் மண்டையைப் போட்டுருவாருன்னு  ஒரு கதையை யாரோ  எப்பவோ கிளப்பி விட்டுருக்காங்க. அதனால் பழைய குமாரிகள் பலரும் வாழ்க்கையை   வீணாத் தொலைச்சவுங்கதான்.  இப்ப இந்த சமீப காலத்துலே குமாரிகள் கொஞ்சம் விவரம் இருக்கறவங்களாவும், இளைஞர்கள் சிலர்  முற்போக்கு எண்ணம் கொண்டவங்களாவும் இருப்பதால் கல்யாணம் காட்சின்னு நடந்து குடியும் குடித்தனமுமா இருக்காங்கதானாம். பலரும் வேற நாடுகளில் குடியேறிட்டதாக் கேள்வி.
இப்ப குமாரி வீட்டு முற்றத்தில் நின்னுக்கிட்டு இருக்கோம். பலதேசத்து மக்கள் கூடி இருக்காங்க.  சின்னச்சின்ன, பெரிய பெரிய  குழுக்கள்.  அவுங்கவுங்க  கைடுகள் எப்படி நடந்துக்கணுமுன்னு  சொல்லிக்கிட்டு இருக்காங்க. 'கண்டிப்பா குமாரியைப் படம் எடுக்கக்கூடாது'ன்னு  போர்டு போட்டுருக்கு. இப்ப இந்த இடத்தைப் படம் எடுத்துக்கலாமாம். நான் சும்மா க்ளிக்கிக்கிட்டு இருந்தேன்.
மூணாவது மாடியில் இருக்கும் மூணு ஜன்னல்களில் எதாவது ஒன்றில் குமாரியின் தரிசனம் கிடைக்குமாம்.  முற்றத்தின் நடுவில்  பெரிய மாடத்தில் துளசிச் செடி  ஒன்னு மரம்போல் வளர்ந்து நிக்குது. கூடவே இன்னும் சில செடிகளும்  பந்தல் போல  இருக்கு.  இந்தப் பந்தலுக்கு அடியில் சின்னதா, குட்டியா  ஒரு  கோவில்.  இந்தக் கட்டடமும் நிலநடுக்கத்தில்  கொஞ்சம் பாதிக்கப்பட்டுதான் இருக்கு. முற்றத்தில் நீள மரக்கட்டைகளை வச்சு மேலடுக்குகளுக்கு முட்டுக் கொடுத்துருக்காங்க.

மணி அஞ்சடிச்சது.  மேலே இருக்கும் ஜன்னலில் ஒருத்தர் வந்து தலையைக் காமிச்சார்.  கூடி இருக்கும் சனம் சட்னு பேச்சைக் குறைச்சுட்டு  சைலண்ட் ஆச்சு.  யாரும் படம் எடுக்கக்கூடாதுன்னு மூணு முறை  சொன்னார்.  நான் கேமெராவை மூடி வச்சுட்டேன்.  எல்லார் தலையும் மேலேயே பார்த்துக்கிட்டு இருக்கு :-)  இன்னும்  சாமியைக் காணோம்.
இன்னும் ஒரு நாலைஞ்சு நிமிசம் போச்சு. கண்ணாடியை நல்லாத் துடைச்சுப் போட்டுக்கிட்டு 'என்னடா இன்னும் வரக்காணமே'ன்னு  பார்த்துக்கிட்டே இருக்கேன்.  அமைதியா இருக்கும்போது அஞ்சு நிமிசம் கூட ஒரு யுகமாத் தெரியுது :-)
அங்கே ஜன்னல் பக்கம் இருக்கை  இருக்கும்போல.. ...  மெல்ல ஒரு உருவம்  வந்து  உக்கார்ந்தது.  அதோ குமாரி. சிகப்பு நெத்தியில்  நடுவில்  நெத்திக்கண்!  அப்பப் பார்த்து,  பளிச்னு ஒரு ஃப்ளாஷ், ஒரு க்ளிக் சப்தம். சட்னு குமாரி அந்த இடத்தை விட்டு எழுந்து போயிட்டாங்க.  அவ்ளோதான்  மொத்தக் கூட்டமும் க்ளிக்கின பயணிமேல் பாய்ஞ்சது. சீனப்பயணி. பெண்ணா இருந்ததால்  அடியிலிருந்து தப்பிச்சாங்கன்னு நினைக்கிறேன். அசட்டுத்தனமா முழிச்சுக்கிட்டு இருந்தாங்க அவுங்க. ஃபோட்டோ கூடாதுன்னு படிச்சுப் படிச்சுச் சொன்னது புரிஞ்சுருக்காதா என்ன?
இனி தரிசனம் கண்டிப்பாக் கிடையாதுன்னு  தகவல் வந்துருச்சு. பொதுவா  ஒரு இருவது விநாடி தரிசனம்  கொடுப்பாங்களாம். இன்றைக்கு வெறும் அஞ்சு விநாடி. எல்லோருடைய வாய்ப்பையும்  நாசம் பண்ணிட்டாங்க.... ப்ச்  :-(

வெறும் அஞ்சே விநாடி பார்த்த முகத்தை வச்சுக் குமாரியின் வயசை அனுமானிக்க முடியலை....  பத்து வயசு இருக்கலாம்....  அடுத்த குமாரியின் தேடல் நடந்துக்கிட்டு இருக்கும், இல்லே?

குமாரிகளின் ஒரிஜினல் தாய் தகப்பன்மாரும்... அவுங்க குழந்தைக் குமாரியாத் தேர்ந்தெடுக்கப்பட்டால்  அதை வாழ்க்கையின்   மிகப்பெரிய கௌரவமுன்னு  நினைக்கிறாங்க....  சாமியையே பெத்தவங்க இல்லையோ!  ஹூம்.....

சம்ப்ரதாயம், பாரம்பரியம் என்னும் பெயரில் சின்னக்குழந்தைகளின் வாழ்க்கையை வேற தடத்தில் மடை மாற்றம் பண்ணிடறாங்களோன்னு... மனசுக்குள்ளே ஒரு பாரம் வந்தது உண்மை. இதேதான் பௌத்த மடாலயங்களில் பிஞ்சுகளைப் பார்க்கும்போதும்....  மனசு கரைஞ்சுதான் போகுது....  ஐயோ என்றதைவிட வேறென்ன செய்யமுடியும் நம்மால்?

சரி வாங்க. சதுக்கம் பார்க்கலாம்....

தொடரும்............:-)


Wednesday, April 26, 2017

தங்கக்கோவில் பா...டன் தர்பாரில்! ( நேபாள் பயணப்பதிவு 34 )

லிப்ஸ்டிக் போட்ட ரெண்டு சிங்கங்கள் உக்கார்ந்துருக்கும்  வாசலுக்குக் கூட்டிப்போனார் பவன்.   'தங்கக்கோவிலுக்கு  நல்வரவு'ன்னு போட்டுருக்கு. கோல்டன் டெம்பிள்.  இது  கோவிலே  இல்லை(யாம்)  பௌத்தமடம். ஹிரண்ய வர்ண மஹாவிஹார்.   இந்த ஹிரண்ய வர்ண என்ற சமஸ்க்ரத சொல்லுக்கே தங்க நிறமுன்னுதான் அர்த்தம்.
 உள்ளே போறோம். ஒரு சின்னக் கட்டணம் உண்டு இதுக்குள் போக. ஆளுக்கு அம்பது ரூபாய். டிக்கெட் கவுன்ட்டர் ஒன்னு இருக்குன்னாலும்,    டிக்கெட் போட்டெல்லாம்  விக்கறதில்லை.  அங்கே இருக்கும்  டொனெஷன் பெட்டியில் காசைப் போட்டுட்டு உள்ளே போகலாம். கவுன்டருக்கு மேலே போட்டுருந்த படத்தைப் பார்த்ததும்தான் காலையில் நம்ம லெமன்ட்ரீ ஓனர் ப்ரகாஷிடம்  சொன்னது ஞாபகம் வந்துச்சு.
முகப்பு வளைவில் ஏழு  புத்தர்கள்!   கடந்தால் சின்னதா ஒரு முற்றம். வலப்பக்கம் ஒரு சந்நிதி.  வஜ்ரபீர் மஹாகாலா புலித்தோல் கட்டிக்கிட்டுப் புத்தருக்குக் காவல் ! குங்குமம் மாதிரி சிந்தூரம் பூசி இருக்கு. சரியா முகம் தெரியலை...
அடுத்த பாகத்தில் ஒரு மூணடுக்குக் கட்டடம். இங்கேயும் ஒரு முகப்பு வாசல். புத்தர் போல தெரியுது. ஆனால் பல கைகளுடன் பத்மாஸனம் போட்டு உக்கார்ந்துருக்கார்.  வாசலுக்கு ரெண்டு பக்கமும்  சிவனும் விஷ்ணுவும்!  த்வாரபாலகரா என்ன?
பனிரெண்டாம் நூற்றாண்டுலே கட்டிய  மடாலயம் இது. அப்போ இருந்த மன்னர் பாஸ்கர தேவ் வர்மா சாக்யமுனி புத்தரின் மேல் இருக்கும் அபிமானத்தால்  மடத்தைக் கட்டிக்கொடுத்து, சிவனையும் விஷ்ணுவையும்  புத்தரைக் காப்பாத்தச் சொல்லி வேண்டிக்கிட்டு வாசலில் சிலையா நிக்க வச்சுருக்காராம்!

ரொம்பப் பழங்கால மடாலயமா இருப்பதால்.... மற்ற மடாலயங்களில் இல்லாத வகையில் பழைய சம்ப்ரதாயங்கள் கடைப்பிடிக்கறாங்களாம்.  இந்த மடாலயத்துத் தலைவர் ஒரு  இளம் பிக்ஷுதான். வயசு பனிரெண்டுக்குள் இருக்கணும். இவருக்கு உதவியா  கொஞ்சம் பெரிய வயசில் ரெண்டு பேர் உதவணும். அப்படித்தான் ஒரு கணக்கு. ஒரு மாசம்  போனதும் இன்னொரு புதிய தலைவர் வந்துருவார்.  முக்கியமான சந்நிதிகளில் பூஜை செய்வதுதான் தலைவருடைய கடமை.  இந்த ஒரு மாசம் பூராவும் தலைவர் மடத்தை விட்டு வெளியே போக அனுமதி இல்லை.
மடாலயத்தில் நிறைய புத்த பிக்ஷுக்கள் தங்கி, அவுங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. சின்னச்சின்னதா கேட்ட  தகவல்கள்.
அடுத்த முற்றத்துக்குள் போறோம்.  வெளியே சொல்லிக்கிட்டு இருக்கும் தங்கக்கோவில் இங்கெதான் இருக்கு. முற்றத்துக்கு நட்ட நடுவிலே  பகோடா ஸ்டைலில் ஒரு மூணடுக்குக் கோவில். தங்கப்பூச்சு இருக்கு. ஆனால் பளிச்ன்னு இல்லை.  தேய்ஞ்சு போச்சோ என்னவோ?

சந்நிதிக்கு முன்னால்   மேடையில் ஒரு வஜ்ரா, சுத்திவர இருக்கும் வெண்கல விளக்குகளோடு!



மேலடுக்கில் இருந்து ஒரு ஏணி போல ஒரு டிஸைன் இறங்கி வருது. பெரிய நெத்திச்சுட்டியைத் தொங்க விட்டது போல்!  இது  ஒரு வித ஏணிதானாம். மேலோகத்தில் இருந்து  இதுவழியாத்தான் சாக்யமுனி இறங்கி வந்து இங்கே இருந்து அருள் செய்யறாருன்னு (ஸிம்பாலிக்கா) சொல்றாங்க.
சந்நிதிக் கதவு மூடி இருக்கு இப்போ. ரத்ன சைத்யா  ( Ratna Chaitya Swayambhu Stupa) உள்ளே இருக்காம். யாராவது புத்தமதத்தினர் நம்மிடையே இருந்தால் இந்த சைத்யாவுக்கு விளக்கம் சொன்னால் தேவலை.  நாம் ரெண்டு நாளைக்கு முன்னால் ஸ்வயம்பு கோவில் ஒன்னு சின்னக் குன்றின்மேல் பார்த்தமே... நிறைய குரங்குகள் இருந்தாங்க.... அந்த இடம்தான்...  அதனோடு  தொடர்பு இருக்காம்  சந்நிதி உள்ளே இருக்கும் ரத்ன சைத்யாவுக்கு.

இந்த  மடாலயம் இங்கே வர்றதுக்கு முன்னாலேயே  இது இங்கே ஆதியில் இருந்தே இருக்குன்னும் சொல்றாங்க. ப்ராச்சீந்தான் போல்!   கோவில் கட்டுனதெல்லாம்  அப்புறம் பல காலங்களுக்கு பின்னேதான்....

சந்நிதி வாசலுக்கு ரெண்டு பக்கமும் கோவிலைக் கட்டிய அரசரும் அரசியும் கை கூப்பிய நிலையில், கற்சிலையும் ,  பொற்சிலையுமாக ரெண்டு வகையில் இருக்காங்க.
இன்னும் ரெண்டு பேர்! இளவரசர்களா இருக்கலாம் !

 முற்றத்தின் சுற்றையொட்டியே  தொங்கும் மணிகளும் இன்னும் சில சந்நிதிகளுமா  சுத்திவர இருக்கு.  இடையே   பித்தளைத்தூண்கள். அதுலே நாலு மூலையிலும்  நம்ம குரங்கார் உக்கார்ந்து இருக்கார். எல்லாம் உலோகச் சிலைகள்தான். கையில் பலாப்பழம் வச்சுருக்கார் ஒருத்தர். புத்தருக்குப் படையல் போடக்  கொண்டுவந்ததாம்.




வஜ்ரா இருக்கும் மேடைக்கு எதிர்ப்புறம் இருக்கும்    சந்நிதிக்கு வெளியே ரெண்டு பக்கமும் ஆமைபீடத்தின் மேல் நிற்கும்  யானைகளும் மாவுத்தன்மாரும்!  புத்தர் சந்நிதி.

நாலு பக்கமும் நாலுவிதமான லோகேஷ்வரர்கள்.



மூடுன கம்பிக் கதவு அப்படியே இருக்க,   மூடி இருந்த சாக்யமுனி சந்நிதி சட்னு திறந்து மணியடிச்சுக்கிட்டே ஒரு பூஜை. ரெண்டு நிமிட் கூட  இருக்காது, சந்நிதி மூடிட்டாங்க. மடத்துலே என்னென்ன நியமனங்களோ?  கிடைச்ச நேரத்துலே பார்த்தப்ப....  நம்ம முக்திநாத் பெருமாளுடைய உருவம் போலவே அதே முகக்களையுடன் இருந்தார் சாக்யமுனி. (அங்கே இருந்த பெருமாளை இப்படி மாத்துனது உண்மைதான் போல!)
இங்கே அதிகாலை நேரத்தில் வந்துருந்தா... இவுங்க பூஜை சடங்குகளைப் பார்த்திருக்கக்கூடும். மூணு மணிக்கு முன்னாலே இங்கே வந்துறணுமுன்னா.....    போகட்டும்.... அதுக்கெல்லாம் தனிக் கொடுப்பினை வேணுமா இல்லையா?



சுத்திவர  ப்ரேயர் பெல் வரிசைகள். எல்லோரும்போற போக்கில் சுத்திக்கிட்டே போனால் பல கோடிகளை  புண்ணியங்களைச்  சுலபமா சம்பாரிச்சுறலாம்.....
நான் அங்கே இங்கேன்னு க்ளிக்கிக்கிட்டே நடக்கும்போது  ஒரு சின்ன வயசுப் பையன் புத்த பிக்ஷூ முற்றத்துலே  குதிச்சு இறங்குனவர், சட்னு அங்கே ஒரு ஓரத்தில் கிடந்த கயிறை எடுத்து ஸ்கிப்பிங் ஆட ஆரம்பிச்சார்.  மனமும் உடலும் ஒருசேர ஒருமுகப்பட்டு,   முகத்துலே  பூரண நிறைவுடன் .... அடடா....  பார்க்கவே  அற்புதம். இதுகூட ஒரு தியானம்தான் இல்லே?  க்ளிக்!
ஒருவேளை இவர்தான் மடாலயத்தில் இந்த மாசத்துக்கானத் தலைவரோ?


பார்த்துக்கிட்டு இருக்கும்போதே ஸீன் மாறினாப்போல அடுத்த சந்நிதியில்  புள்ளையார்!  கணேஷ் மந்திர்!

பெரிய மேடையில் பித்தளை நந்தியார்,  கட்டங்கட்ட கம்பித்தடுப்புக்குள்ளே...  எதிரில் சிவலிங்கம், இன்னும் சில சாமிகள். மும்மூர்த்திகள்,  தனியாக நின்னு சேவை சாதிக்கும் விஷ்ணு, தரையில் புதைஞ்சு கிடக்கும் நந்தி, இன்னொரு கணேஷ் இப்படிக் கலந்து கட்டி சாமி சந்நிதிகள்!

பகோடா ஸ்டைலில் கோவில் வேற இருக்கு மரவேலைப்பாடுகளோடு!


தங்கம் தங்கமுன்னு தங்க நிறம் பார்த்தே....  கண்ணுக்கு  என்னவோ ஆயிருச்சு..........   :-)  உண்மைக்கும் வெளியே சிங்க வாசலில் நுழையும்போது  இவ்ளோ பெருசா முற்றத்துக் கோவில் இருக்குமுன்னு யூகிக்க முடியாத வகையில் எல்லாமே உள்ளடங்கி இருக்குப்பா......
இன்னொரு இடத்துக்குப் போகலாமுன்னு  பவன் சொன்னதும் கிளம்பிட்டோம்.

தொடரும்.......  :-)