Wednesday, May 31, 2017

'பார்..... பாகீரதி...மெள்ள மெள்ள கங்கையாக மாறுவதைப் பார்.....'(இந்திய மண்ணில் பயணம் 11 )

நம்ம  ரகுநாத்ஜிக்கு இன்னொரு  கும்பிடு போட்டுட்டு, போயிட்டுவாறேன்னு  சொல்லி, வெளியே வந்தால்  வாசலுக்குப் பக்கம்  சரோஜ், ஒரு தட்டில் மஞ்சள் குங்குமத்தோடு   உக்காந்துருந்தாங்க. தக்ஷிணை போட்டதும் ஆசிகளை அள்ளி அள்ளி  வழங்குனாங்க.
'பஹூத் மத்ராஸி லோக் 'வர்றாங்களாம்!  எல்லோரும் ரொம்பவே நல்லவங்களாம்!  '  ஹா(ங்)மாதாஜி,   இது 108 இல் ஒன்னு. பத்ரி வர்றவங்க இங்கே வந்துட்டுத்தான் போவாங்க'ன்னு  நம்ம ரெண்டு சென்டைச் சொல்லிட்டுக் கைப்பிடிக்குப் போட்டுருக்கும்  கம்பியைப் பிடிச்சுக்கிட்டே கீழே இறங்கிப் போறோம்.

எதையும் பிடிச்சுக்காமல், முதுகுலே புள்ளையைக் கட்டிக்கிட்டு ஒரு  அம்மா வேகமாப் படிகளிலேறி வந்துக்கிட்டு இருக்காங்க!!!  ஹைய்யோ!!!

பள்ளிக்கூட சீருடை போல ஒன்னு போட்டுருக்கு அந்தப்புள்ளை. நீலக்கலர்.
கீழே தெருவில் இறங்கி  இடது பக்கமாப் போனதும் இன்னும்  படிகள்!  இதுலே இறக்கிப் போகணும் சங்கமத்தைச் சந்திக்க.  ஒரு முப்பது படிகள் போல இறங்கிப்போறோம்.  சின்னப் பசங்களில் கலகல சிரிப்பும் பேச்சும் கும்மாளமுமா காதில் விழுது. என்ன நடக்குது இங்கேன்னு  பார்த்தால் பள்ளிக்கூடம்!   !
சின்னக்குழந்தைகள் புத்தக மூட்டையோடு படியேறி வர்றாங்க. கூடவே சில அம்மாக்களும். என்ன இது மணி பதினொன்னரைதானே  ஆச்சுன்னா....   பாலர் பள்ளி  முடிஞ்சுருச்சாம்.

ஆஹா....   கொஞ்ச நேரத்துக்கு முன்னால் நீலக்கலர் யூனிஃபார்ம் போட்டுக்கிட்டு, அம்மா  தன் முதுகில்   கட்டித் தூக்கிப்போன குழந்தை இந்தப்பள்ளிக்கூடத்தில்தான் படிக்குது! தினமும் இப்படிக் கூட்டி வந்து திரும்பக் கூட்டிப்போவதை  நினைச்சால்... ஹைய்யோ...    புள்ளைங்க படிச்சு நல்லா வரணுமுன்னு நினைக்குற தாய்மார்களால் உலகமே இயங்குது!
ஓம்காரானந்தா பப்ளிக் ஸ்கூல். இங்லீஷ் மீடியம்!  நர்ஸரி வகுப்பு முதல் எட்டாப்பு வரை இருக்காம்!   கங்கையைப் பார்த்துக்கிட்டே நிக்கும் மூணு மாடிக் கட்டடம்.
என்ன லொகேஷன் பாருங்க!    பாகீரதியும், அலக்நந்தாவும்  சரஸ்வதியும் சேரு புண்ணிய சங்கமம்!  கொடுத்து வச்ச புள்ளைகளும் , ஆசிரியர்களும்!

பள்ளிக்கூடத்துக்கு முன்னால் பெரிய பரந்த முற்றம். மொட்டை மாடியாட்டம். அதையும் கடந்து நாம் போய் இன்னும் அஞ்சாறு வரிசைப் படிகள் இறங்குனா  இன்னொரு பால்கனி போல ஒரு இடம். நல்லவேளையா எல்லா மொட்டைமாடிப் பகுதிகளிலும் நல்ல கம்பித்தடுப்பு போட்டு வச்சுருக்காங்க.  சின்னப்பிள்ளைகள் விளையாடும் இடமில்லையோ?
கங்கை போற வேகத்துலே பெரியவங்களையும் இழுத்துக்கிட்டுத்தான் போவாள் !
இங்கே நின்னு  பாகீரதியும் அலக்நந்தாவும் கங்கையா மாறுவதைப் பார்க்கப் பார்க்கப் பரவசம்தான்.  'பார்.....   பாகீரதி...மெள்ள மெள்ள  கங்கையாக மாறுவதைப் பார்.....   என்ன இனிமையான காட்சி பார்.....' 
ரெண்டு மூணு பால்கனிகள்!  அங்கிருந்தும் படிகள் கீழே இறங்குது. போனால் கடைசியில் கங்கையில்  குளிக்கலாம்.  குறைஞ்சபட்சம் கால் நனைக்கலாம். அதெல்லாம் எனக்கில்லை சொக்கான்னு நின்ன இடத்துலேயே  கங்கையை மனசாரக் கும்பிட்டேன். அனுபவிச்சேன். க்ளிக்ஸும் ஆச்சு.

மலையில் ஏறிப்போகும் போது  முதலில் வரும் ப்ரயாகை  இதுதான். தேவ்ப்ரயாக். பஞ்சப் ப்ரயாகில் ஒன்னு!  தேவர்களே  வந்து யாகம் செஞ்ச புண்ணிய நதிகளின் சங்கமம்!!

திரும்ப வர மனசில்லாமல்தான் போச்சு.  படு சுத்தமான கங்கை!  யாரோ ஒருவர்,  பண்டிட் உதவியுடன்  தர்ப்பணம் கொடுத்துக்கிட்டு இருந்தார். கொஞ்சநேரம்  உக்கார்ந்துட்டுத்தான் வந்தேன்.  கண்ணில் கண்ட புண்ணியம்தான்.  கோவில் கோவில்னு  ஆசை ஆசையாப்போனாலும்....  புனித நீராடல் என்பதெல்லாம்  கிடையாது.
திரும்பி வரும் சமயம், பள்ளிக்கூட வாசலுக்குப் பக்கம் இருந்த ஒரு டீச்சரைப் பார்த்துப் பேசிட்டு வந்தேன். 2003 ஆம் வருசம் ஆரம்பிச்ச பள்ளிக்கூடமாம். இப்ப 130 பிள்ளைகள்  இருக்காங்க. பத்து ஆசிரியர்களாம்!  ஆஹா....   இப்படித்தான் குறைஞ்ச எண்ணிக்கையில் ஒரு ஆசிரியருக்கு  மாணவர்கள் இருக்கணும். அப்பத்தான் தனிப்பட்ட முறையில் கவனம் எடுத்துச் சொல்லித்தரமுடியும்!   எனக்குள்ளே இருக்கும் டீச்சர்  முழிச்சுக்கிட்டாள். ஆ....னு கவனமாக் கேட்டுப் பாராட்டிட்டு வந்தாள்!

இந்தப்பக்கங்களில் கோவில் திறந்துருக்கும் நேரம்  கோடை காலத்துக்கும் குளிர் காலத்துக்கும்  கொஞ்சம்  மாறி இருக்கறதைப்போல்   இந்தப் பள்ளிக்கூடமும் கோடைகாலத்தில்  காலை 7.30 முதல் பகல் 1.30 வரையும் குளிர்காலத்தில்  காலை 9 முதல் பகல் 3 மணி வரையிலும்  இருக்காம்.
அக்கம்பக்கத்து கிராமங்களில் இருந்து பிள்ளைகள் நடந்து வர்றாங்களாம். இதுலே  கிராமம் ரொம்பவே தூரமா இருக்குன்னு  ஒரு 25 பிள்ளைகள் தேவ்ப்ரயாகில் தங்கி இருக்காங்களாம்.  வெள்ளிக்கிழமை பள்ளி முடிஞ்சதும் வீட்டுக்குப் போயிட்டு திங்கள் காலை பள்ளிக்கூடத்துக்கு வந்துருவாங்களாம்!

ரொம்பக் கேள்விகள் கேட்டுக்கலை நான்:-)  நம்மவர் வேற  வெளியே நின்னுக்கிட்டு கங்கையைப் பார்த்துக்கிட்டு இருக்கார். காலில் பொறுமையின்மை தெரியுது!

திரும்பப் படியேறி தெருப்பகுதியில் இருந்தே  அண்ணாந்து பார்த்து  ரகுநாத்ஜிக்கு  ஒரு கும்பிடு போட்டு, போயிட்டு வரேன்னு  சொல்லி நடக்கும்போது நெருக்கமான கடைவரிசையில் ஒரு ஸலூன்  கண்ணில் பட்டது.  லேடீஜ் & ஜென்ட்ஸ்  ஸ்பெஷலிஸ்ட்!
நம்மவர், டாய்லெட்ரி பையை பேக் செய்யும்போது,  மீசை ட்ரிம் செய்யும் சின்னக் கத்திரியை, செக்கின் பையில் போடத் தனியா எடுத்து வச்சவர் அதை மறந்துட்டாராம். இந்தப் பத்துநாளா மீசையை  வளர்த்துக்கிட்டு  'யாரோ' மாதிரி எனக்குத் தெரிஞ்சுக்கிட்டு இருந்தார் :-)
ஒரு கத்திரி வாங்கிக்க நேரமில்லாமப் போச்சுன்னு   ... 'ஸலூனில்  ட்ரிம் பண்ணிக்குங்க'ன்னதுக்கு  உள்ளே நுழைஞ்சார்.  ஸலூன்காரர்  ஒரே நிமிட்டில் வேலையை  முடிச்சுட்டார்.  காசு தரும்போது வேணாங்கறார்!

பாவம். மொஹம்மது அனீஸ்,  நல்ல மனுஷர். அதெல்லாம் இல்லைன்னு  பத்து ரூபாயை அவர் கையில் திணிச்சுட்டு  வந்தார் நம்மவர்.
கங்கையைக் கடந்து போகும் பாலத்துக்கு வந்துருந்தோம். பாலத்துக்கு ரெண்டு பக்கமும் பக்காவா கருங்கல்  வச்சு நுழைவு வாசல் கட்டி இருக்காங்க. அதுலே  கங்கையைப் போற்றியும் எழுதி இருந்துச்சு.  'கங்கை நதி  தாய்  இல்லை. ஆனாலும்  நிறைய புள்ளைகள்  இருக்கு'

பாலம் கடந்து அந்தாண்டை போய்  லேசான மேட்டுப்பகுதியில் ஏறிப்போனால்தான் மெயின் ரோடு வரும். போறவழியில் நகைக் கடை ஒன்னு! எட்டிப் பார்த்தேன். கடைக்காரர் கமல் லாலா,  கல்கத்தாக்காரர்.  இங்கே  வந்து இவர் ரெண்டாம் தலைமுறை!
மூக்குலே போட்டுக்கும் ' நத்து' ஒன்னு சூப்பர். கனம் கிடையாதாம். ஆனா இடது பக்கம் மூக்குக் குத்தியிருந்தாத்தான் போட்டுக்க முடியும்.  அடடான்னு  இருந்துச்சு. இப்ப இதை எழுதும்போதுதான் தோணுது.... மகளுக்கு ஒன்னு வாங்கியாந்துருக்கலாம்.... ப்ச்....
சாலைக்கு வந்து  முகேஷைத் தேடினால்   ட்ரைவர்கள் கூட்டத்தில்  ஐக்கியமாகி இருந்தார்:-) எப்படியும்  வேகமாப் போயிட்டு வந்தாலும் கூட ஒன்னரை மணிக்கூர் ஆகிருதே பக்தர்களுக்கு!  இறக்கி அனுப்பிட்டு இங்கே பழைய நண்பர்களுடன்  ஜாலிதான்!
இதே சாலையில் கொஞ்ச தூரத்தில் ஒரு  ரெஸ்ட்டாரண்ட்(!) இருக்குன்னு அங்கே போனோம். எல்லாம் ஒரு அவசரத்தேவைக்காகத்தான். கழிப்பறை சுத்தமா இருக்கு!  மேட்டுப்பகுதியில்  ஓரமாக் கட்டுன நீள பில்டிங். பயணிகள் தங்கும் வசதியும் இருக்காம், ஒரு ஏழெட்டு அறைகளோடு.
 நம்மவரும் முகேஷும் சாய் குடிச்சாங்க.   சின்னதா ஒரு நீள வெராண்டா  கங்கையைப் பார்த்தமாதிரி. அதோ அங்கே தெரியுது  ரகுநாத்ஜி மந்திர்!


தொடரும்......... :-)



16 comments:

said...

கங்கை நதி தீரத்தில் பள்ளிக்கூடம் - கொடுத்து வைத்த பிள்ளைகள். ஆனால் இப்போது அருமை தெரியாது! பின்னர் நினைப்பார்கள்.

said...

இந்தியில் எழுதப்பட்ட சொற்றொடரை 'கங்கை நதி தாய் இல்லை. ஆனாலும் நிறைய புள்ளைகள் இருக்கு'என்று அழகு தமிழில் தந்த விதம் அருமை.

said...

ஓம்காரனந்தா ஸ்கூல் - கங்கைக் கரையில். பார்க்கவே பரவசமாயிருக்கு. அவ்வளவு தூரம் போனீங்க. தூய கங்கைல காலாவது நனைச்சீங்களா?

படங்களும், பாகீரதி, அலக்னந்தா சேர்ந்த கங்கையும் அருமை. நிச்சயம் போய்த் தரிசிக்கவேண்டும் (படியெல்லாம் பார்த்தா, உடம்பு ஆரோக்கியமா ஃபிட் ஆக இருக்கறச்சேயே போகவேண்டும்). தொடர்கிறேன்.

said...

நாங்கள் போனதை நினைத்துக் கொண்டோம்.
பள்ளி, சலூன், நகைகடை ஆகிய இடங்க்களில் பேட்டி அருமை.

said...

மிகவும் அருமை. நன்றி.

said...

அந்த ஊருக்கும் ஒரு பள்ளிக்கூடம். அங்கயும் பிள்ளைகள் படியேறிப் போய் படிக்கிறாங்க. வெளியூரில் இருந்து வந்து தங்கியும் படிக்கிறாங்க. அதிலும் பிள்ளையை முதுகில் சுமந்து கொண்டு வந்து மீண்டும் அழைத்துப் போகும் தாயின் அன்பு. வாழ்க. வாழ்க. தாயிற் சிறந்த கோயிலும் இல்லைன்னு நம்மாட்கள் சும்மாவா சொன்னாங்க.

தண்ணியோடும் ஆத்தைப் பாத்தாப்புல வீடு இருந்தா நல்லாத்தான் இருக்கும். கொடுத்து வைக்கனுமே.

அட... காசு வேண்டாம்னு சொன்ன முகமது அனீசைப் பாராட்டுவோம். ஆனாலும் விடாம காசு கொடுத்த கோபால் சாரையும் பாராட்டுவோம்.

மூக்குத்தி அச்சு அசல் பெங்காலி ஸ்டைல். என்ன விலையா இருக்கும்? தங்க முலாம் பூசிய வெள்ளியா?

said...

செப்டம்பர் 2016-ல் போய் வந்த செய்திகளை நேற்று நடந்தது போல் எழுதுகிறீர்கள் பாராட்டுகள் ரெண்டு செண்ட் போட்டதுதான் நெருடுது அவருக்கு உபயோகமாகாதே

said...

வாங்க ஸ்ரீராம்.

பின்னாளில் ஃபேஸ்புக் இல்லே வேறெதாவது ஒன்னு அப்போ வந்துருமே அதுலே எழுதும்போது கங்கைக் கரைப் பள்ளிக்கூடம்னு கொசுவத்தி ஏத்துவாங்க :-)

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ரசித்தமைக்கு நன்றி.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

உண்மைதான். ஆரோக்கியமான உடல் என்றால் இன்னும்நாலு இடம் சுத்திப் பார்க்கமுடியும். நடையைக் கண்டு மலைக்கத் தேவை இல்லை.

என்ன செய்யறது? இப்பத்தானே 'அவன்' வரச் சொல்லி இருக்கான். கொஞ்சம் முன்னேயே கூட்டுருக்கக்கூடாது?

said...

வாங்க கோமதி அரசு.

எளிய மனிதர்களுடன் பேசுவதே ஒரு நல்ல அனுபவம், இல்லையா?

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி.

said...

வாங்க ஜிரா.

மூக்குத்தி கனமே இல்லை(யாம்) வெள்ளி போட்டா மூக்குலே சிலசமயம் புண் வந்துரும். இது அசல் தங்கம். விலை கேக்கலை. :-(

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

பாராட்டுகளுக்கு நன்றி.

ரெண்டு சென்ட் ஒர்த் என் பேச்சுதான். காசு இல்லை :-)

said...

உங்கள் பயணக் கட்டுரை மிகவும் அருமையாகவுள்ளது. உங்கள் கண்பார்த்ததை நாங்களும் பார்க்ககூடியவாறு படங்களோடு வெளிப்படுத்தியுள்ளீர்கள். நன்றி.

said...

தேவ ப்ரயாக் - கங்கை அருகே பள்ளி! கொடுத்து வைத்த குழந்தைகள்....

தொடர்கிறேன்.