Wednesday, May 10, 2017

கங்கா ஆரத்தி....(இந்திய மண்ணில் பயணம் 2 )

  கங்கைக் கரையில்  புதுசு புதுசா நிறைய மாற்றங்கள் வந்துருக்குன்னாலும் மனசில் இருக்கும் 'அந்த முக்கிய இடம்' மட்டும் மாறலையோ? இல்லே மாறி இருந்தாலும் கண்ணுக்குப் புலப்படலையோ.....   சரியா அந்த இடத்துக்குப்போய் நின்னதும் புள்ளைங்களை நினைச்சுக் கொஞ்சம் அழுதேன்தான்....  'அவுங்களுக்கு நல்லபடி  சொர்கம் கிடைச்சுருக்கு. எதுக்கு வீணா மனசைப்போட்டுக் கஷ்டப்படுத்திக்கறே'ன்னு  சொல்லும் நம்மவர் குரலில்  ஒரு தொண்டை அடைப்பு.  ஆண்கள் அழக்கூடாதுன்னு நாம் ஒரு விதி வச்சுருக்கோம்,  இல்லை?

இந்த ஆறேழு  வருசங்களின் மாற்றங்கள்.....   இப்ப இங்கே கங்கைக்கு ஆரத்தி எடுக்கறாங்க. பக்கத்து ஊரான ஹரித்வார் போல, ஆனால் காசி ஸ்டைல்.  எங்களுக்கும்  ஆரத்தி  பார்க்கப்போறது இங்கே  முதல்முறைதான்.  முந்தியெல்லாம்  இங்கே இருக்கும் ஏகப்பட்ட  ஆஸ்ரமங்களில்  அங்கங்கே தனிப்பட்டமுறையில் நடந்துக்கிட்டு இருந்துச்சு. ஹரித்வாரில் மட்டும்  பெரிய அளவில்  எல்லாருக்கும் பொதுவா நடக்கும்.
போனமுறை பார்த்து எழுதுனது இங்கே:-)  அப்பப் பார்க்காதவங்களுக்காக இப்ப ஒரு பனீஷ்மென்ட் :-)  அடி ஆத்'தீ'   இது ஆரத்'தீ' 

 திறந்த ஒரு மண்டபத்தின் மேல்  போனமுறை பார்த்த  கீதோபதேசம் சிலை இப்பவும் இருக்குன்னாலும்,  மண்டபத்தைக் கம்பிதடுப்பால்  மூடிட்டாங்க. க்ரில் மறைப்புதான். இங்கிருந்து அகலமாவும் நீளமாவும்  கட்டி இருக்கும் படிக்கட்டுகளின் வரிசையில் இறங்கிப்போனால் கங்கை ஓரம் முடிவடையும் இடத்தில் அகலமான  பெரிய கற்கள் பாவிய தரை.



இங்கேதான் ஆரத்திக்கு தயாராக சின்ன மேடையும்,  விளக்கு, மணி, அடுக்கு தீபம், பூஜைத்தட்டு, பூக்கள் இப்படி  ஒவ்வொரு மேடைக்கும் தனித்தனியா வச்சுருக்காங்க.  மொத்தம் பதினைஞ்சு  மேடைகளோ?

இன்னொரு பக்கம்  மண்டபத்துக்கு முன்னால் மேடை ஒன்னு போட்டு  அங்கே  மைக்செட்டுகள் வச்சு இசைக்கான ஏற்பாடு. மண்டபத்துக்குள் இருக்கும்  ஆரத்தி ஸபா அலுவலகத்தில் (!)நாம்  டொனேஷன் கொடுக்கறதா இருந்தால் கொடுத்துட்டு ரஸீது வாங்கிக்கலாம்.  ஆரத்தியை ஸ்பான்ஸார் செய்ய விருப்பமுன்னா அதுக்கும் பணம் கட்டிடலாம். சரியா ஆறரைக்கு  ஆரம்பிப்பாங்களாம்.
இப்பதான்  அந்த  நீளப்  படிகட்டுகளில் ஒன்னுவிட்டு ஒன்னுன்னு தரை விரிப்புகள் போட்டுக்கிட்டு இருக்காங்க.  இந்த பூஜை ஏரியாவில்செருப்புக் காலோடு வரவேணாமுன்னு  விண்ணப்பம், தகவல் பலகையில்.  செருப்பு விட ஒரு இடமும் இருக்கு. டோக்கன் சிஸ்டமெல்லாம் இல்லை. கங்கை மேல் பாரத்தைப் போட்டுட்டு அப்படியே விட்டுட்டுப் போகலாம். அப்படியே தொலைஞ்சு போனால்தான் என்ன? நம்ம பீடை போச்சுன்னு  நினைச்சுக்கலாம். செருப்பு காணாமப்போனால் நல்லதாமே!
இன்னும் நேரம் இருக்கேன்னு  ச்சும்மா சுத்திக்கிட்டு இருந்தோம். க்ளிக்ஸுக்கு குறைவே இல்லை. போனமுறை பார்த்தவை எல்லாம் இருக்கான்னு செக்பண்ண வேணுமா இல்லையா? :-)
கங்கை  இந்த இடத்தில் வேகமாவும் ஆழமாவும் பாய்ஞ்சுக்கிட்டு இருக்காள்.  இரும்புச்சங்கிலியைப் பிடிச்சுக்கிட்டு இளைஞர்கள்  கங்கையில் முங்கி எழுந்தாங்க. இதுலே ஒருவர் உக்கார்ந்த இடத்துலேயே  தலையை மட்டும் மெள்ள தண்ணிக்குள் இறக்கினார் :-)  மத்யப்ரதேஷ் மக்களாம்.
இன்னொரு இளைஞர் மஹாராஷ்ட்ராவிலிருந்து இங்கே படிக்க வந்துருக்காராம். ஒரு வருச பாலிடெக்னிக் படிப்பு.  சும்மாச் சுத்திக்கிட்டு இருக்காரேன்னு அவருக்கொரு வேலை கொடுத்தோம்.  நம்ம செல்லில் கொஞ்சம் க்ளிக்ஸ். பிடிச்ச வேலைதான் இல்லையோ!



 கீழே விழுந்ததில் இருந்து கெமரா கொஞ்சம் தொல்லை கொடுக்குது. லென்ஸ் கவர் முழுசுமா திறக்கறதில்லை. அப்பப்ப விரலால் தள்ளி விடவேண்டி இருக்கு :-(

கங்கைக்குப் பூஜை செஞ்சு விளக்கேத்தி மிதக்கவிட, இலையில் செஞ்ச சின்னசின்ன பூக்கூடைகள்.  கங்கை தீர்த்தம் கொண்டு போக ப்ளாஸ்டிக் கேன் வகைகள். இதெல்லாமும் கூடப் புதுசா இருக்கேன்னு யோசிக்கும்போதுதான், போனமுறை நல்ல மட்டமத்யானத்துலே வந்துட்டுப்போனோமெ... அதுவும்  ரிஷிகேஷில் வெறும் அரைநாள்தான் இருந்தோம்...   சாயங்காலமா வந்துருந்தா இதெல்லாமும் கூட இருந்துருக்கும்  இல்லையோன்னு.... தோணுச்சு.

இப்ப இந்தப்பதிவை வெளியிடுமுன் பழைய படங்களை எடுத்துப் பார்த்தால்  அப்போ இந்த நீளப்படிக்கட்டுகளே இல்லை....   !  கடந்த சில வருஷங்களில்தான்  இங்கேயும் கங்கா ஆரத்தி ஆரம்பிச்சு இருக்கு!
கங்கைக் கரையில் மட்டும் நேரம் போக்குதல்  பிரச்சனையெ இல்லை.  மணிகள் எல்லாம் நிமிசமாப் போயிரும்.  மாலையில் மறையத் தயாராகும் அந்தி சூரியன்,  இந்திய ஒருமைப்பாடை விளக்கும் பலதர 'தேசத்து' மக்கள்..... சின்னச்சின்ன பொருட்களை, விளையாட்டுச் சாமான்களை விற்கும் சிறு வணிகர்,  அவர்களின் பிள்ளைகள்னு எப்பவும் கலகலன்னு இருக்கு.
த்ரிவேணி காட்னு இந்த இடத்துக்குப் பெயர்.  அமாவாசை தினங்களில் தர்ப்பணம் கொடுக்க ஏராளமான மக்கள் கூடுவாங்க. இங்கிருக்கும் சிவன் பார்வதி,  நின்றிருக்க,   ஆகாயத்தில் இருந்து (  கங்கையின் வேகம் நம்மால் உணரமுடியும் வகையில்)  இறங்கி வரும் கங்கை சிலை ரொம்பவே அழகு!  போனமுறை இருந்ததுதான். இப்பப் புதுசா வண்ணம் பூசி இருக்காங்க.

நீரூற்று போல ஒரு அமைப்பில் (ஃபௌன்டன்) உச்சியில் கங்கா, முதலை வாகனத்தில்  உக்கார்ந்துருக்காள்.  நீரூற்றில் தண்ணீர் பொழிஞ்சால் நல்லா இருக்கும். ஆனால்.... இல்லை  :-(
இன்னொரு பக்கம் ஷாமியானாப் பந்தல் போட்டு உள்ளே உபந்நியாஸம் நடக்குது. ராமகதை.   எங்கே திரும்பினாலும் ஒரு பக்திப் பரவசம்தான்!
அங்கிருந்து பார்த்தப்ப, இங்கே ரெட் அன்ட் ஒயிட் யூனிஃபாரமோடு  பூஜை செய்ய பண்டிட்டுகள் வந்து  சேர்ந்துட்டாங்கன்னு தெரிஞ்சதும்  போய்  இடம் பிடிக்கலாமுன்னு வந்து படிகளில் உக்கார்ந்தோம்.

தமிழ்க்குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தால் இன்னொரு  குடும்பம். தின்னேலிக்காரவுங்க.  அம்மாவுக்கு நடக்கறது இப்போ கஷ்டம் என்றாலும் வற்புறுத்திக் கூட்டி வந்தாங்களாம். அம்மா என் பக்கத்துலே உக்கார்ந்து  என்னோடு பேசிக்கிட்டு இருந்தாங்க.  நேத்து அங்கே ஹரித்வாரில் ஆரத்தி பார்த்தாங்களாம்.  இங்கே ஆரத்திக்கு ஸ்பான்ஸார் செஞ்சுருக்கோமுன்னும் சொன்னாங்க. கொஞ்சம் க்ளிக்ஸ் ஆச்சு :-)
இந்தப் பக்கமிருந்து லேசா பூத்தூறல் போல மேலே விழுந்ததேன்னு திரும்பிப் பார்த்தால்...கங்காவின் நீரூற்றுலே  தண்ணீர்!  அழகுதான்.
இசைக்குழு ஸ்ருதி சேர்த்துக்கிட்டு இருக்காங்க. கொஞ்சம்கொஞ்சமாக் கூட்டம் சேர்ந்தே போச்சு. ஆறரைக்கு சங்கு முழங்க  கங்கை பூஜை ஆரம்பிச்சது. சின்னச்சின்ன வீடியோ க்ளிப்பா நாங்க ரெண்டுபேரும் தனித்தனியா அப்பப்ப எடுத்துக்கிட்டே இருக்கோம்.



நீண்டு போன ஆரத்தியில் எல்லோரும் எழுந்து நின்னு  பூஜை பார்த்துக்கிட்டு இருக்கும்போது ஒரு சமயம்,   சின்ன விளக்கை ஏத்தி பார்வையாளர்கள் பக்கம் கொண்டு வந்து நீட்டுனாங்க.  ஸ்பான்ஸார் செஞ்சவங்களுக்கும், கங்கைக்கு தீபம் காட்ட ஒரு ச்சான்ஸ்.  அப்படியே விளக்குகள் கைமாறிக்கிட்டே போகுது.  சட்னு பார்த்தால் என் கையில் யாரோ விளக்கைக் கொடுத்துட்டாங்க. எதிர்பாராமக் கிடைச்சால் மனசுக்கு மகிழ்ச்சியாத்தானே இருக்கு!
ஏழுமணிதான் ஆகுது . ஆனால் மை இருட்டு!  முகேஷ் நம்மைத் தேடிக்கிட்டு இங்கேயே வந்துட்டார், இருட்டில் நாம் வண்டியத் தேடி  அலையப்போறோமுன்னு....

நாங்களும் கிளம்பி ஹொட்டேலுக்கு வந்துட்டோம்.   முகேஷை நாளைக் காலை எட்டரைக்கு  வரச்சொன்னோம். உள்ளூர் சுத்தல்தான். அப்படியே....

அறைக்குப்போனதும் இடதுபக்க ஜன்னலில் பார்த்தால் ஆரத்தி எடுத்த இடம்  விளக்கொளியில் தெரிஞ்சது. கங்கை லேசா வளைந்து திரும்பும் ஒரு கோணத்தில்......    யாரும் இல்லை....  காலி இடம்தான்....

தொடரும்.....:-)


16 comments:

said...

வந்தேன், பார்த்தேன்,படித்தேன், ரசித்தேன்.

said...

அருமை நன்றி தொடர்கிறேன்.

said...

கங்கை ஆரத்தி பார்த்தேன். எல்லாம் இறைவன் அருள்.. உங்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு.

பூக்கள் எல்லாம் கங்கையில் விடுவது அதை மாசுபடுத்தாதா?


"செருப்பு காணாமப்போனால் நல்லதாமே!" - ஆமாம் டீச்சர்.. செருப்பு கடைக்காரருக்கு. கெட்டது புது செருப்பு ஸ்பான்ஸர் பண்ணுபவருக்கு.

கேமரா எப்போ புதுசு வாங்கினீங்க? புதுவருஷத்திலயா?

அந்த இடத்துல கங்கைல பிரச்சனை இல்லாமல், கம்பியைப் பிடித்துக்கொண்டு குளிக்கமுடிகிறதா? (சுழல் இல்லாமல்? மட்டப்பள்ளியில் அதிகாலையில் கிருஷ்ணாவில் குளித்தோம். மதியம் அந்த இடத்தில் பெரிய போர்டு இருந்தது. அதில், இங்கு முதலைகள் வரும் இடம். குளிக்கும்போது ஜாக்கிரதை' என்று போட்டிருந்தது. காலைல பார்த்திருந்தோம்னா நிம்மதியா குளிச்சிருக்கமுடியாது'

said...

கங்கை எனும் மங்கைக்கு ஆரத்தி. தண்ணீரைக் கொண்டாட வேண்டும். நீர்நிலைகளைப் பராமரிக்க வேண்டும்.

கங்கை இறங்கி வரும் சிலை அழகு. சிவனாரின் சாடமுடி காற்றில் விரிந்து திரிந்து அலைவதும் அழகு.

எல்லாரிடமும் பண்பாகப் பழகும் உங்கள் இயல்பு அழகு. மத்தியப்பிரதேசம் மகாராஷ்டிரம் தமிழ்நாடுன்னு எல்லார்கிட்டயும் பேசியிருக்கீங்க.

கங்கை ஆத்துல முதலைகள் உண்டா? சந்தேகமாயிருந்தது. தேடிப்பாத்தா கங்கையிலும் சிலவகையான முதலைகள் இருக்காம். அப்போ கங்கைக்கு முதலை வாகனம் பொருத்தம் தான். என்ன... வடக்கத்திக்காரங்க மகர் மச்னு பேர் வெச்சு முதலையைப் போய் மீன் வகைல சேத்துட்டாங்க.

உங்க கைக்கும் விளக்கு வந்தது ஆண்டவன் அருள் தான். சில நேரங்கள்ள அப்படித்தான்.

said...

நல்ல படங்கள். நல்ல பதிவு. கங்கைக்கரையில் இவ்வளவு சுத்தமா? நான் பார்த்து இருபத்தைந்து வருடங்கள் ஆகிறது...

இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)

said...

கங்கை ஆரத்தி - பல இடங்களில் Commercial மயம்!

படங்கள் ரசித்தேன்.

said...

தங்கள் இருவரின் புண்ணியத்தில்
நேரடியாகத் தரிசிப்பதைப் போல
அற்புதமான புகைப்படங்களுடன்
கங்காதேவியைத் தரிசித்தோம்

வாழ்த்துக்களுடன்...

said...

வாங்க ஸ்ரீராம்..

அனைத்தும் 'தேன்' :-)

நன்றி.

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

பூக்கள், இலைகள் எல்லாம் காற்றிலும் கூடப் பறந்து வந்து விழும் சமாச்சாரம்தானே?

கங்கையின் பேருருவத்துக்கு இதெல்லாம் ஜுஜுபி இல்லையோ?

கேமெரா புதுசு இன்னும் வாங்கலை. ஏற்கெனவே இன்னொரு கேமெராவும் கொண்டு போயிருந்தேன். அதில்தான் படங்கள் எடுத்துக்கிட்டு வர்றேன். என்ன ஒன்னு இந்த கேனன் கேமெராவில் தேதி போட்டுக்க முடியாது..... ப்ச்...

இன்னொரு ஸோனியில் தேதி வரும். அதுதான் கீழே விழுந்து.... கொஞ்சம் வேலையைக் காமிக்குதே....

முதலை எல்லாம் கரை ஓரம் வரை வராதுன்னு நினைக்கிறேன். நதிகளில் பாம்பு வசிக்குமாம்! புராணங்களில் வாசிச்சது. கார்க்கோடகன், காளிங்கன் எல்லாம் ஞாபகம் இருக்கோ? :-)

said...

வாங்க ஜிரா.

கங்கையில் முதலை உண்டு. மக்கள் அதிகம் புழங்காத பகுதிகளில் ஆழத்தில் இருக்கலாம்.

சிலசமயம் இப்படித்தான் எதிர்பாராமல் இருக்கும்போது எதேதோ கொடுத்துடறான்!

போன ஜன்மத்தில் கொஞ்சூண்டு புண்ணியம் பண்ணி இருக்கலாம், போல!

said...

வாங்க இராய செல்லப்பா.

ரிஷிகேஷில் இருந்து மேலே போகப்போக கங்கை படுசுத்தமாப் பளிங்கு போல இருக்கு!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

உண்மைதான். இப்படி ஷோவாக் காமிச்சால்தானே சனமும் கூடுது. குறைஞ்சபட்சம் அந்தப் பகுதியாவது சுத்தமா இருக்கே, இந்த ஆர்த்தியால்!

பாராட்டத்தான் வேணும்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ரமணி.

ரசிப்புக்கு நன்றி.

மீண்டும் வருக!

said...

கங்கை ஆரத்தி ஆஹா அழகு...

said...

வாங்க அனுராதா.

நன்றி.