Wednesday, June 21, 2017

ஜெய் பத்ரி விஷால்....... (இந்திய மண்ணில் பயணம் 20)

அடுத்த பனிரெண்டு கிமீ பயணம் கொஞ்சம் ஆபத்தான பாதையில்தான். ஒரு பக்கம் மலை, அடுத்த பக்கம் பாதாளம். சாலையில் பாதுகாப்புக்கான கட்டைச்சுவர்கள் இல்லை.
கீழே அலக்நந்தா அவ பாட்டுக்கு ஓடிக்கிட்டு இருக்காள்.
ஃபைபர் ஆப்டிக் கேபிள் போடும் வேலை நடந்துக்கிட்டு இருக்கு. போட்டு முடிச்சுட்டால்  இணையத்துக்கு வேகம் வந்துரும்.
மலையில் இருந்து இறங்கிவரும் சின்னச்சின்ன நீர்வீழ்ச்சிகள் அங்கங்கே!         சனம்  அங்கங்கே  குளிக்குது.  ஆத்தை அசிங்கப்படுத்தாமல் இருக்கணுமே  பெருமாளே.....

உயரம் அதிகமாறதை உணர முடியுது.   சில இடங்களில் மட்டும்  மலைச்சரிவு பாதுகாப்பா அங்கங்கே ரீடெய்ன் வால் கட்டியிருக்காங்க.  இந்த பதினொரு கிமீ தூரம் வர்றதுக்கே 43 நிமிசம் எடுத்துருக்கு.  இதோ பத்ரிநாத் வந்தே வந்துட்டோம். ஊருக்கு முன்னாலேயே நாம் தங்கும் ஹொட்டேல் 'ஸரோவர் போர்ட்டிக்கோ' வந்துருது.

வண்டி விட்டு இறங்குனதும் இந்தாண்டை நீல்கந்தா மலைச்சிகரம், வெண்பனிப் போர்வையில்!  இந்த நீல்கந்தா மட்டும் ஊருக்குள்ளே எங்கே போனாலும் நம்மை விடாமல் பார்த்துக்கிட்டே நிக்குது.  அதுக்குத் தெரியாமல் நம்மால் ஒன்னுமே செய்ய முடியாது :-)
ஹொட்டேலுக்குள் நுழைஞ்சதும் சகுனம் ரொம்பச்சரி.  ரெண்டு பெரிய யானைகள் வரவேற்க, புள்ளையாரும் நாராயணனும்மா நின்ற கோலத்தில் ! நடுவில் சிம்மவாஹினி சந்தோஷி மாதா! நம்ம பக்கத்து ஸ்டைல் குத்துவிளக்கொன்னு  நின்னு நிதானமா முத்துச்சுடரோடு!
அறைக்குப்போன அஞ்சாவது நிமிட்டில் கிளம்பிட்டோம். பெருமாளே.... இதோ வந்தேன்.....
சரியா ஒரு கிமீ தூரத்துலே இருக்கார் பத்ரிநாத்.  கிளம்பிப்போய் கடைகள் நெரியும் ஒரு முட்டில்  வண்டியில் இருந்து இறங்கிக்கணும்.  வலதுபக்கம் கார் பார்க்கிங் ஏரியா.  இடது புறம்   சந்துலெ இருக்கும் கடைகளுக்கு நடுவில் நீந்திப்போனால்  கடைசியில் ஒரு பாலம். பாலத்துக்கு அந்தாண்டை கோவில்.

பாலத்துக்குக்கீழே அலக்நந்தா கொந்தளிச்சுக்கிட்டுச் சுழிச்சு ஓடறாள், படு வேகமா! கோவில் கொஞ்சம் மேடானபகுதியில் இருப்பதால் சந்துக்குள் இறங்கினதும்  பார்வைக்குத் தெரிஞ்சுருது!
மொட்டைமாடி போல ஒரு இடத்துலே நின்னு,   'ஹைய்யோ.... கிடைக்குமா'ன்னு ஏங்கிக்கிடந்த  கோவிலைப் பார்த்ததும்  கண்ணுக்குள்  கரகரன்னு  தண்ணீர்  சேர்ந்தது உண்மை.

கோவிலையொட்டியே மலைச்சரிவில் நெருக்கமா ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் ஜேஜேன்னு இருந்தும்கூட... கோவிலின் அலங்காரமும் மிடுக்கும் அழகும் தனியாத்தான் தெரியுது!
பாலத்துக்கு  ஒரு அலங்கார நுழைவு வாசல்! ருத்ராக்ஷ சரங்களைத் தொங்கவிட்டுருக்காங்க.

பாலத்துக்கு அந்தாண்டைப் பக்கமும் ஒரு அலங்காரவளைவு. அங்கிருந்து படிகள்!

தலையை உயர்த்தி அண்ணாந்து கோவிலைக்  கும்பிட்டப்போ  வானத்தில்  வட்டமிடும்  ரெண்டு கருடர்கள்!  சகுனம் ஓக்கே! மேலே ஏறாமல்  கீழ்ப்புறம் இறங்கிப்போறோம்.  தப்த் குண்ட் இங்கேதான்!
மக்கள் வெள்ளம்தான் எங்கேயும்!   இந்த வெந்நீர் குளத்துக்கு,  நீர் வரும் சின்ன  வழியில் கைநீட்டி  தண்ணீர் எடுத்துத் தலையில் தெளிச்சதோடு சகல பாபங்களும் போயே போச்!


இந்தத் தண்ணீரை ரெண்டு  குளங்களில் பாயும்படி செஞ்சுருக்காங்க. பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனி இடங்கள். ஆண்கள் பகுதியில்  கூட்டம் அதிகம். பெண்கள் பகுதியில்  காலின்னு சொல்லலாம். ஒரு அம்மா மட்டும் கரையில் உக்கார்ந்து  உள்ளே இறங்கலாமா வேணாமான்னு பார்த்துக்கிட்டு இருந்தாங்க.


பெரியக்காவின் நாத்தனார், அந்தக் காலத்துலேயே பத்ரிநாத் பயணம் போய் வந்துருந்தாங்க. அது இருக்கும் ஒரு அம்பத்தியஞ்சு வருசத்துக்கு முன்னால்.... எப்பவாவது பேச்சு பயணத்தைப்பற்றித் திரும்பும்போது கதைகதையாச் சொல்வாங்க. சின்னப்புள்ளைங்களா, நாங்கெல்லாம் கூட உக்கார்ந்து 'ஆ'ன்னு கேட்டுக்கிட்டு இருப்போம். (அதானே... அப்பெல்லாம் ப்ளொகா, இல்லை ஃபேஸ்புக்கா? ... எல்லாத்தையும் எழுதிப்போட்டுவிட? )

அப்போ இந்த சுடுதண்ணி ஊத்து பத்திச் சொன்னப்ப...  ஒரு துணியில் அரிசியை கொஞ்சம் லூஸா மூட்டை கட்டி, ஒரு குச்சி முனையில் தொங்கவிட்டு, அந்த சுடுதண்ணிக்குள்ளே முக்கி வச்சுருப்பாங்களாம்.  கொஞ்ச நேரத்துலே அது  சோறா வெந்துருக்குமாம். இப்படித்தான் உருளைக்கிழங்கு, சிலகாய்கறிகள்னு   வேகவச்சு சாப்புட்டாங்களாம் அந்தப் பயணத்தில்.   எல்லாம் ஒருத்தரைப்பார்த்து ஒருத்தர்  சமைக்கிறதுதான்:-)

இப்ப அந்த அளவு சூடெல்லாம் இல்லை.  வேறெங்கிருந்தோ  தண்ணீரை விளாவி பைப் லைனில் வருதுன்னு நினைக்கிறேன். நல்ல குளிக்கும் பதத்தில்  இருக்கும் சூடுதான்.  மெள்ளக் காலை நனைச்சுப் பார்த்தேன். இதம்.  ஆனால்.... குளிக்கலை.
நம்மவரைக் குளிக்கிறீங்களான்னு கேட்டதுக்கு தலையை ஆட்டுனார் 'நோ'ன்னு:-)  முழு பாரத தேசமும் இங்கே சங்கமம்தான். எத்தனை விதம், எத்தனை மொழி, எத்தனை வகைன்னு.....   இப்படிப் பார்க்கறதே பெரிய புண்ணியம்தான்.
அலக்நந்தா கரையில் பித்ரு தர்ப்பணம் கொடுக்கறது  ரொம்பவே விசேஷமுன்னு  பண்டிட்கள் மக்களுக்கு  அறிவுரை சொல்லிக்கிட்டு இருக்காங்க. நாரத் குண்ட், ப்ரம்ம கபாலம் இங்கே மட்டும் தர்ப்பணம் கொடுத்துட்டீங்க.... இனி  வேறெங்கும், எப்பவுமே கொடுக்க வேணாமாம்..... காசியில் ஆயிரம் முறை தர்ப்பணம் செய்த பலன் இங்கே ஒருவாட்டி செஞ்சாலே கிடைச்சுருமாம்! ( அதனால்  எல்லாக் காசையும் இங்கேயே கொடுத்துப்போயிருங்க. அதுதான் புண்ணியங்களில் பெரியது!)

 அடடா.... இதுக்கெல்லாம் ஆயுத்தமா வரலைன்ற கவலையே வேணாம். கை நிறையக் காசு  வச்சுக்கிட்டு,  சரின்னு தலை ஆட்டுனாப் போதும். சகல ஏற்பாடும் நொடிகளில்! கிடைச்ச இண்டு இடுக்குகளில் சட்னுஒரு  துணியை விரிச்சுப்போட்டு பூஜை ஆரம்பிச்சுடறாங்க.

இப்படி ஒருத்தருக்கு  புது பாக்கெட்டைத் திறந்து பஞ்சகச்சம் கட்டி விட்டுக்கிட்டு இருந்தார் ஒரு பண்டிட்.  அவர் பெயர் ஜோஷி. கட்டிவிடப்பட்டவர் பெயர் தோஷி.  அடடா என்ன இப்படி ஒரு பெயர்ப்பொருத்தமுன்னு  அனுமதி வாங்கிக்கிட்டு க்ளிக்கினேன். ரொம்ப மகிழ்ச்சியா போஸ் கொடுத்தாங்க  ஜோஷி அண்ட் தோஷிஸ்.




பூஜைக்கான பொருட்களை விற்கும் கடைகளும் வியாபாரிகளும் சகல இடங்களிலும்!  எப்போ யாருக்குத் தேவை இருக்குமோ என்ற எண்ணம்தான் :-)
தாம்பாளம் போல தட்டுலே  உலர்ந்த பழவகைகள், பாதாம் முந்திரின்னு  நட்ஸ் வகைகளை அழகா அடுக்கி அதுக்கொரு மஞ்சள் கண்ணாடிப் பேப்பர் போட்டு அடுக்கி வச்சுருக்காங்க.  நம்ம பர்ஸின் கனத்துக்குத் தக்கபடி வாங்கிக்கிட்டு பத்ரிநாதரை தரிசிக்கக் கோவிலுக்குள் போகலாம்.
மாடிக்குப்போக ரெண்டு பக்கமும் படிகள் கட்டி இருப்பாங்க பாருங்க அப்படி ஒரு டிஸைன்.  எதாவது ஒரு பக்கத்தில் ஏறி லேண்டிங் பகுதியில் நின்னு  கண்ணெதிரே இருக்கும்   பத்துப்பனிரெண்டு படி வரிசையில் ஏறிப் போகணும்.  இந்தப் பகுதிதான் இங்கத்து  ஃபோட்டோ ஸ்பாட்!  இங்கே நின்னு படம் எடுத்துக்கலைன்னா பத்ரி யாத்திரை பூர்த்தி ஆகாது !  தெய்வக்குத்தம் வேணாமேன்னு நாமும் சிலபல க்ளிக்ஸ் :-)
நல்ல கலர்ஃபுல்லான  வாசல்!    ரெண்டு பக்கமும் சிங்கம்!  சிங்க வாசல். ராஜஸ்தான் ஸ்டைல்!  சிம்ஹத்வார்!  மேலேறுனதும் ரெண்டு பக்கமும் கருட்ஜி!  கொஞ்சம் கிழமுகத்தோடு இருக்கார்!


படிகள் முடியும் இடத்தில் பக்கத்துக்கு  பாஞ்ச் யானை வரிசை.  மூலை  என்றதால்   பாஞ்ச் பாஞ்ச் தஸ்ன்னு!   சகுனம் டபுள் ஓக்கே!   வாசலில் தலைக்கு மேலே ஒரு பெரிய காண்டாமணி!  கைக்கு எட்டலைன்னாலும் ஒரு  ஹைஜம்ப் பண்ணி  அதை அடிச்சாத்தான் திருப்தி :-)டங்..... எட்டூருக்குக் கேக்கும் ஒலி!
 பயங்கர போக்குவரத்து. ஆளில்லாத கோவில் படியை க்ளிக்குனா  ஒரு பவுன் இனாம்!  ஊஹூம்ம்ம்ம்   முடியவே முடியாது. ஒரு தலையாவது எட்டிப் பார்த்துரும்:-)

இதுக்கப்புறம் கோவிலுக்குள் படம் எடுக்கத் தடை !

தொடரும்...........  :-)


11 comments:

said...

பத்ரிநாத் கோவிலுக்கு எங்களை அழைத்துவந்ததுக்கு நன்றி.

// சனம் அங்கங்கே குளிக்குது. ஆத்தை அசிங்கப்படுத்தாமல் இருக்கணுமே பெருமாளே.....//

மக்களும் வரணும், மாசு படவும் கூடாதுன்னா ..... முடியுமா ?

said...

முதல் புகைப்படம் திகிலூட்டியது....வேட்டி கட்டப்படும் முறை வியக்க வைத்தது. வழக்கம்போல கோயில் உலா அருமை, உங்களுடன்.

said...

வாங்க விஸ்வநாத்,

மக்கள் என்றாலே மாசுன்னு முடிவே பண்ணிட்டீங்களா?

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.


அவரு கட்டிவிட்டது பஞ்சக்கச்சம் ஸ்டைலு.

கொஞ்சம் திகிலூட்டும் பயணம்தான் !

said...

பத்ரி தரிசனம், கோவில் - ரொம்பவும் அருமை. சுழித்தோடும் அலக்னந்தா - அதையொட்டி கரையில் ஒரு இடம் விடாமல் கட்டிடங்கள். என்றைக்கேனும் அலக்னந்தாவுக்குக் கோபம் வந்து பொங்கினால், எத்தனை எத்தனை சேதம் ஏற்படுமோ.. கோவிலைச் சுற்றி மலைப்பிரதேசத்தில் ஒரு இண்டு இடுக்கு விடாமல் கட்டிடங்கள்.

உங்க நன்மைக்குத்தான் வென்னீரை விளாவி அனுப்புறாங்கன்னு பார்த்தா, அதுலயும் கோபால் சார் குளிக்கலையா?

ஹரித்துவாரிலிருந்து உங்கள் பயணம் காண வேண்டிய இடங்களையெல்லாம் நல்லா கவர் பண்ணுது. என்னை வா வா என்று கூப்பிடுகிறமாதிரியே ஒரு எண்ணம்.

ரொம்ப காசு, காசு என்று அதனைக் குறிவைத்துச் செய்யும் சடங்குகளால் மனத் திருப்தி ஏற்படுமா? வெறும் ஃபார்மாலிட்டி போல் ஆகிவிடாது?

தொடர்கிறேன்.

said...

அடேங்கப்பா... பத்ரிநாத் வந்துருச்சு. உங்களோட பரவசம் எப்படியிருக்கும்னு உணர முடியுது.

ரோடெல்லாம் பாத்தா கொஞ்சம் பக்குன்னுதான் இருக்கு. ஆனாலும் கட்டுமானப் பொருட்களைக் கொண்டு போய் வீடுகளும் ஓட்டல்களும் கட்டியிருக்காங்க.

நாட்டுல என்ன வசதி இருக்கோ இல்லையோ, உலகத்தோட இணைய இணைய வசதி இப்பல்லாம் ரொம்பவே தேவைப்படுது. அதுதான் பத்ரிநாத் வரைக்கும் இணைக்குது.

வெந்நீர் ஊற்றுகள்ள துணியில் அரிசி கட்டிச் சமைக்கிறதெல்லாம் படிக்க நல்லாருக்கு. செஞ்சு பார்க்கவும் ஆசையா இருக்கு. இதுக்குன்னு வெந்நீரூற்றை எங்கன்னு நான் தேடுவேன்.

எங்கருத்து பாத்தாலும் பத்ரிநாதர் கோயில் தெரியுற மாதிரி கட்டி வெச்சிருக்காங்கன்னு நெனைக்கிறேன். பளிச்சுன்னு தெரியுது.

said...

முதல் படமே பயமுறுத்துகிறது. தடுப்பில்லாத பாதை!

அழகிய படங்களாலான பதிவு.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

அலக்நந்தா பொங்கினால் கூட ஊருக்கு அவ்வளவா சேதம் வராது. அவ்ளோ ஆழமாவும் அகலமாவும்தான் இருக்கு. பாலங்கள் தப்புமா என்ற சந்தேகம்தான். அப்படியெல்லாம் நடக்காமல் அந்த பத்ரியே காப்பாத்தணும். காப்பாத்துவார்.

இது போன்ற பொது இடங்களில் குளிக்க விருப்பம் இல்லை. அப்படியும் அவரை கங்கை நதியில் குளிக்க வச்சாச்சு காசியில் :-)

இப்பெல்லாம் சடங்குகள் ஃபார்மாலிட்டி ஆகித்தானே போச்சு. இல்லையோ?

said...

வாங்க ஜிரா.

பொருட்கள் கொண்டு வர வேற வழி இருக்குமோ? எப்படி கட்டி இருப்பாங்கன்னு இப்ப நினைச்சுப் பார்க்க வச்சுட்டீங்களே.........

இப்படியான வெந்நீர் ஊற்றுகள் நியூஸியில் இருக்கு. ஆனால் எல்லாம் கந்தக மணத்துடன் இருக்கும். எப்படி சமைப்பதாம்?

said...

வாங்க ஸ்ரீராம்.

பயப்பட வைக்கத்தான் அந்தப் படம் போட்டேன் :-)

said...

தடுப்பில்லாத பாதை - கரணம் தப்பினால் மரணம் இங்கே நிதர்சனம்! :) பல வண்டிகள் விழுந்து அடித்துக் கொண்டு போனதுண்டு!

எப்போதும் கூட்டம். அழகான கோவில்.

படங்கள் அனைத்தும் அழகு.

தொடர்கிறேன்.