Saturday, June 24, 2017

சனிக்கிழமை ஸ்பெஷல்.... வாழைப்பூ பொரியல்

குளிர்காலம் வந்துட்டாலே  தினமும்  சமையல் கொஞ்சம் கஷ்டமாத்தான் போகுது. என்ன காய் என்ன காய்ன்னு  நினைச்சுக்கிட்டே  இருக்கணும். முட்டைக்கோசு காலிஃப்ளவர்  வகைகளைத்தான் கண் நிறையப் பார்க்க முடியுதே தவிர....   நம்ம பக்கத்து  கத்தரிக்காய் கூட   இப்ப காணோம்.  ஃபிஜியில் சைக்ளோன் வந்து  எல்லாம் போச்சாம். தென்னை மரத்துலே தேள்கொட்டுனா.....   கதைதான்.... போங்க.

இருக்கவே இருக்கு ஏஷியன் ஸ்டோர்ஸ்ன்னு  போனா கண்ணில் ஆப்ட்டது வாழைப்பூ!  டின்தான்.   வெளியே படம் சூப்பர்!    தாய்லாந்து  சமாச்சாரம்.


எப்படி இருக்குமோ என்ற ஆர்வத்தில் திறந்து பார்த்தால்....  போனமுறை என்ன செய்யறதுன்னு தெரியாமல் தூக்கிப்போட கூம்பு. அது ஆச்சே ஆறேழு வருசம்!  இன்னுமா இருக்கு?

நல்லா தண்ணீரில் அலசி எடுத்து, நறுக்க முடியலையேன்னு  சின்னத் துண்டுகளா வெட்டினேன்.


பொரியல் செய்யலாமா  இல்லே கூட்டா?  டாஸ் போட்டதில் ஜெயிச்சது பொரியல்தான்.

எடு... கொஞ்சம் துவரம் பருப்பை.  குக்கரில் ஜஸ்ட் ரெண்டே விஸில்.  ஊதி முடிச்சதும்  ஸ்டீம் போகக் காத்திருக்காமல் கொஞ்ச நேரத்துலே குண்டைத் தூக்கி  நீராவியை வெளியேத்திடலாம். இல்லைன்னா.... மசியலுக்குத்தான் அந்தப் பருப்பு.  குக்கரில் இருந்து வெளியே எடுத்த பருப்பில் இருக்கும் தண்ணீரை  ரசத்துக்கு வச்சுக்குங்க. வடிகட்டினால் ஆச்சு.
சொல்ல மறந்துட்டேன்.... இங்கே ஒரு அஸ்ட்ராலியன் கடையில்  சின்ன சைஸில் காய் வடிகட்டி,  குட்டியா ஒரு கடாய்,  சின்னதா   பாத்திரம் (ஒரே ஒரு டிஸைன்தான்) ரெண்டு டாலர்னு கிடைச்சுக்கிட்டு இருக்கு. நம்மூர் விலையில் நூறு ரூ. நல்ல தரமாவும் இருக்கு.  நம்மூரில் நூறுக்குக் கிடைக்காதுன்றது நிச்சயம்.  இதுலே சிறப்பம்சம் என்னன்னா... இது சீனத் தயாரிப்பு இல்லை!   மேட் இன் இண்டியா!!!!!! 

சரி....  இப்பத் தேவையான பொருட்களைப் பார்க்கலாம்.....

வாழைப்பூ  1 டின்

வெங்காயம்   1 மீடியம் சைஸ்.    பொடியா நறுக்கிக்கணும்.  நான் சிகப்பு வெங்காயம் எடுத்துக்கிட்டேன். கொஞ்சம் கலர் இருக்கட்டுமேன்னு.
காய்ஞ்ச  மிளகாய் நாலு. சின்னச்சின்னத் துண்டுகளா ஒடிச்சு வச்சுக்கணும்.
சமையல் எண்ணெய்  மூணு டேபிள் ஸ்பூன்

சீரகம்  அரை டீஸ்பூன்

பெருங்காயத்தூள்  ஒரு  கால் டீஸ்பூன்

மஞ்சள் தூள்  ஒரு கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை  கொஞ்சம்

உப்பு  முக்கால் டீஸ்பூன்

துவரம் பருப்பு  ஒரு  கால் கப்

தேங்காய்த் துருவல்   கால் கப்.

செய்முறை:

நல்ல கனம் உள்ள  கடாயை  அடுப்பில் ஏத்துங்க. தீ மிதமாக எரியட்டும். எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் சீரகம் பெருங்காயம் தாளிக்கணும். (இப்பெல்லாம் கடுகு  அவ்வளவாப் பயன் படுத்துவதில்லை. சீரகத்துக்கு மாறிட்டேன். சீர் + அகம்!  )


படபடன்னு பொரிஞ்சதும்  காய்ஞ்ச மிளகாய் சேர்த்துக் கொஞ்சம் வறுபட்டதும் வெங்காயம் , கருவேப்பிலை சேர்த்துட்டுக் கூடவே உப்பும் மஞ்சள் தூளையும் போட்டுருங்க.  வெங்காயம் பாதி வெந்து நிறம் மாறும்போது  வாழைப்பூ துண்டுகள் சேர்த்துக்கணும். தண்ணீர் தேவைப்படாது. ஏற்கெனவே  உப்புத்தண்ணியில் எத்தனை மாசம் ஊறிக்கிடந்ததோ....  பாவம்....   இளந்தீயில் வேகட்டும்.






நல்லா வெந்துருச்சுன்னு தெரிஞ்சதும் எடுத்து வச்சுருக்கும் அரைவாசி வெந்த பருப்பு  (இதுக்குக் கிள்ளுப்பதம்னு ஒரு பெயர் இருக்கு)  சேர்த்துட்டுக் கூடவே தேங்காய்த் துருவலையும் சேர்த்து அஞ்சு நிமிட் அடுப்பிலே வதங்கட்டும்.  ஆச்சு நம்ம பொரியல்!
இப்படியெல்லாம் இருக்க வேண்டியது இப்போ இப்படி ஆகிப்போச்சே....


 நோகாம நோம்பு கும்பிட்டேன்.  கள்ளனையும் காணோம், போலீஸையும் காணோம். கண்ணாடியையும் காணோம்.

இந்த சமையல் குறிப்பு வரப்போகும் ஈஸிபீஸி இண்டியன் ரெஸிபியில் இடம் பெறுகிறது!


13 comments:

said...

சிம்பிள்! டின் வாழைப்பூவில் கள்ளன் இருக்காதா? கஷ்டப்பட்டு அவற்றை நீக்கிவிட்டா உள்ளே வைக்கிறார்கள்? அட!

எனக்கு பருப்புசிலியில் பிடித்தது வாழைக்காய் பருப்புசிலி மட்டுமே அதாவது வடகறி!

இது போல செய்ததில்லை. அதுவும் வெங்காயம் போட்டு செய்ததில்லை. செய்துடுவோம்!

said...

அருமையாக இருக்கிறது.

said...

நான் செய்யும் அதே பக்குவம். ஆனா நான் பாசிப்பருப்பு போடுவேன்

said...

அன்பின் டீச்சர்,

டின் வாழைப்பூவை கடைகளில் பார்த்திருக்கிறேன். உள்ளே எப்படி வைத்திருப்பார்கள் என ஆச்சரியம் தோன்றிக் கொண்டேயிருக்கும். இன்று சந்தேகம் தீர்ந்தது..நன்றி டீச்சர் ☺

இங்கு பச்சை வாழைப்பூவே கிடைக்கிறது. மஞ்சள் தண்ணீருக்குள் நறுக்கி விட்டால் கறுக்காது. பிறகு உங்கள் செய்முறைதான். கொஞ்சம் மொறுமொறுவென்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று நான் துவரம்பருப்புக்கு பதிலாக உளுத்தம்பருப்பு வறுத்து சேர்த்து விட்டேன். கொஞ்சம் கருமிளகுப் பொடியும் சேர்த்தேன். நன்றாக இருந்தது. ☺

மார்க்கெட்டில் வாழைத் தண்டுகளை அடிக்கடி பார்க்கிறேன். அது சம்பந்தமாக ஏதாவது சமையல் குறிப்புக்கள் இருந்தால் பகிரவும் டீச்சர்.

said...

வாங்க ஸ்ரீராம்.

கள்ளன் உருவாகுமுன்பே போலீஸ் பிடிச்சு அமுக்கிட்டாங்க :-)

இது வாழைப்பூவின் உள்ளே இருக்கும் கடைசிப்பகுதி. இல்லைன்னா பூ முளைச்சவுடனே வெட்டிடறாங்களோ என்னவோ? அப்படி இருக்கச் சான்ஸ் இல்லை. குருத்துக்காக வாழைக்குலையை விடுவாங்களா என்ன?

வெங்காயம் போடுவதே அளவைப் பெருக்கத்தான் :-) டைம்ஸ் 2 !!

said...

வாங்க கோமதி அரசு.

ரசிப்புக்கு நன்றி.

said...

வாங்க ராஜி.

பருப்பு வெந்த தண்ணீரை ரசத்துக்கு எடுத்துக்குவேன். அதனால்தான் துவரம் பருப்பு :-)

சில பொரியல்களுக்குப் பாசிப்பருப்பும் சேர்த்துக்குவேன். அன்றைக்கு மெனுவில் நோ ரசம் :-)

said...

வாங்க ரிஷான்.

பச்சை வாழைப்பூ.... அவ்ளோ பாக்கியம் செய்யலையே நாங்க.......

வாழைத் தண்டு கூட்டு செய்யலாம். ரொம்ப ருசியாக இருக்கும்!

said...

ரிஷானா சமையல் குறிப்பெல்லாம் சொல்றது? ஆச்சரியம் தான் போங்க.

said...

எனக்கு உங்களை நினைச்சா பாவமாத்தான் இருக்கு. டின் காய்கறிகளை வச்சு ஓட்டவேண்டியிருக்கே. நான் இருக்கும் இடம் கொஞ்சம் பரவாயில்லை. எல்லாக் காய்கறியும் கிடைச்சிருது (ஜூலை, ஆகஸ்ட் மாத்திரம் கொஞ்சம் வாடியிருக்கும், வெயில்னால, நவம்பரிலிருந்து கொஞ்சம் பச்சையா வர ஆரம்பிக்கும்). இங்கயும், லோகல் காய்னா, கோஸ், ஃப்ளவர், கத்தரி, உருளை, மற்றபடி பீற்றூட்/நூல்கோல்/முள்ளங்கி இன்னபிற. மற்றபடி எல்லாமே சவுதியிலிருந்து இல்லைனா இந்தியாலேர்ந்துதான். என்ன, எல்லாக் காயும் எல்லா சீசனிலும் கிடைக்கும்.

வாழைக்காய் பருப்புசிலியா? (வாழைப்பூ பருப்புசிலியை மாத்தி எழுதிட்டாரா ஸ்ரீராம்?) - பருப்புசிலிக்கு நம்பர் 1, கொத்தவரங்காய் அல்லவா?

மற்றபடி உங்க செய்முறை எப்போதுமே நல்லாத்தான் இருக்கு.

said...

//வாழைக்காய் பருப்புசிலியா? (வாழைப்பூ பருப்புசிலியை மாத்தி எழுதிட்டாரா ஸ்ரீராம்?) - பருப்புசிலிக்கு நம்பர் 1, கொத்தவரங்காய் அல்லவா? //

ஆமாமாமாமாம்... வாழைப்பூதான்! என்னவோ தவறு செய்திருக்கிறேன்! என்னைப்பொறுத்தவரை வாழைப்பூ உசிலிதான் முதலிடம்!

said...

வாழைப்பூ பொரியல்... விட அந்த பத்திரங்கள் தான் என் கண்ணனுக்கு ஸ்பெஷல் ல தெரியராங்க ..பள பள ன்னு...

said...

வெங்காயம் சேர்த்து வாழைப்பூ பொரியல் செய்ததில்லை.....

இப்பல்லாம் சனிக்கிழமைன்னா சமையல் போல! தொடருங்கள்.