Monday, July 31, 2017

ஆலமரத்தின் வயசு அஞ்சாயிரத்துக்கும் மேலே !!!!(இந்திய மண்ணில் பயணம் 37)

முதலில் போன இடம் வ்யாஸ் கத்தி. Gaddi, Gaddhi  னு  உச்சரிப்பு இருக்கணும்.  இதுக்கு இருக்கைன்னு  தமிழில்  சொல்லலாம்.   வியாஸர்  அமர்ந்த இருக்கை. இடம்.....  வியாசமுனிவரின் குகை !  இங்கே வியாசர் தவம் செஞ்சுருக்கார். பெரிய வளாகம்தான்.
5096 வயசான ஆலமரம்  முதலில் காட்சி கொடுக்குது. ப்ராச்சீன்!  'ஃபோட்டோ கீச்னா மனா ஹை ' பார்த்துட்டு பயந்து போயிட்டேன்.  வெளியே  நின்ன இடத்தில் இருந்தே சில க்ளிக்ஸ்.


உள்ளே போனதும் படம் எடுக்க அனுமதி உண்டான்னு  வேதவியாஸர் சந்நிதியில் உக்கார்ந்துருந்த  பண்டிட்டைக் கேட்டதுக்கு, தாராளமா   எடுத்துக்கோங்கன்னுட்டார்!   இவர் பெயர் அஜய் சாஸ்த்ரி.
கோவிலைப்பற்றிய  விவரங்களும்  சொன்னார்.  வ்யாஸ மஹரிஷி இங்கே இருந்துதான் வேதங்களைத் தொகுத்துக் கொடுத்தாராம்.  அதனால்தானே அவரை வேதவ்யாஸர்ன்னு சொல்றோம்!    பதினெட்டு புராணங்கள்,  வேதங்கள், பாகவதம்,  மஹாபாரதம்னு  பட்டியலைச்   சொல்றாங்க!

பக்தர்களின் வசதிக்காக ஒரு ஐம்பத்தியோரு அறைகள் இருக்கும் கட்டடம்  கட்டப்போறாங்களாம்.  ரொம்ப நல்ல சமாச்சாரம். எல்லாம் தனியார் ஆஷ்ரமங்கள்தான் செய்யறாங்க.  இது இல்லாம இன்னும்  சில கோவில்கள்,  சந்நிதிகள்னு  பெரிய திட்டம் இருக்கு.  நன்கொடை வசூல்  அஞ்சு லக்ஷம் தொடங்கி.... அதுபாட்டுக்குப் போகுது.  நாம் ஒரு தொகை  கொடுத்தோம்.  ரொம்ப சந்தோஷமா அதை வரவு வச்சுக்கிட்டு ரசீது கொடுத்தார்  அஜய் சாஸ்த்ரி.  அவரையும் ஒரு க்ளிக் :-)


கடைசியில் இங்கே  சக்கரம் வந்து நின்ன காடு எங்கே போகுமோ தெரியலை.  ஏற்கெனவே எங்கே பார்த்தாலும் சின்னதும்பெருசுமா ஊர் (!) முழுக்கக் கோவில்களாத்தான் கண்ணில் பட்டுக்கிட்டே இருக்கு!   இனி  காட்டைத் தேடத்தான் வேணும். இப்படிக் காட்டையே கரைச்சுடாங்களே...........

ஆமா...  அது என்ன சக்கரம் வந்து நின்ன சமாச்சாரம்?

ஒரு காலத்துலே  பனிரெண்டு  மஹரிஷிகள் சேர்ந்து, ஒரு பனிரெண்டு வருச காலம் தவம் செய்ய தீர்மானிச்சாங்க. அப்போ அதுக்கு ஏத்த இடம் எதுன்னு  பிரம்மாவிடம் போய் கேட்டதும், அவர் ஒரு தர்பைப் புல்லை எடுத்து வட்டமா சுத்தி அதை பூலோகத்தில் உருட்டி விட்டார். உருண்டு போன  அந்த வளையம் போய் நின்ன இடம்தான் இந்தக் காடு! சக்கரம் போல உருண்டோடிச்சாமே !
இடத்துக்குப்பெயர்கூட இப்படி வந்ததுதான். நேமி ன்னா சக்கரம். அது போய் நின்ன இடம் ஆரண்யம். நேமி ஆரண்யம்  இப்ப நைமிசாரண்யமா  ஆகி இருக்கு!  நமக்கு இப்படின்னா வடக்கர்களுக்கு இந்த இடம் நீம்சார்!
இன்னும் கொஞ்சம் இதைப் பற்றி  சொல்லணும். அது அடுத்த பதிவில் :-)


மூக்கு முழி ஒன்னும் தெரியாத வகையில் ஜிலுஜிலுன்னு  அலங்காரத்துணிகள் போட்டுக்கிட்டு இருக்கார் மஹரிஷி வேத வியாசர். அப்புறம் இன்னொரு சந்நிதியிலும் இருக்கார்.


இன்னொரு சந்நிதியில்  பலராமன், க்ருஷ்ணன், சுபத்ரான்னு  இருக்காங்க.
எல்லா சந்நிதிகளையும் தரிசனம் பண்ணிக்கிட்டு அங்கிருந்து கிளம்பினோம். பெரிய கோவில்னு சொல்ல முடியாது. ஆனால் முக்கியமான கோவில். கட்டாயம் தரிசனம் செஞ்சுக்க வேண்டிய இடம்.

இந்தக் கோவிலுக்குத் தொட்டடுத்து  ராதாவிஹாரி கோவில் ஒன்னு ஆஷ்ரமத்தோடு இருக்கு!
எங்கே பார்த்தாலும்  ஆஷ்ரமங்கள்தான். வெவ்வேற குருக்கள் ஆரம்பிச்சு வச்சு, அவர்களின் பக்தர்களால் நிரம்பி வழிஞ்சுக்கிட்டு இருக்கு மொத்த ஊருமே!  இதுலே எல்லா ஆஷ்ரமக் கோவில்களிலும் எல்லா சாமிகளும் இருக்காங்க என்பதால் எங்கே போய்க் கும்பிட்டாலும் சரிதான்!
ஆதிகாலத்தில் இங்கே எம்பத்தியெட்டாயிரம் முனிவர்கள் தங்கி தவம் செஞ்சுக்கிட்டு இருந்தாங்களாம்.  அவ்ளோ பேரும் இருக்கும் அளவில் காடு ரொம்பவே பெருசாத்தான் இருந்துருக்கும், இல்லே?

தொடரும்........  :-)


Saturday, July 29, 2017

சனிக்கிழமை ஸ்பெஷல்: ஜாம் ஜாம்னு இன்றைக்கு யாம் யாம் !

எதோ   ஐரோப்பிய மொழியில்  J  உச்சரிப்பு இல்லையாமே.... அதுக்கு பதிலா  Y சொல்றாங்க பாருங்க.  ஜெர்மனி கூட  யெர்மனின்னு பார்த்த நினைவு.

இன்றைக்கு நாம் சமைக்கப்போகும்  யாம், இங்கே நியூஸியில் இப்போ ஒரு பத்து, பதினாலு வருசத்திய சமாச்சாரம்.  கிழங்கு வகைதான். மண்ணுக்குள்ளே விளையும் தங்கம்:-)

Yams grown in New Zealand originate from the South American Andes where they are known as oca.

Yams are one of the highest vegetable sources of carbohydrate and energy (kilojoules).  They are a good source of folate and also a source of vitamin A (from beta-carotene) and vitamin B6 plus contain potassium at levels of dietary significance.  Their yellow orange coloured flesh indicates the presence of carotenoids (yellow orange coloured yams) and anthocyanins (red skins and specks in the flesh).  While not as high as carrots, yams are a good source of beta-carotene.

இதைப் பத்தியும் இதை சமைக்கிறதைப் பத்தியும் நானும் ஒரு அஞ்சு வருசத்துக்கு முன்னே எழுதியிருக்கேன்.   அப்போ பார்க்காதவங்க இப்பப்  பார்த்துக்குங்க :-)  இதுலே நம்மூட்டு  சொந்த சாகுபடி இருக்கு.  விட்டுடாதீங்க :-)


பொதுவா குளிர்காலத்துலேதான்  இது கடைகளில் வருது.  உருளைக்கிழங்குலே செய்யும் அத்தனை வகைகளையும் இதுலே செஞ்சுக்கலாம் என்றாலும்.... இதுக்குத் தோலைச் சீவ வேண்டிய அவசியம் இல்லை. பட்டுப்போல் மென்மையான சருமம். பளபளன்னு ஜொலிக்கும்  சருமம் !

மேலே கொடுத்துருக்கும் சுட்டியிலும் சமையல் குறிப்பும் செய்முறையும் இருக்குன்னாலும்....   இப்ப இன்னும் கொஞ்சம் அதிகமா சோம்பல் உடம்புலே ஊறிப்போய் இருப்பதால்  அதைவிட இன்னும் சுலபமா செஞ்சுக்க  வழி கண்டுபிடிச்சாச்சு.

இந்த யாமில் ரெண்டு மூணு வகை  இருக்கு.  ஆரஞ்சு சிகப்பு, தங்கமஞ்சள்,  மஞ்சச் சிகப்புன்னு....



மேலே படம்: நம்ம வீட்டு சாகுபடி :-)

இந்த முறை கிடைச்சது இதுதான். கீழே இருக்கும் படம் :-)





யாமைக் கழுவி எடுத்துக்கணும்.  தலைப்பாகத்துலே கொஞ்சமா சீவிட்டால் போதும்.  செடியின் தண்டு இணைப்பு அது .

துண்டுகளாவும் போட்டுக்கலாம். ஆனால் தங்கக்காசா இருக்கட்டுமேன்னு  வட்டவட்டமா அரிஞ்சாச்சு.

ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து  மைக்ரோவேவில்      மூணு நிமிட்  ஹை பவர் (நம்மது 1100 வாட்)வச்சு எடுத்துடலாம்.  இது சமையலை இன்னும் சீக்கிரமா முடிக்கும் உபாயம்.


அடுத்து  ஒரு வாணலியில் எண்ணெய் நாலு டீஸ்பூன் விட்டுச் சூடானதும் சீரகம், கருவேப்பிலை தாளிக்கணும்.  (இப்பக் கொஞ்ச காலமா  நான் பஞ்சாபி தடுக்காவுக்கு மாறிட்டேன்.  அகத்தை சீராக்கும் சீரகத்துக்கே என் ஓட்டு !)






சீரகம் வெடிச்சதும், மஞ்சள் தூள், கொஞ்சூண்டு பெருங்காயத்தூள், ஒரு அரை டீஸ்பூன் உப்பு,  அரை டீஸ்பூன் கஷ்மீரி ச்சில்லிப்பவுடர்.  இதுலே உறைப்பு இருக்காது. ஆனால் மிரட்டும் நிறம் இருக்கும்! இதையெல்லாம் ஒவ்வொன்னா சேர்த்து இளக்கிட்டு அதுலே  மைவே வில் வெந்துவந்த யாமையும் சேர்த்து வதக்கிட்டு, கைவசம் இருக்கும்    இட்லி மிளகாய்ப்பொடி  ரெண்டு டீஸ்பூன் அளவில்  தூவிக்கணும்.

அச்சச்சோ.... இமி இல்லையா?  நோ ஒர்ரீஸ்......  குழம்புப்பொடி?  அதுலே ஒரு டீஸ்பூன்.  அதுவுமில்லையா.....   அரை டீஸ்பூன் மிளகாய்ப்பொடி, அரை டீஸ்பூன் தனியாப்பொடி.
அம்புட்டுதான்.

பார்க்கக் கொஞ்சம்  சுவாரசியமா இருக்கட்டுமேன்னு  அலங்கரிக்கப் பார்த்தால் புழக்கடைத் தோட்டத்துக்குப் போக முடியாமல் ஒரே மழை. அதான் கொஞ்சம் பூசணி விதை  அலங்காரம்!  பச்சை நிற அலங்காரத்துக்குன்னு பார்ஸ்லிச் செடி  வளர்க்கிறேன் :-)


இன்றையப் பதிவுக்கு சமையல் நடக்கும்போது  படம் எடுத்தவர் நம்மவர் :-)

இந்த சமையல் குறிப்பு வரப்போகும் ஈஸிபீஸி இண்டியன் ரெஸிபியில் இடம் பெறுகிறது!




Friday, July 28, 2017

நைமிசாரண்யம் (இந்திய மண்ணில் பயணம் 36 )

காலையில் கோம்தி தரிசனம் ஆச்சு.  வெளுத்துக்கிட்டு இருக்காங்க  சிலர்!  இந்தக் காட்சி பார்த்தே எத்தனையோ வருசங்களாச்சுல்லே?

   எதிரே    ஹஸ்ரத் மஹல் பூங்காவில் காலை நடைப்பயிற்சி !
சலோ   நைமிஷாரண்!      இங்கே வந்ததே இதுக்குத்தான்.....    லக்நோவில் இருந்து சுமார் ரெண்டு மணி நேரப் பயணம். பாதி தூரம் நல்ல ரோடு. ஸீதாப்பூர்  ஹைவேயில் ( டோல் ரோடு)   ஒரு அம்பது கிமீ போயிட்டு  லெஃப்ட் எடுக்கணும். மொஹப்பத்பூர் ரோடாம் இது!  ஹைய்யோ!!! என்னமா ஒரு பெயர்!  மொஹ்ஹபத் !

இதுவரை வந்த டோல் ரோடை விட்டு மொஹ்ஹபத் சாலையில் போறோம்.  மணி  எட்டே முக்கால் ஆச்சு.  வண்டியில் ஜிபிஎஸ் போல ஒன்னு மாட்டி இருக்குன்னாலும்... அது ஒன்னும் வழி சொல்றாப்போல தெரியலை.  நம்மவர்தான் செல்லில்  கூகுள் வழி சொல்லச்சொல்ல அதை ட்ரைவருக்குக் கடத்திக்கிட்டு இருக்கார்.
நம்ம டிரைவர் பெயர் பாதக் ( Pathak)  .  வினோத் பாதக் .  இவர்தான் நேத்து நமக்காக ஏர்ப்போர்ட் பிக்கப் வந்தவர்.  ஒரு  பலகாரக்கடை போல ஒன்னு கண்ணுலே பட்டதும்,  டீ  கிடைக்குமான்னு பார்க்கலாமுன்னு நம்மவர் சொன்னார். வண்டியை நிறுத்தி விசாரிச்சதும்,  டீ  தயார் பண்ணிடறேன்னு    அடுப்பிலே பால் பாத்திரம்  எடுத்து வச்சார்  கடைக்காரர்.

 பக்கத்துலே இன்னொரு பெரிய  அடுப்பில் இரும்பு வாணலியில் என்னமோ பலகாரம்  வேகுதுன்னு எட்டிப் பார்த்தால் பஜ்ஜியா. (  சின்ன போண்டா மாதிரி இருக்கும் )   அது ஒரு ப்ளேட்  வாங்கிக்கலாம்.  கூடவே மூணு டீ.


நமக்கு ஹொட்டேலில் கொடுத்த  ப்ரேக்ஃபாஸ்ட் பொட்டியைத் திறந்து பார்த்தா....   வெஜிடபிள் சாண்ட்விச், மஃப்பின், ஆப்பிள், வாழைப்பழம்னு இருக்கு.   எல்லாம் ரெண்டு செட்!  வினோதுக்கு  இதுலே  ஒரு செட் எடுத்துக் கொடுத்துட்டு  நாங்க  சாண்ட்விச், பஜ்ஜியா, டீன்னு  முடிச்சுக்கிடோம். பழம் இருக்கட்டும். அப்புறம்  வேணுமுன்னா சாப்பிட்டுக்கலாம்.


அஞ்சு பஜ்ஜியா  ஒரு ப்ளேட் , மூணு டீக்கு  எவ்ளோ ஆச்சு தெரியுமோ?  இருபத்தியஞ்சு ரூ!  (எங்கூர் காசுலே அம்பது சென்ட்!  மகளுக்கு சேதி அனுப்பணும்! ஹா.....ன்னுவாள் ! )

ஓம் ப்ரகாஷ்  பாஜ்பாய் இதே தொழிலைத்தான் ஆரம்பம் முதலே செஞ்சுக்கிட்டு இருக்காராம். அப்பா ஆரம்பிச்ச வியாபாரம் !   வியாபாரம் நல்லாவே நடக்குதாம். 'கோவிலுக்கு யாத்ரை வர்றவங்க எண்ணிக்கை இப்பெல்லாம் அதிகமாத்தான் இருக்கு'ன்னார்.    என்னோடு பேசிக்கிட்டே இருந்தாலும் கை பரபரன்னு  பலகாரங்களைச் செஞ்சு குவிக்குது!
எண்ணெய் காய்ஞ்சதும் முதலில் சோம்பு போட்டு நல்லா வெடிக்கவிட்டுட்டு அப்புறம்  வெங்காயம் சேர்க்கணுமுன்னு சமையல் டிப்ஸ் வேற கொடுத்தார் பாஜ்பாய்!  இவருடைய செல்லம் ஒன்னு.... நாந்தான் இங்கே எல்லாம் என்ற மாதிரிபோஸ் கொடுத்துச்சு :-)  பெயர் டைகர்!  (எழுதப்படாத விதி !)

கொஞ்ச தூரம் போனதும் கோவிலுக்கான  நுழைவு வாசல் போல் ஒன்னு....   ஊருக்கான நுழைவு வாசலாம். ஊருக்குள்ளே வர்றதுக்கு  ஒரு  கட்டணம் கட்டிடணும். ரசீது புத்தகத்தோடு  ஆட்கள் வழி மறிக்கிறாங்க. இதுவேதான் நம்ம ஸ்ரீரங்கத்திலும். அம்மா மண்டபம் ரோடுக்குள்ளே நுழைஞ்சதும் கட்டணம் வசூலிச்சுடுவாங்க.
தேங்காய்ச் சில்லு தீனி வகையில் சேர்த்தி , இந்தப் பக்கங்களில் !
இங்கே கோவில்னு  ஒன்னும் தனியா இல்லை. கோவிலைத் தேடாதீங்க. காடுதான் இங்கே கடவுள்னு  நண்பர்கள் சொல்லி இருந்தாங்க.

 நாராயணனே  வனமாகவும், அதிலுள்ள மரமாகவும் இருக்கானாமே!  ஓ.....

நாங்களும் விநியாவை செல்லில் கூப்பிட்டோம். நேத்தே லக்நோவில் இருந்து கூப்பிட்டுப் பேசுனோம்தான்.  ஊருக்குள் வந்தவுடன் கூப்பிட்டால் வழி சொல்றேன்னு சொல்லி இருந்தாங்க.

நமக்குத்தான் திவ்யதேசக் கோவில்களிலும்கூட  பெருமாளைத் தவிர வேற யாரையுமே தெரியாதே.... இந்த விநியா எப்படி?    'அததுக்கு ஒரு ஆள் இருக்கான் பாஸ்' என்றதைப்போலத்தான்  :-)

நாம் முக்திநாத் கோவிலுக்குப் போனப்ப  சென்னைக்காரர்கள் மூணு பேரைப் பார்த்தோமுன்னு சொன்னது நினைவிருக்கோ?  அந்த பாலாஜிதான்  விநியா ஃபோன் நம்பரைக்  கொடுத்துருந்தார். அப்ப என்ன ஏதுன்னு ரொம்ப விசாரிச்சு வச்சுக்கலை.  இருக்கட்டுமுன்னு  நம்பரை எழுதி வச்சுக்கிட்டதுதான்.
விநியா சொன்ன அடையாளங்களைப் பார்த்தபடியே  அவுங்க சொன்ன இடத்துக்கு வந்து சேர்ந்தோம்.  வாசலில் பார்த்தால் அகோபிலமடம்னு போட்டுருக்கு!  உள்ளே போய் விசாரிச்சால் இதுதான் சரியான விலாசம். கரெக்ட்டா வந்து சேர்ந்துருக்கோம் :-)
இங்கே விநியாவும், அவுங்க கணவருமா மடத்தைப் பார்த்துக்கறாங்க. கணவருக்கு சில வருசங்களா உடம்பு சரி இல்லையாம். விநியாதான் இப்போதைக்கு முழுப்பொறுப்பும்ன்னே வச்சுக்கலாம்.

முதலில்  இங்கே உள்ள கோவில்களை (!) தரிசனம் செஞ்சுக்கணும். புது இடத்துலே  தேடிக்கிட்டுத் திரிய முடியாது. அதனால் வழிகாட்ட யாரையாவது ஏற்பாடு பண்ணித்தாங்கன்னு  கேட்டுக்கிட்டோம்.  மரங்கள்தான் என்றாலுமே... எந்த மரமுன்னு காமிக்க யாராவது இருந்தால் நல்லதுதானே?

ஊர்முழுசும் கூட்டங்கூட்டமா   சனம்தான். வரும்போது பார்த்தோமே.....
யாரையோ வரச்சொல்லி ஆள் அனுப்பினாங்க. நாங்களும் மடத்துலெ இருக்கும்  ஸ்ரீலக்ஷ்மிநரசிம்மரைத் தரிசனம் செஞ்சுக்கிட்டோம். (ஸ்ரீ லக்ஷ்மி நர்ஸிங் மந்திர்னு வாசல்லே போட்டுருக்கே!)அப்படியே சில  சந்நிதிகளையும்தான்....

நாப்பத்தி மூணாம் பட்டம் ஸ்ரீ வீரராகவ சடகோப யதீந்த்ர மஹாதேசிகன் இங்கே யாத்திரை வந்தப்ப பரமபதம் பதித்தார்( நவம்பர் 24, 1957)  அவருடைய ப்ருந்தாவனம் இங்கே இருக்கு.
அதுக்குள்ளே   ஒரு  இளைஞர் வந்துட்டார். பெயர் ஷ்யாம் மோஹன்.  இங்கே வேதபாடசாலையில் படிச்சுட்டு,  கோவிலில் பண்டிட்டா இருக்காராம். சின்ன வயசுதான். இருவது இருந்தாலே அதிகம். நம்ம கூடவே வந்து  முக்கியமான இடங்களைக்  காமிச்சுக் கொடுக்கணும்னு அவருக்கு உத்தரவாச்சு:-)

நீங்கபோயிட்டு வாங்க.  சமையலை முடிச்சுடறேன்னு சொன்னாங்க விநியா.
ட்ரைவருக்கு  அடுத்த ஸீட்டுலே ஷ்யாமை உக்காரச் சொல்லிட்டு நாங்க கிளம்பிப் போறோம்.    இனி வழி எல்லாம் ஷ்யாம்தான் சொல்லணும்.

பார்த்தனுக்குத் தேரோட்டுனவன், நமக்கு வழிகாட்டியா வந்துருக்கான் பாருங்க !!!

தொடரும்........ :-)