Monday, December 04, 2017

நம்ம லக்ஷ்மியும், அம்மாவின் பக்தையும்(இந்திய மண்ணில் பயணம் 84 )

ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து கிளம்புன  அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் சிதம்பரம் நகருக்குள்ளே இருந்தோம். வர்ற வழியில் எல்லாம் நல்ல பசுமைதான். விவசாயம் நடக்குது. நெல் போட்டுருக்காங்க.  கிட்டத்தட்ட முப்பத்தியெட்டு கிமீ தூரம். சேத்தியாத்தோப்பு வழிதான்.  சிதம்பரம்  வந்துட்டோமுன்னு  தில்லைகாளியம்மன் எல்லையில் நின்னு சொல்றாங்க!
அந்தப்பக்கம்  காளியின் பெரிய சிலைகள் ஒன்னுரெண்டு அங்கங்கே  ......  கண்ணில் படாமப்போக ச்சான்ஸே இல்லையாக்கும்!
ஊருக்குள்ளே நுழைஞ்சதும் அலங்கரிச்ச தேர்! உற்சவம்  நேத்துநடந்ததோ, என்னவோ?  அலங்காரம் முழுக்கக்  களையலை இன்னும்....
நாம் நேராப்போனது  வாண்டையார் ஹொட்டேல்  மல்டி குஸீன்   ரெஸ்ட்டாரண்டுக்குத்தான்.  நேத்து மாதிரி  லஞ்ச் கிடைக்காமப் போச்சுன்னா? அநேகமா ரெண்ட்டாரண்ட் காலி.  மணி இன்னும் ஒன்னு ஆகலை. ரெண்டு மணிக்குத்தான் கூட்டம் வருமாம்.




நம்மவருக்கு ஒருதயிர்சாதம், சீனிவாசனுக்கு ஒரு தாலி மீல்ஸ், எனக்கு ஒரு  ஸ்வீட் லஸ்ஸின்னு பகல் சாப்பாடு முடிஞ்சது.  இங்கே எந்தக் கோவிலுக்கும் போகும் எண்ணம் இல்லை. நேரா பாண்டிச்சேரிதான்.  அங்கேதான் தங்கல்  ரெண்டு நாளைக்கு!

கடலூர் வழியா பாண்டிச்சேரி எல்லைக்குள்  நுழைய சரியா ஒருமணி பத்து நிமிட் ஆகி இருந்துச்சு. அறுபத்தியெட்டு கிமீ! அவ்வளவா ட்ராஃபிக் இல்லாத ஹைவே!
சாலையைப் பார்த்தபடி நின்னுருந்த  காளியைக் க்ளிக்குமுன் வண்டி பறந்துருச்சு.  விடமுடியாதேன்னு  திரும்பிப்போய் ஒரு க்ளிக் ஆச்சு:-)


முதலில் ஹொட்டேலுக்குப்போய் செக்கின் செஞ்சுக்கணும்.  நண்பர் ரூம் போட்டு வச்சுருந்தார். க்ராண்ட் ஸெரீனாவாம்.  அதைத்தேடிப் போறோம். புதுச்சேரி நகருக்கான நுழைவு வாயிலுக்குள் நுழைஞ்சு போய்  அடுத்த  வாயிலின் வழி வெளியேறி இருக்கோம்.  ரொம்ப தூரம். ஏர்ப்போர்ட் எல்லாம் தாண்டி எங்கியோ ஒரு  பக்கம் இருக்கு.

அருமையான ரிஸார்ட். ஆனால் என்னைப்போல ஊர்சுத்திகளுக்கு  லாயக் இல்லை  !  எனக்கு வேண்டிய சமாச்சாரம் எல்லாம் டவுனுக்குள்ளே(!)தானே இருக்கு.  அதான் வண்டி இருக்கே என்ன பிரச்சனைன்னார் நம்மவர்.
நினைச்சால் கிளம்பி, போய்ப்போய் வரணும்.  இது நடக்கற காரியம் இல்லேன்னேன். போன முறை தங்குன அதிதி தேவலை.

மறுநாள் இவருக்கு  முழு நேரம் நண்பருடைய தொழிற்சாலையில் ஒரு வேலை இருக்கு.  அவருக்கு இவர்  தொழில்நுட்ப ஆலோசகராக  இருக்காரே.  'நான் கூட வரமுடியாது... நீ  தனியா ஊர் சுத்திக்கணும்.   பரவாயில்லையா'ன்னார்.   வெல்லம் தின்னாப்லென்னேன்.  ஆனால்  இங்கிருந்து  போய் சுத்திட்டு வர்றது கஷ்டம். எனக்கு ஸிட்டிக்குள்ளே  தங்கணும். அவ்ளோதான்.

ஒரு மணி நேரம் இப்போ வேணுமாம். நாளைக்கான வேலைகளை ஒழுங்கு படுத்திக்க....     ஆஹா... அதனால் என்ன.... நமக்கும்  வலை மேய்ச்சல் இருக்குதானே!

நாலரை மணிக்குக் கிளம்பி  நகருக்குள் போறோம்.   முதல் வேலை.... கொஞ்சம் சூடான காஃபி. இந்தப் பெட்ரோல் ஊத்தலைனா.... எஞ்சின் வேலை செய்யாது...

அடையாறு ஆனந்த பவன் இருக்குன்னார் சீனிவாசன். போன வேலை முடிஞ்சதும்  நேரா  லக்ஷ்மிதான்.
மணக்குள விநாயர் கோவில் வழக்கம்போல் கலகலன்னு இருக்கு. வாசலில்  தனக்கான இடத்தில்  செல்லம் நிக்கறாள். முதலில் காலைத்தான் பார்த்தேன்.  ஹப்பா..... கொலுசு இருக்கு !
புதுவையில் நம்ம பாரதியார் வசிச்ச காலத்தில்  ஏறக்கொறைய தினமும் தரிசிச்ச புள்ளையார் நம்ம மணக்குள விநாயகர். என்ன ஒன்னு.... அப்போ நம்ம லக்ஷ்மி இருந்திருக்க மாட்டாள்....


ஒரே இடத்தில்  ஆடி அசைஞ்சுக்கிட்டே இருக்கும் லக்ஷ்மியை, நானும் அசைஞ்சுக்கிட்டே க்ளிக் பண்ணியும்,  லக்ஷ்மிகூட  படம் எடுத்துக்க நம்மிடம் அவரவர் மொபைலைக் கொடுத்த மக்களுக்கு உதவியும் செஞ்சுக்கிட்டே  இருந்ததில் நேரம் போனதே தெரியலை.
நம்மவர்தான், 'வா.... உள்ளே போய் புள்ளையாரைக் கும்பிடலாமு'ன்னு  ஞாபகப்படுத்தினார் :-)

சாமி கும்பிட்டதும்,  உள்ளே ப்ரகாரத்தை வலம் வந்து அந்தாண்டைப் பகுதியில் இருக்கும் சந்நிதிகளையும் தரிசனம் பண்ணிக்கிட்டு, வெளியில்  கடைகளில்  ஒரு பொம்மை (போன பயணத்தில் பார்த்து வாங்காமல் விட்டது) தேடினேன். ஊஹூம்......  அதுக்கு நியூஸிக்கு வர  விதி இல்லை !! போகட்டும்....

பீச் வரை போகலாமேன்னார் நம்மவர். தூண்டில்காரனுக்கு மிதப்பு மேலே கண் என்றாப்போல  அதுக்கு முன்னே  நாளைக்கான தங்குமிடம்.....னு  ஹொட்டேல் அதிதிக்குப்போய்    விசாரிச்சால்....    இடமே இல்லையாம்....   அடுத்தாப்லே இருக்கும் ஹொட்டேல் ஷெண்பகாவில் ஒரு அறை புக் பண்ணியாச். காலையில் ஒன்பதுக்கு  வரப்போறோம்.

நம்ம மெரினா போல மணல்வெளி இல்லாம கல்லு பீச் என்பதால் எனக்கு இங்கத்துக் கடற்கரை அவ்வளவா விருப்பம் இல்லை. ஆனாலும்  போகலாமேன்னு  போனோம்.

இங்கே பார்த்த ஒரு விஷயம் அபாரம்!  எனக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சு!  இப்படி நம்ம சென்னையில் இருக்கப்டாதான்னு மனசு ஏங்குனது உண்மை!
வாகனப் போக்குவரத்து இல்லாததால்.... கைகாலை நீட்டிப்போட்டு நிதானமா  நடக்கலாம்.  எப்ப எவன் வந்து இடிப்பானோன்ற பயம் நோ நோ :-)

காலையில் நடைப்பயிற்சி போறவங்களுக்கும் நிம்மதி!   சாலைக்கு மறுபுறம் வண்டிகள் நிறுத்த இடம் தாராளமாவே இருக்கு.
கடற்கரையையொட்டி காந்தின்னா    சாலைக்கு மறுபுறம் நேரு!
காந்தி சிலை அமைப்பில் சேர்ந்தாமாதிரி  பிள்ளைகள் விளையாட 'சறுக்கு மரம்!'  இப்படி நினைச்சுக் கட்டுனாங்களா... இல்லே பசங்க தானே கண்டுபிடிச்சுக்கிச்சா?  எப்படியானாலும் சூப்பர்!
வண்டி நடமாட்டம் இல்லாததால் பெற்றோர்களுக்கும்  புள்ளைகளைப் பற்றிய கவலை கொஞ்சம் (!) இல்லாம நிம்மதியா இருக்க முடியுது!  கடற்கரை நீளத்துக்கு,  நடை பாதையுடன்  நல்ல  பெரிய இடமா கல்பாவி தரை போட்டுருக்காங்க.  இதே நீளத்துக்குக் கட்டைச் சுவர் வேற!
நாங்களும் தலைமைச் செயலகத்துக்கு முன்னாடி இருக்கும் கட்டைச் சுவரில் ஏறிஉக்கார்ந்து காத்து வாங்கிக்கிட்டு இருந்தோம். 
வாகனநடமாட்டம் இல்லையே தவிர  அங்கொன்னு இங்கொன்னுன்னு  ஒரு சிலர் தீனி விற்பனை செஞ்சுக்கிட்டு நடந்துபோறாங்க.
நம்மூர் மெரினாவில் வாகனம் மட்டுமில்லை, இந்தத் தீனிக்கடைகளுக்கும் தடை போட்டா , இடம் சுத்தமாகவும் ஆகும்.

இன்னொன்னும் சொல்லணும்.... கடற்கரையை அழகுபடுத்தன்னு  தமிழ்நாட்டுக் கலை, கலாச்சாரம், கட்டடக்கலைகளையெல்லாம்  கோடி காமிக்கறாப்போல்  சிலைகள் இருக்கும் தூண்களை வச்சுருக்காங்க.  சட்னு எதோ கோவிலில் நிக்கறாப்போல ஒரு தோணல்!

ஆனால்.... கொஞ்சம் கூட நம் கட்டடக்கலையின் பெருமைகளைக் காட்டாமல் புதுசா, பிரமாண்டமா, ஏராளமான பணம் (மக்கள் வரிப்பணம்!) செலவு செஞ்சு ,  தண்ணித்தொட்டி மாதிரி  ஒரு அமைப்பு  சென்னைநகரின்   நட்ட நடுக்க,  முக்கியமான ஒரு  இடத்தில் கட்டிவிட்டு, அதுவும் இப்போ கட்டுன நோக்கம் விட்டு வேற பயன்பாட்டுக்கு ஆகி இருக்குல்லே....    தமிழ்நாட்டுத் தலை நகருக்கு  திருஷ்டிப் பரிகாரம்.....   ஐ ஸோர்.....

நாங்க உக்கார்ந்துருந்த இடத்துக்குப் பக்கத்துலேயே  இன்னும் சில உள்ளூர் சனம் உக்கார்ந்துருந்து பேசிக்கிட்டு இருந்தாங்க.  அப்போ அங்கே வந்த  பெண்மணி ஒருவர் என் பக்கம் வந்து உக்கார்ந்தாங்க. கடற்கரைக்கு வர்றமாதிரி இல்லாம, எதோ விசேஷத்துக்குப் போறமாதிரி இருந்தது அவுங்க ஆடை அலங்காரம்.  கவனிக்கணுமுன்னு கவனிக்கலை. ஆனா.... கண்ணு கவனிச்சுருதே :-)
அவுங்களும் பேச்சில் கலந்துக்கிட்டு, அன்பைப் பத்தியும், வாழ்க்கை நிலையாமை பத்தியும் (இன்னைக்குச் செத்தா நாளைக்குப் பால்) இருக்கும்வரை மக்களுக்கு எதாவது விதத்தில் கொஞ்சமாவது   உதவி செய்யணும் என்பதைப் பத்தியும் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. எனக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சு.

பேச்சு வாக்கில், அவுங்க ஒரு மீட்டிங் போயிட்டு நேரா அங்கே இருந்து வர்றதாச் சொன்னாங்க. கொஞ்சம் காத்து வாங்கிட்டுப் போகலாமேன்னு வந்தாங்களாம். நம்மைப்பத்தியும் விசாரிச்சாங்க. கோடி காமிச்சேன் :-)

புதுவை அதிமுக மகளிரணிக்குத் தலைமைப் பொறுப்பில் இருக்காங்க. நானும் முதல்வர் ஜெயலலிதா அவர்களைப் பற்றி விசாரிச்சேன். அப்பல்லோவில் அட்மிட் ஆகி  இருந்தாங்க அப்போ.

அம்மா, அம்மான்னு உருகிட்டாங்க. எனக்கும் ஜெஜென்னு  சொல்லாம அம்மான்னே சொல்லணும் போல இருந்துச்சுன்னா பாருங்க.!  எந்தவிதமான  லாப நோக்கும் இல்லாம மனப்பூர்வமா அம்மா மேல் காட்டும் பக்தி உண்மையாத்தான்  எனக்குத் தோணுச்சு.  'அம்மாவுக்கு உடல்நிலை சீக்கிரம் சரியாகணுமுன்னு வேண்டிக்குங்கம்மா'ன்னு சொல்றாங்க.

 எனக்கும்  முதல்வர் என்ற பதவியில் இல்லாம, வெறும் ஜெஜெவா  நடிச்சுக்கிட்டு  இருந்த சமயம் என் ஃபேவரிட் நடிகை இவுங்கதான். இப்பவும் பழைய பாடல்களில்  இவுங்க  இருக்கும் காட்சிகள் வந்தால் ரசிச்சுத்தான் பார்ப்பேன். உடல்நலம் சரி இல்லைன்னு கேள்விப்பட்டது முதல்  மனசுக்குள் ஒரு வருத்தம் இருக்கத்தான் செஞ்சது.  புழுவைக் கொட்டிக்கொட்டிக் குளவி ஆக்குறதைப் போல (!!)இவுங்களைச் சேர்ந்த  அரசியல் இரும்பு மனுஷியாக ஆக்கிருச்சு....

'அதெல்லாம் ஒன்னும் ஆகாது. நல்லபடியா குணம் ஆயிருவாங்க'ன்னு சொன்னேன். (ப்ச்.... பலிக்கலை..... அடுத்த ரெண்டு மாசத்திலேயே  அவுங்களை இல்லாமப் பண்ணிட்டாங்க.....)

கலைச்செல்வி (இவுங்க பெயர்தான்)கிட்டே அவுங்க படத்தைப்போட அனுமதி வாங்கிக்கிட்டேன். தற்போதைய  கணினி சமாச்சாரம் எதுவுமே வேணாமுன்னு இருக்காங்களாம்.  இமெயில், ஃபேஸ்புக்,  இன்ட்டர் நெட்டுன்னு எதுவுமே இல்லை. (நிம்மதியா இருக்காங்க, இல்லை!) வெறும் பேச்சுத்தொடர்புக்காக மட்டுமே செல்ஃபோன். (அப்டிப் போடு!)
நாங்க  அங்கிருந்து கிளம்பி  வண்டி நிறுத்துன இடத்துக்குப் போனப்ப அவுங்களும் கிளம்பி  வந்து, அவுங்க வண்டியில் இருந்த கார்டு எடுத்துக் கொடுத்தாங்க.  பிறகு ஒருநாள் எப்பவாவது சந்திக்கலாமுன்னு சொன்னேன்.  அரசியலை விட்டுடலாம். ஆனால் பேச அன்பு இருக்கே!
ராச்சாப்பாடு இங்கே அக்கம்பக்கம்  எதாவது கிடைக்குமான்னு  தேடுனதில் ஒரு ஃப்ரெஞ்சு பேக்கரி ஆப்ட்டது.  'வேறெங்கியாவது சாப்புடறேன். நீங்க போங்க'ன்னுட்டார் சீனிவாசன். நமக்கு கீஷ், மஃப்ஃபின், வெஜ் பிட்ஸா கிடைச்சது.
க்ராண்ட் ஸெரீனா திரும்பிட்டோம். நிறைய சுத்தியாச்சு. இனி  நல்லாத்தூங்கி எழுந்தாப் போதும் :-)

தொடரும்...........:-)


12 comments:

said...

பகல் சாப்பாட்டுக்கு உங்களுக்கு லஸ்ஸி மட்டும் போதுமா?

இனிமையான பகிர்வு. படங்களுடன் பதிவை ரசித்தேன்.

said...

ஒரே நாள்ல பல்வேறு ரசனைகளுடன் கூடிய பயணம். தொடர்கிறேன்.

said...

//இங்கே எந்தக் கோவிலுக்கும் போகும் எண்ணம் இல்லை// அப்போ போனதடவை உங்களுக்காக ஓடி ஓடி தரிசனம் செஞ்சிவச்சி அந்த அக்காவை மறந்துட்டீங்க ? ஹிஹிஹி

said...

லக்ஷ்மி வெள்ளி கொலுசோட அழகா இருக்கா !!
எல்லா பொண்ணுங்களுக்கும் கோயில்களில் கொலுசு போடுவாங்களாக்கா ?
இதான் முதல் தடவை பார்க்கிறேன் ..ஒருவேளை நானா பார்த்தது எல்லாம் பையன்களோ ?
பாண்டிச்சேரி பீச் அழகு சுத்தமா இருக்கும் பல வருஷமும் பார்த்தது அவங்க அழகா பராமரிக்கிறாங்க ..
பீச்சில் சந்தித்த நட்பு மறைந்த அம்மாவை பற்றி எல்லாம் வாசித்தேன் ..ஹ்ம்ம் பாவம் ஐ ரியலி feel sorry for her :(
சில நேரத்தில் குள்ளநரிகள் காட்டுப்பாம்பு வல்லூறுகளிடமிருந்து தன்னை பாதுகாக்கவும் அவங்க குளவி போல தன்னை மாற்றிக்கொண்டாங்களோனு தோணுது ..

said...

பாண்டிச்சேரி ரொம்பவும் பிடித்த ஊர். நெய்வேலியிலிருந்த போது இரண்டு மணி நேரத்தில் பாண்டிச்சேரி!

மணக்குள விநாயகர் கோவிலுக்கும் சில முறை சென்றதுண்டு. பீச் - மணல் இல்லாவிட்டாலும் இந்த பீச் ஏனோ ரொம்பவே பிடிக்கும்......

said...

பாண்டிச்சேரி போகனும்னு ரொம்பநாள் ஆசை. போகனும். 20 வருடங்களுக்கு முன்னாடி போனது. அதுக்கப்புறம் அஞ்சு மாசத்துக்கு முன்னாடி வடலூர் சத்தியஞான சபை போயிட்டு கடலூர்ல திருப்பாதிரிப்புலியூர் கோயிலுக்குப் போயிட்டு பாண்டிச்சேரி வழியா திரும்ப வந்தோம். ஆனா பாண்டியில் நிறுத்தல. நெரிசல் எக்கச்சக்கமா இருந்தது. வந்தாப் போதும்னு வந்துட்டோம்.

மணக்குள வினாயகர் கோயில் புதுப்பிச்சிருக்காங்க போல. என் நினைவில் இருக்கும் கோயில் பழமையான அழகோட இருக்கு. 20 வருடங்கள்ள நிறைய மாறுதல்கள் போல. லட்சுமிக்கு காலில் கொலுசு அழகு.

கோயில் யானைகளைப் பாக்குறப்போ, அதோட இயல்பான இடத்தை விட்டு இந்த மாதிரி வெச்சிருக்குமே, அதுனால அதுக்கு மனதளவில் உடலளவில் எதாவது பாதிப்பு இருக்குமான்னு தோணும். பேச்சுத் தொணைக்கு கூட இன்னொரு யானை கூட இல்லாம என்ன வாழ்க்கையோ லட்சுமிக்கு!

said...

வாங்க ஸ்ரீராம்.

பயணங்களில் பகல் சாப்பாட்டில் அவ்வளவா நாட்டமில்லை. லஸ்ஸி தாராளம். வயித்துக்கும் நல்லது.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

தொடர்வருகைக்கு நன்றி.

said...

வாங்க விஸ்வநாத்.

மாலாக்காவைத்தானே சொல்றீங்க. அவுங்கதான் அப்பவே காணாமல் போயிட்டாங்களே!

நாம் சிதம்பரத்தில் நுழைந்தது கோவில் பூட்டி இருக்கும் நேரத்தில். அதான் எங்கேயும் போகலை.

said...

வாங்க ஏஞ்சலீன்.

நானும் முதல் முறை பார்த்தது லக்ஷ்மியின் கொலுசைத்தான். அப்புறம் ஒரு சில கோவில்களில் போட்டுருக்காங்கன்றதையும் கவனிச்சேன்.

சம்பாதிச்சுக் கொடுக்கும் காசை தனக்குன்னு எடுத்துக்காத நல்ல பாகர்கள் கிடைப்பதும் அதிர்ஷ்டம்தான் போல!!!

அம்மாவின் மறைவில் எப்படி மர்மங்கள் இருக்குதுன்னு பாருங்க.... ப்ச்..... பாவம்.... :-(

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.


கல் பீச் ஆனாலும் சுத்தமா இருப்பதால் மனசுக்குப் பிடிச்சுப்போயிருக்குமோ!!!!

said...

வாங்க ஜிரா.

பழைய கோவில்களைப் பழமை மாறாமல் புதுப்பிக்க நமக்குத் தெரியலைன்னுதான் சொல்ல வேண்டி இருக்கு :-(

இந்த ஒத்தையானை எனக்குமே மனசுக்குக்கஷ்டமாத்தான் இருக்கு. எத்தனை காலத்துக்குத்தான் மனுசப்பயல்களோடு மட்டுமே இருப்பதுன்னு அதுக்கும் தோணும்தான்....

உண்மையைச் சொன்னால் கோவிலுக்கு யானை தேவையே இல்லை அப்படி யானை வேணுமுன்னா குறைஞ்சபட்சம் ரெண்டுன்னு ஒரு சட்டம் வந்தால் கூடத் தேவலை....