Friday, May 18, 2018

ஆனந்தனுக்கும் ஒரு சந்நிதி ! சீனதேசம் - 13

தெரிஞ்ச இடம்(!) என்பதால் டிக்கெட்டைக் காமிச்சு, ஸ்கேனரில் பையை அனுப்பிட்டு, அந்தாண்டை போய் எடுத்துக்கிட்டு, 'நம்மவருக்கு' வழிகாட்டியா மாறினேன் !  அனுபவப்பட்டவள் இல்லையோ.... அதான் நேத்து(ம்) வந்தோமே :-)

நேராப்போய் ஒரு பேக்கட் ஊதுவத்தி. போதும் ரெண்டுபேரும் இதையே ஷேர் பண்ணிக்கலாம்.  நேத்துப் பார்க்காம விட்டுப்போனவைகளையெல்லாம் நல்லாப் பார்க்கணும்.


முதல்லே..... பெரிய மணி!    ரொம்பப் பழசு! அடிக்கறதில்லை போல......  கம்பி வேலிக்குள் இருக்கு  இப்போ.  மக்கள் பக்தி மிகுதியால் சில்லரைக் காசுகளைத் தூக்கி உள்ளே வீசறாங்க. மணியின் மேல் விழும்போது சின்னதா  முணங்குது.  முதலில் துடைப்பம் பார்த்து பயந்துட்டேன்.  சில்லறையைப் பெருக்கி வாரன்னு புரிஞ்சதும்....  ஓக்கே :-)
கோவிலின் தீபஸ்தம்பமும் இதே நிலையில்தான். காசு இங்கே அதிகம்.  பக்கத்துலே சீனத்தில் எழுதுன போர்டு. 'காசு போடாதே'ன்னு எழுதி இருக்கணும். அதான் சனம் போட்டுட்டுப்போகுது :-)

ஒவ்வொரு முக்கிய சந்நிதியிலும் ஆளுக்கு மும்மூணுன்னு ஊதுபத்தி எடுத்துக் கொளுத்திக்கிட்டே  ஹேப்பி புத்தா,  ஹெல்த்துக்கான   வைத்தியர் புத்தா, முக்கால புத்தா,  இவுங்களுடைய இங்கத்து முதல் லாமான்னு தரிசனம் பண்ணிக்கிட்டே போறோம்.

திபெத் நாட்டு வகை புத்த மடமா இங்கே சீனதேசத்தில் ஆரம்பிச்சபோது, இவுங்களே தங்களுக்கொரு குருவையும் ஏற்பாடாக்கி இங்கத்து லாமாவா ஆக்கிட்டாங்க. அந்த வகையில் Tsongkhapa அவர்கள்தான்  முதல் லாமாவாக இருந்துருக்கார். குருகுலம் எல்லாம் இவர் ஏற்பாடுதான்!



இந்த லாமா சந்நிதியில்  சுத்திவர  இருக்கைகள் போட்டு அதுலே  புத்த பிக்ஷுக்கள் உக்கார்ந்து அவுங்க வேதம் பாராயணம் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. நல்ல கூட்டமா மக்கள் இங்கே. நாமும் போய் நின்னோம். மணிகள்  ஒலிக்க பூஜை நடந்துச்சு.  ஆஹா.... நமக்கு அதிர்ஷ்டமுன்னு இருந்தேன் !


 
இந்த சந்நிதியின் பின்பக்கவாசலுக்குப் பக்கம்  நின்ற கோலத்தில் இன்னொரு புத்தர் (!) சிலை  முழுக்க முழுக்கத் தங்கத்தால் ஆனது, ஒரு உயர மேடையில் இருக்கு!   எனெக்கென்னமோ புன்னைமரத்தடியில் நின்னு குழலுதும் கண்ணனாட்டம்தான் தோணுச்சு. கையிலே குழல் மட்டும் மிஸ்ஸிங் !
இன்னொரு சந்நிதியில்  சுவர் ஓரமா  சீடர்கள் வரிசை ! மொத்தம் பனிரெண்டு பேர்!  யார் ஞாபகம் வந்துருக்கும் எனக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்........  நம்ம ஆழ்வார்கள்னு  நினைச்சவங்களுக்கு போனஸ் மார்க் இருபது :-)
இதுக்கு அடுத்த சந்நிதிதான் நம்ம விஸ்வரூபன்! நேத்துப் பார்த்த பிரமிப்பு இப்போ இல்லைன்னாலும்..... ஆசையாத்தான் ஓடினேன்,  முகம் பார்க்க!  திபெத்துலே இருந்து இங்கே வந்தவர். பதினெட்டாம் நூற்றாண்டு காலத்துலே  சீனமன்னர் Qianlong Emperor  ( Qing பேரரசு)அவர்களுக்குப் பரிசாக திபெத்தியர்களின்   ஏழாவது தலாய் லாமா கொடுத்தனுப்பினாராம். கிஃப்ட் ராப் போட்டுருக்கமாட்டார்தானே?

(இப்ப இருக்கும் தலாய் லாமா,  லாமா வரிசையில்....  பதினாலாம் எண்ணுக்கு உரியவர். ( திபெத்  தனிநாடாகத்தான் இருந்துச்சு. 1950- 1951 ஆம்  வருசம்தான்  சீனா, திபெத் நாட்டைத் தன் ஆட்சிக்குக்   கொண்டு வந்ததும்தான், இதை ஏற்கமாட்டாமல்  தலாய் லாமா, இந்தியாவில் புகலிடம்  கேட்டு வந்து, இந்தியாவிலேயே தங்கிட்டார்) )

அங்கிருந்து இங்கே வந்து சேரவே மூணு வருசம் ஆகி இருக்கு!  மொத்தம் இருபத்தியாறு மீட்டர் சிலையை எந்த வண்டியில் வச்சு, எப்படிக் கொண்டு வந்துருப்பாங்க? ஆயிரம் வருசத்துக்கு முன்னால் நம்ம தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு  கோபுரத்து  விமானத்துலே  கல்லை எப்படி ஏத்தி இருப்பாங்களோ  அதே போல இதுவும் ஒரு அதிசயம்தான், இல்லே?
பாருங்க எப்படிப் புழுதி படிஞ்ச முகத்தோடு பயணம் செஞ்சுருக்காருன்னு!  கோவில் தளத்தில் இருந்து எடுத்த படம் இது!  நன்றி!

1993 ஆம் வருசம் கின்னஸ் புத்தகத்துலே  இவரைப் பத்தி எழுதிப்போட்டுட்டாங்க. இவர் பெயர் என்ன தெரியுமோ?  மைத்ரேயர்!  வாவ்.... நல்லா நின்னு முகத்தை உத்து உத்துப் பார்த்து மனசுக்குள்ளே சேமிச்சு வச்சுக்கிட்டேன்....

பதினெட்டு மீட்டர் நம்ம கண்ணு முன்னே. பூமிக்கடியில் ஒரு எட்டு மீட்டர்னு மொத்தம் இருபத்தியாறு மீட்டர்!  சிங்கிள் சந்தன மரம் !  யம்மாடியோ.......
நேத்து போல ஓடாமல் நின்னு நிதானமா எல்லா சந்நிதிகளையும் ஒவ்வொன்னாப் பார்த்துக்கிட்டே போறோம். 'ஊதுவத்தி கேட்டார், காலின்னேன்!'

யமந்தகாவுக்கும் ஒரு சந்நிதி. உள்ளே  மூணு அஸிஸ்டென்ட் (நம்ம) கணக்கு ஒப்பிக்கிறாங்க.  எருமைக்குப் பதிலா குதிரை!   ஏகப்பட்ட கைகள் இருக்கு  இவளுக்கு. ஆமாம் ... யமந்தகா பொண்ணுதானே? ஒருவேளை.... ஆணோ?  ஹேய்..... யார்க்கறியாம்?



புத்தமதப் பிரிவுகளில் வஜ்ராயணமுன்னு ஒன்னு இருக்கு. அதுலே  வஜ்ரபைரவான்னு சொல்றாங்க. நாமும்  நம்ம நேப்பாள் பயணத்துலே பார்த்தோமே.....

இதுதான் முதல் முற்றம்!  இப்படியே ஒவ்வொன்னும் போய்க்கிட்டே இருக்கு!  அங்கங்கே என்ன ஏதுன்ற விவரமும் போட்டும் வச்சுருக்காங்க, சீனத்திலும், இங்லிஷிலுமா !

அஞ்சு அடுக்கும் அஞ்சு பெரிய சந்நிதிகளுமா  இந்தக் கோவில் இருக்குன்னாலும், அஞ்சாவது சந்நிதிக்குப் பின்னேயும் சில கட்டடங்கள் உண்டு. இது  மடம். நிறைய  மாணவர்கள் (சின்னவயசுப் பிஞ்சுகள் முதல்....  ) இங்கே  பிக்ஷு ஸ்கூல் படிப்பு.  இவுங்களுக்கான  யூனிஃபார்ம்,  பிக்ஷு உடைதான்!  இங்கே திபேத்திய வகை புத்தம் சொல்லித் தர்றாங்களாம்.  கோவிலே இந்த வகைதான்.   கின்னஸ் புக் மைத்ரேயாவே திபெத்திலிருந்துதானே வந்துருக்கார்!

Tantric Buddhism னு இந்த வஜ்ராயணா பிரிவில் ஒன்னு இருக்கு (எனக்கு ரொம்ப அதைப் பற்றித் தெரியாது......  குறிப்பிட்ட மந்திரத்தை இடைவிடாமல் ஜபித்து  அதன்  வீரியத்தால் எதோ குறிப்பிட்ட சக்தி  கிடைக்கும் போல ) இது சம்பந்தப்பட்ட சந்நிதி ஒன்னு இருக்கு இங்கே!

இன்னொரு சந்நிதியில்தான் முதல்முதலா ஆனந்தன், கஷ்யபன் பெயர்கள் எழுதி இருப்பதைப் பார்த்தேன்.  கௌதம புத்தரின் பிரதம சீடர்கள் இவர்கள் தானே?
சிக்கனத்தைப் பற்றி  ஆனந்தனுக்கும் புத்தருக்கும் இடையில் நடந்ததாக ஒரு உரையாடல் முந்தி எப்பவோ வாசிச்ச நினைவு. யாருக்காவது  முழுசும் ஞாபகம் இருந்தால் பின்னூட்டுங்க. சுவாரசியமானதுதான்! தனக்கு ஒரு உடை வேணுமுன்னு ஆனந்தன் கேட்க....  ஏன்? இப்பப் போட்டுருக்கும்  உடைக்கு என்ன ஆச்சுன்னு   ஆரம்பிச்சுப் போகும்!
கோவிலில் இருக்கும் மரங்கள்  பலதும் பைன் வகைகள்தான் என்றாலும் கூட....   பயங்கர நெளிவு சுளிவுகளோடு இருப்பது ஒரு அழகுதான். ஒவ்வொரு முற்றத்தில் நாலைஞ்சு மரங்களாவது  இருக்கே!  இன்னும் ஒரு இடத்தில்  பூத்துக்குலுங்கி நிற்கும் ஒரு சின்ன மரம் அழகோ அழகு!   என்ன பெயர்னு தெரியலை....
லாமாக்கள்,   நாட்டு மருந்து வகைகளை பத்தித் தெரிஞ்சுக்கிட்டுத் தங்களுக்கு வேண்டிய   வைத்தியங்களைச் செஞ்சுக்கறாங்க.  இதுக்குக்கூட ஒரு தனி ஹால் இங்கே இருக்கு. மெடிஸன் புத்தா உள்ளே இருக்கார்!    அந்தக் காலத்துலே புத்த மடங்கள்தான   அக்கம்பக்கத்துப் பதினெட்டு பட்டிக்கும் ஆஸ்பத்திரியா இருந்துருக்கு!

புத்த மதத்தைப் பற்றிக் கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமுன்னா..... எங்கே?  படிக்கப்படிக்கக் குழப்பம்தான் மிச்சம்.  எனக்குத் தெரிஞ்சதெல்லாம் ஒரே ஒரு  உபதேசம்தான். ஆசையே துன்பத்திற்குக் காரணம்!  இதைப்போல ஸிம்ப்ளிஃபைடு உபதேசங்கள்  கிடைக்குமான்னு தேடிப் பார்க்கணும். பொல்லாத மனசு,  இதை விட்டுட்டு, அத்தனைக்கும் ஆசைப்படு என்றதைத்தானே  விரும்புது! இல்லையோ....  நம்ம கோவில்களைப்போல் இங்கெல்லாம் காலணிகளைக் கழட்டிட்டு கோவிலுக்குள்ளே  வர்றதெல்லாம் இல்லை. சந்நிதிகளிலும்  உள்ளே கொஞ்சம் கிட்டக்கப்போய்ப் பார்க்க முடியுது!  பக்தி மட்டும் காட்டினால் போதுமுன்னு புத்தர் சொல்லிட்டாரா என்ன?

சந்நிதிகளின் கூரைகளிலும் ரொம்ப முக்கியமானவைகளில் மஞ்சள் நிறம்!  பொம்மைகளும் அதே நிறத்தில். பொம்மைகளின் எண்ணிக்கை, அந்தந்த  சந்நிதியின் முக்கியத்தைப் பொறுத்துதானாம். ரொம்ப முக்கியம் = நிறைய பொம்மை!

அப்பதான் ரெண்டுமூணு பிக்ஷுக்கள்  உள்ளே  இருந்து வந்துக்கிட்டு இருந்தாங்க. அதில் ஒருவர் திரும்பி என்னைப் பார்த்தார். நான் கைகூப்பி வணக்கம் சொன்னேன்.  உடனே அவர் என்பக்கத்தில் வந்து நின்னு, எதிரில் நின்ன 'நம்மவரிடம்' க்ளிக்கிக்கோன்னு  சைகை காமிச்சார் ! சட்னு என் கெமெராவை கோபாலிடம் கொடுத்தேன் :-)
அப்பதான் ஒரு சம்பவம். என் பக்கத்தில் நின்ன புத்த பிக்ஷு, அவருடைய  மடியில் கைவிட்டு, உள்ளே இருந்து ஒரு செல்ஃபோனை எடுத்து கெமெரா செட்டிங்லே போட்டுட்டு, கோபாலிடம் கொடுத்து இன்னொரு க்ளிக் பண்ணச் சொன்னார்:-)  ஆஹா.... இன்டுவோடு ஒரு படம் அவருக்கும் வேண்டி இருக்கே!!!!

காலம் மாறியாச்சு!  இப்ப தவவாழ்க்கையிலும் செல்ஃபோன் வேண்டித்தான் இருக்கு. முற்றிலும் துறந்தால்தான் சந்யாசி என்பது  பழங்கதை :-)
முதல் முற்றத்தாண்டை வந்துருந்தோம்.  அங்கங்கே  தனியா  மாடம் போல் நிக்கற கட்டடங்கள்.  எல்லாம் மூடிக்கிடக்கு. உள்ளே என்ன மாதிரி?  அநேகமா புத்தர் சிலைகள் இருக்கலாம். விதவிதமான புத்தர்கள்தான் கோவில் முழுக்கவே!

 கோவில் கொடிமரம், மணிக்கு நேரா இந்தப்பக்கம். இதைத்தவிர இன்னொரு கொடிமரமும் இருக்கு. அதுலே பறக்கறது  ப்ரேயர்  Flag.



இவர் சீனக் குபேரர் !  வெளிமுற்றத்தில் இருக்கும்  கிஃப்ட் ஷாப்பில் இருக்கார். அட! இவர்தானான்னு இருந்துச்சு.  வேற இடங்களில் கூட இவரைப் பார்த்துருக்கேனே.... 
அப்ப இங்கே(யும்) காசே தான் கடவுளடாதானா?

தொடரும்.........:-)


16 comments:

said...

// 'காசு போடாதே'ன்னு எழுதி இருக்கணும். அதான் சனம் போட்டுட்டுப்போகுது :-)//

ஹா... ஹா... ஹா... ஜனங்க எல்லா இடத்திலும் ஒரே மாதிரிதானா!

said...

அந்த முதல் புத்தர் சிலையைப் பார்த்தால் உலகம் சுற்றும் வாலிபன் படம் நினைவுக்கு வருகிறது. ஆனால் அது வேற ஊர், தெரியும்!!

said...

புத்த பிட்சு மடியில் செல்! அது ஒரு ஆச்சர்யம். அவர் "இண்டு" வோட ஃபோட்டோ!! அது அடுத்த ஆச்சர்யம். இவர்களுக்கு ஏன் இப்படி ஆர்வம்? என்ன காரணம்?

said...

வாங்க ஸ்ரீராம்.

மனுசனோட குணம் லோகத்தில் எல்லோருக்கும் ஒன்னுதான், இல்லையோ..... என்ன.... கொஞ்சம் கொஞ்சம் பயிற்சி கொடுத்துக் கொஞ்சமா மாத்திக்கிட்டு இருக்கோம். அதுக்கு 'நாகரிகம்'னு ஒரு பெயர் வேற கொடுத்தாச்:-)

நிறைய ஆசிய நாடுகளில் புத்தர் சிலை இப்படித்தான் இருக்கு!

பிக்ஷூ மடி ஸெல் எனக்குமே ஆச்சரியம்தான். எதிரில் கேமெராவோடு நின்னது மட்டும் நானாக இருந்தால் அதை எடுக்கறதைப் படபடன்னு க்ளிக்கி இருப்பேன். 'நம்மவர்' வேடிக்கை பார்த்துக்கிட்டு நின்னுட்டார் :-)

பாகிஸ்தானி, சீனன் எல்லாம் பயங்கரமானவங்கன்னு நமக்குச் சொல்லிக்கொடுத்த மாதிரி, அவுங்களுக்கும் இண்டுன்னா அரக்கன், தலையிலே விஷக் கொம்பு இருக்குமுன்னு சொல்லியிருப்பாங்களோ என்னவோ.... அதொன்னும் இல்லாம சாதாரண மனுசரா நாம் இருப்பதைப் பார்த்து 'ஆர்வம்' வந்துருக்கலாம் :-)

said...

மிக அருமை நன்றி

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

கோவில் தரிசனமும் படங்களும் அருமை.

அங்கு மேசையில் கோவிலுக்காக பிரசாதம் போல் பக்தர்கள் பழங்கள் போன்றவைகள் வைத்திருந்தார்களா?

ஏன் கடவுள்களுக்கு சாந்த முகமும், யமனுக்கு கொடூர முகத்தையும் கொடுத்திருக்கிறோம்?

said...

ச்னர்களுக்கும் இந்தியர்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு என்ன அவர்களுக்கு ஒரே கடவுள் புத்தா நமக்கு இஷ்டத்துக்கு கடவுள்கள் ........!

said...

புத்தரோட உபதேசம் ரொம்ப எளிமை. அன்பு. அன்புக்கு மீறி எந்த மந்திரமும் தந்திரமும் வழிபாடும் இல்லை. புத்தமதத்திலும் நிறைய பிற்சேர்க்கைகள் உண்டு. அதுலயும் கிளைகிளையா பிரியுறப்போ ஒவ்வொருத்தரும் எக்ஸ்டிரா பிட்டிங்ஸ் சேத்தாங்க. ஒவ்வொரு நாட்டுக்கும் போறப்போ அந்த ஊர் நம்பிக்கைகளையும் சேத்துக்குச்சு. என்னதான் மக்கள் வேறவேறயானாலும், அடிப்படையில எல்லா மக்களோட பிரச்சனையும் ஒன்னுதான். அதுதான் எல்லா நம்பிக்கைகள்ளயும் ஒற்றுமையான அம்சங்கள் இருக்கு.

said...

வாங்க நெ.த.

பொதுவா நாம் சாமி பிரஸாதமுன்னு சமைச்சு வைக்கறதைப்போல் இங்கெல்லாம் இல்லை. முட்டாய் எல்லாம் கூட பிரஸாதம்தான். கோவிலிலெயே பழங்களை அடுக்கி சாமி முன்னால் வச்சுடறாங்க. எங்கூர்லே மூணு புத்தர் கோவில்கள் இருக்கு. அங்கேயும் இப்படித்தான்.

பக்தர்களுக்கு பிரஸாதம்னு ஒன்னும் கிடைச்சதில்லை இதுவரை. சிங்கைக் கோவிலில் தட்டுலே கொட்டி வச்சுருக்கும் முட்டாய்களில் நாமே எடுத்துக்கணும்.

சனமும் ஏதும் வாங்கிப்போய் படைக்குதான்னு தெரியலையே...

மரணம் என்றால் பயம். அதான் கொடூர முகம் :-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

கடவுள் ஒன்னுதான். நாம்தான் விதவிதமான பெயரும் விதவிதமான உருவமுமா வச்சு வணங்கறோம்.

சீனத்திலும் நிறைய வெவ்வேற உருவங்கள் இருக்குன்னாலும், பெயர் மட்டும் ஒன்னுதான். எல்லாம் புத்தாஸ். சின்னக்குழந்தை பிஷூகூட லிட்டில் புத்தா தான்

ஏகப்பட்ட ஒற்றுமை இருக்கு!

said...

வாங்க ஜிரா.

ஹைய்யோ! நீங்க சொல்றது ரொம்பச் சரி!

மனுசனும் மனுசனுக்குள்ள பிரச்சனைகள் கவலைகள் எல்லாம் உலகம் முழுசும் ஒன்னேதான்!

said...

சில்லரையா? சில்லறையா? இப்படி ஒரு குழப்பம் போல. அதனால அப்படி ஒரு தடவை இப்படி ஒரு தடவை எழுதியாச்சு போல. ஆனா எது சரி?

said...

இலவசக்கொத்தனார் - சில்லரை - அரை என்பது பகுதி. 'அறை' என்பதற்கு வேறு அர்த்தம்.

said...

மைத்ரேயர்....அழகிய தரிசனம்...

said...

மிக மிக அருமையாக எல்லா தகவல்களையும் தொகுத்து படங்களோடு தந்திருக்கிறீங்கள். மிக்க நன்றி.
ஒரு சின்ன சந்தேகம்
ஊதுபத்தி, ஊதுவத்தி இதில் எது சரி?