Wednesday, May 02, 2018

பாண்டாவும் 'பாண்டவ தூதனும்'........ சீனதேசம் - 7

மொதல்லே பாண்டா பார்க்கப்போறோம்னு சொன்னார் மைக்கேல்!  இன்னிக்கு(ம்) ஒரு முழுநாள்  டூர் போறோம். அதுலே முதல் ஐட்டம் நம்ம பாண்டாதான் :-)  பாண்டாவுக்கு முன்னுரிமை !

காலை ஏழே முக்காலுக்கு நம்மை பிக்கப் பண்ணுவாராம். அதே போல சரியான நேரத்துக்கு வந்தார்!  வாசலில் ஒரு வேன். ஃபோர்ட்டீன் ஸீட்டர்னு நினைக்கிறேன். அதுலே ஏற்கெனவே மூணு பேர் (ரெண்டு ஆண்களும் ஒரு பெண்ணும்) இருந்தாங்க.  நான் உள்ளே ஏறிப்போனதும், முன் ஸீட்டுலே இருந்த ஜோடி, நமக்கு இடம் விட்டுட்டுப் பின் ஸீட்டுக்குப் போயிட்டாங்க :-)

மைக்கேலிடம், இன்றைக்கு இன்னும் எத்தனை பேர் நம்ம  கூடன்னா.... நீங்க அஞ்சு பேர்தான்னுட்டார்!

ஒரு பதினாறு கிமீ தூரத்துலே இருநூத்தி இருபது ஏக்கர் பரப்பளவில் பதினாலாயிரத்து ஐநூறு செல்லங்களுடன்  (தொளாயிரத்து அம்பது  இனம்!) இருக்கும் இந்த ஜூவில் நாம் அஞ்சே அஞ்சுபேரைத்தான் பார்க்கப்போறோமுன்னு சொன்னால்.... நம்புவீங்களா?
சீனதேசத்தில் மிகப்பழமையான Zoo !    Qing Dynasty   காலத்துலே 1906  இல் தொடங்குனதாம்!  வாசலில்  வண்டி நின்னதும்,  மைக்கேல் போய் டிக்கெட் வாங்கிட்டு வந்தார்.


பாண்டா ஹௌஸ் முன்னாலேயே இருக்கு!  பெரிய சைஸ் வகை!  ஜயன்ட் பாண்டா!  மொத்தம் அஞ்சு பேர்தான். ஆனாத் தனித்தனி  இடத்தில்.   காலை ப்ரேக்ஃபாஸ்ட் டைம் என்றதால்  நிம்மதியாக் காலை நீட்டி உக்கார்ந்து  மூங்கில் கிளைகளில் இருந்து  இளசா இருக்கும் இலைகளைத் தின்னுக்கிட்டு இருந்தார்  ஒருவர்.
'குழந்தைகள் இருக்காங்களா, இங்கே'ன்னு ஆசை ஆசையாக் கேட்டேன்.  தூக்கிக் கொஞ்ச விடுவாங்களோ?  ஊஹூம்.....



சரி போகட்டும். ஏன் இப்படித் தனித்தனி இடத்தில் வச்சுருக்காங்க?  .....   கூடி இருந்தால் சண்டையாம். ஐயோ.....  ஒன்னை ஒன்னு அடிச்சுக்கிட்டுக் கொன்னுகூடப் போட்டுருமாம்!   அடடா....ஏன் இந்தக் கொலை வெறி?

நமக்குத்தான் பார்க்க ஒன்னுபோலவே இருக்காங்க. ஆனால் தனித்தனிப் பெயரோடு  தனித்தனி வீட்டில்  'எல்லா வசதிகளோடும் ' இருக்காங்கன்னாலும்..... தனியாவே ஒரு  வாழ்க்கை போரடிக்காதா?  சுத்திச் சுத்தி நடந்து வந்துக்கிட்டு இருப்பதைப் பார்த்தால் எனக்குப் பாவமாத்தான் இருந்துச்சு  :-(
சீனதேசத்தில்   1990 இல் நடந்த ஏஷியன் கேம்ஸ் சமயம்தான்  முதல் பாண்டா ஹௌஸ் கட்டுனாங்க.  அப்புறம் சமீபத்தில்  2008 இல் (அட! அதுக்குள்ளே பத்து வருசம் ஆகிருச்சா!!!) நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டி சமயத்தில்  இன்னொரு  பெரிய அமைப்பைக் கட்டி ரெண்டையும் ஒன்னா இணைச்சுட்டாங்க. ரெண்டு விளையாட்டுகளிலும் பாண்டாதான் Mascot.


கொஞ்சம் க்ளிக்ஸ், சின்னச்சின்ன வீடியோ க்ளிப்ஸ்ன்னு எடுத்துக்கிட்டு இங்கெ இதே கட்டடத்தில் இருக்கும் பாண்டா ஹௌஸ் நினைவுப்பொருள்  கடைக்குள் போனால்....  எக்கச்சக்கமான பாண்டாஸ். பொம்மை அழகாத்தான் இருக்குன்னாலும்.... நம்மகிட்டே ஏற்கெனவே இருக்கறதால்  ('சின்னதா ஒன்னு வாங்கிக்க'ன்னார்! க்கும்....  சின்னது.... அதுக்கு வாங்காம இருக்கலாம்....) மகளுக்காக ஒரு  சீட்டுக்கட்டு வாங்கினேன். மகள் சீட்டுக்கட்டுக் கலெக்‌ஷன் வச்சுருக்காள்.

நம்ம கூடவே வந்த மைக்கேல் பாண்டா பார்த்து முடிச்சதும் நம்மையெல்லாம் ஓட்டிக்கிட்டு வெளியே வந்துட்டார். யானை எல்லாம் இருக்குன்னாலும்....  இன்றைக்கு இன்னும் நிறைய இடங்கள் போறதால் நாம்  இதுவரை பார்க்காத   பாண்டாவுக்கு மட்டுமே முன்னுரிமையாம்.  ஒருமணி நேரம்தான் இங்கேன்னதில்  எனக்குக் கொஞ்சம்.....  ப்ச்...  :-(

எந்த முன்முடிவும், கருத்தும் இல்லாமத்தான்  லாமா கோவிலுக்குள் நுழைஞ்சேன்.  வண்டியை வெளியில் நிறுத்தும்போதே  ஒரு புறாக்கூட்டம்  ஜிவ்ன்னு  எழுந்து வானத்தில் பறந்து வட்டமடிச்சது சுவாரஸ்யம்!

தெரு அவ்ளோ ஒன்னும் பெருசு இல்லை.... பயங்கர ட்ராஃபிக்.  கடந்துபோக வரிக்குதிரை இருந்தாலும்.... இங்கெ சீனதேசத்தில் யாரும்  நடக்கற சனத்துக்கு வழிவிட்டு வண்டியை நிறுத்த வழக்கம் இல்லை போல....  அதுக்காக நாம் நின்னுக்கிட்டே இருக்கப்டாதாம்.  எந்தப் பக்கமும் தலையைத் திருப்பாமல்  ஈஸ்வரோ ரக்ஷதுன்னு  சாலையில் இறங்கிப் போகணுமாம்.   போக்குவரத்து  நெளிஞ்சு சுழிஞ்சு நமக்கு வழி விடுமாம்!  மைக்கேலைப் பின்தொடர்ந்து போனோம் நாங்கள் ஐவரும்!   அந்த மூவர் அமெரிக்கர், இந்த இருவர் கிவிக்கள்.  ஏன் தயங்கி நின்னோமுன்னு இப்போப் புரிஞ்சுருக்குமே!  ஹிஹி...
பெரிய கேட் கடந்து முற்றத்தில் போய் நின்னா.... அங்கே கார்பார்க் இருக்கு.  டிக்கெட் வாங்கிட்டு வரேன்னு மைக்கேல் போனார்.  கோவிலுக்குமான்னு தோணுச்சு.....
முற்றத்தில்  ஒருபக்கம் உள்ளே போகும் நுழைவு வாசல்.  கைப்பை எல்லாம் ஸ்கேன் ஆச்சு.  அந்தாண்டை போனதும்  ரெண்டு பக்கமும்  நிறைய மரங்களும் நடுவில் அழகான அகலமான கல்பாவிய  பாதையும்.  பாதையின் ஆரம்பத்தில்  ஊதுவத்தி சர்வீஸ்னு  போட்டுருந்தது.  இன்னொரு போர்டில் ஒரு வரைபடம்.
அடுக்கடுக்கா முற்றங்களும் கட்டடங்களும் ஒன்னுக்குப் பின்னால் ஒன்னா போய்க்கிட்டே இருக்கு!
எண்ணிப்பார்த்தால்  எட்டடுக்கு! ஒருகாலத்துலே அரண்மனையா இருந்த இடம். பதினேழரை ஏக்கர் பரப்பளவு.
மைக்கேலின் வழிகாட்டலில் உள்ளே போறோம். முதல் வாசலுக்கு ரெண்டு பக்கமும் ஊதுபத்தி சர்வீஸ் கவுன்ட்டர்.   ஆளுக்கு ஒரு பேக்கட் ஊதுவத்தி இலவசமாவே கொடுக்கறாங்க. ஒவ்வொரு முறையும் மூணு குச்சிகளை ஏத்தணுமுன்னு  எழுதி இருக்கும் வாசகம் சொல்லுது!


வாசல் கடந்து உள்ளே போனால் பெரிய முற்றம். எதுத்தாப்போல் ஒரு அகலக்கட்டடம். முழங்காலில் நின்னு சாமி கும்பிட மெத்தை வச்ச மணைகள், ஊதுபத்திக் கொளுத்திக்க விளக்கு,  அடிக்கும் காத்துலே அது அணையாமல் இருக்க சுத்தி ஒரு தகரக் காப்பு, கொளுத்தின ஊதுபத்தியைச் செருகி வைக்க ஒரபெரிய  தொட்டி (அரிசி போட்டு வச்சுருக்காங்க. அதுலே குத்தி இறக்கினால் ஆச்சு) இப்படி ஏற்பாடுகள்.
சனம் ஊதுவத்தியை விளக்கில் காமிச்சுக் கொளுத்திக் கையில் தூக்கிப்பிடிச்சுக் கண்ணைமூடி சாமியைக் கும்பிட்டுக்கிட்டு ஊதுவத்தி ஸ்டேண்டா இருக்கும் அரிசித்தொட்டியில் குத்தி வச்சுட்டுப் போறாங்க. மூணு குச்சிகள் எடுத்துக் கொளுத்திக்கணும். சிலர் முழங்காலிட்டும், பலர் அப்படியே நின்னவாக்கிலுமா கும்பிடறாங்க. நாமும் கும்பிட்டு முடிச்சு எதிரே தெரியும்  ஹாலுக்குள்  (சந்நிதி ) போறோம்.
வெளியே  ஹாலுக்கு ரெண்டு பக்கமும் உயரமான பீடத்தில் சிங்கங்கள்!  ஹைய்யோ!!
அந்தக் காலத்துலே விளக்கு  ஏத்தி வைக்கும் பீடம் இது!
ஹேப்பி புத்தா, ஹெல்த்துக்கான புத்தா,  அமைதிக்கான புத்தா,  இறந்தகால, நிகழ்கால, எதிர்காலமுன்னு முக்காலத்து புத்தாக்கள்,  இந்தக் கோவிலின் முதல்  லாமா, இப்படி  ஒவ்வொரு முற்றத்தோடு சேர்ந்த சந்நிதிகளைக் கடந்து போய்க்கிட்டு இருக்கோம்.  சந்நிதிகளுக்குள் படம் எடுக்க அனுமதி இல்லைன்னு மைக்கேல் சொன்னார்.

இங்கே போட்டுருக்கும் சில புத்தர் படங்கள் நம்ம கூகுளாண்டவர் அருளிச் செய்தவை:  நன்றிகள்!


ஒவ்வொரு முற்றத்திலும்  மும்மூணு பத்திகளைக் கொளுத்திக்கிட்டு இருக்கேன். 'நம்மவர்' வந்து எல்லாத்தையும் சேர்த்துக் கொளுத்திருன்னு சொல்றார். ஏனாம்?  வேறயாரோ மொத்தத்தையும் கொளுத்துனதைப் பார்த்துட்டு, இவரும் அப்படியே செஞ்சுட்டு வந்துருக்கார்.  பொறுமைத் திலகங்கள் !
அஞ்சாவதா இருக்கும் கடைசி சந்நிதிக்குள் போறோம். மைத்ரேயா புத்தா!  விக்கிச்சு நின்னேன்,  விஸ்வரூபம் காமிக்கிறான் எம்பெருமாள்!  என் கண்ணுக்கு இவன் பெருமாளேதான்!  அதே முகம். நெடுநெடுன்னு  பதினெட்டு மீட்டர் உயரம்.  பூமிக்கடியில் இன்னும் எட்டு மீட்டர் இருக்காம். மொத்தம் இருபத்தியாறு மீட்டர்!  அஞ்சாறு மாடி உயரம்!

காஞ்சிபுரம்  பாண்டவ தூதனை முதல்முதல் தரிசனம் செஞ்சப்ப எப்படி உணர்ந்தேனோ அதே, மறுபடியும் ரிப்பீட் இங்கே!   கண்ணீர் வழிஞ்சு ஓடுவதைத் தடுத்தும் பயன் இல்லை.....  பரவசமா என்னன்னு தெரியலை.....   தடக் தடக்குன்னு   வேகமா இதயம் துடிக்கிறது என் காதுக்கே நல்லாக் கேக்குது!   பெருமாளே.... பெருமாளே...........

கின்னஸ் புத்தகத்துலே இவரைப் பதிஞ்சுட்டாங்க. வெள்ளைச் சந்தன மரம். அதுவும் ஒரே மரத்தில் செதுக்குன சிலையாம்!  'திபெத்துலே இருந்து  இவரைத் திருடிக்கிட்டு வந்துட்டாங்க'ன்னு  மைக்கேல் சொன்னார். சின்னப் பொருளா என்ன? சட்டைப்பைக்குள் வச்சுக் கொண்டு வர்றதுக்கு?  இருபத்தியாறு மீட்டரையா?  ஒருவேளை திபெத்தைச் சீனா பிடிச்சுக்கிட்டப்பக்  கொண்டு வந்துருப்பாங்களோ?

ஆனால் கோவில்  பதினேழாம் நூற்றாண்டு ஆரம்பத்தில்  வந்துருச்சாமே.... அப்பவா படையெடுப்பு நடந்தது?  ஙே......

கோவில் சந்நிதிகளிலும் முற்றங்களிலும் நல்ல கூட்டம்.  ஊதுவத்திப் புகை  மண்டிக்கிடக்கு!   கொஞ்சம்கூட வாசனையே இல்லாத  ஊதுவத்தி இது.... வெறும் புகை...

எல்லா சந்நிதிகளுக்கும் குறைஞ்சது மூணு வாசல். எந்த வாசலில் வேணுமானாலும் நுழைஞ்சுபோய்க்கலாம்.  வரிசை, காத்திருப்புன்னு ஒன்னும்  கிடையாது.


 'சீனமக்கள் எல்லாம் கம்யூனிஸ்ட்.  சாமி எல்லாம் கும்பிடமாட்டாங்க'ன்னு என் மனசுக்குள் இருந்த நினைப்பெல்லாம் அப்படியே மாறிப்போச்சு.  சந்நிதிகளிலும் மெத்தை போட்ட மணைகள் இருக்கு. அதில் முட்டிபோட்டு, விழுந்து விழுந்து கும்பிடுது சனம்!
நல்ல பெரிய பெரிய தங்க வண்ணச் சிலைகள்!
இந்தக் கோவிலின் ஸ்தாபகர். இவுங்களோட முதல் லாமா

உலோகச்சிலையா என்னன்னு தெரியலை....   மேடைகளில் சிலைகள், சுத்திவர பூக்கள் அலங்காரம் எல்லாம் பளபளன்னு....  ஒவ்வொரு சந்நிதியிலும் புத்த பிக்ஷுக்கள்  ஒரு ஓரமா உக்கார்ந்துருக்காங்க. அப்புறம் விசாரிச்சதில் எல்லாம் வெங்கலச்சிலைகளாம்,  விஸ்வரூபம் காமிக்கும் பெருமானைத் தவிர !  இவரைப்பத்தி இன்னும் கொஞ்சம் நல்லா விசாரிக்கணும்,  மூளையில் முடிச்சு :-)

இந்த அஞ்சு முக்கிய சந்நிதிகளைத் தவிர  ரெண்டு பக்கங்களிலும் ஏகப்பட்ட சந்நிதிகள். சில இடங்களில் ப்ரேயர் வீல்ஸ். ஓம் மணி பத்மேஹம்..... சொல்லிக்கிட்டுச் சுத்தி விட்டோம்.

நம்ம குழுவில் இருக்கும் பெண்கள் மட்டுமே க்ளிக்க்கிட்டு இருந்தாங்க. அதுலே அந்த அமெரிக்கர், அருமையான பெரிய கேமெராவால். அந்தக் கிவியோ.... கைக்கடக்கமான சின்னக் கெமெராவில் 'வர்றது வரட்டுமு'ன்னு க்ளிக்கறதுதான். அந்தப் படங்களைத்தான் நீங்க பதிவில் பார்த்துக்கிட்டு இருக்கீங்க :-)

இங்கேயும் ஒரு மணி நேரத்துக்குள் நம்மை இழுத்துப்போய்ச் சுத்திக் காட்டிட்டார் மைக்கேல்.  உண்மையைச் சொன்னால் ஒரு முழுநாள் இருந்து பார்க்கவேண்டிய சமாச்சாரம் இது!

போனவழியாவே திரும்பி  வாசலுக்கு  வர்றோம். கடைசி முற்றம் கடக்குமிடத்தில் கழிவறைகள்.  இந்தக் கோடியில் இலவச ஊதுபத்திக்குப் பக்கத்தில்  நினைவுப்பொருட்கள், புத்தர் சிலைகள் எல்லாம் விற்கும் ஒரு கடை!  எல்லா புத்தரும் பொட்டு வைத்த முகங்களில் !
வெளியே கடைவீதியைச் சட்னு பார்க்கும்போது நேப்பாள் நாட்டுத் தெரு மாதிரியே தோணுச்சு. கடைகளில் இருக்கும் பெரிய பித்தளை, வெண்கலச் சிலைகள் காரணமா இருக்கலாம்.....

மைக்கேலைப் பின்தொடர்ந்து தெருவைக் கடந்து எதிர்ப்பக்கத் தெருவுக்குள் போறோம்.   பாதி தூரம் போனதும் கன்ஃப்யூஸியஸ் கோவில்ன்னு  இருக்கு!  'அங்கே போறோமா'ன்னதுக்கு  இல்லைன்னார் மைக்கேல். வேன் இங்கே வருமாம். அதுக்காத்தான் போறோம்னு சொன்னார்.

கோவிலை வெளியே இருந்து ரெண்டு க்ளிக்ஸ் மட்டும்.

வண்டி வந்தது. நாங்களும் ஏறினோம்.  அடுத்து என்னவாம்?

தொடரும்........:-)


13 comments:

said...

வாவ்.... எத்தனை பெரிய வழிபாட்டுத் தலம்....

பிரம்மாண்ட புத்தர் சிலை வியக்க வைக்கிறது - அதுவும் மரத்தில்!

தொடர்கிறேன்.

said...

//முன் ஸீட்டுலே இருந்த ஜோடி, நமக்கு இடம் விட்டுட்டுப் பின் ஸீட்டுக்குப் போயிட்டாங்க // எப்படித்தான் தெரியுதோ, பெரிய இடம் ன்னு ;

// எந்தப் பக்கமும் தலையைத் திருப்பாமல் ஈஸ்வரோ ரக்ஷதுன்னு சாலையில் இறங்கிப் போகணுமாம். // எல்லாத்துக்கும் பெருமாள். இதுக்குமட்டும் நானா ன்னு கேட்கமாட்டார், ன்னு நம்புவோம்.

said...

பாண்டாக்களும் அருமை. கோவிலும் அருமை. தாய்பேயில் பார்த்த கோவிலை நினைவுபடுத்தும் தோற்றம். அங்க எல்லா இடத்திலும் படமெடுக்க அனுமதித்தாங்க.

பிரம்மாண்ட புத்தர் - காண்பதற்கே பரவசம்.

said...

பாண்டாவுடனான பயணம் ஒரு புதிய உலகிற்கு அழைத்துச் சென்றது. இந்தியாவில் உள்ள புத்தர் சிலைகளிலிருந்து சற்றே மாற்றமுடன் உள்ள புத்தர் சிலைகளை இப்பதிவில் அதிகமாகக் காணமுடிந்தது.

said...

எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்படுவீர்களா

said...

பாண்டாக்கள் ஒன்னோட ஒன்னு ஒழுங்காகப் பழகாதா? அதென்ன ஆளுக்கொரு பக்கமா உக்காந்து விளையாட்டு? ஒருவேளை உயிரியல் பூங்காவுக்குள்ள இருக்குறதால அப்படியோ? காட்டுக்குள்ள இருக்கும் பாண்டால்லாம் கூட்டமா இருக்கும் போல.

ஆண்டவனுக்கு நம்ம சித்தறிவுக்கு எட்டிய அளவில் பேரு ஊரு உருவம்னு வெச்சு கும்பிட்டிட்டுக்கிட்டிருக்கோம். ஆனாலும் அப்பப்போ தான் அதையெல்லாம் கடந்த மாபெரும் பொருள்னு நிரூபிச்சிக்கிட்டேயிருக்கு. உங்களுக்கு கண்ணில் நீர் வந்த அன்பும் அதற்குச் சாட்சி.

சீனாவில் பாதிப் பேரு மதமில்லாதவங்கதான். பாதிப்பேர் சாமி கும்பிடுறவங்க. அங்க இருக்கும் கூட்டத்துக்கு அதுவே பெரிய எண்ணிக்கை.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

எதிர்பார்க்கவும் இல்லை, அதுவரைக் கேள்விப்படவும் இல்லை என்பதால் பிரமித்துப்போய் நின்னுட்டேன் !

said...

வாங்க விஸ்வநாத்.

அய்ய.... பொல்லாத பெரிய இடம்..... அவுங்க மூணுபேர். பின்னால் கடைசிஸீட்டில் இருந்தவர் முன்னால் இருந்த இருவர் தலைக்கிடையில் முகத்தை நீட்டி வச்சுப் பேசிக்கிட்டு இருந்தார். அங்கே நமக்கிடம் விட்டால் அவர் ரெண்டு வரிசை தாண்டி எப்படி கழுத்தை நீட்டமுடியுமாம்? :-)

இந்த ஈஸ்வர் காக்கும் கடவுள். இவர் வெங்கட் ஈஸ்வரர். அவரைக்கூப்பிட்டால், தொழில்தர்மம்னு ஒரேடியாக் கூட்டிக்கிட்டுப் போயிடமாட்டாரா?

said...

வாங்க நெ.த.

தாய்லாந்திலும் எல்லா புத்தர் கோவில்களிலும் படம் எடுக்கலாம். இங்கே போர்டு போட்டுருந்தும் எல்லாரும் க்ளிக்கிட்டுதான் இருந்தாங்க. பார்த்துக்கிட்டு இருந்த புத்த பிக்ஷுக்களும் ஒன்னும் சொல்லலை....

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

புத்தர் மட்டுமில்லை.... அலங்காரங்களும் கூடக் கொஞ்சம் வித்தியாசமாத்தான் தெரிஞ்சது!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

ஆமாம்... ஆமாம் :-)

said...

வாங்க ஜிரா.

எல்லாம் பையனுங்கன்னு நினைக்கிறேன். செயற்கை முறையில் பிறந்தவங்க போல...

காட்டுலே குழந்தை குட்டி, மனைவின்னு இருப்பாங்க. இவனுங்களுக்கு அதெல்லாம் தெரியாது .... பாண்டா ரிஷ்யஸ்ருங்கர்கள் ! பாவம்....

இன்னும் சில கோவில்கள் கூடப் போனோம். நல்ல கூட்டம்தான்! முக்கால் பில்லியன் சாமி கும்பிடுது !

சாமி..... நம்ம சிற்றறிவுக்கு எட்டாத சமாச்சாரம். அதான் பெருசு பெருசா சிலை செஞ்சுக்கிட்டு இருக்காங்க. இப்போ இது அதிகமாகிப் போயிருச்சு... பார்த்தீங்களா?

said...

அழகு பாண்டாஸ்..இங்கே கேக் ஷோ ல பார்த்த பாண்டா மாதரி இருக்கு..

பள பள கோவிலும்...அழகிய காட்சிகளும்...அருமை..